Thursday, 15 March 2018

எல்லாக் கேள்விகளும் !


அண்மையில் சீனர்கள்  சைனீஸ் மொழியில் எழுதிய புதுக்கவிதைகள் மொழிபெயர்ப்புத்   தொகுப்பு ஒன்றை ஆங்கிலத்தில் வாசிக்கச்  சந்தர்ப்பம் கிடைத்தது . விக்ரம் சேத் என்பவர் மண்டரின் சைனீஸை உள்வாங்கி மூங்கில் காற்றின் அசைவுகளோடு   மொழிபெயர்த்து இருந்தார்.  

                                                 நம்மைப்போல அல்லாமல் பூச்சி புழுக்களையே  ரசித்து சுவைத்து உண்பதில்  கொஞ்சமும் அருவருப்பு விட்டுவைக்காத  சீனர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அல்லது அவர்களின் மொழியில் காட்சிகளின் வருணனை, உணர்வுப் பிரவாகம், நனவோடை உத்திகள். உவமான உவமேயங்கள் வித்தியாசமாக இருந்தது. டெக்னீகலா  இப்படித்தான் இருந்தது அந்த வாசிப்பு   அனுபவம் . 

                                             ஆயிரத்துக்கும் அதிகமான எழுத்துக்கள் உள்ள    சீனமொழி  ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையானவை . அந்த மொழிக்குள் அந்நியமொழிகள் கலக்கவில்லை. அதுதான்  காரணம் அம்மொழியின் அடிப்படையில் ஆதாரமான சொற்களின் அர்த்ததில் தேவையற்ற   மாற்றம் நடக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். 

                                           ஏனென்றால் சைனீஸ் கவிதைகளில் உள்ள கவிதைமொழியே அன்றாட பேச்சுவார்த்தை மொழியைப் பட்டை தீட்டித் தெறிக்கவிடுவது போலிருந்தது. 

பல சயங்களில் நினைப்பது அன்றாடப்   பேச்சு மொழியில்   உள்ள  வார்தைத்தைப் பிரயோகத்தை  எப்படிக் கனதியானவொரு கவிதைமொழியாக நகர்த்திக்கொண்டு போய் இன்னொரு பரிமாணத்தில் உக்கார வைப்பது எப்படி என்று. அது சாத்தியமான ஒன்றா அல்லது இப்பவும் எப்பவும் தண்ணி காட்டிக்கொண்டு இருக்கும் ஒன்றா என்றும் குழம்புவது . . 

                                                 ஆனாலும் சில எதிர்பாராத இடத்தில ஏதோ ஒரு புள்ளியில்  கட்டுப்பாடுகளுடன் அது   நம்மை அறியாமல் உள்ளிருந்து அது வெளிப்பட்டுவிடலாம்.

முகநூலில் எழுதிய இந்த முயட்சிகளை புத்தகம் ஆக்கும் நோக்கத்தில்  ஒன்றுசேர்க்கிறேன். அவற்றை   உங்களோடும்  தொகுப்பாக்கிப் பகிர்ந்துகொள்கிறேன். ஒவ்வொரு தொகுப்பிலும் பதினைந்து , சிலநேரம்  இருவது சொச்சம் சேர்ந்துவிடுகிறது. 

                                              கவிதைகள் போன்ற கட்டுமானஸ்தில் மட்டும்  கிட்டத்தட்ட இரண்டாயிரம் உருப்படிகள் இதுவரையில் 83 தலைப்புகளில்    மின்னெறிஞ்சவெளியில்  தொகுத்தாகி முடிஞ்சுது. இன்னும் அதே அளவு முகநூலில் ஆங்காங்கே சிதறிக்கிடக்குது. வெகு விரைவாக அதுகளையும் இணைக்கவேண்டும். 

..........................................................  


வாழ்வைச் 
சமன்படுத்தி நிறுவிவிட்டு 
ஒரு 
சூனியத்திலிருந்து
வெளியேறிவிடுவது போன்றது

இருத்தலின் 
அதீத   ஆரவாரங்கள் ,
நெருக்க நகரத்தின்
அமைதி நுரைக்கும்
நிசப்த வழிகளில்
நடந்துகொண்டிருப்பது போன்றது
தூக்கியெறிந்த
தனிமைகளைத்
வலியச்சென்று தேடித்தொகுப்பது !


.....................................................................


முகஸ்துதிக்களற்ற
காத்திரமானவொரு 
அனுபவம் ,
அதியுயர்காலை
எழுதிவிட்டுப் போன
அதன் குறிப்பில்
பரிசுத்த மன்றாடல் ,
மாதாசுருவத்தைத்
ஈரத்துணி போட்டுத் துடைத்து
மெழுகுதிரி ஏற்றி வைத்தேன்
காற்றுத் திரும்ப வந்து
மஞ்சள் ஒளியை
மெல்லெனவே
அசைத்துக்கொண்டிருந்தது.!


..............................................................

