Friday, 2 November 2018

ஸப்தங்கள் !






இசைஞானி இளையாராஜா பற்றிய காணொளிகள் எப்போதும் விரும்பிப் பார்ப்பது.  ஒரு காலத்தில் மேடைகளிலோ, நேரடி நிகழ்ச்சிகளிலோ கலந்துகொள்ள மறுத்த ராஜா, இப்பெல்லாம் ஆர்மோனியப்பெட்டியைத் தூக்கிகொண்டுபோய் பல கல்லூரி அழைப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.  இசையமைப்பது போன்ற டெக்கனிகள் விசயங்களை சொல்லுகிறார்,   


                                                                                அண்மையில் ஒரு youtube  காணொளியின் தலையங்கம்  இப்படி இருந்தது . கோவையில் இருக்கும் ஒரு கல்லுரியில் நிகழ்ந்த நிகழ்வு அது , அதன் தலையங்கம் " இளையராஜாவுக்கு முன்னால் பாடி காட்டிய பெண்கள் ". அப்புறம் சொல்லவா வேணும் இப்ப உள்ள நேரமே நெருப்பு பத்தவைக்கும் நேரமல்லவா,, இந்த மாதிரி அவலுக்கு  காத்திருக்கும் குரும்பெட்டிதலையன்கள்  எல்லாம் விழுந்து அடித்துப்   வைரலாக இந்தக் காணொளிக்குள் பலர் போய் பார்த்து இருக்கிறார்கள். 
  
                                                                           உண்மையில் கல்லூரி இசை நிகழ்ச்சியில் பெண்கள் இளையராஜாவுக்கு முன்னால் "பாடிக்காண்பிக்கிறார்கள்  ", அவரும் எப்படிப் பாடவேண்டும் என்று  சில நுணுக்கங்கள் சொல்லுகிறார்.  இதுதான் சம்பம். ஆனால் தலையங்கம் எவ்ளவு குழப்பமாக இருக்கு .


                                                                           தமிழில் எழுதுவதில் உள்ள ஆபத்து ஒரு வசனத்தில் ஒரு எழுத்து வரவேண்டிய இடத்தில வராமல்போனால் அந்த வாக்கியமே வேறு ஒரு அர்த்தத்தைக் கொண்டுவந்து சேர்த்துவிடும்.  சிலநேரம் எழுத்துக்கள் இணையும் போதும் இருவேறு அர்த்தம் கொடுக்கும். " இதுவல்லவோ பருகாத தேன் , அதை இன்னும் நீ பருகாததேன் " போன்று நிறைய இருக்கு  . இது கட்டுரைக்கு என்று இல்லை கவிதைக்கும் பொருந்தும் . முகநூலில் சிலமாதங்கள் முன்  எழுதிய இந்த எழுத்துருக்களை   உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் .




வாய்பிளந்திருக்கிறது
ஜன்னல் !
எட்டாவது மாடியிலிருந்து
கைகளைப் பிசைந்தபடி
பக்கம் பார்த்தாலும்
மண்டிக்கிடக்கிறது
நகரம் !
மனோதிடத்தையும்
தைரியத்தையும்
தத்தெடுத்துக்கொண்டதுபோலப்
பேய்க்காற்று
முகத்தைப் பிராண்டுகிறது !
மூச்சு இறைத்தபடி
வளைந்து
இடமும் வலமுமாக
நகரவிளிம்பில்
வினோத அசைவுகளுடன்
நடந்துகொண்டிருக்கிறது
நதி !



*






ஒன்றையொன்று
விரட்டியபடியிருக்கும்
இருவேறு விசைகளாக
அலைக்கழிக்கவைத்தாலும்
முன்னதாகவே
திட்டம்போடவேண்டிஇருக்கிறது
ஒருசில
படிமங்களை
வழிக்குக் கொண்டுவருவத்துக்கு !


மிகப் பரிசுத்தமான
வார்த்தைகளை
வரிசைப்படுத்தி
சேகரித்து வைத்துக்கொள்ள
ஒவ்வொருமுறையும்
அவற்றின்
கழுத்துகள் நெரிக்கப்டுகின்றன !


முடிவுகளில்
குப்புற விழுந்த நிலை
அதைக் கலைத்தெடுத்த
பிரதியில்
தொண்டையில் சிக்கிக் கொண்ட
ஒரு மீன்எலும்பு கொடுக்கும்
அவஸ்தையை
நினைவு கூர்கிறது
கவிதை !





*


அந்தப்
பாடலின் துயரம்
பகிர்தல்கள் பிணைந்திருக்கின்ற

சாம்பல்நிற வானத்தில்
பலவீனமாக ஒலித்து !


அதுவொரு
துருவப்பறவையின் புலம்பெயர்வுகளின்
அலங்கோல மீட்டல்கள் !
ஆகாயத்தை வெறித்தபடி
நட்சத்திரங்கள்
மௌனத்தைப் பரப்பிக்கொண்டிருந்த
இளஞ்சூட்டு இருட்டில்
அதை நானும் பாடிப்பார்த்தேன் !


வரையப்படவேண்டிய
ஓவியம் போலிருந்த
துன்பத்தின் காலடி ஓசைகள்
உள்ளிருந்து எழும்பத்தொடங்கியது !


அதுவும்
சற்றுநேரம்தான் !


பறக்கமுடியாத யாருக்கும்
வெளிப்படுத்தாமலிருப்பதுதான் நல்லதுபோல
குரல்வளைக்குள்ளேயே
தீனமாகவுருகி மறைந்துவிட்டன
ஸப்தங்கள் !











*
தீப்பற்றி எரிவதைப்போல
வெய்யில்
இனியெப்போதும்
பாலைநிலத்துக் கனவே !


அச்சப்படுத்துவதுபோல  

நிலவிக்கொண்டிருக்கும்
காலமாற்றம் !


எல்லைகள் இல்லாதபோதும்கூட
குறிப்பிட்டவொரு பகுதியை
வெற்றிடமாக்கி
இன்னொரு பகுதியை
மூச்சுத்திணறச் செய்யும்
வறண்ட குளிர் !


