Wednesday, 5 August 2015

பேரிச்சம்பழக் குற்றவுணர்வு....

புலம்பெயர்   வாழ்க்கை  என்பதே இன்னொரு  கலாச்சரம்  நம்மை  விழுங்கக்  காத்திருக்கும்போது  அதன்  நெளிவு சுளிவுகளில்  சுழி  ஓடுவது  போல  இருக்கும்.  அதன்  நல்ல  பக்கத்தில்  நல்ல  விசியங்களும்  துன்பமான  பக்கங்களில்  விடைபெற்றுப்  போன  பல  வேற்றின   நண்பர்களின் நினைவுகள்  பலமுறை வாழ்தல்  என்பதே  இருத்தலின்  இன்னொரு  பரிமாணம்  என்று  பதிவுசெய்துவீட்டுப் போயுள்ளது .

                                                   ஒஸ்லோவில் சில வருடமாக  சிவைன் எரிக் எண்டு ஒரு வயதான, மென்மையான, அதிகம் அதிர்ந்து பேசாத,தனிமையாக வாழ்ந்த  நோர்வேயிய நண்பர் உண்மையாகவே எப்பவும்  நண்பராக இருந்தார். அடிக்கடி ஒரு குறிப்பிட்ட பியர் குடிக்கும்  பப்பில், குறிப்பிட்ட சில நாட்களில்,வேறு சில குறிப்பிட்ட நோர்வேயிய நண்பர்களுடன் அவரைச் சந்திப்பேன். 

                                                           என்னைப் போன்ற வந்தேறுகுடிப் பல்லினக்  கலாச்சார மக்களை அவர் எப்பவும் நேசிப்பார். நெறய கீளைதேய சமய நம்பிக்கை, தத்துவ விசியம் அவருக்கு எங்களை விட நல்லா தெரியும். இர்க்கு வேதத்தில் வரும் கபோடோநிதசம் எல்லாம் விளக்கமாத்  தெரியும். ப்றேடிறிச் நிட்சேயின் யாரதுஸ்டிரா  தத்துவ புத்தகத்தை சப்பித்  துப்புவார்.

                                                  முக்கியமா அவரைச் சந்திப்பது, புத்தகங்கள் வாசிக்க சோம்போறியான என்னோட மூளையில், பல புத்தககங்கள் வாசித்த அவருடன் பேசிப்  பல விசியங்களை அறிந்து, முடிந்த வரை அதை என்னோட மூளையில் ஏற்றுவதுக்கு. இந்தக் கதை சிவைன் எரிக் வன்விக் என்ற அந்த மனிதரின்  அறிவு வீச்சு பற்றியதல்ல, அவரின் முடிவு பற்றியது...

                                                   சிவைன் பென்சன் எடுக்கிற வயதில் தான் சென்ற வருடம் இருந்தார், நோர்வேயில், சுவாரசியமே இல்லாத புள்ளிவிபர திணைக்களத்தில் ,புள்ளி விபரம் எடுத்து அதை அறிக்கையாக தயாரித்து திட்டமிடும் குழுக்களுக்கு அனுப்ப,அந்தக் குழுக்கள் அவர் அறிக்கையின் படி, நிதி வழங்குவதில், எதில் வெட்ட வேண்டும்,எதில் இன்னும் அதிக உதவி கொடுக்க வேண்டும்,எதை நிரந்தரமா நிற்பாட்டி வேலை செய்பவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எண்டு முடிவு எடுபார்கள் எண்டு அவரே சுவாரசியமாகச்  சொன்னார் தன்னோட வேலையை.

                                 சிவைன் சுவாரசியமே இல்லாத புள்ளி விபர திணைக்களத்தில் வேலை செய்தாலும் அவர் மாஸ்டர் டிகிரி படித்தது கிரேக்க தத்துவம்,சோகிரடிஸ்,அறிச்டோடல்,பிளேடோ , மார்க்ஸ் அரேளியசின் மேடிடேசன் புத்தகத்துக்கு நோர்வே மொழியில் விளக்கம் எல்லாம் அருமையா சொல்லுவார், எல்லாம் அத்துப்படி அந்த மனுஷனுக்கு. நான் அவரிடம் இருந்து நிறைய குழப்பம் உள்ள விசியங்கள் கேட்பேன்,அவர் குழம்பாமல் மிகத் தெளிவாகப் பதில் சொல்லுவார்.

                                              ஒரு முறை
                     
                                         "சிவைன் நீங்க இவளவு தெரிந்தும் ஏன் ஒரு ஆசிரியரா இருக்காமல் எப்படி அலட்டிக்  கொள்லாமல் புள்ளி விபரம் எடுகிற வேலை செய்யுரிங்க,அதைவிட என்னைப்போல அரை அவியல்களுடன் இயல்பாக பேசுறிங்க ,எப்படி முடிகிறது  " எண்டு கேட்டேன்,

                                        அவர் அதுக்கு பதில் தெரியாத மாதிரி இருந்தார், கொஞ்ச நேரத்தில் கிரிக் மொழியில் ,
                               
                                 "Pensa como pensam os sábios, mas fala como falam as pessoas simples"

                                       எண்டு மென்மையாக பதில் சொல்லி போட்டு இருந்தார். இதுக்கு என்ன அர்த்தம் எண்டு கேட்டேன், ஜோசிச்சுப் போட்டு அதன் அர்த்தத்தை நோர்வேயிய மொழியில் சொன்னார்,எனக்கு அந்தளவு தத்துவ நோர்க்ஸ் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் சொல்ல சொன்னேன்,அவர் இப்படி சொன்னார்,
                               
                                        "Think how they think the wise, but talk like simple people talk"    இதை யார் சொன்னது எண்டு கேட்டேன், அறிச்டோடல் சொன்னார் என்றார், சிவைன்ஸ் இப்படிதான்,கேள்வி கேட்டால் வள வள எண்டு பதில் சொல்ல மாட்டார்,ஆனால் குடைஞ்சு குடைஞ்சு கேட்டால் ஒரு பல்கலைக்கழக பேராசியர் அளவுக்கு விளக்கமா சொல்லுவார்.

                                              சிவைனிடம் ஒரு முறை 
         
                  " ஏன் வருசத்தில் ஒரே ஒரு முறை குளிக்கும் சோக்கிரடிசுடன் ஒரு அழகான திராட்சைப்பழம் போன்ற இளம் பெண் விரும்பி வந்து வாழ்ந்தா, அதை விட தன்னோட வாழ்நாள் முழுவதும் பெண்களைக் கிண்டல் பண்ணிய சோக்கிரடிஸ்,அவரோட அழகான, மண்டரின் ஒரேஞ் கலர் இளம் மனைவியைக் கலியாணம் கட்டியவுடன் பல்டி அடிச்சு ஏன் பல முரணான கருத்துக்களைச் சொன்னார் " எண்டு கேட்டேன்,

                                           சிவைன் அதுக்கு வாயைத் திறக்காமல் சிரித்தார். இதுக்கும் கிரீக் பாசையில் ஏதாவது சொல்லுவாரோ எண்டு நினைக்க,  நோர்வே பாசையில் 

                                        "    நேரம் வரும் போது சொல்கிறேன்,,சொல்லுக்கும்  செய்யலுக்கும்  நடுவில்  எப்பவுமே  காலம்  பதுங்கி  இருக்கும்  "

                                                          எண்டு சொன்னார்,சிவைன் ஒரு நாள் கட்டாயம் சொல்லுவார் என்று  தெரியும். ஆனால் அந்த நாள் எந்த நாள் எண்டு அவருக்கு மட்டுமே தெரியும். அதுதான் நான் அவரை அந்த பப்பில சந்தித்த கடைசி நாள் எண்டு இப்ப நினைக்கிறன்.

                                      ஏனென்றால்  இடைப்பட்ட  அந்தக்  காலத்தில்  ஒருநாள்  சிவைனிடம்  நான்  காசு  கொஞ்சம்  கடன்  வேண்டினேன். அவரே  மனமுவந்து  வந்து  அதை  தந்தார்.  உன்னிடம்  காசு  வரும்போது தா  இல்லாட்டி  அதைப்பற்றி  அலட்டிக்கொள்ளாதே  என்று  வேற சொன்னாரா,,அதை  வைச்சு  நான்  சில  மாதங்கள் கடனை  இழுத்துக்கொண்டு  இருந்தேன் .  அதை  அவர்  மற்ற நோர்வ்ய்யிய நண்பர்களுக்கும்  சொல்லவில்லை ,ஆனால்  மார்டின்  எப்பவும்  சிவைன்  உன்னைத்  தேடுறார்  எண்டு  சொல்லுவார் டெலிபோனில் 

                                    எந்த  விதத்திலும்  சமாளிக்க  முடியாமல்    மண்டை  வெடிப்பது  போல உள்ள  நேரங்களில்  நாங்கள்  கடன்  யாரிடமாவது வேண்டுறோம், வேண்டி  அந்த  நேர  அந்தப்  பிரசினையை  முடிக்கிறோம்,ஆனால்  அந்தக்  கடன்காசு  எப்பவுமே  காற்றில்  கரைந்து  போன ஒரு  வெற்றிடம்  போல  இருக்கும்  திருப்பிக்  கொடுக்கும்போது. என்னமோ  சொத்துப் பத்து   எல்லாத்தையும் விருப்பம் இல்லாத  பொண்டாட்டி  பேர்ல  எழுதி வைப்பது  போல இருக்கும் .