நிறைந்து
மறந்து போன
தோல்விப் பாடல்களை
மனசாட்சிக்கு விரோதமாக
மறுபடியும் ரசிக்க...
சொல்லாமலே
தொலைந்து போன
பிரிவுக் கவிதைகளைத்
தேடி எடுத்து
குதர்க்கமில்லாமல்
இதயத்தோடு நேசிக்க,
இப்போதைக்கு
குறுக்கிடாமல்க்
கொஞ்ச நேரம் வேண்டும் !


................................................................


எதிர்பார்த்தமாதிரியே
புரிதலுக்கான
அறிகுறிகள்
ஆரம்பத்திலில்லை,
எல்லாரும்
பார்த்து உச் உச் என்று கொட்டி
பொறுப்பில்லாமல்க்
கடந்து போன
கனதியான
சம்பவத்தைக்
காற்று நுழைய முடியாத
கடினமான வரிகளில்
எழுதமுடிந்தது !



....................................................................


தூசு பதிந்துள்ள
மேசை விரிப்புக் கீழே
மயிலிறகை 
ரகசியமாக வைத்திருந்தேன்
உச்சம் தலையில்
அடம்பிடித்த
வெக்கையை வெளியேவிட
ஒரு மாலையில்
ஜன்னலைத் திறந்தபோது
காற்று அதை
விரித்துப் பார்த்து
வரிக்குவரி வாசித்து விட்டது!


...................................................................


பாடியவர்களின் 
ஞான மதிப்பீடுகளிலிலோ 
நாதப்பிரம்மம்
தட்டிக்கொடுத்து 
நல்ல பெயருடனேயேதான்
இரவெல்லாம் 
மேடையேற்றிய 
இசைக்கு வயதாவதில்லை 
நமக்கு 
வயதாகிக்கொண்டிருக்கு  
இட்டுநிரப்ப 
இனி ஏதுமில்லாமல் 
எப்படிக் கடந்துபோக முடியும்? 

.......................................................

பதில்களில் 
சம்பந்தப்பட விரும்பாமல் 
ஏதோவொரு 
மறுமை மொழியை 
உதிர்த்துவிட்டு 
கோபமாக வெளியேறிவிடுகிறது
விளக்கம்தேடும்
பிரதானங்களை முன்னிறுத்தும்
எல்லாக் கேள்விகளும் !


.........................................................

உள்
எதிர்ப்புகள்
அதிகமிருந்தபோதும்
சேர்ந்துகொண்டு
கொந்தளிப்புகளேட்படுத்தி 
உஷார் மனதில்
அகல் விளக்கேற்றிவிட்ட
எனக்கேயெனக்கான
நீ
எங்கேதான்
போய்விட்டாயடி ?


....................................................

திண்டாடவேண்டிய
புயல் வேகத்தில்
ராவெல்லாம்
ஊழிச்சுழன்றடித்தல்
அவசியமில்லைதான், 
எப்படியோ
விடியும்போது
விரும்பிய பக்கமே
சாய்ந்து படுத்துவிடுகிறது
காமம் !


...........................................................

குளிருக்குச்
சம்பந்தமே இல்லாமலே
சரமாரியாக
வசைமாரி பொழிந்தது போதும்
பார்த்திருங்கள் 
கொஞ்ச நாட்களேதான்
பிறகு
எந்த வழியுமில்லாமல்
உறைபனி
துயரக் காற்றிடமே
சரணாகதியடையும் !


..........................................................

சரிநிலைகளுடன்
என்
உரையாடல்களுக்கு
நடுவில் ஒதுங்கி நுழைந்து
அணுகவேண்டாம் 
நீங்கள்
எப்போதும்போல
கடைசியான காட்சி முடிவுக்குக்
காத்திருப்பவர்கள்
நானோ
இடைவேளையிலேயே
வெளியேறிவிடுபவன் !


........................................................


ஏற்றுக்கொள்ளமுடியாத 
ஆவேசமான 
வசவு வார்தைகளோடு
நான் 
வாய் திறந்து
எந்தவகையான
காதிரமான எதிர்ப்பையும்
பதிவுசெய்யப்போவதில்லை,
அழுத்த
மூடிவைக்கப்ப‌டும்
மரபின் தொடர்ச்சியில்
சம்பந்தப்பட்ட‌
எல்லாப் பெயர்களையும்
வெளிக்கொண்டுவந்து
அதிகாரமான ‌
நிலைப்பாடுகளோடு
மட்டம்தட்டிக்கொள்கிறது
வரலாறு !


...............................................................

கடலில் அலைபோல
நினைவில்
நின்று நெரிபடும்
இசைக்குழுக்களின்
பரவசமான  கீதங்கள்
சுடுமணலில்க்
கடலைக் கோதுகளோடு
பனிப்பொழிந்த
காலை விடியல்கள்
பிடரிமயிரின் புல்லரிப்போடு
நேரடி மேடை
பூச்சொரிந்த கனாக்காலம்,

.......................................................

