Friday, 16 September 2016

நல்லூரான் நினைவுகள்

இந்த  உலகத்தில்  எல்லாருமே ஒரு  ஊரில் பிறந்து வளர்ந்திருப்போம்.  அந்த  ஊர்  பலகாரணங்கள்  எழுப்பிக்  கலைத்து அடிச்சு விரட்டியதால் வேற  எந்த ஊருக்குப் போய் வசித்தாலும் சொந்த  ஊர்  சின்னவயசில் பதிந்து சென்றவை ஏராளம்.


                                                        எவ்ளவோ விசியங்கள் கவனிப்பில் இருந்தாலும்  இன்றைக்கு  உள்ளது  போல அன்றைக்கு பிற்காலத்தில் ஒரு எழுத்தாளனாக  தற்செயலாகவும்  நான்  வரமாட்டேன்  என்றுதான்  நினைத்தது.  அதனால  பல  அருமையான, பெருமையான சம்பவங்கள், நிகழ்வுகளை  அப்போதெல்லாம் ஆர்வமாகக்  கவனிக்கவில்லை.


                                                   செய்தது  எல்லாமே விடுப்புப் பார்க்கிறது  என்ற சொற்பிரயோகம்  சம்பந்தமானது. என்றாலும் முடிந்தவரை நினைவின் வழித்தடத்தை இன்னொருமுறை துடைத்துத் தூசி தட்டிப்  பார்க்கிறேன்.

                                               

சின்னவயசில்  நல்லூர் கந்தசுவாமி  கோவில் எனக்கு  நினைவில்  உள்ளபடி பலவிதங்களில் வேறுபட்டு இருந்தது. இண்டைக்கு இரண்டு வானளாவிய  கோபுரங்கள்  தெற்கு வீதியிலும் ,வடக்கு  வீதியிலும்  ராஜகோபுரங்களாக  எக்ஸ்ராவாக எழும்பி கோவிலின் உட்பிரகாரமே  சரஸ்வதிமகால் போல வடிவமைக்கப்பட்டு , கோவில் நடைமுறைகளில்  பல புதிய விடயங்கள் சேர்ந்துள்ளன. முக்கியமாக அதன்  உள்வீதிகளில்  உள்ள பிரமாண்டம் பிரமிக்கதான் வைக்கிறது.

                                              யாழ்பாணத்தை ஆண்ட கடைசி ஆரியச்சக்கரவர்த்தி சங்கிலி மன்னனின் தலைநகராகிய  சிங்கை நகரில், புவனேகபாகு மன்னன்  கட்டி , சப்புமல்குமாரைய என்ற செம்பகப்பெருமாள் வழிபட்ட நல்லூரில் நல்லைக் கந்தன் திருவிழா  ஆரவார  இயல்பாகி  ஒரு  காலத்தில்  அந்தக்  கோவிலுக்கு  அருகில் பிறந்து வளர்ந்த நினைவுகளோடு வந்து  முட்டி மோதி முத்தமிடுகின்றன. 

                                                            
 ஒரு காலத்தில் யாழ் குடா நாட்டை தெருவெங்கும் விழாவாக்கி , வீடெல்லாம் அன்னதான விருந்து வைத்து ,ஊரெல்லாம் பக்தி நிரம்பி வழிய , நல்லூர் என்ற இடத்தை நாலு பக்கமும் அதிர வைத்த அந்த திருவிழா ஒரு கிராமக்கோவில் போல இந்தமுறை  பக்த கோடிகள் அலை மோத  , அப்படி போயுள்ள பக்த கோடிகள் கையில " கமரா மொபைல் போனில " உலக அளவில் பிசியா இருக்க, அதிகம் ஆடம்பர உற்சாகம் இல்லாமல் பக்தி மயமாக   நடந்துகொண்டிருப்பது   இன்டர்நெட் புண்ணியத்தில் வலை தளங்களின் வலை வீச்சில் பார்க்க ஒரு ஆச்சரியமா இருக்கு.



                               
ஆடம்பரக் கந்தனின் இந்த முறை  தேர் திருவிழாவுக்கு முன்னர் நடந்த வழமையான திருவிழாவில்,பல முக்கிய சம்பவங்கள் மிஸ்ஸிங். ஆறுமுக நாவலர் மணி மண்டபத்தில்   இருந்து இருவத்தி ஐந்து நாளும் "நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகும் தஞ்சத் தருள் சண்முகனின்  " கந்தரநுபூதி பாடும் இளம் பிள்ளைகளின் பயனை கோஸ்டி, திருத்தொண்டர் சபையின் பயனை கோஸ்டி  இல்லை, 


                                                      நான் பலவருடம் நாவலர் மண்டபத்தில் இருந்து வெளிக்கிட்டு கோவிலை திருவிழா இருவத்தைந்து நாளும் கந்தர் அனுபூதி பாடும் பயனையில்  பாடகரா இருந்து இருக்றேன்..

