Sunday, 26 July 2015

Putham Puthuk Kaalai....Guitar Cover



ஞாயிறு பொழுதுபோக்கு இசைவிருந்து.... நடபைரவி இராகத்தில் வந்த ஒரு அருமையான இளையராஜா பாடல் " புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை...." நடபைரவியில் முழுவதும் இருந்தாலும் சங்கராபரணம் இராகம் மிகச்சிறிய அளவில் கலந்து இருக்கு.. " அலைகள் ஒய்வதில்லை..." படத்தில் எஸ்.ஜானகி பாடிய இந்த அருமையான பாடல் வரிகளைக் கங்கை அமரன் எழுதியிருந்தார்.
இந்தப் பாடல் உண்மையில் மருதாணி என்ற படத்துக்கு இசியாமைக்கப்பட்ட பாடல் என்றும் அந்தப் படம் பல காரணங்களால் வெளிவரவில்லை என்று அதைப் பின்னர் இளையராஜா குடும்ப நிறுவனமான பாவலர் கிரியேசன்ஸ் தயாரித்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் தொடக்க பாடலாகப் போட்டும்,அதுவும் படத்துக்கு நீண்டு விட்டதால் வெட்டிவிட்டார்கள்.
மருதாணி படத்துக்கு பூஜை போட்ட போது எந்தவித காட்சியும் இல்லாமல் கங்கை அமரன் இந்த பாடல் வரிகளை ஒரு காலைப்பொழுது எப்படி இருக்கும் என்று மனத்தால் நினைத்து வரிகள் எழுதிய பாடல் . ஆனால் அண்மையில் வந்த மேகா படத்தில இதை இசைஞானி புதிதாக இசை அமைத்து , ஹங்கேரி நாட்டு இசைக்கலைஞர்களைப் பயன்படுத்தி அதை மறுபடியும் பாடலாக்கி இருக்கிறார்..
எண்பத்தி ஒன்றில் இசைஅமைத்த இந்தப் பாடலுக்குள் தொடக்கம் முதல் விளையாடும் புல்லாங்குழல் வாசித்தது வர்ஜினிய நிக்கொலோய் என்ற நிங்கி.இசைஞானி இளையராஜாவோடு சில வருடம் இசைஅமைப்பில் வாசித்த நிங்கி நெதர்லாந்துநாட்டு வெள்ளை இனப் பெண்மணி (இப்பாடல் படத்தில் இடம்பெறவில்லை). நிங்கி பற்றி தனியாக ஒரு போஸ்டிங் பதிவு எழுதியுள்ளேன் . .இதில் பிழைகள் இருந்தால் சொல்லுங்க திருத்திக்கொள்ள அந்தக் கருத்துக்கள் மிகவும் உதவும் எனக்கு







Sunday, 19 July 2015

June Poonaal .. Guitar Cover Instrumental





நட்போடு ஞாயிறு இசை விருந்து.,ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த, நேற்று என்பது கையில் இல்லை,,நாளை என்பது பையில் இல்லை, இன்று மட்டுமே உண்டு என்ற நம்பிக்கை வரிகளை வைத்து உருவான பாடல்.. என்னோட விருப்பமான ஸ்டைலில், லைட் அக்கொஸ்ட்டிக் கிட்டார் இன்ஸ்ட்ருமென்ட்டல் ஸ்டைலில் வாசித்துள்ளேன். சும்மா காலை ஆட்டிக்கொண்டு இன்றைய வார இறுதி விடுமுறை நாளில் கேளுங்க. ஒரிஜினல் பாடல் போல இல்லை , அல்லது பிழை இருக்கு என்று நினைத்தால் சொல்லுங்க. அந்த கருத்துக்கள் எனக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும்

Tuesday, 7 July 2015

குச்சு ஒழுங்கைகள்

குச்சு ஒழுங்கைகள் 
மனம் உவந்து 
ஒன்றையும் 
மறப்பதுமில்லை ,
மனசாட்சிக்கு 
விரோதமாக
ஒன்றையும்
மறைப்பதுமில்லை.....

வீட்டைக் காலி செய்து
போனவர்கள்
வழி முழுவதும்
திட்டித் தீர்த்த
இயலாமையின்
வார்த்தை....

கல்யாணத்தின்
மங்களத் தொடக்க
ஊர்வலத்தில்
தவிலோடு
நாதஸ்வரதிலிருந்து
வழிந்த
" வாராய் என் தோழி
வாராயோ ",

மரண வீட்டின்
கடைசி
ஊர்வலத்தில்
பாடைக்கு முன்னால
இழவுப் பாடகர்கள்
செத்துக்கொண்டே
பாடிச் சென்ற
பட்டினத்தார் பாடல்....

வண்ணாத்திப் பூச்சியைத்
திரத்தி திரத்தி பிடிச்ச
குழந்தைகளின்
எண்ணமெல்லாம்
வஞ்சகமில்லாச்
சிரிப்பு ....

ஒழுங்கை முழுவதும்
தனக்கே சொந்தம் எண்டு
உயில் எழுதிவைச்சு
ஓயாமல் குரைத்த
தெருநாயின் ஓலம்,...

மாலைக் கருகலில்
பதுங்கி மயங்கி
நெருங்கிக் கிறங்கி
நின்று
காதலர்கள் சொன்ன
ரகசிய வாக்குறுதிகள் ....

வெத்திலை பாக்கை
போட்டு மென்று
விழுங்கி
சிவப்பாகக்
காறித் துப்பியவர்களின்
கரகரப்புக் குரல் ,

தலைகரன வெறியில்
தறிகெட்டு
வேலியப் பிடிச்சு
தவண்டு வந்தவர்களின்
நடு இரவுத்
தத்துவ முத்துக்கள் ,

நிறுத்தி நிறுத்தி
சிணுங்கியே
கீதம் இசைத்த
தபால் காரனின்
சைக்கிள் மணி ,

"அம்மா பால்
அம்மா பால் "
என்று
குரலில்ப் பால் கறந்த
பால்காரனின்
வெள்ளைக் குரல் .....

அய்யா
புண்ணியத்துக்கு தர்மம்
போறவழிக்கென்று
படலையத் திறந்தவனின்
அலுமினியத் தட்டில
சிதறி விழுந்த
சில்லறை ..

அவசரத்துக்கு
நிண்டுகொண்டே
ஓரமாக
ஒண்டுக்கு
ஒதுங்கியவனின்
மரியாதையை
இழந்து போன
மவுனம்....

நின்று நிதானமா
ஜோசிக்கும் நாங்கள்
நல்லதையும்
கெட்டதையும்
மறந்த போதும்.....,

குச்சு ஒழுங்கைகள்
மனம் உவந்து
ஒன்றையும்
மறப்பதுமில்லை ,
மனசாட்சிக்கு
விரோதமாக
ஒன்றையும்
மறைப்பதுமில்லை!.
.