பருவங்களுக்கு
நல்நோக்கங்களிருந்தாலும்
வாழ்வை அளந்து பார்க்கும்
சிலவற்றோடு
திக்குமுக்காடச் செய்கிறது !


மனத்தைச் சூடேற்றும்
கட்டமைப்புகளில்லாத
இந்தத் தேசத்தில்
தீடீரென்று
கதவுகளைத் முழுக்கத் திறப்பது
புத்திசாலித்தனமல்ல !



*


அவளைப்
பார்க்கமுடியவில்லை.
கேட்கமட்டும் முடிந்தது.

அலைபேசிய
நீண்ட மொழியாடலில்
யாரோவொருவனின்
ஞாபகத்தைச் சுமந்தபடியிருக்கும்
அவளின் அன்புள்ளம்
ஏற்கெனவே
பகிரப்பட்டுவிட்டதைக் காட்டியது !


பிறகு
கேட்காதது போலிருந்தபோது
எரிச்சலின் சிறு சாயல் கூட இல்லாமல்
உச்சரித்தது யார் பெயரை?


தவிப்பில்
குறிக்கோளின்றி
மனமலைந்தபோதில்
எட்டிப்பாக்க நினைத்தேன்


அப்போதுதான்
கன்னத்தில் யாரையோ
மென்மையாக முத்தமிட்டது போன்றதொரு
உணர்விலான சிரிப்பு !









*


இரவு
முடிவில்லாமல் நீண்டிருக்க
விரும்பினேன்.
உலகம்
இரவிலேயே முடிந்து விட
ஏங்கினேன்.
ஏனென்றால்
அடர் இருட்டில்த்தான்
எண்ணமெழுப்பும் பார்வைகள்
தீர்க்கதரிசனமாயிருந்தன !


நிலவில்லாத இரவுகள்
எவ்வளவு இருளானவை என்று
உங்களுக்குத் தெரியுமா?
நடுநிசிகள் இல்லையென்ற
கற்பனையே வலி !


நிழலோடு
வெளிச்சமிருக்குமிடத்தில்
நிலைவிழாத
இருட்டிற்கு வழியில்லையென்று
என்னை நானே
சமாதானப்படுத்திக் கொண்டேன்!








*


என்னை
எப்படி எனக்குள்ளேவர
அனுமதித்தேன்?
ஒரு வேளை
என்னைச் சுற்றி
ஒரு மாயையான வலையைப்
பின்னுவதற்காகவா?


ஒன்றோடு ஒன்று கலந்தும்,
இணைந்தும்,
வருடங்களில் கனமாகியும்
உருவங்களில் பரவிய
என்னை
எனக்குத் தெரியாது. !


திசைதேடாத
வழிப்போக்கன் போல
வழிதெரியாத நிலைதான்.
இருப்பினும்
ஊடுருவமுடியாத
ஆழ்மனப் பிரதேசங்களிலும்
எனக்கும்
நன்றாகத் தெரிந்தவொருவர்போலவே
உணர்கிறேன் !









*


கடலின் கரை
அலைகளைத் தொலைக்கும்
கணங்களில் 
சுவாசம்போலவே
மூச்சுமுட்டும்   
பூஞ்சோலைகளை ,
சுட்டு விரல்
கிள்ளிப் பற்றிக்கொள்ளும்
ஊசி மழையை ,
பழுப்பு நிறத்தில்
சுகமான
நினைவுத்தூசிகளை ,
மினுங்கிக்கிடக்கும்
மழழைகளின்
சிரிப்புக்களை,
நுழைய முடியாதபடி
உரசிச்செல்லும்
பிரியங்களை ,
நேருக்குநேர் சந்திக்கும் போது
ஏதோவொன்றுக்குள்ளிருந்து
வெளிவருவதில்
என்னைத் தொலைத்து
வெகுநாட்களாகிவிட்டதை
மனசாட்சி
ஒப்புக்கொண்டுவிடுகிறது !





*


" திருப்தியும்
உச்ச பரவசமும்
எங்கிருக்கிறதென்று "
ஆத்மாவைக் கேட்டேன் !



ஒருநாள்
ஆதாரத்தோடு
உண்மைக் காதலென்றது !
இன்னொரு பொழுது
துழாவி தேடிப்பார்த்து
பரஸ்பர நேசிப்பென்றது !


விரதநாட்களில்
பற்றற்று
ஞானம் கடத்தலென்றதும்
நல்லாகவே நினைவிருக்கு !


ஆனாலும்
உண்மையைச்சொல்கிறேன்
சிலசமயம்
சல்லாபம் செய்தபடியே
நெருக்கடிநிலை
அறிவிக்கப்பட்டதுபோலக்
காமம் என்றது !


அடக்கண்றாவி
சந்தேகத்திற்கு இடமில்லாமல்
நிரூபிக்கப்பட்டுவிட்டது
திமிறிக்கொண்ட
நாலாவது பதிலில்
ஒரு
அருவருப்பான மிருகமும்
எனக்குள்ளிருப்பது !










*



யாருமேயில்லை.
பின்மாலைகளிலேயே
வௌவால்கள்
அங்குமிங்குமாகப்
பறந்துகொண்டிருந்தன !

கும்மிருட்டில்
ஒவ்வொரு தளமாகத்
தேடிக்கொண்டிருக்கிறாள் !
" நீ சொல்லும்
மனிதனைப் போல
யாரும் இருந்ததேயில்லையென்கிறது "
அபத்தமான நிசப்தம் !


சிலமனுக்கும்
ஆள் அரவம் இல்லை !
ஏதோவொன்று
அவள்மீதிருந்து இறங்கிப்போவதை
மந்தகதியில் உணர்ந்தாள் !


இனி .
எப்போதுமே எடுக்க முடியாத
இடத்துக்கு
நிரந்தரமாகவே
நகர்த்தப்பட்டுவிட்டது
காதலெனும்போதை !





*

இவ்வளவு தூரம்
முன்னேறிவிட்டு
யாராவது பின்னகர்வார்களா?


ஒரேயொரு முறை
தொட்டுப்பார்க்க வேண்டும். !