                                     
                                               வேறு பல பயனைக் கோஷ்டிகள் பாடும் பாடல்களில் பண் அதிகம் இல்லை, ஆனால் பக்தி நிறைய இருக்கு," மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப் பெண்ணினுள் கற்புடைய " தாவணி போட்ட நல்லூர் பெற்றெடுத்த இளம் வள்ளி தெய்வயானைப் பெண்கள் அதிகம் இல்லை,


                                          " ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,செந்நெல் அமலை வெண்மை வெள் இழுத்த " நெஞ்சை நிமிர்த்தும் எங்கள் ஊர்க் காளைகளும் அதிகம் இல்லை,

                             


முக்கியமா  முருக்கப் பெருமான் வெளி வீதி உலா வரும்போது கிராமக் கோவில்கள் போல ஒரு மணியை இழுத்துக்கொண்டு அதை அடித்துக்கொண்டு வருகிறார்கள். அந்த மணி முதிரைச்சந்தையில் இருந்த ஆதியான நால்லூர் கோவிலைப்  போத்துக்கிசர் உடைத்து அந்தக் கற்களை கொண்டு கட்டிய யாழ் டச்சுக்கோட்டை கட்டும் போது கொண்டு போன  நல்லூர்க்  கோவில் மணி எண்டு சொல்லுறார்கள்.


                                           பெரிய ஒரு கற்பூர சட்டியும்,டமாரமும்  ஒரு சின்ன வண்டிலில் வைத்து இழுத்து கொண்டு வருவதைப் பார்க்க கிராமக் கோவில்கள் போலத்  தான் இருக்கு...

                               
இலங்கைத்தீவின் எல்லா நகரங்களில் இருந்தும் விரதம் இருந்து பக்தர்கள் வரும், நல்லூர் தேர்த் திருவிழாவில் பல வருடங்களின் முன் எப்பவுமே கடல் போல அலை அடிக்கும் முருக்க பக்தர்கள் எல்லாரும் எங்கே போனார்கள் என்று ஜோசித்துப் பார்த்தால், அதிகம் பேர் புலம்பெயர்ந்து போய் ஐரோப்பா,கனடாவில் அடைக்கலம் பெற்று வாழும் அவலத்தில் , ஒரு தலைமுறையே விடுதலைக்கு முகவரி எழுதப் போய்த் தொலைந்து போன நிலையில்..

                                 
முருக்க பெருமானின் முக்கியமான இன்றைய திருவிழாவில்  நெருக்கி அடிச்சு இழுபட்டு தேர் இழுக்க, அடிபட்டு முட்டி மோதித் தேங்காய் உடைக்க , உருண்டு பிரண்டு பிரதட்டை செய்ய, " அரோகரா அரோகரா ..கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் " எண்டு பக்தி முழங்க  அதிகம் பேர் இல்லாத நிலையில் இடைவெளிகள் அதிகமா இருக்கு.,

                                                 
ஆனாலும் தெருவெல்லாம் அசைந்தாடும் தேர் அழகா இருக்க அதன் தொங்கு மணிகளின் சத்தம்,ஜாளிகளின் வாளிப்பு, கலசங்களில்  பொன் நிறம், மறுபடியும் உச்சக் கட்டமாக திருவிழாவின் சந்தோசத்துக்கு உயிர் கொடுக்குது.  நல்லூர் தேர் மீடியம் சைஸ் தேர். அந்த தேரின் அளவுப்பிரமானம் ஒன்றும் அமர்க்களம் இல்லைதான். ஆனால் தேர் திருவிழா இலங்கை வானொலியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யும் அளவுக்கு இலங்கை அளவில் பிரபலம்.

                                           
                                          அந்த இலங்கை வானொலி நேரடி அறிப்பாளர்கள்  திருப்புகள், கந்த புராணம்,,திருமுருகாற்றுப்படை போன்ற பக்தி இலக்கிய  மேற்கோள்கள்  எடுத்துக்  கலந்துவிட்டு  வேர்ல்ட்கப்  புட்போல்  பைனல் மச்  போல உணர்வுடன்  உள்ளொளி தேடி  வர்ணனை செய்வார்கள். ஆனால் அந்த ஒலிபரப்புக்கு டெக்னிசியன்  ஆக  சிங்கள ஆட்கள் வந்திருப்பார்கள். யுத்தம் தொடங்கி தொண்டையை இறுக்கிப்பிடித்த வருடங்களில் அந்த ஒலிபரப்பு நடக்கவேயில்லை. 

                               


சப்பரத் திருவிழா அன்று தான்  எங்கள் வீடில் ஒரு காலத்தில் நிறைய சித்தப்பு,பெரியப்பு,அத்தை , மாமி உறவினர் வெளி ஊர்களில் இருந்து வந்து இரவு முழுவதும்  கச்சான் கோது வீடு முழுவதும் பறக்க கலியான வீடு போல கலகலப்பா இருக்கும்.  அத்தை,  மாமியின் அம்சமான பெண் பிள்ளைகளும் வந்து இரவு முழுவதும் வீட்டுக் ஹோல் முழுவதும் வெள்ளி எறிஞ்ச மாதிரி சிரித்து சிரித்து கதைச்சுக்கொண்டு இருப்பார்கள் .