.
21-01-14 

.

Monday, 6 July 2015

மோகனச் சிரிப்பு !


தலை வகிட்டில்
மின்னல் நதி,
அது துளியாகி
நெற்றியில் விழும்
நவ இரத்தின
மூன்றாம் பிறை,

வட துருவ
நட்சத்திரமாக
வைர மூக்குத்தி,
கழுத்தோட
கட்டிப்பிடிச்சு
விளையாடும்
அடக்கமான அட்டியல்,

அள்ளி அடுக்கின
வெள்ளிகளில்
அரிதாரம் வழியும்
இரட்டை வடம்,
தாலாட்டு பாடி
காதில லோலாக்கு
எரிமலை,

இடுப்பை
ஒளித்து வைக்கும்
அலங்கார
ஒட்டியாணம்,
கை மறைய
சொக்கத் தங்க
வானவில் வளையல்,
விரலை விழுங்க
விதம் விதமாய்
வின் மீன்கள்,

கெஞ்சி
நடக்க வைத்து
உரசக்
கொடுத்து வைத்துக்
கொஞ்சும்
கொலுசு,
பிஞ்சு
இஞ்சி விரல்களில்
இளிக்கும்
வெள்ளி மிஞ்சி,

அடிப்பாவி
இதில
ஒன்றைத்தன்னும்
அசந்து மறந்தும்
ரசிக்க விடுகுதில்லையே
உன்
மோகனச் சிரிப்பு !
.
.
15-02-2014
.

Tuesday, 30 June 2015

.அறிவுக்களஞ்சியதை மடக்கிய அறிவுக்குகொழுந்து ..

புழுதி படிந்த வீதியில் களைத்துப்போய் வந்த ஒளவைப்பிராட்டி ஒருநாள் புளியமரத்துக்கு கீழே நிழல் ஒதுங்கினாள். புளியமரத்தில புளியம்பழம் உலுப்பிக்கொண்டிருந்த முருகப்பெருமான் அதியமான் இரும்பொறை நெல்லிக்கனி கொடுத்த தமிழ்ப் புலவியுடன் அறிவில் விளையாட ஆசைப்பட்டு
                               " வடவேங்கடத் தென் குமரித் தமிழின் இருப்பிடமே .மிகவும் களைத்துப்போய்விட்டாய் போல, புளியமரத்தின் கீழே சற்று நீடுகையில் இளைப்பாறு , அந்த இடைவேளையில் உனக்குப் படிக்க ஒரு கவிதை தருகிறேன், ஆனால் முதலியேயே சொல்லு உனக்கு சுட்ட கவிதை வேணுமா அல்லது சுடாத கவிதை வேணுமா " என்று என்று கந்தக் கடவுள் கேட்க .
                                ஒளவைப்பிராட்டி ஜோசித்தாள், இந்தப் பொடியனைப்பார்க்க எடிக்கேசன் இல்லாத சுண்டங்காய் போல இருக்கிறான் ,ஆனாலும் அவளுக்கு சுட்ட கவிதை என்றால் என்ன சுடாத கவிதை என்றால் என்னவெண்டு தெரியாது. ஆனாலும் ஒரு சின்னப்பொடியன் புளியமரத்தில நிண்டு தமிழ் கூறும் ஆயிடை நல் உலகு தலைவணக்கும் புலவிக்கு சவால் விடுகிறானே என்று நினைத்து , அதென்ன சுட்டது,சுடாடது என்று விளக்கம் கேட்க ஈகோ விடாததால் , பொடியன் முதல் கவிதை போடட்டும் பிறகு அவனை வைச்சு மடக்கலாம் என்று வந்தா வா போனாப் போ கம்மாக்கோ சிக்காக்கோ என்று நினைத்து
                                            " ஆடையால் ஏனை அணியால் அலங்கரித்துப் பெறுபேற வந்த பெரு மூடன் போலிருக்கும் பெருமானே சுட்ட கவிதையே போடு மகனே " என்று சொல்ல .
                                   திருச்செந்தூர் கந்தக்கடவுள் யாரோ பேஸ்புக்கில் எழுதிய ஒரு கவிதையை ஒரு சின்னப் பேப்பரில் எழுதி கீழே தள்ளி விட்டார்
                                                  கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல் மரங்கள் என்று எழுதிய ஒளவைப் பிராட்டி அதை வாசித்துப்போட்டு,நானே கத்தும் கடல் சூள் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அகப்பட்ட காளமேகத்தின் தலையையே தனிப்பாடல் வெண்பாவில் உருடின ஆள். இதெல்லாம் ஒரு கவிதையா என்று பொருமிக்கொண்டு ,
                                     " இப்பூ ,இதுவா கவிதை , " என்று அந்த சின்னப் பேப்பரை ஊதித்தள்ளிவிட
                                        " ஹஹஹஹஹஹா பாட்டி பாட்டி ,நீ அவசரத்துக்கும் ஒரு பார்டி வைக்க தகுதி இல்லாத பார்டி , கவிதை ரெம்ப சூடாக இருக்கா அதுதான் இப்பூ ,இதுவா கவிதை என்று ஊதித்தள்ளி விட்டாயா " என்று கேட்டாணாம்...அறிவுக்களஞ்சியதை மடக்கிய அறிவுக்குகொழுந்து ...
.
.

Sunday, 21 June 2015

கல்யாண நாள் பார்க்கச் சொல்லவா...

வாழ்க்கை அனுபவம் என்பதை எப்படியும் எழுதலாம்.அதில் உண்மைகள் அரைவாசி புனைவுகள் அரைவாசி. அந்த விகிதாசாரம் தேவைக்கு ஏற்றபடி கலக்கும் போது சில நேரங்களில் பிரமிப்பாக இருக்கும். அந்த நினைவுகளில் ஏதோவொன்று ஒரு காலக்கடத்தின் சந்தோசங்களை மறுபடியும் உயிராக்கும் .
                             
                                                     இந்த இசைகருவி, நோர்வே , தலைவிதி நகர் ஒஸ்லோவில ,என்னோட அயல்வீட்ல வசித்த, என்னைப் போலவே அரசியல் அகதியாக அடைக்கலம் பெற்று வாழும் ஒரு வயதான வடக்கு ஈராக்  நாட்டைச்  சேர்ந்த ஒரு வயதானவரிடமிருந்து  ஒரு நாள்  கிடைத்தது!அது கிடைத்த போது அதிகம் உட்சாகமாய் பின்னுக்கு பல சம்பவங்கள் தொடருமென்று அப்போது தெரியாது. 

