Tuesday, 7 August 2018

ஒரு கனவென்பது....!

ஏறக்குறைய கடந்த ரெண்டு வருடங்கள் விட்ட குறை தொட்ட குறையாக    முகநூலில் எழுதிப்போட்டு ஆங்காங்கே சிதறிக்கிடந்த எல்லா கவிதைமொழிப் பரிசோதனை முயற்சிகளையும் ஒவ்வொரு தலைப்பில் என்னோட வைப்புச் சொப்புக்கள் எல்லாம் பதுக்கி வைத்திருக்கும்  மின்னேறிஞ்சவெளி வலைப்பூங்காவில்  தொகுத்தாகி முடிந்து விட்டது .


                                                               இதை எல்லாம் தொகுப்பதே எனக்கொரு சத்தியசோதனை போலிருந்தது . நீங்க பிறந்த ஜனன ´லக்கின  கிரக ராசிக்பலன் படியும் இனி உங்களுக்கும் சோதனை அதிகம் இருக்கப்போவதில்லை.  இதுதான் கடைசித் தொகுப்பு, இதோடு வாசிக்கிறது தொல்லையில் இருந்தும்  உங்களுக்கும்  களிப்புக்  கழியுது.


                                                 தொடர்ந்தும் எழுத முடியுமா என்பது ஒரு கேள்வியாகவே இருக்கு. நிண்டான் திண்டான் பாஞ்சான் போல எப்பாவது சில நாட்களே முகநூல்ப் பக்கம்  வரவும், வந்து பதிவுகள் வாசிக்கவும், வாசித்து லைக்கவும் , சிலநேரம் கொமெண்டவும்  முடிகிறது. அவளவுதான் இப்போதைக்கு சொல்லமுடிகிறதும் !




*


இந்தப் பூவோடு
அனுக்கிரகத்தை நினைப்பதை 
நிறுத்திவிடுங்கள் ! 
கொடியில் 
தளிர் அரும்பாகி 
செடியினில்
குளிர் விடியலோடு
தென்றல் தாலாட்டி மலர்ந்து
மடியில் விளையாடும்
மயில் ஊஞ்சல்
வயதொன்றில்
கதவுகளற்ற
கர்ப்பக் கருவறையில்
கடவுளின் காலடியில்
பிய்த்து எறியப்பட்டாள்
காஸ்மீர் ரோஜா !
இனியாவது
ஆண்டவனுக்கு
மலர்களை அர்ப்பணித்து
அவமதிக்காதீர்கள் !




*


நொதித்துக்  கொதிக்கும்
ஆடி  மாதம் ,
நீள வாக்கில்
வெட்டி வைச்ச
தர்ப்பூசணி,
அதன்
குங்கும நிறத்தில்
வெய்யின் ருசி !



*

ஒரு 
விடுமுறை நாளில் 
ஒரு 
சாவோடுசம்பந்தப்பட்ட
ஒரு 

பொருந்திவராத நேரம்

ஒரு
அடிவானத்தை

வடிவமைத்துக்கொண்டிருக்கு
முகில்களோடு மோதும்

ஒரு
வானம்பாடி!




*

நீலக் கடலும் காற்றும்
நிறைவு வாழ்வும்
நுரைபொங்கி
அலை தவழும் நினைவு,
களைத்துப்போன மனது ...
உயிர்வாழ்வதை
எனக்குள்ளேயே
வலிய மறுதலிக்க
இரவின் போர்வை விலத்தி
விடிந்தது
சென்ற வருடமொன்றில்
இறந்துபோனவளின்
பிறந்தநாள் !



*





ஒரு
உண்மை

ஒரு
இடம்மாற்றிவைத்த உத்தி
ஒரு
நியாயத்தை அநியாயப்படுத்த

அறுதியிடுகிறது
ஒரு
அலங்கரிக்கப்பட்ட

பொய்.






*

மனப்பிரமைகளை
இன்னொருவரில்த்
தேடிக்கதைக்கும் போதெல்லாம்
செவிப்பறை கிழிகிறது !
இதுதான் ...

நடந்துமுடிந்ததென்று
என்னமோவெல்லாம்
உருவாக்கிப் பிசத்துகிறாய் !
சரி
ஒத்துக்கொள்கிறேன்
மிகவும் அயர்ச்சியான
உள்மனப் பிறழ்நிலமைகளை !
ஆனாலும்
நண்பா
நானில்லாமல்ப் போனபின்னாவது
நிரூபிக்கமுடிந்த எல்லாவற்றையும்
சொல்லவிரும்பாமலிருந்ததை
ஒப்புக்கொள்வாயா ?


*


ஒரு
கண்ணாமூச்சி விளையாட்
டு
ஒரு
பறத்தலுக்கான போராட்டம்

ஒரு
அகாலமான நினைவு 
 
ஒரு
பதற்றமான திசைப்போக்கு

ஒரு
பரபரப்புகளில்லா வானவெளியில்
ஒரு
ஊகிப்பதற்கான இடைவெளியை
நிராகரித்துவிடுகிறது!