உபயோகப்படுத்த
தன்னைத்த்தானே
அவமதித்துவிடும்
பரிந்துரைகள்,
தெரிந்திருக்க வேண்டுமென்ற 
அவசியங்கலில்லாத
மதிப்பீடுகள்,
முணுமுணுத்துக்கொன்டிருகும்
ஆழமான அமைதியில்
சலனங்கள்
ஏன் நிகழ்கிறது ?
அனேகமாக
நிராகரிக்கப்ப‌டுமிடத்தில்
வென்றுவிடுகிறது
உறுதிப்படுத்தப்படாத
செய்திகள் !


............................................................

ஆழ்மனதின் மறுபதிவு
 விழாக்கால 
ஆராதனைகளின் புரிதல் 
அதிகம் தெரியாத  
திகட்டாத தத்துவ தரிசனம் ,
தினவெடுத்து 
இளமை தின்ற 
அந்தப் பால்வீதி நாட்கள்  
இங்கிருந்து 
இன்னொருமுறை 
நடைபயில ஏங்குகிறது !


.................................................................

பிசாசுத்தனத்தனமான 
பிரயாசையுடன் 
நியாயம் 
பெற்றுக் கொள்ள முடியாத
இறந்தகால 
அநியாயம் ஒன்றின்
பெறுமதியை
நியாயப்படுத்த முயற்சிப்பது போல
கவிதை எழுத
சந்தேகமில்லாத
காரணங்கள்
தேவைப்படுகிறது...!.


............................................................



ஆனாலும் 
ஒத்துக்கொள்ளவேண்டியிருக்கு
இப்போது எல்லாமே 
வேறுமாதிரியாகமாறியிருக்கு
அலங்காரங்கள் சேர்த்த 
தகரக்கூரைக் கோவிலும் 
மொட்டைக் கோபுரங்களும் 
ஆனாலும் 
உலாப்போன 
வெளிவீதிகளில் 
நிறங்கள் மங்கிப்போய் 
இப்போதும் அப்பி இருக்கும் 
பின்னிரவில் 
மேடை ஏறிய பாடல்கள்....!.

................................................................

நான் 
தனியாக யாரோடோ 
கதைத்துக்கொண்டு 
இரைச்சலாகக்    குடிக்கிறேன் ;
ஜன்னலில் 
நிலவு கரைந்துகொண்டிருக்கு   
நண்பனென்று  
யாரும் அருகில் இல்லை,
தூக்கமில்லாத 
மனநிலையைத்தான் 
விடியும்வரை 

இடம்பெயர்க்கமுடியவில்லை, !





Friday, 9 March 2018

நாலாவது பக்கத்தில்...

ஒவ்வொருநாளும் செய்திகளில்த்தான்  பதறியடித்து விடிகிறது அதிகாலை . ஒரு கவிதை, ஒரு கட்டுரை, ஒரு விவரணம், ஒரு காமடி என்று  நாலு நல்ல விசியம் வாசிப்பம் என்று முகநூல் வந்து முகப்பைத் திறந்தாலே  முன்னுக்கு வாற நாலு விசயமும் எப்பவுமே அதிரடியான யுத்தமும் கலவரமும் சேர்ந்த பரபரப்பு செய்தியாகவே இருந்தது சில நாட்களாக.  வேறுவழியில்லை உலகத்தோடு ஓடிக்கொண்டிருக்க இவைகளைத் தவிர்த்துக் கடந்துபோகவே முடியாதிருக்கு. 

                                                   இப்படியான நாட்களில் செய்திகளில் வாசித்த போதே தோன்றியவைகள்   இவைகள். பழிக்குப் பழியில் ஆர்வம்  இல்லாத   இப்பெல்லாம் அமைதிவேண்டி  ஒதுங்கிப்போகும்  அஹிம்சா சார்ப்புள்ள மனதில் விரிந்தவைகள். அன்பே பலம் புரிந்துணர்வே புதியபாதை  என்றதை   நடுநிலை  மய்யம் ஆக வைத்து முகநூலில்  எழுதியவைகள் இவைகள், உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
  

***************************************************************

சிரிய உள்நாட்டு யுத்தம் பற்றி, அதில் யார் நல்லவர் யார்கெட்டவர், யார் நண்பன் யார் எதிரி,  அதன் அரசியல் உள்நோக்க காரணங்கள் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அதையெல்லாம் ஏற்கனவே சேறும் சகதியுமாய் சிதறிப்போய் உள்ள   மண்டைக்குள்ளே ஏற்றி விடைகள் தேடித் தெரியவும் விரும்புவதில்லை. ஆனால் ஒரு காலத்தில் யுத்தத்துக்குள்  நேரடியாகவே வாழ்ந்தபடியால அதன் கோரமுகம் நல்லாவே தெரியும்.


நீண்ட
சமவெளிப்பள்ளத்தாக்கு முகப்பில்
திகில் நெருக்கும் 
அலிப்போ நகரம் 
மிஞ்சித் தனித்து நிக்கும் 
ஒலிவ் மரங்கள்
சிதறிப்போன
குழப்ப் பீரங்கி வண்டிகள்
வெற்று
எறிகணைக் கோதுகளில்
சுடுமணல் நிரப்பி
சிதைக்கப்பட்ட பொம்மைகளைக்
குடும்பமாக்கி விளையாடும்
யுத்தத்துக்கு
நேர்எதிரான மார்க்கத்தில்
குழந்தைகள் !