                                      நான்  அவர்  எனக்குத்  தந்த  கடன்  காசை  திருப்பி  வேண்டத்தான் தேடுறார்  எண்டு  நினைச்சுக்கொண்டு  அவரை  சந்திப்பதைப்  எப்பவுமே  தவிர்த்துக்கொண்டு  இருந்தேன். ஆனால்  சிவைன்  என்னை  தேடியதே  அவர்  எனக்காக  பல  ஆங்கிலப்  புத்தககங்கள்  வேண்டிவைச்சு  இருக்கிறார்  என்றும்  அவைகளை  என்னிடம் கொடுப்பதுக்கே  தேடுறார்  என்றும்  அறிந்தபோது  காலம்  கொஞ்சம்  வேகமாகவே  ஓடி  விட்டது 

                           கொஞ்ச நாள் லீவு கிடைக்காததால்  சிவைனயும் ,அவர் நண்பர்களையும் சந்திக்கவில்லை,ஒருநாள் சிவைன் இன் நண்பர் மார்டின் போன் பண்ணி
   
                                " சிவைன் உள்ளிவாள் சிக்குஸ் என்ற ஆசுபத்திரியில் இந்தா அந்தா எண்டு படுத்து கிடகுறார் " எண்டு சொன்னார்.

                                 நான் அடுத்தநாள் அவரைப் பார்க்கப் போனேன், ஒரு அறையில் கட்டிலில் படுத்து கிடந்தார்,சில வயர்கள் முகம் முழுவதும் கொழுவிக் கிடந்தது, என்னைக் கண்டவுடன் வாயில செருகி இருந்த வயரை இழுத்து எறிஞ்சு போட்டு, அவரை நான் நலம் விசாரிக்க முதல் என்னை நலம் விசாரித்தார்,

                          " எப்படி நான் வாசலில் நிக்குறது தெரியும் " எண்டு கேட்டார்,

                                   " எந்த வாசல் " எண்டு கேட்டேன் ,சிரித்தார்.

                                "     சிவைன்  நான்  உங்களுக்கு  கடன்  காசு  தரவேணும்  அது  நினைவு  இருக்கா ,,கையில  காசு  இல்லை  அதால  கொஞ்சம்  பயந்து  பயந்து  பதுங்கிக்கொண்டு  திரிஞ்சேன் "

                                     "    ஹஹஹஹஹா "

                                   " உண்மையாவே  உங்களை  சந்தித்தால்  இப்ப  வையடா  கடன்  காசை  என்று  கேட்பின்களோ  என்ற  பயத்தில  பம்மிக்கொண்டு  திரிஞ்சேன்  சிவைன் "

                                    "     ஹ   ஹ      ஹ  ஹா   "

                               "    ஏன்  சிவைன்  இப்பிடி  சிரிகுரிங்க "

                                 "  ஆனால்  நான்  உன்னைத்  தேடியாது  உனக்கு  வாசிக்க  என்று  தேடி  தேடி  புத்தகங்கள்  வேண்டி  வைச்சு இருந்தேன்  அதை  உன்னிடம்  கொடுப்பதுக்கு "

                                    " ஆனாலும்  நான்  கடன்காரன்  தானே,,காசு  உங்களுக்கு  தரவேண்டும்  தானே ,,அந்தப்  பயத்தில ஒளிச்சு  திரிஞ்சேன்  சிவைன் "

                          " காசு  ,,ஹ்ம்ம்,,அதுக்கு  என்ன  அர்த்தம் தெரியுமா "

                                 "  அது  ,,சரியா  தெரியவில்ல,,காசு  உள்ளவனை  நாலு  பேர்  நிமிர்ந்து  பார்க்கிறார்கள்  ,,காசு  இல்லாதவன்  நாலு  பேரை  நிமிர்ந்து  பார்க்கிறான் "

                                       "     ஹ்ம்ம்,,,,அது உண்மைதான் ,,காசு  இருந்தாலும் பிரசினை  இல்லாட்டியும்  பிரசினை  அது  உனக்கு  தெரியுமா "

                                என்று அவரின் கட்டிலுக்கு அருகில் இருந்த ஜன்னலைக் காட்டி ,எட்டிப் பார்க்க சொன்னார்,எனக்கு கொஞ்சம் பயம் வந்திடுது. இந்தாள் ஜென்னலால பாஞ்சு தற்கொலை செய்யப்போகுது போல இருக்கே எண்டு ஜோசித்தாலும் சிவைன் சாவுக்கு அர்த்தம் விளங்கிய மனுசன் அப்படி எல்லாம் கோழையாக முடிவு எடுக்க மாட்டார் எண்டு நினைத்து கொண்டு எட்டிப் பார்த்தேன்,

                                                ஜன்னலுக்கு மிக அருகில் பழைய சவுக்காலை இருந்தது,  உள்ளிவாள் சிக்குஸ் என்ற ஆசுபத்திரி நோர்வேயின் ,ஒஸ்லோவில் மிகப் பழைய ஆசுபத்திரி, ஒரு காலத்தில் அங்கே சிகிச்சை பெற வநதவர்கள்,மறு படி வீடு திரும்பி போக உத்தரவாதம் இல்லாததால் ஒரு வேளை அருகிலேயே சவுக்காலை வைத்து அடக்கம் செய்து இருந்து இருக்கலாம் போல,இப்ப அப்படி இல்லை ஒரு சிலரைத் தவிர் பலர் நல்லபடியா வீட்டுக்கு போவதை நவீன அறிவியல் சாத்தியம் ஆக்கி இருக்கு. நான் சவுக்காலையைப் பார்த்து கொண்டு ஒண்டுமே பேசமால் நின்றேன்,

                                      சிவைன் ," நான் பிறந்த தென் மேற்கு நோர்வேயின் கிர்ச்தியன் சான்ட் சின்னக் கிராமத்தை விட ,உங்களைப்போன்ற வெளிநாட்டு மக்களுடன் வாழுந்த ஒஸ்லோவில் தான்  நான் இறந்தால் என்னோட சில உறவினர்கள் அருகில் இந்த சவக்காலையில் புதைக்கும் படி சொல்லி இருக்றேன், " எண்டு சொல்லி கொஞ்சநேரம் மவுனமா இருந்தார்.

                              " சவுகாலையில் கிடங்கு வேன்டினவன் பொம்பிளைப் பேயைக் கலியாணம் கட்டின ஜோக் தெரியுமா "

                                                    எண்டு சாதரணமா கேட்டார். ஆச்சரியமாகி தெரியாது என்றேன் , மூச்சு மேலயும் கீழயும் வாங்க மெல்ல மெல்லச் சொன்னார். 

                                           சவுக்காலையில் இறந்த ஒரு பிரேதத்தை தாக்க இரண்டு பேர் அந்த நாளில் கிடங்கு வெட்டிக் கொண்டு இருந்தாங்களாம் ,ஒருவன் கிடங்குக்கு உள்ளுக்க நிண்டு வெட்ட, மற்றவன் வெளிய மேல நிண்டு மண்ணை வேண்டி எடுத்துக் கொட்டிக்  கொண்டு நிண்ட நேரம்,ஒரு அழகனா இளம் பெண் அந்த யாருமற்ற சவச்சாலையில் வெள்ளை உடுப்போட மிதந்து நடந்துவர ,மேல நிண்டவன் கீழ நின்டவனுக்கு

                                  "  ....... " என்றானாம்,,,,கீழ நிண்டவன் அதைக் கேட்டு மேல நின்டவனுக்கு

                               " ............." என்றானாம், இதைக் கொஞ்சம் நிண்டு கேட்ட அந்த இளம் பெண்,,,மேல நின்டவனிடம்

                                  " ......... " எண்டு கேட்டாளாம்,,,அதுக் மேல நிண்டவன்,

                                 " பொறு வாறன் என்னோட நண்பனைக் கேட்டு சொல்லுறேன் " எண்டு கீழ நின்டவனிடம்

                                          "  ..... " எண்டு கேட்க...கீழ நிண்டவன் " பொறு வாறன் " எண்டு மேல ஏறி வரமுதல்,மேல நிண்டவன்,,,,,போக வெளிக்கிட ,,இதுக்கு மேல சொல்ல முடியாது, அவளவு கொசப்பு ஜோக் அது...கடைசில சிவைன் அந்த ஜோக்கை முடித்த விதத்தில் நான் கெக்கே பிக்கே எண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்,சிவைன் சிரிக்கவே இல்லை முகத்தை இறுக்கி வைச்சுக்கொண்டு நான் சிரிப்பதை சின்னக் குழந்தைகள் போல ரசித்துக்கொண்டு இருந்தார் .

