Saturday, 19 January 2019

கவனச்சிதறடிப்புக்கள் !

நனவோடையில் நனைந்தபடியோ அல்லது எதார்த்தமாக எழுத்துவத்துக்கோ எப்பவுமே அத்திவாரம் போல  ஒரு களம் எப்பவுமே தேவையாக இருக்கு. பலவருடங்கள் இருந்த நோர்வேயில் எழுதியவைகள் எல்லாம் ஒருவிதமானவை , நோர்வே போலவே வெளிப்புற அலங்காரங்கள் அதிகம் உள்ளவை. இப்போது வசிக்கும் சுவீடன் இன்னொருவகை,  சுவிடீஷ் வாழ்வியல் அமைப்புமுறை போலவே  மனதை அதிகம் விழுதிக்கொண்டிருக்கும் வகை.





                                                                      " It took me fifteen years to discover I had no talent for writing, but I couldn't give it up, because by that time I was too famous..."  என்று Robert Benchley என்ற ஆங்கில எழுத்தாளர் ஒருமுறை எழுதியிருந்தார். ஏனென்றால் இவளவு வருடங்களின் பின்  இப்பெல்லாம் அடிப்படையில் நானொரு விவரண எழுத்தாளன் என்றுதான் நினைப்பது  .


                                                                  என் வியர்வை நடந்து கடக்கும் மொழி என் வாழ்வின் மிகத் தனிப்பட எனக்கே எனக்கான அனுபவம். அதை மண்டையைத் திறந்து அதுக்குள்ளே மயிலெண்ணெய் விட்டுப்பார்த்த மாதிரி நான் உணர்கிறேன் . நான் பார்க்கும் உலகத்தைதான் நீங்களும் பார்கிறீர்கள், ஆனால் நான் அதை எப்பவும் வேறுவிதமாகப் பார்ப்பேன்




                                                              ஒரு நாட்டை சில பல காரணங்களுக்காய் அம்போ எண்டு விட்டுப்போட்டு ஓடிப்போட்டு திரும்பிவந்து " அடைக்கலமானானேன் உன்னிடமே அடைக்கலமானானேன் உன்னிடமே " என்று ரெம்ப நல்லவன் போல பாட்டுப்பாடி அந்த நாட்டில் இன்னொருமுறை வாழ்வதுக்கான அடுக்களைக்கு கட்டமைப்பது ஒத்துக்கொள்ளும்படியாக உண்மையில் மிகவும் கஷ்டமான ஒரு கைங்கரியம்.


                                                                            சுவீடனில் இப்பெல்லாம் ஒரு கழுதையைத் தேடி அதுக்குக் குதிரை போல கொம்பு இருப்பதைக் கண்டுபிடிக்கலாம் ஆனால்  எழுத்துவதுக்கென்று  உந்துதல் தரும் பொறியைக் கண்டுபிடிப்பது  பூதக்கண்ணாடி வைச்சு கிண்டினாலும் கண்டுபிடிக்க கஷ்ட்டம் போலிருக்கு  .   


                                            அதில உள்ள குழப்பங்கள் சொல்லும்படியாக நடைமுறைச்சிக்கலை இடியப்பச்சிக்கல் லெவலுக்கு ஆக்கினாலும் வாழ்க்கையை வாழ்ந்தேயாகவேண்டும் என்ற அட்ப ஐடியாவில் வாழும் எனக்கு சுவாரஸ்யமாகவேயிருக்கு,
                          
*                                                            

என்னையன்றி
வேறொருவர் நானறியேன் ,
உன்னைத்தவிர
யாருமேயில்லை உனக்கு,...

அதனால்த்தான்
நம்மை
விட்டுவிட்டு போய்
நம்மிடமே
வந்துசேர்ந்தோம் !



*


ஒருபோதும்
ஒத்துக்கொள்ளவேமுடியாது
வர்ணங்களையும்
எண்ணங்களையும் ...

பிரிக்கும்
நிறங்களின்
மனவோசையை
ஓவியமாக்கியவனின்
தற்கொலை முடிவுக்கான
காரணத்தை ! 






*

எனக்கோ
இடை நழுவிவிடும்
கவனச்சிதறடிப்புக்கள் !
உனக்கு ...

எல்லாமே
புரிந்து விடுகிறது
ஒரேயொரு
நுனிப் பார்வையில் !



*

அவசர அவசரமாக
உறைபனி
பாதைத்தடங்களை
மாற்றி மாற்றி வைக்குது ...

இது
நிகழ்ந்துகொண்டிருந்த நேரம்
பிறிதொரு
திசைப்பரிமாணத்தில்
முடிவிலி வழியில்
வெகுதூரம் போய்விட்டேன்

நான் !




*
வியந்து
திறந்து பார்க்கிறேன்,
உள்ளுக்கு
வெள்ளை இரவு,

வெளியே
கறுப்புப் பகல், !
உறைந்த ஜன்னலில்
பனிக்குளிர்காலம்
எனக்கென்ன குறைச்சலென்று
இறுமாந்துகொள்கிறது !





*



காற்றிடை
வெறுமைக்குள்
சிக்கிப் பறக்கும்
திக்குத்திசையிழந்த சருகு,...

தீராப்பெருங்காமம்
ஆக்கிரமித்துவிட்ட
மென்மனதில்
ஆரவாரங்கள் அடங்காத
தவிப்பு !



*

இன்னுமொரு
தப்பியோடிப் போகும்
திட்டம் ,
இன்னுமொரு ...

காய் நகர்த்தும்
தந்திரம்,
பழைய இடத்துக்கே
திருப்பிக்கொண்டுவந்துவிடும்
எதிர்பாராதமுடிவில்
இன்னுமொரு
ஆட்டம் தொடங்கலாம் !



*




எதிர்ப்பில்லாத் திசையில்
பார்ப்பதுதான்
ஒரு
பறவையின் ...

இலட்சியமென்று
கடினமான உராய்வுகளிலும்
சிறகுகளைத்
தாங்கிப் பிடிக்கும்
காற்றுக்கும்
நன்றாகவே தெரியும் !


 *



ஒரு
சின்ன உயிரின்
இழப்புக் குறித்து
வருத்தப்பட்டுக்கொண்டிருந்த ...

சம்பவத்துக்கு
ஒருசில அடிகள் தள்ளி
என் கனத்த
இதயத்துடன்
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறேன்..!




 *



பருந்து
தடுமாற்றமின்றித்
தன் இலக்கைக்
குறிவைத்துப் பார்க்குது !...

தாய்க்கோழி
உசாராகி
அணைத்துக்கொள்வதை
காதில் வாங்கிக்கொள்ளாமல்
குஞ்சுகள்
விடுப்புப் பார்க்குதுகள் !



*


ஆசுவாசமாக 
நிறுத்திக்கொண்ட
நிலத்தடி ரயில், 
மூடுமுன் கதவோடு 
உந்தித்தள்ளி ஏறினேன்,
ஒரு முழம்
கால் நிமிண்டு வழுக்கி
கணநேர நிலைச்சறுக்கல் !
சுமூகமான உறவைப் பேண
ஒரு
பிடிக்கம்பி கைநீட்டியது !
நிமிர்ந்த பிரயாணிகள்
யாரும் கலவரமடையவில்லை !
என் வயது
" கிளுக் " கென்று கெக்கலித்தது
எனக்குள்ளேதான் !



*
ஆக்கிரமிக்கும்
தனிமைப் பார்வையில்
உன்
செவ்வந்தி ரவிக்கையில் 
ஜன்னல
அசாதரணமாகவே
கண்களைத் திறக்கின்றன !
சரிதான்
தாலாட்ட வாவேன் டி
பற்றித் தள்ளாடும்
பனித்தாளம்பூக்களில்
தேன்கசியும் வாசனைகள் தேடுவோம் !