*


நீண்ட
வழித்தடத்தில்
இருட்டு ,
கோடை மழையில்
நெருக்கமான
முத்தச் சூடு,
நட்சத்திரங்களெல்லாம்
விருமுறைக் கொண்டாட்டத்தில் 
பால் வீதியில்
உறங்கியபடி,
நான்
எனக்குள்ளேயே
என்னோடு
தனித்துப்போய்யிருக்கிறேன்......
எனக்குத் துணையாகாவே
வெளிச்சங்களை
அளவாகவே
கசியவிட்டபடி
விடியும்வரை 
அலைக்கழியுது
வசந்தகாலக் காற்றில்
ஏற்றி வைத்த
அகல் விளக்கு !

*











தலை வாழை
இலை போட்ட
விருந்து ..

நீ
குனிந்து
நிமிர்ந்து பரிமாறுகிறாய்
,
திறந்த ஜன்னல்களில்
வெட்கப்பட்டுக்கொண்டிருக்கு

தென்றல் ..!

*


இசையோடும்
கதையோடும்
இலங்கை வானொலியில்
பொங்கும் பூம்புனல் ..
சிறப்புக் கதை சொன்ன
ஆனந்த விகடன்


மாமரத்தில மஞ்ச மைனா
மஞ்சவண்ணாவில மாங்குயில்....
வெய்யிலை விழுங்கிய
வேப்பமர நிழல்கள்...
அலட்டிக் கொள்ளாத
நீல வான மேகம்...
வாசமள்ளி எறிஞ்ச
மல்லிகைப் பந்தல் .....
நினைவுகளில்

ஒரு
கனவென்பது
நிண்டு கொல்லும்

அந்தக்
கணாக் காலம்!


*



ஒரு
புத்தம்புதிய

காலத்தைத் தேர்ந்தெடுத்து
ஒரு
வாழ்கையைக் கொண்டாடிவிட
ஒரு
சொர்கமில்லை என்று

அங்கலாய்க்குது
ஒரு
பெயர் வைக்கப்படாத

பறவை !


*



விட்டில் பூச்சிகளை
நெருங்கிப் பார்க்கவிடாமல்
இரவுமுழுதும்
எதையோ
மறைக்கவிரும்புகிறது
சிம்மினி விளக்கின்
கண்ணாடிகளில்
திரைபோடும்
கரும்புகை !



*


ஒரு
எரி கல்லுப்போல
ஒரு
செங்கோணமுக்கோணத் திசையிலிறங்கி
ஒரு
தீர்மானமான உறுதியோடு
ஒரு
வெற்றிடமான நொடியில்
ஒரு
தற்கொலை !



*

இந்த மரவீடு 
பசுந்தீவனப்புற்களின் 
சேமிப்புக்களஞ்சியமாயிருக்க
லாம் !



குதிரைகளின் 
பிராண்டல் வாசம் 

பழைய நண்பன் போல
நினைவழியா
இதயசுகமாயிருக்கு, !



வாசனை முழுவதும்
நினைவுகள்
தாங்கிப்பிடிப்பதால்
கழுத்தைத் திரும்பிப் பார்க்காமல்
கடந்து போவது
இலகுவாயிருக்கவில்லை,



காலத்தை
உதாசீனம் செய்துகொண்டதாலோ
தெரியவில்லை
பண்ணைக்களஞ்சியம்
ஒரு பக்கம் சாய்ந்துவிட்டது,



கறலரித்துக்கொண்டிருக்கும்
இரும்புத் திருப்புமுனைகள்,
இடுக்குகளிலும்
சிலந்திவலைகளைத் தாண்டி
உள்நுளையமுடியாத
பழைய வெய்யில் ,



உக்கிக்கொண்டிருக்கும்
வைராக்கிய மரச்சட்டங்கள் .
தூசி அப்பிப்படிந்தும்
நிலையாமையை நியாயப்படுத்த
சிதைவுகளோடு எதிரியாகி
மாறிமாறி முரண்படும்
வரலாறு ,



நான்
குதிரைலாயத்தை
கொஞ்சநேரம் தான்
நடைநிறுத்தி நின்றுபார்த்தேன்



அதற்குள்ளேயே
வாழ்ந்தழிந்து முடியும் போதும்
தொடக்கப்புள்ளியில்
கொண்டுவந்து நிறுத்திய
அதன் பிடிவாதங்கள்
என்
நிகழ்காலத்தை நிராகரித்துவிட்டது !






Wednesday, 1 August 2018

ஜீவனைத் தீண்டும் கண்களில்...

