Thursday, 13 December 2018

நினைவுக்கிடங்கிலிருந்து 001.


நோர்வேயில் ரெண்டு வருடங்கள் முன் மிகவும் அறிமுகமான ரெண்டு நண்பர்கள் குறிப்பிட்ட சில மாத இடைவெளிகளில் இறந்துபோனார்கள். உலா வயதாகி இனிப் பலவீனங்களைப் பலப்படுத்த முடியாத உடம்பின் இயலாமையில் இறந்தார். உலா அட்டகாசமான  மனிதர் ! பெந்தபேரீட் சோல்பெர்க்க்கு சாகிற வயதில்லை.  என்னைவிட வயது குறைவு. அகலமாக இறந்துபோன பெந்தபேரீட்  சோல்பெர்க் அருமையான மனுஷி  ! 




                                                        ரெண்டுபேரையும் அழைத்துக்கொண்டுபோன மரணம் மிகக்கச்சிதமான வடிவமைப்பு ! அதேநேரம் ஒத்துக்கொள்ளும்படியாக உண்மையான பொய் ! முன்னமெல்லாம்  மரணம் பற்றிய  தனிரகமான வேதனைகள்  இருந்தது. இப்பெல்லாம் அப்படியெல்லாம் இல்லையென்றுதான் சொல்லவேண்டும் .




                                                      ஒரு புள்ளியில் முடிவையும் தொடக்கத்தையும்  இலகுவாகி விட்டு அடுத்தகட்ட சோதனைக்குத்  தயாராகி   நீண்ட வரிசையில் நிக்கின்ற  சங்கடத்திலிருந்து  சமாளிப்பாக எதையாவதுசொல்லி, கலைந்து போவதுபோலிருக்கும் வாழ்க்கையில் , எப்போதுமே  யாரோவொருவரின் மரணம் , நமக்குரியதுபோலவும்  தலையசைப்பில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது   !  அவளவுதான் .!!!


சின்ன வயதில் ஊரில பெரிய வயதான வாழ்ந்து முடித்த மனிதர்கள் இறந்து போவார்கள், தாத்தா சீனியப்பு,,குஞ்சியப்பு,,அப்ப்பப்பு ,சித்தப்பு என்ற அவர்கள் எங்களோடுஅதிகம் வயது ஒப்பீட்டில் நெருக்கமாக ஒன்றாகவே பயணிப்பதில்லை. அதனால் அவர்கள் மறைவு அதிகம் நினைவுகளைக் காவுவேண்டுவதில்லை. அதைவிட சாவு என்னவோ புரிந்துகொள்ள முடியாத சூணியம் வைச்ச சாபம் போல இருந்தது அந்த நாட்களில் 



                                                   இப்போது நாலு கழுதை வயது தாண்டி நடுத்தரம் பாயுற வயதில் பல மனிதர்களுடன் வேலைசெய்யும் இடங்களில் பழகவேண்டியுள்ளது. அதில் சிலர் அவர்களின் அழைப்பு நேரத்தில் விடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்., இப்ப சாவு என்பது வெளிச்சமான வாழ்வின் இன்னொரு இருண்ட பக்கம் போலவும் உயிர் வாழ்வது என்பது இரவும் பகலும் போல என்று அர்த்தமாக இருக்கு .

                                                     ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்த உயிர் அம்மாவின் கர்ப்பப்பையில் உருவாக்கி வெளியேறிப் பிறப்பதில் தொடங்குது ,அதன் பின் ஒவ்வொரு நாளும் பொழுதும் அதன் கலங்களின் வளர்ச்சி இன்னுமொரு உயிரை உருவாக்கிவிட்டு முடிவான ஒரு நாளின் இறப்புக்குத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது , யாருமே தப்ப முடியாத மிகக் கச்சிதமான வடிவமைப்பு அது என்று கையைப் பிசைந்துகொண்டு நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும் .



                                                நேற்று என்னோட சோசியல் ரேச்ற்றோறேண்டில் பலவருடம் வேலை செய்த உலா என்பவர் செத்துப் போனதுக்கு நினைவு கொள்ள மெழுகுத்திரிகள் ஏற்றிவைத்தோம் ,அவர் நினைவுகளைப் பதிய ஒரு நினைவுப் புத்தகமும் வைத்தோம் அதில நான் தமிழில் அவர் ஆத்மாசாந்தி அடையப் பிராத்தனை அது இது எண்டு ஒண்டும் எழுதவில்லை . சில வரிகள் நன்றியாகவும் நிலையாமை பற்றியும் எழுதி விட்டேன்.

                                                      சென்ற மாதம் உலா சுகவீனம் உற்று இருந்தார் என்று சொன்னார்கள். அதனால் சென்ற வருட டிசெம்பர் மாதத்தின் பின் வேலைக்கு வரவில்லை. அவர் அந்த சோசியல்ரேச்ற்றோரென்ட் சமூக உதவி நிறுவனத்தில் அதிகாரி. நான் அங்கே சமயலறையில் சராசரி குக் , ஆனாலும் மனிதர்களை உயர்த்தி வைக்கும் பொசிடிவ் எனெர்ஜி உள்ள நல்ல மனிதர், என்னோட நல்ல ஒட்டு.

                                                       அந்த இடத்தில பலவருடம் வேலை செய்துகொண்டு இருக்கும் ஒரே ஒரு இலங்கைத் தமிழ்க் குடிமகன் நான் தான்.  அந்த இடத்தில வேலை செய்த என்னோட அருமையான உயிர் நண்பி பெந்த பேரிட் சோல்பேர்க் என்ற அம்மணியும் மேலே போனா. சாவு வீதி வளைவு மூலையில் கை விரல்களில் நாட்களை எண்ணிக்கொண்டு போகும் வரும் முகத்தைப்பார்த்துத் தேடிக் காத்துக்கொண்டு குந்தி இருக்குது போல இருக்கும் சில நேரம் .

                                                           உலா இறந்தது எனக்குக் கொஞ்சம் தன்னும் கவலையாக இல்லை. அவருடைய காலத்தில் இருந்து அவர் அடுத்த பரிமாணத்துக்கு போய்விட்டார். வாழ்க்கையைப் பற்றி அவருடன் சேர்ந்து வேலை செய்த காலத்தில் கொஞ்சம் புரிந்து கொள்ள உதவியவர். அடுத்த மனிதருக்கு இறப்பு வருவது என்பதே உயிரோடு இருக்கும் போது நாங்கள் உயிருள்ள அடுத்த மனிதருக்கு செய்வதுக்கு எவளவோ நல்ல விசியங்கள் இருக்கு என்பதை நினைவுபடுத்துக்கு என்று நினைக்கிறேன்!





பெந்த பேரிட் சோல்பேர்க் Bente Beret Sølberg என்ற என்னுடைய ஒரு நல்ல நட்பு சில நாட்கள் முன், நோர்வேயில் இருந்து கோஸ்டோ ரிக்கோ என்ற நாட்டுக்கு பிராயணம் செய்த போது.அந்த நாட்டில் இருந்து ,நாற்பது மூ ன்று வயதில் , இந்த உலகத்திற்கு எதிர் பாராமல் விடை கொடுத்துவிட்டு , ஸ்பேஸ் டைம் இன் இன்னுமொரு பரிமாணதிற்குள் சென்ற ஒரு அவல சம்பவம் நடந்துள்ளது. 

                                                                    பெந்த பேரிட் சோல்பேர்க்கின் கதை முடிந்தாலும்,அந்தக் கதையின் 
தொடர்ச்சி ஏதோ ஒரு விதத்தில்அவாவின் நட்பில் இருந்த எல்லார் கதையிலும் தொடரும் போல உள்ளது அதுக்கு காரணம் அந்தப் பெண் எங்களோடு இருந்த காலத்தில் செய்த ஒவ்வொரு சின்ன சின்ன விசியங்களிலும் அன்பின் அடையாளத்தை நிறையவே ஆழமாக பதிந்து விட்டு சென்றது..

