Thursday, 22 September 2016

வயது வந்தவர்களுக்கு மட்டும்.....

சின்ன வயசில் எங்களின் குளத்தடி குழப்படி குருப்பின்,கிரிகெட் விளையாடி முடிய ,புளிய மர இருட்டில் நடக்கும், பிந்திய இரவு சம்பாசனைகளில் கொஞ்சம் அறிவுபூர்வமா எப்போதும் பயந்து பயந்து விவாதிக்கும் விசியம் ," அடல்ட்ஸ் ஒன்லி " என்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் கண்டிப்பாக பார்க்க அனுமதிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள் டவுனில எந்த தியடரில் ஓடுது என்பதும்,அந்தப் படம் ஏன் பார்க்க வேண்டும் என்பது போன்ற மிட் நைட் மசாலா விசியங்கள்.

                                              இனி நான் சொல்லப்போறது அந்தப் படங்களை தியேடரில் பார்ப்பதில் உள்ள சிக்கல்கள , " யங் லேடி  சட்டர்லி லவ்வர்ஸ் " என்ற 18 என்ற இலக்கத்தைச் சுற்றி வட்டம் போட்ட கொஞ்சம் வில்லங்கமான படம் பார்த்து பெற்ற " அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்பெருங் காடு உளரும் அசைவளி போலும் " ஜென்ம சாபல்யம், அதைப் பார்க்க நாங்கள் எடுத்த ரிஸ்க், அதோடு இணைந்த" மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகலஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது" போன்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் சம்பவங்கள்.

                                                   டவுனில இருந்த லிடோ ,வெலிங்கடன், ரீகல்,முக்கியமா இசகு பிசகு   மூத்திர முடுக்கில இருந்த சாந்தி  தியடரில்தான் அந்த மாதிர்ப் படங்கள் அதிகம் போடுவார்கள்,போட்டு அதன் விளம்பரத்தில் 18 என்ற இலக்கத்தைப் போட்டு அதைச் சுற்றி ஒரு வட்டம் போட்டு ,சில நேரம் " கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் " எண்டு போட்டு இருப்பார்கள், அது இன்னும் ஆர்வத்தைக் கிளப்பும்,

                                               அந்த இளந்தாரி வயதில, மீசை முளைத்துக்கொண்டும். தோள்ப்பட்டை விரிந்து கொண்டும்,பார்க்கிற சுமாரான பெட்டைகள் வெட்டி வெட்டி அக்சிடென்ட் பட்ட லொறி போல நடக்கும் போதும் அபிநய சுந்தரித் தேவதைகள் போலவும் ,அவர்கள் இளிக்கும் இழிப்பிலும் புன்னகை அரசிகள் போல தெரிந்து கொண்டு இருந்த போதும் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதுக்கும் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் இடையில் உள்ள வரன்முறை எங்களுக்கு அப்போது விளங்கவில்லை,.
                                                         குளத்தடி குழப்படிக் குருப்பின் நண்பர்களில் கொஞ்சம்,வயதுக்கு மீறி விபரம் தெரிந்த பித்துக்குளி தான் அதை கொஞ்சம் விபரமா சொன்னான்,அவன்தான் முதல் முதல் எங்களுக்கு வெள்ளைகாரிகளின் உடுப்பு இல்லாத படம் போட்ட புத்தகம் முதல் முதல் காட்டி எங்க அறிவுக் கண்ணைத் திறந்தவன் எண்ட படியால அவன் சொல்வதை நாங்க எப்பவும் கேட்போம்,அவன் சொன்னது,

                                  " கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டுபோடுவது கலியாணம் கட்டிய ஆண்கள் பார்க்கும் படம் "

                                        எண்டு, கலியாணம் கட்டிய ஆண்கள்தான் எல்லாத்தையும் ரியலிடியில் லைவ் அக்சனில் பார்க்கலாமே அப்புறம் எதுக்கு அவர்கள் வெள்ளித்திரையில் ஆ வெண்டு கொட்டாவி விட்டுப் பார்க்கவேண்டும் எண்டு நாங்கள் கேட்டதுக்கு அவன் சொன்ன " படு முடைப் பருந்து பார்த்திருக்கும்நெடு மூதிடைய நீர் இல் ஆறே..." போன்ற சங்க இலக்கியச் செறிவுள்ள தெளிவுரையை இங்கே எழுதவே முடியாது,...

                                                      யாழ்பாணத்தில அந்த நாட்களில் படிக்கும் மாணவர்கள் இப்படி இங்கிலிஸ் படம் பார்ப்பது ஒரு பஞ்சமகா பாவச் செயல் என்பது போலதான் இருந்தது,முக்கியமா தியடரில் டிக்கெட் எடுக்க முடியாது எண்டு சொன்னாலும், வீராளி அம்மன் புண்ணியத்தில் டிக்கெட் எடுக்கலாம், அதில சில டெக்னிக்குகள் இருக்கு,   பாடசாலை  வகுப்பைக்  கட் அடிச்சு படம் பார்பது எப்பவுமே  பயங்கர ரிக்ஸ்  , எல்லாப் பாடசாலை மாணவர்களும் கட் அடிப்பார்கள். பிரிஞ்சுபலுக்கு  யாரும்  சொல்லிக்கொடுதுப்  பிடிச்சா வாழ்க்கை அவளவுந்தான். 

                                        அதுக்குதானே  வார  இறுதி  நாட்களில்  ரெண்டுநாள் பாடசாலையில்  லீவு தருவார்களே. அதைவிட அந்த சனி ஞாயிரு  நாட்களில்  தியேட்டரில்  சனம்  அதிகமா இருக்கும். சனத்தோடு  சனமா  கும்பலில்  கோவிந்தா போட்டு  கடல் மீன்கள்  போல  சுழி ஓடலாம் . பொது ஜனம்கள்  எப்பவுமே  நாங்கள்  படிக்கிறமா  கிழிக்கிறமா  என்று  ஆராய்ச்சி செய்வதில்லை.   அரைகுறை  ஆடை  இங்கிலிஸ்  படம்  பார்த்துக்  குட்டிச்சுவர் ஆனாலும் அவர்களுக்கு  கவலை  இல்லை 
                                     முக்கியமா நாங்கள் தியேட்டருக்கு படம் தொடங்க முதலே போக மாட்டோம்,வெளிய ரோட்டில விடுப்பு பார்க்கிற மாதிரி நிண்டுகொண்டு முதலாவது பெல் அடிக்கும் வரை அப்பாவிகள் போல நிற்போம்,அது அடிக்க தியேட்டர் உள்ளுக்க லைட் நிற்பாட்டி போடுவார்கள், அந்த இடை வெளியில் போய் டக்கெண்டு டிக்கெட் கவுண்டரில் கொஞ்சம்,குதிக்காலில் எம்பி நிண்டு கொண்டு " தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி " எண்டு பாடிக்கொண்டு டிக்கெட்  எடுப்போம்,

                                                    ஒருநாளும் எங்களுக்கு வயது வந்துவிட்டதா எண்டு டிக்கெட் கொடுப்பவர் செக் பண்ணியதே இல்லை,அப்படி எடுத்துக்கொண்டு இரண்டாவது பெல் அடிக்க, படம் பற்றிய தொடக்க டைட்டில் விசியம் மிஸ் பண்ணும் கவலை இருந்தாலும், இருட்டில தடவிக்கொண்டு போய், அதிகம் யாரும் இல்லாத மூலையில் இருந்து பார்த்தல் தான் எங்களுக்கு இங்கில்ஷ் இடைஞ்சல் இல்லாமல் விளங்கும் என்பதால் அப்படி இடங்களை செலக்ட் பண்ணி உடைந்த கதிரையில் இருந்து பார்ப்போம்.

                                                 இடை வேளையில்,எல்லா லைட்டும் போடுவார்கள் நாங்கள் போட்டிருக்கிற தொப்பியை நல்லா இழுத்து முகத்தை மூடிக்கொண்டு இருப்போம்,எழும்பி கண்டின் இக்கு போகமாட்டோம்,போனால் பிறகு கதை மறந்து விடும் என்பதால் கதையின் தொடர்ச்சியை மறக்காமல் இருக்க அப்படியே இருப்போம். படம் முடியத்தான் முக்கிய அலுப்பு தொடங்கும்.வெளிய வாறதுதான் பெரிய கவுரவப் பிரச்சினை,அதிலயும் எல்லாரும் எழும்பிப் போன பிறகுதான் பதுங்கி பதுங்கி வெளிய வருவம்,

                                                         அந்த நேரம் தான் வருசத்தில எப்பவாவது கலியான வீடு ,செத்தவீட்டுக்கு மட்டும் தலை காட்டும் சித்தப்பா, பெரியப்பா அல்லது மாமாவை தியேடர் வாசலில் சொல்லி வைச்ச மாதிரி சந்திக்க வேண்டி வரும், தூரத்து சொந்தகாரரே திடீர் எண்டு ரெம்ப அக்கறையான நெருங்கிய ரத்த உறவு  சொந்தமா மாறி வீட்டை வந்து சொல்லி கொடுப்பார்கள்,வெலிங்கடன் தியட்டரில் "யங்  லேடி சட்டர்லி லவ்வர்ஸ் " படம் ரசித்து பார்த்து முடிய " தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! " எண்டு பாடிக்கொண்டு வெளிய வர புண்ணியக் குஞ்சி சித்தப்பு, டவர் கூல் பாருக்கு முன்னால் நிண்டார்,

                                                என்னைக் கண்டார்,  கண்டும் காணதது போல அண்டங்காகம்  போல  தலையை  வேற  பக்கமா திருப்பிக்கொண்டு     நிண்டு   போட்டு ,நான் வீட்டை வரமுதலே அவர் வீட்டை வந்து அம்மாவுக்கு சொல்லிக் கொடுத்திட்டார்.. வீட்டை வர முதலே அம்மா,
                                     " பூனை போலப் பந்துங்குறாய் எங்கடா போயிட்டு வாராய். "

                                             எண்டு கேட்டா, நான் பேசாம நின்டேன்,

                               " ஏனடா இந்த வயசிலேயே தலையால தெறிக்கிறன் எண்டு நிக்குறாய் ,நான் எவளவு கஷ்டப்பட்டு உங்களை எல்லாம் வளர்குறேன், இதெல்லாம் உனக்கு இப்ப தேவையா "

                      எண்டு கேட்டா, கொஞ்சநேரம்  தலையை  மண்டிக்கொண்டு நின்றேன் 

                               " சொல்லு  இப்பவே  தியேட்டர்  வாசலில்  நிண்டி  என்றால் பின்னடிக்கு  நெடுகிலும்   சீவியம்  கிழியப்போகுது "

                                      "    ஹ்ம்ம்,,நல்ல  கருத்து  உள்ள  படம்  எண்டு  பிரெண்ட்ஸ்  சொன்னாங்கள்  அதால  பார்க்கப்  போனேன் "

                                    "    சரி  அது  என்ன  படம்  சொல்லு  "

                               "  குதிரை  லாயத்தில்  குதிரைக்குக்  கொள்ளு வைக்கிற  கதை "

                                    " அது  அப்ப  நல்ல  படம் போல  இருக்கே ,,"

                                "   ஓம்  நல்ல  படம் தான்  ..இப்படி வெள்ளைக்  குதிரையை  இங்கே  எங்க அம்மா  பார்க்க கிடைக்கும்,,இப்பிடி  இங்கிலிஸ்  படதிலதானே  காட்டுறாங்கள் "

                                   "    இதென்னவோ  உன்னோட வயதுக்கு  பார்க்கத்  தேவையில்லாத  படம்  எண்டது போல எல்லோ குஞ்சி  சாடை  மாடையா  பறைஞ்சார் "

