Tuesday, 8 May 2018

கிராமத்துக்காற்று.

எழுதக்கூடியவர்கள் ஒரே இடத்தில ஒரே நகரத்தில் இருந்து குப்பை கொட்டுவதில் அதிகம் சுவாரசியங்கள் கிடைப்பதில்லை . அப்படி இருப்பதே குட்டையில் தேங்கிய தண்ணியின் மெல்லிய சலசலப்பு ஏட்படுத்தும் சின்ன அலைகளைத் தவிர வேற ஏதும் நடப்பதில்லை. 

                                             நகரத்தில் இருந்து வெகுதொலைவில் உள்ள கிராமங்களில் இப்பவும் பறவைகள் பாடுகின்றன, ஊதல்க்   காற்று வீசுகிறது. குதிரைகள் எகிறிக்கொண்டு ஓடுகின்றன , நாட்டுப்புற மொழியில் கோடையின்  வாசனைகள் அதில கவிதைகளும் பறக்கின்றனகலந்திருக்கின்றன .

                                                புதிய நாடு ,,புதிய நகரம், புதிய மனிதர்கள், புதிய முகங்கள் ,புதிய வாசங்கள் என்று ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதியின் அனுபவம் போல ஏகப்படட புது விசயங்கள் ஒவ்வொரு பொழுதும் கிடைக்குது. பழைய பழகிய பாதைகள் அவை தேக்கி வைத்திருக்கும் நினைவுகள் . கோடையும் உறைபணியும் தந்த பாடங்கள். 

                                                     2017 இல் முகநூலில் எழுதியவைகள் இவைகள். கொஞ்சம் பிரிவின் விளிம்புநிலையில் மீண்டும் சந்தித்த நினைவுகளும் நிறையவே மனதைப் போட்டுக்குழப்பிய நாட்கள் இவைகள்.  அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன்,
  

முடிவில் 
வெல்வது பற்றிய 
விருபங்கலேயில்லாததாகி 
மறுபடியும் 
சுதந்திரமான அந்தக் காலத்துக்குள்
போகமுடியுமா ?


முகர்ந்து முத்தமிடுவது போல
வாசனை பார்க்கப்பட்ட
சீட்டுக்கட்டுகள்
கலைத்துப் பிரிக்கப்படுகின்றன,


தலையைக் கோதி
அடங்கமறுக்கும் சுருள்முடியை
பின்தள்ளி விழுத்துகிறாள்
அவள் !,


விசிறிபோல
பரப்பிக்கொண்டு
தலையைக்குனிந்துகொண்டு
விரல்களை நகர்த்துகிறேன் .


மைபூசிய மயில்விழிகளால் 
பச்சை 
மாவிலை தோரணங்களை 
நினைத்துக்கொண்டு  
சிரிக்கிறாள் .

வளவளப்பான சீட்டுகள்
கைமாறிமாறிக்கொண்டே
கருங்காலிக் கண்ணாடி மேசையில்
ஒன்றன்மேலொன்று
மல்யுத்தம் போடுகின்றன !


தோற்றுப்போனதுபோல
பின்வாங்கி
வாழ்க்கை போலத்தான்
கடதாசி விளையாட்டுமென்று
விளையாட்டாகச் சொல்கிறாள்,


என்
எண்ணங்களை துருப்புச்சீட்டாகித்
தூக்கிப்போடுகிறேன்,
சட்டென்று வாசித்து 

சொண்டை நெளித்தாள்,

ரம்மியமான
பொழுதொன்றைச் சிதைக்கும்
இரகசியத்திட்டத்தை
ஒத்திகை பார்க்கும்
ஓரங்கநாடகம் போலிருந்தது

அதன்பின்னான மவுனம்,
கம்பீர ராஜா
காதல்ராணி உட்பட
எல்லாப் பெறுமதியான சீட்டுகளும்
அவளிடமேதான்
அடைக்கலமாகிக்கொண்டிருந்தன,


அட சொல்ல மறந்திட்டேனே
சூதாட்டத் தொடக்கத்தில்
எனக்கே எனக்காக வந்த சேர்ந்த
முதல்ச் சீட்டே ஜோக்கர்தான் !


.....................................................................