                                                                            நோர்வே நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள பிரேடிக்சாட் இடத்தில பிறந்த பெந்த, ஒஸ்லோவில் வேலை செய்யும் இடத்தில என்னோட நட்பாக எப்பவும் இருந்தா,இந்தியாவுக்கு பல முறை போய் முக்கியமா இந்தியாவின் இமாலயா மலை முழுவதும் சுற்றி, இந்தியாவை இதயத்தில் நேசித்ததால்.என்னை எப்பவும் நமஸ்தே எண்டு சொல்லி தான் வணக்கம் சொல்லுவா,

                                                                      இந்திய பயண அனுபவத்தை " Journey for my life time " எண்டு ஒரு புகைப்படத் தொகுப்பாக பேஸ் புக்கில் போட்டு இருந்தா. என்னோட கிட்டார் விடியோ கேட்டு முதல் முதல் உற்சாகம் தந்த ஒரே ஒரு நேர்வே இனப் பெண்மணி பெந்த பேரிட் சோல்பேர்க். எனக்கு ஒரு ஒலிப்பதிவு உபகரணமும் தன்னிடம் இருந்ததை தந்தா.

                                                               பல மாதங்களாக சந்திக்காத அவாவை,அண்மையில் சில வாரம் முன் எதிர் பாராமல் அவசரமா போய்க் கொண்டு இருந்த ஒரு இடத்தில சந்தித்தேன், என்னை இழுத்து வைத்து இருத்தி நிறைய விசியம் கதைத்தா. அந்த சம்பாஷனை முடிவில்

                                          " என்னை மறந்து விடுவியா "

                                                                       எண்டு கேட்டா ,நான் ஒண்டும் சொல்லவே இல்லை சிரிச்சுப்போட்டு போயிட்டேன்,அதுதான் அவா என்னோட பேசிய கடைசி வார்த்தை. இப்பொழுது கவலையாக இருக்கு " மறக்கவே மாட்டேன் " எண்டு வாயலா ஒரு பதில் அந்த நேரம் சொல்லி இருக்கலாம் எண்டு.

                                                                         நேற்று அவா இறந்த செய்தி கேள்விப்பட்டு ,அவாவின் பேஸ் புக் போய் பார்த்தபோது அதிர்ச்சியாக நோர்வே நாட்டின் ,கார்டமொன் விமான நிலையத்தில் இருந்த கோஸ்டோ ரிக்கோ நாட்டுக்கு போவதுக்கு முன்னர் போட்ட " My Journey Starts From Here " என்ற கடைசி போச்டிங்கோடு அந்த இதயம் நின்று விட்டது,

                                                                           பல ஆச்சரியமான சம்பவங்களில் இதுவும் ஒரு சம்பவம் போல இருக்கு, பாவம் பெந்த அந்த போஸ்டிங் எழுதும் போது தெரியாமலே போனது அவாவுக்கு தன்னோட இன்னுமொரு பயணம் தொடங்கப்போகும் சம்பவம் நடக்கப் போவது.கடைசியில் அவா பயணம் அடுத்த உலகத்துக்கு தொடக்கி விட்டது போய் ரெண்டாம் நாள் ஆள் போயிட்டா,,,

                                                                       பெந்த பேரிட் சோல்பேர்க் எல்லாரோடும் இலகுவில் பழக மாட்டா ,என்னோட ஒரு அதிசயமா ரெம்பவே நெருக்கமான நட்பாக இருப்பா,நான் சாப்பிடும் போது என்னோட இருந்து எப்பவும் இந்தியா பற்றிக் கதைத்து கதைத்து சாப்பிடுவா.

                                                                          நான் சில நேரம் இந்திய வகை சைவ உணவு சமைத்தால்,நான் முள்ளுக் கரண்டியால் சாப்பிட அவா கையால சாப்பிடுவா ,அப்படி சாப்பிட தனக்கு விருப்பம் எண்டு சொல்லுவா,

                                                                   பெந்த இளவயதில் நேர்ஸ்க்கு படித்தவா , உயர் குடி ,படித்த குடும்பதில் பிறந்தவா, இந்த வருட மே மாதம் , பல வருடங்களின் பின் தான் பிறந்த கிராமத்திட்கு சென்று நோர்வேயிய கலாச்சார உடை அணிந்து சகோதரியின் பிள்ளையின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டதாக மிகவும் சந்தோசமாகா சொன்னா. ,

                                                              அந்த படத்தை பேஸ் புக்கில் போட்டும் இருந்தா ,அவா சொந்த வாழ்க்கை பிரசினையில் பல கட்டங்களை சோகமாகக் கடந்தவா ,அதால பலமுறை வாழ்வின் விளிம்புவரை போய் உயிர் தப்பியவா ,எனக்கு எல்லா கதையும் சொல்லுவா,,அவாவின் எதிர் பாராத மரணத்தின் பிண்ணனியில் சில விசியங்கள் இருக்கு,....

                                                        பொதுவாக நேரடியாக எல்லாரோடும் பழகாத என்னோட வாழ்கையில் நிறைய மனிதர்களை குறுகிய காலத்தில் வெறுப்பு ஏற்றிய சம்பவங்களை சந்தித்து இருக்கிறேன், நிறைய மனிதர்கள் அனாவசிய அலுப்பு கொடுத்து வெறுப்பு ஏற்றி இருந்த கொஞ்ச நின்மதியையும் இழக்க வைத்திருக்குறார்கள்.

                                                                   பல வருடம் நட்பில் இருந்த இந்த அன்பான,அடக்கமான பெண் ஒரு நாள் தன்னும் நான் எவளவு குழப்பமா கதைத்தாலும், சிரித்து சிரித்து அமைதியா பதில் சொல்லும் ஒரு நல்ல ஜீவன் . சில மனிதர்கள் பதிந்து செல்லும் மிக அழகான நினைவுகளை அதிகம் கஷ்டப்பட்டும் மறக்கடிக்க நினைத்தாலும் முடியாது , அதை மறுத்தால் உயிர் வாழ்தலுக்கு அர்த்தமேயிருப்பதில்லை.!



                                                                           அந்தப்  பிரசன்னத்தை நிறுத்தி தொடரிருப்பைத்  தொலைத்துவிட்டு  மூச்சிழுத்து விழுங்குகிற  ஆத்மார்த்த ஏமாற்றம் ஒரு வெறுமைதான்  ! அடுத்தகட்டத்தைத்  தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இதெல்லாம்  வெறும்  சந்திப்புப் போலிருக்கும் , நீளத்தனிமை  நினைவில் இடறி விழும் ஒரு மென்மையான பொழுது  சுடர்மனதில் நீர்க்குமிழிகளாகுகின்றது  நம்மை அதிகம் நெருங்கிப் பாதித்துவிட்டுச் சென்றவர்களின் பிரிவு !


2015 ஒஸ்லோ நகரம்   நோர்வே 




*

மேலே நடந்தது புலம்பெயர் நாடுகளில் வாழுபவர்களின் அன்றாட வாழ்வியல்  அவஸ்தை.. இனி நம்முடைய மனிதர்களின் மரணங்கள் எப்படியான நெருக்குவாரத்தை தருகிறது என்று பார்த்தால். அது இன்னொருவிதமான ணைபவம் போலிருக்கு. " அதெல்லாம் ஒரு காலத்தில் எங்கட ஊரில ,, "  என்று இன்றைக்கு பலவருடங்கள் முன்னதாக நடந்த மரண வீடுகளில் உறவுமுறைகள் எப்படி ஓவென்று சொல்லி அழுது கொண்டாடினோம் என்று பார்க்க ஒருவிதமான மலைப்பாக இருக்கு.



                                              மரணஅறிவித்தல்கள் ஒரு காலத்தில் அதிகாலையில் எழும்பினால் சாவுமேளம் அடிக்கும் அதை வைத்து ஊரில யாருக்கு விசா கிடைத்தது என்று கதை வழியில் காற்றின்போக்கில் அறியமுடிந்த ஒரு அலாதியான காலத்தைத் தொலைத்துவிட்டு இப்ப இன்றைக்கு இன்டர்நெட் பதிவுகளில் அதைப் பார்க்கவேண்டி இருக்கு. கடல் கடந்த புலம்பெயர்வுகள் தந்த முக்கிய அவலத்தில் அதுவும் ஒன்று.