                             எப்பவும் இருட்டா இருக்கும் எங்க வீடே பவுர்ணமி போல வெளிச்சமா இருக்கும் . 

                               
முக்கியமா அவர்கள் தங்குவது காலையில் வசந்தமண்டபப் பூசை முன்னுக்கு நின்று பார்க்க. அதிகாலையே எழும்பிக் குளிச்சிட்டு தலை கூடக் காயவைக்காமல் ஓடுவார்கள், கொஞ்சம் இளமையான ஆண்கள் காலையில் பிரதட்டை அடிக்க எழும்பி ஓடுவார்கள். அவர்கள் தான் பின்னர்,வீதி முழுவதும் உருண்டு மணல் ஒட்டிய வேட்டியுடன் , தேரும் இழுத்து, தேங்காய் அடிக்கும் போது வரும் இளநியைத் தலை முழுவதும் ஊற்றிக்கொண்டு வருவார்கள்,

                                     
                                       அப்படி பக்தி நிரம்பி வழியும் அவர்களைப் பார்க்க ஒரு வித " மச்சோ ஹன்ட்சம் " ஆண்கள் போல பார்க்கும்  பெண்களுக்கு இருப்பார்கள் . அந்த தோற்றதால்  வேற சில விசயங்களும் தொடரலாம். காலையில்  ஓடியவர்கள் மாலையில் பச்சை சாத்தி சாமி தேரில் இருந்து இறங்கும் திருவிழாவுக்கும் பதறியடிச்சு ஓடுவார்கள்,முக்கியமா பெண்கள் பச்சை சேலை கட்டிக்கொண்டு போவார்கள்... 

                               


கோவிலுக்குப் போகும் எல்லாப் பாதைகளிலும் இருக்கும் தண்ணீர் பந்தலில்க் காலையிலேயே " முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கு " எண்டு சீர்காழி கோவிந்தராசன் வெள்ளியாகி விளாசும் பாடல்  " லவுட் ஸ்பிகர் " தொடங்க ,பகல் முழுவது  தாகசாந்தி எண்டு பந்தலில் மோர்த் தண்ணி,சக்கரைத் தண்ணி,றோசாப்புக் கலரில்  சர்பத் , கலர் கலரா குளிர பாணம் என்று குடுப்பார்கள் .


                                                                   அதை வேண்டிக் குடிச்சுப்போட்டு மண்டையப் பிளக்கும் வெயிலில் இருந்து தப்ப பல அடியார்கள்,தண்ணீர்ப் பந்தல் மணலில்  டி எம் சவுந்தரராஜன் வெங்கலத்தில் பாடும்  " நம்புங்கள் முருகன் நல்லவன், தன்னை நாடி வரும் அடியார்க்கு  என்றும் நல்லவன் ..." என்ற உத்தரவாதத்துடன் ஆற அமர இருபார்கள்,






கோயில் முன் வீதியில் செட்டி தெருவில் ஒரு வீட்டில் அன்னதானம் கொடுப்பார்கள், கோவில்தேர் முட்டிக்கு எதிரே இருந்த அறுபத்துமூன்று நாயன்மார் மடத்திலயும்  கொடுப்பார்கள். கோவிலின் ஆறு காலப் பூசை மணிகளும் தெளிவாகக் கேட்டும் அருகில் இருந்த எங்கள் வீட்டிலும் சமையல் அமளிதுமளியா எல்லா உறவினரும் சேர்ந்து சமைப்பார்கள்.

                         


தேர்த் திருவிழாவிற்கு ,தீர்தத் திருவிழா போல அதிகம் காவடிகள் வருவதில்லை. வாற காவடிகள் பின்வீதியில் மங்கையக்கரசி இல் வந்து இறங்கும். சிலது வடக்கு வீதியில் மனோன்மணி அம்மன் கோவிலில் வந்து இறங்கும். அதிகம் தோள்க் காவடிகள் என்ற தோளில் வைத்து ஆடும் காவடிகள் ,முதுகில செதில் குத்தி,வாயைக் கிழிக்கிற மாதிரி  வேல் குத்தி. தார் ரோட்டில கொதிக்கிற வெய்யிலில் வெறும் காலுடன் ஆடிக்கொண்டு அந்தக் காவடிகள் நல்லுரை விட்டு வெளியே உள்ள சின்ன சின்ன இடங்களில் இருந்து நடையா நடந்து  ஆடிக்கொண்டு வருவார்கள்.

                             
                                          பால்க் காவடி எண்டு சின்னக் குடத்தில பால் நிரப்பி அதைக் காவடியுடன் சேர்த்துக் கட்டி பால் தெறித்து தெறித்து சிதற ஆடிக்கொண்டு வருவார்கள். கொஞ்சம் திரில் ஆக " என்னப்பனே கந்தப்பனே பன்னிருகை வேலவனே  " என்று பெங்களூர் ரமணியம்மாவோடு முதுகில கொழுக்கி போட்டு தொங்க விட்டு பறவைக் காவடியும்,  " வேலவா வடி வேலவா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா " எண்டு துலாவில தொங்கிக்கொண்டு, துலா முறிஞ்சு விழுகிற மாதிரி அதை ஒருவர் ஏறி நிண்டு அமத்தி அமத்தி ஆட்ட  தூக்குக் காவடியும் நீண்ட தூரம் இருந்து வரும்.