*
காற்று 
தெருப்புழுதி நெரிசலில் 
என்னவெல்லாமோ
மதிக்கும்படி 
சித்துவேலை செய்துவிடுகிறது !
உன்
சேலைத்தலைப்பைத்
மெல்லத் தீண்டிப்பார்க்கும்
ஒரவிசிறிப் பிடிப்புகளில்
துணிச்சலின்றிக்
களங்கப்பட்டுத்தான்போகிறது !



*
சலனக் கெஞ்சல்களில்
உனக்குரிய
நிழல் நெருங்கியபோது
நானறியாத 
எனக்குரிய
இதயத்தமணிகளை
நீயேதான்
திறந்து காட்டினாய் !
பிறகெதற்கு
தூரமாகிப்போய்நின்று
நாடித்துடிப்பை சந்தேகப்படுகிறாய் ? 



*
மழைக்கால
மாதவிடாய் !
தத்தளிப்புகளுக்குள்
மனத்தூய்மையோடு 
மூன்று நாட்கள் தாங்கலாம் .
மூன்று வாரங்கள் ?
முடியாதப்பா !
அதனால்த்தான்
உக்காரவிரும்பாத
கருமேகங்கள்
கலைந்தோடுகின்றன !










Saturday, 12 January 2019

நினைவுக்கிடங்கிலிருந்து 003

" அரசியல் என்பது அறம் " என்று நீதியின் நிழலில் முன்னோர்கள் ஏட்டில் மொட்டையாக எழுதிவைத்தது மட்டும்தான் போலிருக்கு , ஏனென்றால் அதிகமான முன்னோர்களின் சாம்ராச்சியங்களே அதை நடைமுறைப்படுத்தியதில்லை.! இது வரலாறு ! இந்த வரலாறு முடிவில்லாமல் இப்பவும் தொடராவதுதான் நம் காலத்தின் கொடுமை ..
                                                             
                                                                     இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில ஏதோவொரு அவமானமான அதேநேரம் அவலமான சம்பவங்கள் ஆட்சிசெய்யும் அரசாங்கங்களின் கண்களுக்கு முன்னால் நடப்பதாக செய்திகளில் கேட்கும்போதெல்லாம் அதன் முழுமையான வீரியம் யாரோ ஒருவருக்கு வேறெங்கோ நடக்கிறதுபோல காற்றலைகளில் இடம்மாறிப் போய்விடுகிறது .
                                                     
                                                                     சுவீடன் இந்தப் பந்தியின் முதல் வசனத்தை நிறையவே நடைமுறையில் வைத்திருக்கும் நாடு. அதன் தலைநகர் ஸ்டோக்ஹோலாமில் நகர மையத்தில் சேர்க்கிள்டோர்க் என்ற திறந்த வெளியை ஒரு உரிமைக்குரல் அரங்கமாக வைத்திருக்கிறார்கள். அதில ஒவ்வொருநாளும் ஏதோவொரு உரிமை ஆர்ப்பாட்டம் , வன்முறை எதிர்ப்பு ,அராஜகக் கண்டனம் , சமூக விழிப்புணர்வு, என்று அமைதியாக நிகழ்வுநடக்கும் .
                                                         
                                                                       அரசியல் அகதிகளாக தங்கள் தாய்நாட்டில் இருந்து தப்பி வந்த உறவுகள் அங்கே இருந்து தப்பி வரமுடியாத தங்கள் உறவுகளின் உயிர்ப் பிரச்சினையை மனிதாபிமான உரிமைகளை இங்கே இந்த அரங்கில் வைத்து உரத்து சொல்லுவார்கள்.
                                                             
                                                                உணர்வுபூர்வமாக இருக்கும் அவர்களின் பிரச்சினைகளை அறியும் போதெல்லாம். அவசரமான வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகளை தலையில போட்டுகொண்டு இந்தத் திறந்த வெளி அரங்கைக் வேகமாகக் கடந்துசெல்லும் மனிதர்கள் கண்டும் காணாமலும், கேட்டும் கேளாமலும் கடந்து செல்வார்கள்.



சில நாட்களின் முன் ஒருநாள் சேர்க்கிள்டோர்க் பக்கமாக போகவேண்டி இருந்தது.அங்காடிக்காரியை அவரோகணம் பாடச்சொல்ல அவள் வெங்காயம் கறிவேப்பில்லை என்றாளாம் என்பது போல அரசியல் பற்றிய அடிப்படை அறிவிலதன்னும் இன்னும் நான் முதலாம் வகுப்பு தாண்டவில்லை.
                                                 போராட்டம் ,விடுதலை , புரட்சி போன்ற பிசுக்கங்காய் வார்த்தைகளைக் கேட்டாலே உடம்பில நாயுன்னிச் செடியை உரசின மாதிரி சொறியத்தொடங்கும் அதனால மனசாட்சியோடு உரிமைமீறகள் முரண்படும் கோட்ப்பாடுகளில் எனக்கு ஆர்வம் இல்லை.
                                                  சும்மா இது என்னதான் ஆர்ப்பாட்டம் என்று மேஞ்சு பார்க்க கொஞ்சநேரம் அவடத்தில நின்று கேட்டேன். அம்னஸ்டி இன்டெர்னசினலும் , ஓர்கனைசனன் எகனைஸ்ட் எக்ஸ்சிகுயுசன் என்ற அமைப்பின் ஆதரவில் மனுநீதிகேட்டு வசந்தகாலக் கவிதையொன்றில் வாழ்விழந்த வரிகளை வேறெங்கோ தொலைத்துவிட்ட இரானிய மக்கள் சோகமாக நின்றார்கள்.
                                                  அப்போதுதான் மரணதண்டனை எதிர்நோக்கி காத்திருக்கும் தங்கள் உறவுகளின் படங்களைப் தூக்கிக்காட்டியபடி நின்றவர்களுக்கு நடுவில் சுவீடனில் வசிக்கும் ஒரு வயதான அப்பா ஈரானில் தூக்கில தொங்க காத்திருக்கும் தன்னோட மகளின் படத்தை கழுத்தில மாட்டிக்கொண்டு கைவிரல்களைக் கோர்த்து ஒரு வித நம்பிக்கையில் மவுனமாக எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தப் படத்தை எடுத்தேன்.
                                                   
                                                    பிறகு அவருடன் தனியாகக் கதைத்தேன். பெண் குழந்தைகளின் உரிமைக்காக போராடிய தன்னோட மகளை இரானிய அரசாங்கம் குற்றம் சாட்டி சிறையில் அடைத்து மரணதணடனை கொடுக்க வைத்திருப்பதாகவும், தன்னோட மகள் இந்த நிலைமையில் சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாகவும் சொன்னார். ஈரானில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் முடிவில் குறைந்தது பத்துப்பேர் தூக்கில இழுக்கப்படுவதாகவும் சொன்னார் .
                                                            அவளவுதான் சொன்னார் , அதுக்குமேல நானும் ஒன்றும் கேட்க விரும்பவில்லை. மனித உரிமை அமைப்புகள் சொல்வதைப் பாலைச் சுண்டக் காச்சி ஆறவைச்சு அதுக்குக் கள்ளப் பூனையைக் காவல் வைச்ச மாதிரி அரசியல்வாத அரசாங்கங்கள் மண்ணாங்கட்டிக்கும் கணக்கில் எடுப்பதில்லை.
                                                             
                                                              மரணத்தை நிமிடங்களில் எண்ணிக்கொண்டு கைவிரல்களைக் கோர்த்து ஒரு வித நம்பிக்கையில் மவுனமாக எதிர்ப்புத் தெரிவிப்பதைத் தவிர இந்த வயதான அப்பாவால் சுவீடனில் இருந்துகொண்டு வேறு என்னதான் செய்யமுடியும் ?