வளைந்து நெளிந்து 
நகர்ந்துகொள்ளத் தடுமாறும் 
பார ஊர்திகள் ! 
முடிவேயற்ற 
மூச்சு ஏற்றத்தில் 
நீண்ட நெடுஞ்சாலை !
நடைபாதையில்
படுத்திருக்கும்
பளிங்குச் சலவைக்கற்கள் !
கோர்வையாக நெய்யப்படும்
நேர்க்கோட்டில்
தடுமாற்றமில்லாத
எறும்புகள்!





*
வெளியேறவேண்டிய 
சரியான தருணம் 
திகைப்பில் தாமதிக்குது,
இனி 
நடனமாடியபடியே 
சுழன்றடிக்க
இடைவெளிகளுமில்லை !
பலவிதத்திலும்
தனித்து நிற்கிறது
முடிவின்மையின் காத்திருப்பு !
ஆயாசமானவைகளைத்
தவிர்த்த பிறகும்
எதற்காக
மவுனமாகவிருக்குது
நேரம்?



*
மழை பெய்யும் நாட்களில் 
மரணம் 
நெஞ்சில் அடைப்பது போலிருக்கும்
எதிர்காலத்தைத் 
தெளிவுபடுத்தமுடியாமல் 
மவுனித்திருப்பேன் !
வெய்யில் நேரங்களில்
மீதமான வாழ்க்கை
வெளியே அழைப்பதுபோலிருக்கும்
சமீபிக்கின்ற ஓசைகளிலிருந்து
இறந்தகாலத்தை
வித்தியாசப்படுத்தத் தெரியாமல்
நடந்துகொண்டிருப்பேன் !
இரவுகள்
ஆழந்த அமைதியோடு
முத்தமிட்டுக்கொள்ள
மனசெல்லாம்
மெல்லத் திரும்பிவிடுகிறது
தற்போதைய நிலவரத்துக்குள் !





*

காலம் மங்கிய 
கறுப்பு வெள்ளைப் 
புகைப்படங்கள் !
நிதானமாகத்தான் 
பார்க்கவேண்டியிருந்தது !
ஒவ்வொன்றிலும்
வாழ்ந்துபோன மனிதர்களைப்
பாரமாக்குகின்றது
தலைமுறைத் திசைமாற்றங்கள் !
நிறங்களில் இல்லாத
சந்தோஷ அலைகளை
நிரம்பியிருந்தது
அவர்களின் முகங்களில் !





*

தேவாலயத்துக்கு 
மிக அண்மையிலிருந்தது 
சவுக்காலை ! 
தங்களில் 
யாரோவொருவரைப் புதைத்துவிட்டு 
மவுனத்தை வெளியேற்றும்
வயதான மனிதர்கள் !
சற்றுநேரம்
நானும் இறந்து போய்விட்டேன் !
பிறகு
புரிதலற்ற இடைவெளியைக் கடந்தபடி
கைகளை உதறிக்கொள்கிறேன் !
இப்போது
ஒவ்வொருவரும் அவதியாக
வாழ்வைத் துரத்த வெளிக்கிடுகிறார்கள் !
எனக்குரியவைகளைப் பின்தொடந்தபடி
நானும்தான் !
உயிரோடு
விலகிநின்று பார்த்ததனால்
ஒரு சிரிப்போடு
சமாளிக்கமுடிந்தது !



*

வெய்யிலில் 
வேடிக்கைபார்க்கவும் 
மனதில்லை !
எங்கேயோ 
அனர்த்தங்கள் 
நிகழவாய்ப்பிருக்கின்றது போல
தசைகள் முறுக்கிக்கொள்கின்றன !
இந்த வலி
தனிப்பட்ட துயரம்,
உலகத்தை அளித்துச் செல்கிற
பின் உளைவு !
இது
நிரந்தரமாகவே
சஞ்சரிக்கும்
நேரங்களிளெல்லாம்
கைவிடப்பட்ட உணர்வு !





*
மிகப்பெரிய
வேடந்தாங்கல் 
நீர்ப்பரப்பை அளவெடுத்தபடி ,
கோடைக் காற்றோடு 
சிறகசைந்தபடியே 
கரணமடித்து வந்திறங்கியவுடன்
மூச்சு முட்டி நிற்கின்றன
திசைப் பறவைகள் ,
இந்த வெற்றிடம்
நீண்ட பறத்தலில்
தற்காலிகமானதுதான் !
இப்படியான
இடங்களுக்குள்
நானெப்போதும்
தனியனாகவே நுழைய விரும்புகிறேன்.!





*
பழைய வீதி
நேற்றுப்போட்ட நடைபாதை 
புத்தம்புதிய வீடுகள்
நவீனமான நெருக்குதல் 
நான் 
முகத்தைத் துடைத்து
என்னோடும்
வெய்யிலோடும் நடந்த
உன்னோட காலடிகளைத்
தேடுகிறேன் !
அதே
மணிப்புறாக்கள் பறக்கின்றன
அதே
குடை விரித்த மரங்களிலிருந்து !
இப்போது
எல்லாமே பழையதாய் மாறுகிறது!