                             


ஆன்மிகம் அதிகமாகி  கோவில் நாலு வீதியிலும் எவளவு சனம் இடிபடுவார்களோ அதே அளவு, சுவாரசியக்  கொண்டாட்டம் சந்தோசமாகும் இடங்கள் கோவிலின் சுற்றுப்புற பாதை முழுவதும் ஆகா ஓகோ எண்டு நடக்கும்.,

                                 
                                                    நிலகடலை கும்பியாகக் குவித்து வைத்த கடலைக் கடைகள் , சுடச்சுட சோழன் பொரியும் கச்சான் கடைகள், வளையல்கள் மின்ன மின்னி அழைக்கும்  காப்புக்கடை, குழந்தைப் பிள்ளைகளுக்கு ஆசை காட்டி பெற்றவர்களின் காசைக் காலியாக்கும் விளையாட்டு சாமான் கடைகள் , சீனி வழியும் மஸ்கட் சுவிட் கடைகள், பள பளக்கும் எவசில்வர் பாத்திரக் கடைகள்.


                                                   " ஓடியா ஓடியா மலிவு மலிவு " என்று கத்தும் சில்லறை வீட்டுப் பாவனைப் பொருள்கள் விற்பவர்கள் சத்தம், பலூன் விற்பவனின் பரிதாபக் கெஞ்சல், வழி முழுவதும் பிச்சைக் காரர்களின் " ஐயா தர்மம் செய்யுங்க சாமி... " திண்டாட்டம்கள் , லைட் சுற்றி சுற்றி ஓடும் விளம்பரங்களின் கீழே  சனம் நிரம்பி வழியும்  ஐஸ்கிரீம் கடைகள் , அதை விக்கும் ஐஸ் கிரீம் வானில இருந்து வரும் காதைக் கிழிக்கும் ஜெனரேடர் சத்தம். 

                               


குண்றத்திலே  குமரனுக்குக் கொண்டாட்டம் போலவே இதுகளுக்கு நடுவில்  ரகசியக் காதலர்களின் ரகசிய சிக்னல்கள், கிடைத்த சின்ன இடைவெளியில் சொல்லும் அன்பான வார்த்தைப் பரிமாற்றம், அரோகரா போட்டுக் கொண்டு  கும்பலில் கோவிந்தாவாக முதல் முதல் முழுவதும் முகம் பார்க்க கிடைத்த சந்தர்ப்பம்,  வழம்  மாறி வீதி  வலம் வந்து தேடும் கண் பார்வைகள்,

                                   
                                                       கலியாணக் கனவுகளின் ரகசிய அர்ச்சனைகள்,  கோபுர வாசலில் விட்டுசென்ற சின்னச் சிரிப்பு, அடியளிக்கும் போதும் அன்பான வேண்டுதல்கள், சென்ற திருவிழாவில் சந்தித்து இந்த திருவிழாவில் பிரிந்து போன ஒரு காதலின் கண்ணீர்த் துளி,  காத்திருந்து காத்திருந்து காற்றோடு போன பெருமுச்சு , சிலருக்கு மட்டும் இதயம் எங்கும் உதயமாகும் ஒரு உயிரில் கலந்த உறவு.....  

                     
                                                        உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும் போல  சின்ன வயதில்  கோவிலின் திருவிழா ஒரு  கலியான வீடு.   டோல்கி டப்பா டுல்கி போல வாழ்க்கை தந்த பாடங்கள், எப்படியோ  இதுகள் எல்லாம் நல்லூரான் திருவடியில் அதிகம் கவனிக்கப்படாமலேயே  போகலாம்.....

                    
                                       
நல்லூர்க் கோவிலின் வடக்கு வீதியில் கட்டியுள்ள ராஜ கோபுரப் படம்  அதை இருபது வருடங்களின் பின் என்னோட கொம்புயிடர் திரையில் பார்த்து அதிசயித்தேன். நான் பிறந்த ஊரில உள்ள அந்த அலங்காரக் கந்தன் கோவில் எல்லாக் கோவில்களையும் விட அதிக வருமானம் உள்ள, ஆடம்பரக் கந்தன், கந்தசாமி என்ற பெயரில அருள் கொடுத்துக் கொண்டு இருக்கும , அந்த கோவிலின் சின்ன வயது நினைவுகள் எப்பவுமே ஒரு புத்தகம் போல பிரட்ட பிரட்ட ஒற்றைகள் வருவது போல எப்பவுமே முடிவில்லாமல் வரும்.