நேர்த்தியாக 
வரிசைக்கிரமம் தவராத
புத்தக அலுமாரி ,


வெளிக்கதவு முகப்பில் 
புஷ்டியான 
மஜந்தாநிற கிரிசாந்திமப் பூக்கள்,


விசாரணையோடு
புறங்கையை நக்கும்
நாய்க்குட்டிகள் ,

ஜன்னல்த் திரைசசீலைகளில்
மூச்சுமுட்டும்
தீராத லாவண்டர் வாசனை,


ஒரு
திறக்கப்படாத வைன்போத்தல்
ரெண்டு
இடுப்பை நெளிக்கும்
சம்பெயின் கிண்ணங்கள்,


சுவரெல்லாம்
விடுமுறையில் எடுக்கப்பட்ட
உலாப்போகும் நிழல்ப்படங்கள்.
வரவேற்பு அறையை நிரப்ப
பெருமூச்சுடன்
ஞாபகங்களை எரிக்கும்
கைவிடப்பட்ட காலம் ,


வெளியே
போண்லேதர்மர இலைகளைக்
கிச்சுகிச்சுமுட்டி
அசைத்துவிடும் கிராமத்துக்காற்று,


வருடங்களாகி
விட்டுவிலகிக்கொடுத்து
சிக்கல்கள் இல்லாமல்
பாதைகள் தேர்வுசெய்த
இருமனங்களின் திருமணமுறிவு ,


விதி
அழுத்தி எழுதிய
நேற்றைய நாளொன்றில்
மிக மிக இயல்பாக
ஐந்தடி தள்ளிவைத்த இடைவெளியில்
பழகிய உரையாடலில்
பழக்கமான பார்வைகளில்
பழைய நானும்
பழையபடி அவளும் !


.......................................................................

நகரங்களை விட்டு
ஓடிவந்து
தட்டான்பூச்சிகளோடு
தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும்
கிராமங்களின்
அழகே நிறங்கள்தான் .


அதன் இன்னொரு நளினம்
புற்களின் நுனியைக்
கவிக்கொண்டிருக்கும் பனித்துளிகளின்
அதிகாலை வாசனை ,


அது
எல்லா அவநம்பிக்கைகளையும்
பிடித்து வெளியே தள்ளிவிட
அலாதியாகி
வசதி பார்த்து வாய்ப்புக்கள் தேடாமல்
நட்பாகிவிடும் நெகிழ்ச்சி!


பகலில்
ஒரே மாதிரியான
வெளிப்படையான ஓசைகள்
இரவுகளில்
எப்போதும் மெல்லிய பதற்றம் !


சங்கிலியால் பினைக்கப்பட்ட
அடிமையின் அவலக் குரல் போல
ஏமாற்றத்தில் புலம்பியது போல
முடியாத வார்த்தைகளில் எழுதியது போல
நினைக்கக்கூடாத கற்பனைகள்
கடைசியில் நடந்தது போல
ஒரு
ஏக்கமாகவிருக்கலாம்!


அதுவும்கூட
உண்மையேதான் !


ஆனால்
நாட்குறிப்புப் போலவே
ஒவ்வொருநாளும் எழுதவைத்தது .
அதிலென்
அந்தரங்கமான ஆத்மா
நனைந்துகொண்டேயிருக்க
அட்டகாசமான சம்பவங்கலேயில்லாத
சூனியவெறுமையில்
அடங்கமறுக்கும்
உயிர்
மெல்லவே எழுந்து நடமாடியது. !


..............................................................................


தமிழ்செல்வி 
அவளின் தேனீர்கோப்பையை 
ஆவியடங்கும் 
உள்ளங்கைச் சூட்டை 
இறுக்கி அனைத்துப்பிடித்தபடி
நெருக்கமான ஸ்ரிசமொன்றை
நினைவுபடுத்தி
நீண்ட பெருமூச்சுகள் சிந்தி
எச்சில் நாக்கு தீண்டும்
இங்கிதம் பற்றி எழுதுகிறாள் !


தாண்டவராயன்
மூக்குப்பேணியில்
இலையான்களை விரட்டியபடி
கடை விரலிலும்
சுட்டு விரலிலும் கசியும்
நாட்டுச்சக்கரையை
அப்பப்ப சொண்டில இழுத்துவிட்டு
அவுக்குஅவுக்கெண்டு
சொப்பன சப்பணத்தில் குந்தியிருந்து
ஆறிப்போய்க் கசப்பதிகமான
தேத்தண்ணியை
மொண்டுகொண்டிருக்கிறான் !


தமிழ்செல்வி
அவளின் தேனீர்கோப்பை
மேலைநாகரீகமாக
" டப்பிளின்தெரு கோப்பிக்கடை "
ஆங்கிலக் கவிதையிலிருந்து
உருமறைப்பில் 

உருவியது போலிருந்தது !

தாண்டவராயன்
நம்ம நாட்டு ஆள்
அவனின் சிந்தனையில் எதுவுமில்லை
அடுத்த நேரக் கூலி வேலைக்குத்
தயாராவதைத்தவிர !