                                                              முன்னம் எல்லாம் உடன்பிறப்புக்கள் உறவினர்கள் தொலைபேசியில் சொல்லுவார்கள் . இன்றைக்கு அதுவும் அரிதாகிவிட்டது. துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடும் அவசர உலகத்தில் அவரவர்களுக்கு ஆயிரம் சோலிகள் குருவி தலைக்குமேலே பனங்காய் போல இருக்கலாம். அல்லது இதெல்லாம் இப்ப முக்கியமா என்ற அலட்சியமாயும் இருக்கலாம்..



                                                           அந்த ஊருக்கு ஒருநாள் திரும்பி வருவேன் என்று சொல்லிவந்தவர்களில் பலர் அது நடந்தேற முதலே இந்த உலகத்தை விட்டு அகாலமாக அந்நியநாடுகளில் விடைபெறும் சம்பவங்கள் நிறையவே நடக்குது. அதிலும் பலர் பொறுப்புகளோடு இருக்கும் நடுத்தர வயதில் பலியாவது இன்னும் சோகமாகவே இருக்கிறது.

                                                          ஊர்கூடி உறவுமுறை சொல்லி உரிமையோடு அழுது குளறி ஒப்பாரி வைச்சு பாடை கட்டிப் பந்தம் கொளுத்திப் பிடித்து நிலபாவாடை விரித்து அமர்களமாக மரணத்தைக் கொண்டாடிய ஒரு தொன்மையான வாழ்வியல் பூர்வீக அடையாளங்களுடன் வாழ்ந்த சமுதாயம் இன்றைக்கு " R.I.P " என்ற மூன்று ஆங்கில வார்தைக்களைப் போகிறபோக்கில் தட்டிவிட்டுப் போகும் சுருக்கமாகி முடிந்துவிடுகிறது.


                                                              நினைவுகளின் வழித்தடத்தில் என் பெற்றோர்களின் தலைமுறை இருந்தது. அவர்கள் எங்கே இருப்பார்கள், எப்படி இருப்பார்கள் என்பது போன்ற ரத்த உறவுத்தொடர்புகள் நிறையவே அறுந்துபோனாலும் யாரோ ஒருவர் போடும் மரணஅறிவித்தல் பல விடயங்களைத் தோண்டி எடுக்கும்போது அந்த இழப்பின் ஈடுசெய்ய முடியாத வலி தெரிகிறது.




                                                        தலைமுறைகளோடு நேசமாக நெருக்கமாக உறவாட முடியாமல் போவதே உலகம் எங்கும் சிதறி வாழும் இலங்கைத் தமிழர்களின் தேற்றமுடியாத சோகம். அதுக்கு தனிப்படவும் பொதுவாகவும் நிறைய அந்நியப்படும் காரணங்கள் அவர்கள் அவர்கள் வாழும் நாட்டில்இருக்கு. வேறுவழி இல்லை அதிலிருந்து தப்ப.




                                                          குஞ்சியப்பு, அம்மாச்சி, சித்தப்பு, பெரியையா, ஆளவந்தான்தாத்தா,,அன்னலட்சுமிமிப் பாட்டி போன்ற ஆலமரங்கள்சரிந்து விழும்போது அருகிருந்து ஆசுவாசித்து வழியனுப்பிவைத்த சம்பவங்கள் எல்லாமே இப்போது வெறும் கதையும் பழங் கதையும் ஆகிப்போனது ஒரு இனத்தின் வரலாற்றுத் தோல்வி.




                                                       இப்பிடியே நாயைப் பிடி பிச்சை வேண்டாம் என்று இன்னும் எவளவு காலம் தான் ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு போல ஓடிக்கொண்டிருக்கப்போறோம் ? அதுவும் எந்தத் திசையில் ஒடப்போறோம் ?, இந்த அர்த்தமில்லா ஓட்டம் எங்கேதான் கொண்டுபோய் விடப்போகுது ? போன்ற ஆதாரமான கேள்விகளுக்கு விடைகளும் இல்லை.




                                                             இணையவலைகளில் மரணஅறிவித்தல் பதிவுகள் போடும்போது அதில இருந்து ஓரளவு அறியமுடிகிறது உலகம் முழுவதும் பரந்துவாழும் குடும்ப உறவுகளின் தொடர்ச்சிபற்றிய தகவல்கள். இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை கொடுக்கவேண்டி உள்ளது. இது கொஞ்சம் மனத்தைக் கனமாக்கும் விலை போலவே இருக்கு. !


2015 ஒஸ்லோ நகரம்   நோர்வே









Saturday, 1 December 2018

பெயரிடப்படாத நாள் !

எழுதுவது என்பது அனுபவங்களை நாலு பக்கமும் அதிகரிக்க அதிகரிக்க வார்த்தைகளைச் சுருக்கும் வித்தையைக் கற்றுத்தருகிறது. இருந்தாலும் நாள் தவறாமல் எப்போதுமே எழுதிக்கொண்டிருக்க முடிவதில்லை . சிலசமயம் பேசுபொருள் கிடைக்காது, அது  கிடைத்தாலும் கவிதைமொழி முன்வராது . அல்லது கணப்பொழுதில் உள்ளிறங்க  ரெண்டுமே பொருந்திவராத தருணமாக இருக்கும். அப்படி இல்லையென்று வலிந்து எழுதுவதென்பது  வாய்க்குள்ளே விரலை விட்டு வாந்தி எடுப்பதுபோன்ற அவஸ்தை !
 
                                                                      முகநூலில்" On this day " என்று ஒரு வாய்ப்பு அண்மைக்காலமாக என்னைப்போன்ற அரை அவியல்களுக்காகவே உருவாகி இருப்பது போல வந்துள்ளது. அதை " Each day, we'll show you all of your stories from the same date in different years " இப்படிச் சொல்லுது அதன் விவரணம். அதில பல நன்மைகள் இருக்கு.அப்பப்ப பிசதிப்பிசத்தி ஒரு கவிதை, சில நேரம் இரண்டு கவிதை கைவிடப்பட்ட மண்சுவரில வறட்டிதட்டி எறிஞ்ச மாதிரி எழுதிக்கொண்டு இருப்பதால் அவைகளை மீன்டும் ஒருமுறை தூசுதட்டிப் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. பலருக்கும் அப்படி இருக்கலாம்.


                                                                                    அப்படிப் பார்க்கும்போது சிலநேரம்  எவளவு முட்டாள்த்தனமாக எழுதி இருக்கிறேன் என்று என்னையே மீளாய்வு செய்யும் சந்தர்ப்பம் வளர்சியின் பாதையில் கடந்துவந்த படிக்கற்கள் பற்றிய ஒரு படிப்பினையை வெளிப்படுத்தும் போதெல்லாம் எழுதிக்கொளுத்திப் போடுவதில் உள்ள தயக்கத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டு போகமுடிகிறது .


                                                                         இப்ப உள்ள எழுத்து அனுபவத்தில்அவைகளை வாசிக்கும்போது , அவசரத்தில் எழுதிய போலவும்,ஆழமில்லாதது போலவும்,சிலது குப்பை போலவும்,சிலது குப்பைக்குள் குண்டுமணி போலவும் உள்ளது. அதனால் முடிந்தளவு வாசிக்க அர்த்தம் கொடுத்து உருப்படியாக வரக்கூடியவைகளை கொஞ்சம் வெட்டிக்கொத்தி ஏறக்குறைய கவிதைமொழிக்குள் அடக்கி அதைத் தரமாகக் கொண்டுவருவது ஒரு அலாதியான ஆனந்தம்.
 
                                                                           கவிதை நேசிக்கும் நண்பர்கள், நண்பிகள் வாசிப்பார்கள் என்பதாலும் , ஒரு தொகுப்பாகக் கொண்டுவருவத்துக்கு ஏதுவாகவும்   அதையெல்லாம்   இன்னொரு முறை என் " மின்னெறிஞ்சவெளி " வலையில் ஏற்றிவைத்து   என் பறையை நானே தோளில கொழுவி அடிச்சு சுழறவிடுவது. அது முன்னரே வாசித்தவர்களுக்கு  இடைஞ்சல் போல இருக்கும். தயவுசெய்து என்னையும், என் கவிதைகளையும் மன்னித்துக்கொள்ளுங்கள் அப்படி உங்களுக்கு தொந்தரவாக இருந்தால்.


