Wednesday, 25 July 2018

அடையாளங்களுடன் !




 கவிதைக்கான ஏகப்பட்ட விசியங்கள் ஏக்கப்பெருமூச்சு விட்டபடி இருக்கு. எவளவோ அபத்தமான கொன்செப்ட்கள் இன்னும் தொடப்படாமலேயே இருக்கு. ஏன் அதை யாரும் எழுதாமல் இருக்கிறார்கள் என்று  புரியவில்லை, அதைவிட எவளவோ ஸ்டைல் இன்னும் புதுமையாக பரிசோதனை செய்யப்பட வேண்டியும் காத்திருக்கு.


                                                               லத்தினமரிக்கன் " மேஜிக்கள் ரியலிசம் " ஸ்டைலில் , பாப்பிலோ நெருடாவின்  " சமகாலப்பயணிப்பு  உணர்வலை " போல , மார்க் ஸ்ட்ராண்ட்டின் " படம் கீறும் மொழி " வடிவில் ,   ஏன் நம்மவர்களால் தமிழில் எழுதமுடியவில்லை? நம்மிடையே கற்பனை வறட்சியா ? அல்லது நமக்கு ஒத்துவராத தத்துவங்கள் என்பதாலா ?

                                                         
                                                             ஒருவர் எழுதத் தொடங்கும் ஸ்டைலில் ஏன் மற்றவர்களும் ஈ அடிச்சான் கொப்பி போல எழுதுகிறார்கள் என்று   விளங்கவில்லை. கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம் போல  ஒரு நாளுக்கு நாலு இடத்தில ஒரே கவிதை நாலு விதமாக வார்த்தைகளை மாற்றிப்போட்டு நளினமான மாறுவேஷத்தில் உலாவருகுது !


                                                      " conceptual framework "." writing style " , " manner of expressing ", " specific contex thoughts," " language characteristic ", " way of approaching ", " reflection of personality, " " Word choice ", " sentence fluency " இவைகளை விளங்கினால்தான் ஓரளவுக்கேனும் நல்ல கவிதைமொழியில் எழுதமுடியும்  என்று ஒரு ஆங்கில விமர்சகர் எழுதியிருக்கிறார்.




*




சிலசமயம்
அதிக எளிமையாக
நெருக்கமாகிவிடுகிறது
விரக்தியோடு
தெரிவுசெய்யும்  முடிவுகள்  .
அப்போதெல்லாம்
கோபங்களை  தணிக்க
யாரைநினைப்பதென்று
மனதையும்தான்
வற்புறுத்தி
ஏற்கவைக்கமுடியவில்லை ,
பலசமயங்களில்
அதிர்ச்சி தரும்
வெஞ்சினக்   கணங்களையும்
நியமித்துவிட்டு
வெளியே  போய்விடுகிறது
பொறுமை  !




*
எதற்காகத்

தோல்வி  என்பதை
மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்கள் .
அநேக இடங்களில்
பொய்கள்தானே
உண்மைகளைவிடவும்
கவர்ச்சியாக
வெளிப்படுத்தப்பட்டனவே ,
மரணம் வரையும்
விரட்டித்   திரத்திச்சென்ற
கடைசிக் கனவுகள் 
வீழ்த்தப்பட்ட  தினமென்பதும்
ஒரு
சிதிலமாக உடைந்துபோன
குறியீடு !




*



திரும்பத் திரும்ப
வாழ்வு ஓடுகிறது.
சலிப்புற்றுப்
பளிங்குபோன்ற வெய்யில்
புல்வெளிகளில்
முழங்கை முகம் கொடுத்து
தலைசாய்த்துத்
தூங்கிவிழும் பொழுதுகளில்
நிழல்தரும்
பெரு மரங்களை  விடவும்
அடிப்பாதங்களில்
ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்
எறும்புகளை
அதிகம் நேசிக்கிறேன்.




*




விடுதலை

தூர வெளிச்சமென்ற 

புரிதலோடு  முன்னேறுவதில்

விடுபட்டுப்போனது

பேய்க்கனவு

மனித இருப்பை

உறுதிசெய்யமுடியாத

வரலாற்றில்

புரட்சி என்பதில்

எப்போதும் உடன்பாடில்லை .

தர்மயுத்தமென்பது

தியாகங்களால்   கிடைக்கும்

அறம் .


*



வாய்க்கால்க் கரைகளில்
தலையசைவுகளில் 
இசைந்து நின்று
கடைசிச் சொல்லுக்காகக்
காத்திருந்தார்கள்,

தரையிறங்குதல்,
சுற்றி வளைப்புகள்
முறியடிப்புகள் 
எல்லோருக்குள்ளும்
வெற்றிகரமான  திட்டங்கள்
இருந்துதானே உண்மை ,

பாதைகளை விட்டுவிட்டு
எல்லோருமே
சரணடைந்துவிட்டார்கள்                                                                       
அவர்கள்
ஊருக்குள் போனார்கள் ,
இவர்கள்
எங்கே போனார்கள் ?



*



மறைமுகமான
வெடிவைப்புக்களிலும்
உயிர்கள்
நம்மவர்களால்
நமக்கிடையிலேயே
பலியெடுக்கப்பட்டனவே ,
என்றேனும்
சமநிலை  உருவாகும்
ஒரு நாளில்
எல்லாக் கால்த்தடங்களும் 
நினைவுகூறப்படும் !.