                          ஒரு வெள்ளை நேர்ஸ் வந்து எட்டிப் பார்த்து

                " இது ஆசுப்பத்திரி இங்கே உங்கள் வீடு போல நினைச்சு கெக்கே பிக்கே எண்டு விழுந்து விழுந்து சிரிக்கக்  கூடாது "

                         எண்டு சிரிக்காமல் சொன்னாள், அவள் சொன்னதை சிவைன் கேட்டார்,அவள் போன வுடன கதவை இறுக்கி சாத்தச் சொன்னார், சாத்தினவுடன் சிவைன், வயர் எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு,

                                           " இது ஆசுப்பத்திரியாம், இங்கே கெக்கே பிக்கே எண்டு சிரிக்கக்  கூடாதாம், இது ஆசுப்பத்திரியாம், இங்கே கெக்கே பிக்கே எண்டு சிரிக்கக்  கூடாதாம்"
                                                     
                                                                 எண்டு உயிர் உள்ளவரை  கடைசியா சிரிக்கிற மாதிரி  விழுந்து விழுந்து சிரிச்சார். அவர் சிரிக்க சிரிக்க வாயாலும், மூக்காலும் ரத்தம் வந்தது,நான் திசு பேப்பர் எடுத்து துடைக்கப் போனேன், " துடைக்க வேண்டாம் " எண்டு சைகை காட்டினார், நான் நேர்சைக் போய்க் கூடிக்கொண்டு வந்தேன்,கொஞ்ச நேரத்தில் அவள் சிவைன் முகம்,ரத்தம் எல்லாம் துடைத்து வயர் எல்லாம் கொழுவி முடிய,

                                       " சிவைன் நான் போகப் போறேன்,உங்களுக்கு ஒண்டும் வராது,நான் சில நாளில் மறுபடி வாரன்,உங்கலோடு பேச  டெலிபோன் நம்பர் இங்கே வேண்டிக்கொண்டு போறேன் " என்றேன்,

                                              " வரும் போது பேரீச்சம்பழம் வேண்டிக்கொண்டு வருவியா " எண்டு கேட்டார்,

நான் கட்டாயம் வேண்டிக்கொண்டு வாறன் எண்டு சொல்லிப்போட்டு வெளிய வந்து நேர்சிடம்

                                                   " சிவைனுக்கு என்ன வருத்தம் " எண்டு கேட்டேன் லுக்கேமியா என்ற ரத்தப் புற்றுநோய் எண்டு சொன்னாள், நான் வீட்டை உடைந்து போய் வந்திட்டேன்.

                                                      பின்னேரம் அன்று வேலையில் நிறையக் குழப்பமா வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்  எண்ணங்கள் ஓடியது, வாயாலும் மூக்காலும் ரத்தம் வாறது கொஞ்சம் கை விட்ட கேஸ் எண்டு கேள்விப்பட்டு இருக்றேன். சிவைன் லுக்கேமியாவால் பல வருடம் அவதிப்படுவதை  எனக்கு சொல்லவே இல்லை. அவர் தனி மனிதர் எந்தப் பெண்ணையும் கலியாணம் கட்டாமல் வாழ்ந்தவர்,அதுக்கு காரணம் அவர் சொல்லி இருக்குறார்,தென் மேற்கு நோர்வேயின் கிர்ச்தியன் சான்ட் இல பிறந்த சிவைன் ,சின்ன வயசில் தன்னோட அம்மாவை அவரின் அப்பா எப்பவும் அடிச்சு நொறுக்குவது எண்டும், அதால இளவயதில் ஒஸ்லோ வந்து தனிய இருந்து படிச்சு, அதில இருந்து அவர் திருமணத்தில் ஆர்வம் அற்று,வேறு சில காரணங்களாலும் தனியா வாழ்ந்தார்.

                                                 தான் இறந்தால் தன்னுடைய வீட்டை தன் சகோதரிக்கும் ,சொத்துகளை தன் சகோதரியின் பிள்ளைகளுக்கும் கொடுக்கப் போறதா சொல்லி இருந்தார், தென் மேற்கு நோர்வேயின் கிர்ச்தியன்சான்ட் இல வசிக்கும் அவரின் ஒரே ஒரு சகோதரி தன்னை கடந்த இருவத்தைந்து வருடமா ஒஸ்லோவுக்கு  பார்க்க வரவில்லை எண்டும்,தன்னையும் ஒரு நாளும் அங்கே அழைத்தது இல்லை எண்டும்  ஆசுபத்திரியில் வைத்து சொன்னார். எப்படியோ,நானும் வேலை பிசியில் வேலை,வெட்டி,சோலி,சுரட்டு அதிகமாக் கொஞ்ச நாள் சிவைனை மறந்திட்டேன்.

                 ஒருநாள்....

                                  முஸ்தபாவின் துருக்கி கடையில் ஆட்டு இறைச்சி வேண்டப் போன நேரம், அவனின் மேசையில் அரபு நாட்டுப் பேரிச்சம் பழம் பெட்டியில்  அடைச்சு வந்து இருந்த சின்னப் பெட்டிகளை அழகாக அடுக்கி  காட்சிக்கு வைச்சு இருந்தான். அதைப் பார்க்க சிவைன் நினைவு வர, சடார் எண்டு போனை எடுத்து அவர் தொடர்பு கொள்ள சொன்ன இலக்கத்தைக் குத்தினேன்,மறு முனையில் ஒரு நடுத்தர வயதுள்ள பெண் குரல்  தெற்கு நோர்வே நாட்டவர் பேசும் நோர்ஸ்க் உச்சரிப்பில்க் கேட்டது,

                                   நான் " சிவைனின் ப்ரென்ட் கதைகுறேன் ,சிவைனுடன் பேச முடியுமா " எண்டு கேட்டேன், கொஞ்ச நேரம் அந்த லைன் மவுனமாகி, மீண்டும் உயிர் பெற்று,

                          " அப்படியா,நீங்க சிவைனின் ப்ரென்ட் எண்டு சொல்லுரிங்க, சிவைன் மேல போய்ச் சேர்ந்து ஒரு கிழமைக்கு மேல ஆகி விட்டதே,

                                  "   அடக்  கடவுளே ,,இது  எனக்கு  இப்பதான்  தெரியும் "

                                  "  ஒரு நண்பன் இறந்தது தெரியாமல், நண்பன் எண்டு அவரைச்  சொல்லுறிங்களே,நீங்க என்ன விதமான நண்பன் எண்டு எனக்கு விளங்கவில்ல "

                                 "  உண்மைதான்  நான்  அக்கறை  இல்லாமல்  அலைந்துகொண்டு  இருந்தேன் "

                                 " ஹ்ம்ம்,,,ஆனாலும்  இது  மனதுக்கு  மிகவும்  வேதனையாக  இருக்கு "

                                 "  சிவைன்  எனக்காக  சில  புத்தகங்கள்  வேண்டி  வைச்சு  இருப்பதாய்  ஆசுப்பத்திரியில்  இருந்த  நேரம்  நேரம்  சொன்னார் "

                                   "!  அதென்ன  புத்தகங்கள் "

                              " அதுதான்  எனக்கும்  தெரியவில்லை "

                                  "இங்கே  அவர்  வீடு  முழுவதும்  புத்தகங்கள்  தானே  நிரம்பிக்கிடக்கிறது  இதுக்குள்ளே நான்  எதை  தேடுறது  "

                                    "    சரி  அப்ப  விடுங்க ,,பிரசினை  இல்லை "

                                   "ஹ்ம்ம்,,உனக்காக  அவர்  வேண்டி  வைச்ச  புத்தகங்களை  நீயே  அந்த  நேரம்  வந்து  வேண்டி  இருக்கலாமே,,எனக்கு  ஒரு  காரணமும்  புரியவில்லை  ஏன்  நீ  அவரை  சந்தித்து அவர்  உயிரோடு  இருந்த நேரம்   வேண்டவில்லை  "

                                               எண்டு என்னோட மனசாட்சிக்கு சொல்லுற மாதிரி  சொன்னாள், அவள் பேசிய உச்சரிப்பு கொஞ்சம் கஷ்டமா இருந்தது விளங்கிக்கொள்ள ,என்றாலும் நான் சுருக்கமா சொன்னேன் நான் யார் எண்டும் , சிவைனை எப்படி எனக்கு தெரியும் எண்டும்.

                                           அவள் மவுனமாக இருந்த சின்ன காலமற்ற இடைவெளியில், கொஞ்சம் ஜோசிதேன்,சிவைன் வயதானவர்,அவர் வியாதிக்கு மருந்தும் இல்லை, அவரே சாவை தனிப் பாடல் திரட்டில் சொன்ன மாதிரி  "..நரை கோட்டிளங்கன்று நல்வளநாடு நயந்தளிப்பான் விரையூட்டு தார்ப்புயன்வெற் பீழமன்னனெ தேவிரும்பி " என்று பயப்பிடாமல் எதிர் கொள்ளும் மன நிலையில் இருந்தார் ,

                                  வயதான காலத்தில் வாழ்ந்து முடித்து அவரோட நேரத்தில் அவர் விடை பெறுவது ஒண்டும் கவலையான விசியம் இல்லை போல இருந்தாலும் சிவனைப் பார்க்க பேரிச்சம்பழத்தோடு வாறன் எண்டு சொல்லிப்போட்டு போகாமல் விட்டது குற்றவுணர்வு போல தொண்டைக்குளியில் வந்து குந்தி இருந்தது மனதுக்கு நெருடலாக இருந்தது .