.............................................................

இந்தப்பக்கம் 
ஜும்மாத் தொழுகையில் 
முழந்தாளிட்டு 
சமாதானம் ஏற்றிவைக்கப்படுகிறது 
துவாப் பிராத்தனைகளில் ,
அந்தப்பக்கம்
மெல்லத்தொடங்குகிறது
நிலமதிரும்
குண்டுகளின் விடுவிப்பு,
கசக்கிப்போட்ட வானத்திலிருந்து
இயந்திரப்பறவைகள்
கலவையாக
அள்ளிக்கொட்டும் ...
அமில எரிநட்சத்திரங்கள்
அங்கேயும்தான்
குறித்தவாறாமல்
இறக்கி வைக்க்கப்படுகிறது
மண்டியிட்டு விழுந்துபடுத்த
மனிதர்களின் மேல் !


..............................................................

தொழுகை முடிய 
துவக்குகளுக்கு
எண்ணெய் போட்டுவிட்டு
துப்பாக்கிச் சன்னம்களை
வேடிக்கையாகப் பார்க்கும்
ஒரு 
மஞ்சள்ச் சொண்டு
மைனாவை
நேர்தியாகக் குறிபார்க்கிறான் ,
பள்ளத்தாக்கின்
மூன்று பக்கமும்
மின்னல் முழங்கும்
சிவப்பு வெளிச்சங்கள்
அந்தப் பறவை
நாலாவது பக்கத்தில்
தப்பிப்பறக்க முனையலாம்
அதுக்கு முன்
யாருக்கு யார்
எதிரியென்று ஜோசிக்குது !


..............................................................

முன்நிமிர்ந்து
பார்க்க விரும்பாத
இளமை முகம் ,
கையணைப்பில்
இரண்டு தளிர்கள்,
இன்னும்
இருப்பது சொச்சம் மைல்கள்,
காற்றின் மூச்சில்
கந்தகப் புகைநெடி,
வழிகளை
நம்பிக்கையின்மையிடம்
கேட்டு அறிந்து கொண்டு
நீள நடந்துகொண்டிருக்கிறாள் .
இன்றிரவு
வான்தாக்குதல் இல்லையென்றால்
நாளைவிடியலில்
மூன்று ஜீவன்கள்
இன்னொருநாட்டில்
எல்லைதாண்டிய அகதிகள் !


.................................................................

அந்தச்
சின்னப்பெண்ணின்
ஆடைகளில்
வெடிமருந்தின் வாசம் ,
தூரத்தில 
தொடர்ச்சியான
எறிகணைகளின் மிரட்டல்,
சாம்பல் மலைகளில்
அலைபோலவே
விடைபெற்றுக்கொண்டிருக்கும்
அமைதி ,
பழகிப்போனதாலாயிருக்கலாம்
கண்களில்
மிரட்சியில்லை !


*******************************************

சமூகத்தின் விளிம்புநிலையில்  வாழ்ந்த   ஒரு  ஏழையை அராஜகமாக அடித்துக்கொண்ட செய்திகள் எல்லாராலும் நேசிக்கப்பட்ட  ஒரு சினிமா நட்ச்சத்திரத்தின் அகாலமரணதில் அமுங்கிப்போனது........... 



பசிக்காகத் திருடிய 
நாகரீமானவன்
அவனின் 
நேர்மை பிடிக்காத 
காட்டுமிராண்டி ஆதிவாசிகள் 
கும்பலாக
அறத்தின் அடிப்படையில
அடித்துக்கொன்றுவிட்டார்கள்
தோல்வி அடைந்தவனுக்கு
எதிராகவே
எப்போதும்
நிறுத்திவைக்கப்படுகிறது
வன்முறையின்
ஏகோபித்த
நியாயப்படுத்தல்கள் !

.................................................................

ஒரு 
நட்ச்சத்திரம் 
எரிந்து முடியுமுன்னம் 
விழுந்துவிட்டது ,
விழித்திரையில் 
சித்திரம் வரைந்த
வெள்ளித்திரை,
நெருங்கிப் பழகிய
நீண்ட நாள் சிநேகிதி,
மோகனப் புன்னகையின்
மின்னல் வாசிப்புக்கள்
நடுவீட்டில்
சாவு விழுந்ததுபோல்
உயிர்வாழ்தல் 
சாகச நாடகம் !

...........................................................

ஒரு 
வெள்ளித்திரையின் 
அகாலப்பிரிவிலிருந்த 
நெஞ்சதிர்வு 
மர்மங்கள் குறித்து 
நமக்கு நடந்ததுபோல
அலட்டிக்கொண்டிருந்தபோது
ஒரு
பரமஏழையின்
அடாவடிமரணம்
வறுமையின்
குற்றவாக்குமூலம் போல
திரைமறைவில்
திசை திருப்பப்பட்டுவிட்டது !