                                                                 
கையில கமராமொபைல்போன் இருக்கிறதால சாகடிக்கிறது போல அதுபாட்டில இருக்கிற இயற்கையையும், நிலைமாறாத இடங்களையும், நிம்மதியான மனிதர்களையும், கனவில்ப் பயணிக்கும் காலநிலைகளையும் சுழட்டி சுழட்டி எவ்வளவோ அலப்பறைப் படங்களை எடுத்து நானே இங்கே என் சுவரில் போட்டு அதுக்கு கவிதைவேற எழுதுறேன் பேர்வழி என்று உங்களின் உசிரை பலமுறை எடுத்து இருக்கிறேன் .

                                                சலிப்புத்தரும்படியாக
எரிய வேண்டிய சுடர் அணைந்துகொண்டிருந்த
  போதிலும்  இந்தப்படத்தில முகமறியாத யாரோ ஒரு ஜீவனுக்கு கொஞ்சம் உயிர் கொடுத்ததுபோல ஒரு மனஅமைதி !







எழுதக்கூடியவர்கள் ஒரே இடத்தில ஒரே நகரத்தில் இருந்து குப்பை கொட்டுவதில் அதிகம் சுவாரசியங்கள் கிடைப்பதில்லை . அப்படி இருப்பதே குட்டையில் தேங்கிய தண்ணியின் மெல்லிய சலசலப்பு ஏட்படுத்தும் சின்ன அலைகளைத் தவிர வேற ஏதும் நடப்பதில்லை.

                                                      புதிய நாடு ,,புதிய நகரம், புதிய மனிதர்கள், புதிய முகங்கள் ,புதிய வாசங்கள் என்று ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதியின் அனுபவம் போல ஏகப்படட புது விசயங்கள் ஒவ்வொரு பொழுதும் கிடைக...
்குது. பழைய பழகிய பாதைகள் அவை தேக்கி வைத்திருக்கும் நினைவுகள் . கோடையும் உறைபணியும் தந்த பாடங்கள்.

                                                                   இப்போது ஸ்டாக்ஹோலம் என்னோட புதிய தளம். ஒரு காலத்தில் சுவீடனில் படித்த போது இந்த நகரத்தையும் சல்லடை போட்டு தேடித் தேடி ரக்ஷித்து இருக்கிறேன். காதுக்குள் மிக ஆழத்தில் அமுங்கிப்போன சுவிடீஷ் மொழி வேறு கொஞ்சம் கொஞ்சமாய் தூசு தட்டிக்கொண்டு வருகுது. மிக நெருக்கமான ஸ்டாக்ஹோலம் நிலத்தடி ரெயிலில் பிரயானிக்கும் போதெல்லாம் சக பயணிகளின் உரையாடல் வெளிகள் அந்த மொழியின் அலாதியான போக்கை இன்னொரு முறை மீட்டு எடுத்துத் தருகிறது.

                                                      பிடிகொடுக்காமல் உதறி எறிந்து பிடிக்காத நகரம் கொஞ்சம்   கொஞ்சமாய் பிடிக்கத் தொடங்குது . என்னதான் இருந்தாலும் ஸ்டாக்ஹோலம் விசாலமான ஐந்து சந்திகளில் விவரணம் காட்டும் பரந்து விரிந்த நகரம், பிரிந்து போன என் அன்புக்குரிய ஒஸ்லோ மிகச் சிறிய மூத்திரச் சந்து போன்ற நகரம். ஆனாலும் அது தந்த ஆதர்சங்கள் மறப்பதுக்கில்லை . மறைப்பதுக்குமில்லை .

                                              

ஒஸ்லோவில் அனாமிக்கா என்னை எழுத வைத்தாள்.. என்னை ஆச்சரியம் கலந்த நனவோடைக்குள் இழுத்துச் செல்கிற அதிசயாமாக ஸ்டோக்ஹோலம் எழுத்தாளர்களைக் கொண்டாடும் நகரம்,



அவர்கள் வாழும் காலத்திலேயே உலகம் எல்லாம் இருந்து அவர்களை அழைத்துக் கவுரவப்படுத்தும் நல்ல வாசக உள்ளம் உள்ள சுவிடீஷ் மனிதர்கள் வசிக்கும் நகரம், இந்த மாதம் இந்த நகரத்துக்கு சில எழுத்தாளர்கள் வருகிறார்கள் என்ற விளம்பரம் தான் இது.




                                                       ஸ்டாக்கோலம் தியேட்ட்ட்ர் கலரிக்கு முன்னால் இருந்தது. அதில வாசித்துப்பார்க்க ஓரேன் பாரமுக் என்ற துருக்கி நாட்டு இலக்கிய நோபல்... பரிசுபெற்ற ஒருவரின் பெயர் தவிர வேறு பெயர்கள் அறிந்ததில்லை,

                                                        ஒரேன் பாராமுக் எழுதிய ஒரு நாவல் ஆங்கிலத்தில் வாசித்ததுண்டு, தமிழில் மொழிபெயர்ப்பாக " என் பெயர் சிகப்பு " என்ற ஓரன் ப்ரேமுக்கின்  வரலாற்று நாவல் வாசிக்க கிடைத்தும் இங்கேயும் அங்கேயும் இன்றி சில அத்தியாயங்கள்  பிரட்டியதைத் தவிர  முழுமையாக வாசிக்கவில்லை,



                                                            அவரின் எழுத்துநடை அபாரமானது. உண்மையானது. நிறைந்த வாசிப்பு அனுபவம் நிச்சயமாகக்  கிடைக்கும் . " என் பெயர் சிகப்பு  " இன்றைய இஸ்தான்புல் நகரத்தையும் பழைய ஒட்டுமேன் சாம்ராச்சியத்தையும் , இஸ்லாத்தையும் பின்னிய ஒரு கதை . அது வரலாற்றோடு சமாந்தரமாகப் பயணிக்கும். 


                                           அரசியல் காரணங்களுக்காக இந்தமானுட எழுத்தாளரை     துருக்கி நாடுகடத்தியது. பலவிதமான விவாதம், சர்சை, என்று அவரோட ஆளுமை எப்போதுமே ஒரு சவாலாகவே இருக்கிறது இப்ப அமெரிக்காவில் தஞ்சம் அடைந்து வாழ்கிறார். இப்பவும் எழுதிக்கொண்டிருக்கிறார் .

                                                                           மற்றப்படி அதில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டுள்ள det var inte jag igen அந்த சுவிடீஷ் வாசகம் கொஞ்சம் ஜோஷிக்கும் படியான அர்த்தமுள்ள வாசகம் ,it was not me back என்று ஆங்கிலத்தில் சொல்லலாம் . தமிழில் மொழிபெயர்த்தால் , " புதிதாக எதுவுமில்லை அந்தப் பழைய நானேதான் " என்று வரும்,

................சிலநேரம் எனக்கும் அது பொருந்தலாம்.!.......


Stockholm, Sweden.








Wednesday, 9 January 2019

வழிதவறிய பெருவெளி...

ஒரு அபாரமான  சம்பவத்தை , ஒரு ஆழமான  அனுபவத்தை , அல்லது ஒரு அகலமான நினைவை சுருக்கமாகக் கவிதைமொழியில் சொல்லாடலாக்கி "நச்  "என்று ஒருவிதமான  கச்சிதமான  வடிவதுக்குள் எழுத்தில் கொண்டுவருவதுதான் உள்ளதிலேயே சவாலான விசியம்.
                                                             
                                                           வார்த்தைகளை அளவுக்கணக்கு இல்லாமல் அவிழ்த்துப் போட்டு , விலாவாரியாக  உருவகிக்கிறேன் பேர்வழி என்று உள்ளதெல்லாத்தையும்  உளறிக் கொட்டாமல்   ஒரு  குறுகிய வடிவத்தில் இருப்பதால் அவைகள்  எப்போதும் வாசிக்க இலகுவாக இருக்கும். அதேநேரம் அர்த்தங்கள் பிரம்மாண்டமாயும் இருக்கும் . 