.........................................................................


கண்ணாடி ஜன்னலின் 
இந்தப்பக்கம் 
காலப்பிசகுகளின் இடைவெளியில் 
கூரான ஆணிகள் 
மன்டைக்குள் இறுங்குவது போல 
நான் !


எதையெல்லாமோ
நிரூபித்துவிடுவதுபோலவே
துறுதுறுவென்று துருவிக்கொண்டு
அந்தப்பக்கம்
மழை !


வெண்மஞ்சளாகப்
புளியமிலை அவிச்சநிறத்தில்
துளிகளை நெருக்கிக்கொண்டு
கோடைப்புழுதியில் உள்ளிறங்க
மாதவிலக்கு
வாசனை வேற,!


இது
எத்தனையாவது மழையென்று
நினைவெடுத்துச் சொல்ல முடியவில்லை ,

மலைப்பாம்புபோல
சாலை மருகிரண்டிலும்
வெள்ளம் நெளியுது !


என்
களங்கப்படுத்தப்பட்ட நிலைமைக்கு
நானே
ஏகோபித்த
காரணமாயிருப்பது
எரிச்சலூட்டிக்கொண்டிருந்தாலும்
மழையை
வெறுக்கும் முடிவை
நினைக்க முடியவில்லை !


.....................................................................


பழக்கமான அந்தப் 
பரதேசிப் பிசாசின் 
தந்திரமான சமையலை 
மண்டியிட்டபடியிருந்து சுவைக்கும்படியான 
சந்தர்ப்பம் நேற்றுக் கிடைத்தது! 

அச்சுறுத்தும்படியான மேசையில்
பழுதுபட்ட பித்தளைப்பாத்திரம்
அதனுள்ளே எதுவுமேயில்லை !


பிசாசு
ஏற்கனவே சொன்னபடி
அடுப்புப் பத்தவைக்குமுன்
என்
கண்களைக் கட்டிவிட்டது !

பிசாசின் பேய்த்தனங்கள்
எனக்கெப்பவுமே 

அத்துப்படியானவைதானே !

பிறகு
கொஞ்சம் தூரத்தில்
ஒரு அலுமினியப் பானை
துலாவப்படும் மெல்லிய ஓசை ,

அதன் பிறகு
ஒரு மண்குடம் அடிவரை 

துலாவப்பட்டது,

அதன் பிறகும்
ஒரு வெள்ளிப்பானை

வழிக்கப்பட்டது !
நான்
ஓசைகளோடு உன்னிப்பாகவிருந்தேன் !


பிசாசு
ஆணவத்தோட அடையாளமாகி
உட்சாகக் குரலெடுத்து
பித்தளைப்பாத்திரத்தை
நொண்டிக்கையால் கிண்டியெடுத்த
திரிசூலக் கரண்டியை
உள்ளங்கையில் வைத்தது!


சும்மா சொல்லக்கூடாது
அறுசுவை நளபாகம் தான்!


அதன் பின்
எப்போதும் பிசாசின் முதுகுசொறியும்
முப்பது பேர் வந்து சுவைத்து
தேசிய அளவில்
பிசாசுக்கு முதலிடம் 

பிரகடனப்படுத்தினார்கள் !

பிசாசு
உலகளாவிய அளவிலும்
சமைக்கப் போகும்
ஒப்புகையில் மங்கிப்போன நாளுக்கும்
என்னை வரச்சொல்லியிருக்கு !


அன்றைக்கு
என்
கண்களைக் கட்டுவது மட்டுமில்லை
என்
காதுகளை அடைப்பதையும்
பிசாசு மறவாதிருக்கட்டும் !


................................................................................

தோய்த்த துணிகள் 
கச்சான்காற்றிலாடுவது போலவே 
வெள்ளைக்கொடிகள் !


உத்தியோகபூர்வ 
இறுதிமரியாதைகள் 
புறக்கணிக்கப்பட்ட 
ஒரு
விருப்பமில்லா நாள் !


பிரபலமான பெயரையோ
தாண்டமுடியாத சாதனைகளையோ
உறுதிசெய்யமுடியாமல்ப்போன
மனிதன் !


அவனின் அகாலமரணத்தோடு
எப்படியெல்லாம்
அருகில் வந்து உடன்படுகிறீர்கள் ?


கீழ்வானம் போல சிவத்துப்போன
அவன் மனைவியின்
சந்தேகமற்ற கண்களில்
பிரசவவலிபோலக் கண்ணீர் !