***************************************************

மதுபோதையில் ரெண்டு இளையவர்களுக்கு இடையில் உருவான வாக்குவாதம் ஒரு கொலையில் முடிய  அதை இணையவெளியில் சமூக ஊடகங்கள்  ஊதிப்பெருக்கி   சில நாட்களாக பெரும்பான்மை சிறுபான்மை மதவாத  இனத்துவேஷ  வன்முறைகள் அதிகரித்து அதன் விளைவாக நிறைய அப்பாவிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வன்முறையில் இழுபடாமல்  மவுனமாக இருப்பதுதான் உண்மையான மனிதர்களின்  தைரியம். 

எதட்காக 
ஆவேச முன்னெடுப்பில் 
ஒருபொழுதுக்குள் 
வந்திறங்கிக் குவிந்துவிடும் 
வெறுப்புகளுக்கு 
பெருமளவில் வரவேற்பு ?
தர்மம்
நீதியின் வெளிச்சம்
அதர்மம் அநீதியின் நிழல்,
கைகளை மீறி
வேவ்வேறு
முன் மாதிரிகளாக
முரண்படும் எதிர்வினைகள்
அதனதன் போக்கில், !


....................................................................


இன்னமும்
திருத்தங்களை விரும்பாத
கட்டமைப்புக்கள்,
சட்டங்களால்
நிறைவேற்றமுடியாதுபோன 
இலட்சியங்கள்,
அராஜகமாக
எங்கெல்லாமோ
பயணிதுக்கொண்டிருக்கும்
நீதிதேவதையின்
நடுநிலைத்
தீர்ப்புக்களிலும்
அதீதப்பெருமிதங்களில்லை !


................................................................

கலவரங்களை
வேடிக்கையாகவே
பார்க்கவைக்க விரும்புகிறது
தகவல்த் தடங்கள் ,
எதற்குள்ளோ 
அடிமைப்பட்டுக்கிடக்கிறது
மனசாட்சி ,
கும்பல்கலோடுதான்
வன்முறையாகிக்கொண்டிருக்கிறார்கள்
பேரினவாதிகள்,
வெறுமையோடு
ஈனக் குரலையுமிழந்து
தனித்துத் தனித்திருக்கிறார்கள்
மனிதாபிமானிகள் !


...............................................................

இன்று
மறுக்கடிக்கப்படும்
சமூக அநீதிகளை
நிராகரிக்கும்
புத்திசாலித்தனம்
உங்களுக்குரியது ,
நாளை
அபாரசாமர்த்தியமாக
இதுவரையிலான
அடிப்படைகளிலும்
சீர்குலைவுகள்நிகழவைப்பார்கள்
அவர்கள் !




Wednesday, 7 March 2018

புள்ளிகளை இணைக்குமிடத்தில்!

" புள்ளிகளை இணைக்குமிடத்தில்! "  மூன்று வகையான   கற்றுக்கொண்ட முதல் பாடம் தரும்  சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட கவிதைகள். காற்றுக்கு எப்படி சுற்றுசூழல் தேவையோ அப்படியேதான் கவிதைக்கும் ஒரு சுற்றுச்ச்சுழல் தேவையாக இருக்கு. அது எந்த இடம் என்று சொல்லமுடியாது , வெல்வேறு இடமாக இருக்கலாம்.பல நேர்கொள்ளளாக இருக்கலாம்,  சில  பயணமாக இருக்கலாம், ஒரு  அனுபவமாகவும் இருக்கலாம். 


                                                     ஊரில இப்ப இருக்கிறவன் சிஞ்சக்க ஒருவன்தான் . இளவயதில்  நாங்க எல்லாரும் ஒருகாலத்தில் அடிக்கடி அரசியல் உணர்ச்சிவசப்பட்டு, அர்த்தமில்லாமல்க்    கொழுவல்பட்டு   வெல்வேறு கொள்கை , இலட்சியம் , கோட்ப்பாடு என்று ஒவ்வொரு பக்கத்தால் இழுத்துக்கொண்டு இருந்தாலும் சிஞ்சக்க  ஒருவன் தான் எல்லாத்துக்கும் 

                                               " ஓமடா மச்சான், நீ சொன்னாய் மச்சான் அதுதாண்டா உண்மை,, ஓமடா மச்சான் இப்ப நீ ஒரு விளக்கம் சொன்னி  எல்லா அதுதாண்டா மச்சான் சரியான பொயிண்ட்    "  என்று உடன்பட்டுக்கொண்டு இருப்பான்.  

                                                     இதே வசனத்தைத்தான் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டு இருப்பான். ஒருத்தரையும் அவர்கள் கொள்கைக்காக தன் நட்பைப் பணயம் வைத்து   வெறுக்க மாட்டான் . இப்படி எல்லாருக்கும் " சிஞ்ச் சக்க சிஞ்ச் சக்க சிஞ்ச் சக்க " என்று ஜால்றா போடுறதால அவனுக்கு " சிஞ்சக்க " என்று பெயர் வைச்சம், சிஞ்சக்கவுக்கு  அவனோடு அப்பா அம்மா வைச்ச  வேற ஒரு அழகான பெயர்  இருக்கு. 