*

" அவள் எங்கேடா " மச்சான் ?
அதே வழக்கமான புன்னகையோடு 
நெடுநாளைய நண்பன் 
ஆரம்பிக்கின்றான் !
நினைவுகளை 
உறிஞ்ச ஆரம்பிக்கிற
வாசனைகளெல்லாம்
மிதக்கத்தொடங்குகிறன !
" எங்கேயென்று
தெரியாதடா மச்சான் " என்கிறேன் !
அவளுக்கேயுரிய
ஜீவனைத் தீண்டும் கண்களில்
அதே மின்னொளி ஆச்சரியம் !
சட்டென்று
நிசப்த மனசாட்சி
நீண்ட இரைச்சலாகியது !
எதற்காகப் பொய் சொன்னேன் ?
மவுனத்துக்குள்
நுழைந்துகொள்ளும் மனதுக்குள்
நினைவுகள்
உறிஞ்ச ஆரம்பிக்கிற நேரமமெல்லாம்
அவள் இங்கேதானேயிருக்கிறாள் !





*

உஷ்ணமாகும்
வருடத்தின்
இந்த மாதத்துக்கு
இது
மிகவும்குளிர்தான் , 

வடமேற்கே
நீல மலைகளில்
இன்னும் பனிபடர்ந்திருக்கிறது,
வெடித்தபடி
நொறுங்கிக்கொண்டிருக்கிற
அசையா நதியின்
சரிவான கரையில்
சறுக்கியபடி கீழிறங்குது
உறை பாளங்கள் ,
தேவையற்ற சுமையென
நினைத்திருக்கலாம்
ஒரு
மஞ்சள்ப் போர்வையை
போர்த்திவிட்டு நகருது
வடதுருவ சூரியன் !

 

*



தீவிரமாகத் தேடிப்பார்த்து
எல்லைகள்
கிழிக்கப்படுகின்ற
இடத்தில்
தூக்கத்தைக் கெடுக்கிறதுபோல 

அந்தக் கனவு !
என்னைத்தவிர
யாரெல்லாருமோ
அந்தரங்கமான
பங்கெடுப்புக்களில்
வந்துவந்து போனார்கள் !
என்னையறியாமல்
நுழைந்தபோதும்
திருப்திப்பட்டுக்கொள்ள
ஏதுமிருக்கவில்லை !
சில சமயம்
ஒரு கனவென்பது
எனக்குரியதென்பதையும்
தாண்டிப்போய்விடுகிறது.!




*




குறுகலான 
சந்து முடுக்கில் 
இருட்டுப் பிரவேசம் ! ,
சட்டென்று 
உரையாடல் துவங்கும் போதே 

ஒருமையில் தான்
ஆரம்பித்துவிடுகிறது!
நொடிப்பொழுதில்
அடையாளம் கண்டு
விசாரிக்க வருகிறார்கள்!,
நான்
நானாகவேயிருக்கிறேன் !
இப்போதெல்லாம்
முன் போல்
கோபப்படமுடிவதில்லை.
என்னிடமிருந்து
மனம் அயர்ந்து விடுகிறது.1
இப்போது
நான் நிட்பதைக்
கணக்கிலெடுக்காமல்க்
கடந்துவிடுகிறார்கள் .!
வெளியேறிவிட
அந்த
விளிப்பு ஒன்றே
போதுமானதாயிருந்தது.


 

*


பின் மனசில் 
அலைக்கழிப்புக்கள்
மேல் அமிழ்த்தி 
ஓடிக்கொண்டேயிருக்கும் 
காட்சி ஞாபகம் ,

புரிதல்கள்
முற்றிலும் வேறாகவிருந்தாலும்
தினவாழ்க்கை
கொஞ்சமாய்
என்னவென்று தெரியாத
ஏதோ ஒன்றை
உறிஞ்சிக் கொண்டிருக்கிறது,
கண்

காணாமல்
அடிமனசில் ஒளித்து
அது
எப்போது வேண்டுமானாலும்
தீர்ந்து போகக் கூடும் !
















Tuesday, 31 July 2018

வேறெதுவுமே நிகழவில்லை !

இலக்கிய  விசியம் தெரிந்தவர்கள் கவிதைமொழியில் இல்லாத எழுத்துக்களைக் கவிதை என்று வரையறை செய்வதில்லை. இது ஒரு பிரச்சினை. இவளவு களேபரத்துக்குள்ளும்   எழுதுவதின் உள் நோக்கிய குவிமைய மறைபொருள்க் கருத்தைக் கண்டு  பிடிக்க முடியாத,  சிந்தனை வரட்சியில்  இருக்கும் மனிதர்கள் எதையுமே  மேலோட்டமாக விளங்கிகொள்வதும் நடக்கத்தான் செய்கிறது.
                                                                                