*




தீச்சுடர்
தடம் மாறிய
தருணத்திலிருந்து,
கருத்துக்கள்
பின்வாங்கிய பாசறைகளில்  
தீர்க்க தரிசனங்கள் 
வாழ்விழந்த
காலத்தைப் போல
இடைப்பயணதில்  முடிந்துபோனது !

ஒவ்வொரு
திசைதவறிய  
தொலைதூரப்   பீரங்கிகளின்  
குண்டுச் சிதறறிலும்
பெருக்கெடுத்த
குருதியோட்டம்,

எளிதில்
மறந்துவிடமுடியாத
ஒரு சுட்டுவிரல்
இப்போதும்
அங்கேதான் குறிகாட்டுகிறது !



*



அவர்கள்
மண்டியிட்டுத் தப்பி  
வெகுதூரம் வந்துவிட்டபிறகும்
இப்போது
விவாதிக்கவும், ஆராதிக்கவும்
ஒரு
நினைவு நாள் !
மரனத்தோடு
சாய்ந்துகொண்ட
சம்பவங்களுக்குத் திரும்பும்
அந்தக்கணத்தில்,
சட்டென்று
உள்நுழைந்து  விடுகிற
ஒரு
துளிக்  கண்ணீர் 
ஒரு
வாய்விட்ட அழுகுரல்
ஒரு 
வலியின் கதறல்
ஒரு
மூச்சின் அடங்கல்  
உணர்த்திவிடுகிறது
இன்றுவரையில் 
பயணிக்கிறகதையையில்
இன்னும்
சொல்வதற்கு
நிறைய இருக்கிறதென்பதை  ,




*




இது
ஒப்பாரி போலிருக்கலாம்
இடம்,காலம்
எந்தக் குறிப்புகளுமில்லாத
கனதியான
தோல்விப்பாடல்.
ஒரு
தீர்க்கமான  முடிவோடு
ஆக்ரோஷமான   மெட்டு
ஆர்ப்பரித்து  ஆரம்பிக்கிறது,
காலமும் காற்றும்
எதிர்திசையில் நெருங்க
யுத்த களத்துக்கு
நிர்ப்பந்தமாக   இடம்பெயர்கிறது
பாதையை தேடுவதில்
ஆர்வங்களில்லை
திசைகளில்
எங்கெங்கோவெல்லாம்
பயணித்துக்கொண்டிருக்கிறது,
எளிமையான வரிகளில் 
மனிதர்கள்
இருப்பிடங்களை விட்டு
எழுந்து சென்றிருக்கிறார்கள்
காடுகளில்
மறைந்துகொள்கிறார்கள்
காடுகளில்ப்
பதுங்கி உறங்குகிறார்கள்.
கடலின்  முகத்தில்
காணாமல் போகிறார்கள்
வெடிச்சத்தங்கள்
நெருக்கமாக நெருங்க
கூட்டமாகக்
கொல்லப்பட்டார்கள்
வெகுதூரத்தில்  இருக்கிறது
அந்தப்
புதைகுழிகள்
வெறுமையோடு தனித்திருக்கிறது
நினைவு !




*





யாரிடமும்
எப்பொழுதும்
வெளிப்படுத்த விரும்பாத 
எதோவொன்றைக்
கண்களைக்கட்டி 
கடத்தியதைப் போல.
யுத்தத்துக்குள்
வாழ்ந்தவர்களுக்குத்தான்  தெரியும்
வெடிமருந்து நிரம்பிய
கந்தகக் காற்றின்
பாரம் !



*
அடுத்தடுத்து

மனதில்
இளம்  ரத்தங்கள்
ஒடிக்கொண்டிருக்கும் போது
எப்படி
நேரடி அறிமுகத்தில்
அடையாளங்களுடன்
திரும்புதல் சாத்தியம்  ?
எதற்கோ
அடிமைப்பட்டுக் கிடக்கின்றது
உரிமை கோரப்படாத
அந்தத்
தலைமுறை !










Tuesday, 24 July 2018

மணல்க் கரையின் நினைவில்..

ஒரு  சிறந்த கவிதை தலைவாழை இலையில் போட்ட  கல்யாணச்சாப்பாடுபோல அமர்களமா இருக்குமாம் .  ஒரு நல்ல கவிதை பிரபல பத்திரிகையின் பரபரப்புத் தலைப்புச்செய்தியைவிட சுவாரசியமாய் இருக்குமாம். வார்த்தைச் சிக்கலில் சுழன்றுகொண்டிருக்கும் சுமாரான கவிதை அரைச்சுவிட்ட தஞ்சாவூர் சாம்பாரு போல இருக்குமாம்,



                                                       உப்பில்லாத ரசம்  போல இருக்குமாம் எங்கே செல்கிறது ,என்ன சொல்லவருகிறது என்று விளங்கமுடியாத  திசை இழந்த கவிதை ,  பச்சைத்தண்ணி  போல   அதுக்கும் கீழே இருக்குமாம்  உரைநடைபோல உள்ள  வார்த்தைகளை ஒன்றின் கீழ் ஒன்று  வெட்டி ஒட்டி எழுதப்படும் வாலறுந்த கவிதைகள் என்று மூக்குச்சாத்திரம் பார்த்துச் சொன்னார் ஒரு இலக்கிய ஜாம்பவான்.