                                  அந்தப் பெண் தொடர்ந்து  தான் சிவைனின் சகோதரி எண்டும்,சிவைன் இறந்த நாலாம் நாள் அவரை அடக்கம் செய்து,தான் இப்ப ஒஸ்லோவில் அவரின் வீட்டில் நிற்பதாகவும் சொன்னாள்.என்னோட நோர்க்ஸ் உச்சரிப்பை வைத்து என்னை ஒரு வெளிநாட்டு வந்தேறு குடி எண்டு கண்டு பிடித்து,

                                   " சிவைனுக்கு நிறைய வேற்று இன மக்கள் நண்பர்களாக இருந்து இருக்குறார்கள்,பலர் போன் பண்ணினார்கள், அவர் அவர்களுடன் சந்தோசமா இருந்து இருக்குறார், அவர் இந்த வீட்டை என்னோட பெயரில் எழுதி வைச்சு,அவரின் வாழ் நாள் சேமிப்பு முழுவதையும் என்னோட இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளின் பெயரில் பகிர்ந்து எழுதி இருக்குறார், நான் அவரின் ஒரே ஒரு சகோதரி பல வருடமா அவருடன் அன்பாக ஒரு வார்த்தை பேசவில்லை என்பதை நினைக்க கவலையாக இருக்கு "

                              என்று அழுதாள், கடைசியாக

                                              " அவருடன் ஆசுபத்திரியில் இருந்த போது சில நிமிடங்கள் டெலிபோனில் பேசினேன், ஒரு ஸ்ரீ லங்கா தமிழர்  ஒருவர்  மட்டுமே தன்னை ஆசுபத்திரியில் வந்து பார்த்ததாகவும்,அதை தான் மிகவும் பெரிய ஒரு விசியமாக நினைபதாகவும் சொல்லி இருந்தார்,அது யார் எண்டு உனக்கு  தெரியுமா,அவரை நான் சந்திக்க முடியுமா "    எண்டு கேட்டாள்.

                               நான் அதுக்கு பதில் சொல்லவில்லை,

                  " சிவைனின் ஆத்மா சாந்தி அடையப் பிராதிக்குறேன் " எண்டு சொல்லிப்போட்டு வைச்சிட்டேன்,

               முஸ்தப்பா வந்து

                              " என்னப்பா பேரிச்சம்பழப்  பெட்டியப் பார்த்துக் கொண்டு டெலிபோனில யாரோட வைச்சு அறுக்கிறாய், காசில்லாட்டியும் பரவாயில்லை ரெண்டு பெட்டிய கொண்டு போ பிறகு காசைத் தா, இன்று இரவு பொப் மார்லியின் பாடல்களை இசைக்கும் இசை நிகழ்ச்சி  பிஸ்லெட் அரினாவில நடக்குது  வாவன் பியர் நாலஞ்சை உள்ளுக்க விட்டுப்போட்டு கும்மாளம் போடலாம்,இளம் பெட்டையள் மயக்கத்தில நிப்பாளுகள்,மடக்கலாம் வாரியா, " என்றான்,

                             நான்  " பேரிச்சம்பழம் இனிக் கொண்டு போய்ப் பிரிஜோசனம் இல்லை  " எண்டு சொல்லிப்போட்டு ,

                                        பேரிச்சம்பழப்  பெட்டிய உற்றுப் பார்த்தேன் ,அந்த சின்னப் பெட்டிகளின் மேலே  ஒரு படம் போட்டு இருந்தது , ஒரு பேரிச்ச மரத்தை சுற்றி சில ஒட்டகங்கள் நிக்க, அதுக்கு அருகில் யாழ்பாணத்தில செத்த  வீட்டில ஆட்கள் குந்தி இருக்கிற மாதிரி சில அரபுக்கள் குந்தி இருந்தார்கள். அவர்களோடு என்னோட குற்ற உணர்வும் சேர்ந்தே குந்தி இருந்தது.....
.
.


 05.08.14

Sunday, 2 August 2015

Annaik Kili Unnaith Theduthe ,,Guitar Cover





ஞாயிறு பொழுதுபோக்கு இசைவிருந்து...இசைஞானி இளையராஜாவின் முதல்ப் படத்தில வந்து நதியோரம் பிறந்து கொடி போல வளர்ந்து பட்டி தொட்டி எல்லாம் "வெயிலோடும் மழையோடும் மனம்போல் நடந்து "பட்டையக் கிளப்பிய ஒரு தலை முறையைக் கிறங்க வைத்த பாடல்.இந்தப் பாடல் வரிகளை அன்னக்கிளி படத்தைத் தாயரித்த பஞ்சு அருணாசலம் எழுதி இருந்தார். இசை எவளவு அருமையோ அவளவு அளவு பாடல் வரிகள், " நதி என்றால் அதுக்குக் கரை ஒன்று காவல் கொடி என்றால் அதைக் காக்க மரமே காவல் புள்ளிபோட்டு ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லறுக்கப் போகையில் இந்தக் கன்னிக்கு யார் காவல் " என்று ஒரு கிராமத்துப்பெண் பற்றி அழகா " கனவோடு சில நாள் நினைவோடு சிலநாள் உறவில்லைப் பிரிவில்லை தனிமை பலநாள் " என்று ஏங்கும் எல்லோரினதும் இதயத்தை தொட்டு " உறங்காத கண்களுக்கு ஒலை கொண்டு மை எழுதி " இருக்கிறார் பஞ்சு அருணாசலம்.

Monday, 27 July 2015

ஆகாயக்கடல்வெளி இளையநிலா..

தொன்நூறுகளின் ஆரம்பத்தில் யாழ் குடாநாடு குண்டு மழைக்கு மத்தியில் அதிர்ந்து கொண்டு இருந்த நேரம், கோவில்களின் கடைசி பூங்காவன திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியாக இசைமழை பொழிந்த நேரம், என்னோட இளவயதில் ஒரு இசைக் குழுவில் கிட்டார் வாசித்தேன். அந்த இசைக்குழு என்னோட கடைசித் தம்பியின் நண்பர்கள் நடத்தினார்கள்.

                                   நாங்க யாழ்ப்பாணம் டவுனில இருந்தாலும், நிகழ்சிகள் செய்யும் அழைப்புகள் அதிகம் கிராமக் கோவில்களில் இருந்து வரும்,அந்தப் பையன்கள் என் கடைசித் தம்பியை விட சின்னதாக இருந்தது நினைவு இருக்கு.இசைக் குழுவில் அதிகம் ஏலேற்றோனிக் கருவிகள் இருக்கவில்லை, அதனால இசை கொஞ்சம் இரைச்சல் இல்லாமல் இயல்பாக கிராமத்து ஆவாரம்பூப்  போல அழகா எப்பவும் மயங்க வைக்கும் .

                                அந்த இசைக்குழு பெயர் இப்ப நினைவில் இல்லை,அதுபோலவே அதில நான் எப்படிக் கிட்டார் வாசித்தேன் எண்டும் அறவே நினைவு இல்லை.பயணங்கள் முடிவதில்லை படத்தில வந்த இளையநிலாப் பொழிகிறது..  என்ற பாடலை தொடக்கம் முதல் இறுதிவரை கிடாரில் பொழிந்து வாசிக்கும் திறமை என்னிடம் இருந்ததால்  என்னை அந்தப் பையன்கள் ஆஸ்தான கிடாரிஸ்ட் ஆக அந்த இசைக் குழுவில் வைத்து இருந்தார்கள். 

                                          இந்தக்கதை இளையநிலா பாடலோ,அதில் வரும் கிட்டார் அதிசயங்களோ, அல்லது பிஞ்சு போன  அந்த இசைக்குழு பற்றியதோ இல்லை, இளமை  நெஞ்சமெல்லாம்   வயதுக்கோளாறு  ஹோர்மோன்கள் கொலுவிருந்த  நாட்களில்இ ளைய நிலாவை விட இளமையான ஒரு பெண்ணை அந்த இசைக்குழு நடத்திய ஒரு நிகழ்சியில் முன்னப் பின்ன தெரியாத ஒரு ஊரில சந்தித்து பற்றியது..