                                     " அதுதானே  சொன்னேன்  அவருக்கு  இங்கிலிஸ் விளங்காது  எண்டு "

                                   " அப்பிடியே  சிலமன்,,   அதுக்கு  என்னத்துக்கு  புண்ணியக்  குஞ்சி  குத்தி  முறியுது  எண்டு  ஓடிவந்து  சொன்னார் "

                                    "   ஓம் , அவருக்கு  இங்கிலிஸ்  தெரியாது  அதுதான்  அப்படி  சொல்லி இருப்பார் "

                                   "  என்னதான் இருந்தாலும்  இதெல்லாம்  உனக்கு இப்ப தேவையா  சொல்லு "

                     " தேவைதான், தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! "

                       எண்டு சொல்ல நினைச்சேன்,பயத்தில அதுக்கு ஒண்டும் சொல்லவில்லை, அம்மா

                     " இனி இதெல்லாம் பார்க்க மாட்டேன் "

                                          எண்டு தலையில அடிச்சு சத்தியம் செய்து தரச் சொன்னா, செய்து கொடுத்தேன், அதென்ன பெரிய விசியமா, அம்மா இப்படி எல்லாத்துக்கும் கேட்பா,ஒரு கட்டத்தில் எனக்கே எது எதுக்கு தலையில அடிச்சு சத்தியம் செய்து கொடுத்தது எண்டு நினைவே இல்லை அந்த இளந்தாரி டீன் ஏஜ் வயது  நாட்களில். ஆனாலும் என்னோட நியாயமா

                                    " பள்ளிக்கூடத்தில இங்கிலிஸ் டிச்சர் சொன்னவா,இங்கிலிஸ் படம் பார்த்த இங்கில்ஸ் நோலேச் அதிகம் ஆகும் எண்டு அதால பார்த்தேன் "

                         எண்டேன், நல்ல காலம் அம்மா அது என்ன படம் எண்டு கேட்கவில்லை,புண்ணியக் குஞ்சியும் விபரமா சொல்லவில்லை..

                                              யங்  லேடி சட்டர்லி லவ்வர்ஸ் படக் கதை விக்டோரியா ராணி இங்கிலாந்தை ஆண்ட காலத்தில் நடக்கும் ஒரு கதை ,லோர்ட் என்ற உயர் சமூகத்தில் இருக்கும் கவுரவமான  பிரபு சடர்லி ஒரு பக்கவாத நோயாள திடிர் எண்டு படுக்கையில் விழ,அவரின் இளம் மனைவி லேடி சடர்லி என்ற அழகான் இளம் பெண் வேறு ஒருவரின் படுக்கையில் ஏறும் கதைதையை சுவாரசியமா சொல்லி இருந்தார்கள். பிரபு சடர்லி நல்ல மனிதர் அவரே சொல்லுறார்,

                                      " இனி என்னிடம் திருமண உறவு சந்தோஷ விசியங்களை எதிர் பார்க்க வேண்டாம்,உன் விருப்பப்படியே இன்னுமொரு பிரபுவிடம் உனக்கு விரும்பினால் உன் ஆசைகளை பெற்றுக்கொள் "

                          எண்டு உண்மையாகவே கொஞ்சம் விக்டோரியன் கால நடைமுறைகளில் இருந்து விலத்தி சொல்லுறார்.

                                               லேடி சடர்லி இயல்பாக இருப்பா,நிறைய பிரபுக்களின் பார்டிகளுக்கு பக்கவாத கணவனையும் அழைத்துக்கொண்டு போவா ,லோர்ட் சடர்லி எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு இருப்பார் .ஆனால் காதல் என்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே எண்டு, நீலக் கண்கள்,அதில் ஏக்கம், நுரை போல வழுக்கி விழும் சுருள் முடி, கீழ் நோக்கி வளைந்த கிளி மூக்கு எண்டு அண்டலேசியன் அழகில்  அந்த அம்மணி கைய்க்கு சவுக்காரம்  போட்டுக் களுவிப்போட்டுதான்  காலையே  தொட வேண்டும் போல அவளவு  தங்கப் பதுமைக்   களையா  இருப்பா 

                                  ஆனால்   அழகில் அம்சமாக இருக்கும் அவர் மனைவி லேடி சடர்லி,  உடுப்பு எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு பாய்வது வேறு ஒரு உயர் குல பிரபுவுடன் இல்லை,  பதிலாக அவர்கள் பரம்பரைக் குதிரை லாயத்தில்,குதிரைக்கு கொள்ளு வைக்கும் எடுபிடி வேலை செய்யும் ஒரு சாதாரணமாண வேர்கிங் கிளாஸ் என்ற உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்து  ஒரு இளம் மனிதருடன்.  அதுதான் கதையின் திருப்பம்,.

                                        அந்தப் படம் எடுக்கப்பட்ட திரைக்கதை உண்மையில் டி எச் லாரன்ஸ் என்ற ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் அந்தக் கதையை ஒரு " கொன்பெஸ்சனல் ஸ்டைலில் " நாவலாக எழுதினாராம், விக்டோரியா ராணி அந்தக் கதையை தடை செய்தா. அவரையும் " உதவாக்கரை " எண்டு சொல்லி இருக்குறா.

                                நடு நெத்தியில சந்தனம் பூசி நாமம் போட்ட அந்த கதை அதன் சுருக்கிய வடிவில் நான் பின் நாட்களில் படித்து இருக்கிறேன், அதில நிறைய இலக்கியம் இருந்தது, அதைத் தடை செய்த விக்டோரியா மகா ராணியின் கணவர் இறந்தபின் அவா யாரோடு காதலில் இருந்தா எண்ட விசியம் செமக் காமடி,பாவம் தன் காதல் வாழ்கையை அவா யாருக்கும் சொல்லாமல் செத்துப்போனா விக்டோரியா மகா ராணியின் ரோமன்ஸ் உண்மைக் கதை " யங் லேடி சடர்லி " என்ற இளம் பெண்ணின் விரகதாபத்தை விட சுவாரசியம் ஆனது என்பதையும் படித்து இருக்குறேன்...

                                       உண்மையில் யாழ்பாணத்தில் வெலிங்கடன் தியடரில் பார்த்த " யங்  லேடி சட்டர்லி லவ்வர்ஸ் " படத்தில,லேடி சடர்லி உடுப்பு எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு, கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் புரியும்படி செய்த விசியங்களை விட, அந்தப் படத்தில வார அமரிகன் செடில் பிரெட் வகைக் குதிரைகள்,  அவை பாய்ந்து திரியும் பரந்த புல் வெளிகள், சடை வளர்த்த ஐஸ்லாண்டிக் குதிரை இழுக்கும் குதிரை வண்டிகள், பெரிய பெரிய விக்டோரியன் இங்கிலாந்து வேல்ஸ் நாட்டின் நாட்டுப்புற மாளிகைகளை  வளைத்து எடுத்துப்  படமாக்கி இருந்தார்கள்  

                                                   அதில் நடக்கும் இரவுப் பாட்டிகள், கிளிங் கிளிங் எண்டு மோதும் சம்பெயின் கிண்ணங்கள் , நளினமான இங்கில்ஷ் வால்ஸ் நடனம், மென்மையான மெழுகுவர்த்தி வெளிச்சம், உறவின் பிளிவாக மயக்கும் பின்னணி கிளாசிகல் சிம்பொனி இசை , அழகான பெண்களின் நீண்ட எல்லாத்தையும் இழுத்து மூடிய நிறைய ப்ரில் வைத்த உடை, பெண்களின் தலையில அலைய விட்டு தூக்கி நிமிர்த்தி,சரிய விட்டு நடு வகிடில் நதி பாயும் கொண்டைகள் ,முக்கியமா இலக்கணம் தவறாத விக்டோரியன் ஆங்கிலம் என்னை மிகவும் கவர்ந்த விசியம்...

                                   அந்தப்  படத்தில்  பல  இடங்களில்  திறந்த  மார்பகம்  எப்படி  இருக்கும்  என்று  பார்க்கக் கிடைத்தது. ரொமான்ஸ் கலவிக்கு  எவளவு முக்கியம்  என்று படிப்பினை கற்பித்தது . ஒரு  சீனில்  மரத்தோடு  சாத்தி  வைச்சு  அந்த    மச்சோ  ஆண்மை  குதிரைக்காரன் செந்தூரப்பூப்போல  மென்மையான   லேடி சட்டர்லியை .....................போட்டு  எடுக்க அந்த  மரம் புயலில் அகப்பட்டது  போல  முறியிற மாதிரி  உலுப்பி எடுக்கும். 

                                     செக்ஸ்  இவளவு  சுவாரசியமான  விசியம்  என்று  அந்த வயதில்  கொஞ்சம் மூளையின்   ஹிப்போதலமசில் குண்டுசியால குத்தின மாதிரி  இருக்க , எதிர்கால  வாழ்வின் சில  முக்கிய  காலகட்டம் கனவுபோல  வந்தது. இதெல்லாம்  தெரியாமால் இருப்பதே  தவறுபோல  இருந்தது.  

                                " காந்திருவம் "  என்று மருதன் இளநாகனார் என்ற புலவர் பாடிய  அகநானூறு இல் வரும்   சங்கத் தமிழ் சொல்லும்  " கருத்து ஒருமித்த இருவர் தாமே கூடி இணைவது " என்ற கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் புரியும் விசியங்கள் " யங் லேடி சடர்லி லவ்வர்ஸ் " என்ற அந்தப் படத்தில் அதிகம் கவரவில்லை!  என்  நண்பர்கள்  கதிரை நுனியில் குதிக்கால் குத்தி  நிக்கதான்  அதை  ரசித்துப் பார்த்தாங்கள்.  அதென்னவோ  உண்மைதான் 

Monday, 19 September 2016

இதுதான் அது அதுதான் இது !

அது சென்ற கிழமை
நான்கே நான்கு
சின்னஞ்சிறு வெள்ளைமுட்டைகள்
இங்கிருந்து பார்க்க
பாதுகாப்பான கூட்டுக்குள்,
தாய்ப்பறவை
அடைக்காப்பதைக் கண்டதேயில்லை,
மூன்று நாட்களின்முன்
ரெண்டுதான் தெரிந்தது,
வில்லோமரம் வேறு
இலையுதிர் சதிருக்கு
ஆவேசமாக ஆடிக்கொண்டு
ஆசுவாசமாக அவதிப்பட்டுக்கொண்டிருந்தது,
நேற்று
எட்டாவது தட்டு மொட்டைமாடிக்கு
ஏறிப்போய்ப்பார்க்க
வெறுமையான கூடு
வாக்குவாதம் நடந்தது போல
கொஞ்சம் கசங்கிஇருந்தது,
இன்று
படிஎடுத்துக் கீழிறங்கிப்போய்
மரத்தினடியை நேராகவே விசாரித்தேன்.
முட்டைகள் விழுந்துடைந்த
சாட்சி சம்பவங்கள் எதுவுமில்லை !
என்ன நடந்திருக்கும் ?
நோர்வேயில் பாம்புகள் இல்லை
மரஅணில்கள் சுத்தசைவம்
குயில் காகத்தை ஏமாற்றிய
குடும்பச்சொத்துக் குழப்பங்களும் இங்கில்லை
வேற என்னதாகத்தானிருக்கும்?
ஹ்ம்ம்
பருந்தின் விருந்து ?
அதைத்தானே நீங்கள் நினைகிறீர்கள் ?
ஹ்ம்ம்
அதைத்தான் நானும் முடிவாக்குகிறேன்.!


.......................................................................................