                                                                     
                                              எனக்கு அவர் சொன்னதில் உடன்பாடு இருக்கு. காரணம் ஒரு நல்ல கவிதை என்பது வாசிப்பவரின் கலாரசனை, வாசிப்பு அனுபவம், செய்திகளைப் புரிதல் , மொழியை இன்னொரு கோணத்தில் மொழிபெயர்த்தல் , உணர்வுகளை ஒற்றி எடுத்தல் ,படிமங்களைப் பிரித்தறிதல் போன்றவற்றில் தங்கி இருக்கு. எனவேதான் கவிதையையின் தரத்தை அளக்க மூக்குச்சாத்திரத்தைத் தவிர வேறெந்த முறைகளும் கவிதைக்கு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
                                                                  
                                                                   கவிதைக்கு  ஒவ்வொரு தருணமும் மாற்றீட்டு  உள்ளீட்டு வடிவங்களில்  புதுப்பிக்கப்படும் கவிதைமொழி அவசியம். பொஞ்சாதியின் பாவாடையை திருப்பித் திருப்பி அடிச்சு பிழிஞ்சு அடிச்சுப் பிழிஞ்சு தோய்ப்பது போலவே ஒரே வார்த்தைகளை வைச்சுக் கொத்து பரோட்டா பிரட்டிப் பிரட்டிப் போட்ட மாதிரி ஒரு சில விசியங்களை மட்டுமே எழுதிக்கொண்டு இருந்தால் அது எடுபடாது.


                                                 
                                                                      நமக்கென்று நமக்கென்று  விதிக்கப்பட்ட வாழ்க்கை எல்லாருடையதும் போல இல்லை. அதில உள்ள முரண்பாடுகள்தான் ஒரு பொழுது  கலகமாக இருந்தாலும் சில சமயங்களில் கலகலப்பான  சுவாரசியங்களும் நிறைந்திருக்கும். அப்படியான  காலகட்டத்தில்  கலவரமாக மனது அல்லாடியபோது எழுதியவைகள் இவைகள் !



*


நேற்றும் சரி,
ஒரு 
பெரிய சுமை ஏற்றினால்போல 
இன்றும் சரி மனசு சரியில்லை,
அடிக்கடி 
பெரும் எடுப்பில்
வந்துபோகிற
பழைய உபாதைதான் !
ஒரு
விசாரிப்பு,
ஒருசில அக்கறை,
ஒன்றுக்கும் மேற்பட்ட
புன்னகைகள்,
கிடைக்காமலாபோகப்போகிறது
என்றும் தோன்றிய நேரம்தான்
எதிரே இருக்கும்
மட்டுப்படுத்த முடியாது
ஆயுளின் நீளம்
பயமுறுத்தியபடியிருக்கிறது !.



*

சிலருக்கு
உறவுச் சிக்கல்கள் ,
கதைக்க வேண்டியதைக்
காற்றோடு தள்ளிவிடும் 

தாம்பத்தியங்கள் ,
காதுகளைப்
பொத்திக்கொள்ளாத குறையாக
சிலருக்கு
வாழ்க்கையே பிரச்சினை,
அபாண்டங்களை
அள்ளி வீசத்தொடங்கினாலும்
ஒன்றும் வராதென்ற
ஒப்பீட்டில்
என் பிரச்சினைகளில்
எதுவுமேயில்லை !



*

சொல்லுங்க
மறதி இப்படியா ஆட்டும்?
பாதிக் குளிர்நாட்கள்
நடுச்சாம இரவில்,
பகலின் சப்தம்போலத்தோன்ற 

இதயத்துடிப்பை அடக்கிக்
கீழிறங்கிப் போய் .
விளக்கைப் போட்டால்
வெளியே
மொழுக்கென்று
வெளிச்சமிருக்கும் !
ஜன்னல்களைத் திறக்க
தனியாகத் தூங்குகிற
இருட்டு விழித்திருக்கும் !
அதிகாலையில்
கிழக்குப்பக்கம்
மேற்க்குப்புறமாக மாறியிருக்கும் !



*

மனதுக்குள்ளிருந்து
சின்ன வயதும்
பதின் வருடங்களும்
உந்தி வெளித்தள்ளுகிறது,
ஒவ்வொரு 

தனித்த பகலிரவின்
அசைவுகளும் நினைவிருக்கு,
எப்படியெல்லம்
ஜோசிக்கத் தோன்றுகிறதோ
அப்படியெல்லாம்
எழுத்து அழைப்புக்கள்
பிடிகொடுத்துப் பற்றிவிடுகின்றன,
பிறகெப்படி
சமீபத்திய நடப்புகளின்
நிறப்பூச்சுக்களில்
கவனமில்லாமல் போனது ?



*

பார்த்துக்கொண்டிருந்த
பொழுதொன்றில்
இது நடந்தது,
அரிசி மாவால்
சுழிச்சுச் சுழியுருவாக்கி 

இழைத்து இழுத்துப்போட்ட
கோலம் போலவேயிருந்தது ,
சமீபத்தில் இறங்கியது
தூறல்த் துளிமழை,
சப்பாத்துக்கள்
மேலேறி நடந்தன
பேருந்துகள்
உராய்வுகளில் அமுங்கின,
முற்றாக்கச்
செயலற்றுப்போனது
உறைபனி !