                         அந்த வயதான அரபா மனிதர் நான் வீட்டில கிடாரை அகாலமான நேரம்களில் அதிரவைத்து நோண்டுவது தெரிந்து ஒருநாள் என்னை அழைத்து, தானும் தன் மனைவியும் நோர்வே குளிர் ஒத்துவராததால் மீண்டும் ஈராக்  போகப் போவதக சொல்லி இந்த அரபிக் தன்பூர் இசைக்கருவியைக் காட்டி 

                             "உங்களுக்கு இதை அன்பளிப்பாக தர விரும்புகிறேன் மகன் "என்றார் !

                                                         இந்த கருவி எனக்கு வாசிக்க தெரியாது, ஆனால் இந்த இசைக்கருவி வாசிக்கும் நிகழ்வுகள் ஈரான் நாட்டு மாணவர்கள் என்னோட படித்த போது பார்த்திருக்கிறேன். எனக்கு வாசிக்க முடியாத கருவி என்று நினைத்துக்கொண்டிருந்தேன் அதால் இண்டரெஸ்ட் வரவில்லை, அவர் வாசிப்பதை சும்மா பார்த்து கொண்டு இருந்தன், அவர் நல்லா வாசித்தார் , வாசித்து முடிந்தபின் நடந்த அந்த உரையாடலில் அவர்


                            " இதை வாசித்தால் அழகான பாரசீகப் பெண்கள் மயங்குவார்கள்,,
இன்ஷா   அல்லா,,,," 

                             "        என்ன சொல்லுறீங்க அரபா,,உண்மையாவா சொல்லுறீங்க "

                                       "  ஆமாப்பா,  இன்ஷா   அல்லா,,  ,உண்மைதான்,,இதன் இசையில் ஒரு பெண்களைக் கவரும் கவர்ச்சி இருக்கு "

                                           " அட,,இது எனக்கு இவ்வளவுநாளும் தெரியாமல் போச்சே "

                                          " அதனால் என்ன,,இப்ப  நான்  சொல்லி இருக்கிறேனே,,வாழ்க்கையில் சில சம்பவங்கள் சில நேரத்துக்காக காத்திருக்கும்,அந்த நேரம் வரும் போதுதான் அதிசயங்கள் நடக்கும்,,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா ,"


                                         எண்டுசொல்ல, நான் அவரின் நடுத்தர வயதான மனைவியைப் பார்த்தேன் , அந்தப் பெண்மணி கழுத்தைப் பாலில் குளித்த கிளியோபட்ரா போல அந்த நடுத்தர வயதிலும் வீனஸ்  நட்சத்திரம் அளவுக்கு  ஜொலிக்க , இதுக்கு மேல என்ன உத்தரவாதம் தேவை எண்டு , ஜோசிக்கத் தேவை இல்லை எண்டு போட்டு , சடார் புடார் எண்டு கலியாணம் கட்டுற ஹோர்மோன்கள் மூளையின்  ஹிப்போட்டலாமாஸ் இல் தாறுமாறாய் பாய தொடங்க
                          
                               " இதைதான் இவளவுனாலும் தேடிக்கொண்டு இருந்தேன் அய்யா ,ஆண்டவன்  உங்களின் வடிவில் வந்து அருள் புரிந்து இருக்கிறான் ,நன்றி அய்யா " 
                                        
                        எண்டு சொல்லி இந்த இசைகருவியைக் கையோட கிளப்பிக்கொண்டு வந்துடன்,
                                       
                                 "  மகன்,நீங்கள் தனியா இருகிரிங்கள்,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா, கடவுளின் நற்கருணையால் நல்ல காரியங்கள் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் ,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா
                           
                                         எண்டு வேறு சொனாரா, நானும் இத வீடில வைத்து நோண்டி "ஹபீபி ஹபீபி " (அன்பே அன்பே ) எண்டு தெரிந்த கொஞ்ச அரபிமொழிய வைத்து வாசித்து பழகினன்.கிடார் வாசித்தால் இது வாசிக்கலாம், fred board கொஞ்சம் வித்தியாசம்! 

                                   என்னோட தொடர் மாடியில் நட்பான,ஒரு அரபிமொழி பேசும் , மத்திய ஆசியாவின் எதோ ஒரு நாடில இருந்து வந்த அரசியல் அகதிக் குடும்பம் இருக்குது, அந்த வீடில உள்ள பெண்கள் எல்லாம் பிரம்மதேவனிடம் அட்வான்ஸ் கொடுத்து, அளவு கொடுத்து சொல்லி செய்விச்ச மாதிரி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிபோல அழகா இருப்பார்கள் ,அவர்கள் அழகைப்பற்றி ஒரு கவிதை அல்ல ஒரு கவிதை தொகுதியே எழுதி சொந்தகாசை செலவழித்து அதை வெளியிடலாம் ,,அவளவு சொக்கத் தங்க தேவதைகள் !

                                           
                          ஒரு நாள் எப்படியும் அவர்களுக்கு இந்த அரபிக் தன்பூர் கருவியில் கீதம் இசைத்து ,அவர்கள் அன்பைப் பெறவேண்டும் எண்டு எப்பவுமே நினைப்பது ஒரு நாள் அந்த இளம்பெண்களை தொடர்மாடி நிலத்தடி வாசலில் சந்திக்க நேர்ந்தது ,பாலைவனத்தில ஒட்டகம்போல ஒரு ஓரமா ஒதுங்கி நிண்டு , அந்த வீட்டில வசிக்கும் கடைசி , சிறிய இளம் பெண்னிடம் ,

                          " என்னிடம் அரபிக் தன்பூர் இசைக்கருவி வீட்டில இருக்கு " 

                               எண்டேன், பேரீச்சம்பழகலரில் இருந்த அந்த சின்ன தேவதை திடுக்கிட்டு, நான் சொன்னது விளங்காமல் ,ஏதோ என்னோட வீட்டில அனக்கொண்டா மலைப் பாம்பு இருக்கு எண்டு சொன்னதுபோல விழிக்க ,நான் அவளுக்கு கொஞ்சம் விளக்கமா சொன்னேன் !அவள் பிரகாசமானா பாரசீக விழிகளால் ஆச்சரியமாகி ,

                       
                              "ஒ அப்படியா ,நீ வாசிபியா அதை ? எதுக்கும் அக்காமாரிடம் போய் சொல்லுறன்  எண்டாள், நான் இயல்பாக
                              
                       "அதுக்குதானே உன்னிடமே சொன்னேன் " எண்டு மெதுவாக சொல்ல,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா , 
                    
                      அவள் "என்ன சொன்னாய் எண்டு குழப்பமா கேட்டாள்", நான்
                          
                     " உன் அக்காமார் அரபிக் தன்பூர் இசையில் மயங்கி உயிரை விடுவார்கள் எண்டு கேள்விப்பட்டன் என்றேன் ! 
                        