தனியாகவே விசாரிக்க
வரிசை தவறாத
மலைவேம்புத் தட்டு அடுக்குகளிலும்
சுவர் முழுவதிலும்
பலவர்ண முகங்களில்
நிறங்களை வேண்டிக்கொண்டு
ஒரு நூலகம் ,
மயான இரவு போலவே
அமைதி பரவிக்கொண்டிருக்கும்
புத்தகங்களின்
மிகமிக நெருக்கமான கனவு
வெளியேற வழி இல்லாத
ஒருநாள் ,
தடித்த தலைப்புகளையும்
பதிவுசெய்த பெயர்களையும்
வாசித்துக் களைத்து
மேய்ந்துவிட்டுப் போன
செழிப்பான புல்தரையில்
எதைத் தேடிப்போனேனோ
அது கிடைக்கவில்லை ,
அக்கினி மூலையில்
குளிர்தண்ணித் தாங்கி
இன்னொரு சூரியமேட்டில்
இணையத்தில் உலாவரும் கணணி
அஷ்டகோணத் திருப்பத்தில்
மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
உருக்கிவடித்த வெங்கலச்சிலை
வெளிச்ச ஜன்னல்களில்
சலிப்பைத்தந்துவிட்டு
விரைந்துகொண்டிருக்கும் மனிதர்கள்,
இந்த இயலாமையின்
அடுத்த கட்டம் துன்புறுத்தல்தான்.
இனி என்ன வாசித்து
இனி என்னவரப்போகுதென்று
சமாளிக்கிறேன் என்று
முடிவுக்கு வந்துவிடவேண்டாம்
இதுக்குள்ளே
ஒரேயொரு புத்தகம்
திடீரென்று முழித்து
என் ஏழாவது அறிவை எழுப்பிவிடும் !


.......................................................................................

எதிர் எதிரே எதிராக
மேசைக்கு கீழே குத்திக் கால்கள்
தொட்டுக்கொள்ளும் நெருக்கத்தில்
சின்னதான மேசை,
அதுக்கும் அவர்களைப்
வயதாகவும் பல வருடங்களாய் சிநேகம்,
நுரை தளும்பும்
மிக உயரமான பியர்க் குவளையின்
நுனி அகன்ற விளிம்புவரை
நொதித்துப் புளித்த
மார்க்கழி மாதத்தின்
உறைபனித்துளியின் வாசனை,
ஐந்தில் ஒரு பங்கில்
மஞ்சள் நிறத் திரவம் நிறுத்திக்கொள்ள
மிச்ச ஒரே பங்குக்கு
வெள்ளைத்தைத் தொப்பியாக
எழுந்து விசாலித்துக்கொள்கிறது
சின்னக் குமிழி வட்டங்கள்,
இளம்பெண்ணின்
இடுப்பு வளைவுகளை உவமிக்கும்
வன் கண்ணாடியில்
அந்த மதுக்கிண்ணங்களை
அந்த நால்வரும்
கிளிங் கிலிங் கிளிங் என்று
திராட்ஸைரஸ ஷாம்பெயின் கிண்ணங்கள்போல
உட்சாகமெடுத்து உரசவில்லை ,
வளமிடமாக ரெண்டுபேர்
உள்ளங்கைப் பரிவில்
கிளாஸின் நாபிக்கமலத்தை அணைத்துக்கொண்டிருக்க
மற்ற இரண்டு பேரும்
உலகளந்து ஊதிச் சுழலவிட்டுப்
புகைத்துக்கொண்டிருந்தார்கள்,
நான்கு பியர்க் கிண்ணங்களுக்கும்
அவர்கள் ஒருவரோ ஒருவரோடு
கதைக்கவேமாடார்கள் என்பது தெரியும் போல
அந்த நெருக்கடி தெரியாமல்
இந்தப் பக்க மூலையில் இருந்து
நானோ
சலனமான இரைச்சலை எதிர்பாத்து
அந்த மாலை முழுவதும்
ஏமாந்துபோனேன்.

...............................................................

நடு நேர நிசியிலா
அல்லது
விடி அதிகாலையிலா
அந்த மெட்டு நுழைந்ததென்று
சரியாகத் தெரியவில்லை,
பெருமூச்சொலிகளின்
வெப்பம் மெல்லவே உருவாகி
குளிர்ந்துபோக வழியின்றி
திசைகளைத்
திணறவைத்துச் சுழன்றடித்து,
அபஸ்சுரங்களின் மேவல்
மேகங்களற்ற
வானப்பெருவெளியை முட்டிமோதி
நிலையாமையின்
அபத்தங்களை உணர்த்தி,
பதின்வயது
முதல்க்காதலை முத்தமிட்டு
நனைந்த கூந்தல்
தீண்டிக்கொண்டிருக்கும் சுவையோடு
உள்ளிறங்கி உறவாடி,
பிரத்தியேகமான ஊடல்
வாசனைகளோடு அத்தனை அருகாமையில்
நினைவுகளில்
எங்கோ காணாமல்ப்போன
ஒரு வாக்குறுதியை மீட்டெடுத்து,
பருவகாலங்கள்
அவசரத்தில் விட்டுப்போன
அந்தரங்கத்தில் நடனமாடி
ஸ்பரிசத்தின் தொடுகைக்குள்
பரவசத்திற்குள்ளாக்கிவிட்டு
கனவு முடிவதுக்குச் சற்றுமுன்
போயேபோய்விட்டது!
இவளவுதான்
அந்த மெட்டில் நினைக்கமுடிகிறது !


.................................................................................

தொடர்மாடி
வெளிக்கதவு திறப்பதுக்கும்
வாசல்படியைக் கடப்பதுக்கும்
இடையில் எட்டி வைப்பது
எப்பவுமே
நாலு செக்கன்கள்தான்,
திட்டமிடல்கள் நெருக்கமான
சந்து ஓடை போலிருக்கும்
வெளிச்சமிதப்பு வரண்டாவில்
மொத்தக்கம்பளம்
நீட்டி விரித்திருக்கிறார்கள்,
எனக்கு முன்னே
வேகமாக வெளியே போனவளின்
துவட்டாத கூந்தலின் சம்பூ
மூக்கைச் சுரண்ட
பிரத்தியேக நாட்கள்
விட்டுச்சென்ற வாசனைகள்
படிந்திருக்கும் காற்றில்
திடுக்கிடும் கற்பனைகள்.
சடார் படார் சடாரென்று
திறந்து பறந்துகொண்டிருக்கும்
கதவண்ட்டையில் நின்று
யாருமே
திசைகள்தேடுவதைக் கண்டதில்லை,
பளிச்சென்று
வெளியே வெய்யிலா மழையாவென்று
கண்ணாடி முகத்தினுடே
காலநிலமையைப் பார்த்து
அம்புகள்போலவே பாய்வதில்
அவசரம்பற்றிய
குறுக்கீடுகள் எழுகிறதுமில்லை,
இப்படியானவொரு
ஆத்மயுத்த ஆர்ப்பரிப்பு நாள்
கதவு திறந்து மூடுவதை
சுவாரசியமாக ரசித்துக்கொண்டிருந்தேன் ,
கதவின் கைப்பிடியில்
மெல்லவே தள்ளித்திறந்த
இரக்கமுள்ளவர்களின்
உள்ளங்கை ரேகைப் பதிவுகள்,
அயோக்கியத்தனம்
இரகசிய அசைவுகளில்
ஆடி ஆடி அடங்க
என்னைக் கேள்விகளால் விலத்தி
சிலர்தான்
சந்தேகமாகப் பரபரத்தார்கள்
அல்லது
எனக்குத்தான் அப்படித் தோன்றியதா ?


.................................................................................

காற்றோடு
காதுநுனியில் சுண்டிக்
கதைத்துக்கொண்டு
சுமாரான வேகத்தில்தான்
துவிச்சுக்கொண்டிருந்தேன்
விசுக்கென்று சின்னவள்
என்னை முந்திக்கடந்தாள் ,
மூச்சு இழுத்து
விபரமாகப் பார்ப்பதுக்குள்
விசை எடுத்துப்
பின்வாங்க வைத்தாள்,
சிவப்பு விளக்கில் நின்றபோது
அவளுக்கு
முன்னுக்கு நிறுத்தினேன்,
அடுத்த நிறுத்தவிளக்கிடையில்
செடில்பிரெட் குதிரைபோல
கூந்தலைப் பறக்கவிட்டு
மீண்டும் முந்தி விட்டாள்,
நதிபோலவே
தெருவழியும் நகர்ந்துகொண்டிருக்க
நான் வளையவேண்டிய
வட்டச் சதுக்கத்தை
அவளும் வளைத்தாள்,
திரும்ப நினைத்த திருப்பத்தில்
அவளும் திரும்பினாள்,
என் நிலையறிந்து
பாதை இறக்கக்கோணத்தில்
இறங்கிக்கொண்டபோது
வென்றாகவேண்டுமென
அசுரமாக மிதிக்க நினைத்தேன்,
என்
உந்துருளி போட்டிவேண்டாமென்று
கெஞ்சியது
ஆண்மை வைராக்கியமாக அதை
அலட்சியப்படுத்திய நேரம்
பிடிக்கவேமுடியாத தூரத்தில்
ஒரு புள்ளிபோல எங்கேயோபோய்விட்டாள்
என் வயதைப் போலவே.!


.............................................................................................

திசைமாற்றங்களை
மயக்கிவிடும்
மனப்போராட்டங்கள்
நிகழ்த்தும் புறநிகழ்வுகள்
புரியமுடியாமல் சலிப்பூட்டுகிறது,
இன்னும் எத்தனை
இருட்டுத் தின்னும் இரவுகளை
தொட்டுணர்வது போலவே
அருகாமையின்றி
அகாலத்தில் கடக்கவேண்டுமோ?
இப்பவும்
கையாலாகாத அமைதிதான்
பகல்களில்
மேலும் மேலும் விசாலமடைய
வெகுதூரத்தில்
எல்லாமே நிறைந்திருப்பது போலவே
ஆசை துரத்துகிறது.
புத்திசாலித்தனங்கள்
ஜோசிக்கவிடாமல்
அதிகம் அலுப்பூட்டுகின்றன!
ஏன்
ஒரு நாள் வட்டமாக இருக்கிறது?
சதுரமாக இருந்தால்
மூலைகளிளாவது
முட்டி மோதிக்கொள்ளலாம் !
நிரந்தரம் நிறை வரம் தரும்
ஏக்கம் நிரம்பிவழியும்
கனவுப்பட்டறை
காலம் கடந்துவிட்டதால்
நிதானமாகச் செதுக்கவேண்டிய
நேரான பாதைகளைத்
தருணங்களில் தவறவிட்டு
குறுக்குவழியில்
எனக்கே எனக்காக வந்து வாய்த்திருக்கு
இந்த வாழ்க்கை.!


......................................................................................

மூச்சுக் காற்றை
ஜனிப்பில் வலுக்கட்டாயமாக
அதிகமான எதிர்பார்ப்புக்களுடன்
திணிக்கப்பட்டதுக்கு
ஆதாரங்கள் இருப்பதாக 
நினைப்பதேயில்லை

அதுவரையில்
அங்குமிங்கும் பரபரப்புடன்
அலைந்துகொண்டிருந்ததை
பிரசவவேதனையில்
பிடித்திழுத்து
அம்மா
உள்நுழைத்த விபரங்கள்
எனக்குத் தெரியாது
முதல்ச் சுவாச சத்தம்
கரடுமுரடான பாதையில்
பேரிரைச்சலுடன்
ஒலித்து
மேலும் அதிகரித்து
இடித்துப் பிளந்து
முன்னேறிய நேரம்
கையைக் காலை வேகமாக வீசி
ஈனக் குரலெடுத்து போன்ற
வர்ணனைகளும் தெரியாது
இப்போதெல்லாம்
ஆழ்ந்த அசதி உறக்கத்தில்
சிலநேரங்களில்
அது
ஒவ்வாமைகளை சுட்டிக்காட்டி
ஓய்வெடுக்கவிரும்புவதுபோலவே
பின்வாங்கும் போது
கண்கள் உணர்ந்து
திடுக்கிட்டு விழித்துவிடுகின்றன
இந்த நிமிடம்வரையிலும்
அது
என்னைவிட்டுப்போனதில்லை
அதுக்கும்எனக்குமான
உடன்படிக்கைகளும்
இன்னுமே கிழிக்கப்படவுமில்லை
அதனால்தான்
அதன் ஜீவநதிப் பெறுமதி
தெரியாமலிருக்கிறேன் போலிருக்கு.!