                                              
                                        அந்தக் கோவிலின் ஆறுகாலப் பூசை மணியும ,  ஒரு மாத திருவிழா, அல்லோலோல கல்லோல ஐஸ்பழ வான்களின் ஜெனேறேடர் அலறல் ஓசைகளும் , சுற்றி இருந்த தண்ணிப் பந்தல்களின் லவுட் ஸ்பிகர்  காதைக் கிழிக்கும் சத்தம்கள் தெளிவாகக் கேட்கும் மிக அருகில் உள்ள இடத்தில தான் நான் அவதரித்தேன். அந்தக் கோவிலின் ஒவ்வொரு சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவதித்து வளர்ந்தேன்.

                                         
அந்தக் கோவில் எவளவு ஜனரஞ்சகப் பிரசித்தமோ அந்தளவு அதன் வரலாற்றுக் குழப்பங்கள், அந்தக் கோவிலில் நடக்கும் விசியங்கள் அதிகம் பலருக்கு தெரியாது, நல்லூர் கோவில் அருகில் நாவலர் மணிமண்டபம் அமைத்து, அதில ஆறுமுக நாவலர் சிலை பல வருடம் இருந்து, அதுக்கு முன்னாள் கோவில் திருவிழா இருவத்தைந்து நாளும் என்னோட அப்பாவின் கட்டளைப்படி, கந்தர் அணுபூதி படிக்கும் பயனைக்கு சின்ன வயசில நாவலர் போலவே நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராட்சை மாலை போட்டு , கேவலாமாய்ப் போய் என்னோட பயனை பாடிய பெண்களை பார்த்து நெகிழ்ந்த் உருகும் அனுபூதி பெற்று இருக்கிறேன்,

                                                       

நல்லூர் கோவில் ஆகம விதிப்படி கருங்கல்லில் மூலஸ்தானம் கட்டப்படவில்லை எண்டு ஆறுமுக நாவலர் சொல்லி இருகிறார், அந்தக் கோவத்திலையும், அவரின் வெண்கல சிலையைப் பலர் தொட்டுக் கும்புடுவதாலும் கோவில் நிர்வாகம் கொழும்பில் இருந்து ஊர்வலமா கொண்டு வந்த அந்த சிலையைக் கிளப்பி இரவோடு இரவா டாக்டரில் ஏற்றி , நாவலர் பிறந்த, நாவலர் வீதியில் உள்ள ஒரு சிறிய மண்டபம் உள்ள இடத்தில இருந்த நினைவு மண்டபத்தில் இருட்டுக்க வைத்தார்கள்,


                                        அதோட எனக்கு பயனை பாடிய பெண்களை பார்த்து அனுபூதி பெறும் நோக்கத்துக்கு ஆப்புவைக்கப்பட்டது.

                                                 

நல்லூர் கோவிலின் மூலஸ்தானம் இருக்கும் இடத்துக்கு கீழே ,ஒரு முஸ்லில்ம் துறவியின் கல்லறை இருக்கு என்கிறார்கள், அதால அந்த கோவிலின் முன்னே கற்பூரம், வாழைப்பழ தட்டு, சாம்பிராணி விக்கும் உரிமை ஒரு வழிவழியா வந்த முஸ்லிம் குடும்பத்துக்கு இருந்தது, அவர்கள் தான் அந்த கடை கோயிலின் முன்னே கால் கழுவிப் போட்டு வரும் இடத்துக்கு அருகில் வைத்து இருந்தார்கள்,


                                     இஸ்லாத்துக்கும் ஹிந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை விட அவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமால் , " வாகிலாத் அலா அல்லாகு அக்பர் " எண்டு சொல்லி விற்கும் அந்த பூசை புனஸ்கார பொருட்களை , வேண்டி கந்தக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதில் ஒருவித பிரபஞ்ச அளவு ஒற்றுமை இருந்தது அந்த நாட்களில்,

                                              

  வருமானம் அதிகம் உள்ள அந்தக் கோவிலின் வருமானத்தில் ,ஏழை மக்கள் , படிக்க வசதி இல்லாத பிள்ளைகளுக்காக எந்த சமூக திட் டங்களும் இருக்கவில்லை . பதிலாக உண்டியலில் புண்ணியம் கிடைக்க எண்டு சொல்லி , தாள் தாளா விழும் காசில் கோவிலை தமிழ் சினிமாவில் வரும் கனவு சீன் போல மோடேன் ஆக்குவார்கள் ,


                                          கோபுரம் கட்டி , அலங்கார விளக்கு தொங்க விட்டு, ஏறக்குறைய அந்தக் கோவிலுக்குப் போறதே சுவாரசியம் இல்லாமல் இருக்க, அந்தக் கோவிலுக்கு பக்தி நிரம்பி வழியும் அழகோடு வரும் இளம் வள்ளி, தெய்வயானைகளை பக்தி நிரம்பி வழிய ரசிப்பதில் நிறைய சுவாரசியம் இருந்தது .