                                                           இந்த எழுத்துருக்கள்  சென்ற வருடம் 8 th , 9 th  January இந்த ரெண்டு நாட்களில் முகநூலில்  எழுதியவைகள் . சிலசமயம் ஜோசித்தால் எனக்கே  பின்மண்டை கிறுகிறுக்குது எப்படி இப்படியெல்லாம்  எழுத முடிந்தது என்று அதுவும் ரெண்டே ரெண்டு நாளில். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கு அது அது அந்த நேரம் வந்து சேரும் என்று முன்னோர்கள் சொன்னாலும் சொன்னார்கள். அதனால்   எழுதவரும் போது எழுதிவிடுவது நல்லது, இதயத்திலிருந்து  எழுந்துகொள்கிறது அதைச் செய்த திருப்தி  .

                                                                                பின்னொருநாள் நாடியையும் தாடியையும் தடவிக்கொண்டு  விட்டத்தை அண்ணாந்துபார்த்துக் கொட்டாவிவிட்டுக்கொண்டு    எழுதுவத்துக்கு எதுவுமே இல்லாதது போன்ற ஒரு வெறுமை வெளிக்குள் சலித்துப்போன  மனப்பிரமை வந்து சேர்ந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கும் என்று இன்றைக்கு நான் நினைப்பதுபோல இன்னொரு மனிதருக்கும் நேரலாம் , இல்லையா ? 


*
மவுனம்தான்
இட்டுநிரப்பிக்கொண்டிருந்தது
அதுக்குப்பிறகு
நானாகி நீயும் 
நீயாகி நானும்
பேசவேயில்லையே !

*

மழைக்கூந்தல்
துவட்டியபடியே
விரதமிருந்து
பனிப்பூக்கள் சொரியும் 
நீர்மேகம் !

*

அந்தத்
தேன்வண்டின்
முதல்க் காதல்த்தோல்வி
முதல் சந்திப்பில் 
முத்தமிட்ட
வாசமில்லாத மலர்!

*

குரைக்கவைத்து
நாயை
உறங்கவிடாமலாக்கியது
சதிரான சத்தங்களும் 
திகிலான இரவும்
பழியெல்லாம்
அப்பாவி நிலவுக்குமேல் !

*

நுனிக்காம்பில்
காலைப் பனித்துளி
அந்தநேரம்தான்
விடாப்பிடியாக 
ஊஞ்சலாட விரும்புகிறது
இலை !

*

வானம்
அடர் இரவுகளில்
சில்லறைத்தனமாகப்
பிச்சைதான் எடுக்கிறது, 
அலுமினியத்தட்டில்
சிதறிக்கிடக்கும்
நட்சத்திரங்கள் !

*

தந்திரமான
குளிர் நீரோடை
தலைகுனிவு நாணல்கள்
பிறகெப்படி
தனித்துவமிழக்காத
நிலவும் சேர்ந்தே
மிதந்து கிடக்குது ?

*

செறிவான
முன்னேற்பாடுகள்
குறைவான
அத்தியாவசியங்கள் 
இத்தனை
சுழிப்புகளை எதிர்பார்க்கவில்லை
வாழ்க்கை !

*

வெளிச்சம்
உந்திப்பறக்கமுடியாமல்
உறைந்துவிடத் தொடங்குகிறது ,
குளிர்காற்றில்
செதுக்கிக்களைந்த
இலைகள் !

*

எல்லாத்தையுமே
கொடுத்துவிட்டுப்போய்விட்டது
நடுக்கோடைமழை !
நனைத்த யாருமே 
நன்றியோடு இரங்கவில்லை !
கூரைக்கு மட்டும்
அடங்காத சோகமுகம் !
தாள்வாரத்தில்
சொட்டுச்சொட்டாக
கண்ணீர்த்துளிகள் !

*
மூன்றாம்
சாமக்கனவு
ரகசியமாக ஏற்படுத்தும்
உக்கிர சலனங்கள்,
ரெண்டாவது
வெண்பனிப்பொழிவு,

*

உருவப்
புரிதலின்றிதான்
நிராகரிக்கப்படுகின்றன
ராத்திரிகளை 
விடியலாக்கிவைக்கும்
வெள்ளிகள் !

*

ஏராளம்
காதல் உத்தரவாதங்கள்
ஒன்றாகவே
விசிறிக்கொள்ளும் போதும்
மொழியை
விறைக்கவைக்குது
நினைவிலொரு
தனிக்கவிதை !

*

மழை
தேங்கவைத்த
சிதறல் வெள்ளத்தில்
காணாமல்ப்போன
நிலவின்
நீர்த்த வாசனை !

*

பின்னிரவின்
பிரத்யேகப் பார்வை
திருடப்படுகிறது
தீங்கிளைப்
பயங்கள் அடர்த்தியான
கறுப்புநிறத்தில் !

*

முந்தநாளிருந்து
பிரிந்துபோன நேற்று
நாளையிலிருந்து
இடப்பெயரும் நாளைமறுநாள்
தத்தளிப்பு
இன்றைய மனநிலை !

*

ஒரு பக்கம்
நிறையா வெறுமை
இன்னொரு மறுபக்கம்
தோல்விகள்
பின்னுக்கு
அந்நியமாகிப்போனவர்கள்
ஒரே ஒரு நம்பிக்கை

எதிரில் நீங்கள் !

*

விவாதங்களின்
பயங்கர விரட்டல்
துல்லியமான
எதிர் விமர்சனம்
எதிர்பார்ப்புகள் தரும்
ஏமாற்றம்
இடையில் நிகழும்
பயணம் !

*

வழி தளரும்
நடைபாதை
விழிக் காத்திருப்புகளின்
சூட்ச்சுமங்களை
நிலைமழுங்க வைத்த
நாட்குறிப்பு !

*

வலியைக்
கவிதைக்குள்
வழிக்குக்கொண்டுவந்ததே
வெளிப்படும் பாவத்தில்
நுழைந்துகொண்ட
விதி !

*

அவதானிப்பில்
நீட்சிகுறித்த பயம்
ஓய்வாக
மரக்கிளையிலும்
சிறகை
நீள விரித்தபடியே
பறவை !

*

உள்ளெல்லாம்
திருப்த்தியின்மை
அத்திவாரமில்லாத
அந்தக் கணத்திலும் 
வெளிநோக்கி
அந்தமெல்லாம் முடிவில்லா
வாழ்வு சுரக்கிறது !

*

இருட்டில்
மின்மினிப்பூச்சிகளோடு
சலசலசலசலக்கும்
அதே
நதியில்தான்
மூழ்கிக்கொண்டிருக்கிறது
பிசுக்கேறிய
நகரத்தின் இரைச்சல் ! 

*
நேர்த்தியான நீள்பாதை
தெருவிளக்கின்
நீளமான நீலவெளிச்சம்
சட்டென்று 
விபரீதமாகக்
குறுக்குவழியில் இறங்கினேன்
கூடவந்த நிழல்
பின்வாங்கிவிட்டது ! 

*
நான்
அவஸ்தைகொடுத்துத்தான்
பிறந்திருக்கிறேன்
அம்மாவின் 
மடிவயிறு முழுவதும்
தழும்புகள் !

*

அமைதி நகரம்
நீண்ட நிசித்தூக்கம்
வழிதவறிய
பெருவெளிகளிலும் 
காத்திருக்கிறது
வெண்பனி !

*

தவறி விழுந்த
சருகின் மேல்
நீர்ப்போக்கில்
ஆற்றுக்கு 
அடங்காத பெருமிதம்
வழிகாட்டி நகர்த்தும்
இரு கரைகளை
யாருமே
மதிப்பதில்லை !


*
காற்றில்
உல்லாசமாய்
ஏறிப்பயணிக்கும்
இன்றைய மனம் 

கதை சொல்லியினுடைய
விதை !


Tuesday, 18 December 2018

கனவுகள் !


*



முன்னிருக்கைப்
பெண்ணின்
ஸ்பரிசக் கூந்தல்
தள்ளிவிடும் வாசனைகள்
ஒரு

பயணத்தையே
இலக்கின்றி நகர்த்துகிறது !