                            அவள் சிரிச்சுப்போட்டு , "அப்படி எல்லாம் நாங்க மயங்குற ஆட்கள் இல்லை ,",என்று சொல்லிப் போயிட்டாள்
                                

                               அதன் பின், அந்த சம்பவத்தையும் அரபிக் தன்பூர் இசைக்கருவியையும,மறந்தாலும்,ஒருகோடைவிடுமுறையில் அவர்கள் குடும்பமாக வெளியே புல்வெளியில் இருந்தததை ஜன்னல் வழியாகப் பார்த்த போது, அந்த வயதான ஐயா சொன்ன ஆசீர்வாதம், அவரின் கிளியோபட்ரா மனைவி நினைவுவர, ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான் ,ஆனால் கைவிடமாட்டான் என்ற நம்பிக்கையில் , நைசா அரபிக் தன்பூர் இசைக்கருவியை நாரதர் போல தூக்கிக்கொண்டு போய் ஒரு ஓரமா பிச்சைக்காரன் போல , அவர்களோடு நானும் குந்திஇருந்து இந்த கருவிய வாசித்தன்,
                                                

                                    நான் பல மாதமா திட்டமிட்டு ,பழகிய " கல்யாண நாள் பார்க்கச் சொல்லவா ....." பாடலை இழுத்து இழுத்து வாசித்தேன் ,அவர்கள் என்னை அதிகம் கவனிக்கவில்லை, நாசாமப்போன இந்த அரபிக் தன்பூர் கருவியை அதிகம் கவனித்தார்கள் ! அவர்கள் வீட்டில இருந்து வந்த குட்டிப்பெண் மட்டும் என்னை சந்தேகமாகவே இவன் என்னமோ மாஸ்டர் பிளான் போட்டுக்கொண்டு தான் வந்து இந்த இசைக்கருவியை வாசிக்கிறான் என்பதுபோல எச்சரிக்கை உணர்வோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

                                      என்ன உலகமடா இது எண்டு வெறுப்பு வந்தாலும் அவர்கள் என்னோட இன்னிசை மழையைக் கொஞ்சம் ரசித்தார்கள், குப்புஸ் என்ற அரபிக் சாப்பாட்டை வாயில அடைஞ்சு கொண்டு இருந்த அந்த அழகான பெண்கள் என்னை ஏன் நாயே என்றும் கவனிக்கவில்லை. ஆனால் யாரும் அந்த வயதான ஈரரக் நாட்டவர் சொன்ன மாதிரி மயங்கின மாதிரி தெரியவில்லை, 


                                                 இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா ஆணையாக   அவர்கள் வளர்க்கும் இருண்டு பூனைகள் மட்டும் படு இண்டரஸ்ட் ஆக கேட்டுக்கொண்டு இருந்தன, வேற ஒண்டுமே நடக்கவில்லை. எழும்பிப் போற நேரம், இவன் எங்கே உருப்படப் போறான் என்று அந்த ரெண்டு பூனைகளும் என்னைப் பார்க்க , அந்தப் பேரீச்சம்பழ சின்னப் பெண்ணிடம் எப்படி என் பாட்டு என்று கேட்டேன் ,அதுக்கு அவள் நோர்ஸ்கில் என்னை விசாரித்தாள் 

                       " என்னமோ மாஸ்டர் பிளான் போட்டுக்கொண்டு தான் வந்து இந்த இசைக்கருவியை வாசிக்கிறாய் போல இருக்கு , 


                             " அப்பிடி எல்லாம் ஒன்றும் இல்லை,,அரபிக் தன்பூர் இசைக்கருவி எனக்கு உயிர் தெரியமா "

                                " அப்பிடியா ,சரி ஒரு பாட்டுத்தானே  என்னமோ வாசித்தாய் ,,அது  எங்கள் நாட்டு இசை போல இல்லையே "

                                  " ஓம்,,அந்த ஒரு பாட்டுதான் இதில கிடந்து முறிஞ்சு முறிஞ்சு வாசிக்கப் பழகினேன் ,ஒரு முடிவோடுதான் பழகினேன் ,இது இந்திய இசை "

                                  "  சரி,,அந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம் "

                               "  அது வந்து,,வந்து,,,,,ஓட்கம் தெரியுமெல்லோ,,அது  ஒருநாள் பாலைவனம் முழுவதும் அலைஞ்சுச்சாம் "

                               "  எதுக்கு அலைஞ்சுது ,,,"

                                "அதுக்கு  சாப்பாடு  இல்லை ,,தண்ணி இல்லை என்று  அலைஞ்சுது "

                                 "  ஹஹஹஹ் ,,ஓட்டகம் ,,அப்பிடி எல்லாம்  அலையாது" 

                          " வேற என்னத்துக்கு ஓட்டகம் பாலைவனத்தில் அலையும் "

                                " ஓட்டகம் தண்ணி இல்லாமல் ,சாப்பாடு இல்லாமால் மாதக்கணக்கில் சமாளிக்கும் "

                                      " அதெப்படி "

                                         " ஓட்டகம் அதன் கழுத்தில நிறைய கொழுப்பு சேர்த்து வைத்திருக்கும்,,அது அதுக்கு  பசி வரும்போது இரைமீட்டிட உதவும் "

                                         " ஓ,, நீங்களும் ஓட்டக்கப்பாலும் பேரிச்சம் பழமும் சாப்பிடத்தாலா இப்படி அழகா இருக்குறீங்க "

                                            " என்ன,,உனக்கு இப்ப என்ன பிரச்சினை,,சொல்லு,,என்ன பிரச்சினை,,நாங்க வடிவா இருந்தா உனக்கு என்ன "

                               " ஆனால் அநியாயத்துக்கு அள்ளிக்கொட்டுற வடிவா எல்லோ இருக்குறீங்க "

                               " இப்ப உனக்கு  என்ன  பிரச்சினை அதில "

                                     "   ஹ்ம்ம்,பேசாமல் ஒரு ஓட்டகாமா பிறந்திருக்கலாம்      "             

                                            "  அது எனக்கு தெரியாது,,,ஓட்டகம் பின்னங் காலில் எம்பி உதைக்கும் தெரியமா,,,,அந்த அடியில நீ அந்த இடத்திலேயே குளறிக் குளறி உயிரை விடுவாய் "

                                          " அட,,அப்படியா ,,பயமா  இருக்கே "

                                        " நாங்கள் குருதிஸ்தானில் வசித்த நேரம் எங்களின் மாமா இப்படி இசைக்கருவி வாசிப்பார்,,ஆனால் நல்லா ரசித்து வாசிப்பார், "