                                                                              எல்லாரும் எழுதுறார்கள் அதனால் தண்ணி கறுத்த நேரம் தவளைச் சத்தம் வந்த மாதிரி போனாப்போகுது என்று பலரோட பொறுமையைச் சோதித்து எழுதத்தொடங்கினேன் .அதைப் பல இலக்கிய ரசனை விசியங்கள் தெரிந்தவர்களே வரவேற்று உற்சாகப்படுத்தினார்கள்.அது என்னை அதிகம் கவரவில்லை ஆனால் அழகான இதயரானிகள் ஆகோ ஓகோ எண்டு பப்பாவில் ஏற்றினார்கள். அதால இதைவிட வேற என்ன அங்கீகாரம் வேண்டுமென்று எழுதுறேன்


                                                                                       சுவீடன் என்ற  வடதுருவக் குளிர்நாட்டில்  குந்தியிருந்து  குப்பை கொட்டும் என் அன்றாட வாழ்வியல் மொழி "சிவான்ஸ்க்கா " என்ற சுவிடீஷ். ஒரு கிறுக்குப்பிடிச்ச அந்நியமொழி . என் நிலைமையில் முகநூலில் எழுதிக் கிழிப்பதால் மட்டுமே எனக்குத் தமிழ் என்ற தாய்பாலோடு சுரந்து வந்த மொழியை என்னிடமிருந்தே அழிந்துபோவதைத் தடுக்கமுடிகிறது.




*
அச்சுறுத்தலிலும்
மரணத்தோடு
விளையாடுவது போல்
அப்போதெல்லாம்
அவர்களின்

எண்ணங்கள்
வீரதீரமாகவேயிருந்தன,
மீசை தாடியென்று
அவர்கள்
முகத்தைக் கூட
சரியாக வைத்திருக்கவில்லை .
அதனாலென்ன ?
எல்லாம் கடந்த
அவர்கள் எல்லோருக்குமே
ஒரேமாதிரியான முகங்கள்..
அவை
இறுக்கமானவை.
கொடுங்கனவை ஏந்தியவை.
உறைந்த மௌனத்தை,
நதிகளின் சிரிப்பொலியை
கடலின் புன்னகையைப் போல !



*


இறந்து போயிருந்தது
பின்மாலை நிழல் நகரம் ,
நகராமல் நின்ற
மலர்ச்சோலை நடைபாதையில்
அக்கறை இல்லாமல்...
ஒருவரை ஒருவர் பார்க்காமல்
மௌனமாகக் கடந்துபோகிறார்கள்
அவசர மனிதர்கள் !
அவர்களுக்குப்
பூந்தளிர் மரங்களின்
கிளை நுனிகளில்
மந்திர இலைகளை அசைத்து
சைகை மொழியில்
என்னவோ
எல்லாம்தெரிந்தமாதிரி
புதிர்க்கதைகள் சொல்லிக்கொண்டிருக்கு
ஊமைக்காற்று !




*

அப்போது
தொலைதூர வெளிச்சங்கள்
கொஞ்சம்தான் எஞ்சி இருந்தன ,
ஒன்றுதிரண்ட
பிரசவப் பெறுமாதமுகில்கள் ...

மீதமிருந்த வெள்ளை முகில்களைத்
தவறவிட்டிருக்கலாம் ,
காரையைக்காணமுடியாதவாறு
மறைந்திருக்கும்
தென்மேற்குத் தரவைக்கடலில்
அலைகள் தலைகளை மோதியடித்து
ஒதுங்கியபடியிருந்தன .
எந்தவித அசுமாத்தமுமில்லாமல்
உறக்கத்துக்கு அருகே போய்க்கொண்டிருந்தது
திசையில்லாத தனியிரவு,
இப்போது
யாருக்கு யார் வழி சொல்வது?
யாருக்கோ
கண் சிமிட்டியபடியிருக்கும்
நட்சத்திரங்களுக்குத்தான்
எங்கே போகிறோமென்று
தெரிந்திருக்கலாம் !




*

சேலையில் மடிப்புகளை
உதறி விட்டுக் கொண்டிருந்தாள்.
கோடைகால
நீராம்பல் மலர்களில்
ஊடுபரவுவது போலவே

மௌனமாகக் கடந்து போன
வாசனையை
யாருக்கும் தெரியாமல்
ஒளித்து வைத்திருந்தேன் .
சொல்லப்போனால் என் கனவே அதுதான்.
ஆனாலுமென்ன
யாரோ ஒருவரின்
புல்லாங்குழலைத் திருடியெடுத்து
பிரியமான ராகமொன்றில்
சம்பந்தமேயில்லாத
எல்லாருக்குமதை
விபரித்துச் சொல்லி விட்டது
காற்று !




*


யுத்தமொன்றில்
உயிரோடிருந்தலென்பதை
என்னவென்று
நீங்கள் அறிவீர்களா ?
ஒரே ஒரு காவலரணில்

பதுங்கியிருந்தார்கள் 
அத்தனை பெரிய பனம்தோப்பு
ஒருசில தென்னைமரங்கள் ,
புழக்கமில்லாத மயானம்
துாசிகளால் மூச்சிழுக்கும் பற்றைகள் .
பயத்தில் உறைந்து கிடந்த
கிராமத்து கோவில் ,
பிணமாவதற்காகத் தன்னும்
மனிதர்கள் யாருமில்லை ,
எறிகணைகள்
விழும் சத்தம்
கேட்டுக்கொண்டேயிருந்ததில்
பூமியே அதிர்ந்தது.
ஒவ்வொரு வெடிக்கும்
இருக்கிறோமோ
இல்லையோ என்று
ஒருவரையொருவர்
தொட்டுப்பார்த்துத்தான்
உறுதிப்படுத்திக்கொண்டார்கள் !



*

திரை போல இருள்
நெருங்குகிறது
ஏரியின் கரையோரம் ,
மின்மினி வெளிச்சங்கள்
முளைக்கத்தொடங்குகின்றன ,

குடைக் காளான்கள் போன்ற
கூடாரங்களில்
வித விதமான இசைக் கருவிகளோடு
மனிதர்கள் ,
இலைகளின் நுனிகளை
மோகத்தோடு தொடுகிறது
குளிர் காற்று ,
அவர்கள்
காய்ந்த மரங்களைப் பற்றவைத்து
ஆடினார்கள்,
பாடினார்கள்,
போதையேற்றும் நினைவுகளை
தென்றலில் ஏற்றிவைத்து
மீட்டுவதுக்கு
என்கையில்
ஒரு கின்னரமில்லையேயென்று
ஏக்கமாக இருந்தது.!




*


மெல்லிய விரிசல்களை
நிரப்பமுடியாத
பகல்க்கனவு,
வாசனையிலும் 
வெவ்வேறு பாவனைகாட்டும்
கார்த்திகைக் குளிர்,


மொட்டை மரங்களைக்
கையகல விரிக்கும்
அமைதிப் பூங்கா ,

சில்லென்ற
நிலக்காட்சிகளில்
பசுமையின் போதாமை,

அசைவின்றிக் கிடக்கும்
இசைவுக்கேற்ப
நடைத் தெருக்கள் ,
பரபரப்பான வாழ்க்கையைக்
கடத்திச்செல்லும்
அவசர மனிதர்கள்,
கைகளை உதறியபடி
தெளிவற்ற
காலப்பயணம் ,
இத்தனை வெளிப்பாட்டிலும்
பெரும்பாலான தருணங்கள்
தன்னிச்சையான
மௌனத்தையே
நிரப்பிக்கொண்டிருக்கின்றன.!