...........................................................................................

மரஅணில்கள்
நாலுதான் எனக்குத்தெரிந்தது
வேறுசிலவும்
அடிமரத்தின் பிடியில்
மறைந்துகொண்டிருக்கலாம்
அதுபற்றிய ஆராய்ச்சி
அக்கணம் முக்கியமில்லாமலிருந்தது
மற்ற மூன்றும்
இலை வளைந்த கிளையில்
பாரம் ஏற்றிவைத்து
ஊஞ்சல்க் காற்றிலாட
நாலில் ஒன்றுதான்
அதிகம் நெருங்கிவந்து
என்மூச்சு வாசத்தை
தற்காப்பாகவே தள்ளிநின்று
விசாரித்துவிட்டு
சடாரெண்டு பின்வாங்கிவிட்டது
பட்டைமர நிறத்துக்க்குள்
உருமறைத்துக்கொண்டிருந்த
நோர்வே அணில்களின்
வளைகோணிய முதுக்கில்
அயோத்தி ராமனின் நேசம்மிகு
காலம் போட்ட பாலத்தின்
மூன்றுகோடுகள் இருக்காவென்று
விலத்திவிலத்திப் பார்த்தேன்
அடப்போங்கப்பா
ஒரு மண்ணுமில்லை
அடர்த்தியான அதன் வாலில்தான்
மிதிலைமன்னன் மகளின்
விரிசடைக் கூந்தல் இருந்தது!

......................................................................................

மிகப்பெரிய கவலை
பொறுமை இல்லை என்பது
தேவைக்கதிகமான
நல்லவொரு பிம்பத்தை
சுமந்து கஷ்டபட்டு கொண்டே
ஒரு சீரழிந்த
அவசர வார்த்தையோடு
நிமிர்ந்து நிற்கவேமுடியாத
எல்லா புரிந்துணர்வும்
மெல்ல வெளியேறிவிடுகிறது

நாட்டாண்மை
தன்னால் வந்து விட.
எதை எழுத வேண்டும்,
எப்போது முடிக்க வேண்டும்
எது அவமானம்,
எது அகங்காரம் என்று
தீர்ப்பு நெருங்கிவருவதும்
நல்லாவே தெரிகிறது
சமயம் பார்த்து
அனுஸ்டானங்களையும்
முகஸ்துதிகளையும்
முட்டிபோட்டு ஆதரிப்பதில்லை
அதனால்தானோ என்னவோ
அதன் ஆதியந்த
எல்லைகளளும் தெரியாமலேயிருகிறது
விட்டறுப்புகளில் இருந்து
வெளியேறாமுடியாத
காழ்ப்புணர்ச்சிக்கு
என் நல்ல பக்கம்
பொறுப்பில்லையென்று அன்பின்
மொழியில் சொல்கிறேன்
அவலமான காலமே
என்னை அமைதியாக இருக்கவிடு
தோல்வி அடைந்ததை
கொள்கைரீதியாக ஏற்றுக்கொள்
கருணை இல்லாதா கதை
இப்படிதான் முடியவேன்றுமென்றால்
எவளவு தேவையோ அவளவு
மன்னிப்புக்கேட்கிறேன் !

........................................................................

படுக்கையறையில்
நடனமாடும் குழல்விளக்குக்கு
எவளவு திமிர் என்று
உங்களுக்குத் தெரியவாய்ப்பேயில்லை,
பின்னிரவில் 
ஒரு புத்தகமதன் வெளிச்சவிலாசத்தில்
வாசித்ததேயில்லையென்று
அதுக்குஅடங்காத கோபம்
நான்
என்னதான் செய்யமுடியும்
பெருவிரல்களில் எச்சில் ஒற்றி
தாள்களை நுனியில் விழித்து
பக்கங்களை விரித்துகொண்டே
கனவோடு நேரிடையாக நெறிபோடும்
பழக்கத்தைவிட்டு வெளியேறி
முப்பது சொச்சம்வருடங்கள்,
ஆனாலும்
இப்பவும் அலாரமடிக்கும் மணி
அதன்கீழேதான் இருக்கிறது
அது இன்னும்
மண்டியிடவைக்கும் அவமதிப்பாம்,
உள்ளாடைபோலவே
குஞ்சரங்கள் தொங்குமதன்
நினைவு ஓரங்களை
என் வசதிக்கு என்றுமே
வாவென்று வலித்ததில்லை,
முடிந்த நாட்களில்
தடவித்தடவி
பக்கச்சார்பற்றுத் துடைத்தும் விடுகிறேன்.
இருக்கும் இடத்தில
இரவெல்லாம் இயல்பாவேயிரு
என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
அது திமிறிக்கொண்டிருக்கு.
என் பொறுமைமீறும்
ஒருநாளோடு அது இனி இருக்கப்போவதில்லை
அதன்பின்
மெழுகுதிரிகளை ஏற்றிவிட்டு
வாசமோடு பார்த்திருப்பேன்
வீடே எரிந்தாலும் பரவாயில்லை!


...........................................................................

கோடைமுழுவதும்
ஏரிக்கரை வழித்தடங்களில்
கூடவேவந்த
மென்தோல் சப்பாத்து
நேற்றுமாலை
குறுனிக்கற்கள்
உருண்டு உரசும் பாதையில்
அதன் கடைசிப்பிடிப்பையும்
கால்தவறிய கணத்தில்
நிலைதடுமாறிய நொடியில்
கைவிட்டது,
என் நடைப்பயணங்களில்
என்னைவிட அதுவே
மூச்செடுத்து
நடந்து கடந்திருக்காலம்,
பொதுஇடத்தில் கழட்டிவிட்டால்
களவுபோவதில்லை என்பதில்
என்னைவிட யாக்கிரதையாகவிருக்கும்,
அதுக்கு
ஓய்வுகொடுக்காமல்
ஓடிக்களைத்த தூரங்கள்
அதன் எதிர்கால
ஒத்திகைகள்போன்றிருக்கலாம்,
வெய்யிலோடு
அலைந்த நாட்களில்
அதுக்கும் வியர்த்துவிடும்,
சதுப்புநிலத் தப்புத்தண்ணி
சேறள்ளிப் பூசினாலும்
சகிப்புதண்மையோடிருக்கும்,
அடுக்கிவைக்கும் தட்டில்
அருகிருக்கும்
அழகானஉறைபனிக்கால
வன்தோல்ச் சப்பாத்தின்
குளிர்தாங்குதிறனை
அது கண்டுகொள்வதில்லை
என்
காலுக்குள் மிதிபட்டத்தைதவிர
பெரிதாகவேறெந்த
கவுரவக்குறைச்சலையுமது
சந்திக்கவில்லை என்பதையும்
ஒத்துக்கொள்கிறேன்!


......................................................................................

தீராதபரவசங்கள்
ஒரு
ஜன்னல் திரைச்சீலை இழுப்பில்
விரிந்துவிடுமென்றால்
நம்பக்கடினமாக இருக்கிறதா?
அப்படித்தான்
மேருமலைத்தொடர்ச்சி
மேற்க்குப்பக்கமாக
நிறைமாதக்கற்பிணி போலப்
ஒருக்கழித்து சரிந்திருக்கு,
கிழக்கில் விரிந்து
ஒப்பீடுகளில் ஆர்வமில்லாத
பள்ளத்தாக்கு
பாய்விரித்துப் படுத்திருக்கு,
பகல் முழுமைக்கும்
பச்சையாகவே இருக்கும் மலை
இரகசிய இரவுகளில்
இன்னுமொரு மோகவடிவத்திலிருக்கலாம்
அதன்உயரங்களை அளக்க
நடந்தே போனால்
மலை காணாமல்போய்விடும்
வேறுபல மலைகள் சட்டென்று
சுற்றிவர எழும்பிவிடும்,
சாமத்தில்
ஒருசிவப்பு விளக்கு அதன்
தலையைக் கைப்பற்றிக்கொண்டிருக்க
உறைபனிக்காலமெல்லாம்
வெள்ளையாகி
விதவையாகிவிடும்,
விபரிப்புக்களில் அதிகம் கற்பனைகளை
எடுதுக்கொடுக்காத
பள்ளத்தாக்கின் கதை
கவர்ச்சிகரமான வரிகளில் இல்லை
என் விருப்பங்களெல்லாம்
பள்ளத்திலும்
என் தோல்விகள் ஒண்றாகி
உயரத்திலும்
எதிரெதிர் துருவங்களாக மாற
இரண்டையும் பார்க்கும்போதுதான்
எப்படியோ
கொஞ்சமாவது பின்வாங்கிவிடுகிறது
தனித்த மனச்சுமைகள்!


........................................................................

எப்போவாவது
ஒரு அவதியற்ற நாளில்
ஒரு அலாதியான பொழுதில்
பல்கனியில்
பூமிப்பந்தெங்கும் ஒரு பங்குகேட்டு
மூச்சுமுட்டிக் காற்று வேண்டுவது,
முன்னுக்குப் பின்னாக
முரண்பட்டுக்கொண்டு
தேவையான அளவில்
படம் போல வெளித்தோற்றம் காட்டும் ,
தற்பெருமைக்களைத்
திறந்தே வைத்திருக்கும்
அதிகப்பிரசங்கித் தருணங்களிலும்
உப்பரிகை
ஓவியம் வரைந்து வைத்திருக்கும்
பருவச் சமநிலைகள்
என்றுமே விலாசம் தவறியதில்லை,
தளிர் உயிர்ப்புக் காலத்தில்
கோடை வெய்யில் வெறுப்பேற்றும் போது
மஞ்சள் இலையிறப்பு மாதங்களில்
உறைபனி வெருட்டும் இருட்டிலும்
பூசி மெழுகி ஒப்பேற்றிவிட
அதனிடம்
இரகசிய நிறங்கள் இருக்கு,
அடிக்கடி
கருக்கொண்டு கருக்கலையும் மேகம்,
நெடுந்துயர் நீண்டு படிந்த
தாரமிழந்த பள்ளத்தாக்கு,
துங்காமணிவிளக்குகளில்
நடனமாடும் நகரம்,
நீலக் கடலில்
மாங்கல்ய அம்மன் பொட்டுபோல
ஒஸ்லோ துறைமுகக்கழிமுகம்,
பால்கொடுக்கும் மார்பகம்போல
பெருத்துப்போன மலைகள்,
மழையை மறக்காத
பூங்காவன மரங்கள்,
ஹ்ம்ம்
ஒரு சிகரெட்
ரசித்து ஊதிமுடிப்பதுக்குள்
இவளவும் இயல்பாகக்
கவனிக்கமுடியுமென்றால்
மிச்சத்தை நீங்களே ஊகியுங்கள்!


......................................................................................