                                           "  ஓ  ,,அவர்  என்ன  பெரிய ஓல்டு மொங்கு பிஸ்தாவா "

                                            "      என்ன "

                                           "   ஒண்டுமில்லை "

                                       "  இல்லை நீ என்னவோ  எங்க மாமாவைப்பற்றி சொன்னாய் "

                                        "  இல்லைப்பா,,சும்மா  வாய் தவறி உளறிப் போட்டேன் "

                                         " நீ இந்த இசைக்கருவியோடு இங்கே வந்து குந்தின நேரத்தில் இருந்து சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறிக்கொண்டுதானே இருக்கிறாய் "

                                         "  சம்பந்தம் முடிக்க தான் வந்து இருக்கிறேன் "

                                 " என்னது ,,இதென்ன  சொல்லுறாய்,,உனக்கு விசரா "

                                          " அப்பிடி எல்லாம் ஒன்றும்  இல்லை "

                                           " நீ  என்னமோ மாஸ்டர் பிளான் போட்டுக்கொண்டு தான் வந்து இந்த இசைக்கருவியை வாசிக்கிறாய் போல இருக்கு  நீ மசிங்கி மசிங்கி வாசிக்கிறதை பார்க்க  " எண்டாள்  .

                        நான் கோவத்தில, " இப்படியா ஒரு இசைக்கலைஞ்சனை அவமதிப்பிங்க " என்று கேட்டேன் 


                                       அவள் ஈஈ ஈ ஈ ஈ  என்று ஒட்டகம் போலப் பல்லை இளித்தால், நானும் பதிலுக்கு ஈ ஈ ஈ ஈ ஈ என்று கோவேறுகழுதை போலப்  பல்லை இளிதுப்போட்டு வந்திட்டேன்                               

                                 
                                       அதுக்குப் பிறகு , கொஞ்ச நாள் இந்த கருவி வீடில சுவரில தொங்கியது ,பார்க்க அழகா இருக்கும்,நினைக்க கோபம் வரும், இப்படியான தருணங்களில் தான் இசை மீதும்,இசைகருவிகள் மீதும் ,கடவுளின் " நற்கருணை" மீதும் வெறுப்புவருகின்றது ! இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் இந்த அரபிக் இசைக்கருவியில் ஒரு முன்னோடிபோல ,பல தமிழ் ,ஹிந்தி ,பாடல்கள் வாசித்தாலும் , கீளதேய சாஸ்திரிய கரநாடக சங்கீத இல் வரும் தியாகராஜ சுவாமிகளின் " எந்தரோப மகானோ பாவு லு " என்ற பஞ்ச இரத்தின கீர்த்தனையை இதில வாசித்திருக்கிறேன் !
                                          

                                 சில மாதங்களின் முன், எனக்கு கலியாணத்துக்கு ராசியில்லாத இந்த இசைக்கருவி இனி வேலைக்கு ஆகாது எண்டுபோட்டு என்னோட தொடர்மாடியில் தனியாக வசிக்கும் , என்னைப்போலவே அரசியல் அகதியாக அடைக்கலம் பெற்று வாழும் ஒரு ஆப்கானிஸ்தான் இளம் நண்பனுக்கு..
                        
                                    " இதை வாசித்தால் அழகான பாரசீகப் பெண்கள் மயங்குவார்கள்" 
                             
                                       எண்டு அந்த வயதானவர் எனக்கு சொன்ன டைலாக்கை சொல்லி கொடுக்க அவனும் என்னைப்போலவே வாயைப் பிளந்து வேண்டினான் ,ஆனாலும்
                            
                                            " நான் திருமணம் ஆகியவன் , என்னோட மனைவிக்கு இன்னும் நோர்வே வர "பமிலி ஸ்பொன்சர் விசா" கிடைக்கவில்லை ,

                                    "  அப்படியா,,அது  கவலையான நிலைமைதான்"

                                  " எப்படியும் அவளுக்கு  இங்கே வர ஒருவருடம் எடுக்கும் போல இருக்கு "

                                   " அது,,இன்னும்  துன்பமாய்  இருக்குமே,,உங்களுக்கு "

                                      "  நல்ல உதவி நீங்கள் இதை தந்தது ,,மனைவி வரும்வரை யாராவது பாரசீகப் பெண்கள் கிடைக்க கடவுளின் நற்கருணையால் நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் எண்டால் அது நடந்துதான் தீரும் ,,இன்சா அல்லா ,," என்றான்
                          
                                  நீங்களே சொல்லுங்க பார்ப்பாம் ? கடவுளும் இருக்கிறவனுக்கு தான் இன்னும் கூரையப் பிச்சுக்கொண்டு கொடுக்கிறார் !.


.

.

Friday, 12 June 2015

காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்!

மனிதர்களுக்கு எது முக்கியம்,எது முக்கியமில்லை என்பதில் எங்களின் தேர்வுகள் எப்போதுமே ஒரேமாதிரி இருப்பதில்லை. சிலநேரம் ஆச்சரியமாக இருக்கும் சிலரின் அற்பமான விருப்பங்கள் அவர்களுக்கு அதிமுக்கியமாக இருப்பதை அறியும் போது. 

                                               என்னோட அப்பாட்மென்டில் உள்ள எல்லா வீடுகளும், இருண்டு பாதுகாப்பான திறப்புக்கள் போட்டு திறப்பது போலத்தான் கதவுகள் இருக்கு. ஆனால் ஒருவர் அதுக்கு மேலாக மிகவும் பாதுகாப்பாக இன்னும் ஒரு வெளிஇணைப்பு ரகசிய இலக்கங்கள் அமத்தும் பூட்டுப் போட்டு அதைவிட வேறு இரண்டு சிக்கியூரிட்டிக் கொம்பனியின் எலார்ம் போட்டு வைச்சு இருக்கும் அறிவித்தல் உள்ள தகவல் அந்தக் கதவில் எழுதபட்டுள்ள அதி உச்ச பாதுக்காப்பு ஏற்பாட்டுடன் வசிக்கிறார்.