                                               

நால்லூர் கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுவதும் ,அந்த அலங்காரக் கந்தனை முப்பது அடி உயர மதில் கட்டி வெளி உலகத்துடன் தொடர்பே இல்லாத மாதிரி ஜெயிலில் வைப்பது போல வைத்து இருப்பார்கள்,அவசரத்துக்கு அந்த முருகனே வெளிய வரவேண்டும் எண்டால்,அநத முப்பது அடி மதிலை ஏறிக்குதிச்சுதான் வரவேண்டும் போல இருக்கும், 

                                           
அந்த கோவிலில் வெளிய இருந்து முருகப் பெருமானுக்கு சாத்துவதுக்கு பூ, பூமாலை எட்டுப்பதில்லை,கோவிலின் உள்ளேயே ஒரு பூந்தோட்டம் இருக்கு எண்டும் , அதில இருந்து பறிக்கப்படும் பூக்கள் மட்டுமே கோவிலில் பாவிக்கப்படும் எண்டும், பூமாலை கட்ட, கோவில்மணி அடிக்க ஒருவர் நிரந்தரமா மாதசம்பளத்துக்கு இருந்தார் எண்டு சொல்லுவார்கள்.


                                       அந்தப் பூந்தோட்டதுக்கு வண்டுகளே முப்பதடி மதிலை தாண்டிதான் போய் இருக்க வேண்டும் என்பதை நினைக்க வேதனையா இருந்தது அந்த நாட்களில்,

                                           

முருகப்பெருமானே நேரம் குறித்துதான் அருள் குடுப்பது போல அந்த கோவிலில் எல்லாமே ஒரு நேரம் குறிப்பிட்டபடிதான் நடக்கும், கதவு திறபதுக்கும் மூடுவதுக்கும் எண்டே ஒருவர் கடிகாரம் பார்த்தவாறு இடுப்பில சாவிக்கொத்தை செருகிக்கொண்டு இருப்பார்.




இலங்கை ஜெனாதிபதி ரணசிங்கே பெறேமதாச ,கோயில்க் கதவு மூடி அஞ்சு நிமிஷம் பிந்தி வந்ததால்,அவருக்கு தரிசனம் மறுக்கப்பட்டது ,அவரும் கோவிக்காமல்

                                         " ஹரி புதுமாய் கமக் நா அப்பிட்ட கத்தரகாம தெய்யோ இன்னவா நேத " ,

                                               (சரியான புதுமை ,எங்களுக்கு பிச்சைக் கார, கதிர்காமக் கந்தன் இருக்குறார் இல்லையா ) எண்டு சொல்லி ஒண்டும் சொல்லாமல் போனாராம் ,

                                                   

கோவிலுக்கு முன்னால ஐந்து வேப்பமரம்,சடைச்சு, வளர்ந்து நிழல் பரப்பி இருந்தது .  அதுக்கு கீழ தான் செல்லப்பா சுவாமிகள் , கொழும்பில அரசாங்க வேலை செய்துகொண்டு இருந்த இளவயதில்  , பின் நாட்களில் , கொழும்புத்துறை ஜோகர் என்ற ,ஜோகர் சுவாமிகளை முதல் முதல் கண்ட போது " யாரடா நீ எண்டு " கேட்டாராம்,


                                           ஜோகர் சுவாமிகளுக்கு அந்த ஒரு கேள்வி விழிப்புணர்வு தர அவர்   " தேரடியில் தேசிகனைச் சந்தித்தேன், அங்கேயே சரண் அடைந்தேன் " எண்டு சிவதொண்டனாகி அந்த இடத்திலேயே அவரின் சீடர் ஆனாராம் ,

                                            அந்த அஞ்சு வேம்புக்குக் கீழ நான் கொஞ்சநாள் என்னோட இள வயதில் உலகப் பற்று எல்லாம் துறந்து அந்த வேப்ப மரத்துக்கு கீழ போய் இருந்தேன், அம்மா வந்து அழுது குளறி

                                    " ஏனடா உனக்கு இந்த சின்ன வயசில இப்படி ஒரு ஆன்மீக எண்ணம் "

                                               எண்டு சண்டை பிடிச்சா, நான் அசரவே இல்லை. ஆனாலும் நாவலர் மணிமண்டபம்ல என்னோட பயனை பாடிய தர் .... னியை , மறுபடி சந்திக்க , எனக்கு பழையபடி உலகப் பற்று எல்லாம் தாறுமாறா வர , ஆன்மீக எண்ணதை விட்டுட்டு ஓடி வீட்டை வந்திட்டேன் .


                                           இப்ப நினைக்கும்போது கவலையா இருக்கு , இல்லாடி இப்ப நான் நித்தியானந்தா ரேஞ்சுக்கு பெரிய மகான் ஆகி இருப்பேன், " தாரமும் குருவும் தலை விதிப்படியே " , எண்டு சும்மாவா சொனார்கள் ,,,அதுதான் நடக்கலையே....

                                    ஆனாலும் எனக்கு அப்பவே மனஅழுத்தம் எண்ட டீபிரசன் இருந்து இருக்கலாம் எண்டு இப்ப நினைகேறேன் ,,எப்படியோ அது பெரிய கதை,,,ஆனால் அதில நிறைய குழப்பம் வந்தது அதைப் பிறகு சொல்லுறேன்....