*

நிறைவில்லா
ஒழுங்குமுறை
ஒவ்வொரு கணமும்
முகம் மாற்றிவைக்கிறது ,
இன்று
நிகழ்வுகளேதுமில்லா
பெயரிடப்படாத நாள் !
குளிர்காலையை
ஆதரிப்பதுபோலவே
கொஞ்சம் வெய்யில் ,
பகலெல்லாம்
நடுநிலைமையைப்
புறந்தள்ளும்
வெளிச்ச இருட்டின்
சாம்பல்க் கலவை ,
வருவது தெரியாமல்
ஆச்சரியப்படுத்துகிறது
முன்மாலைப் பின்னிருட்டு ,
பின்னிறுதி
வருடப்பருவங்கள்
அதற்குரித்தான
அணுக்கமானமுறையில்
தன் தரப்பு
பிறர் தரப்பு பாகுபாடின்றி
நேர்கோடுகளை நிராகரிக்கின்றன !

*

மின்சாரக்கம்பி
உட்கார்ந்த வாக்கில்
ஒரு குருவி
அதன் பெயர் ?
தெரியாது !
என்னை வேடிக்கை பார்க்குது
ரெண்டுபேருக்கும்
விரிவான பின்புலம்
திரைபோடும் குளிர் !
அப்பப்ப
" கிலீர் " என்று சத்தம் எழுப்புகிறது
மிகத்தெளிவாக,
அலங்காரமில்லா
அதன் பாடல்
சொற்களை நிறைக்கவில்லை ,
தர்க்கபூர்வமாகக்
காலத்தையும் அடுக்கவில்லை ,
இலையுதிர் பருவத்தைச்
சபிக்கவில்லை ,
பறவைகளின்
பரிந்துரைகள் சிக்கலானவை !
சிலசமயம்
ஒலிச் சுட்டுதல்கள்
மேற்கோள்களாக இருக்கலாம் !
எல்லாவற்றுக்கும் மேலாக
நம்
தனிமை
எண்ணங்களுக்கு
ஏற்றதாகவேயிருந்தது !

*

ஒரு நாளிலே 
பேசுபொருள் கிடைக்காத
தென்றல் வருடிப்போகும்
கருக்கல் ,

மூழ்கித் திளைக்க
மூச்சுச்  திணறவைக்கும்
கவிதைமொழி ,

கணப்பொழுதில் உள்ளிறங்க 
ரெண்டுமே
பொருந்திவராத தருணம்!
கற்பனையில்
இணைந்து நடந்தபடி 

நெஞ்சம் தரும்
 ஒருசில 
வார்த்தைகளையும்,
பிரமையைக்

கையில் பிடித்தபடி
ஒருசில
எழுத்துக்களையும் ,
சிந்தைவெளி
உலாப்போகவிட்டு
நிஜத்துக்கு வெளிவருகையில்
நடைபாதையில்
கலைத்துப்போட்டபடி கிடந்தது
ஒரு கவிதை !






Tuesday, 13 November 2018

பிஞ்சில்ப் பழுத்த வெய்யில் !


 ஒரு அமைதியான இடத்தில மரத்துப் போய்விட்ட மனதின் ரம்மியமான அலைவரிசையை ஒருமுறை  மவுனத்துக்கு சமாந்தரமாகப் பயணிக்கவைத்து , காலம் என்பதை  வாழ்க்கையிலிருந்து  ஒதுக்கி வைத்துவிட்டு  எவ்வளவுநேரம் நிம்மதியாக இருந்து நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனிக்கமுடிகிறது  என்றால் கொஞ்சம்  " எதையுமே  பிடிக்க முடியாமல்,  விட்டத்தை சுட்டிக் காட்டி பெருமூச்சு விட்டுச்   சமாளிக்கும் "   களேபரமான பதில்தான் வருகிறது.  
                 
                                               ஏனென்றால் பலசமயம் கவிதை எழுத்துவத்துக்கான உயிரோட்டமான சில அம்சங்கள் நம்மைச் சுற்றி நடக்கும், என்னதான் முக்கியத்துவம் கொடுக்கும்  கட்பனைப்புனைவுகளை நீட்டி வைத்தாலும் வாழ்வியலில் உள்ள ஒரு காட்சியை ஜோசித்து எழுதமுடியாது , அது  இதயத்திலிருந்து வந்தது போலிருக்காது .


                                                                   அதனால  ஒருநாள்  மெல்லிய குளிரிலும் ஸ்டோக்ஹோலாம் நகரத்தில் ஒரு  சதுக்கத்தில் ரோமேனிய ஜிப்ஸி நாடோடி ஒருவர் நின்று கொண்டு   வயலின் வாசித்துக் கொண்டிருந்தார் . கொஞ்சநேரம் இருந்துபார்த்தேன் . சிலர்  போகிற போக்கில் சில்லறை வீசிவிட்டுப் போகிறார்கள். அவரின்  இசை க்ளாசிக்கல்  அமர்க்களம்  . ஆனால் நின்று கவனிக்கவோ, கேட்டு ரசிக்கவோ  யாருக்கும் நேரமில்லை.                                                                                          
                                                                                  அவசரத்தில் பரபரத்துக் கொண்டிருக்கும்  எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத சூழ்நிலையில்  ,  மனிதர்கள் கங்காருபோல  தாண்டிச் செல்கிறார்கள். சுதேசிய  வெள்ளையர்கள், வந்தேறிய  கறுப்பர்கள். நாடுதாண்டிய  ஆசியர்கள். கண்களை அகலவிரித்தபடி  சுற்றுலாப்பயணிகள்,உட்சாக   இளைஞர்கள், வயதான  முதியவர்கள். இன, நிற, வயது வித்தியாசமில்லாமல் அத்தனை பேரும் ஒரு இடத்தைக் கடந்தபடி   புகுந்து எதுவுமே நடக்காததுபோல், எதுவுமே கேட்காதது போல் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.



                                            ஆண்ட்ராய்டு  வைத்திருக்கும் இளையவர்கள் இரண்டு  காதிலும் இரைச்சலை அடைத்துக்கொண்டு நடக்கிறார்கள்;  செயற்கயான  ஓசைகளில் கரைந்து நிஜத்தைப்  புறக்கணிக்கிறார்கள்.
விசிஷ்யங்களை   நின்று கவனிக்க விரும்பிய குழந்தைகள் மட்டும்தான் அலாதியான அனுபவம் . அவர்களை அவசரப் பெற்றோர்கள் தரதரவென்று இழுத்துப் போகிறார்கள் , அவர்கள் ஏதோவொரு அதிசயத்தைத்   திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போகின்றனர் .


                                                        இந்த நடைமுறை  அனுபவம்  எழுப்பும் முக்கியமான கேள்வி, அனுபவித்தல்  என்றால் என்ன ? அதைக்   கவிதையாகவோ, கதையாகவோ, பதிவாகவோ .  மொழிபெயர்தல்  என்றால் என்ன ? அது  அனுபவித்து, அளவிடக் கூடியதா, அல்லது உள்வாங்கப்படும்  அந்த நேரத்து மன நிலையின் பிரதிபலிப்புதானா ?
                                                                       
                                                      கொஞ்சம் ஆழமாகவே சொல்வதென்றால்   ஒரு மேலை நாட்டின்     நவீன நகர வாழ்க்கையின் அவசரமும் அலட்சியமும் அபத்தமும் கலந்த சரியான கலவைக்குள் சமாளிக்க முயன்று  மோதி மோதி விலகுகிற ஒரு கவிதையைக் கண்டுபிடித்து வெளியே எடுப்பத்துக்கு நிறையவே சாமர்த்தியம் தேவையாக இருக்கு.




எதிர்பார்ப்புகளற்ற
பிரமிப்புகளும்,
ஒழுங்கிலிருந்து விலகும்
பரவச உணர்ச்சிகளும்
மர்மமாகவே போய்க்கழிந்துவிட்டது !

இத்தனையாண்டுகளில்
திரும்பிப்பார்க்க
மதிப்பீடுகளேதுமின்றி
இயல்பாகவே வாழ்க்கையுமிருந்திருக்கு !