                                      இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் தேடினாளாம் கதைபோல பல விசியங்கள் நாங்கள் நினைக்காத ஒரு நாளில் நடுவீட்டின்  கூரையைப் பிச்சுக்கொண்டு நேராக வந்திறங்கும்.  ஆனால் அவர் வீட்டில் என்ன அப்படி இருக்கு என்று எனக்கு தெரியாது. நான் நினைக்கிறன் என் அயலில் உள்ள ஒருவருக்குமே தெரியவாய்ப்பில்லை, காரணம் அவர் யாருடனும் அதிகம் பேசுவதில்லை.யாரையும் அவர் வீட்டுக்கு உள்ளே அழைத்ததுமில்லை. ஆனால் ஒரே ஒருநாள் அந்த சிதம்பர இரகசியத்தை அறிய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

                                பொதுவெளியில் எல்லோரும் ஒரு சமூகத்தின் மத்தியில் பகிரங்கமாக பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து இந்தக்கதை சொல்ல முடியுமா என்று நினைத்தால், ஒருவிதத்தில் சொல்லலாம் போலதான் இருக்கு, அதுக்கு காரணம் அந்த மனிதர் அவரோட கதவில நோர்வே மொழியில் " எந்த இடத்தில் அவமானப்பட்டீர்களோ அதே இடத்தில் உங்கள் தலையை உயர்த்தி உங்களை மேன்மையாக என் இயேசு வைப்பாராக...ஆமென் !!!! " என்று எழுதி ஒரு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்.        

                                    இது இன்னும் ஆர்வத்தை அவர் மேல் கிழப்பும். இந்த வயதான மனிதர் ஏன் இப்படி அதியுயர் பாதுகாப்பில் இருக்கிறார் என்ற ஒரே ஒரு கேள்விக்கு புதிரான , நானே ஜோசிக்கும் விடைகள் ஆயிரம் மண்டைக்குள்ள எப்பவும் முட்டி மோதும். ஆனால் ஒன்றும் பயனில்லை.  இனி அலட்டாமல் நேராகவே உலாவ் தாரியர் என்ற அந்த மனிதரின்  கதைக்குள்ள வாறன்.

                          மத்தியதர வர்க்க, " கையில காசு வாயில தோசை " என்று உழைத்து வாழும் அன்றாடம் காச்சிகள் அதிகம்  வசிக்கும் என்னோட பதினோருதட்டு தொடர்மாடிக் குடியிருப்பில் ஐந்தாவது தட்டில் உள்ள பன்னிரண்டு நெருப்புப் பெட்டி போன்ற குடியிருப்பில்தான் என்னோட உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இருக்கு. அந்த தட்டில் எதிர் எதிரே ஆறு குடியிருப்புக்கள் இருக்கு. அதில் வலது பக்க தொடக்கத்தில் இருந்தார் உலாவ் தாரியர் என்ற அந்தத் தனிமையான நோர்வே நாட்டு மனிதர். 

                                               நான் அந்த தட்டின் இடது பக்கத் தொங்கலில் தொங்கிக்கொண்டு இருக்கிறேன். வலதையும் இடதையும் பிரிக்கும் நடுவில் உள்ள கொறிடோர்தான் அதிகமாக என் தட்டில் வசிப்பவர்களை எப்பவாவது சந்திக்கும் " கனெக்டிங் பீப்பிள்ஸ் " சந்திப்பு மையும்.

                                    வசதியான ,நல்ல வேலை, கணவனும் மனைவியும் வேலை செய்யும் நோர்வே மக்கள் அதிகம் பெரிய இடவசதியுள்ள அப்பர்த்மெண்டில் இருப்பார்கள். , பணக்கார நோர்வே மக்கள் அப்பன் வீட்டு சொத்தில் வில்லா என்ற தனி வீடுகளில் இருப்பார்கள். என்னோட குடியிருப்பில் இல்லை, அவர்களுக்கு என்னோட குடியிருப்பு இருப்பதே பலசமயம் நினைவில் இருப்பதில்லை. 

                                                     ஆனாலும் என்னோட குடியிருப்பு தொடர்மாடியில் நிறைய நோர்வே மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதில் வசிப்பதுக்கு அவர்களின் வாழ்க்கை முறையைக்  குறை சொல்லும்படியான காரணங்கள் தான் இருக்கு.  வயதான  உலாவ் தாரியர்க்கும் அவைகள் பொருந்தும் என்று கோடைகாலத்தில் அவரோடு வெளியே உள்ள புல் வெளியில் கதைத்த போது அறிய முடிந்தது.

                           அளவுக்கு அதிகமான பணமும்,அளவுக்கு அதிகமான பெண்களின் தொடர்ப்பும் மனிதர்களை சீரழிக்கும் என்பதுதான்  உலாவ் தாரியரின் வாழ்க்கைக் கதை,அதையெல்லாம் " காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்!  " என்று நோர்வே மொழியில் கொஞ்சம் கொச்சையான மொழியில் எனக்கு சொல்லுவார். அவரின் கதையை பியோதர் தவஸ்ட்டேக்கியின் " ப்ரதர் கொச்மநோவ் " நாவல் போல நாநூறு பக்க நாவலாக எழுத முடியும். அவளவு மேடுகளும் பள்ளம்களும் ,சில நேரம் அவரே தோண்டிய குழிகளும் அதில இருக்கு. 

                                         அவரின் வாழ்கையை ஒரு சிறுகதை போல சுருக்கி எழுத அந்தோன்  செக்காவ் போன்ற ஒருவரால் முடியும் ஆனால் என்னைபோல சாமானிய மனிதர்களால் முடியாது, இருந்தாலும் வியப்பில் ஆழ்த்திய ஒரு சின்ன சம்பவத்தை  முயற்சிக்கிறேன்.

                       உலாவ் தாரியர், வடகிழக்கு ஒஸ்லோவின் விளிம்பில், சுவிடன் எல்லைக்கு கிட்ட  உள்ள கிராமத்தில் ஒரு பணக்கார அப்பாவுக்கு ஒரே ஒரு பிள்ளையாக பிறந்து இருக்கிறார். அதுவே போதுமே வெம்பிப் பழுத்து தலையால தெறிக்க. சின்னவயசில் அழகா இருந்த அவர், இளவயதில் ஒஸ்லோவில் படித்து இருக்கிறார், ஒஸ்லோவின் முக்கியமான புட்போல் கிளப் ஆனா " வோலறேங்காவில் " கோல் கீபாராக இருந்து இருக்கிறார், 

                                            பின்னர் என்ன வேலை செய்தார் என்று இன்றுவரை அவர் சொல்லவில்லை,ஒருவேளை அதைப்பற்றி சொல்ல ஒன்றுமேயில்லையோ தெரியாது. ஆனால் நாலு முறை கலியானம் காடினார், நாலு பேரையும் விவாகரத்து செய்தார் .அவரின்   காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! வரும் போது இருந்ததை விடப் போகும்போது மினுக்கமாகப் போனதாக சொல்லுவார் .அவருக்கு பிறந்த பிள்ளைகள் மட்டும் அருமையான பிள்ளைகள் என்று சொல்லுவார்.