மரணச்சடங்கின்
இடைநிலை ஸ்திதியில்
மவுனமான அஞ்சலிகள்
சிலநொடித் தோற்றமயக்கத்தில்
எதிர்காலமென்பதை நிராகரித்து
நிகழ்காலமாகி
மீண்டும் இறந்தகாலமாகிவிட்டது!


இப்போது அவன்
கல்லறையைச் சுற்றி வரவும்
சாவின் விழிம்பைத்
பிரியமறுப்பதுபோல
அம்புரோசியோ மலர்கள்
சடைச்சுப் பூத்திருக்கின்றன 1


அதனால்
அந்தநாளை
நினைக்கும்போது
வலிக்கிறதாலோ தெரியவில்லை
வலிக்கும்போதும்
நினைக்கத்தோன்றுகிறது !


.........................................................................

குதிரைகள்
சடையைக்கிளப்பி
முந்தின பிறவியொன்றின்
எஞ்சிப்போன வேகங்களை
மெலிந்த மூட்டுக்கால்களில் 
மீட்டு எடுத்துக்கொண்டு பாய்கின்றன !


பந்தயம் கட்டியவர்களின்
பேரவையில்
பார்வைக்கு எட்டியவரையில்
வெற்றிமமதை ! .


சிலர்
கைகளைப் பினைகிறார்கள் !
கோரைப்புட்கள் போன்ற
பொன்மேனி ரோமத்தில்
வியர்வை வீழ்ந்துகொண்டு பிரகாசிக்குது !


ஒரு
பார்வையாளனாக எனக்கு
மிரளாமல்
பின்னம் காலில் எம்பிக் குதித்த
குதிரைகள் ஓடிப்போன
தடத்தின் நீளத்தையும்
வளைவுகளையும் பார்க்கும்போது
மட்டமான
சூதுவிளையாட்டுப்போல
அனுமானிக்கமுடியவில்லை !


கெண்டைச் தசைகள்
களைத்துப்போன
குதிரைகளின் வாய்நுரையில்
இன்னும் கொஞ்சம் உயிர்மிச்சமிருக்கு !


மற்றப்படி
யார் எல்லாம் வென்றது
யாரெல்லாம் தோற்றது என்பதுபற்றி
பந்தயக்குதிரைகள்
அலட்டிக்கொள்வதில்லை !


.......................................................................

அவ்வளவு
ஆத்மநெருக்கமான
மரணம் போன்ற அமைதி,


ஒரு வாகனம்
உறுமிக்கொண்டு போகும்
இரைச்சலான நேரநிறுத்தங்களில்
எத்தனிப்போடு மொத்தமாக
காற்றின் வேகத்தில்
ஒரு
கனதியான கதையைத்தான்
இரைமீட்டுக்கொண்டிருந்தேன்!


கை வீசிக்கொண்டு
மனிதர்களே இல்லாத இடத்தில்தான்
மனதோடு
உரத்துப் பேசமுடிகிறது !


முடிச்சவிழக்கூடிய
திருப்பங்களோடு
ஜவ்வாது பூசிய
பளிச்சென்ற சுகந்தங்களோடு
புல்வெளிகள் ,


நிசப்தத்தை
உத்தரவாதமாகக்
கதையாக்குவதென்ற
நிச்சயப்படுத்தலோடு
கதாசிரியனாகிக்கொண்டிருந்தேன் ,


இந்தத் தொலைதூரக்கிராமம்
என்னிடமிப்போது
வேறென்ன எதிர்ப்பார்க்கமுடியும் ?


ரெண்டு சோடி
இளமான்கள் பரந்தவெளியைப்
பதட்டத்தோடு பாய்ந்து கடந்தன 

அவளவுதான்,
கதை அந்தக் கணம்
சொற்பவார்த்தைப் பொழிவுகளோடு
கவிதையாகிவிட்டது !


..............................................................


அகலமான 
தொடக்கம் போலத்தான் 
நெடுஞ்சாலையோடு 
கைகொடுத்து இணைந்துகொள்ளும் 
முடிவும் ! 