நள்ளிரவு முழுவதும்
நிமிரமுடியாத

நாரியைப் பிராண்டும் உளைவு
உடல்ச் சூடு கூடியது
கண்விழித்த போது எரிச்சலாகியது.
ஊரைக் கூட்டிக்கொண்டுவந்து
ஒப்பாரி வைத்தபடி
வெளியே மழை,
மலைப்பாம்புபோல
தினவெடுத்த தோள்கள்
களைத்துப்போய்விட்டது,
காற்றின் வெறுமையில்
உரத்துக் கதைத்தபடி
நேரங்கெட்ட நேரத்தில் கேடுகெட்ட குடிகாரர்,
ஜன்னல்களை அடித்துச்சாத்தியும்
குங்குலிய வாசனை போலவே
பொட்டுப்போட்டு உள்நுழைந்து
சுற்றிக் கொண்டது குளிர் .
கட்டுப்பாடு இழந்துபோக
நடுங்க ஆரம்பித்தது தனிமை,
ஒன்றும் செய்யமுடியாமல்
தூக்கமில்லாத தூரத்து விளக்குகளைப்
பார்த்துக்கொண்டிருந்தேன்,
எப்போதும்
அற்பமான கேள்விகளை
வைப்பாட்டிபோல அருகில்
உறங்கவிடாமல் வைத்திருக்கிறது
விடியாத இரவு .
அதன்
விசாரணையில் சிக்குண்டு
சூனியத்தில் விழுந்துகொண்டிருக்க
வடக்குவான வெளிச்சம்
ஒருகணம் துலக்குவது போலிருக்கக்
கவிதை எழுத நினைத்தேன்,
மறுபடியும்
அசதியாக்கிய நித்திரை
அதைப் பறித்துக்கொண்டுபோய்விட்டது!


..........................................................................................

என்
சுயசரிதையில்
நானாவது உண்மையாக இருப்பேனா
என்பது
நிகழ்வுகளின் நம்பகத்தன்மையில் 
மிகைப்படுத்தப்படாத
ஒரு மொழியில் ஜோசிக்கிறேன்.
புனைவுகலோடே
பின்னிக்கொண்டிருப்பதால்
கற்பனைகளைக்
நிராகரித்துக்கொண்டு
எப்படிக் கடப்பதென்று தெரியவில்லை,
முக்கியத்துவமற்ற
காதலித்துப் பேதலித்த
சம்பவங்கள் தொடங்கும் போதே
தோல்வியுற்ற போதும்
மறைத்து எழுதினால்
குற்றவுணர்வு
மிகவும் நெருங்கிவிட வாய்ப்புள்ளது.
வசீகரமான புன்னகை
மிகஅழகான பொய்கள்
நம்பிக்கைத்துரோகம்
உருமறைப்பில் சுயநலம்
தேவையற்ற பொறாமை
இவைகள் அதிகமதிகம்
விரிந்து வியாபிப்பதை
முடிந்தவரையில் தவிர்க்கவேமுடியாது,
தவறியும்
ஆளுமையான தனித்தன்மைகள்
இருக்கவாய்ப்பேயில்லை,
சமாளித்துப் பின்வாங்கிய
சந்தர்பவாதங்கள்
சபையேறி சாட்சிகொடுக்கலாம்,
பிடிவாதத்தன்னுணர்வு
இறந்துகொண்டிருப்பதால்
போகிறபோக்கில்
சில விசியங்களை ஒத்துகொள்வேன்,
வெட்கத்துக்கு
வயதாகிவிட்டதால்
ஏமாற்றிய சந்தர்பங்களை
வாய்விட்டு ஒப்புக்கொடுப்பேன்
தந்திரமாக
ஒளித்து வைக்கப்படும்
உண்மைகளுக்கு நடுவில்
வாசித்துமுடிக்கும்போது
சத்தியமான சோதனையில்
ஒரு இடத்திலாவது
நான் நானாகவேயிருப்பேன்
அது போதும் !


...................................................................

எல்லாவற்றையும்
விசாரணைக்கு உட்படுத்தும்
பிரபலமில்லாத
பிரெஞ்ச் நாவலொன்றின்
தழுவல் போலவேயிருந்தது
அந்தத் திரைப்படம்,
எதற்காக நேரமொதுக்கி
அயர்ந்து சொருகும் இமைகளைக்
கசக்கிக்கொண்டு
பார்த்து முடித்தேனோ
அதன் உத்தரவாதம்
காட்சிக்குக் காட்சியாகி விரிந்த
தடுமாற்றங்களில்
என்னையும் விழுந்துவிட வைத்தது,
இலட்சியமான
மூலத்திரைக்கதையில்
மோசமான குரலில்
சுமாரான தோற்றமுடைய
தனியொருத்தி
மேடை ஏறிப் பாடகியாகிறாள்
அதுவும் முடிவில்தான்,
அந்தரங்கமான
ஓரினச்சேர்க்கையில்
அதுவரைக்கும்
மனதின் போர்வைக்குள்ளிருந்த
இன்னொருத்தி
அவளை விழுத்தினாளென்பது
உபகதையில் கவனம் பெற்றுவிட்டது,
உரையாடல்கள்
எதிர் பாலினங்களின்
அர்த்தமிழக்கும் தருணங்களிலும்
முகபாவனைகள்
அசையவிடாமல் கட்டிப்போட்டது,
பொறாமையிலும்
காதலைப் பாடலோடு மோதவிடும்
ஒரு காட்சியில்
மொழிபுரியாத பார்வையாளனுக்கும்
உலக எல்லைகள்
அந்தரத்தில் விரிந்துகொள்ள
காதலியும் காதலியும்
மறுதலிப்புக்களற்ற
முத்தங்களை
ஸ்பரிசிக்கத் தொடங்கும்போது
படம் முடிந்துவிட்டது.!



Friday, 16 September 2016

நல்லூரான் நினைவுகள்

இந்த  உலகத்தில்  எல்லாருமே ஒரு  ஊரில் பிறந்து வளர்ந்திருப்போம்.  அந்த  ஊர்  பலகாரணங்கள்  எழுப்பிக்  கலைத்து அடிச்சு விரட்டியதால் வேற  எந்த ஊருக்குப் போய் வசித்தாலும் சொந்த  ஊர்  சின்னவயசில் பதிந்து சென்றவை ஏராளம்.


                                                        எவ்ளவோ விசியங்கள் கவனிப்பில் இருந்தாலும்  இன்றைக்கு  உள்ளது  போல அன்றைக்கு பிற்காலத்தில் ஒரு எழுத்தாளனாக  தற்செயலாகவும்  நான்  வரமாட்டேன்  என்றுதான்  நினைத்தது.  அதனால  பல  அருமையான, பெருமையான சம்பவங்கள், நிகழ்வுகளை  அப்போதெல்லாம் ஆர்வமாகக்  கவனிக்கவில்லை.


                                                   செய்தது  எல்லாமே விடுப்புப் பார்க்கிறது  என்ற சொற்பிரயோகம்  சம்பந்தமானது. என்றாலும் முடிந்தவரை நினைவின் வழித்தடத்தை இன்னொருமுறை துடைத்துத் தூசி தட்டிப்  பார்க்கிறேன்.

                                               

சின்னவயசில்  நல்லூர் கந்தசுவாமி  கோவில் எனக்கு  நினைவில்  உள்ளபடி பலவிதங்களில் வேறுபட்டு இருந்தது. இண்டைக்கு இரண்டு வானளாவிய  கோபுரங்கள்  தெற்கு வீதியிலும் ,வடக்கு  வீதியிலும்  ராஜகோபுரங்களாக  எக்ஸ்ராவாக எழும்பி கோவிலின் உட்பிரகாரமே  சரஸ்வதிமகால் போல வடிவமைக்கப்பட்டு , கோவில் நடைமுறைகளில்  பல புதிய விடயங்கள் சேர்ந்துள்ளன. முக்கியமாக அதன்  உள்வீதிகளில்  உள்ள பிரமாண்டம் பிரமிக்கதான் வைக்கிறது.

                                              யாழ்பாணத்தை ஆண்ட கடைசி ஆரியச்சக்கரவர்த்தி சங்கிலி மன்னனின் தலைநகராகிய  சிங்கை நகரில், புவனேகபாகு மன்னன்  கட்டி , சப்புமல்குமாரைய என்ற செம்பகப்பெருமாள் வழிபட்ட நல்லூரில் நல்லைக் கந்தன் திருவிழா  ஆரவார  இயல்பாகி  ஒரு  காலத்தில்  அந்தக்  கோவிலுக்கு  அருகில் பிறந்து வளர்ந்த நினைவுகளோடு வந்து  முட்டி மோதி முத்தமிடுகின்றன. 

                                                            
 ஒரு காலத்தில் யாழ் குடா நாட்டை தெருவெங்கும் விழாவாக்கி , வீடெல்லாம் அன்னதான விருந்து வைத்து ,ஊரெல்லாம் பக்தி நிரம்பி வழிய , நல்லூர் என்ற இடத்தை நாலு பக்கமும் அதிர வைத்த அந்த திருவிழா ஒரு கிராமக்கோவில் போல இந்தமுறை  பக்த கோடிகள் அலை மோத  , அப்படி போயுள்ள பக்த கோடிகள் கையில " கமரா மொபைல் போனில " உலக அளவில் பிசியா இருக்க, அதிகம் ஆடம்பர உற்சாகம் இல்லாமல் பக்தி மயமாக   நடந்துகொண்டிருப்பது   இன்டர்நெட் புண்ணியத்தில் வலை தளங்களின் வலை வீச்சில் பார்க்க ஒரு ஆச்சரியமா இருக்கு.



                               
ஆடம்பரக் கந்தனின் இந்த முறை  தேர் திருவிழாவுக்கு முன்னர் நடந்த வழமையான திருவிழாவில்,பல முக்கிய சம்பவங்கள் மிஸ்ஸிங். ஆறுமுக நாவலர் மணி மண்டபத்தில்   இருந்து இருவத்தி ஐந்து நாளும் "நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகும் தஞ்சத் தருள் சண்முகனின்  " கந்தரநுபூதி பாடும் இளம் பிள்ளைகளின் பயனை கோஸ்டி, திருத்தொண்டர் சபையின் பயனை கோஸ்டி  இல்லை, 


                                                      நான் பலவருடம் நாவலர் மண்டபத்தில் இருந்து வெளிக்கிட்டு கோவிலை திருவிழா இருவத்தைந்து நாளும் கந்தர் அனுபூதி பாடும் பயனையில்  பாடகரா இருந்து இருக்றேன்..

                                     
                                               வேறு பல பயனைக் கோஷ்டிகள் பாடும் பாடல்களில் பண் அதிகம் இல்லை, ஆனால் பக்தி நிறைய இருக்கு," மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப் பெண்ணினுள் கற்புடைய " தாவணி போட்ட நல்லூர் பெற்றெடுத்த இளம் வள்ளி தெய்வயானைப் பெண்கள் அதிகம் இல்லை,


                                          " ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,செந்நெல் அமலை வெண்மை வெள் இழுத்த " நெஞ்சை நிமிர்த்தும் எங்கள் ஊர்க் காளைகளும் அதிகம் இல்லை,

                             


முக்கியமா  முருக்கப் பெருமான் வெளி வீதி உலா வரும்போது கிராமக் கோவில்கள் போல ஒரு மணியை இழுத்துக்கொண்டு அதை அடித்துக்கொண்டு வருகிறார்கள். அந்த மணி முதிரைச்சந்தையில் இருந்த ஆதியான நால்லூர் கோவிலைப்  போத்துக்கிசர் உடைத்து அந்தக் கற்களை கொண்டு கட்டிய யாழ் டச்சுக்கோட்டை கட்டும் போது கொண்டு போன  நல்லூர்க்  கோவில் மணி எண்டு சொல்லுறார்கள்.


                                           பெரிய ஒரு கற்பூர சட்டியும்,டமாரமும்  ஒரு சின்ன வண்டிலில் வைத்து இழுத்து கொண்டு வருவதைப் பார்க்க கிராமக் கோவில்கள் போலத்  தான் இருக்கு...