*

நெடுநேரம்
இலக்கின்றி ஏதேதோ
அலையடித்துக்
கற்பனைகள் செய்துவிட்டு
எப்போதோகேட்ட 

பாய்மரப் பாடலில்த்
திசை திரும்பும்போது
கோபமாக நுரைத்து எழுந்து
மூழ்கிக் குளித்து
ஏதோவொரு
மணல்க் கரையின்
நினைவில்
விழித்துக் கொண்டது
பகல்க்கனவு !



*



உடம்பில்த்
தூக்கப் பதட்டம்,
அடிவயிற்றிலிருந்து
ஏதோவெல்லாம் எழுகிறதுபோல
வாணவேடிக்கை ரகளை, 

ஒவ்வாமைக்கு
நேரம் சரியில்லை ,
வாந்தி எடுத்தால்
சரியாகலாம் போலிருந்தது,
பலசமயம்
சொன்னபடி உதவியிருக்கு !
இன்றைக்கோ
வெறும் முயற்சிதான்
ஒன்றுமே
வெளியேவரவில்லை !



*

இரவுகள் .
போர்த்தியபடி வியர்க்கிறது,
பிறருக்குக்
ஆறாத காயங்களில்
வலி ஏற்படுத்துமோவென்ற 

ஈரமான அச்சங்கள்
என்
வார்த்தைகளில் இல்லை !
பிறகெதற்கு
முன்னெப்போதையும் விட
அதிக நெருடல்களோடு
எப்போதும்
பின்னிரவின் நிலவுபோல
மறைந்துகொண்டிருக்கிறேன் ?



*

நடந்துமுடிக்கவேண்டிய
பயணத்தூரங்கள்
நிறையவேயிருக்கு ,
இந்தப்
பாலத்திலிருந்து 

துவங்கியிருந்து
இடப்பக்கமாகப் பார்க்க
ஒரு வளைகோடு
காற்றில் உலவுகிற மாதிரியிருக்கும்,
கீழிறங்கிப்போய்
வலப்பக்கம் நோக்க
குத்துக்கருங்கல்லில்
கைப்பிடியளவுள்ள சுவர்
உயிரோடிருப்பது போலிருக்கும் !



*

அவள்
முன்னறையில்
உட்காரச் சொன்னபோது
குஷன் சோபாவில்
குவித்துவைக்கப்பட்டிருந்த 

புத்தகங்கள்
இடைச்சலாக இருந்தது,
ஒரு மேசை
ரெண்டு கதிரைகள்
மூன்றையும் நிராகரித்தேன்,
அவளே
எதேச்சையாகத் திரும்பி
நெருக்கமாகவிருந்த
கட்டிலைக் காட்டினாள்
இடம்மாற்றிக்கொண்டிருந்த
கால்களால்
அதற்குமேல் நிக்கவேமுடியவில்லை !



*

மனதென்ன
சொன்னபடியா கேட்கிறது?
இல்லையே
பிய்த்து ஓடுகிறது.!
வெய்யிலில் 

உறைபனியைப்போல
சங்கடமாக
விழுந்துகொண்டிருக்கும்
காலை முகத்தைத்
தூக்கி வைத்துக்கொண்டு
இனி
எப்படிப் பேசுவதென்றும்
யோசித்தபடியிருக்கிறேன் !



*

ஒரு
அமானுஷ்யமான
கட்டத்தை நெருங்கியபோது
முகம் சுளிக்காமல்
பின்வாங்குதல் 

தந்து சென்ற அனுபவம்,
ஞாபங்கங்களின்
இடைவெளிகளை
நிரப்ப விரும்பாமல்
தீவிரமாக ஆலோசிக்கும்
பாவனையில்
விளிம்பில்ப்போய் நிக்கின்றன
பட்டறிந்து தெளிந்த
பாடங்கள் !








Monday, 23 July 2018

வாழ்க்கைபோலத்தான் !



இளவயதில் கால்பந்தாட்டம்  ஒரே வகுப்பில் படித்த பெட்டையை   பின்னாலும் முன்னாலும் திரத்தி காதலிப்பது போலக் கவர்ச்சியானதும்,  அவளோட அப்பன் , அண்ணன் ,, மாமன், சித்தப்பனுக்கு தெரியாமல் அதை உச்சிக்கொண்டு  போய் ஒரு குச்சு ஒழுங்கையில் வைச்சு  ஒரு  முடிவுகாண்பதும் போலச்  சவால்கள்  நிறைந்ததுமான  விளையாட்டு.  மிகவும் ஆர்வமாக ரைட் எஸ்ட்ரீம்  / மிட் பீல்டர்   என்ற பொஸிஷன்களில்  அதை   விளையாடியபோதும்  அதில் முழுமையாக ஈடுபட முடியாத காலகட்டத்தில் வாழ்ந்ததால் அது ஒரு உதையோடு  மைதானத்தை விட்டு வெளியே போய்விட்டது.


                                                               சைக்கிள் டயர்  ரோட்டெல்லாம்  தேயத்தேய , விசிலடித்துச்  சிக்னல் கொடுத்து , அன்னம்தண்ணி இல்லாமல்   சுழட்டி சுழட்டி  உசிரைக்கொடுத்து காதலித்த பெட்டையை வேறொருவன் ஈஸியா  மடக்கி விழுதிக்கொண்டு போனது போல   சாதிக்க முடியாமல்ப் போன   அந்த வெற்றிடம்  எப்பவுமே திரத்திக்கொண்டிருக்கும்.   ஒரு விடிகாலைக்  கனவுபோல வந்து போகும்  . அவ்வளவுதான் தான் நடந்தது  ,வயதோடு  சமாந்தரமாகக்   காலம் உருண்டோடிப் போயேபோய்விட்டது !