ஒரே
ஒரு
தொடுகை
அவ்வளவுதான் !


நினைக்கும்போதே
மயிலிறகு
வருடுவது போலிருக்கும்
மென்மை !


கிறங்கிப்போய்
உச்சி சிலிர்த்து
பிரேமைகள் மங்கி
மெல்லென்று
அழுத்தவேண்டுமென்று
தோன்றுவது போல்
ஏறெடுத்தும்
கண்களை எடுக்க முடியவில்லை. !


அவ்வளவு அழகாயிருந்தன  

பிஞ்சுக் குழந்தையின்
 விரல்கள் !










*


அவசரமாகக்
கனவைக் கிழிப்பது போல
எங்கோ தூரத்திலிருந்து
ஒரு குரல் !

“உலகத்திலேயே ...
பெரிய பலவீனம்
எதுவென்று உனக்குத் தெரியுமா?”
என்று கேட்டது !

ஒலியின் நிழல்
கழுத்துவரை ஏறிவிட
அடைத்துப் பூட்டிய
மூச்சை
உள்ளிழுத்துக்கொண்டேன் !

பளிங்கறை ஒன்றிற்குள்
அழைத்துச்செல்வதுபோலவே
அதன் எதிரொலி
சுவர்முழுவதும்
சுழண்டுகொண்டிருந்தது !

விடியும் வரையில்
இடைவிடாமல்
திரத்திக்கொண்டிருந்த
பயத்தை வெல்லமுடியாததால்
பதில் சொல்லவில்லை !













Saturday, 6 October 2018

நிசி விளிம்பில் ,,,

கவிதைகளை  அதன் வார்தையமைப்பில் உள்ள ரசனைக்காகவா,  காட்சிப்படுத்தலில் உள்ள படிமங்களுக்காகவா, அல்லது உணர்வுபூர்வமாக ஏதோவொன்றை அது அறுதியிடுவதாலா என்று   தரம்பிரித்தல் அல்லது எடைபோடுதல்தான் உள்ளதிலேயே மிகவும் கடினமான அதேநேரம் மிகவும் சிக்கலான  ஒரு கைங்கரியம். அது பிரபலமானவர்களின்   பரிந்துரைகளின் மூலமாகவோ அல்லது இலக்கிய மேதாவித்தனத்தாலோ செய்யக்கூடியதுமில்லை என்கிறார்கள் .
                                                                   
                                                               எல்லாவிதமான கவிதைகளையும்  தொடர்ந்து வாசிப்போடு அணுகுவதாலே சில சமயம் ஒருவித கணிப்பீடு நிகழ முடியும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. புதுக்கவிதைகளைப் பொறுத்தவரையில்  கவிதை மொழியின் சாத்தியங்களைப்   புரிந்துகொள்ளல்  மூலமாகவே வாசகன்  கவிதைகளை நெருங்க முடியும்.

                              ஒரு கவிதை  உண்மையானவைகளோடு  நேசமாவது  எத்தனை முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது  நமக்குப் புரியமுடியாத வேறொரு அளவீட்டில் வருகின்ற கவி(உ)தைகளை  விட்டு விலகுதலும் என்று நினைப்பது .இப்படிச் சொல்வதில் வெட்கம் ஒன்றுமில்லை. நான் எழுதுவதை  நானே வாசித்து  சிலநேரம் " என்னது அரைக்கிறுக்கன் போலப் பினாத்திவைச்சிருக்கிறேனே  " என்று அங்கலாய்ப்பது , இதொன்றும் புதில்லை

                                                                       என்னதான் போட்டு முழக்கினாலும் பலசமயங்களில்   கவிஞ்சனுக்கும், கவிதைக்கும், வாசகனுக்கும் இடையில் எப்போதுமே ஒரு புகைமூட்டம்   போன்ற தெளிவின்மை இருக்கிறது. அதுக்குக் காரணம் இந்த மூன்றுமே வெவ்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டு இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். தனிப்பட கவிதைகளுக்கு பரிமாணங்கள் என்பதே வேறு. இவளவு குழப்பத்தையும் ஒரு புள்ளியில் இணையவைப்பதில்  ஒருசில கவிதைகள் வெற்றிபெறலாம்

1:


மழை மீது
எப்போதும்
நல்ல அபிப்பிராயத்தைத்தான்
வைத்திருந்தேன் !


உதடுகளை

என்
காதருகே கொண்டுவந்து
துரிதப்பட்டுக்கொண்டிருக்கிற
காற்றை நிறுத்திப்
பெருமூச்சு விடுகிறது
குளிர்ச்சியான தூறல்கள் !


ஒரு வினாடி
சங்கடமாகவிருந்தது,
பிறகு
எங்களிடையே
ஒருவிதமான
அங்கீகரிப்புப் போலிருந்தது !


*

2:

பருவக்காலங்கள்
விழுந்துகொண்டிருப்பதில்
நேரம் தப்புவதில்லை ,
மிகக்கடினமாக
நானோ ...

வலுவற்றவன் போலுணர்கிறேன் !


ஆனாலும்
" வரப்போகின்ற
இலையுதிர்காலமென்பது
ஒருவகையில் கொண்டாட்டத்துக்கானது "
என்கின்றன
கடைசிப் பறவைகள்!


நான்
நினைவுபடுத்திக்கொள்கிறேன்
ஒரு வேளை
விலகியிருப்பது போலிருக்கும்
புரிந்துணர்வுகளும்
இங்கிருந்து எழுந்துவிடலாமென்று !


*

3:
கிளர்ச்சியூட்டும்
வாழ்க்கையென்று சொல்லமுடியாது !


விழித்தபோதெல்லாம்
இருக்கைகளில் நசுங்கி
சூழ்நிலைகளோடு

ஒண்டிப்படுத்திருப்பது போலிருக்கும்
விஷயங்கள்தான்
பொறுமை இழக்கச்செய்கின்றன.!


அணைப்புகள் இருந்த
பாதி இரவுகளிலும்
பரிதவிப்பான நிலை !