எப்போதாவது தான்
தனிமைக்குள்ளிருந்து
வெளியே எடுத்து விடப்பட்டதால்
பிரசன்னமாகும் ஒருவர் ,

அல்லது
தவிர்க்கமுடியாத கேள்விகளோடு
ஓரங்களில்
தடம்புரண்டு நடக்குமொருத்தி,

அல்லது
பறத்தலுக்கும்
இருத்தலுக்குமிடையிலான
அந்நியத்தை
பெரிய வானத்தால் நிரப்பும்
ஒரு தவிட்டுக்குருவி ,

அல்லது
எல்லை வரையறைகளில்லாப்
பெருவெளிக்குப் பின்னால்
பறித்துக்கொள்ளமுடியாத
சுதந்திரத்தில்
பாதைகடக்கும் மான்கள் ,

அல்லது
கண்களைப் பொத்திக்கொள்ளவைக்கும்
ஜூன்மாத வெய்யிலுகேயுரித்தான
பகல் வெளிச்சம் ,

அல்லது
உறுதியற்ற கனவுகளின் மீது
இழுத்துப்போர்த்தப்பட்டிருக்கும்
அழுக்கான இருட்டு,

அல்லது
வெற்றிடத்தில் அடிமையாகி
இலட்சியங்கள் இழந்துபோன
மவுனம் ,
¨

இந்தப்பாதையின்
இப்போதைய சாத்தியங்கள்
இவளவும்தான் !



Sunday, 6 May 2018

வெறுமையானபின்....

ஸ்டோக்ஹொலமின் மையத்தை விலத்தி புறநகரங்கள் இன்னமும் வெள்ளையும் சொள்ளையுமாகத்தான் கலப்படம் இல்லாமல் இருக்கு , முன்னர் பலவருடம் வசித்த உப்பிலான்ட்ஸ்வாட்ஸப்பி என்ற புறநகரம் போனபோது பொங்கியும் பால் புறம் போகவில்லை போல அதை அவதானிக்க முடிந்தது.விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சோமாலியா, எத்தியோப்பியா அகதிகள் நடமாடினாலும் வேற்று இன மக்களின் தலைக் கறுப்பு சொல்லும்படியாகமிதமிஞ்சிய அளவில் இல்லை

                                                    முன்கை நீண்டால் முழங்கை நீளும் போல எப்பவுமே உண்மைவிளம்பி கருத்து பதிப்பவன் நான், ஆனாலும் என் குலதெய்வம் வீராளி அம்மாளாச்சி மேலே சத்தியமா சொல்லுறேன் சுவீடன் அதன் ஒதுக்கப்பட்ட வரவுக்கு மீறிய செலவு செய்யும் பிந்துபோன நிலைமையில் பிதுங்கிப்போய்யிருக்கு. இன்னும் பத்து வருடத்தில் சுவீடன் அதன் நோர்டிக்ஸ்கண்டிநேவிய அடையாளத்தை விரும்பியே இழந்துவிடும் போலிருக்கு.

                                              * சிக்டுனா * ( Sigtuna) சுவீடனின் வைக்கிங் கடலோடிகள் நிலைகொண்டு உருவாக்கிய முதல் முதல் கிராமம், இங்கிருந்துதான் சுவீடன் இன்றைக்குள்ள அளவு பெருத்துள்ளது.

                                              . அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க.  

அதிகாரமதிகமுள்ள 
மனிதர்கள் 
எப்படியெல்லாம் 
மீசை முறுக்குவார்களோ 
அப்படித்தான் அந்த 
" கடைசிச் சண்டையும் !

சில்லிடும் விபரிப்புகளில்
யுத்த நடைபயின்று
அடையாழமில்லாமல்த்
திசையிழந்துகொண்டிருந்தது !

வரவேற்றுப்
புகழ்ந்துகொண்டிருந்தவர்களின்
பொய்வேஷங்களெல்லாம்
இணக்கமான
சூழ்நிலையென்பதால்
பசப்புவார்த்தைகளோடு
வேகமாகவே கலந்து
இனம்தெரியாமல்
இயல்பாக்கிக் கொண்டிருந்தன !

புகழ்ச்சிதரும்
வார்த்தைகளை 

அசைபோட்டுக்கொண்டே
முகபாவனைகளைக்
கட்டுப்படுத்தமுடியாத
பிறவிக்குருடன் போலவே
எல்லா முன்னணி முனைகளிலும்
வரிகளோடு வரிகள் !.

எவ்வளவு நேரத்துக்கென்று
சொல்லமுடியவில்லை
இப்படியே
கருவூலத்தில் குளிர்ந்த இருட்டாகி
என்
தட்காப்பு நிலையெடுக்க இயலாத
மனதும்
போர்க்களம் போலவே
தாறுமாறாகச் சிதறிவிட்டது !


...........................................................................

அன்பைப்பற்றி 
அதீதமான அளவுகளில் 
அர்த்தம் கொடுக்கும் வார்த்தைகள் 
அரைகுறையாகவே 
விளங்கிக்கொள்ளப்படுகின்றன 


ஒரு நேசிப்பின்
அபத்தமான முடிவில் அவை
தோற்றுவிக்கக் கூடிய குழப்பங்கள்
ஒன்றுசேர்வது பற்றிய
பலவீனமான பயங்களை
இன்னுமதிகரித்து விடுகின்றன.