அவனோடு கதைத்தபோது, அவன் காட்டிய காணொளியைப் பார்த்தபோது, சொன்ன தகவல்களைக் கிரகித்தபோது  தோன்றியது இந்த  கவிதை. 

                                                        

முன்னொரு 
பழங்காலத்தில் 
வெறுங்கால்  
கிளுவங் கதியால்களும் 
கிடுகுவேலிகளும் 


வழியெங்கும்
தேர்முட்டியிலிருந்து
செங்கழுநீர்த்தொட்டிவரை


வெய்யில் வெளுத்தபடியே
கோணலாகத்தான் இருந்தது
அம்மன்கோவில்வீதி !

பவதாரணி போல ,
சித்திரைக் கஞ்சிபோல ,
அம்மச்சியா குளம்போல
மானம்பூ திருவிழாபோல ,
சொக்கன்கடை வடைபோல,
பாசிக்கிணறுபோல ,
அன்னமடத்துத் திண்ணைபோல ,
கட்டைப் பூவரசம் பூக்கள்போல
உலகத்தில்
வேறெங்காவது அதிசயமிருக்கா
என்றெல்லாம் 

நீயும் நானும் பேசியிருக்கிறோம். !

ரெண்டு கண்ணிலும்
தூரப்பார்வை பறிபோனதுபோல
நான் 

இங்கு வந்துவிட்டேன் !

நீ
அங்கிருந்தபடியே
வெளிச்ச நாளொன்றில்
கைபேசிக் காணொளி அனுப்புகிறாய் !

நண்பா
சீமெந்துக்கொங்கிரீட்
காலூன்றிய கட்டிடங்களைத்தவிர
வேறு 

ஒன்றுமேயில்லையே அதிலே !

ஆனாலும்
எல்லாத்திலுமே 

ஒரு நேர்த்தியிருக்கு
அதில்த்தான் நண்பா
வெளியேறியேவிட்டதே
நமக்கெனவே வடிவமைக்கப்பட்ட
எல்லா விதமான இன்பங்களும் !

நன்பா
நாங்கள் கடந்த பாதையை
நீ
இருட்டிலேயே 

எடுத்து அனுப்பியிருக்கலாம்
இதில்
வெட்கப்பட இனி ஏதுமில்லையே !


***********************************************************

ஒரு காலத்தில் நேரம் காலம் இல்லாமல் எங்களோடு வயல்வெளி, அம்மச்சியா குளத்தடி. வீராளியம்மன் கோவிலடி ,கோணல்ப்  புளியடி,பால்ப் பண்ணைவளவு, தெய்வேந்திரத்திண்ட மாந்தோப்பு  என்று தோளோடு தோழனாக  இழுபட்டுத்திரிந்த   ஒரேயொரு நண்பன் சிஞ்சக்க மட்டுமே இப்பவும் அதே வீட்டில இருக்கிறான்.  

                                                மற்றவர்கள் எல்லாரும் என்னைப்போலவே வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். சிஞ்சக்க   அலைபேசியில் தொலைபேசுவான். ஊர் நடப்பு நிலவரங்கள் சொல்லுவான், எனக்கு பல சம்பவங்கள்  மறந்து போய்விட்டது. ஆனால் சிஞ்சக்க பவதாரணி  என்ற பாவதாவைத்தான் அந்த நாட்களில் காதலித்துக்கொண்டு இருந்தான், இப்பவும் சிஞ்சக்க கலியாணம் கட்டாமல் தனியாத்தான் இருக்கிறான். 


                                                           அவனோடு கதைத்தபோது, அவன் காட்டிய காணொளியைப் பார்த்தபோது, சொன்ன தகவல்களைக் கிரகித்தபோது  தோன்றியது இந்த  கவிதை.  


மின்னேறிஞ் 
திருவிழா
மூக்குத்திக்கு மேல்
உயிர்ப்புடன் மெருகேற்றி
முகம்சுளிக்காமல் சிரிக்கும்
பவதா!

இப்போது எங்கிருக்கிறாள் ?

நல்ல வேளை,
எல்லாரும் நேசித்தும்
கடிதம் எழுதிக்காட்டி வாசித்தும்
காதலுக்கு உடன்படாத
பவதா,

எப்படிக் கலியாணம் கட்டினாள் ?

கச்சிதமான தூய்மையில்
கலையாத சேலையில்
முழுமையையும் ஒருமையையும்
ஒளியும் ஓலியுமாக
வீராளியம்மன் வீதியெங்கும்
தீராக் கனவுகளைக் கடத்திய
பவதா

இன்னுமப்பிடியேதான் 
இருக்கிறாளா நண்பா ?

நீயும்தான்
இடம்பெயர்ந்து
வட்டமடித்து சிக்கிச் சீரழிந்துவிட்டதில்
பழசுகளை நெருங்கும்போது
நினைவிழந்திருக்கலாம் !

நான் கேட்பது
எங்கட பவதா.