நம்பிக்கையைக்
காயப்படுத்தும்
பைத்தியக்காரத்தனமான

தேர்வுகள் !

இப்படி இருத்தலென்பது
ஏதோ
எனக்குள்ளே தேடுவதுதென்று
உள்ளபடியே புரியும்போது
எல்லாவற்றையும்
மறந்து விடுகிறேன்.!



*


4:


மழையின்
துவக்கநிலை
அர்த்தமற்ற ஆத்திரம்போலிருக்கு !


விரட்டப்பட்டதுபோலப்
பார்க்கும்போது

நானதன்
வெளிறிய முகத்தில்
ஒரு
ரசமிழந்த கண்ணாடியில்

பார்ப்பதைப் போல்
மங்கலாகிவிடுகிறேன் !

என்
வாழ்க்கையையே காண்கிறேன் 

விழிப்படையவைக்கும்
மழையிடம் !


நனைவுகளை  விலத்தி
ஒளித்திருந்தாலும்
என் சாயல்
சாரல் போலிருக்கு !


*


5:



நகரத்தின்
விபரங்களற்ற
சலசலப்புகளைத் தாண்டி ,
நுண்ணுணர்வுள்ள
நடைபாதைகளைக் கடந்து .

ஏதோவொன்றில்
அடைக்கலம் புகுந்தது போல
மனதை
நெகிழச் செய்யும் பகுதியொன்றில்
அந்தத் தனிவீடு !


தவிர்க்கமுடியாத
ஒரு குறியீடாய் நின்ற
கட்டிடத்தில்
மயக்கத்துக்கு நிகரானதாக
கடந்த காலத்தினுள் பயணம் 


நேற்றைய உலகுக்குத்
திரும்பிப்போய்விட்டாற்போல
ஒரேயொரு
ஜன்னல் திறந்திருக்கு 


*
6:

என்னதான்
துயரமான நேரமென்றாலும்
சந்தோஷ நினைவூட்டும்
மென்தொனியில்
நிலைபிறழாத குரல் !


எப்போதுமே
இருண்ட மூலையொன்றிலிருந்து
தன்னுள் அடங்கிய
அந்தரங்கமானதாகவிருப்பதால்
அது
தொலைந்து போகக்கூடாதென்று
அச்சப்பட்டேன் !


உண்மையாகச் சொன்னால்
தனிமையை நினைவூட்ட
ஒரு
விபரீதமான
அவல சத்தத்தை
ஓவெண்டு எழுப்பியபோது
அது
எல்லா அளவையும் மீறிவிட்டது !


*
7:

முட்டாள்தனமாக
முன்கோபப்படும்போது
சில சமயம்
எதையாவது
எனக்கு நானே சொல்லிக்கொண்டு

அதையும்
நம்புபவனாக மாறமுடியாது !


என்னவென்று
கண்டுபிடிக்கமுடியாத
அதனோடுதான்
ஆரம்பிக்கிறது
பிரிந்து கொண்டிருக்கிற
தத்தளிப்பான வாழ்நிலை!


எனக்கு
உறுதியாகத் தெரியும்.
அத்திவாரத்தோடு
தொலைந்து போகக்கூடியது
இன்னுமொரு தடவை
வழியனுப்புதல் !


*
8:

பூங்காக்கள்
பின்னிரவுகளில்
அந்தரங்கத்துக்கு
மிக தொலைவிலிருக்கிறது !


கடினமாக இருக்கிறது

நினைவிலகற்ற
அந்த இளம்ஜோடிகளின்
நிர்வாணத்தை !


குழல் விளக்குகள்
எரிந்து கொண்டிருக்க
சுற்றுச்சூழல் பீதியில்லாமல்
எப்படித்தான்
ஆனந்திக்கமுடிகிறது ?


நானேன்
வெளிப்படையென 

நினைக்கப்படக்கூடிய
அவ்விடத்துக்குள் போனேன்
அந்த விரக்தி

மனதை அரிக்கிறது !.

சிலசமயம்
இந்த உலகம்
அதன் கற்பனையால்க்கூட
திடுக்கிடச் செய்யலாம் !



*
9:

சம்பிரதாயங்களில்
அலுப்போடு நடந்துகொள்ளும்
பழைய நண்பன் ,


முகத்தைப் பார்த்ததுமே
அந்த சமயத்தில் .

எங்களுக்குளிருந்த
நெருக்கத்தை இழந்திருந்தோம் !


எதற்காகவும்
நல்லவிதமாக நடந்துகொண்ட
மற்றவர்களுக்கு
அவனாகவே நன்றி சொல்லி
இதுவரை கண்டதில்லை !


 " விரும்பும்படி வலுக்கட்டாயமாக
மீறி ஒத்துழைக்காத
எனக்குள் என்னை
மாற்றிக்கொள்ள அவசியமில்லை "
என்று கத்துவான் ,


ஒருகாலத்தில்
விடுதலை உணர்வைத்தருகிற
மிகநெருங்கிய நண்பன்
எப்போதும்
நல்லவனாவிருக்கவேண்டிய
அவசியம் இல்லைப் போலிருக்கு !


*
10:

உள்ளுணர்வினால்
உந்தப்பட்டிருந்தாலும்
இரவென்பது சொந்தமாக
இருட்டு வார்த்தெடுத்த

பாதை !

அது வெளிச்சங்களில்

விருது கிடைக்காத படைப்பு !


ஒருசில
விண் மீன்களையும்
ரகசியமான சத்தங்களையும்
நிசி விளிம்பில் வைத்துக்கொண்டு
தனக்குளாகவே
சுய முயற்சியோடு
சாதித்து காட்டிய அற்புதம் பற்றி
ஒருநாளும் புகழ்ந்ததில்லை !


அதன்
மர்மங்களைத்
பொதுவாகப் பார்பதைத் தாண்டி
தனியாகக் கதைத்திருக்கிறேன் !


அதன் வேதனைகள்
உண்மையானவையென அறிந்த
நாளிலிருந்து
சேர்ந்து விழித்திருப்பதைக்கூட
நிறுத்திவிட்டது !