                                 வடமராட்சியில் சமரபாகுதேவன்குறுச்சி என்ற இடத்தில ஒரு பிள்ளையார் கோவிலில் அந்த இசை நிகழ்ச்சி நடந்த இரவு, எல்லா இரவும் போல இருட்டா இருந்தது, எல்லா கிராமத்துப் பிள்ளையார் கோவில் போல இருந்த அந்த சின்னக் கோவிலில் பிள்ளையாரும் சின்னதா இருந்தார்,கோவிலும் சின்னதா இருந்தது . கோவிலுக்கு முன்னால ஒரு ஆலமரத்திற்குப் பக்கத்தில, மேடை போட்டு,எளிமையா நடந்த அந்த நிகழ்சியில் அந்த இசைக் குழுவின் பிராதான அறிவிபாளார் அன்று வரவில்லை,பையன்கள் கேட்டாங்கள்

                 " அண்ணே நீங்க பாடல் தொடங்குமுன்,ஒரு சின்ன அறிமுக அறிவுப்பு கொடுக்க முடியுமா " எண்டு,

                              எனக்கு எனவுன்சர் என்ற அறிவிப்பாளர் போல எப்படிப் பேசுவது எண்டு தெரிந்தாலும், என்ன பேசுவது எண்டு தெரியவில்லை,நான் அவங்களிடம் அதை சொன்னேன்,அவங்கள்

                   " அண்ணே அது பரவாய் இல்லை,உங்களுக்கு பிடித்த மாதிரி சொல்லுங்க அண்ணே ,எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை " எண்டு உற்சாகம் கொடுக்க,

                                    நான் மைக்கைப் பிடித்து,ஒரு கையால வேட்டியை இறுக்கிப்பிடித்து கொண்டு ,  என்னோட பாணியில் ஜோக் அடித்து தொடங்கினேன்,அது கொஞ்சம் வித்தியாசமா இருந்ததாலோ என்னவோ சனங்கள் ரசித்தார்கள், அப்பத்தான் மேடையின் கீழே ஒரு இளம் பெண் கொஞ்சம் அளவுக்கு அதிகமா விழுந்து விழுந்து சிரிக்கிறதை,சில நேரம் நான் மைக்கை கையில எடுக்கவே அந்தப் பெண் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்க ஆச்சரியமா இருந்தது. 

                                         உங்களுக்கு உண்மையை சொன்னா என்ன நிகழ்சியில் நான் என்னோட கிடாரை விட அவளை அதிகமாக ஓரக்கண்ணால் கவனித்தேன்.....

                                       கோவில்களின் கடைசி பூங்காவன திருவிழா ஒரு வருடத்தில் நடக்கும் ஒரு நினைவு நிகழ்வு, சனங்கள் அது எப்படி குளறுபடி இசை நிகழ்வாக இருந்தாலும் ரசிப்பார்கள். இரவின் அமைதியில் விடிய விடிய நடந்த அந்த நிகழ்வின் நடுவில அந்தக் கோவில் ஐயருக்கு பொன்னாடை போர்க்கும் நிகழ்ச்சி நடக்கப் போறதா சொல்லி ,எங்களை மேடையில் இருந்து இறக்கி, அந்த திருவிழா உபயகாரர் வீட்டில சாப்பாடு ரெடியா இருக்கு, எல்லாரும் போய் சாபிட்டு போட்டு வந்து தொடர்ந்து இசை நிகழ்சி செய்யச் சொல்ல, ஒரு வயதான ஐயா வந்து

                  " பொடியள் உங்களுக்கு, இடம் வலம் இந்தப் புது ஊரில தெரியாது ,நான் விதானையார் வீடு காட்டுறன் எனக்குப் பின்னால வாங்கோட"

                          எண்டு சொல்ல ,நான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன், அவள் நேரத்தோட எழும்பி , ஆலமரப் பக்கம் நிண்டு எனக்கு என்னவோ சொல்லுரது போல கையால சைகை செய்ய எனக்கு இருட்டில சரியா விளங்கவில்லை ,அவளவுதான் அவள் மின்னல் சொப்பன சுந்தரி நளினத்தில்  மறைந்து போயிட்டாள்,நான் கவனித்து போல அவளும் என்னைக் கவனித்து இருக்கிறாள் எண்டு விளங்கினாலும் எதுக்கு எனக்கு அப்படி சிக்னல் காட்டினாள் எண்டு விளங்கவில்லை.

                            அந்த ஐயா கல்லு ஒழுங்கை பனைவடலி வீதியால எங்களை இழுத்துக்கொண்டு போக,நாங்க பின்னால இழுபட்டுப்போக, பாதத்தியில் ஓட்டிக் கொள்ளும் செம்மண் துகள்கள் நிரம்பிய வீதியில்,கோவில் லவுட் சபிகர் சத்தத்தை நோக்கி தொடர்ந்து குரைக்கும் நாய்கள் எங்களைப் பார்த்து இன்னும் அதிகமா குரைக்க தொடங்க  ,

                                  ஆரவாரமற்ற இரவு நேர இசை நிகழ்ச்சி அமளி துமளி குறைந்து குறைந்து அமைதியாக ஒழுங்கை முடிவில் சத்தம் சில்வண்டு இரைச்சல் அளவுக்கு நிசப்தமாக அடங்க,  நான் வேட்டிய மடிச்சு முழங்கால் வரை கட்டிக்கொண்டு போக,ஒரு மரத்தில அரிக்கன் லாம்பு விளக்கு தொங்க, அந்த வீட்டுக்குள்ள அந்த ஐயா போக முதல்

                          " ராசாத்தி பிள்ளையள்  வாறாங்கள், அம்மாட்ட டக் எண்டு பந்தி விரிச்சு சாப்பாடு போட சொல்லனை "  

                              எண்டு சொல்ல,அந்தப்பெண் அந்த மரத்துக்கு பக்கத்தில், படலையில் ஓரமா நிண்டாள், பெடியங்கள் எல்லாரும் பசியில அடிச்சுப் பிடிச்சு உள்ளுக்கு உள்ளிட, நான் அவளைப் பார்த்தேன், சடார் எண்டு வேட்டிய முழங்காலில இருந்து அவிடுக் கீழ விட்டேன், அவள் எனக்கு என்னவோ சொல்ல,அல்லது கதைக்கக் காத்து இருப்பதுபோல பார்த்தாள். 

                            அவள் நின்ற அந்த படலையின் அருகில் இருந்த  மரத்தில இருந்து ஒரு முன்னம் பின்னம் அறியாத வாசம்வர

                    " இது  என்ன மரம் "  

                        எண்டு மரங்கள் பற்றி என்னவோ தாவரவியல் ஆராய்ச்சி செய்யுற மாதிரி நூல் விட்டு அவளிடம் கேட்டேன், அவள் முகமெல்லாம் சந்தோசமாகி,

                          " இது ஆமணக்கமரம், நீங்க நல்லா கிட்டார் அடிக்குரிங்க " எண்டாள் ,


                      நான் கொஞ்சம் ஜோசித்து " இது உங்களின் வீடா " எண்டேன்,

                அவள்," ஓம் ஓம் ,நீங்க நல்ல முசுபாத்தியா எனவுன்ஸ் செய்யுரிங்க, சிரிப்பு வருகுது " என்றாள் ,

                     நான், " இவங்கள் எல்லாம் என்னோட தம்பியின் பிரென்ஸ், கிட்டார் வாசிக்க தெரியுமா நீங்க மூயுசிக் படிகுரின்களா" எண்டேன்,

                           அவள்," நீங்க இளையநிலா பொழிகிறது பாடல் நிகழ்சியில் பாடுவின்களா " எண்டாள் ,

                         நான் " அப்பிடிதான் நினைக்கிறன், உங்களுக்கு அது விருப்பமா,இன்று உங்களின் திருவிழாவா எண்டு கேட்க" ,

                            " நிலாகாயும் நேரம் சரணம்.... பாடலுக்கு முதல் நீங்க சொன்ன விளக்கம் வித்தியாசமா இருந்தது " எண்டாள்,

                         " நான்  என்ன விளக்கம்  சொன்னேன் ,,எனக்கே  நினைவு இல்லை "

                             " காதலனும்  காதலியும்  கையைப்பிடித்து நடப்பது  போல  அந்த பாடலின் தாளகதி  இருக்கு  எண்டு சொன்னிங்க "

                                " அப்படியா "

                             "  ஹ்ம்ம்  என்னமோ  ஒரு இங்கிலிஷ் சொன்னிங்க  வாத்து  அப்படி  நடக்கும்  என்று "

                               " வாடலிங்  அதுவா ,,,வாத்து  அப்படிதான்  நடக்கும் "

                              " ஹ்ம்ம்  அதுதான்,,நல்லா  இருந்திச்சு ,,அப்படி  ரசித்து  சொன்னது "

                              " அப்படியா,,அது  இங்கிலிஸ்  சொல்லு " 

                              " என்ன அப்படியா என்டுரிங்க,எவளவு  ஆசையா  இருந்திச்சு  தெரியுமா  அதைக்  கேட்க  "

                             " இந்த இசைக்குழுவில் உள்ள எனவுன்சர் இண்டைக்கு வரவில்லை  அதால  நான்  சும்மா  அறிவிப்பாளர் போல  என்வுன்ஸ் செய்தேன் "

                                  " அவர் இனி வரத் தேவை இல்லை,,நீங்களே  மைக்கைப் பிடிச்சு  எனவுன்ஸ்  செய்யுங்கோ "

                               " அட அட ,,எனக்கு  அது எல்லாம் தெரியாது "

                               " வேற  என்ன  தெரியும்,,,சொல்லுங்கோ "

                              " உண்மையைச்சொன்னால் எனக்கு கிட்டார்  வாசிகிறத  தவிர வேற ஒன்றுமே தெரியாது "

                                  " உண்மையாவா சொல்லுரிங்க,,கிட்டார்  எப்படி  வாசிக்கிறது  "

                                    " ஹ்ம்ம் .அது  எல்லாரும்  வாசிக்கலாம் ." 