                                             


நல்லூர் கோவிலுக்கு அருகில் பிறந்து ,வளர்ந்ததால் , சங்கீதமும் ஏதோ ஒரு விதத்தில கூடவே சேர்ந்து வளர்ந்தது . என்னோட அப்பா " சைவசமய ஞாணப்பழம் " அதால தேவார திருமுறைகளை பண்ணிசையில் படிக்கவேண்டும் எண்டு அதைப் படிக்க  ஒரு "சங்கீத பூசனம் "  ஐயாவிடமும் , ஒரு பண்ணிசைத் திலகம்  மாஸ்டர்டமும் ஏற்பாடு செய்திருநதார் .


                                 அதால சில வருடங்கள் படித்த சங்கீதம் கொஞ்சமும் என்னோட கூடவெ சங்கீதம் படித்த பெண்களின் முகம்கள் அதிகமாகவும் நினைவு இருக்கு,




                             
 நல்லூர் கோவிலுக்கு அருகில் இருந்த நாவலர் மணி மண்டபத்தில் ஒவ்வொரு ஞயிற்றுக் கிழமையும் பண்ணிசை வகுப்பு நடக்கும் . அதை பண்டிதர் கார்த்திகேசு அவர்கள் நடத்துவார்கள். பண்ணிசை என்றால் தேவார திருமுறைகளை தமிழிசைப்  பண்ணில் பாடுவது . அதில நான் படித்தத பண்ணில்  மாயாமாளவகௌளை, இந்தோளம் , இந்த ரெண்டின் ஆரோகணம் அவரோகணம் இரண்டும் தான் இப்பவும் நினைவு இருக்கு .


                             அதைச் சொல்லித் தந்த பண்டிதர் கார்த்திகேசு வேறு பல பண்கள் சொல்லி தந்தார் ,ஆனால் நினைவில் இல்லை .

                                   


                                                  மற்றபடி எனக்கு கர்நாடக சங்கீதம் முழுமையா தெரியாது. ஒரு சில ராகமும் அதுவும் , கல்யாணி,ஆரபி ,சிவரஞ்சனி ,சண்முகப் பிரியா, சாருமதி ,நீலாம்பரி போன்ற  அழகான பெண்களின் பெயரில் உள்ள  ராகங்கள் மட்டும் நினைவிருக்கு, அதுகள் அழகான பெண்களின் பெயரில் இருந்தபடியால் மட்டும் இன்னும் நினைவுருக்கு மறக்கவே முடியவில்லை!!!




                                     கோவிலை சுற்றி, நல்லை ஆதினத்தில், தெற்கு வீதியில்,கம்பன் கழகத்தில், மனோன்மணி அம்மன்கோவிலில் நிறைய சங்கீதக்கச்சேரி எப்பவுமே நடக்கும்! அண்ணாமலை இசை தமிழ் மன்றம் ஒவ்வொரு வருடமும் இசைவிழா நல்லை ஆதினத்தில நடத்துவார்கள்,


                                              அதில "சங்கீத பூசனம் " பொன் சுந்தரலிங்கம், "சங்கீத பூசனம் " திலகநாயகம் போல், பாடினால் அரங்கு நிரம்பி வழிந்து வெளியே ரோட்டை வழிமறித்துக்கொண்டு நிண்டு கேட்பார்கள் ,அவளவு பேமஸ் அவர்கள் இருவரும்.

                           


நல்லூர் கோவிலின் வடக்கு வீதியில் , நல்லைக் கந்தனின் அலங்கார அட்டகாச,பிரபலங்களில் இருந்து விலத்தி , "  நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால் நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ ...." என்று அமைதி நாடும் சாதாரண மனிதர்களின், சாமான்ய இசை அறிவின் விளிம்பில் அடக்கமாக ,அமைதியாக ,ஆர்ப்பாடம் போடாமல் இருந்த  மனோன்மணி அம்மன்கோவிலில்தான் அழகான இளம் பெண்கள் ஒவ்வொரு ப்வுர்ணமி தினத்திலும் பாடுவார்கள்.


                                  வெளியே மணலில் படுத்து கிடந்து கேட்கலாம் !


                       இளம் பெங்கள் பாடும் சங்கீதம் அவர்கள் போலவே இளமையா இருக்கும். பட்டுச்சீலை, மல்லிகைப்பூ மாலை, காதில லோலாக்கு , நெற்றியில் சாந்துப்பொட்டு ,என்று அவர்களே அம்மன் சிலைபோல , "நிலவின் ஒளியில் தெரிவது தேவதையா " என்பதுபோல சம்மானம் கட்டி இருந்து ,தேன் வழியப்பாட கோவிலை சுற்றியே சந்தன மல்லிகை வாசம் வரும்!.