                                                    உங்களுக்கு ஒரு விசியம் தெரியுமா ? நாயைப் பிடி பிச்சை வேண்டாம் என்று உலகம் ஹைப்பர் வேகத்தில் ஓடும் இன்றைய நாட்களில் இலகுவான பாவனையில் உள்ள மொழியின்  வரிகளில்  நாக்கு நனைச்சு விட்ட மாதிரிக் கவிதைகள்  எழுதுவது ஒரு பிரபலமான ஸ்டைல் ஆகி இருக்கு.  வாசிக்கும் எல்லாருக்கும் சுருக் என்று தலைக்கு ஏறுது. இப்படி எழுதுவதிலும்  ஒரு திரில் இருக்குத்தான் என்கிறார்கள்  , இப்ப எல்லாம் அதுதான் தேர்தல்கால  வாக்குறுதி போல சூடு பிடிக்குது.
                                                                               
                                                                 மேலோட்டமாக  கமக்கட்டில் கிச்சு கிச்சு மூட்டி விடுற மாதிரியான சின்னச் சின்ன வரிகளிலும் , யாருமே  நினைக்காத  கற்பனை எல்லைகளுக்குள்  அதை வாசிப்பவர்களைச்  செலுத்துகிற   அவை ஜப்பானிய ஹைக்கூ வடிவமா, புண்ணாக்கு வடிவமா, அல்லது புடலங்காய் வடிவமா என்பது போன்ற தர நிர்ணயம் எல்லாவற்றையும் தாண்டி ஏதோவொரு சம்பவம் , அனுபவம், காட்சி,  கனவை இழுத்து விரிப்பதால் வரும் வரிகளாக இருக்கலாம்.


                                                   அல்லது வெறுங்குப்பையாகவும் இருக்கலாம். உதவாக்கரைக்  குப்பைகளோடு குப்பையாக அதுவும் இருந்திட்டு போகட்டுமே. !


*


ஒரு 
கவிதையை எதிர்பார்ப்பவர்கள் 
தயவுசெய்து இதை வாசிக்கவேண்டாம் 
ஒரு 
கவிஞ்சனை அடையாம்காண்பவர்கள் 
நன்றியோடு இதைக் கடந்துவிடுங்கள்
ஒரு
மொழியில் வலியை வெறுப்பவர்கள்
கெஞ்சிக்கேட்க்கிறேன் மன்னித்துவிடுங்கள்
ஒரு
தப்பும் வழியை மறைப்பவர்கள்
அனுப்புகூர்ந்து அலட்சியமாயிருங்கள்
ஒரு
அவமரியாதையைத் தரநினைப்பவர்கள்
மரியாதையோடு மறந்துவிடுங்கள்
ஒரு
பொறாமையைப் பெரிதாக்கநினைப்பவர்கள்
இரக்கமுடன் சாந்தியடையுங்கள்
ஒரு
இயலாமையை ஒப்பிடஜோசிப்பவர்கள்
ஓரமாக ஒதுங்கி நில்லுங்கள்
ஒரு
வெறுப்பை ஊதிக்கிளப்புவார்கள்
உங்களுக்குளேயே அடங்கிப்போங்கள்
ஒரு
ஆத்மாவின் அலைச்சலை விமர்சிப்பதை
அடக்கியே வாசியுங்கள்
ஒரேயொரு
விழுந்து கொண்டிருக்கும் தருணத்தில்
தாங்கிப்பிடிக்க முன்வருவார்கள் மட்டும்
இப்போது
என்னோடு வாருங்கள்
அந்தவொரு நன்றியோடு நானிருப்பேன்
உங்களுக்காக….



*

மனஓட்ட
விளக்கங்களோ
முடிவில்லாத
விதண்டா விவாதங்களோ
வெளிச்சமில்லாத ...
நீள் காத்திருப்புகளோ
நடைப்பயணங்களின்
வசீகரத்தைக் குறைத்துவிடலாம் !
உருவாக்கிவைத்திருக்கும்
சிக்கலானபாதை
நிறையத் திருப்பங்களோடு
ஆரம்பித்துவிடுகிறது
அதிலிருந்து
எத்திசை தெரிரிந்தெடுப்பதென்பதில்
மிகமுக்கியமான விஷயங்கள்
சிதறிவிடுகிறது !





*

பூங்காவனத்தின்
ஜவ்வனப் பிரமிப்புகளில்
ஆசுவாசம்தான்
என் கண்களுக்கு தெரிகிறது.
நேரம்தவறாமல் ...
காம்புகளில் விரும்பிப்பிரிந்து
மிதந்தபடியே
குறிப்பிலக்கில்லாமல்
காற்றழைந்து
கீழிறங்கிக்கொண்டிருக்கும்
பருத்திப்பிஞ்சுகள் !
அங்குலம் அங்குலமாக
சிதறல்களைக்
கூட்டிப்பெருக்குகிறார்கள் !
நான்
எனக்குரிய அலைச்சல்களோடு
கழித்துப்பிரித்துப்
பொருத்திப்பார்க்கிறேன் !