                                   "  என்ன ஹ்ம்ம்,,வேற  சொல்ல  மாட்டிங்களா  "

                                 " வேற சொல்ல ஒன்றுமில்லை ..."

                       "  என்ன ஒன்றுமில்லை,,ஹ்ம்ம், கோபம்  கோபமா வருது  " 
                                
                                   "    எதுக்குக் கோபம் வருகுது "

                                "  அதுதான்  தெரியவில்லை ..."

                              நான் " நீங்களும் சினிமாப் பாட்டு எல்லாம்  பாடுவின்களா " எண்டு கேட்க,

                            அவள், " நீங்க இனியும் உடுப்பிட்டிக்கு வருவிங்களா " எண்டு கேட்டாள்,

                       நான் தலையைச் சொறிஞ்சு  " உடுப்பிட்டி எங்க இருக்கு " எண்டேன்

                                       அவள் " இது தான் உடுப்பிட்டி " எண்டு சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள்,

                         அவள் சிரிக்கிறதைக் கேட்டு,எங்களைக் கூ டிக்கொண்டு வந்த ஐயா,

                                 " அது ஆர் பிள்ளை ராசாத்தி படலைக்க நிக்குறது "  

                            எண்டு கேட்க நான் கதையை நோர்மல் ஆக்கி விடுப்பு கேட்கிற மாதிரி,

                                " ஏன் அரிக்கன் லாம்பை சுற்றி பூச்சி பறக்குது, இது என்ன பூச்சி " எண்டு கேட்டேன் .

                               " இது விட்டில் பூச்சி. இன்று இரவு மழை சிலநேரம் வரலாம் போலக் கிடக்கு ,கவலையா இருக்கு மழை வந்தா நீங்க எல்லாரும் இடையில இசை நிகழ்ச்சி செய்யாமல் போயிடுவின்களே , இந்த விட்டில் பூச்சிகள்  சிம்மினியில் மோதி மோதி செத்துப்போகும்,அதன் வாழ்கை ஒரு இரவுதான் "

                    எண்டு  மெதுவாக சொன்னாள்.

                          " அவங்கள் இடையில  போனானாலும் ,நான் மழையில நனைத்து கொண்டு ,மைக்கைப் பிடிச்சு எனவுன்ஸ் பண்ணிக்கொண்டு இருப்பேனே "

                                எண்டு சொன்னேன்,வாய் விட்டு சிரித்தாள், சல்லி முட்டி  உண்டியலை உடைச்சு சில்லறைக் காசு வெள்ளித் தாம்பாளத் தட்டில கொட்டின மாதிரி இருந்தது. 

                           அதுக்குப் பிறகு ,என்னோட ஊரைக் கேட்டாள்,சொன்னேன், அவள் வட இந்துவில் படிகிறதா சொல்லிக்கொண்டு இருக்கும் போது, வீடுக்க உள்ள இருந்து

                           " கோகிலா,கோகிலா ,இருட்டில எங்க ராசாத்தி சிலமன் தெரியேல்லையே பிள்ளை, பெட்ரோல் மக்ஸுக்கு மண்எண்ணை குறையுது, எண்ணைக் கானை எங்க பிள்ளை வைச்சனி "

                      எண்டு கேட்டு ஒரு குரல் அந்த வயதான அய்யாவின் குரல் போல  வர, அவர் யார் என்று கேட்டேன், தன்னோட பெரியய்யா   என்று சொன்னாள். கொஞ்ச நேரத்தில் அவள் சத்தம் இல்லாமல்

                        " அம்மா கூப்பிடுறா , நீங்க பசியோட இருபிங்க உள்ள வந்து முதலில்  சாப்பிடுங்க " எண்டாள்,

                                 படலைக்கு உள்ள போகும் போது தலையை திருப்பி பார்த்தாள் , தேவதை போல சிரிச்சு மின்னல் போல மின்னிப் போட்டு உள்ளுக்குப் போயிடாள்,

                                எனக்கு விளங்கிட்டுது இந்தக் கதை இதோட முடியாது போல இருக்கு எண்டு எண்டாலும் ஆரம்பம் விளங்காத ஒரு விசியம் எப்படி இனித்தொடரும் எண்டு குழம்பிக்கொண்டு, நான் கொஞ்சம் பிந்தி சாப்பிட வர சாபிட்டுக்கொண்டு இருந்த பெடியங்கள் என்னை சந்தேகமாப் பார்த்தாங்கள்,

                      " அண்ணே இடியப்பம் முடியப் போகுதண்னே "

                           எண்டாங்கள்,நான் ஒண்டும் சொல்லவில்லை. சின்னப்பொடியன்களை முதல் சாப்பிட விட்டுப்போட்டு பிறகு அண்ணே கடைசியா சாப்பிட வாரார் ஆக்கும் எண்டு ஜோசித்திருப்பான்கள் போல.  நான் சாப்பிட ஒரு மூலையில இருக்க, அவள் கதவுக்கு மறைச்சு அரை வாசியா என்னைப் பார்க்க, அவளோட முகம் அஷ்டமி சந்திரன் போல பாதியாக , இமைகள் மட்டும் மூன்றாம் பிறை போல இருட்டில தெரிந்து,

               அவளின் அம்மா

                               " எங்கட ஊர் இடியப்பம் சொதி, உங்களைப் போல டவுனில வளரும் பிறத்தி ஆட்களுக்கு நல்லாப் பிடிக்கும் போல "

                           எண்டு சொல்ல, நான் அவளைப் பார்த்தேன், அவளே கடுகு தாளிச்சுப்போட்ட தேங்காய்ப் பால் சொதிபோல தான் இருந்தாள், சிரிப்பு வந்தது.

                   அவள் என்னைப் பார்த்துக்கொண்டே  

                             " எணை அம்மா,   பச்சை மிளகாய் வெள்ளச் சம்பலும் இவயளுக்குக் பிடிகுமாமம், அங்கே போடணை "

          எண்டு என்னோட இலையை அவளின் அம்மாவுக்கு காட்டினாள். 

                     நான்  பச்சை மிளகாய் வெள்ளைச் சாம்பலைப் ரசித்துப் பார்க்கிற மாதிரி ஒரு கோணத்தில்,தலையை அதிகம் நிமிர்த்தாமல்  அவளைப் பார்த்தேன்.

                                        கோகிலா இளமையா என்னோட வயசு போல இல்லை ,கொஞ்சம் குறைவு போல சின்னதாக இருந்தாள். இருட்டிலையும் அவள் தலை மயிர் நல்ல வள வள எண்டு வழுக்கி வழுக்கி அலைபாய , காதில போட்டு இருத்த பெரிய வளையத் தோட்டுக்க கொஞ்ச தலைமுடியை வேண்டும்  எண்டே வளைச்சு விட்ட மாதிரி இருக்க,முகம் சின்ன சிட்டுக்குருவி போல அப்பாவியா இருந்தது, முழங்காலுக்கு கீழ வரை வரும் ஒரு நீண்ட பாவாடை அணிந்து, ஒரு சில்க் துணியில தைச்ச பிளவுஸ் மேல போட்டு, கையில நிறைய வளையல்கள் அணிந்து இருக்க, அவளின் உருவம் கன்னியாகுமரி அம்மன் சிலைபோல கலர் புல்லா இருக்க கையில ஒரு கிளி வைச்சிருந்தா மதுரை மீனாட்ட்சி அம்மன் போல இருப்பாள் போல இருந்தது.

                               அந்த வடலிப் பாதையில இருந்த பனை மரங்களின் காவோலையில் காத்து மோதி சர சர சர எண்டு சருகுகளுக்குள்ளாள சாரப்பாம்பு போற மாதிரி சத்தம் வந்தது அவள் சத்தம் இல்லாமல் இருந்த சில நிமிடங்கள். தலையைப் பக்கவாட்டில் சரிச்சு, ஒரு கையால தலை மயிரை அள்ளி எறிஞ்சு பின்னுக்கு விழுத்தி, சின்னக் குழந்தைகளின் உலகம் தெரியாத பூரிப்பில் சந்தோஷமா சிரிக்கும் போதெல்லாம்.... 

                                     நான் கடைசியா சாபிட்டு,வெளிய வர பொடியன்கள் எண்ணப் பார்த்துக்கொண்டு வடலிப் பாதையில் நிண்டாங்கள்,நான் ஆமணக்கம் மரத்தையும் அரிக்கன் லாம்பையும் பார்க்க கோகிலா மறுபடியும் அதில நிண்டாள், ஆனால் கொஞ்சம் பதட்டமா நின்றால் என்பதை இருட்டு வெளிகாட்ட, இருட்டில வேற சில உள் ஊர் இளஞ்சர்கள் கொஞ்சம் தள்ளி அந்த வடலிப் பாதையில் நிக்குறது எனக்கும் தெரிய, நான் கொஞ்சம் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கிற மாதிரி ,

                              " உங்களின் அரிசிமா இடியப்பம்,தேங்காய் சொதி, பச்சை மிளகாய் வெள்ளைச் சம்பல்,சும்மா நாதம் பேசியது, அதுக்கு நன்றி. உங்க விருப்பமா சாப்பாட்டுக்கு நன்றியாக இளையநிலா பொழிகிறது பாடல்.. எப்படியும் இன்று பாடுவம் ,அதுக்கு நான் தான் இன்ற்றடக்சன், இண்டர்லுத், பினிசிங் எல்லாம் கிடாரில் வைச்சு தட்டப் போறேன் "  

                                  எண்டு கொஞ்சம் விபரமா சொல்லிப் போட்டு ,அவள் பதில் என்ன சொல்லப்போறாள் எண்டு ஜோசிதுக்கொண்டு நின்றேன்,

                                அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆமணக்க மரத்தில தொங்கின அரிக்கன் லாம்பை எடுத்துக்கொண்டு படலையை மெள்ள சாத்திப்போட்டு, வீட்டுக்க போயிட்டாள்.