                         குழப்பமாக  காதலிகள் அவர் வடிவுக்கு காலுக்க சுருண்டு விழுந்த கதை கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வாற வல்லவரையன் வந்தியத்தேவன் போன்றவை , அவருக்கு பிறந்த பிள்ளைகள் அவரை விட்டு பதினெட்டு வயதில் " மண்டையப் போடும் போது சொத்தைப் பிரிக்க வாறோம் " என்று சொல்லிப்போட்டு போய் விட்டார்கள். வருட இறுதியில் வரும் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு பரிசாக தான் அனுப்பும் காசுக்கு நன்றி சொல்ல மட்டும் டெலிபோன் எடுப்பார்கள் என்று சொல்லுவார்.

                          பல வருடம் தனியாக இருந்தார், உலகம் சுற்றினார், ஆபிரிக்கா போய் கென்யாவின் சிங்கம் உலாவும் சவானாக் காட்டில் தனிய டென்ட் அடிச்சு இருந்தார், பிரேசிலுக்கு போய் அமேசன் நதியில் இறங்கி அனக்கொண்டா பாம்புகளைத் தேடினார், இந்தியாவுக்கு போய் புனித கங்கை நதியில் பாவங்களைக் களைய முழுக்குப் போட்டார். அங்கே சாதுக்களுடன் வாழ்ந்தார். எல்லாம் விபரமா சொன்னார் .

                              சாதாரண மனிதர்கள் செய்யமுடியாத எல்லாம் ஒரு கை பார்த்துப்போட்டு   இப்போது வயதாகி எங்கும் போவதில்லை ,ஞாயிற்றுக்கிழமை மட்டும் எங்களின் பேட்டையில் உள்ள நோர்பேறி சிர்கா என்ற சேர்ச்சுக்குப் போவார். வாசலில் எப்பவாவது என்னைக் கண்டால் என்னையும் வரசொல்லுவார்.சின்ன உரையாடலின் முடிவில் நான் எப்போதும் நேரம் இல்லை என்று ஏதாவது சாட்டு சொல்லி நழுவுவேன், அவர் சிரிச்சுக்கொண்டு  

                             " எந்த மனிதனோ, மனுஷியோ உங்களை புறக்கணித்திருந்தாலும் அவர்கள் மத்தியில் உங்களை ஆச்சரியப்படத் தக்க. வண்ணமாக என் இயேசு உங்கள் தலைகளை உயர்த்துவாராக,ஆமென் !!! " 

                                   என்று சொல்லிப்போட்டுப் போவார்.

                          இந்தவருடத் தொடக்கத்தில் ஒருநாள் அவரை எங்களின் வீட்டுக்கு அருகில் கீழே உள்ள சூப்பர் மார்கட்டில் கண்டேன், வழமைப்போல சுருக்கமான உரையாடல், அதன் முடிவில்

                       " இன்று உனக்கு நேரம் இருந்தால் என்னுடைய வீட்டுக்கு இப்ப வாவேன், கோப்பி குடிச்சு கொஞ்சநேரம் ஆறுதலாகக் கதைக்கலாம், காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! "

                                           என்றார், எனக்கு சனிக்கிழமை லோட்டரியில் லட்சம் விழுந்த மாதிரி இருந்தது. நான் வெளியே சில முக்கியமான வேலைக்கு அப்போது  போகவேண்டி இருந்தது. ஆனாலும் அந்த இடத்துக்கு போன் அடிச்சு எனக்கு உடம்பு சுகமில்லை இன்னொருநாள் வருகிறேன் என்று சொல்லிப்போட்டு, அவரோட பைகளை வேண்டிக் காவிக்கொண்டு அவரோடு வெளிக்கிட்டு  வந்தேன். அவர் கதவு திறக்க பத்து நிமிடம் எடுத்தது, முக்கியமாக  சிக்கியூரிட்டி பூட்டின் இரகசிய எண்களை அவர் அமத்தும்போது அதை எனக்கு மறைத்துக்கொண்டு அமத்தினார்.

                           விசாலமான அவரின் வசிப்பிடத்தில், ஆச்சரியமாக அவர் வீட்டுக்கு உள்ளே வழமையான நோர்வே மக்களின் வீடுகளில் இருக்கும் கலை அம்சமான எதுவுமே இல்லை. ஒரு சின்ன சோபா நடு வீட்டில்,ஒரு சின்ன டெலிவிசன், ஒரு சின்ன மேசை , சுவர்களில் கறுப்பு வெள்ளையில் குடும்ப்பப் படங்கள், அதில அவர் புட் [போல் விளையாடிக்கொண்டு இருந்த கால உன்னத நாட்களின்  பெருமிதம் மங்கிப்போய் இருந்தது , நிறைய வெள்ளிக்  கேடயங்கள் தூசு பிடித்துப்போய் இருக்க, கால்பந்துப் போட்டிகளில் வென்று கிடைத்ததில் சுவரில் தொங்கவிட்டு இருந்த பதக்கங்களில் பாசி பிடிச்சுப் போய் இருந்தது.

                                             நிறையத் தடித்தமட்டைப் புத்தகங்கள் ஒரு அலுமாரியில் இருந்தது. அந்த அலுமாரிதான் மிகப் பெரிதாக இருந்தது. வேற கண்ணுக்குள்ள குத்துற மாதிரி ஒரு மண்ணும் இல்லை அந்த வீட்டில. உலாவ் தாரியர் சுருக்கமாக, மெதுவாக, அந்த வீட்டின் அமைதியைக் குழப்பாமல்  கதைத்தார். நான் முக்கியமான கேள்வி கேட்கவேண்டிய தருணத்துக்கு காத்திருந்தேன்.

                              உலாவ் பரம்பரைப் பணக்காரராக இருந்தாலும்,அவர் வம்ச சொத்துப் பத்து எல்லாம் அவர் கிராமத்தில் இருக்கு. அப்புறம் காசு கட்டாயம் ஏதோ ஒரு பாங்கில் பாதுகாப்பாக இருக்கும் .வீடுக்குள்ள காசை உரப்பையில் கட்டி வைச்சுக்கொண்டு இருக்கும் அளவுக்கு அவர் முட்டாள் இல்லை. அப்படி இருந்தாலும் என்னைப்போல ஒரு வெளிநாட்டுக்காரனை நம்பி வீடுக்குள்ள உள்ளிட விரும்பமாட்டார். 