யாருமே கவலைப்படாத
அந்த இரவை
நினைத்துப்பார்க்கிறேன் !


*

11:



விறைப்பாகவேதான்
ஆனாலும்
சமநிலை தவறிப்போகாத
தட்பநிலை,


மெலிதாக ஊளையிட்டு ...

காற்றை முகர்ந்து கொண்டு
நிறைய தூரம்
ஓடிக்கொண்டிருக்கும்
வாசனைகள் !


புகார்ப்பனியால்
போர்த்தி மூடப்பட்டிருந்த
மர அடிகளில்
கண்டுபிடிப்பதுக்கு
ஏதோ விசித்திரமானவை
பதுங்கியிருக்கலாம் போலிருக்கு !


முன்னதாக
ஆழக் கிளறப்பட்ட
மணல் வெளிகளிலிருந்து
யாரோ கண்காணிக்கிறார்களா ?


பொழுதுகளை
நுழைவாயிலில் மோதியபடி
எடுத்துக்கொண்டாலும்
பதிலில்
அக்கறைகொள்ள நேரமில்லை !


இந்தஇடம்
வழக்கத்தை விட
எதையோ கொடுக்கிறது…
கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. !


*
12:

முகமும்தான்
மற்றவற்றிலிருந்து வேறுபட்டது
கண்களெல்லாம்
வானவில்லுப் போல
குறுக்குச் சாய்வான புருவம் ,


நீண்ட மூக்கும்
பிளவுடைய வாயும்
இது
எல்லாம்விடப் பெரியதான
பொன்முடிக் கூந்தல் !


கனமான
கலைந்திருந்த முடியோடும்
உற்று நோக்கும் நிறத்திலும்
அது
ஆடம்பரமாகவும்,
பயங்கரமாகவும் இருந்தது .!


இருந்தாலும்
நளினமாகவே
இதழ்களைவிட
மிக மென்மையான உதடுகள்.!


*

13:

சில
ஒற்றை வரிகளில்
ஒரு தசாப்தத்தை
எங்கேயோ கொண்டுபோய்
நிறுத்தியிருக்கிறாள் !


காலத்தை
இவளவு இலகுவாக
ஒரு
குறிப்பிட்ட அலைவரிசையில்
இயங்கியபடி
சிதைக்கமுடியுமா ?


எதிரொளிக்கும்
தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள்
என்
கவனத்திலிருந்து தப்பிவிட்ட
அனுபவங்கள்போலிருந்ததால்
முன்னுரையை
ஊன்றிப்படித்தபோதே
மேலும் படிக்க முடியாமல்
அலைக்கழித்தது
மனவெடிப்பு !


*

14:

வயதான பாட்டி
விழி ஆர்வம் துரத்தும்
பேத்திக்கு
கதை சொல்கிறாள்.
உரையாடல் இடை

சில கற்பனைகள் போலிருக்கு .


நெகிழ்ந்து
சில வாழ்வின் உண்மைகள்
விரிந்துகொண்டே
பலதுமான அனுபவங்கள். 


பாட்டியின் காலத்திலிருந்து
மாற்றிச் செருகிவைத்திருப்பது போலிருக்கு
வருணனை !


மெலிதாகப் புன்னகைத்தபடி ,
டெலிவிஷனைப்பற்றி பேத்தி
விடுத்துக் கேட்கிறாள் 


 பாட்டியால்
அனுபவித்ததை மீட்டுடெத்தும்
நிலைப்படமாக வந்த
கிராமபோனுக்கு பின்னதான காலத்துக்குள்
நகரவேமுடியவில்லை ,


ஓரமாக
ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த
நானும்தான் !


*

Wednesday, 3 October 2018

அனாமிக்காவின் நாட்குறிப்பிலிருந்து

சிலசமயம் ஜோசித்தால் இன்னொருவர்போல நமக்கு ஜோசிக்கமுடியுமா என்று ,முக்கியமாக ஒரு ஆண் பெண் போல ஜோசிக்கமுடியுமா என்று . ஆனாலும் அதுக்கும் சாத்தியங்கள் இருக்கு , ஒரு பெண்ணின் மனதை   ஒற்றியெடுத்து எழுதுவதில் ஒரு திரில் இருக்கு.   அனாமிக்காவின் நாட்குறிப்பிலிருந்து என்ற இந்த எழுத்துருக்கள் ஏழுமே ஒரேநாளில்   3 October 2016 இல்  நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வசித்தபோது எழுதியவை.


                                                                     இரண்டு வருடங்களின் முன் சரியாக இன்றையதினம் எழுதியவைகளை  இப்போது சுவீடனில் வசித்துக்கொண்டு திருப்பி வாசித்தபோது ஹிஸ்டிரியாவில   பிசத்துறது போலிருந்ததால்  கொஞ்சம் கலவரமாக இருந்தது. எப்படி ஒரு பெண்ணின் உணர்வோடு ஒரு பெண் டயரி எழுதுவதுபோல  எழுத்தமுடிந்தது என்று ஆச்சரியமாகவும் இருந்தது.


                                                                            அனாமிக்கா சிவப்போ, வெள்ளையோ , கறுப்போ இல்லை. ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு நிறமுடையாள் . பயங்கரப் புத்திசாலி. எப்பவுமே ஏதாவது ஜோசிக்கொண்டிருப்பாள். நிறைய  விசியம் தெரிந்தவள் . மல்டிபிள் பெர்சனாலிட்டி . அனாவசியமாகப் பினாத்திக்கொண்டிருக்கும் வகையும் இல்லை. ரத்தினச்சுருக்கமான வார்த்தைகளில் கத்திமுனையைத் தீட்டுகின்றவள் .


                                                             இப்படி இருந்தும்  வாழ்க்கையின் சில பல கட்டங்களில்  அடுத்த மனிதர்களால் பாதிக்கப்பட்ட   பெண் . அதனால சூழ்நிலைக் கைதி.