                    பெடியங்கள் வந்து

                      " அண்ணே அந்த அக்கா யார் " எண்டு கேட்டாங்க,

                      நானும் " அது தான் எனக்கும் பிரச்சினை ,அந்த அக்கா யார் எண்டு எனக்கும் தெரியாது " எண்டு சொன்னேன்,

                அவங்கள்

                       " அண்ணே இந்த ஊர் எங்களுக்கு தெரியாது ,வீண் சோலி வரும் அண்ணே, நீங்க வாங்க நாங்க மேடையில ஏறப்போரம் "

                  எண்டு சொல்ல, நானும் அவங்களோட வந்து மிச்ச நிகழ்ச்சி முழுவதும் கிட்டார் வாசித்தேன்,  இளையநிலா பாடல் பாடி வாசிக்க இளையநிலா இருந்த இடம் வெறுமையா இருந்தது. அவள் வரவே இல்லை, அந்த வெறும் இடத்தைப் பார்த்து பார்த்து கொண்டு இருந்தேன், கடைசியா " நாளை நமதே எந்த நாளும் நமதே...." பாடல் வாசித்து நிகழ்ச்சி முடிய,எல்லா வாத்தியமும்,ஒலி பெருக்கி சாதனங்களும் வானில ஏற்றி முடியவும் அந்த இடம் வெறுமையா இருந்தது .

                           திருவிழா முடிய எல்லாசனமும் வீடுகளுக்குப் போக, அந்த கோயில் நிர்வாக வயதான மனிதர்கள் கோவிலுக்கு வெளிய நிற்க ,நாங்களும் எல்லா மூசிக் சாமான்களும் வானில ஏற்றி முடிய நான் வேட்டிய மடிச்சு முழங்கால் வரை கட்டிக்கொண்டு வெளிக்கிட, நாலு சங்குமார்க் சரம் கட்டின வாட்ட சாட்டமான இளைஞர்கள் எங்களின் வானுக்கு கிட்ட வந்து,என்னோட மட்டும் கதைக்க வேண்டும் எண்டு சொன்னார்கள்,பெடியங்கள் என்னை ஏதோ வில்லங்கத்தில மாட்டுற மாதிரி பார்த்தாங்கள்,நான் சாமாளிப்பேன் எண்டு அவங்களுக்கு சொல்லிப் போட்டு தனியப் போனேன்,

                           அவங்களில் ஒருவன் ,

                                   " வதனியை  முதலே தெரியுமா " எண்டு மரியாதையைக் கேட்டான்,

                            விலங்கமான நேரத்தில ஓவரா மரியாதை வெளிய வருவது நல்லதில்லை எண்டு தெரிந்தாலும் ,

                       நான் " யார் வதனி ,அப்படி யாரையும் தெரியாதே  " எண்டு கேட்டேன்,

                             " அவ தான் விதானையின்ற மகள்,நீங்க இருட்டில நிண்டு என்னவோ குசு குசுதின்களே அவளோட " என்றான் 

                             " ஒ,  அவங்களுக்கு  வதனியா  பெயர் "

                            " ஏன்,,வேற பெயர்  சொன்னாளா "

                           "  இல்லை,,நான்  கேட்கவுமில்லை,,சொல்லவுமில்லை ,கோகிலா  என்று அவர்கள் வீட்டில ஒரு அம்மா  கூப்பிட்டா "

                         " ஓம்,,அதுதான் வீட்டில பெயர் , என்ன கதைத்தாள் "

                           "  ஒன்றும் விசேஷமாக  கதைக்கவில்லை,,இசைக்குழுவில் என்ன பாட்டு வாசிப்பிங்க  என்று  கதைத்தாள் "

                               "   அப்படியா ,,அவளவுதானா  "

                                "   அவளவுதான்,,"

                              நான் நடந்ததை சொன்னேன், அந்த நாலு பேரில் ஒருவன் நான் எதிர் பார்த்த கேள்வியை அவனே சொல்லி அதுக்கு கச்சிதமா பொருந்தும் பதிலையும் அவனே சொன்னான், இதெல்லாம் உலகம் முழுக்க கிராமம்,நகரம் வித்தியாசம் இல்லாமல் நடக்கிற விசியம் எனபதால் நான் ஒண்டுமே சொல்லவில்லை ,நான் என்ன சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்பம் ,முதல் அவன் சொன்னது அவனுக்கு மட்டும் உள்ள ஆதங்கமா எண்டும் எனக்கு தெரியாது,அவங்களில் கொஞ்சம் சண்டியன் போல இருந்த ஒருவன், கொஞ்சம் வெருட்டுற மாதிரி சில விசியம் சொன்னான், அது எனக்கு இன்னும் குழப்பாமா இருந்தது ,,,

                                  அந்த நிகழ்சியின் பின் அந்த இசைக்குழு பிரிந்து  என்னோட தம்பி ஒரு முன்னணி இசைக்குழுவில் தபேலா கலைஞ்சனா முன்னணி மேடைகளில் ஏறப்  போக , என்னைப்போன்ற மற்ற சில்லறைகள் எல்லாரும் பிரிந்து எல்லாரும் கொஞ்ச நாளில் காணாமல் போக ,ஒரு கட்டத்தில் அதுக்குப் பிறகு நான் எல்லாத்தையும் மறந்து விட்டேன்,கோகிலாவின் முகத்தை மட்டும் மறக்கவே இல்லை,அது பார்க்கிற இடம் எல்லாம் முன்னுக்கு வந்து மறைக்கிற மாதிரி இருந்தது, 

                                          ஆனாலும் அஞ்சு நிமிடம் பேசியதை வைத்துக்கொண்டு ஒரு இளம் பெண்ணில் காதல் கோட்டை கட்ட அத்திவாரம் போட முடியாது எண்டு நல்லா தெரிந்தாலும், அந்த இளம் பெண் நிறைய விசியம் என்னோட பேச விரும்பி இருக்கலாம், சந்தர்ப்பம் கிடைக்காத போது தான் பேசாத விசியங்கள் இதயம் முழுவதும் இறுக்கிக்கொண்டு பாரமாக இருக்கும்.எப்படியோ அந்த நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமா அழியத் தொடங்க ...

                                        ....சில வருடங்களின் பின் அந்த முகத்தை வேற ஒரு இடத்தில,ஆணையிறவு ஆகாயக் கடல் வெளிச் சண்டையில வீரச்சாவடைந்த போராளிகள்  .விபரம்,ஈழ முரசு  இல வந்த நேரம் பார்த்தேன். சண்முக சுந்த..... .. கோகிலவதனி , மேயர் இளையநிலா எண்டு படம் போட்டு அதில அவள் என்னையே பார்ப்பது போல இருந்தது, இளையநிலா அப்ப வரிப் புலியில் வீரமாக இருந்தாள்,,பாவம் உசிரோட இல்லை!

                                                யுத்தகாலத்திலிருந்து  அந்த நேரம் வாழ்ந்த  எல்லாரையும் போல  இழப்புக்கள்  பற்றி அலைந்துகொண்டு  இருந்த  எல்லா இடங்களிலும் பதில்கள்  இல்லாத  கேள்விகளுடன்  வெயிலோடும்  மழையோடும் தனிமையிலும் ஏராளமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஜதார்த்த   வாழ்க்கை என்பது  எப்போதும்  உண்மையோடு என்னிடம் ஏராளமானவற்றைப்   பகிர்ந்துகொண்டிருக்கிறது.

                                               இதில மறைக்கவோ திரிபுபடுத்தவோ ஒன்றுமேயில்லை அப்படி நினைத்து   நல்லா உத்துப்பார்த்த போது முகத்தில அஷ்டமி சந்திரன் ,இமைகள் மூன்றாம் பிறை.பின்னணியில் ஆமணக்க மரம்,அதில அரிக்கன் லாம்பு, பாதத்தில் ஓட்டிக் கொள்ளும் செம்மண் துகள்கள் நிரம்பிய கல்லு ஒழுங்கை , தொடர்ந்து குரைக்கும் நாய்கள். இரவு நேர இசை  நிகழ்ச்சி, ஆகாயக் கடல் வெளியில் இளையநிலா !
.