எங்க ஊர் பாவதாரணியடா!

அவளாவது
தேங்கியிருப்பதை எல்லாம்
இழுத்துக்கொண்டுபோகும் 
காலத்தில்
இன்னும் மிச்சமிருக்கிறாளாடா நண்பா ?


********************************************************


சில வருடங்கள் முன்னம் ஒரு முகநூல் நண்பர் கன்வஸ் திரைச்சீலைகளில் வரைந்த ஓவியங்களை நேசிப்பவர், அவரும் ஒரு சுமாரான ஓவியர் .தமிழ்ப் பெண்களை மையமாக வைத்து வரையப்பட்ட தென்னிந்திய ஓவியர்களின் ஒயில் பெயிண்டிங்ஸ், வாட்டர் கலர் பெயிண்டிங்ஸ், பென்சில் ஸ்கெச் பெயிண்டிங்ஸ் படங்கள் முன்னம் உள்பெட்டிக்கு அனுப்புவார்.

                                                                                                       எனக்கு அதிகம் அதன் டெக்கனிகள் விசயங்கள் பற்றி ரசனை இல்லை. ஆனால் அதைப் பார்க்க நிறைய ஐடியா வரும் எழுத. அதனால தொடர்ச்சியாக பல தம...ிழ் கலாச்சரதில் பெண்களின் வாழ்வியல் முரண்பாடு, காதல், கலியாணம், குடும்பம், என்று எழுதிக்குவித்தேன் அந்தப் படங்கள போட்டு நிறைய கவிதைபோல எழுதிய பதிவுகள் ஒரு அலைபோல எழும்பி வேறுபலரையும் என்னைப் போல எழுத வைத்தது. நல்ல காலம் அவற்றை உதிரிப்பூக்கள் போல கூட்டிஅள்ளி என் வலைப் பூங்காவில் சேமித்து வைத்துள்ளேன்.

                                                                                                                அவை இப்பவும் மின்னெறிஞ்சான்வெளியில் இருக்கு. பிறகு ஒரு கட்டத்தில் எனக்கே அதுகள் சரபோஜி மகாராஜாவின் சமையல் குறிப்பில் வாற அரைச்சுவிட்டசாம்பாரு போல சுவாரசியம் இழந்து விட அந்த நண்பரும் என் பதிவுகளிலும் , நானும் அவர் பதிவுகளிலும் கொடுக்கல் வாங்கல் இல்லாமல் போய்விட்டோம். இந்த வருடம் பிறந்த போது மறுபடியும் உள்பெட்டி வந்து ,அன்புடன் வாழ்த்து சொல்லி, படமும் அனுப்பி , வரைந்த பெண் ஓவியனி பெயர் சாயுச்சி கிருஷ்ணன் என்றும் குறிப்பு அனுப்பி இருந்தார்.

                                                                        அந்தப் படத்தில் ஒரு பெண்ணின் முகத்தில் ஏக்கம் இருந்தது , கொஞ்சம் அவதானிக்க வேறுசில விபரங்களும் இருந்தது . அது என்னைக் கலவரமாக்கியது
பெண்களின் பிரச்சினைகளும் ஆண்களின் பிரச்சினைகளும் ஏறக்குறைய ஒன்றுதான் என்று நினைப்பதால் எப்பவுமே பெண்ணியம், பெமினிஸம், என்று வெளிப்படையாக சொல்லி எதுவுமே நான் எழுதுவதில்லை.  

                                                                    பழையபடி இந்தப் புதுப் படத்தை உற்றுப்பார்த்து வழக்கம் போல கிணறு வெட்ட " collectivistic social cohesion and interdependence " என்ற சென்டிமென்டல் பொயடிக் ஐடியா பூதம் போல கிளம்பியது. அது எழுத வைத்தது. !

*
வருடங்களாய்த்
தாம்பத்தியமில்லை !
இந்திர
மை விழிகளில்
இமைகள் செருகிக்கொல்லும்
அடங்காத ஏக்கம் !
படிதாண்டாதவள்
அதனால்
புராணத்தனமான
அகலிகையின் பொறுமை !
சன்னதமாடுமிரவுகள்
வெண்சங்குகளில் முத்துக்களைத்
திறக்கின்றன !
பதிவிரதையல்லவா
கும்பகர்ண உறக்கத்தையும்
சகித்துக்கொள்கிறாள் !
மதனமூர்க்கங்களை
மந்திரம் சொல்லி
மவுனத்தை நிரப்பிவைத்து
பொருத்தமில்லா
மூன்று முடிச்சுகளை
இறுக்கியே வைத்திருக்கிறாள் !
மடி கிழிபட்டு
மண்டியிட்டுக்கொண்டிருக்குமவள்
தளர்மேனி
தளரவேயில்லை !
பதிவிரதையல்லவா
தவறாமல்
நாள்ப் பார்த்து
ஆசாரமாய் விரமிருந்து
தாலிக்கயிற்றுக்கு
சுமங்கலிப்பூசையும் செய்கிறாள் !