பிசுபிசுத்துப் போக வாய்ப்புள்ள .
எந்நேரமும் வெடிக்க
மிச்சதைக் கொஞ்சம் வைத்தபடியிருக்கும்
சுமாரான காதல் வரிகளில்
சமநிலை குலையாதவைகளை
நீங்கள் சிலநேரம் கண்டிருக்கலாம்


சமாதானப்படுத்திக் கொண்டு
இப்படியான வரிகளுடன் தான்
நானும் உடன்பட்டிருக்கிறேன்


ஆனால்
இப்போது கேட்டால்
ஏனென்று சொல்லமுடியவில்லை


ஏனென்றால்
அனுபவங்களின் தொடர்ச்சியாக
எனக்கும்
ஓராயிரம் இரவுகளில் விழித்து
ஒருத்திக்காக 

ஏங்கிக்கொண்டிருந்தபோது
நன்றாகவே நினைவிருக்கு
காதல் சலித்ததேயில்லை ..


.............................................................................

உங்களுக்கு 
விபரம் தெரியுமா ?
நம்பிக்கை இழந்துவிடும்போது 
சட்டென்று 
மறுமை உலகிற்குள் 
நிச்சயமான சிலவற்றையாவது
சேர்க்க நேரிடும்

நிரப்பமுடியாத வெற்றிடத்தில்
எங்கிருந்தோதான்
அந்த
பரவசங்களுக்காக ஏங்கும்
வார்த்தைகள்
களவாடப்பட்டிருக்க வேண்டும்

உங்களுக்கு 
விபரம் தெரியுமா ?
அவசரமதிகமான
வெளியுலக வெயில் விபரிப்பு


தில்லானாவில்
இராக ஆலாபனை

நெடுந்தூரம் சென்று
முட்டிமுட்டிப் பால்குடிக்கும் நிலவு


புள்ளி தெளித்து விட்ட
வெள்ளைப் பாவாடை

தளிர் பருவத்தின் நெருக்கத்தில்
காய்ந்த சருகுகள்


எக்கச்சக்கமாகக் 
காட்டிக் கொண்டிருக்கும்
கவர்ச்சி நடிகை

காற்றில் மிதக்கும்
பறவையின் தனியிறகு


கிழக்கு விடிவதட்குள்
நீர்த்துப்போன கனவுகள்

புரியாத மர்மமாகவே இருக்கிற
வெட்டைவெளி


இதில் 
ஏதொவொன்றைப் புரட்டியே
அந்த
பரவசங்களுக்காக ஏங்கும்
வார்த்தைகள்
களவாடப்பட்டிருக்க வேண்டும்

உங்களுக்கு விபரம் தெரியுமா ?

......................................................................................


வாசித்துப்பார்த்தபோது
சிவகாமியின் சபதங்களே
நிறைவேறிவிடும்போலிருந்தது


பார்த்திபன் கனவு
பின்வாங்கிவிட்டது 
அப்படியென்னதான்
மாயப்பொடி வைத்து எழுதுகிறாய் ?


அந்தப்புரப் பதிப்புகளின்
காகித வாசம்
அப்படியே மண் வாசம் போல
மழை வாசமும்


அரச முத்திரைகள்
ஆலவட்டமில்லாமல்
அரண்மனைக் கதைகள்

மேனகையின் கொடியிடையைப்
பாதி இரவும்
மணிமேகலையின் வளையல்களைப்
பாதிப் பகலும்

பங்குபோட்டுக்கொண்டே
வரலாற்று நதி


பிரதானமான கட்டத்தைத்
தாண்டும் கட்டாயத்தில்
பெருந்தன்மையுடன் மொழி
ஒத்திசைவாகிறது


விதவைகளை மொட்டையடித்து
வெள்ளை உடுத்தி
பட்டினி போட்ட
பாரம்பரியத்தை அவமானப்படுத்தி
பெண்களையும் காப்பாற்றி

காலத்தின்
அளவுக்கு இல்லாவிட்டாலும்
முழுமை ஆகாமல்
ஓயப்போவதில்லையென்கிறாள்
சித்திரலேகா !


...............................................................................

நீங்கள் 
அதிகமதிகமாய் 
சகிப்புத்தன்மையிழந்து கொண்டே 
விமர்சித்த போதெல்லாம் 
பிரியங்கள் 
இல்லாத ஒரு ரகசியத்விடத்திலதான்
உங்கள் இஷடப்பட
இருத்திவைத்திருந்தீர்கள் ,


ஆராதனைகளுக்கும்
அழகியலுக்கும் இடையே
முரண்பாடு 

உறுத்திக்கொண்டேயிருந்தது .