                                                                   இந்த வருட உலகக்கிண்ணக் கால்பந்தாட்டம் அதை ரசிப்பவர்கள்  எல்லாரையும் போட்டு ஒரு ஆட்டு ஆட்டியது . உட்சாகமான மோதல்கள் உலுப்பி எடுத்தது. எதிர்பாராத முடிவுகள் இரத்த அழுத்தத்தை எகிறவைத்தது  பல முகப்பதிவாளர்கள்  போட்டிகளில் யார் வெல்லுவார்கள், யார் மண்கவ்வுவார்கள் என்றெல்லாம் எதிர்பாப்புக்கள் எழுதியதும், பந்தயம் கட்டியதும் ,கப்பூரம் கொழுத்தி சத்தியம் செய்ததும்,  ஒவ்வொரு போட்டி முடிவிலும் அந்தப் போட்டியின் முடிவிக்கான காரணங்களை  அவர்கள்  அனுபவ அறிவின் பிரகாரமும் எழுதியதும் சுவாரசியமாக இருந்தது .
                                                                   
                                              இந்தமுறை ஓரளவு எல்லாப் போட்டிகளையும் நேரமொதுக்கிப் பாக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனாலும் உடம்பில்  இளமை ரத்தம் ஓடிமுடிந்துபோனதாலா அல்லது  வெற்றி தோல்வி முக்கியமில்லை மோதிவிளையாடுவதுதான் முக்கியம் என்ற அடிவேண்டியே கற்றுக்கொண்ட  வாழ்க்கைப்பாடம் தந்த   முதிர்ச்சி வந்திருப்பதாலா அல்லது  அதிரனலின் சுரப்பி கடையை மூடிவிட்டதாலா  தெரியவில்லை    உடம்மை உதறவைக்கும்    ஆரவாரங்களோடு  அதை இம்முறை ரசிக்கமுடியவில்லை   .
                                                                     
                                                        ஆனாலும் கொஞ்சம் வித்தியாசமாக  இந்தமுறை போட்டிகளில் எப்படிப் பார்வையாளர்கள்  மன இறுக்கங்கள் , வெற்றி தோல்விகளை வீரர்கள் எதிர்கொள்ளும் மனநிலை , சாதாரண மனிதர்கள், குழந்தைகளின் எதிர்வினைகள் , கால்பந்தாட்டம் திறந்து வைக்கும்  இன்னொரு தத்துவப் பரிமாணம்    இவைகள் அதிகம் கவர அவற்றை எழுதும் முயட்சி கிடைத்தது.


                                                             நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அரைகுறை   அவியல்  அவிச்சு விட்டோ , அல்லது  தெரிஞ்ச மாதிரி  அவிட்டு விட்டோ  ஒரு கதையாகவோ, பதிவாகவோ எழுதுவது  கடினமில்லை. ஆனால்  சந்தர்ப்பத்துக்கு ஏற்ற உணர்ச்சிவடிவ மொழியில் நனைத்து ஒரு  கவிதை வடிவத்துக்குள் கொண்டுவருவது சிரமம், இந்த சவால்தான் எனக்கு அதிகம் பிடித்திருந்தது !


.


உத்தரவுகளை நடுமீறி 
நாலுமுறை 
சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவனை
குழுப்பயிற்றுனர் 
உட்சாகப்படுத்துகிறார் !
மாற்றுவழிக்கு வழிபோதிக்கிறார்
அவன்
மீண்டெழுந்து இலக்குப்போடுகிறான் !
நினைவு வந்தது
ஒரேயொரு
அற்ப தவறுக்கு
நிராகரித்து வெளியேற்றுமுன்
விளையாட்டு ஆசிரியர்
வலிக்க வலிக்க
மாறிமாறிக் கன்னத்தில் வைத்த
அறை !


.


வேகமோடு 

நெருக்கத்தை ச் சேர்க்கும் 
சில நிமிடங்கள் ,
ஆற்றுவெள்ளம் போல
நிலைகொள்ளமுடியாத 
கால்கள் ,
தேவைக்கேற்றபடி
விதவிதமான உதைப்புகள் !
ஒருகணத்தின்
ஒரு நொடியில்
திசைகளைப் பிடித்துவிடுகிறது
அல்லது
நூலிடையில் நழுவிவிடுகிறது !
உயிர் மூச்சுவிட்டு
சூழ்ச்சிகளால் வெல்லப்படும் வெற்றிகழும்
ருசிக்கப்படுகிறது !


.


சுட்டிப் பெண் 
லயனல் மெர்ஸிபோல 
வெட்டி வெட்டி அடிக்கிறாள் !
குட்டிப் பையன் 
கிறிஸ்ட்டியானோ ரொனால்டோபோல 
அம்பு வைத்து உதைக்கிறான் !
தாண்டிச்செல்லும்
நிர்ணயிப்பு
ரெண்டு சோடி சப்பாத்துகள்
ரெண்டு முனையிலும் !
மாறிமாறிக் கால்மாறுகிறது
சுமாரான பந்து !
சொன்னபடி
கோடுகீறிக்கிழிக்க
நடுவரென்று யாருமில்லை !
நைந்துபோன
என்னைத்தவிர
பார்வையாளரென்றும் யாருமில்லை !
இவ்வளவும் போதுமானதாயிருக்கு
குழந்தைகளின்
உலகக்கிண்ணத்துக்கு !