******************************************************



ஒரேயொரு நாளில் பலவிதமான மன உந்துதலில் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத மனச் சுவாச கட்பனை வெளிக்குள் தென்றல் போலவே நுழைந்து வெளியேறி எழுத்தமுடியாமா ?சரியாக ரெண்டு வருடங்களுக்கு முன் இதே தை மாதப் பனிநாளில் கார்குழல் வடிவாக மேகங்கங்கள் கலைந்தோடிக் கொஞ்சிக்கொண்டிருந்த நாளில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வசித்த போது எழுதியவை.

                                                அவைகளைப் பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருக்கு .ஜோசித்துப் பார்த்தால் , ஒரு மோசமான சந்தியில் முகம்மாறிய மனநிலையில் இருந்து இருக்கிறேன், அல்லது சிந்தையில் சிலையாக பொழுது போகாமல் வேலை வெட்டி இல்லாமல் இருந்து இருக்கிறேன், அல்லது அந்த ரோகிணி நன்னாளில் தண்ணி அடிச்சுப்போட்டு பினாத்திக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறன், இல்லாவிட்டால் இது சாத்தியமே இல்லை.
                                              அந்த எழுத்துக்களை தொகுத்துப் போடுகிறேன். நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க !
*
உப்புமாவையும்
வெந்தயக் குழம்பையும்
மிளகு சாம்பாரையும்
உன்னை
நினைத்துக்கொண்டு
சுட்டு விரலால்
தொட்டு ருசிதுப்
பார்த்துப் பார்த்துச்
சமைச்சேன் என்கிறாய் நீ,
சாப்பிடாமலே
வெறும் வயிற்றில்
உன்
வியர்வைதான்
வாசமாய் இருக்குதடி
என்கிறேன்
நான்!
*
12 January 2016 at 20:18
**
அவள் எங்கோ
போய்க்கொண்டிருக்கிறாள்.....
பழைய
கருங்கல்லுப் பாதை
சப்பாத்துக் கால்களில்
தீர்க்கமான
டொக் டொக் டொக்
இறுக்கிக் குத்தி
வெறுத்துப் போன
தனிமையின் நடை
சந்துச் சுவரில்
படபடப்பான எதிரொலி
முடக்கு முடிவில்
அவசரத்துக்கு உதவாத
வெளிச்சம்
ஓரங்களில்
மூக்கைப் பிடுங்கும்
மூத்திர வாசம்
ஜன்னல்களில்
அலட்சிய முகங்கள் !
அவள் எங்கிருந்தோ
திரும்பிவந்துகொண்டிருகிறாள்.......!
.
12 January 2016 at 20:18
***
கச்சிதமான
பொய்களை
நாலு இடத்திலிருந்து
பகல் முழுவதும்
திருடி எடுத்து வைத்து
நிச்சயித்த
இரவோடிரவாக
உண்மை போலவே
உருவகித்து எழுதிவிடுகிறது
விசுவாசத்தை
ஆராதிக்கின்ற
கற்பனை !
*
12 January 2016 at 09:56
****
வெளிச்சம்
நம்பிக்கையின்
அடி ஆழத்திலிருந்தது
பல நேரங்களில்
காதலின்
குறியீடாகவுமிருந்தது
இருட்டு
அதன் எல்லைகளைப்
பலாத்காரமாகப்
பகலிலும் விஸ்தரித்துபோது
அதற்குள் சேரமறுத்த
வெண்பனி
தனக்கெனவே தனியொரு
உலகத்தையே உருவாக்கியது.!
*
12 January 2016 at 10:26
*****
வழக்கம் போலவே
மின்னல்
கொடியாகித் திரிந்து
வளைந்து
நடு நெற்றியில்
நெளியுதொரு பொட்டு
அது
மின்னும் போதெல்லாம்
இமை வெட்டித்
திகைத்து முடிக்க
அவகாசம் கொடுக்காமல்
விடிவெள்ளி என்று சொல்லியே
இதயத்தில் இறங்குதடி
இடி முழக்கம்.!.
*
12 January 2016 at 11:37
******
ஆத்மாவை
அமைதியாக்கி வைக்க
ஏரிக்கரையில்
நடை போனேன்
அடக்கிவைக்க முடியாத
கோபத்தை
இரைச்சலாக்கியே
காலுக்குள்
நசிபட்ட நடுநிசி
உரிமையோடு
உன் குரலில்
உரையாடிக்கொண்டே வந்தது
அன்பில்லாதவரோடதான்
அதிகம் பேச வைக்குது
உறைபனி !.
*
12 January 2016 at 17:54
*******
முகஸ்துதிகளை
ஒதிக்கிவிட்டு
யாருக்கும் பயப்பிடாமல்
வெளிப்படையாகவே
சொல்வதென்றால்
கவிதையும்
காதலும்
ஒன்றுதான்
வேறொரு பொருளில்
அர்த்தமிழந்து
பிறிதொரு பிறப்பில்
நிராகரிக்கப்பட்டு
ஒரு பொழுதுக்குள்
அழுகிவிடும்.!
*
12 January 2016 at 19:57 ·


..