                                                                       எப்படியோ அநாமிக்கா ஒரு உருவகம். அவளின் மொழி அவளின் எண்ணங்கள். அவற்றை என் கற்பனையில் நினைத்துப்பார்த்து கொஞ்சம் போல நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் இடையில் ஒரு பாலம்போல   படிமங்களையும் உள்ளே செருகி வைத்த சித்துவேலை . படிமங்கள் ஒரு கவிதையை இழுத்துச்செல்லும் குதிரைகள் என்று நவீன கவிதை விமர்சகர்கள் ஒத்துக்கொள்கிறார்கள் .




*


லுவிழந்து
கொண்டிருக்கின்றது
இரவு பூத்த நிலவு,
பொறுமையோடு காத்திருக்கு
பொலிவான வானம்,


நீறு பூத்த மனது
விழுந்துவிடவில்லை,
சூடேற்றிக்கொண்டிருக்கு
குளிர்ந்த நிலம் ,


நீங்காத நேயத்திலும்
தத்துவம் சொல்வேன்,
உனக்கே உனக்காக
பரிவுணர்வுதான்
என் பிரதானமான
உள்ளுணர்வு,


நெளிவுசுளிவுகளோடு
ஓடிக்கொண்டிருக்கு
வற்றாத ஜீவநதி


 என் நாட்குறிப்பின்
முதலாவது பக்கத்தைத்தான்
நீ
ரகசியமாக வாசிக்கிறாய்
அதுவும் எனக்குத்தெரியும்.!



( இந்த இரவு ஒரு நோயாளியின் இரவுபோல நீண்டுகொண்டேயிருக்கு ,,சே..! )


*
இரக்கமுள்ளவன்  என்பதும்
விட்டுக்கொடுத்துப் போகும்
நனவிடை வெழிகளில்
வாழக்கூடியவன் என்பதும்
எவளவு பெரிய பொய்


மாறாக

நீ
சுயநலமானவன்.


அப்படித்தான்
நீயே உனக்காக
பரிணாமத்தில்

உருவாக்கப்பட்டிருக்கிற
மூளையையும்

அதற்கேற்ப
மாற்றியமைத்திருக்கிறாய் ,


அளப்பரிய பலம் பற்றிய
ஆய்வு முடிவுகள்
கருத்துக்களையெல்லாம்
தனி மனுஷியாக
விழுங்கவேண்டிய அவசியமெல்லாம்
எனக்கில்லை,


வலியறிந்த
ஒவ்வொரு நினைவிலும்
நீயொரு
வினோத விலங்கென்று
நீயேதான் நிரூபிக்கிறாய்.





( நோ சான்ஸ் ,,,நினைப்பதையெல்லாம் தெரியப்படுத்துகிறது ,,ரூபீஷ்ஷ் !!!!! )


*


உன்
மனப்பான்மையே
இப்போதுமென்
எண்ணங்களை வடிவமைக்கிறது,


என்னில் குதித்து ...

எனக்குள் ஆழம்காண
நான் ஒன்றும் ஞானி அல்ல
மிகச்சாதாரண மனுஷி,


நதியைப் பார்கிறேன்
தவறிய இலைகள்
தப்பமுடியாத தழைகளை
இழுத்து ஓடும் வேகம்
கரையில் கைகட்டி நின்று
நீ
வேடிக்கை பார்க்கிறாய்,


பின்னர்
நீரலைகளின் துள்ளோட்டத்தை
ரசானுபவக் கண்களோடு
கவிதை படைப்பாய்.


நானோ 


 நதியின் பிரவாகத்தை
என்னையே
விழுங்கப்போகிற அரக்கனாய்த்தான்
உருவகித்து அச்சமடைகிறேன் !
 

( இன்றைய மாலைமுழுதும் மழையும் குளிரும் தரும்  மந்தகாசங்கள் ,,பட் ஐ லைக் தட் )


*


நாளைய நாளுக்கு
நாலு வாரம்முன்னே
திட்டுமிடுபவள் நான்
நீயோ
இன்று விடிந்ததே.

இப்பவரை தெரியாதவன்,


பிறகு எதுக்குக்காக
இலையுதிர்காலம் பற்றிக்
குறை சொல்கிறாய் ?


ஒரு
தனிமனுஷியின் வைராக்கியத்தை
பணயம் வைத்து
காம்பு பழுத்த
மஞ்சள் இலையின் விழுதலோடு
நானும்
புறப்பட்டுப்போகும் திட்டத்தை
சென்ற வருடக் கோடையில்
முடிவுசெய்தேன்.


நீ
இதை வாசித்துச் சிரிப்பாய் !


நல்லாவே சிரித்துகொண்டிரு !


ஒன்றுசொல்கிறேன்
ஏற்கனவே
பேசிமுடித்து ஒப்பந்தமாகியபடியே
வேர்களுக்கு
உரமாகத்தான் அதிலும் போகிறேன்.





(திஸ் டைம் ,, வெரி ப்ரௌட் எபவுட்  மை  இன்டென்சன்,,கமிட்மெண்ட்ஸ் ,,தட்ஸ் மீ அண்ட் மை  சோல்  ! )


*


நீ
திருந்தி வந்துவிடுவாய்
என்பதில் நம்பியே
தளராத நம்பிக்கையில்
நம்பிக் கையை வைத்தேன்,...


உனக்கு
யாத்திராவும்
மாயாவும்
கந்தர்வனும்
இரவிரவா இங்கிதம் செய்வதும்
நல்லாவே தெரியும்,


அது முற்றுப் பெறாத
படுக்கையறையில்
இச்சைகளைச் சுற்றிவைத்து
வாழ்வின் மீதேறி
ருசியைத் தூண்டுவதும் உண்மை,


அப்படியில்லாமல் 


 நிறைவை ஏற்படுத்துமாயின்
அது அனுபவமல்ல
விரட்ட முடியாத குற்றவுணர்வு,


அதை
தைரியமாய் எதிர்கொண்டால்
ஏணிப்படிகளாய் உன்னைச் செதுக்கும்
உளிகளாய் அமையுமென்று
தனித்த மனுஷியாய்
சொல்லியே அலுத்துப்போனேன்,


நீ
இப்பவும் என்னைக்
கடைநிலையில்
வாசல்படியாகவே வைத்திருக்கிறாய்.!