இப்போதெல்லாம்
இயலாமை திகட்டும்
சொற்கள் புதைந்து கிடக்கின்ற
ஆதர்சமொழியொன்றின்
பாவனைகள் தொடங்கிவிட
இன்றைய மதிப்பீட்டில்
பிறப்பை அடித்தளமாகக் கொண்ட
தினந்தினம்
காலாவதியாகிக்கொண்டிருக்கலாம் !


ஆனால்
வேறோர் அனுபவ மதிப்பில்
வாழ்நாளின் வயதென்பதும்
முக்கியமானதாகத்தான் தெரிகிறது !



*





வழிந்தோடும் ஆற்றுநீரில்
படிந்திருக்கும் பாசியைப்போல
கொண்டாடா  குறையாத
பெருநினைவுகளை மீட்டெடுக்கும்
ஞாபகங்கள்
கண்களிண் நீரோடை !

அதில்
ஒரு கூழாங்கல்லை
அலையெழுப்ப விசிறி எறியும்போது
சிலநொடிகள் வானவில்லை
வேப்பமரத்தின்
குளிர்மையான மூச்சுக்காற்றை
மீண்டுமொரு மழையை
கவர்ந்துசெல்லும்
செண்பகப்பூ வாசத்தை
சட்டெனக் கண்டெடுக்கலாம் !


*



பின்நிழலாக தொடர்ந்து
பேரன்பை
மனதாரத் தூக்கிக்
கொண்டாட வைத்த
உரையாடல்களுக்கெல்லாம்
என்ன நடந்தது ?


தலைமுறைகள் முதிர்ந்த
காலகட்டமொன்றை
நிர்மூலமாக்குகிறதுக்கென்றே
தூரமாகிப்போன
காலம் காத்திருக்குதா ?


சந்திப்புக்களின் இடைவெளிகள்
நீண்டதாயிருப்பதென்னவோ உண்மைதான் !
ஆனாலும்
பிரிக்கக்கூடாத உறவின்
அத்தனை பெருமிதங்களையும்
கவிழ்த்து
கேள்வி கேட்கிறதுபோல
அவமானப்படவைக்கிறது
சடுதியில் முறித்துக்கொள்ளும்
மவுனம் !


*



மல்லாந்து கிடந்தவாறு
பின்தங்கிய
நட்சத்திரங்களை
ஒன்றுவிடாமல் எண்ணுவது ,
அவ்வப்போது
தொடர்வழி வாகனங்கள்
வேகமெடுக்கும் போது
உதறிக்கொள்வது ,
பக்கங்களில் வழிந்து
ஈரத்தரையில் கிடந்தது நெளியும்
மழைத்தண்ணி ,
இரவுகள்
அலைவரிசைகளை
மாற்றிவைத்தபடி
எல்லாவற்றையும் இயக்குகிறது,
ஒரு காரணமுமின்றி
அன்பளிப்பாகக் கிடைத்தது போல
தினம்தினம்
விடியும்போதெல்லாம்
எப்படி இருந்ததோ
அப்படியே !
ஒரு வித்தியாசமும் இல்லை. !


*

வாழ்வெனும் பெருநதி
நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதில் ஒரு துளி.
இன்று போலிருக்கிறது
மற்றொரு துளி

நாளை போலிருக்கலாம்
“அப்போது ” எனும் விழிப்பில்
இறந்த காலங்களின் நிகழ்வுகள்,
அவை
உண்மையில் நடந்ததா ?
அல்லது
நாம் கண்ட கனவா?
யாருக்குத் தெரியும்?


*

வாடிக்கையாகவே
அதிர்வுணர
நன்றாகவே தெரிந்துவைத்திருக்கும்
அனுபவம்,
பேச்சுவாக்கில்.

வேடிக்கைக்காக ஆரம்பித்து
அழுத்தமாக
உபதேசங்களின்றி
சுயபுத்தியில் தேர்ந்தெடுக்கும்
பொறுமை ,
அவரவருக்குரிய
நீள்வட்டப்பாதையை ஏற்றுக் கொண்டு
இடராக
எதிர்ப்படுவதையெல்லாம்
தவிர்ப்பதபடியே
நமக்குள்
தகவலைப் பரிமாறிக் கொள்கின்ற
நம்மை
உங்களுக்கு
அவ்வளவாகத் தெரிந்திருக்க
நியாயமில்லை !


*

ஆழத்துக்குள் இறங்கி
வைரம்பாய்ந்த 
 மனதை
அசைத்துத் தங்கி விடுகிற
ஒரு 

போதிமர
தரிசனத்தைச் சொல்லி
மஞ்சள்வெளி நெடுகிலும்
சுள்ளிகள் போட்டுத் தீவைத்து
அத்தனை இயல்பாய்
அத்தனை இயற்கையாய்
குளிர் காய்ந்துகொண்டிருக்கிறது

பிஞ்சில்ப் பழுத்த
வெய்யில் !


*


ஒரு
மிகப்பெரிய மாற்றத்தின்
ஆரம்பப்புள்ளியென்று
எதுவுமில்லை !
முழுமையான மனத்திருப்தி...

களிமண் பொம்மையாகியிருக்கும்
இன்றைக்கெல்லாம்
சுவாரசியங்களும்
விட்ட குறை
தொட்ட குறையாகப்
பாதிதூரம்தான் கடந்திருக்கிறது !
புரிந்துணர்வு சமயங்களில்
நமக்குளே
ஒருவரையொருவர் தேற்றி
முன்னகர்ந்திருக்கிற
இத்தனை வருடங்களில்
வாழ்க்கையோடு
எப்போதுமில்லாதவாறு
ஒப்புமை செய்துகொண்டேயிருப்பது
சலிப்புத்தருகிறது!


*

லயிப்போடு ஈடுபடும்
நகர்விலிருந்து
எத்தனை மாற்றங்களைக்
கடந்து வந்திருக்கும்
ஒரு இசைக்குறிப்பு ?


ராகங்களில்
கனமாக சுரங்களிருக்கும்போது
அடர் காடுகளில்
அபத்தமான தாளநடையை
எப்படித் தேர்வுசெய்கிறது
ஒரு புல்லாங்குழல் ?


ஒழுங்கமைப்பில்
சிதறல்கள் இருந்தாலும்
ஒரு
இளமூங்கிலொன்றின்
சிறு முனகல்களையும்
கேட்கக்கிடைக்கும்
ஆலாபனையாக்கிவிடுகிறது
காற்றின் குரல் !


*

திட்டமிடப்படாத
பயணங்கள்
கிளைத்தெடுத்ததில்
எவைகளை ஸ்வீகரித்தேன் ?
விளங்காத விஷயம்தான்!

ஒவ்வொரு பேருந்திலும்
தலைக்குமேலே
கரகரக்கும் சப்தங்கள்,
ஒவ்வொரு புகையிரதத்திலும்
உள்நோக்கி நுழையும்
ஜன்னலோரத் தெறிப்புகள்,
ஒரு நிகழ்வில்
இரவாகட்டும்,
பகலாகட்டும்
பழகிப்போன
மழையிருட்டுகளே
துண்டுக்காட்சிகளாகக்
கசிந்து கொண்டேயிருக்கிறன !


*

சமயங்களில்
தீர்மானிக்கமுடியாத
விபரீதமான முடிவைத் தேடிக்கொள்வது
எனக்குள் துருவும் !
பின்தொடர்ந்து 

அதற்குத் தகுந்தாற் போல்
அவளாகவே
எதிர்வினை செய்வாள்
அது முழுதும் உண்மையா?
முடியிற காரியமா ?
எனக்குத் தெரியாது. !
ஒரு முறை
“என் இறுதிக்கணம் இதுவாகவிருக்குமா ?” என்று
இதயத்தை மூடிவிடுவதுபோல
நினைத்துக் கொண்டே
அந்தரத்தில் அமர்ந்திருந்தேன்.
அவளோ
முகத்தை உற்று நோக்கி
“அப்படியெல்லாம் நடக்காது ” என்றாள் !
நினைத்த நேரத்தில்
என்னைப் படித்தாளா
அல்லது
நினைத்த இடத்தில
என் எண்ணத்தைப் படித்தாளா ?
அதுவுமெனக்குத் தெரியாது !