இதே
சுகந்தத்தையா
அவர்களுக்கே தெரியாமல்
நெருங்கியிருக்கும்
எல்லாரிடமும் நுகர்ந்து
நினைவிலிருந்து தப்பித்து
முடிந்தபின்
விலத்திக்கொள்கிறேன் !


எவ்வளவு
சுயநலமான சுகபோகி !
என்னையே
வெறுக்கும்படியான வேற்றுணர்வு !


இங்குதான்
இச்சைகளின் அலைச்சல்கள்
ஆத்மாவினுள்ளே
குற்றஉணர்ச்சியைச் சந்திக்கிறது. !


*

கைகளின் தொலைவில்
வள்ளங்கள் ,
கண்கள் விழிக்கும் திசையில்
குப்பி விளக்குகள் ,
குரல்கள் கேட்குமளவில்

நீண்ட அடிவானம் ,
அவ்வப்போது
நீரோட்டங்களில் எழுந்துகொள்ளும்
ஆர்ப்பரிப்புகள் ,
எதிர்பாராத வினாடியில்
பிரளயம்போலவே
பேய்க்காற்றுப் பிரட்டி
நீரடிப்பு சோர்ந்துபோனபோதில்
கடலின்
தத்தளிப்பு
அலைகளைப் பிரித்துவிட்டது. !
பெயர் சொல்லிப்
பெருங்கடலைத் திட்டி
துயரக்குரலெடுத்து அழுகிறது
மணல்க்கரை !


*

சரியான நேரத்தில்
சந்தித்துக்கொண்ட
உரையாடல்கள் ,
சரியான பருவத்தில்
மனவலிமையைச் சோதித்த

இளவயது ,
சரியான இடத்தில்
வீரியத்துக்குக் குறைவில்லாத
ஆசைகள் ,
சரியான தெரிவில்
தன்மானத்தை முன்னிறுத்திய
பாதைகள்,
சரியான வாய்ப்புகளில்
தவறிப்போன
குறிக்கோள்கள் !
தனக்கேயுரிய முறையில்
மிகச்சரியான தருணங்களில்
குறுக்கிட்டுக்கொண்டபடியேயிருக்கிறது
விதி !


*

கதைப்போக்கில்
ஒரு
மனச்சித்திரத்தை உருவாக்கி
குறிப்பிட்ட
வழமையானவையென்ற ...

வகைமாதிரிகளைக் கடந்து
பழக்கத்துக்கு அடிமையானதுபோல
எங்கிருந்து
வந்ததென்றே தெரியாமல்
என்னுடன் சேர்ந்து
முடிந்தளவு
அவமானப்படுத்தல்களைச்
சகித்துக்கொண்டு
துரதிருஷ்டவசமாகத்
தன்
தடயத்தையும் விட்டுச்செல்லும்
காலத்துக்கு
எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன் !


*

நிராகரிக்க முடியாதளவுக்கு
வலுவான ஆளுமை
காலநிலை !
ஒத்திசைவில்
இதுதான் 

வலிக்கவும் செய்கிறது !
அடைப்புகளையும் மீறி
மெலிதாக வெளிப்படும்
யாரோ ஒருவனின்
கதறல்போலக்
குளிர் நெருக்குகிற
இரவுகளில்
சூழும் ஆபத்துகள்
வெளியுலகில் இல்லைத்தான்
ஆனலும் ,
அடிப்பயத்தில்
தொண்டைக்குள் வந்துவிடுகிறது
ஏதோவொன்று !


*

மூச்சுத்திணறலுடன்
திறக்கப்படும்
ஜன்னல்களை
நையாண்டிசெய்கிறது
உள்நுழையும்

காற்றின் மமதை !
திருத்தமான
திசையில்செல்ல
வழிகாட்டுகிறது
கொஞ்சபோல வெளிச்சங்கள் !
நவீன யுகத்தின்
அல்லாடல்களுக்கு
நன்றி கூற வேண்டும் !
பிறகென்ன
மரியாதையைக்
காப்பாற்றிக்கொள்ள
வெளிச்சென்று
கதவை மூடிவிடுகிறது
இன்றைய நாளின்
எஞ்சிய பகுதி !


*

புரிந்துகொள்கிற
அடிப்படையில்
அப்படியொன்றும்
தியாகம் செய்வதுபோல்
சிலாகிப்புக்கள் இல்லை !

தவிர்க்கமுடியாமல்
இதைச் செய்தேன் என்று
சொல்லிக் கொண்டு
நெருங்கிப்பழகிய
ஒரு இறுக்கம்
மறக்கமுடியாமல்த் தவிக்கலாம் !
அடிப்படையில்
குறிப்பிடத்தக்க விஷயங்களில்
தொலைந்துபோனது மாதிரியிருப்பதால்
மன்னிப்புக்கும்
காரணங்களுமில்லை !
ஒரு
கைச்சொடுக்கலிலேயே
முன்னோக்கி
விழுந்துவிடுகிறது
அநிச்சயம் !


*


மிகச்
சந்தோஷமான
தருணம் !
இறுதிநாளிலும்
ஒரு வழி
இருட்டில் தேடிக்கொண்டது ! 


இயல்பாகவிருந்ததை விட
கனிவாகவும்
பெயரைச் சொல்லி
நேராகவே
அழைக்கப்படும்போது
எல்லாமே
அழகாகவிருந்தது !


பிறகு
உணர்ச்சி ததும்பும்
வாழ்க்கையை
விலகி நிக்கும் பார்வையில்
உலர்ந்துபோன
வார்த்தைதைகளில்
வருணிப்பது போலிருந்தபோதுதான்
இட்டு நிரப்பமுடியாமல்
இடைவெளிகள்
இறுக்கிக்கொண்டது !


*




வாழ்க்கையோடு
சம்பந்தப்பட
சில தங்குகின்றன,
மற்றதெல்லாம் நிற்பதில்லை.

தூக்கிப்போடக்கூடிய
கனதியானவொரு மூட்டை போல
மனசாட்ச்சியைப்
பார்ப்பது சுலபமாக இல்லை,


இப்போதெல்லாம்
ஒவ்வொரு காரணத்தையும்
அளந்துபார்த்து
வரிசைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கு !


இப்படியுமில்லை,
அப்படியுமில்லை,
என்னைப் பொறுத்தவரை,
நான்
யாரென்பதை
நான் அறிந்திருந்தால்
அது போதும் !


*




மழைக்காற்றில்
நலுங்கும் சிம்மினி !

சுடர்போல
ஏதோவொன்று
ஆடிக்கொண்டிருந்த
அதிகாரமான
நெருக்குதலோடு
அனிச்சையாக
நெஞ்சைப்பிடிக்கும்
படுக்கையைச் சுற்றி
மெதுவான பேச்சுக்குரல் !

ஒருநாளல்ல
தொடர்ச்சியாகப்
பலசந்தர்பங்களில்
திகைப்பு மயக்கம்போல !

அதன் உச்சமான வலியை
அமைதிப்படுத்திக்கொண்டிருப்பதுதானா
அல்லததை
இழை இழையாகப் பிரிக்கும் உணர்வா?

விழித்துக்கொண்டு
வைராக்கியம் மேலெழுகையில்
ஏதோவொன்று வெடித்துச்சிதறுவதைப் போல
போர்வையை உதறி எழும்பிவிட்டாள்!

இன்றுகாலை
அவளுக்கு(ம் ) நடந்ததெல்லாம்
தலைப்புச் செய்தி !






*




நோக்கிப் புன்னகைக்கும்
இந்த அவளை
எந்த இடத்திலும்
இதுவரையில்ப் பார்த்ததில்லையே !

எதுவும் விபரீதமாக இல்லைப்போலிருக்கும்
நீள் நடைப் பாதையொன்றில்
அதிகம் தனித்திருப்பதின்
மனப்பிறழ்வா ?

இது எந்த இடம்?
எப்படி இங்கு வந்தேன்?