*


இப்போதுதான் 
புறப்பட்டுப்போனாள் !
இருட்டு 
விழுங்கிக் கொண்டது .
எவ்வளவு நேரமென்று 

தெரியவில்லை !
வானம் கவிந்திருந்து
மழை
எப்போது வேண்டுமானாலும்
தடமழிக்க
வருமென்பது போலிருந்தது.!
வழியனுப்பி
நினைக்க வைத்து விட்டு
விளக்குகள்
அணைக்கப்பட்ட
நொடிப்பொழுதில்
அடையாளம் கண்டு
மறக்காமல்த்
தேடி வந்து விடுகிறது
காலடியோசை !


 *

 நம் 
நிகழ்கால யதார்த்தங்கள் 
ஒரேமாதிரி 
இருக்கப்போவதில்லை !
அடிக்கடி 
விருப்புக்களின்றி
நேசிப்புகள் மாற்றப்பட்டலாம் !
காத்திருக்கையில்
பழகிப் போன
உணர்ச்சி விஷயங்களும்
பழசாகிப்போன
பாவனை முகங்களும்
உங்களுக்கு நினைவு வருகிறதா?
தயவு செய்து
அபத்த தரிசனங்களை
அழித்துவிடுங்கள் !



*
வெப்பமான
முன்கோடை நாட்கள் ,
தேடுவாரற்ற
நிசிக்கலா நிலவு ,
மேலதிகமான ...

வியர்வை வாசனை ,
காற்று விசிறிக்கொடுத்த
மேப்பிள் மரநிழல்கள்,
நகரமுடியாத
நடுப்பகல் நேரம் ,
விலக்கமுடியாமல்
நினைவெழுதும்
நீ ,
எல்லாமே
முக்கியமானவை
என்
அனுபவத்தைப்போல




*
தூறல்கள்
தலையை நனைக்கிறது,
மென்குளிர்
அணைப்புகளோடு
கோபித்துக்கொள்ளும் ...
தோள்மூட்டு உஷாராகுது ,
மந்தாரமாகவே
துண்டு துண்டாகி
நினைவிலும் வலிக்கும்
கழுத்து எலும்புகள்,
நிமிர்ந்து பார்க்கும்போது
ஆடுதசைகள் இறுக்கிக்கொள்கிறது
ஆனாலும்
மேகங்களைப் பார்த்தேயாகவேண்டும் !
என்னைப்போலவே
ஒரு பறவை
கெண்டைத் தலையைத் திரும்பியபடி
சரிந்து பறந்து கடந்தது ,
அத்தோடு
வெறிச்சோடிப்போனது
மேல்வானம் !



*

மிகப் பிரத்தியேகமாக 

முழங்கியபடி
வெற்றிகரமான நாள்
என்றார்கள் !
வலிந்தெடுத்த ...
பரவசமான நிலையில்
வெறும் வார்த்தைகள்
நாலுதிசை நகர்வது போலிருந்தது !
கரகோஷங்கள்
பிளிறிய தருணங்களில்
கொஞ்சம்போல
ஆதி உயிர்ப்புகள்
முளைத்தெழுந்தது உண்மைதான் !
பிறகு
வெய்யில் தணிய
மழை தூறியது
வேறெதுவுமே நிகழவில்லை !



*


நேற்று
நேற்றேதான்
நாசமாப்போன நேற்றேதான்
அதுவும்
வேகமான ரெயில் பயணதில்
தொடர்பிழந்த இலக்கம்
வருடங்களின்பின் உயிர்ப்பித்த போதே
சந்தேகம் காற்றில் கனதியாகியது

அப்படியென்ன அவசரங்களில்
அப்பிக்கொண்டிருக்கும் காரணம் ?
எனக்கெடுத்துச் சொன்ன
முகம்தெரியாக் குரலின்
முடிவு வார்த்தைகளில்
பதுங்கிப் பதுங்கிய தொடக்கம்
இடை இடையில்
மனத்தைத் தேற்றிக்கொள்ளும்
உபதேச உத்தேசங்கள்
காலமாகியதை
ஒரேதிசையில் ஒருங்கிணைவாக்க
ஆத்மாவோடு ஆறுதல்ப்படுத்தும்
அர்த்தமில்லா சமரசங்கள்
அவன் இறந்துபோன
அந்த செய்தி உண்மையானபோது
வேகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது

ரெயில்
நான்தான்
பத்துநிமிட நேரங்கள்
நிரவமுடியாத நேசிப்பின் இழப்பில்
நிலைக்குத்திய வெறுமை வெளியில்
விழிகளை அசைக்கமுடியாது
ஸ்தம்பித்துவிட்டேன்



அப்போதும்
சந்தோஷத்தில் அசைந்தாடி
ஏறி இறங்கித் துள்ளிக்குதித்து
ரெயில் 

வேகமெடுத்துத்தான் 
ஓடிக்கொண்டிருந்தது…

*
அது
ஒரு பறவையின்
அவசர அழைப்பாயிருக்கலாம் ,
விடைபெறும்
மேகங்களைத் ...
திரத்திக்கொண்டிருக்கும்
சூழ்நிலை போலவுமிருக்கலாம் ,
கூர்ந்து கவனிப்பதால்
வெளிச்சங்கள்
வெறும் இருட்டாக மாறிவிடும்
என்னுடைய வானத்தில்
இரவெல்லாம்
கலந்துவிடுகிறது
அதன் கீச்சிடல் !