(மல்டிபிள் பெர்சனாலிடி டிஸோடர் ?  MPD ? ,,அந்த வருத்தமா உனக்கு,,,? அதுக்கும் மருந்திருக்குத் தெரியுமா ?   ஒப்ப்ப்ஸ் ! )


*


ஒன்பது மாதங்கள்
நீ
ஓடிப்போய்ஒதுங்கி நின்று
ஒழித்துக்கொண்டிருந்தாய்,



வாயும்வயிறுமா...
வாந்தியை வாய்வரை எடுத்தே
தனி மனுஷியாக வாழ்ந்தேன்,





அம்மா வீட்டிலேயே
பன்னீர்க்குடம் உடைந்து
பாடை ஏறுவதுபோலவே ஏற்றி
அழுக்கான பிரசவவாங்கில்
கடைசி நிமிடம்
எங்கள்
மகள் பிறந்தாள்!



நான் தப்பிவிட்டேன்
ஆண்டவனுக்கு நன்றி
அவளும் தப்பியேவிட்டாள்!



நேற்று நீவந்து
உன் உயிரை மறுபதிவுசெய்த
எங்கள் மகள்
யாருக்குப் பிறந்தாள் என்று
இரத்தமரபணுப்பரிசோதனை
செய்தேபார்க்கவேண்டும் என்கிறாய்!



உனக்கு எதுக்கு
இல்லாத பிள்ளைக்கு வீண் செலவு?



அதைக் கேட்டபோது
அந்த ஆசுப்பத்திரியில்
நானும்
உன்மகளும்
செத்தேபோனோம்


 இப்ப சந்தோஷம் தானே உனக்கு.?
 

 ( பனுவல் போற்றுதும்.!!!!! ..போதுமடா சாமி… வெளியே ஜன்னலில் தத்துப்பூச்சிகள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன ..லவல்லி  பட் சூசைட் ?  மே பி )
 

*




சந்தோஷங்களில்
சந்தேகத்தை வேண்டுமென்றே
உள்நுழைத்து
வானவேடிக்கையாக்கிப் பார்த்ததே
நீதான்,...




எனக்குதான்
உன்னைத்தவிர
எல்லாமனிதர்களும்
அன்பின்வடிவாகவேயிருந்தார்கள்,



அதிகாலை
அலாரத்தோடு
மணியடித்த பால்க்காரன்,


மொட்டைமாடியில்
உடட்பயிட்சி செய்த

பக்கவீட்டுக்காரன்,

அம்மி பொழியவந்த
சின்னதான 

 நோஞ்சல்ப் பையன்,

ஐயப்ப சாமி கோவிலில்
அப்பாவின் வயது 

 ஐயர்,

மின்சார இணைப்ச் சீராக்கிச்
சரிசெய்தவந்த

வயதான ஐயா,

கொஞ்சம் தாமதித்த
தபால்க்காரன்,


நீதான் 

முடிச்சுப்போட
யாரையுமே விட்டுவைக்கவில்லையே!



நீ
எல்லாரையும் திட்டிக்கொண்டு
போயேபோய் விட்டது சந்தோஷம் !



இப்போதுதான்
தனித்த மனுஷியாக
எல்லா ஜன்னல்களையும்
வாசல்க் கதவுகளையும்
அகலத் திறந்து வைத்திருக்கிறேன்
காற்று
சுதந்திரமாக வந்து போய்க்கொண்டிருக்கு!





( ஹ்ம்ம்,,,,இன்றைய இரவு துக்கங்களின் ஆக்கிரப்பு,,தூக்கத்தின்  முதல் எதிரி ,,,ஹ்ம்ம்,, )

 .
 



Friday, 21 September 2018

நினைவுவரும் போதெல்லாம் !


மனதளவில்
" நான் "
தொலைந்து போனதாலோ
தெரியவில்லை
சிலசமயம்
நிலைகுலையச் செய்யும்
பிரார்த்தனை
நினைவுகளிலிருந்த
துயரங்களின் பிடிப்பை 

விடுவித்திருக்கிறது !


அது
காரணமாயிருக்கலாம் 

" நான் "
 ஒன்றுமே
செய்யவில்லை போலிருந்தாலும்
வாழ்கையின்
உண்மைத்தன்மையை
உரசிப்பார்த்தது  !



" நான் "
வேறென்ன சொல்லமுடியும் ?
மனதளவில்
" நான் "
தொலைந்து போன
அட்ப மனிதர்களின்
பெருங்கனவுகள்
எப்போதுமே
சாதிக்கப்படுவதில்லை !







*


முரண்டன் போலிருப்பேன்
ஆனால்
எனக்கு எதிரிகள் இல்லை,



வெற்றித் திசையில் 
பழக்கமான  தோல்விகளோடு
மெல்லவே

நடந்துபோகிறேன்
ஆதலினால்
போட்டியாளர்கள் இல்லை !



ஒவ்வொரு
ஈரமான கைகளையும்
வாஞ்சையோடு பற்றிக்கொள்வேன்
ஆகவேதான்
எஜமானர்கள் இல்லை.



என் பார்வைகளில்
நான்
யாரையும் அஞ்சவில்லை.



இரவு
இந்த அந்நிய நகரத்தில்
பயப்படாமல்
நடந்து செல்கிறது என்பதே
கிட்டத்தட்ட
அதிசயமாக இருக்கிறது.!







*


சாதித்து முடித்து
ஓர்
அடையாளத்தை
சிறகென
விட்டுச் செல்வதால்

அந்த
அனுபவத்துக்கு
உண்மையாகவிருந்த
பறவையைப்பற்றி
எழுதியேயாக வேண்டுமென்றிருந்தது !



என்னோடு
மாறுபட்டுக்கொண்டிருக்கும்
வார்த்தைகளில்
பறத்தலின் வீழ்ச்சி பற்றி
நம்பும்படியாக
வலியுறுத்தமுடியாது !



நினைவு வைத்து
உன்னிப்பாக கவனிக்கிற
என்
மனசாட்சியோடு
மிச்சமிருப்பதெல்லாம்
அசல்த்தன்மைக்கு
முயற்சிப்பது மட்டுமே !