எண்ணங்கள் தோன்றியபடி
பேச்சுக்கள் பதிவாகியிருக்கும்
அவள் சற்று முன்னர் நடந்துசென்ற
இலையுதிர்சோலை !

அதையொரு
தொடுதிரையில் பார்ப்பதுபோல
பின்தொடர்ந்துகொண்டிருந்தது
பரவசமாகவிருந்து !





*


சிதிலமடைந்த
மரவாங்கின் விளிம்பில்
அமர்ந்தபடி,
அந்தரங்கங்களைப்
பிரிப்பது போலவே
காற்றிலேறி வந்த
குளிர் நெடியை முகர்ந்து
தேங்கு மழைநீரில்
அசைவுகளைப் பிரித்தெடுத்து
அதை
உடைக்கிறதில்
வளையங்களாக நெளியும்
சுழல்களைப் பார்த்தபடி ,
உரையாடலில்
அதீத உணர்ச்சிகளேதுமின்றி
காலத்தைச்
சமன் செய்தபடியிருக்கவே
இரவுநேரம்
போதுமானவளவு திகட்டிவிட்டது !


*


சுயநலமான
அதீத நினைவுகள்
ஒவ்வொரு நமக்குரிய நாளிலும்
நம்மை நாமே
அடையாளம் வைத்துக்கொள்கிறது!

நமக்குத் தொடர்பில்லாத
நம்முடையவொரு
ஒளிநகலைப் பார்ப்பதுபோலவே
சிலசமயங்களில்தான்
தன்ணுர்வுன்னு
தனியாகப்பிரிந்துவிடுகிறது !

நமதென்ற வரம்புமீறி
உள்வாங்கும் உணர்வுக்குள்
அகோரமான தனிமை நுழைந்துவிடும்போது
நம்மைச் சுற்றியுள்ளவர்களும்
தனித்தன்மையோடு
நமக்குள்ளும் நெருங்கிவிடுகிறார்கள் !






*





கனவுகளிடமிருந்து
தற்காலிகமான
தப்பித்தல் நிர்ப்பந்தம்போல
உரையாடிக்கொண்டிருக்கிறேன் ,


நிஜத்தில்
அசட்டுத்தனமாக
நிராகரிக்கப்பட்ட கேள்விகள் !


குறியீடுகள் நிரம்பிய
அவற்றுக்கு
மனசாட்சியற்ற பதில்கள் !


எச்சரிக்கைகளை மீறிக்கொண்டு
தொட்டுணர்வதுபோல
மெல்லசைவுகளில்
கவனம் குவியும்போது
நிழல்கள்போல
விலகிச்சென்றுகொண்டிருந்தேன் !


உறக்கத்தின்
இறுக்கமான அரவணைப்பில்
நெருக்கமானதாகத்
தொடங்குவதுதானென்றாலும்

நீட்டிப்பை நிறுவுவதுபோல
புரியமுடியாத
அபத்தங்களோடு திரும்புகின்றன
கனவுகள் !














Thursday, 13 December 2018

நினைவுக்கிடங்கிலிருந்து 001.


நோர்வேயில் ரெண்டு வருடங்கள் முன் மிகவும் அறிமுகமான ரெண்டு நண்பர்கள் குறிப்பிட்ட சில மாத இடைவெளிகளில் இறந்துபோனார்கள். உலா வயதாகி இனிப் பலவீனங்களைப் பலப்படுத்த முடியாத உடம்பின் இயலாமையில் இறந்தார். உலா அட்டகாசமான  மனிதர் ! பெந்தபேரீட் சோல்பெர்க்க்கு சாகிற வயதில்லை.  என்னைவிட வயது குறைவு. அகலமாக இறந்துபோன பெந்தபேரீட்  சோல்பெர்க் அருமையான மனுஷி  ! 




                                                        ரெண்டுபேரையும் அழைத்துக்கொண்டுபோன மரணம் மிகக்கச்சிதமான வடிவமைப்பு ! அதேநேரம் ஒத்துக்கொள்ளும்படியாக உண்மையான பொய் ! முன்னமெல்லாம்  மரணம் பற்றிய  தனிரகமான வேதனைகள்  இருந்தது. இப்பெல்லாம் அப்படியெல்லாம் இல்லையென்றுதான் சொல்லவேண்டும் .




                                                      ஒரு புள்ளியில் முடிவையும் தொடக்கத்தையும்  இலகுவாகி விட்டு அடுத்தகட்ட சோதனைக்குத்  தயாராகி   நீண்ட வரிசையில் நிக்கின்ற  சங்கடத்திலிருந்து  சமாளிப்பாக எதையாவதுசொல்லி, கலைந்து போவதுபோலிருக்கும் வாழ்க்கையில் , எப்போதுமே  யாரோவொருவரின் மரணம் , நமக்குரியதுபோலவும்  தலையசைப்பில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது   !  அவளவுதான் .!!!


சின்ன வயதில் ஊரில பெரிய வயதான வாழ்ந்து முடித்த மனிதர்கள் இறந்து போவார்கள், தாத்தா சீனியப்பு,,குஞ்சியப்பு,,அப்ப்பப்பு ,சித்தப்பு என்ற அவர்கள் எங்களோடுஅதிகம் வயது ஒப்பீட்டில் நெருக்கமாக ஒன்றாகவே பயணிப்பதில்லை. அதனால் அவர்கள் மறைவு அதிகம் நினைவுகளைக் காவுவேண்டுவதில்லை. அதைவிட சாவு என்னவோ புரிந்துகொள்ள முடியாத சூணியம் வைச்ச சாபம் போல இருந்தது அந்த நாட்களில் 



                                                   இப்போது நாலு கழுதை வயது தாண்டி நடுத்தரம் பாயுற வயதில் பல மனிதர்களுடன் வேலைசெய்யும் இடங்களில் பழகவேண்டியுள்ளது. அதில் சிலர் அவர்களின் அழைப்பு நேரத்தில் விடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்., இப்ப சாவு என்பது வெளிச்சமான வாழ்வின் இன்னொரு இருண்ட பக்கம் போலவும் உயிர் வாழ்வது என்பது இரவும் பகலும் போல என்று அர்த்தமாக இருக்கு .

                                                     ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்த உயிர் அம்மாவின் கர்ப்பப்பையில் உருவாக்கி வெளியேறிப் பிறப்பதில் தொடங்குது ,அதன் பின் ஒவ்வொரு நாளும் பொழுதும் அதன் கலங்களின் வளர்ச்சி இன்னுமொரு உயிரை உருவாக்கிவிட்டு முடிவான ஒரு நாளின் இறப்புக்குத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது , யாருமே தப்ப முடியாத மிகக் கச்சிதமான வடிவமைப்பு அது என்று கையைப் பிசைந்துகொண்டு நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும் .



                                                நேற்று என்னோட சோசியல் ரேச்ற்றோறேண்டில் பலவருடம் வேலை செய்த உலா என்பவர் செத்துப் போனதுக்கு நினைவு கொள்ள மெழுகுத்திரிகள் ஏற்றிவைத்தோம் ,அவர் நினைவுகளைப் பதிய ஒரு நினைவுப் புத்தகமும் வைத்தோம் அதில நான் தமிழில் அவர் ஆத்மாசாந்தி அடையப் பிராத்தனை அது இது எண்டு ஒண்டும் எழுதவில்லை . சில வரிகள் நன்றியாகவும் நிலையாமை பற்றியும் எழுதி விட்டேன்.

                                                      சென்ற மாதம் உலா சுகவீனம் உற்று இருந்தார் என்று சொன்னார்கள். அதனால் சென்ற வருட டிசெம்பர் மாதத்தின் பின் வேலைக்கு வரவில்லை. அவர் அந்த சோசியல்ரேச்ற்றோரென்ட் சமூக உதவி நிறுவனத்தில் அதிகாரி. நான் அங்கே சமயலறையில் சராசரி குக் , ஆனாலும் மனிதர்களை உயர்த்தி வைக்கும் பொசிடிவ் எனெர்ஜி உள்ள நல்ல மனிதர், என்னோட நல்ல ஒட்டு.