.



வாழ்க்கைபோலத்தான் 

முட்டிமோதும் பிரச்சினைகள் ! 
சமாளித்தலில் 
பொறுமை மிஞ்சிவிடுகிறது !
பயம்களை எதிர்கொள்ளும் போதே 
எதிர்பார்தலில்
தவறுகள் சேர்ந்துவிடுகிறது !
ஒரு சந்தர்பத்துக்குத்
தீவிரமாகத் திட்டமிடுதலில்
உத்வேகமாகவே
மனது உடம்பை முந்திவிட
எதிரியின்
அற்ப பலவீனங்கள்
அதை
பயன்படுத்திக்கொள்ள
இலக்குகள் தீர்மானிக்கப்படுகிறது !
என்ன வித்தியாசம்? ‘
வாழ்க்கைபோலவேதான் !


.


வளைசதுக்கத்தில் 
சூடான கோப்பிக் கடைகள், 
பெண்கள் 
விடுப்பில் மூழ்கியிருக்க 
வயதானவர்கள் 
அரசியல் கதைக்கிறார்கள் ,
நீளமான திரையில்
நீண்டுகொண்டேயிருக்க்கிறது
முடிவில்லாப் பந்தாட்டம் !
மூன்று
கோப்பி வேண்டி உறிஞ்சி முடியவும்
இரு முனைகளிலும்
வெற்றி வளைந்து நுழையவில்லை !
அவ்வளவு
தற்பாதுகாப்பு இந்தப்பக்கம்
அதேயளவு
முறியடிப்பு அந்தப்பக்கம் !
நிச்சயமாகக்
அடுத்தகட்டத்துக்குப் போயிருப்பார்கள்
ஒருமுடிவோடு
காத்திருக்க நேரமில்லையென்று
வேகமாக நகர்ந்துவிட்டேன் !


.


இமைப்பதுக்குள்
தொண்ணூறு நிமிடங்களை 
எதிர்கொண்டு தலைகுனிவது போலவே 
விழுங்கிவிடுகிறது !
நிறையவே 
அலைபாயும் அங்கலாய்ப்பு !
பச்சைநிறப் புற்களோடு
நேருக்கு நேராக
நினைவுக்குள் திரும்பிவிடும்
பந்தாடக் கால்களும்
விளையாடிய கல்லூரிக் காலமும் !
இவ்வளவு நேரம்
ஒரு சகமனிதன்
சில நண்பர்கள்
சொந்தக் குடும்பமும்தான்
இன்பம் கொடுத்ததில்லை !


.


புதிய முகங்கள் 
புதிரான தந்திரங்கள் 
முதுகுக்குப் பின்னாலும் 
கோபப்பார்வை தெறிக்க 
மைதானக் கடைக்கோடியிலும் 
இயலாமையை
நிறுவிவிடுவதுபோல
ஆக்ரோஷ இரைச்சல்கள் ,
வேண்டுமென்றே
கோபத்தில் எதிராளியை
முடக்கும் முஸ்தீப்புக்கள் !
வென்றவர்கள்
குற்றம் இழைத்ததுபோல் நிட்கும்
தோற்றவர்களை
புன்னகையை வரவழைத்து
தழுவி அணைப்பதில்
ஆதாரமாக உயிர் நேயம் !


.


நேராகவே 
நடந்துசெல்லவே 
கால்களில்ப் பலமில்லை !
உபயோகப்படுத்தாத பாதங்கள் 
புலனிழந்து விடுகிறது !
அப்படியென்னதான்
நடக்குதென்று
முடிந்தளவுகளில்
கால்பந்தாட்டம் பாக்கும்போதெல்லாம்
பந்தாடிய
பால்யகாலம்
நினைவுகளைத் திரத்த
மறந்துபோன காலவெளிக்கும்
தன்னையறியாமல்
வேகம் வந்துவிடுகிறது !


.


மைதானத்தை
மழை நனைப்பதுபோல 
நிலைகொள்ளாமல் 
ஓடி விளையாடுகிறார்கள் 
இளையவர்கள்!
கொடிகள் அசைத்துக்
கோஷங்கள் எழுப்பி
சில மணி நேரங்கள்
குழந்தைகளாகி விடுகிறார்கள்
ஒரு
காலத்தின்
இளமை ஈரத்தை
பச்சைப் புல்வெளிகளில்
இன்னமும் வைத்திருக்கும்
பெரியவர்கள் !


.


ஒவ்வொரு 
பந்தாட்ட மோதலிலும் 
வெற்றிக்கான 
எதிர்பார்த்தல்களில் 
இயல்புகள் மீறிவிடுகின்றன !
இது
மறந்துபோன
என்னுடையதுமான
வலியென்பதை
எந்தவித சலனமுமின்றிக்
கடப்பதைத்
தவிர்க்கமுடியவில்லை
என்
இளமைக்காலச் சாயலில்
விளையாடுமொருவன்
வேண்டுமென்றே
இடறி விழுதப்படும்போது !


.