                               
இலங்கைத்தீவின் எல்லா நகரங்களில் இருந்தும் விரதம் இருந்து பக்தர்கள் வரும், நல்லூர் தேர்த் திருவிழாவில் பல வருடங்களின் முன் எப்பவுமே கடல் போல அலை அடிக்கும் முருக்க பக்தர்கள் எல்லாரும் எங்கே போனார்கள் என்று ஜோசித்துப் பார்த்தால், அதிகம் பேர் புலம்பெயர்ந்து போய் ஐரோப்பா,கனடாவில் அடைக்கலம் பெற்று வாழும் அவலத்தில் , ஒரு தலைமுறையே விடுதலைக்கு முகவரி எழுதப் போய்த் தொலைந்து போன நிலையில்..

                                 
முருக்க பெருமானின் முக்கியமான இன்றைய திருவிழாவில்  நெருக்கி அடிச்சு இழுபட்டு தேர் இழுக்க, அடிபட்டு முட்டி மோதித் தேங்காய் உடைக்க , உருண்டு பிரண்டு பிரதட்டை செய்ய, " அரோகரா அரோகரா ..கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் " எண்டு பக்தி முழங்க  அதிகம் பேர் இல்லாத நிலையில் இடைவெளிகள் அதிகமா இருக்கு.,

                                                 
ஆனாலும் தெருவெல்லாம் அசைந்தாடும் தேர் அழகா இருக்க அதன் தொங்கு மணிகளின் சத்தம்,ஜாளிகளின் வாளிப்பு, கலசங்களில்  பொன் நிறம், மறுபடியும் உச்சக் கட்டமாக திருவிழாவின் சந்தோசத்துக்கு உயிர் கொடுக்குது.  நல்லூர் தேர் மீடியம் சைஸ் தேர். அந்த தேரின் அளவுப்பிரமானம் ஒன்றும் அமர்க்களம் இல்லைதான். ஆனால் தேர் திருவிழா இலங்கை வானொலியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யும் அளவுக்கு இலங்கை அளவில் பிரபலம்.

                                           
                                          அந்த இலங்கை வானொலி நேரடி அறிப்பாளர்கள்  திருப்புகள், கந்த புராணம்,,திருமுருகாற்றுப்படை போன்ற பக்தி இலக்கிய  மேற்கோள்கள்  எடுத்துக்  கலந்துவிட்டு  வேர்ல்ட்கப்  புட்போல்  பைனல் மச்  போல உணர்வுடன்  உள்ளொளி தேடி  வர்ணனை செய்வார்கள். ஆனால் அந்த ஒலிபரப்புக்கு டெக்னிசியன்  ஆக  சிங்கள ஆட்கள் வந்திருப்பார்கள். யுத்தம் தொடங்கி தொண்டையை இறுக்கிப்பிடித்த வருடங்களில் அந்த ஒலிபரப்பு நடக்கவேயில்லை. 

                               


சப்பரத் திருவிழா அன்று தான்  எங்கள் வீடில் ஒரு காலத்தில் நிறைய சித்தப்பு,பெரியப்பு,அத்தை , மாமி உறவினர் வெளி ஊர்களில் இருந்து வந்து இரவு முழுவதும்  கச்சான் கோது வீடு முழுவதும் பறக்க கலியான வீடு போல கலகலப்பா இருக்கும்.  அத்தை,  மாமியின் அம்சமான பெண் பிள்ளைகளும் வந்து இரவு முழுவதும் வீட்டுக் ஹோல் முழுவதும் வெள்ளி எறிஞ்ச மாதிரி சிரித்து சிரித்து கதைச்சுக்கொண்டு இருப்பார்கள் .


                             எப்பவும் இருட்டா இருக்கும் எங்க வீடே பவுர்ணமி போல வெளிச்சமா இருக்கும் . 

                               
முக்கியமா அவர்கள் தங்குவது காலையில் வசந்தமண்டபப் பூசை முன்னுக்கு நின்று பார்க்க. அதிகாலையே எழும்பிக் குளிச்சிட்டு தலை கூடக் காயவைக்காமல் ஓடுவார்கள், கொஞ்சம் இளமையான ஆண்கள் காலையில் பிரதட்டை அடிக்க எழும்பி ஓடுவார்கள். அவர்கள் தான் பின்னர்,வீதி முழுவதும் உருண்டு மணல் ஒட்டிய வேட்டியுடன் , தேரும் இழுத்து, தேங்காய் அடிக்கும் போது வரும் இளநியைத் தலை முழுவதும் ஊற்றிக்கொண்டு வருவார்கள்,

                                     
                                       அப்படி பக்தி நிரம்பி வழியும் அவர்களைப் பார்க்க ஒரு வித " மச்சோ ஹன்ட்சம் " ஆண்கள் போல பார்க்கும்  பெண்களுக்கு இருப்பார்கள் . அந்த தோற்றதால்  வேற சில விசயங்களும் தொடரலாம். காலையில்  ஓடியவர்கள் மாலையில் பச்சை சாத்தி சாமி தேரில் இருந்து இறங்கும் திருவிழாவுக்கும் பதறியடிச்சு ஓடுவார்கள்,முக்கியமா பெண்கள் பச்சை சேலை கட்டிக்கொண்டு போவார்கள்... 

                               


கோவிலுக்குப் போகும் எல்லாப் பாதைகளிலும் இருக்கும் தண்ணீர் பந்தலில்க் காலையிலேயே " முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கு " எண்டு சீர்காழி கோவிந்தராசன் வெள்ளியாகி விளாசும் பாடல்  " லவுட் ஸ்பிகர் " தொடங்க ,பகல் முழுவது  தாகசாந்தி எண்டு பந்தலில் மோர்த் தண்ணி,சக்கரைத் தண்ணி,றோசாப்புக் கலரில்  சர்பத் , கலர் கலரா குளிர பாணம் என்று குடுப்பார்கள் .


                                                                   அதை வேண்டிக் குடிச்சுப்போட்டு மண்டையப் பிளக்கும் வெயிலில் இருந்து தப்ப பல அடியார்கள்,தண்ணீர்ப் பந்தல் மணலில்  டி எம் சவுந்தரராஜன் வெங்கலத்தில் பாடும்  " நம்புங்கள் முருகன் நல்லவன், தன்னை நாடி வரும் அடியார்க்கு  என்றும் நல்லவன் ..." என்ற உத்தரவாதத்துடன் ஆற அமர இருபார்கள்,






கோயில் முன் வீதியில் செட்டி தெருவில் ஒரு வீட்டில் அன்னதானம் கொடுப்பார்கள், கோவில்தேர் முட்டிக்கு எதிரே இருந்த அறுபத்துமூன்று நாயன்மார் மடத்திலயும்  கொடுப்பார்கள். கோவிலின் ஆறு காலப் பூசை மணிகளும் தெளிவாகக் கேட்டும் அருகில் இருந்த எங்கள் வீட்டிலும் சமையல் அமளிதுமளியா எல்லா உறவினரும் சேர்ந்து சமைப்பார்கள்.

                         


தேர்த் திருவிழாவிற்கு ,தீர்தத் திருவிழா போல அதிகம் காவடிகள் வருவதில்லை. வாற காவடிகள் பின்வீதியில் மங்கையக்கரசி இல் வந்து இறங்கும். சிலது வடக்கு வீதியில் மனோன்மணி அம்மன் கோவிலில் வந்து இறங்கும். அதிகம் தோள்க் காவடிகள் என்ற தோளில் வைத்து ஆடும் காவடிகள் ,முதுகில செதில் குத்தி,வாயைக் கிழிக்கிற மாதிரி  வேல் குத்தி. தார் ரோட்டில கொதிக்கிற வெய்யிலில் வெறும் காலுடன் ஆடிக்கொண்டு அந்தக் காவடிகள் நல்லுரை விட்டு வெளியே உள்ள சின்ன சின்ன இடங்களில் இருந்து நடையா நடந்து  ஆடிக்கொண்டு வருவார்கள்.

                             
                                          பால்க் காவடி எண்டு சின்னக் குடத்தில பால் நிரப்பி அதைக் காவடியுடன் சேர்த்துக் கட்டி பால் தெறித்து தெறித்து சிதற ஆடிக்கொண்டு வருவார்கள். கொஞ்சம் திரில் ஆக " என்னப்பனே கந்தப்பனே பன்னிருகை வேலவனே  " என்று பெங்களூர் ரமணியம்மாவோடு முதுகில கொழுக்கி போட்டு தொங்க விட்டு பறவைக் காவடியும்,  " வேலவா வடி வேலவா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா " எண்டு துலாவில தொங்கிக்கொண்டு, துலா முறிஞ்சு விழுகிற மாதிரி அதை ஒருவர் ஏறி நிண்டு அமத்தி அமத்தி ஆட்ட  தூக்குக் காவடியும் நீண்ட தூரம் இருந்து வரும்.

                             


ஆன்மிகம் அதிகமாகி  கோவில் நாலு வீதியிலும் எவளவு சனம் இடிபடுவார்களோ அதே அளவு, சுவாரசியக்  கொண்டாட்டம் சந்தோசமாகும் இடங்கள் கோவிலின் சுற்றுப்புற பாதை முழுவதும் ஆகா ஓகோ எண்டு நடக்கும்.,

                                 
                                                    நிலகடலை கும்பியாகக் குவித்து வைத்த கடலைக் கடைகள் , சுடச்சுட சோழன் பொரியும் கச்சான் கடைகள், வளையல்கள் மின்ன மின்னி அழைக்கும்  காப்புக்கடை, குழந்தைப் பிள்ளைகளுக்கு ஆசை காட்டி பெற்றவர்களின் காசைக் காலியாக்கும் விளையாட்டு சாமான் கடைகள் , சீனி வழியும் மஸ்கட் சுவிட் கடைகள், பள பளக்கும் எவசில்வர் பாத்திரக் கடைகள்.


                                                   " ஓடியா ஓடியா மலிவு மலிவு " என்று கத்தும் சில்லறை வீட்டுப் பாவனைப் பொருள்கள் விற்பவர்கள் சத்தம், பலூன் விற்பவனின் பரிதாபக் கெஞ்சல், வழி முழுவதும் பிச்சைக் காரர்களின் " ஐயா தர்மம் செய்யுங்க சாமி... " திண்டாட்டம்கள் , லைட் சுற்றி சுற்றி ஓடும் விளம்பரங்களின் கீழே  சனம் நிரம்பி வழியும்  ஐஸ்கிரீம் கடைகள் , அதை விக்கும் ஐஸ் கிரீம் வானில இருந்து வரும் காதைக் கிழிக்கும் ஜெனரேடர் சத்தம். 

                               


குண்றத்திலே  குமரனுக்குக் கொண்டாட்டம் போலவே இதுகளுக்கு நடுவில்  ரகசியக் காதலர்களின் ரகசிய சிக்னல்கள், கிடைத்த சின்ன இடைவெளியில் சொல்லும் அன்பான வார்த்தைப் பரிமாற்றம், அரோகரா போட்டுக் கொண்டு  கும்பலில் கோவிந்தாவாக முதல் முதல் முழுவதும் முகம் பார்க்க கிடைத்த சந்தர்ப்பம்,  வழம்  மாறி வீதி  வலம் வந்து தேடும் கண் பார்வைகள்,

                                   
                                                       கலியாணக் கனவுகளின் ரகசிய அர்ச்சனைகள்,  கோபுர வாசலில் விட்டுசென்ற சின்னச் சிரிப்பு, அடியளிக்கும் போதும் அன்பான வேண்டுதல்கள், சென்ற திருவிழாவில் சந்தித்து இந்த திருவிழாவில் பிரிந்து போன ஒரு காதலின் கண்ணீர்த் துளி,  காத்திருந்து காத்திருந்து காற்றோடு போன பெருமுச்சு , சிலருக்கு மட்டும் இதயம் எங்கும் உதயமாகும் ஒரு உயிரில் கலந்த உறவு.....  