Wednesday, 25 July 2018

அடையாளங்களுடன் !




 கவிதைக்கான ஏகப்பட்ட விசியங்கள் ஏக்கப்பெருமூச்சு விட்டபடி இருக்கு. எவளவோ அபத்தமான கொன்செப்ட்கள் இன்னும் தொடப்படாமலேயே இருக்கு. ஏன் அதை யாரும் எழுதாமல் இருக்கிறார்கள் என்று  புரியவில்லை, அதைவிட எவளவோ ஸ்டைல் இன்னும் புதுமையாக பரிசோதனை செய்யப்பட வேண்டியும் காத்திருக்கு.


                                                               லத்தினமரிக்கன் " மேஜிக்கள் ரியலிசம் " ஸ்டைலில் , பாப்பிலோ நெருடாவின்  " சமகாலப்பயணிப்பு  உணர்வலை " போல , மார்க் ஸ்ட்ராண்ட்டின் " படம் கீறும் மொழி " வடிவில் ,   ஏன் நம்மவர்களால் தமிழில் எழுதமுடியவில்லை? நம்மிடையே கற்பனை வறட்சியா ? அல்லது நமக்கு ஒத்துவராத தத்துவங்கள் என்பதாலா ?

                                                         
                                                             ஒருவர் எழுதத் தொடங்கும் ஸ்டைலில் ஏன் மற்றவர்களும் ஈ அடிச்சான் கொப்பி போல எழுதுகிறார்கள் என்று   விளங்கவில்லை. கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம் போல  ஒரு நாளுக்கு நாலு இடத்தில ஒரே கவிதை நாலு விதமாக வார்த்தைகளை மாற்றிப்போட்டு நளினமான மாறுவேஷத்தில் உலாவருகுது !


                                                      " conceptual framework "." writing style " , " manner of expressing ", " specific contex thoughts," " language characteristic ", " way of approaching ", " reflection of personality, " " Word choice ", " sentence fluency " இவைகளை விளங்கினால்தான் ஓரளவுக்கேனும் நல்ல கவிதைமொழியில் எழுதமுடியும்  என்று ஒரு ஆங்கில விமர்சகர் எழுதியிருக்கிறார்.




*




சிலசமயம்
அதிக எளிமையாக
நெருக்கமாகிவிடுகிறது
விரக்தியோடு
தெரிவுசெய்யும்  முடிவுகள்  .
அப்போதெல்லாம்
கோபங்களை  தணிக்க
யாரைநினைப்பதென்று
மனதையும்தான்
வற்புறுத்தி
ஏற்கவைக்கமுடியவில்லை ,
பலசமயங்களில்
அதிர்ச்சி தரும்
வெஞ்சினக்   கணங்களையும்
நியமித்துவிட்டு
வெளியே  போய்விடுகிறது
பொறுமை  !




*
எதற்காகத்

தோல்வி  என்பதை
மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்கள் .
அநேக இடங்களில்
பொய்கள்தானே
உண்மைகளைவிடவும்
கவர்ச்சியாக
வெளிப்படுத்தப்பட்டனவே ,
மரணம் வரையும்
விரட்டித்   திரத்திச்சென்ற
கடைசிக் கனவுகள் 
வீழ்த்தப்பட்ட  தினமென்பதும்
ஒரு
சிதிலமாக உடைந்துபோன
குறியீடு !




*



திரும்பத் திரும்ப
வாழ்வு ஓடுகிறது.
சலிப்புற்றுப்
பளிங்குபோன்ற வெய்யில்
புல்வெளிகளில்
முழங்கை முகம் கொடுத்து
தலைசாய்த்துத்
தூங்கிவிழும் பொழுதுகளில்
நிழல்தரும்
பெரு மரங்களை  விடவும்
அடிப்பாதங்களில்
ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்
எறும்புகளை
அதிகம் நேசிக்கிறேன்.




*




விடுதலை

தூர வெளிச்சமென்ற 

புரிதலோடு  முன்னேறுவதில்

விடுபட்டுப்போனது

பேய்க்கனவு

மனித இருப்பை

உறுதிசெய்யமுடியாத

வரலாற்றில்

புரட்சி என்பதில்

எப்போதும் உடன்பாடில்லை .

தர்மயுத்தமென்பது

தியாகங்களால்   கிடைக்கும்

அறம் .