பின்வாங்காமல்த் 
தோற்றுப்போவதிலும் 
ஒருவிதமான 
லயம் இருக்கிறது !
அதனால்த்தான் 
வருத்தப்படாமல்
பார்த்துக்கொண்டிருக்கமுடிகிறது
முடிவைக்
கொண்டாடிக்கொண்டிருக்கும்
எல்லாவிதமான
ஆரவார இரைச்சல்களையும்
தரிசித்தபடி
தாண்டிக்கடக்கிற
தோற்றுப்போனவர்களின்
ஆதரவு முகங்கள்களை !






Tuesday, 17 July 2018

மழைபெய்திருக்கிறது !

எந்த மொழியில் எழுதுகிறோமோ அந்த  எழுத்து மொழியில் உள்ள வார்தைகளோடு , வசனங்களோடு , எழுத்துக்களோடு , இலக்கணத்தோடு , உள்ளிறங்கிச் சதிராடி   விளையாடும் அளவுக்கு  நிறையப் பரீட்ச்சயம் இருக்கவேண்டும். இது இண்டைக்கு உள்ள நிலைமையில் சாத்தியமா என்றால் , கொஞ்சம் கஷடம்தான் !


                                   எலி தரைக்கு இழுத்திச்சாம் தவளை தண்ணிக்கு இழுத்திச்சாம் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள் அதேபோல , தாய்மொழி கன்னித்  தமிழாக இருந்தாலும், அன்றாட வாழ்வியல் மொழி  கற்பிழந்த   ஐரோப்பிய மொழியாக இருப்பதால் எப்பவுமே இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என்று இழுபட்டே கவடு கிழியுது. இப்படியான  நிலைமைதான் என்போன்ற " பு பெ இ த " களுக்கு இருக்கு. இதைத் தாண்டிக் குதிப்பதிலேயே தாவு தீர்ந்து போகிறது .


                                      இதுக்கு ஒரே வழி நிறைய ஆதித்தமிழ் மொழியில் உள்ள விசயங்களை  வாசிக்க வேண்டியதுள்ளது,  பண்ணிசை சின்ன வயசில்   முறைப்படி படித்ததால் இப்பவும் தேவார திருவாசக திருப்புகழில்  உள்ள பக்தி இலக்கிய மொழிவளம் கொஞ்சம் நினைவில் இருக்கு, இருந்தாலும் அந்த் தமிழ்மொழி இப்போது பாவனையில் இல்லையே ,


                                                         தமிழில் அப்பர் சுவாமிகளின்  திருமுறைத் தேவாரங்கள்  கொஞ்சம் எளிமையான சொல்லாடல் உள்ள பல விசயங்கள் இருக்கு, உதாரணத்துக்கு  " மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசுவண்டறை பொய்கையும் போன்ற " இவ்வளவும் உண்மையில் இயற்கை பற்றிய வருணனை. 


                                           அதேநேரம் திருப்புகழ் ஒரு விசித்திரமான மொழிவீச்சு உள்ள வடிவம் ,,உதாரணத்துக்கு   " குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி " என்பதில் உள்ள சொற்களுக்கு என்ன அர்த்தம் என்பது சத்தியமா விளங்கவில்லை.. வேலாயுதக் கடவுளை  போற்றிப்பாடிய  15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் தமிழ்  அதன் அமைப்பு வடிவில்   " சந்த வேறுபாடுகளோடு " சம்பந்தப்பட்டது .அதுதான் நம்மைப்போட்டுக் குழப்புது.


                                                மாணிக்கவாசகரின் ,,,திருவாசகம் உண்மையில் Transpersonal psychology என்ற  சைகோலாயிகள் அப்புரோச் மொழிநடை, , புற்றுவாள் அரவம்  கண்டேன்  என்று தொடங்கும்  பாடல் மிகவும் அர்த்தமுள்ளது  கொஞ்சம் கவனிச்சா  "அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே!”  என்பதில்  அன்பிலாதவர் உறவு, நட்பு, என்பது அச்சம் தரும்படியான   பைத்தியக்காரத்தனம். என்று அவருடைய மணிவாசக ஸ்டைலில் சொல்லி இருக்கார் .  


                                                2018 ல் முகநூலில்  எழுதியவைகள் இவைகள்.  வழக்கம் போல   எல்லாவற்றையும் புத்தகம் ஆக்கும்  ஒரு திட்டத்துக்கு முன் முயற்சியாக  சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை  தொகுத்து   இங்கே பதிகின்றேன்.




*




தனக்குள்தானே 
அடையாளங்களை 
மறந்துகொண்டிருக்கும் , 
நினைவுகளில் 
ஊஞ்சலாடியபடியே 

சுயமாக முடியாத,
இருட்டில்
சின்னாபின்னமாகி
பகல் என்பதையே
ஏற்றுக்கொள்ள மறுக்கும்
உன்னிடம் ,
கடைசி முயற்சியாக
ஒரு
சின்னஞ்சிறிய
திரி விளக்கின்
மஞ்சள் வெளிச்சம் தரும்
உற்சாகத்துடன்
நெருங்கிக்கொண்டிருக்கிறேன் !





*

உதடுகளில் 
புன்னகை நெளிந்தபோது 
ஆசீர்வாதம் !
அதிசயிக்கும்படி 
முதலில்ப் பார்த்தபோதே 
பிடித்து விட்டது
அந்தக் காதல் !
பின்னணியில்
சீராக ஏறியிறங்கி
மனசைப் பிசைந்தது
சந்தித்துப் பேசிய
சம்மதங்கள்
அந்தப் பொழுதுகளில் !
ஒரு
அதிகாலைக் கனவுபோல
மனதிலிருந்து
நகர்ந்துபோய்விட்டது
அந்தக் காலம் !.