                                                       அந்த இடத்தில பலவருடம் வேலை செய்துகொண்டு இருக்கும் ஒரே ஒரு இலங்கைத் தமிழ்க் குடிமகன் நான் தான்.  அந்த இடத்தில வேலை செய்த என்னோட அருமையான உயிர் நண்பி பெந்த பேரிட் சோல்பேர்க் என்ற அம்மணியும் மேலே போனா. சாவு வீதி வளைவு மூலையில் கை விரல்களில் நாட்களை எண்ணிக்கொண்டு போகும் வரும் முகத்தைப்பார்த்துத் தேடிக் காத்துக்கொண்டு குந்தி இருக்குது போல இருக்கும் சில நேரம் .

                                                           உலா இறந்தது எனக்குக் கொஞ்சம் தன்னும் கவலையாக இல்லை. அவருடைய காலத்தில் இருந்து அவர் அடுத்த பரிமாணத்துக்கு போய்விட்டார். வாழ்க்கையைப் பற்றி அவருடன் சேர்ந்து வேலை செய்த காலத்தில் கொஞ்சம் புரிந்து கொள்ள உதவியவர். அடுத்த மனிதருக்கு இறப்பு வருவது என்பதே உயிரோடு இருக்கும் போது நாங்கள் உயிருள்ள அடுத்த மனிதருக்கு செய்வதுக்கு எவளவோ நல்ல விசியங்கள் இருக்கு என்பதை நினைவுபடுத்துக்கு என்று நினைக்கிறேன்!





பெந்த பேரிட் சோல்பேர்க் Bente Beret Sølberg என்ற என்னுடைய ஒரு நல்ல நட்பு சில நாட்கள் முன், நோர்வேயில் இருந்து கோஸ்டோ ரிக்கோ என்ற நாட்டுக்கு பிராயணம் செய்த போது.அந்த நாட்டில் இருந்து ,நாற்பது மூ ன்று வயதில் , இந்த உலகத்திற்கு எதிர் பாராமல் விடை கொடுத்துவிட்டு , ஸ்பேஸ் டைம் இன் இன்னுமொரு பரிமாணதிற்குள் சென்ற ஒரு அவல சம்பவம் நடந்துள்ளது. 

                                                                    பெந்த பேரிட் சோல்பேர்க்கின் கதை முடிந்தாலும்,அந்தக் கதையின் 
தொடர்ச்சி ஏதோ ஒரு விதத்தில்அவாவின் நட்பில் இருந்த எல்லார் கதையிலும் தொடரும் போல உள்ளது அதுக்கு காரணம் அந்தப் பெண் எங்களோடு இருந்த காலத்தில் செய்த ஒவ்வொரு சின்ன சின்ன விசியங்களிலும் அன்பின் அடையாளத்தை நிறையவே ஆழமாக பதிந்து விட்டு சென்றது..

                                                                            நோர்வே நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள பிரேடிக்சாட் இடத்தில பிறந்த பெந்த, ஒஸ்லோவில் வேலை செய்யும் இடத்தில என்னோட நட்பாக எப்பவும் இருந்தா,இந்தியாவுக்கு பல முறை போய் முக்கியமா இந்தியாவின் இமாலயா மலை முழுவதும் சுற்றி, இந்தியாவை இதயத்தில் நேசித்ததால்.என்னை எப்பவும் நமஸ்தே எண்டு சொல்லி தான் வணக்கம் சொல்லுவா,

                                                                      இந்திய பயண அனுபவத்தை " Journey for my life time " எண்டு ஒரு புகைப்படத் தொகுப்பாக பேஸ் புக்கில் போட்டு இருந்தா. என்னோட கிட்டார் விடியோ கேட்டு முதல் முதல் உற்சாகம் தந்த ஒரே ஒரு நேர்வே இனப் பெண்மணி பெந்த பேரிட் சோல்பேர்க். எனக்கு ஒரு ஒலிப்பதிவு உபகரணமும் தன்னிடம் இருந்ததை தந்தா.

                                                               பல மாதங்களாக சந்திக்காத அவாவை,அண்மையில் சில வாரம் முன் எதிர் பாராமல் அவசரமா போய்க் கொண்டு இருந்த ஒரு இடத்தில சந்தித்தேன், என்னை இழுத்து வைத்து இருத்தி நிறைய விசியம் கதைத்தா. அந்த சம்பாஷனை முடிவில்

                                          " என்னை மறந்து விடுவியா "

                                                                       எண்டு கேட்டா ,நான் ஒண்டும் சொல்லவே இல்லை சிரிச்சுப்போட்டு போயிட்டேன்,அதுதான் அவா என்னோட பேசிய கடைசி வார்த்தை. இப்பொழுது கவலையாக இருக்கு " மறக்கவே மாட்டேன் " எண்டு வாயலா ஒரு பதில் அந்த நேரம் சொல்லி இருக்கலாம் எண்டு.

                                                                         நேற்று அவா இறந்த செய்தி கேள்விப்பட்டு ,அவாவின் பேஸ் புக் போய் பார்த்தபோது அதிர்ச்சியாக நோர்வே நாட்டின் ,கார்டமொன் விமான நிலையத்தில் இருந்த கோஸ்டோ ரிக்கோ நாட்டுக்கு போவதுக்கு முன்னர் போட்ட " My Journey Starts From Here " என்ற கடைசி போச்டிங்கோடு அந்த இதயம் நின்று விட்டது,

                                                                           பல ஆச்சரியமான சம்பவங்களில் இதுவும் ஒரு சம்பவம் போல இருக்கு, பாவம் பெந்த அந்த போஸ்டிங் எழுதும் போது தெரியாமலே போனது அவாவுக்கு தன்னோட இன்னுமொரு பயணம் தொடங்கப்போகும் சம்பவம் நடக்கப் போவது.கடைசியில் அவா பயணம் அடுத்த உலகத்துக்கு தொடக்கி விட்டது போய் ரெண்டாம் நாள் ஆள் போயிட்டா,,,

                                                                       பெந்த பேரிட் சோல்பேர்க் எல்லாரோடும் இலகுவில் பழக மாட்டா ,என்னோட ஒரு அதிசயமா ரெம்பவே நெருக்கமான நட்பாக இருப்பா,நான் சாப்பிடும் போது என்னோட இருந்து எப்பவும் இந்தியா பற்றிக் கதைத்து கதைத்து சாப்பிடுவா.

                                                                          நான் சில நேரம் இந்திய வகை சைவ உணவு சமைத்தால்,நான் முள்ளுக் கரண்டியால் சாப்பிட அவா கையால சாப்பிடுவா ,அப்படி சாப்பிட தனக்கு விருப்பம் எண்டு சொல்லுவா,

                                                                   பெந்த இளவயதில் நேர்ஸ்க்கு படித்தவா , உயர் குடி ,படித்த குடும்பதில் பிறந்தவா, இந்த வருட மே மாதம் , பல வருடங்களின் பின் தான் பிறந்த கிராமத்திட்கு சென்று நோர்வேயிய கலாச்சார உடை அணிந்து சகோதரியின் பிள்ளையின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டதாக மிகவும் சந்தோசமாகா சொன்னா. ,

                                                              அந்த படத்தை பேஸ் புக்கில் போட்டும் இருந்தா ,அவா சொந்த வாழ்க்கை பிரசினையில் பல கட்டங்களை சோகமாகக் கடந்தவா ,அதால பலமுறை வாழ்வின் விளிம்புவரை போய் உயிர் தப்பியவா ,எனக்கு எல்லா கதையும் சொல்லுவா,,அவாவின் எதிர் பாராத மரணத்தின் பிண்ணனியில் சில விசியங்கள் இருக்கு,....