*

அவகாசமேயின்றி
சந்தித்தவர்கள் ,
இன்னும் சந்திக்காதவர்கள்
நாளைக்கும் நிலைக்கிறவர்கள்
பேரமைப்பில்

அனுபவத்தின் சுவடுகளை சுமக்கிற
உறவாடுதல் என்பது
மொத்தத்தின் ஒரு இயல்பு
அது
நிலப்பரப்பில் புழுதிமண்டி
அமைதியாய்க் கிடக்கிறது.
உணர்வு கவிந்திருக்கிற
அதனுள்ளும்
ஏதோவொரு அளவுக்குதான்
மழை பெய்கின்றது
ஏதோவொரு அளவுதான்
மண்ணைத் தடயமாக்குக்கிறது
ஏதோவொரு அளவுதான்
நிலம் நனைகிறது
ஏதோ ஒரு அளவுதான்
அன்பும் கிட்டுகிறது.!


*

நீரோட்டத்தில்
இறகுகள் உதிர்ந்து விழுந்த
மஞ்சள் இலைகளை
படபடத்தபடியான பயத்தில்
சரிகைக் கறைபோல மிதக்கவிடுகின்றது

நீல நதி !


வெற்றுச் சமாதானங்கள்
தேய்ந்து விடுகின்ற
பாய்ச்சலுடன்
அலைமேல் விழுந்து மோதி 
திடீரென அந்நியப்பட்டு
மூச்சுத் திணறல்களுக்கு நடுவே,
நெருங்கி
 பின்பறந்து அலைந்து 
 இலைகளைக்
கையளவில் வாரியணைத்து
கிடைத்ததை பற்றிப்
பின் உதறி விலகிக்கொண்டிருக்கிறது
நீளக் கரை .!








*

நீங்கள் தான்,
இன்றைய நீங்களேதான்
ஒவ்வொரு
இற்றை நிமிடத்திலும்
நினைவுக்காட்டின் மாமழையில் ...

அன்புள்ளம் சிந்திய கண்ணீரையாவது
தடம்புரளும் கன்னங்களில்
வழிந்தோடிவிடவிடாமல்
மறுபடியும் மறுபடியும்
வயதான பின்னொரு நாளைக்காக
தேடியெடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.!
ஏனென்றால்
புத்திப் பிரஞ்ஞையின்
நிழலையே நீர்வாணமாக்கி
அத்துமீறல் செய்தபடி
தன்
கோரமுகத்தைப் பதிவுசெய்ய
உள்நுழைந்துவிடலாம்
நினைவிழப்பு !


*






Friday, 2 November 2018

ஸப்தங்கள் !






இசைஞானி இளையாராஜா பற்றிய காணொளிகள் எப்போதும் விரும்பிப் பார்ப்பது.  ஒரு காலத்தில் மேடைகளிலோ, நேரடி நிகழ்ச்சிகளிலோ கலந்துகொள்ள மறுத்த ராஜா, இப்பெல்லாம் ஆர்மோனியப்பெட்டியைத் தூக்கிகொண்டுபோய் பல கல்லூரி அழைப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.  இசையமைப்பது போன்ற டெக்கனிகள் விசயங்களை சொல்லுகிறார்,   


                                                                                அண்மையில் ஒரு youtube  காணொளியின் தலையங்கம்  இப்படி இருந்தது . கோவையில் இருக்கும் ஒரு கல்லுரியில் நிகழ்ந்த நிகழ்வு அது , அதன் தலையங்கம் " இளையராஜாவுக்கு முன்னால் பாடி காட்டிய பெண்கள் ". அப்புறம் சொல்லவா வேணும் இப்ப உள்ள நேரமே நெருப்பு பத்தவைக்கும் நேரமல்லவா,, இந்த மாதிரி அவலுக்கு  காத்திருக்கும் குரும்பெட்டிதலையன்கள்  எல்லாம் விழுந்து அடித்துப்   வைரலாக இந்தக் காணொளிக்குள் பலர் போய் பார்த்து இருக்கிறார்கள். 
  
                                                                           உண்மையில் கல்லூரி இசை நிகழ்ச்சியில் பெண்கள் இளையராஜாவுக்கு முன்னால் "பாடிக்காண்பிக்கிறார்கள்  ", அவரும் எப்படிப் பாடவேண்டும் என்று  சில நுணுக்கங்கள் சொல்லுகிறார்.  இதுதான் சம்பம். ஆனால் தலையங்கம் எவ்ளவு குழப்பமாக இருக்கு .


                                                                           தமிழில் எழுதுவதில் உள்ள ஆபத்து ஒரு வசனத்தில் ஒரு எழுத்து வரவேண்டிய இடத்தில வராமல்போனால் அந்த வாக்கியமே வேறு ஒரு அர்த்தத்தைக் கொண்டுவந்து சேர்த்துவிடும்.  சிலநேரம் எழுத்துக்கள் இணையும் போதும் இருவேறு அர்த்தம் கொடுக்கும். " இதுவல்லவோ பருகாத தேன் , அதை இன்னும் நீ பருகாததேன் " போன்று நிறைய இருக்கு  . இது கட்டுரைக்கு என்று இல்லை கவிதைக்கும் பொருந்தும் . முகநூலில் சிலமாதங்கள் முன்  எழுதிய இந்த எழுத்துருக்களை   உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் .




வாய்பிளந்திருக்கிறது
ஜன்னல் !
எட்டாவது மாடியிலிருந்து
கைகளைப் பிசைந்தபடி
பக்கம் பார்த்தாலும்
மண்டிக்கிடக்கிறது
நகரம் !
மனோதிடத்தையும்
தைரியத்தையும்
தத்தெடுத்துக்கொண்டதுபோலப்
பேய்க்காற்று
முகத்தைப் பிராண்டுகிறது !
மூச்சு இறைத்தபடி
வளைந்து
இடமும் வலமுமாக
நகரவிளிம்பில்
வினோத அசைவுகளுடன்
நடந்துகொண்டிருக்கிறது
நதி !



*






ஒன்றையொன்று
விரட்டியபடியிருக்கும்
இருவேறு விசைகளாக
அலைக்கழிக்கவைத்தாலும்
முன்னதாகவே
திட்டம்போடவேண்டிஇருக்கிறது
ஒருசில
படிமங்களை
வழிக்குக் கொண்டுவருவத்துக்கு !


மிகப் பரிசுத்தமான
வார்த்தைகளை
வரிசைப்படுத்தி
சேகரித்து வைத்துக்கொள்ள
ஒவ்வொருமுறையும்
அவற்றின்
கழுத்துகள் நெரிக்கப்டுகின்றன !


முடிவுகளில்
குப்புற விழுந்த நிலை
அதைக் கலைத்தெடுத்த
பிரதியில்
தொண்டையில் சிக்கிக் கொண்ட
ஒரு மீன்எலும்பு கொடுக்கும்
அவஸ்தையை
நினைவு கூர்கிறது
கவிதை !





*


அந்தப்
பாடலின் துயரம்
பகிர்தல்கள் பிணைந்திருக்கின்ற

சாம்பல்நிற வானத்தில்
பலவீனமாக ஒலித்து !


அதுவொரு
துருவப்பறவையின் புலம்பெயர்வுகளின்
அலங்கோல மீட்டல்கள் !
ஆகாயத்தை வெறித்தபடி
நட்சத்திரங்கள்
மௌனத்தைப் பரப்பிக்கொண்டிருந்த
இளஞ்சூட்டு இருட்டில்
அதை நானும் பாடிப்பார்த்தேன் !


வரையப்படவேண்டிய
ஓவியம் போலிருந்த
துன்பத்தின் காலடி ஓசைகள்
உள்ளிருந்து எழும்பத்தொடங்கியது !


அதுவும்
சற்றுநேரம்தான் !


பறக்கமுடியாத யாருக்கும்
வெளிப்படுத்தாமலிருப்பதுதான் நல்லதுபோல
குரல்வளைக்குள்ளேயே
தீனமாகவுருகி மறைந்துவிட்டன
ஸப்தங்கள் !