*



காலைகளில்
பனிப்பாதை வழியிலேறிப்
பூசிக்கொண்டிருக்கும்
வெள்ளை வெளிச்சங்கள் !
அவைகளுக்கு 

எதிராகப் போராடியே
கழைத்துப்போகும்
மத்தியானங்கள் ! .
திரும்பத் திரும்ப அவைகளை
விரட்டிக்கொண்டு
பின்மாலைகள் .!
இந்தப் போர்
நாள் முழுதும் தொடரும். !
தப்பியதை எடுத்துக் கொண்டு
அடிமனதிலிருந்து
சாபம் கொடுத்துவிட்டு
தன்
ரகசிய இடத்திற்குத்
தூங்க வந்துவிடுகிறது
இரவு !.



*




மலர்கடையில்
விற்பனைப் பெண்
இளமை தரும் பரிசாகப்
பூத்திருக்கிறாள் !
மொட்டுகளை 

நிமிண்டிப் பறித்தெடுத்து
தயாராவதற்கு முன்பே
மலரச்செய்தால்
பொருந்தாத
முகப் பாவனையோடு
இறக்குமதிசெய்யப்பட்ட
வெப்பமண்டல மலர்கள் !
அவைகள்
நாளொன்றுக்குள்
விற்றுத் தீர்க்கப்படுவதுக்கு
எத்தனை
அப்பாவி இதழ்களை
உதிர்க்கவேண்டியிருந்ததென்று
யாருக்குத் தெரியும்?



*



வெய்யிலில்
பூந்தளிர்களை
நலம் விசாரிக்க
வந்தாகச் சொல்லியது !
அதுவே 

முழுப் பொய் !
உறைபனியில்
முனகிக்கொண்டிருந்த
மரங்களைத்
தேய்த்துக்கொண்டிருந்தது !
உள்ளங்கை
கொஞ்சநேரம்
வியர்த்தது உண்மைதான் !
ஏமாற்றுவித்தை
நன்கு பழகிப்போனதால்
என்
முதுகைக் காட்டியபடி
திரும்பியிருந்தேன் !



*



அடையாளம்கண்டு
சிலிர்த்துக்கொண்டது
மனத்திரை,
விளிம்பு தளர்ந்த
பழைய முகம், 

கையெல்லாம்
அலைகளின் சுருக்கம்.!
அரவணைப்பில் ஏங்கும்
நீலக் கண்கள்.
தெரிந்தவர்களை
நிலைக் குத்திடுகிறது,
நின்று
ரெண்டு வார்த்தையாவது
கேட்கவேணும் போலிருந்தது
எனக்குள்ளே
கதைத்துக்கொண்டு
கடந்து போய்விட்டேன் !



*



ஒண்டுமே
நடக்காதது மாதிரி
கதவோடு காத்திருப்பாள்,
சுகந்தமாகத்
தலைக்கு மேலேறும் 

உறைபனியின் வாசம் !
பனிமழை
படக்கூடாதென்று
விரித்தபடியே
குடையோடு நிற்பாள் ,
தனக்குத்தானே
பாரமாயிருக்கும்
மிதிபட்ட வாழ்க்கை!
அவன்
அடுத்த நாள் போய்விட்டபின்
உருகி, உருகி
உயிரையே விடுவாள் !



*




சின்னப் பழக்கடை
கொஞ்சம் வாழைப்பழமும், 
ஆப்பிள்களும் 
பியர்ஸ் பழங்களும் !
வாங்கிக்கொண்டு 

வீடு திரும்பும் வழியில்
கையேந்தும்
வீடில்லாத பெண் !
அப்படியே
பையைக் கொடுத்துவிட்டு
படியேறிய மாடியில்
பால்கனிச்செடிகள் !
எதையோ
சந்தோஷமாக நினைத்து
புத்துயிருடன்
கிளர்ந்திருகின்றன ! .



*



முகவரிகள்
உடைந்துகிடந்த
பாதசாரிகளின் நடைபாதை,
கொஞ்சதூரம்
நடந்துமுடிய 

வலதுபுறமாகத் திரும்பி
இடதுபுறம் நுழைந்து
வரிசையாகக் கட்டிடங்கள்,
கால் தடுமாறி
அங்கும் இங்குமாகத்
துருத்திக்கொண்டு நின்றது
தபால்பெட்டி !
இலக்கமில்லாத
நகரம் !
கடிதத்தைப்போட்டுவிட்டு
ஜோசிக்கிறேன்
விலாசம் சரியாக எழுதினேனா ?



*

நேற்றிரவு
பதினோரு மணிவரைக்கும்
வானம்
வாசல் முகப்பில
வெளித்திருந்தது நினைவிருக்கு ,

காலையில்
மின்சாரக் கம்பிகளில்
சின்னச்சின்ன
குமிழி விளக்குகள்,
பழைய சுவரின் 
பாசியில்
இரவில்க் கலந்த 
பூஞ்சண வாசனை,

பதினோருமணிக்குப்பிறகுதான்
வெள்ளைக் கடதாசியில்
அவசரமாக
வரிகளைத் தவறவிட்டு
நடுங்கும்
கையெழுத்தில் எழுதிய
கடிதம்போலவே
கொஞ்சம்
மழைபெய்திருக்கிறது !