                     
                                                        உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும் போல  சின்ன வயதில்  கோவிலின் திருவிழா ஒரு  கலியான வீடு.   டோல்கி டப்பா டுல்கி போல வாழ்க்கை தந்த பாடங்கள், எப்படியோ  இதுகள் எல்லாம் நல்லூரான் திருவடியில் அதிகம் கவனிக்கப்படாமலேயே  போகலாம்.....

                    
                                       
நல்லூர்க் கோவிலின் வடக்கு வீதியில் கட்டியுள்ள ராஜ கோபுரப் படம்  அதை இருபது வருடங்களின் பின் என்னோட கொம்புயிடர் திரையில் பார்த்து அதிசயித்தேன். நான் பிறந்த ஊரில உள்ள அந்த அலங்காரக் கந்தன் கோவில் எல்லாக் கோவில்களையும் விட அதிக வருமானம் உள்ள, ஆடம்பரக் கந்தன், கந்தசாமி என்ற பெயரில அருள் கொடுத்துக் கொண்டு இருக்கும , அந்த கோவிலின் சின்ன வயது நினைவுகள் எப்பவுமே ஒரு புத்தகம் போல பிரட்ட பிரட்ட ஒற்றைகள் வருவது போல எப்பவுமே முடிவில்லாமல் வரும்.

                                              
                                        அந்தக் கோவிலின் ஆறுகாலப் பூசை மணியும ,  ஒரு மாத திருவிழா, அல்லோலோல கல்லோல ஐஸ்பழ வான்களின் ஜெனேறேடர் அலறல் ஓசைகளும் , சுற்றி இருந்த தண்ணிப் பந்தல்களின் லவுட் ஸ்பிகர்  காதைக் கிழிக்கும் சத்தம்கள் தெளிவாகக் கேட்கும் மிக அருகில் உள்ள இடத்தில தான் நான் அவதரித்தேன். அந்தக் கோவிலின் ஒவ்வொரு சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவதித்து வளர்ந்தேன்.

                                         
அந்தக் கோவில் எவளவு ஜனரஞ்சகப் பிரசித்தமோ அந்தளவு அதன் வரலாற்றுக் குழப்பங்கள், அந்தக் கோவிலில் நடக்கும் விசியங்கள் அதிகம் பலருக்கு தெரியாது, நல்லூர் கோவில் அருகில் நாவலர் மணிமண்டபம் அமைத்து, அதில ஆறுமுக நாவலர் சிலை பல வருடம் இருந்து, அதுக்கு முன்னாள் கோவில் திருவிழா இருவத்தைந்து நாளும் என்னோட அப்பாவின் கட்டளைப்படி, கந்தர் அணுபூதி படிக்கும் பயனைக்கு சின்ன வயசில நாவலர் போலவே நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராட்சை மாலை போட்டு , கேவலாமாய்ப் போய் என்னோட பயனை பாடிய பெண்களை பார்த்து நெகிழ்ந்த் உருகும் அனுபூதி பெற்று இருக்கிறேன்,

                                                       

நல்லூர் கோவில் ஆகம விதிப்படி கருங்கல்லில் மூலஸ்தானம் கட்டப்படவில்லை எண்டு ஆறுமுக நாவலர் சொல்லி இருகிறார், அந்தக் கோவத்திலையும், அவரின் வெண்கல சிலையைப் பலர் தொட்டுக் கும்புடுவதாலும் கோவில் நிர்வாகம் கொழும்பில் இருந்து ஊர்வலமா கொண்டு வந்த அந்த சிலையைக் கிளப்பி இரவோடு இரவா டாக்டரில் ஏற்றி , நாவலர் பிறந்த, நாவலர் வீதியில் உள்ள ஒரு சிறிய மண்டபம் உள்ள இடத்தில இருந்த நினைவு மண்டபத்தில் இருட்டுக்க வைத்தார்கள்,


                                        அதோட எனக்கு பயனை பாடிய பெண்களை பார்த்து அனுபூதி பெறும் நோக்கத்துக்கு ஆப்புவைக்கப்பட்டது.

                                                 

நல்லூர் கோவிலின் மூலஸ்தானம் இருக்கும் இடத்துக்கு கீழே ,ஒரு முஸ்லில்ம் துறவியின் கல்லறை இருக்கு என்கிறார்கள், அதால அந்த கோவிலின் முன்னே கற்பூரம், வாழைப்பழ தட்டு, சாம்பிராணி விக்கும் உரிமை ஒரு வழிவழியா வந்த முஸ்லிம் குடும்பத்துக்கு இருந்தது, அவர்கள் தான் அந்த கடை கோயிலின் முன்னே கால் கழுவிப் போட்டு வரும் இடத்துக்கு அருகில் வைத்து இருந்தார்கள்,


                                     இஸ்லாத்துக்கும் ஹிந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை விட அவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமால் , " வாகிலாத் அலா அல்லாகு அக்பர் " எண்டு சொல்லி விற்கும் அந்த பூசை புனஸ்கார பொருட்களை , வேண்டி கந்தக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதில் ஒருவித பிரபஞ்ச அளவு ஒற்றுமை இருந்தது அந்த நாட்களில்,

                                              

  வருமானம் அதிகம் உள்ள அந்தக் கோவிலின் வருமானத்தில் ,ஏழை மக்கள் , படிக்க வசதி இல்லாத பிள்ளைகளுக்காக எந்த சமூக திட் டங்களும் இருக்கவில்லை . பதிலாக உண்டியலில் புண்ணியம் கிடைக்க எண்டு சொல்லி , தாள் தாளா விழும் காசில் கோவிலை தமிழ் சினிமாவில் வரும் கனவு சீன் போல மோடேன் ஆக்குவார்கள் ,


                                          கோபுரம் கட்டி , அலங்கார விளக்கு தொங்க விட்டு, ஏறக்குறைய அந்தக் கோவிலுக்குப் போறதே சுவாரசியம் இல்லாமல் இருக்க, அந்தக் கோவிலுக்கு பக்தி நிரம்பி வழியும் அழகோடு வரும் இளம் வள்ளி, தெய்வயானைகளை பக்தி நிரம்பி வழிய ரசிப்பதில் நிறைய சுவாரசியம் இருந்தது .

                                               

நால்லூர் கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுவதும் ,அந்த அலங்காரக் கந்தனை முப்பது அடி உயர மதில் கட்டி வெளி உலகத்துடன் தொடர்பே இல்லாத மாதிரி ஜெயிலில் வைப்பது போல வைத்து இருப்பார்கள்,அவசரத்துக்கு அந்த முருகனே வெளிய வரவேண்டும் எண்டால்,அநத முப்பது அடி மதிலை ஏறிக்குதிச்சுதான் வரவேண்டும் போல இருக்கும், 

                                           
அந்த கோவிலில் வெளிய இருந்து முருகப் பெருமானுக்கு சாத்துவதுக்கு பூ, பூமாலை எட்டுப்பதில்லை,கோவிலின் உள்ளேயே ஒரு பூந்தோட்டம் இருக்கு எண்டும் , அதில இருந்து பறிக்கப்படும் பூக்கள் மட்டுமே கோவிலில் பாவிக்கப்படும் எண்டும், பூமாலை கட்ட, கோவில்மணி அடிக்க ஒருவர் நிரந்தரமா மாதசம்பளத்துக்கு இருந்தார் எண்டு சொல்லுவார்கள்.


                                       அந்தப் பூந்தோட்டதுக்கு வண்டுகளே முப்பதடி மதிலை தாண்டிதான் போய் இருக்க வேண்டும் என்பதை நினைக்க வேதனையா இருந்தது அந்த நாட்களில்,

                                           

முருகப்பெருமானே நேரம் குறித்துதான் அருள் குடுப்பது போல அந்த கோவிலில் எல்லாமே ஒரு நேரம் குறிப்பிட்டபடிதான் நடக்கும், கதவு திறபதுக்கும் மூடுவதுக்கும் எண்டே ஒருவர் கடிகாரம் பார்த்தவாறு இடுப்பில சாவிக்கொத்தை செருகிக்கொண்டு இருப்பார்.




இலங்கை ஜெனாதிபதி ரணசிங்கே பெறேமதாச ,கோயில்க் கதவு மூடி அஞ்சு நிமிஷம் பிந்தி வந்ததால்,அவருக்கு தரிசனம் மறுக்கப்பட்டது ,அவரும் கோவிக்காமல்

                                         " ஹரி புதுமாய் கமக் நா அப்பிட்ட கத்தரகாம தெய்யோ இன்னவா நேத " ,

                                               (சரியான புதுமை ,எங்களுக்கு பிச்சைக் கார, கதிர்காமக் கந்தன் இருக்குறார் இல்லையா ) எண்டு சொல்லி ஒண்டும் சொல்லாமல் போனாராம் ,

                                                   

கோவிலுக்கு முன்னால ஐந்து வேப்பமரம்,சடைச்சு, வளர்ந்து நிழல் பரப்பி இருந்தது .  அதுக்கு கீழ தான் செல்லப்பா சுவாமிகள் , கொழும்பில அரசாங்க வேலை செய்துகொண்டு இருந்த இளவயதில்  , பின் நாட்களில் , கொழும்புத்துறை ஜோகர் என்ற ,ஜோகர் சுவாமிகளை முதல் முதல் கண்ட போது " யாரடா நீ எண்டு " கேட்டாராம்,


                                           ஜோகர் சுவாமிகளுக்கு அந்த ஒரு கேள்வி விழிப்புணர்வு தர அவர்   " தேரடியில் தேசிகனைச் சந்தித்தேன், அங்கேயே சரண் அடைந்தேன் " எண்டு சிவதொண்டனாகி அந்த இடத்திலேயே அவரின் சீடர் ஆனாராம் ,

                                            அந்த அஞ்சு வேம்புக்குக் கீழ நான் கொஞ்சநாள் என்னோட இள வயதில் உலகப் பற்று எல்லாம் துறந்து அந்த வேப்ப மரத்துக்கு கீழ போய் இருந்தேன், அம்மா வந்து அழுது குளறி

                                    " ஏனடா உனக்கு இந்த சின்ன வயசில இப்படி ஒரு ஆன்மீக எண்ணம் "

                                               எண்டு சண்டை பிடிச்சா, நான் அசரவே இல்லை. ஆனாலும் நாவலர் மணிமண்டபம்ல என்னோட பயனை பாடிய தர் .... னியை , மறுபடி சந்திக்க , எனக்கு பழையபடி உலகப் பற்று எல்லாம் தாறுமாறா வர , ஆன்மீக எண்ணதை விட்டுட்டு ஓடி வீட்டை வந்திட்டேன் .


                                           இப்ப நினைக்கும்போது கவலையா இருக்கு , இல்லாடி இப்ப நான் நித்தியானந்தா ரேஞ்சுக்கு பெரிய மகான் ஆகி இருப்பேன், " தாரமும் குருவும் தலை விதிப்படியே " , எண்டு சும்மாவா சொனார்கள் ,,,அதுதான் நடக்கலையே....

                                    ஆனாலும் எனக்கு அப்பவே மனஅழுத்தம் எண்ட டீபிரசன் இருந்து இருக்கலாம் எண்டு இப்ப நினைகேறேன் ,,எப்படியோ அது பெரிய கதை,,,ஆனால் அதில நிறைய குழப்பம் வந்தது அதைப் பிறகு சொல்லுறேன்....

                                             


நல்லூர் கோவிலுக்கு அருகில் பிறந்து ,வளர்ந்ததால் , சங்கீதமும் ஏதோ ஒரு விதத்தில கூடவே சேர்ந்து வளர்ந்தது . என்னோட அப்பா " சைவசமய ஞாணப்பழம் " அதால தேவார திருமுறைகளை பண்ணிசையில் படிக்கவேண்டும் எண்டு அதைப் படிக்க  ஒரு "சங்கீத பூசனம் "  ஐயாவிடமும் , ஒரு பண்ணிசைத் திலகம்  மாஸ்டர்டமும் ஏற்பாடு செய்திருநதார் .