*



வாய்க்கால்க் கரைகளில்
தலையசைவுகளில் 
இசைந்து நின்று
கடைசிச் சொல்லுக்காகக்
காத்திருந்தார்கள்,

தரையிறங்குதல்,
சுற்றி வளைப்புகள்
முறியடிப்புகள் 
எல்லோருக்குள்ளும்
வெற்றிகரமான  திட்டங்கள்
இருந்துதானே உண்மை ,

பாதைகளை விட்டுவிட்டு
எல்லோருமே
சரணடைந்துவிட்டார்கள்                                                                       
அவர்கள்
ஊருக்குள் போனார்கள் ,
இவர்கள்
எங்கே போனார்கள் ?



*



மறைமுகமான
வெடிவைப்புக்களிலும்
உயிர்கள்
நம்மவர்களால்
நமக்கிடையிலேயே
பலியெடுக்கப்பட்டனவே ,
என்றேனும்
சமநிலை  உருவாகும்
ஒரு நாளில்
எல்லாக் கால்த்தடங்களும் 
நினைவுகூறப்படும் !.



*




தீச்சுடர்
தடம் மாறிய
தருணத்திலிருந்து,
கருத்துக்கள்
பின்வாங்கிய பாசறைகளில்  
தீர்க்க தரிசனங்கள் 
வாழ்விழந்த
காலத்தைப் போல
இடைப்பயணதில்  முடிந்துபோனது !

ஒவ்வொரு
திசைதவறிய  
தொலைதூரப்   பீரங்கிகளின்  
குண்டுச் சிதறறிலும்
பெருக்கெடுத்த
குருதியோட்டம்,

எளிதில்
மறந்துவிடமுடியாத
ஒரு சுட்டுவிரல்
இப்போதும்
அங்கேதான் குறிகாட்டுகிறது !



*



அவர்கள்
மண்டியிட்டுத் தப்பி  
வெகுதூரம் வந்துவிட்டபிறகும்
இப்போது
விவாதிக்கவும், ஆராதிக்கவும்
ஒரு
நினைவு நாள் !
மரனத்தோடு
சாய்ந்துகொண்ட
சம்பவங்களுக்குத் திரும்பும்
அந்தக்கணத்தில்,
சட்டென்று
உள்நுழைந்து  விடுகிற
ஒரு
துளிக்  கண்ணீர் 
ஒரு
வாய்விட்ட அழுகுரல்
ஒரு 
வலியின் கதறல்
ஒரு
மூச்சின் அடங்கல்  
உணர்த்திவிடுகிறது
இன்றுவரையில் 
பயணிக்கிறகதையையில்
இன்னும்
சொல்வதற்கு
நிறைய இருக்கிறதென்பதை  ,




*




இது
ஒப்பாரி போலிருக்கலாம்
இடம்,காலம்
எந்தக் குறிப்புகளுமில்லாத
கனதியான
தோல்விப்பாடல்.
ஒரு
தீர்க்கமான  முடிவோடு
ஆக்ரோஷமான   மெட்டு
ஆர்ப்பரித்து  ஆரம்பிக்கிறது,
காலமும் காற்றும்
எதிர்திசையில் நெருங்க
யுத்த களத்துக்கு
நிர்ப்பந்தமாக   இடம்பெயர்கிறது
பாதையை தேடுவதில்
ஆர்வங்களில்லை
திசைகளில்
எங்கெங்கோவெல்லாம்
பயணித்துக்கொண்டிருக்கிறது,
எளிமையான வரிகளில் 
மனிதர்கள்
இருப்பிடங்களை விட்டு
எழுந்து சென்றிருக்கிறார்கள்
காடுகளில்
மறைந்துகொள்கிறார்கள்
காடுகளில்ப்
பதுங்கி உறங்குகிறார்கள்.
கடலின்  முகத்தில்
காணாமல் போகிறார்கள்
வெடிச்சத்தங்கள்
நெருக்கமாக நெருங்க
கூட்டமாகக்
கொல்லப்பட்டார்கள்
வெகுதூரத்தில்  இருக்கிறது
அந்தப்
புதைகுழிகள்
வெறுமையோடு தனித்திருக்கிறது
நினைவு !




*





யாரிடமும்
எப்பொழுதும்
வெளிப்படுத்த விரும்பாத 
எதோவொன்றைக்
கண்களைக்கட்டி 
கடத்தியதைப் போல.
யுத்தத்துக்குள்
வாழ்ந்தவர்களுக்குத்தான்  தெரியும்
வெடிமருந்து நிரம்பிய
கந்தகக் காற்றின்
பாரம் !



*
அடுத்தடுத்து

மனதில்
இளம்  ரத்தங்கள்
ஒடிக்கொண்டிருக்கும் போது
எப்படி
நேரடி அறிமுகத்தில்
அடையாளங்களுடன்
திரும்புதல் சாத்தியம்  ?
எதற்கோ
அடிமைப்பட்டுக் கிடக்கின்றது
உரிமை கோரப்படாத
அந்தத்
தலைமுறை !