*
தீப்பற்றி எரிவதைப்போல
வெய்யில்
இனியெப்போதும்
பாலைநிலத்துக் கனவே !


அச்சப்படுத்துவதுபோல  

நிலவிக்கொண்டிருக்கும்
காலமாற்றம் !


எல்லைகள் இல்லாதபோதும்கூட
குறிப்பிட்டவொரு பகுதியை
வெற்றிடமாக்கி
இன்னொரு பகுதியை
மூச்சுத்திணறச் செய்யும்
வறண்ட குளிர் !


பருவங்களுக்கு
நல்நோக்கங்களிருந்தாலும்
வாழ்வை அளந்து பார்க்கும்
சிலவற்றோடு
திக்குமுக்காடச் செய்கிறது !


மனத்தைச் சூடேற்றும்
கட்டமைப்புகளில்லாத
இந்தத் தேசத்தில்
தீடீரென்று
கதவுகளைத் முழுக்கத் திறப்பது
புத்திசாலித்தனமல்ல !



*


அவளைப்
பார்க்கமுடியவில்லை.
கேட்கமட்டும் முடிந்தது.

அலைபேசிய
நீண்ட மொழியாடலில்
யாரோவொருவனின்
ஞாபகத்தைச் சுமந்தபடியிருக்கும்
அவளின் அன்புள்ளம்
ஏற்கெனவே
பகிரப்பட்டுவிட்டதைக் காட்டியது !


பிறகு
கேட்காதது போலிருந்தபோது
எரிச்சலின் சிறு சாயல் கூட இல்லாமல்
உச்சரித்தது யார் பெயரை?


தவிப்பில்
குறிக்கோளின்றி
மனமலைந்தபோதில்
எட்டிப்பாக்க நினைத்தேன்


அப்போதுதான்
கன்னத்தில் யாரையோ
மென்மையாக முத்தமிட்டது போன்றதொரு
உணர்விலான சிரிப்பு !









*


இரவு
முடிவில்லாமல் நீண்டிருக்க
விரும்பினேன்.
உலகம்
இரவிலேயே முடிந்து விட
ஏங்கினேன்.
ஏனென்றால்
அடர் இருட்டில்த்தான்
எண்ணமெழுப்பும் பார்வைகள்
தீர்க்கதரிசனமாயிருந்தன !


நிலவில்லாத இரவுகள்
எவ்வளவு இருளானவை என்று
உங்களுக்குத் தெரியுமா?
நடுநிசிகள் இல்லையென்ற
கற்பனையே வலி !


நிழலோடு
வெளிச்சமிருக்குமிடத்தில்
நிலைவிழாத
இருட்டிற்கு வழியில்லையென்று
என்னை நானே
சமாதானப்படுத்திக் கொண்டேன்!








*


என்னை
எப்படி எனக்குள்ளேவர
அனுமதித்தேன்?
ஒரு வேளை
என்னைச் சுற்றி
ஒரு மாயையான வலையைப்
பின்னுவதற்காகவா?


ஒன்றோடு ஒன்று கலந்தும்,
இணைந்தும்,
வருடங்களில் கனமாகியும்
உருவங்களில் பரவிய
என்னை
எனக்குத் தெரியாது. !


திசைதேடாத
வழிப்போக்கன் போல
வழிதெரியாத நிலைதான்.
இருப்பினும்
ஊடுருவமுடியாத
ஆழ்மனப் பிரதேசங்களிலும்
எனக்கும்
நன்றாகத் தெரிந்தவொருவர்போலவே
உணர்கிறேன் !









*


கடலின் கரை
அலைகளைத் தொலைக்கும்
கணங்களில் 
சுவாசம்போலவே
மூச்சுமுட்டும்   
பூஞ்சோலைகளை ,
சுட்டு விரல்
கிள்ளிப் பற்றிக்கொள்ளும்
ஊசி மழையை ,
பழுப்பு நிறத்தில்
சுகமான
நினைவுத்தூசிகளை ,
மினுங்கிக்கிடக்கும்
மழழைகளின்
சிரிப்புக்களை,
நுழைய முடியாதபடி
உரசிச்செல்லும்
பிரியங்களை ,
நேருக்குநேர் சந்திக்கும் போது
ஏதோவொன்றுக்குள்ளிருந்து
வெளிவருவதில்
என்னைத் தொலைத்து
வெகுநாட்களாகிவிட்டதை
மனசாட்சி
ஒப்புக்கொண்டுவிடுகிறது !





*


" திருப்தியும்
உச்ச பரவசமும்
எங்கிருக்கிறதென்று "
ஆத்மாவைக் கேட்டேன் !



ஒருநாள்
ஆதாரத்தோடு
உண்மைக் காதலென்றது !
இன்னொரு பொழுது
துழாவி தேடிப்பார்த்து
பரஸ்பர நேசிப்பென்றது !


விரதநாட்களில்
பற்றற்று
ஞானம் கடத்தலென்றதும்
நல்லாகவே நினைவிருக்கு !


ஆனாலும்
உண்மையைச்சொல்கிறேன்
சிலசமயம்
சல்லாபம் செய்தபடியே
நெருக்கடிநிலை
அறிவிக்கப்பட்டதுபோலக்
காமம் என்றது !


அடக்கண்றாவி
சந்தேகத்திற்கு இடமில்லாமல்
நிரூபிக்கப்பட்டுவிட்டது
திமிறிக்கொண்ட
நாலாவது பதிலில்
ஒரு
அருவருப்பான மிருகமும்
எனக்குள்ளிருப்பது !










*



யாருமேயில்லை.
பின்மாலைகளிலேயே
வௌவால்கள்
அங்குமிங்குமாகப்
பறந்துகொண்டிருந்தன !

கும்மிருட்டில்
ஒவ்வொரு தளமாகத்
தேடிக்கொண்டிருக்கிறாள் !
" நீ சொல்லும்
மனிதனைப் போல
யாரும் இருந்ததேயில்லையென்கிறது "
அபத்தமான நிசப்தம் !


சிலமனுக்கும்
ஆள் அரவம் இல்லை !
ஏதோவொன்று
அவள்மீதிருந்து இறங்கிப்போவதை
மந்தகதியில் உணர்ந்தாள் !


இனி .
எப்போதுமே எடுக்க முடியாத
இடத்துக்கு
நிரந்தரமாகவே
நகர்த்தப்பட்டுவிட்டது
காதலெனும்போதை !





*

இவ்வளவு தூரம்
முன்னேறிவிட்டு
யாராவது பின்னகர்வார்களா?


ஒரேயொரு முறை
தொட்டுப்பார்க்க வேண்டும். !

ஒரே
ஒரு
தொடுகை
அவ்வளவுதான் !


நினைக்கும்போதே
மயிலிறகு
வருடுவது போலிருக்கும்
மென்மை !


கிறங்கிப்போய்
உச்சி சிலிர்த்து
பிரேமைகள் மங்கி
மெல்லென்று
அழுத்தவேண்டுமென்று
தோன்றுவது போல்
ஏறெடுத்தும்
கண்களை எடுக்க முடியவில்லை. !


அவ்வளவு அழகாயிருந்தன  

பிஞ்சுக் குழந்தையின்
 விரல்கள் !










*


அவசரமாகக்
கனவைக் கிழிப்பது போல
எங்கோ தூரத்திலிருந்து
ஒரு குரல் !

“உலகத்திலேயே ...
பெரிய பலவீனம்
எதுவென்று உனக்குத் தெரியுமா?”
என்று கேட்டது !

ஒலியின் நிழல்
கழுத்துவரை ஏறிவிட
அடைத்துப் பூட்டிய
மூச்சை
உள்ளிழுத்துக்கொண்டேன் !

பளிங்கறை ஒன்றிற்குள்
அழைத்துச்செல்வதுபோலவே
அதன் எதிரொலி
சுவர்முழுவதும்
சுழண்டுகொண்டிருந்தது !

விடியும் வரையில்
இடைவிடாமல்
திரத்திக்கொண்டிருந்த
பயத்தை வெல்லமுடியாததால்
பதில் சொல்லவில்லை !