Sunday, 26 July 2015

" முதல்ச் சந்திப்பு "

பல வருடம் முன்னர் புலம்பெயர்ந்து சுவீடனில் அரசியல் அகதி முகாமில், புலியையும்,சிங்கத்தையும் பயங்கரமாச் சித்தரித்து உலகத்துப் பச்சைப் பொய் எல்லாம் சொல்லியும் " நிரந்தர வதிவிடக் காட் " கிடைக்குமா, கிடைக்காதா எண்டு அல்லாடிக்கொண்டு மண்டையைப் பிச்சுக்கொண்டு இருந்த நேரம், அந்த முகாம் இருந்த இருட்டு விழுங்கிய அத்துவான காட்டுக்கு நடுவில் புள்ளிபோல இருந்த " பிலேன் சோர்ர்மலான்ட் " என்ற சிறிய நகரத்தில் சில வருடம் வசித்தேன்.

                                 அந்நிய தேசத்தில் தனிமையில் வாழ்ந்ததால் புலன்பெயர்ந்து, ஒரு நாள் என் முன்னாள் மனைவியை " பிலேன் சோர்ர்மலான்ட் " இல் நடந்த ஒரு இசை நிகழ்சியில் , சந்தித்து அவளுக்கு அந்த இடத்தில வைச்சே மண்டையைக் கழுவி , அடுத்த நாள் மாலை, விண்டர் குளிர் கால  ஸ்னோ உறைபனி விழுந்து இருந்த ஒரு  பார்க்கில் சந்திக்க வைத்து , அப்போது சந்தித்த போது நிகழ்ந்த முதல் சந்திப்பைப் பற்றி ஒரு கவிதைபோல ஒன்று " முதல்ச் சந்திப்பு " என்று தலைப்பிட்டு எழுதினேன் .


                           சில வாரங்களின் பின் , காதல் அவளை முழிச்சுப் பார்க்க விடாமல் கண்ணை மறைச்சதால் என்னோட எல்லா குளறுபடிகளையும் எடை போட முடியாமல் மயங்கிக் கவுண்டு விழுந்த அதிஸ்டத்தால், அவளோடு குடும்பமாகி வாழ்ந்த போது, அந்தக் கவிதையைப் குற்றப்பத்திரிகை போல சுவுடிஷ் மொழியில் எழுதிக் கொடுத்தேன்,

                                 அதை அவள் வாசித்துப் போட்டு ரெண்டு ரெண்டு ரெண்டு துளிக் கண்ணீராக கண்களில் வழிய விட்டாள். அதை ஆனந்தக்கண்ணீர் என்று நினைத்து பார்க்க எனக்கு சந்தோசமா இருந்தது. என் கவிதை ஒருவரின் மனதுவரை இறங்கி இதயத்தை அசைத்துப் பார்த்தது என்று நினைத்து இன்னும் கவனித்து எழுதும் அனுபவம் வர பின் நாட்களில் கவிதை எழுதுவேன் என்று சபதம் எடுத்து, இன்றைக்குப் பலரை வாசித்து அழ வைத்து உசிரை எடுக்கும் ஐடியா அப்போதுதான் வந்தது,

                                      வருடம் முழுவதும் ,நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் உலகத்தரமான புத்தகம் காசு கொடுத்து வேண்டி வாசிக்கும் அவளுக்கு இப்படி , இலக்கியம் , கவிதை , கதை என்று நான் ஏதாவது ரீல் விட்டு எழுதிக் காட்டினால் அதிகம் அதைக் கவனிக்கவே மாட்டாள். அதை வாசிப்பது எப்பவுமே நேரவிரயம் என்று நினைப்பவள் அவள், அதால ஒரு சந்தேகத்தில்,

                                       " பரவாயில்லை சும்மா தான் எழுதிப் பார்த்தேன் ,நீ அதிகம் ஒன்றையும் உணர்ச்சிவசப்பட்டு எமோஸனலா எடுக்காதே, காதல் வந்தால் கவிதை இலவசமாக் கொட்டும் என்று சொல்லுறார்கள்,அதால எழுத முயற்சித்தேன் , அது உன்னை இவளவு இம்பிரஸ் செய்து இருப்பது ஆச்சரியமா இருக்கு ,முதலில் ஆனந்தக்கண்ணீர் விட்டு அழாதே " என்றேன். அதுக்கு அந்த அகராதி பிடிச்சவள்

.                                  " அடப்பாவி என்னோட தாய் மொழியான ஸ்வான்ஸ்க் சுவுடிஷ் மொழியை இப்படி தாறுமாறா இலக்கணப் பிழையாக எழுதி கொலை செய்கிறாயே, நீ எங்க உருப்படப் போறாய், உன்னை எங்கள் நாட்டில் இருக்க விட்டதுக்கு இப்படி என் தாய் மொழியைப் பழி வேண்டுறாயே ,அதை நினைக்க அடக்க முடியாமல் அழுகை அழுகையா வருகுது " என்று சொன்னாள்...

                                         எப்படியோ அந்தக் ஆனந்தக்கண்ணீர் அர்த்தம் தவறிப் போயும் ,அந்தக் கவிதை தனக்கு எப்பவும் பிடிக்கும் என்று நாங்கள் சட்டரீதியாகப் பிரிந்து பல வருடம் பின்னர் ஒரு நாள் சொன்னாள் , சொல்லிப் போட்டு நான் சுவுடிஷ் மொழியில் எழுதிய அந்தக் கவிதையை எனக்கு மெயில் இல் ஸ்கான் செய்து அனுப்பியும் இருந்தாள், அதில ஆச்சரியமாகி

                                                 " என்னோட கவிதையைப் புரிந்து கொள்ள உனக்கு இவளவு வருஷம் எடுத்ததா ,, மறக்காமல் அதை நினைவு வைத்து இன்று அனுப்பி வைத்ததுக்கும் நன்றி. நான் பல வருடம் முன் எழுதியதை இப்ப தமிழில் மொழிபெயர்து என் ரசிகப் பெருமக்களுக்கு போடுகிறேன்.." என்று பதில் மெயில் அனுப்பி கொஞ்ச நேரத்திலேயே

                                         " அடி செருப்பால,..நான் இப்ப வேற ஒரு எங்கள் சுவிடிஷ் இனத்து ஒரு மனிதருடன் என் வீட்டில் வாழுறேன்,அவன் உன்னுடைய கவிதையை எடுத்து வாசித்தால் சில நேரம் சந்தேகம் பிடிச்சு பிரசினை செய்து என்னோட நின்மதியைக் கெடுப்பான்,உலகம் முழுக்க ஆம்பிளைகள் வெள்ளையோ,கறுப்போ, பிரவுன் கலரோ எதுவாக இருந்தாலும் சந்தேகத்தில் பெண்களைப் பிடிச்சு உலுப்புரதில உலகம் முழுக்க ஆம்பிளைகள் ஒரே மாதிரி, அதால் இந்தக் கவிதைப் பேப்பரை ஸ்கேன் செய்து உனக்கு அனுப்பிப் போட்டு, பேப்பரைக் கிழித்து எறிஞ்சு போட்டேன்,...." என்று நீண்ட மெயில் விளக்கம் எழுதி இருந்தாள்.

                                                ஏனோ தெரியவில்லை அந்தக் கவிதைபோல எழுதியதை இவளவு நாளும் நானே மொழி பெயர்த்து போடவில்லை, வாழ்கையில் விதி எழுதி வைத்து கிளித் தட்டு எப்ப விளையாடும் என்று சொல்லவே முடியாது.ஜோசித்துப் பார்த்தால் மறுபடியும் ஒரு முதல் சந்திப்பு அதே போல நடக்கவே முடியாது என்று யாருமே சொல்லமுடியாது...

" முதல்ச் சந்திப்பு "
-------------------------------

மகிழ்ச்சியை
வரவேற்கத்தக்கதாக
மனமெல்லாம்
நாற்று நட்டு
விடை பெற்ற
நிமிடத்திலிருந்து
விட்டுப் போன
உள்ளங்கையின்
வியர்வை வாசம்
பிலேன் சோர்ர்மலான்ட்
ஒதுக்குப்புற
அகதிமுகாம் வரை
பின் தொடர்ந்து வந்தது..

கைவிடப்பட்ட
அடிமைபோல
அன்புக்கு
ஏங்கும் இதயத்துக்குதான்
அரவணைப்பின்
பெறுமதி
தெரியும் ..

வீசி எறியப்படவர்களின்
வீதியில் தான்
கை கோர்த்து நடப்பதன்
நேசிப்புக்கள்
விருப்பமோடு
காத்திருக்கும்..

ஏக்கங்களின்
அர்த்தம் நெஞ்சோடு
நெரிக்க
என்
நாடித் துடிப்பைப்
பார்த்த போதே
உன்
இதயத் துடிப்பை
உணர வைத்தவளே...

மென்மையாகவே
விரல்களின் மீட்டலை
எண்ணி முடிக்க
நானே
வரைந்து வைத்த
சின்னஞ் சிறிய உலகம்
எல்லாப்
பயங்களையும்
களை பிடுங்கி
எறிந்து போட்டு
பனி உருகும்
பாதையெல்லாம்
நம்பிக்கைகளை
விதைத்தது.
.
.
10.03.15

.