                                                        பொதுவாக நேரடியாக எல்லாரோடும் பழகாத என்னோட வாழ்கையில் நிறைய மனிதர்களை குறுகிய காலத்தில் வெறுப்பு ஏற்றிய சம்பவங்களை சந்தித்து இருக்கிறேன், நிறைய மனிதர்கள் அனாவசிய அலுப்பு கொடுத்து வெறுப்பு ஏற்றி இருந்த கொஞ்ச நின்மதியையும் இழக்க வைத்திருக்குறார்கள்.

                                                                   பல வருடம் நட்பில் இருந்த இந்த அன்பான,அடக்கமான பெண் ஒரு நாள் தன்னும் நான் எவளவு குழப்பமா கதைத்தாலும், சிரித்து சிரித்து அமைதியா பதில் சொல்லும் ஒரு நல்ல ஜீவன் . சில மனிதர்கள் பதிந்து செல்லும் மிக அழகான நினைவுகளை அதிகம் கஷ்டப்பட்டும் மறக்கடிக்க நினைத்தாலும் முடியாது , அதை மறுத்தால் உயிர் வாழ்தலுக்கு அர்த்தமேயிருப்பதில்லை.!



                                                                           அந்தப்  பிரசன்னத்தை நிறுத்தி தொடரிருப்பைத்  தொலைத்துவிட்டு  மூச்சிழுத்து விழுங்குகிற  ஆத்மார்த்த ஏமாற்றம் ஒரு வெறுமைதான்  ! அடுத்தகட்டத்தைத்  தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இதெல்லாம்  வெறும்  சந்திப்புப் போலிருக்கும் , நீளத்தனிமை  நினைவில் இடறி விழும் ஒரு மென்மையான பொழுது  சுடர்மனதில் நீர்க்குமிழிகளாகுகின்றது  நம்மை அதிகம் நெருங்கிப் பாதித்துவிட்டுச் சென்றவர்களின் பிரிவு !


2015 ஒஸ்லோ நகரம்   நோர்வே 




*

மேலே நடந்தது புலம்பெயர் நாடுகளில் வாழுபவர்களின் அன்றாட வாழ்வியல்  அவஸ்தை.. இனி நம்முடைய மனிதர்களின் மரணங்கள் எப்படியான நெருக்குவாரத்தை தருகிறது என்று பார்த்தால். அது இன்னொருவிதமான ணைபவம் போலிருக்கு. " அதெல்லாம் ஒரு காலத்தில் எங்கட ஊரில ,, "  என்று இன்றைக்கு பலவருடங்கள் முன்னதாக நடந்த மரண வீடுகளில் உறவுமுறைகள் எப்படி ஓவென்று சொல்லி அழுது கொண்டாடினோம் என்று பார்க்க ஒருவிதமான மலைப்பாக இருக்கு.



                                              மரணஅறிவித்தல்கள் ஒரு காலத்தில் அதிகாலையில் எழும்பினால் சாவுமேளம் அடிக்கும் அதை வைத்து ஊரில யாருக்கு விசா கிடைத்தது என்று கதை வழியில் காற்றின்போக்கில் அறியமுடிந்த ஒரு அலாதியான காலத்தைத் தொலைத்துவிட்டு இப்ப இன்றைக்கு இன்டர்நெட் பதிவுகளில் அதைப் பார்க்கவேண்டி இருக்கு. கடல் கடந்த புலம்பெயர்வுகள் தந்த முக்கிய அவலத்தில் அதுவும் ஒன்று.



                                                              முன்னம் எல்லாம் உடன்பிறப்புக்கள் உறவினர்கள் தொலைபேசியில் சொல்லுவார்கள் . இன்றைக்கு அதுவும் அரிதாகிவிட்டது. துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடும் அவசர உலகத்தில் அவரவர்களுக்கு ஆயிரம் சோலிகள் குருவி தலைக்குமேலே பனங்காய் போல இருக்கலாம். அல்லது இதெல்லாம் இப்ப முக்கியமா என்ற அலட்சியமாயும் இருக்கலாம்..



                                                           அந்த ஊருக்கு ஒருநாள் திரும்பி வருவேன் என்று சொல்லிவந்தவர்களில் பலர் அது நடந்தேற முதலே இந்த உலகத்தை விட்டு அகாலமாக அந்நியநாடுகளில் விடைபெறும் சம்பவங்கள் நிறையவே நடக்குது. அதிலும் பலர் பொறுப்புகளோடு இருக்கும் நடுத்தர வயதில் பலியாவது இன்னும் சோகமாகவே இருக்கிறது.

                                                          ஊர்கூடி உறவுமுறை சொல்லி உரிமையோடு அழுது குளறி ஒப்பாரி வைச்சு பாடை கட்டிப் பந்தம் கொளுத்திப் பிடித்து நிலபாவாடை விரித்து அமர்களமாக மரணத்தைக் கொண்டாடிய ஒரு தொன்மையான வாழ்வியல் பூர்வீக அடையாளங்களுடன் வாழ்ந்த சமுதாயம் இன்றைக்கு " R.I.P " என்ற மூன்று ஆங்கில வார்தைக்களைப் போகிறபோக்கில் தட்டிவிட்டுப் போகும் சுருக்கமாகி முடிந்துவிடுகிறது.


                                                              நினைவுகளின் வழித்தடத்தில் என் பெற்றோர்களின் தலைமுறை இருந்தது. அவர்கள் எங்கே இருப்பார்கள், எப்படி இருப்பார்கள் என்பது போன்ற ரத்த உறவுத்தொடர்புகள் நிறையவே அறுந்துபோனாலும் யாரோ ஒருவர் போடும் மரணஅறிவித்தல் பல விடயங்களைத் தோண்டி எடுக்கும்போது அந்த இழப்பின் ஈடுசெய்ய முடியாத வலி தெரிகிறது.




                                                        தலைமுறைகளோடு நேசமாக நெருக்கமாக உறவாட முடியாமல் போவதே உலகம் எங்கும் சிதறி வாழும் இலங்கைத் தமிழர்களின் தேற்றமுடியாத சோகம். அதுக்கு தனிப்படவும் பொதுவாகவும் நிறைய அந்நியப்படும் காரணங்கள் அவர்கள் அவர்கள் வாழும் நாட்டில்இருக்கு. வேறுவழி இல்லை அதிலிருந்து தப்ப.




                                                          குஞ்சியப்பு, அம்மாச்சி, சித்தப்பு, பெரியையா, ஆளவந்தான்தாத்தா,,அன்னலட்சுமிமிப் பாட்டி போன்ற ஆலமரங்கள்சரிந்து விழும்போது அருகிருந்து ஆசுவாசித்து வழியனுப்பிவைத்த சம்பவங்கள் எல்லாமே இப்போது வெறும் கதையும் பழங் கதையும் ஆகிப்போனது ஒரு இனத்தின் வரலாற்றுத் தோல்வி.




                                                       இப்பிடியே நாயைப் பிடி பிச்சை வேண்டாம் என்று இன்னும் எவளவு காலம் தான் ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு போல ஓடிக்கொண்டிருக்கப்போறோம் ? அதுவும் எந்தத் திசையில் ஒடப்போறோம் ?, இந்த அர்த்தமில்லா ஓட்டம் எங்கேதான் கொண்டுபோய் விடப்போகுது ? போன்ற ஆதாரமான கேள்விகளுக்கு விடைகளும் இல்லை.




                                                             இணையவலைகளில் மரணஅறிவித்தல் பதிவுகள் போடும்போது அதில இருந்து ஓரளவு அறியமுடிகிறது உலகம் முழுவதும் பரந்துவாழும் குடும்ப உறவுகளின் தொடர்ச்சிபற்றிய தகவல்கள். இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை கொடுக்கவேண்டி உள்ளது. இது கொஞ்சம் மனத்தைக் கனமாக்கும் விலை போலவே இருக்கு. !


2015 ஒஸ்லோ நகரம்   நோர்வே