அதுவே
நீண்ட பொழுதுகளை
மவுனிக்கப்போதுமானதாயிருந்தது !







*


இரவுகள்
நேர்த்தியான
நீண்ட பயணம் ,
தூக்கிப்போடும் அலைச்சலிலும்
விழிப்புடன் இருந்தவர்கள் ...

மிகச் சிலரே ,


அதிகாலை
ஒவ்வொருவரும்
அவரவருக்கேற்ற
இடத்தில் இறங்குகிறார்கள் ,


அடையாளப்படுத்திக்
கோபப்படுத்துவது
இதுதான்:
பிடித்திருக்கிறதோ
இல்லையோ
திசையின்றி
அலைந்துகொண்டிருப்பவர்கள்
எதிர்பாராத இடங்களில்
தரை தட்டலாம். !










*


திரும்பத்திரும்பச்
சந்திக்கும் அதேசில
நண்பர்கள்,



வாசனைகளோடு
ஒன்றிப்போன
சூப்பர் மார்க்கெட், ...


எப்போதாவது நினைவுவரை
ஒரு தேவையைக் குறைக்கிற
முடிவெட்டுமிடம்,


மிக மிக மலிவான
பொருந்தாத சராசரி
உணவகங்கள்,


மாதமொருமுறை
வலுவான பிணைப்புள்ள
ஆதார ஆஸ்பத்திரி,


வருடங்களில் 

மெல்லப் புரிந்தது
இந்த
அந்நிய மனிதர்களை !


பிறந்து வளர்ந்த ஊர்,
ஊரில் இருந்தவர்களெல்லாம்
என்னைப்பற்றி தெரிந்தவர்கள்.


இந்த
நினைவுவரும் போதெல்லாம்
ஒரு விதத்தில்
சற்று ஒதுங்கிக் கொள்வது நல்லது !







*


பேச்சுவாக்கில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
பரிமாணங்கள் கொண்ட
காரணங்கள் !


ஒருவகைத்  

தேர்வுணர்வில் ...
வகைப்படுத்திப் புரிந்து கொண்ட
தொடர்பில்லாத
சம்பவங்கள்!


நிலவு தனித்தலைந்த
ஒரு
பருத்த பவுர்ணமியிரவில்
எதற்காக

நிர்மமூலமாக்கினார்கள் ?

கேள்வியின் விடை
திரும்பிவராமல்ப்போனவர்களிடம்
ஒளிந்திருக்கிறதுபோல
நிச்சயம்ஏற்றுக் கொண்டாக வேண்டும்
இடித்து தள்ளப்பட்ட நாள்
இன்னமும்
நன்றாய் நினைவிருக்கிறது!







*


நீங்கள்
அதிகம் பிரஸ்தாபிக்குமிடத்தில்
என்
சுயத்தை பிரதிபலிப்பது
முக்கியமா ?...


ஒரு அங்கலாய்ப்புத் தான்.!
அது
அவசியம் என்பவர்களும்
அது
அலட்டல் என்பவர்களும்
விதிமுறைகளை மீறி
சம அளவில் இருக்கலாம் !


புனைவம்சங்களை
அறிந்து விலகிய
அனுபவத்துக்கு இடமளிக்கவேணும்
விரிசல்களில் நுழைத்துவிட
ஒருபொழுதும் முயன்றதில்லை !


ஆதலினால்
என்னைப் பற்றி
அதிகம் கற்பனை செய்யவேண்டாம் !







*


ஒரு பயத்தை
ஊன்றி நிறுத்திவிட்டதுபோல
இரவுத் தெருவெல்லாம்
வெறிச்சோடிவிடுகிறது ,


பத்துப்பத்தரைக்கே ...

கதவை இழுத்து மூடிவிடுகிற
நடைபாதைக்

கோப்பிக்கடைகள் ,

ஆள் நடமாட்டமில்லாத

சதுக்கங்களில்
நிழல்களே
காலடியில்த் தேங்கியிருக்கும்
இருட்டை
வெருட்டிக்கலைப்பது போலிருக்கு, 


குடித்துவிட்டு உளரும்

 குரல்களும்
சமீபத்தில் கேட்கவில்லை,


நம்பிக்கை தருவதுபோல் 
சில நேரம்
நகரமே பெருமூச்சு விடுவதுபோல
ஒருவிதமான
ஊதல்க் காற்றுக் கடந்து போகும் ,


அதுவொன்றுதான்
இயல்பாகவே
கிட்ட வந்து நின்று
விசாரித்துவிட்டுப் போகுது !







*


எவ்வளவுதான்
பொத்திப் பாதுகாத்த
கனவுகள்
ஆழப் புதைக்கப்பட்டிருந்தாலும்
யாரென்று அறியாமல் ...

ஒரு
கவிதைப் புத்தகத்தின்
உயிர்த்துடிப்பு ஒலிக்கிற
ஓரிரு பக்கங்களிலாவது
முழுமனதாய்
அவன் காலத்திலோ
அல்லது
அவள் காலத்திலோ
எழுதிக்கொண்டிருப்பதினுள்
மறைந்திருக்கும்
மரணபயத்தை மறுதலிக்கும்
ஏதோவொன்றுதான்
வாழ்தலைச் செலுத்துகிற
உந்துவிசை!







*


சொல்ல முடியாதவைகள்
எனக்குள்
உள்ளார்ந்து
ஊர்ந்துகொண்டிருக்கிறது
அதில் ...


முன்னேற்பாடாய்ப்
பதுக்கி வைத்திருந்த
சில முடிவுகள் ,


வெகு காலம்

மறக்கப்பட்டுவிட்ட
ஒரு நம்பிக்கை ,
மர்ம பரிபாஷைகளில் எழுதப்பட்ட
நிகழ் குறிப்புகள்,


இவைகளையெல்லாம்
சலனத்தை
உருவாக்குவது குறித்த
பெருங்கனவுகளைக்
கலைத்துப்போட்டுவிட்ட
நினைவில் தெரியவில்லையே !