                                                 சில நேரம் அழகான பெண்கள்....ஹ்ம்ம்,,,அந்த வீட்டில் பெண்கள் வாசமே இல்லை, பதிலாக மாதக்கணக்கில்  தோய்க்காத பழைய துணிகளில் இருந்து வரும் உறண்டல் வாசம் தான் வந்தது. பொறுமையை அதுக்கு மேலயும் கமகட்டில அமத்தி வைக்க முடியாமல், இதுக்குமேலே என்ன இருக்கப்போகுது, அதைவிட அந்த வீடுக்குள்ள இனி ஆராய்ச்சி செய்ய வரவேண்டிய தேவையே இல்லாமல் இருப்பது யதார்த்தமாய் இருந்ததால்,

                        " உலாவ்  ,உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா, நீங்கள் தப்பாக நினைக்காவிட்டால் "

                                 என்று கேட்டேன் ,அவர் மவுனமாக இருந்தார், கொஞ்ச நேரத்தில் எழும்பிப் போய்க் கதவை செக் செய்தார். அது இறுக்கமாக உள்ளுக்கு தாழ்ப்பாள் போட்டு இருக்கு என்பதை உறுதி செய்துகொண்டு வந்து சோபாவில் மவுனமாக நாடியைத் தடவினார். ஆமுடையானை நம்பி அவசாரி ஆடலாமா? என்ற பழமொழி போல என்னைப் பார்த்தார், பார்த்துப்போட்டு 

                        " சரி,கேள் ,என்னத்தைப் பெரிசாகக் கேட்கப் போகிறாய், என்னத்தைப் பெரிசா அதுக்கு பதிலாக நான் சொல்லப்போறேன், நானே இந்தா அந்தா என்று கிடக்கிறேன்,காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! ... சரி கேள், விடை கிடைக்குதோ இல்லையோ கேள்விகள் சில நேரம் மிக மிக முக்கியம்,  "  என்றார்.

                        " உலாவ்,,நீங்கள் ஏன் இவளவு பாதுகாப்பாக வீட்டுக்கு சிக்கியூரிட்டி  பூட்டு எல்லாம் போட்டு வைச்சுக் கொண்டு  இருக்குரிங்க, நீங்கள் தப்பாக நினைக்காவிட்டால் அந்தக் காரணத்தை சொல்ல முடியுமா "

                          என்று சும்மா பொழுது போகாமல் குழந்தைகள் பாலமித்திராவில் வாற பலராமர்  கதை கேட்பது போல முகத்தை வைச்சுக்கொண்டு கேட்டேன். 

                     "  அதில என்ன சந்தேகம் உனக்கு, என் வீட்டுக்கு  பாதுகாப்பு தேவை ,அதனால் கதவுக்கு அதிக பாதுகாப்பு கொடுத்து வைத்து இருக்கிறேன் ,ரெண்டு  எலார்ம் சிக்கியூரிட்டிக் கொம்பனிக்கே மாதம் மாதம் நாலாயிரம் குரோனர் சுளையாக் கட்டுறேன் "   என்றார் 

               " அதுதான் எனக்கும் விந்தையாக இருக்கு, ஏற்கனவே ரெண்டு நல்ல பூட்டு நிரந்தரமா இருக்கே,பெருமாள் கோவில் உண்டியலுக்குப் போட்ட மாதிரி ஏன்தான் பெரிய ஒரு எக்ஸ்ட்ரா சிக்கியூரிட்டி பூட்டு போட்டு வைச்சு இருக்குரிங்க ,உலாவ் , அதுதான் குழப்புதே...   "   என்றேன் 

                               நானே ஒரு உப்புச் சப்பில்லாத கேள்வியைக் கேட்டது போல எதிரொலித்துக் கொண்டிருந்தது என் சிந்தனைப் போக்கைப் புரிந்துகொண்ட மாதிரி  ஜன்னல் திரைச்சீலைகள் மட்டும் கொஞ்சம் நிழலாக அசைத்துக்  கொண்டிருக்க , அந்த வீட்டின் பயமுறுத்தும் அமைதி மூலை முடுக்குகளில் அதிகமாகப் பதுங்கி  இருந்தது  .

                       "  நான் நினைச்ச கேள்வியைத்தான் கேட்கிறாய். முக்கியமான கேள்வியும் தான், காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்!  இதுக்குப் பதில் நீ நினைப்பது போல கடினமாக இருக்காது. ஹ்ம்ம்....காதல் ,,ஹ்ம்ம் ,நிபந்தனையற்ற  காதல் ,,,அது என்ன  எண்டு  தேடித்தேடி ,,முக்கியமா அறிவுள்ள மனிதர்களிடம் தேடித்தேடி ,ஹ்ம்ம்,, " என்று பெருமூச்சு விட்டுப் போட்டு மறுபடியும் நாடியைத் தடவினார்.

                                         " நோர்வே நாடு பற்றி உனக்கு அதிகம் தெரியாது, முக்கியமா நோர்வே மக்கள் எப்படி வாழ்கையை நினைகிறார்கள் என்று உனக்கு தெரியாது,,அதிலும் நோர்வே பெண்கள் பிசாசுகள் "

                                      " ஹ்ம்ம்,,உலகம் முழுவதும் பெண்களைப் புரிந்துகொள்ள கஷ்டம் தான் .." 

                                               " என்ன கஷ்டம்....நான் இந்தியா சுற்றிப் பார்த்த போது ஒரு குடும்பத்தைப் பார்த்தேன். வயசான அம்மா ,அப்பா இவர்கள் இருவரையும் அவர்களின் அதிகம் வருமானம் இல்லாத பிள்ளைகள் கடவுள் போல அந்த வயதான காலத்திலும் தலையில தாங்கிப் பராமரிக்கிறார்கள் ,எனக்கு அதைப்பார்க்க கண்களில் கண்ணீர் வந்தது.என் பிள்ளைகள் நாளைக்கே மண்டையப் போட்டால் லோயரோடு வந்து நிக்குங்கள் என் சொத்தைப் பிரிக்க .."

                         "  உலாவ், உங்களை தர்மசங்கடம் ஆக்கும் கேள்வியாக இது இருந்தால்,தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள், நான் ஒரு மடையன் அநாவசியமா அற்ப கேள்வி கேட்டுவிட்டேன் போல இருக்கு "

                        என்றேன். அவர் மறுபடியும் நாடியைத் தடவிப் போட்டு, என்னைப் பார்த்து முதல் முதலாக சிரிச்சுப் போட்டு,  நோர்வே மொழியில் ஒரு பெண்ணின் பெயரும், ஒரு ஆணின் பெயரையும் அன்பாக அழைத்தார். அவரின் படுக்கை அறையில் இருந்து ,பதுங்கிப் பதுங்கி ஒரு வெள்ளைநிறப் பூனை வந்து அவர் மடியில் பாஞ்சது .ஒரு கறுப்புநிறப் பூனை வந்து அவரின் தோழில் பாஞ்சு ஏறி இருந்தது.

                 உலாவ் தாரியர் என்னைப்பார்த்து, " காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! ,,,இனி நீ இந்த வீட்டுக்கு இந்த மாதிரிக் கேள்வியுடன் வரமாட்டாய் " என்று நினைக்கிறன் என்றார்.
.
.