நிறைவேற்ற முயன்று முடியாமல்
காலம் தாழ்த்தி வரும்
இரங்கல்களில் அனுதாபங்களை
அப்போதும் தேடியதேயில்லை !


இன்றைக்கு வரைக்கும்
நியாயமாகவும்
வணங்காமுடித்தனமாவும் தெரிகிற
நான்
முற்றிலும் மாறிவிட்டதாக
அதீத தோழமை உணர்வுடன்
நீங்கள்
பிரகடனம் செய்த போது
உங்களுக்காக இவ்வளவுநாள்
வளைந்து கொடுத்த
பழைய பாதையிலிருந்து
எனக்கான
தனித்துவ இலக்குகளை
தேர்ந்தெடுத்தது பற்றி 

அறியாதிருக்கலாம் !

நீங்கள் விரும்பும்
பரிச்சயமான கோணத்தில்
நீங்கள் தேர்வுசெய்யும்
குறியீடுகளில்
இந்தப் பிழையைச் சரிசெய்ய
இன்னும் இடைவெளிகள் உள்ளது...!


....................................................................................

* சிக்டுனாவுக்கு *
அதிகாலையே
என்னென்று நினைவில்லை,
கடலோடிகள் போட்ட வீதிகளில்
என்னைத்தவிர யாருமில்லை ! . 


அமைதியைத் திணித்து
வரலாற்றைத் தாங்கிப்பிடிப்பது
காரணமாக
ஆடம்பரங்களை ரத்தாக்கிவிட்ட´
தொடக்கக் கிராமம் ´


" சுவீடன் இங்கிருந்து தொடங்குகிறது "
சுற்றிவளைப்புகளின்றி
நிறுவிவிடுவதுபோல்
ஒரேயொரு வார்த்தையில்
இத்தனை தூரம் விபரங்களைக்
கொண்டு சேர்ப்பிக்கும் கிராமம் ,


பதற்றங்களின்றிக்
காலாற நடந்தே கடந்தேன் ,
என்
புதியவரவு பற்றி
மறந்தும் கூட ஏறெடுக்காத
புராதனமான தேவாலயங்கள்,


வேரூன்ற வலிமையான அடித்தளத்தை
ஏற்படுத்திவிட்ட கர்வம்
அதன்
ஒவ்வொரு திருப்பத்திலும்,


பெயரில் 
அதீதநம்பிக்கை இருப்பினும்
வளர்ந்துவிடுமோவென்ற பயமும்
விழுங்கிவிடுமோவென்ற 

நிச்சயமின்மையும்
மட்டுமே எஞ்சிவிடும்
நடைபாதைகளில் நின்று
மீண்டுமொரு முறை
உறுதி செய்து கொள்கிறேன் ,


ஒரு
கேள்வியை நானே முன்வைத்து
." இன்னும் கச்சிதமாகவே இருகிறது
சுவீடனின் முத்லக் கிராமம் "
என்ற பதிலோடு
திருப்திப்பட்டுக்கொள்ள முடிந்தது


இப்படி இப்பவும்
இல்லையென்றால்
பழமையான கனவொன்றுக்குள்
உள்நுழைத்துக்கொள்ள முடியாமல்
வாசலோடு திரும்பி வேண்டியிருந்திருக்கும் !
....
* சிக்டுனா * ( Sigtuna) சுவீடனின் வைக்கிங் கடலோடிகள் நிலைகொண்டு உருவாக்கிய முதல் முதல் கிராமம், இங்கிருந்துதான் சுவீடன் இன்றைக்குள்ள அளவு பெருத்துள்ளது...


.....................................................................

நேற்றைய கருக்கலில் 
எதிர்பாராமல் வந்திறங்கிய விருந்தினர்போல 
அடிச்சுப் பிழிஞ்சு கொட்டிய 
முன் கோடை மழையில் 
நான் 
நல்லகாலமாகவே நனையவில்லை !


முக்கிக்கொண்டிருந்த
மேகங்களின் முற்றுகையிடும்
முஸ்தீப்புகளில்
ஏற்கனவே உஷாராகியேயிருந்தேன்


தூறல் பூச்சிகள்
தலையை மெல்லத் துவட்டினாலும்
ஈரமான தாவணி விசிறிகள்
வாய்ப்பாக ஒத்துவருவதில்லை !