                                 அதால சில வருடங்கள் படித்த சங்கீதம் கொஞ்சமும் என்னோட கூடவெ சங்கீதம் படித்த பெண்களின் முகம்கள் அதிகமாகவும் நினைவு இருக்கு,




                             
 நல்லூர் கோவிலுக்கு அருகில் இருந்த நாவலர் மணி மண்டபத்தில் ஒவ்வொரு ஞயிற்றுக் கிழமையும் பண்ணிசை வகுப்பு நடக்கும் . அதை பண்டிதர் கார்த்திகேசு அவர்கள் நடத்துவார்கள். பண்ணிசை என்றால் தேவார திருமுறைகளை தமிழிசைப்  பண்ணில் பாடுவது . அதில நான் படித்தத பண்ணில்  மாயாமாளவகௌளை, இந்தோளம் , இந்த ரெண்டின் ஆரோகணம் அவரோகணம் இரண்டும் தான் இப்பவும் நினைவு இருக்கு .


                             அதைச் சொல்லித் தந்த பண்டிதர் கார்த்திகேசு வேறு பல பண்கள் சொல்லி தந்தார் ,ஆனால் நினைவில் இல்லை .

                                   


                                                  மற்றபடி எனக்கு கர்நாடக சங்கீதம் முழுமையா தெரியாது. ஒரு சில ராகமும் அதுவும் , கல்யாணி,ஆரபி ,சிவரஞ்சனி ,சண்முகப் பிரியா, சாருமதி ,நீலாம்பரி போன்ற  அழகான பெண்களின் பெயரில் உள்ள  ராகங்கள் மட்டும் நினைவிருக்கு, அதுகள் அழகான பெண்களின் பெயரில் இருந்தபடியால் மட்டும் இன்னும் நினைவுருக்கு மறக்கவே முடியவில்லை!!!




                                     கோவிலை சுற்றி, நல்லை ஆதினத்தில், தெற்கு வீதியில்,கம்பன் கழகத்தில், மனோன்மணி அம்மன்கோவிலில் நிறைய சங்கீதக்கச்சேரி எப்பவுமே நடக்கும்! அண்ணாமலை இசை தமிழ் மன்றம் ஒவ்வொரு வருடமும் இசைவிழா நல்லை ஆதினத்தில நடத்துவார்கள்,


                                              அதில "சங்கீத பூசனம் " பொன் சுந்தரலிங்கம், "சங்கீத பூசனம் " திலகநாயகம் போல், பாடினால் அரங்கு நிரம்பி வழிந்து வெளியே ரோட்டை வழிமறித்துக்கொண்டு நிண்டு கேட்பார்கள் ,அவளவு பேமஸ் அவர்கள் இருவரும்.

                           


நல்லூர் கோவிலின் வடக்கு வீதியில் , நல்லைக் கந்தனின் அலங்கார அட்டகாச,பிரபலங்களில் இருந்து விலத்தி , "  நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால் நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ ...." என்று அமைதி நாடும் சாதாரண மனிதர்களின், சாமான்ய இசை அறிவின் விளிம்பில் அடக்கமாக ,அமைதியாக ,ஆர்ப்பாடம் போடாமல் இருந்த  மனோன்மணி அம்மன்கோவிலில்தான் அழகான இளம் பெண்கள் ஒவ்வொரு ப்வுர்ணமி தினத்திலும் பாடுவார்கள்.


                                  வெளியே மணலில் படுத்து கிடந்து கேட்கலாம் !


                       இளம் பெங்கள் பாடும் சங்கீதம் அவர்கள் போலவே இளமையா இருக்கும். பட்டுச்சீலை, மல்லிகைப்பூ மாலை, காதில லோலாக்கு , நெற்றியில் சாந்துப்பொட்டு ,என்று அவர்களே அம்மன் சிலைபோல , "நிலவின் ஒளியில் தெரிவது தேவதையா " என்பதுபோல சம்மானம் கட்டி இருந்து ,தேன் வழியப்பாட கோவிலை சுற்றியே சந்தன மல்லிகை வாசம் வரும்!.

                               
                                                        பெரிய கிழட்டு  "சங்கீத பூசனம் " வித்துவான்கள் காட்டும் "ஆலாபனை வித்தை" எல்லாம் காட்டா மல் இயலப்பாக   அவர்கள் இளமை குரலில் அந்த தெலுங்கு மொழிக் கீர்த்தனைகளை பாடுவது நிறைய " பீலிங்க் " கொடுக்கும் ,


                                           "எந்தரோ பா மகானுபாவ " தியாகராஜா கீர்த்தனை தொடங்க முளந்தண்டு குளிரும்,


                                         "நகு மோ மு  கனலே னே   நாசாலி  தெளிசே "  கீர்த்தனை ஆரம்பிக்க நாக்கில தண்ணி வத்திப்போகும் ,


                                      "ஜகதானந் தா தரா " பஞ்ச கீர்த்தனை தொடங்க வயித்துக்குள்ள பட்டம் பூச்சி பறக்கும்,


                                   ஆரபி ராகத்தில " சாடிஞ்சனே " தொடங்கி ,அதன் சரணத்தில "சமயாகி ரிக்கி தகு மாடலாகு" எண்டு கொஞ்சம் வேகமான தாளத்தில பாய நாடி ,  நரம்பெல்லாம் அதிரும்.

                                             


தியாகப்பிரம்மம் தியாகராஜா சுவாமிகளின் " பஞ்ச இரத்தின  கீர்த்தனைகளையே" அதிகம் ஆலாபனை, அலாரிப்பு , தனியாவர்த்தனம் எண்டு வில்லங்கமாப்  போட்டு அதிரவைகாமல், அழகான அந்த இளம் பிள்ளைகள் பஞ்சுபோலப் பாடுவார்கள்!


                                               என் நண்பன் கிருபாவையும் இழுத்துக்கொண்டு போய் தான் மணலில் படுத்துக் கிடந்தது அந்த சங்கீதத்தைக் கேட்டு இருக்கிறேன். அவனுக்கு சங்கீதம் தெரியாது ஆனால் நிலவின் ஒளியில் ரம்மியமான இரவை நன்றாகவே ரசிக்கத் தெரியும் . அப்படி ஒரு நண்பன் கிடைப்பது அரிதான ஒரு நிகழ்வு .

                           
                                              கடைசியில் எப்பவும் ஆனந்த பைரவி தாய் ராகத்தில்,  அதன் மூன்று ஜென்மராகங்கள் அசத்தும் " கற்பக வல்லி நின் பொற் பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா ..." பாடல் எப்பவுமே மனோன்மணி அம்மனின் தனிப்பட்ட விருப்பம் போல பாடி முடியும்.


                                       அந்த நிகழ்சி  முடிய பவுர்ணமி  முழு நிலவு நடு உச்சிக்கு மேல அடிச்சுப் பிடிச்சுப்  பிரகாசமாக வழிய, அதன் பால் ஒளி கோவிலிக்கு அருகில் இருந்த நெல்லிமரம் எங்கும் சிதறி , கோவில் சுவரில நடனமாட, கடைசி இரவுக் குருவியும் சோம்பலாகப் பறந்து செல்லும்


                                       அந்தக் கச்சேரி முடிய,  மனோன்மணி  அம்மனுக்கு ஆலாத்திகாட்டி. முடிவில, சுவையான  அவல், கடலை,சுண்டல்  தருவார்கள் ,  சங்கீதம் விளங்குதோ இல்லையோ  அவல், கடலை,சுண்டல்லுக்காகவே கச்சேரி முடியும் வரை  இருக்கலாம்!


                                          இதெல்லாம் நடக்கும்போது  அகோரமான  செல் அடியும் ஹெலி அடியும்  பொம்பர் அடியும்  சில நேரம்  நடக்கும். வாழ்க்கை ஒரு  ஓரமாக ஒதிங்கித்தான்  அப்போதெல்லாம் போய்க்கொண்டிருந்தது  ஆனால் அதில் ஒரு நளினம் இருந்தது


                             
 இப்ப  முக்கியமான  விசியதுக்குள்ளே வாறன்,  சாத்திரிய சங்கீதத்தின் பலவீனம் அதை முழுமயாக படித்தவர்கள்தான் அதன் சுவையை பிரிச்சு மேய்ந்து முழுமையா அனுபவிக்கலாம் என்கிறார்கள். என்னைப் போன்ற சராசரி  ரசிகர்களுக்கு  அதன் முழு வீச்சு விளங்காது ,அது ஒரு பலவீனம் , சரி, அப்ப அதன் பலம் என்ன என்று கேட்பிங்க , சொல்லுறன்....

               
                                                சுவிடனில் இருந்த போது என்னோட  ஒரு நல்ல ப்ரென்ட் ஸ்வீடிஷ் வெள்ளை இனத்தவா ,பிறந்து வளர்ந்து முதல் ஸ்வீடனை தவிர வேறு உலகம் தெரியாத அப்பாவி , கிளாஸிக்கல் வெஸ்டேர்ன் முயூசிக் முறைப்படி படித்தவா. Pichoda. Beethoven, Mozart, Ennio Morricone என்ற மேலைத்தேய இசை மேதைகளின் சிம்பொனி ஒர்கேஸ்ரா எல்லாம் விரல் நுனியில் பியானோவில் விளையாடும் மேதாவி .

                                 ஒருநாள் ஒரு பரிசோதனை போல அவளுக்கு  "அலை பாயுதே கண்ணா,........." என்ற Dr. மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா உருகி உருகிப் பாடிய பக்திப் பாடலை கிடாரில் வாசித்து காட்டி,  


                      "இதை கேட்கும் போது உன்னுள்ளே எப்படியான பீலிங்க்  வருகிறது? " 

                     
                                                          எண்டு கேட்டேன், நான் கிடாரில வைச்சு நோன்டியத்தை  , என்னோட நட்பாக இருக்கும்  ஒரே ஒரு குற்றத்துக்காக பொறுமையாகக் கேட்டுப்  போட்டு, அந்தப் பாடலின் அடி நாதமாக இருந்த ராகம் , அதன் உணர்ச்சிப் பிரவாகம்  , சாஸ்திரிய  இசை வடிவம்,  அவளை மயக்க கொஞ்ச நேரம் பொறுமையாக் கேட்டாள்..
 

                                  " இதை கேட்கும் போது உன்னுள்ளே எப்படியான பீலிங்க் வருகிறது " 

                           
                                                 எண்டு மறுபடியும் கெஞ்சிக் கேட்டேன்  , அவள்  உண்மையாகவே சீரியஸ் ஆக என்னைப் பார்த்து நம்பமுடியாத மாதிரி சொன்னது,  

                     
                                                  "  music is a kind of spritul dimension ,,i red  that many years back,,but feel that now,,,உருகி உருகி  அடி மனதில் அமைதியான, எளிமையான அர்த்தமுள்ள , தெய்வீகமான , கடவுளுக்கு நெருக்கமான ஒரு  பக்தி உணர்வு வருகிறது, அதை வார்த்தைகளில் மொழி பெயர்த்து  சொல்ல முடியவில்லை "  

                   
                                        என்றாள்.


                         ..ஒரு ஐரோபியப் பெண் "அலை பாயுதே கண்ணா,........." பாடலை சிலை போலவே நின்று ரசித்துக் கேட்டு அதைக்   " கடவுளுக்கு நெருக்கமான ஒரு  பக்தி உணர்வு " என்று சொன்னாள் பாருங்க , அதுதான் கீளைத்தேய கர்நாடக சாத்திரிய சங்கீதத்தின் பலம்!