என்
ஒதுங்கிப்போதல்களுக்கும்
மழையின் தினவெடுத்த திமிருக்கும்
மிகப்பெரிய
அடிப்படைத்தவறு நடந்துகொண்டேயிருக்கு !


ஒரு
வெளிச்சமான நாளில்
விழித்திருக்கும் கனவில் 

கடன்வேண்டி
பிம்பங்களை உடைக்கும் மழையை
வெறுக்கிற அளவுக்கு
உறைபனியோடு போராடியே
இறந்துபோன மஞ்சள் சருகுகளை
அது
சேர்த்துக் கூட்டி அள்ளிக்கொண்டு
ஒரு
திசையைத் தேர்ந்தெடுத்து
வெகுதூரத்துக்கு அணைக்கும் வெள்ளத்தை
வெறுப்பதில்லை !


பார்த்துக்கொண்டிருக்கும் போதே
பருவங்கள்
புதுப்பிக்கப்படும் அனுபவம் அது !


மனதோடு
பூத்துச்சொரியவைக்கும்
அந்த ஒரேயொரு
காரணத்துக்காகவே
மழையோடும் அனுசரிக்கிறேன் !


........................................................................................

எதையெல்லாம் 
நீங்களாகவே 
நிலையாமை என்கிறீர்களோ 
அவைதான் அதன் பலமென்கிறது 
அவன் எழுதிய நாவல் .!

வருடங்களின்முன்
அகால இறப்பில் தப்பியவன்
அவன் காலத்திலேயே
அலுத்துப்போன கதையாகிவிடுகிற
அதுதான்
சொல்லப்படும் உத்தியின் சுருக்கம் !

செத்து முடித்து
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து
மீண்டும்
இறந்து போகாமல்
மீண்டெழுந்து வந்தாலும் 

ஆச்சரியமில்லை.

ஏனெனில் மரணத்துக்கென்று
மரியாதையே கிடையாது.என்கிறான் !

ஒரே
ஒரு இடத்தில்
விதிக்கப்பட்ட விதியை
இலாவகமாக திருப்பியதற்காக
கடவுளை மெச்சுகிறதும்
அவன்தான் !

நட்சத்திரங்களை பின்தொடர்ந்து
வாழ்ந்துகொண்டிருத்தலை
இரசித்துவிடும் மயக்கத்தில்
மனஉளைச்சலை
அவனால்
குற்றவுணர்ச்சியோடு கடக்க முடிகிறது.!

இந்த அபத்தங்கள்
ஏதேனும் பின்நவீனத்துவமா ?

அதைவைத்துத்தான்
" என்னைக் கொன்றுவிடுங்கள் "
என நாவலுக்குப் பெயர்சூட்டினானா ?
ஆச்சரியம் மட்டும் தான்
மிச்சம். !


........................................................................


மாலைப்புகையிரதத்தை 
முழுதுமாய் உள்வாங்கிக் 
கவனிக்காமல் கடப்பதுதான் வழக்கம்,


உட்சாகங்கள் வழிந்துவிட 
களையிழந்த முகங்கள், 

அதற்கு
நிகராகவோ மேலாகவோ
வாடிப்போன முகப்பூச்சுக்கள்,


பேசுவத்துக்கு
அநியாயம் செய்யும் விதத்தில்
ஷக்தி கொடுக்காத
மூச்சுக்களின் நெருக்கம்,


எனக்கு முன்னால் இருப்பவர்
எட்டு மணித்தியாலம்
சாதித்ததை அங்கீகரிக்கும்
நீண்ட ஆயாசம் ,


அவருக்கு அருகிலிருப்பவள்
நாரி முறிந்தது
அதிகம் தாண்டிச்சென்றிருக்கலாம் ,


ஒவ்வொரு நிறுத்தத்திலும்
நெரிசல் இறங்கிக்கொண்டிருக்க .
வாழ்வதட்காக வாழ்வது
துன்பம் மிகுந்ததாக
மீண்டும் மீண்டும் தோன்றுகிறது,


கடைசியாக
இருக்கைகள் வெறுமையானபின்
நாளைக்கு வரையில்
தூக்கம் ஆட்க்கொள்ளும்
வட்டமான வளையத்துக்குள்
நன்றியோடு சுழறவேண்டியுள்ளது.


எஞ்சிய பயணத்தைச்
இத்தோடு
முடித்துவிட நினைக்க
அள்ளப்பட்டுகொண்டே போகும்
காலத்தை
யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை,


இனி
நாளைய மாலையும்
நாளைய புகையிரதமும்
இன்னொரு கவிதையின் தொடர்ச்சி............




........

                                                             சிக்டுனா * ( Sigtuna)