                               
                                                        பெரிய கிழட்டு  "சங்கீத பூசனம் " வித்துவான்கள் காட்டும் "ஆலாபனை வித்தை" எல்லாம் காட்டா மல் இயலப்பாக   அவர்கள் இளமை குரலில் அந்த தெலுங்கு மொழிக் கீர்த்தனைகளை பாடுவது நிறைய " பீலிங்க் " கொடுக்கும் ,


                                           "எந்தரோ பா மகானுபாவ " தியாகராஜா கீர்த்தனை தொடங்க முளந்தண்டு குளிரும்,


                                         "நகு மோ மு  கனலே னே   நாசாலி  தெளிசே "  கீர்த்தனை ஆரம்பிக்க நாக்கில தண்ணி வத்திப்போகும் ,


                                      "ஜகதானந் தா தரா " பஞ்ச கீர்த்தனை தொடங்க வயித்துக்குள்ள பட்டம் பூச்சி பறக்கும்,


                                   ஆரபி ராகத்தில " சாடிஞ்சனே " தொடங்கி ,அதன் சரணத்தில "சமயாகி ரிக்கி தகு மாடலாகு" எண்டு கொஞ்சம் வேகமான தாளத்தில பாய நாடி ,  நரம்பெல்லாம் அதிரும்.

                                             


தியாகப்பிரம்மம் தியாகராஜா சுவாமிகளின் " பஞ்ச இரத்தின  கீர்த்தனைகளையே" அதிகம் ஆலாபனை, அலாரிப்பு , தனியாவர்த்தனம் எண்டு வில்லங்கமாப்  போட்டு அதிரவைகாமல், அழகான அந்த இளம் பிள்ளைகள் பஞ்சுபோலப் பாடுவார்கள்!


                                               என் நண்பன் கிருபாவையும் இழுத்துக்கொண்டு போய் தான் மணலில் படுத்துக் கிடந்தது அந்த சங்கீதத்தைக் கேட்டு இருக்கிறேன். அவனுக்கு சங்கீதம் தெரியாது ஆனால் நிலவின் ஒளியில் ரம்மியமான இரவை நன்றாகவே ரசிக்கத் தெரியும் . அப்படி ஒரு நண்பன் கிடைப்பது அரிதான ஒரு நிகழ்வு .

                           
                                              கடைசியில் எப்பவும் ஆனந்த பைரவி தாய் ராகத்தில்,  அதன் மூன்று ஜென்மராகங்கள் அசத்தும் " கற்பக வல்லி நின் பொற் பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா ..." பாடல் எப்பவுமே மனோன்மணி அம்மனின் தனிப்பட்ட விருப்பம் போல பாடி முடியும்.


                                       அந்த நிகழ்சி  முடிய பவுர்ணமி  முழு நிலவு நடு உச்சிக்கு மேல அடிச்சுப் பிடிச்சுப்  பிரகாசமாக வழிய, அதன் பால் ஒளி கோவிலிக்கு அருகில் இருந்த நெல்லிமரம் எங்கும் சிதறி , கோவில் சுவரில நடனமாட, கடைசி இரவுக் குருவியும் சோம்பலாகப் பறந்து செல்லும்


                                       அந்தக் கச்சேரி முடிய,  மனோன்மணி  அம்மனுக்கு ஆலாத்திகாட்டி. முடிவில, சுவையான  அவல், கடலை,சுண்டல்  தருவார்கள் ,  சங்கீதம் விளங்குதோ இல்லையோ  அவல், கடலை,சுண்டல்லுக்காகவே கச்சேரி முடியும் வரை  இருக்கலாம்!


                                          இதெல்லாம் நடக்கும்போது  அகோரமான  செல் அடியும் ஹெலி அடியும்  பொம்பர் அடியும்  சில நேரம்  நடக்கும். வாழ்க்கை ஒரு  ஓரமாக ஒதிங்கித்தான்  அப்போதெல்லாம் போய்க்கொண்டிருந்தது  ஆனால் அதில் ஒரு நளினம் இருந்தது


                             
 இப்ப  முக்கியமான  விசியதுக்குள்ளே வாறன்,  சாத்திரிய சங்கீதத்தின் பலவீனம் அதை முழுமயாக படித்தவர்கள்தான் அதன் சுவையை பிரிச்சு மேய்ந்து முழுமையா அனுபவிக்கலாம் என்கிறார்கள். என்னைப் போன்ற சராசரி  ரசிகர்களுக்கு  அதன் முழு வீச்சு விளங்காது ,அது ஒரு பலவீனம் , சரி, அப்ப அதன் பலம் என்ன என்று கேட்பிங்க , சொல்லுறன்....

               
                                                சுவிடனில் இருந்த போது என்னோட  ஒரு நல்ல ப்ரென்ட் ஸ்வீடிஷ் வெள்ளை இனத்தவா ,பிறந்து வளர்ந்து முதல் ஸ்வீடனை தவிர வேறு உலகம் தெரியாத அப்பாவி , கிளாஸிக்கல் வெஸ்டேர்ன் முயூசிக் முறைப்படி படித்தவா. Pichoda. Beethoven, Mozart, Ennio Morricone என்ற மேலைத்தேய இசை மேதைகளின் சிம்பொனி ஒர்கேஸ்ரா எல்லாம் விரல் நுனியில் பியானோவில் விளையாடும் மேதாவி .

                                 ஒருநாள் ஒரு பரிசோதனை போல அவளுக்கு  "அலை பாயுதே கண்ணா,........." என்ற Dr. மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா உருகி உருகிப் பாடிய பக்திப் பாடலை கிடாரில் வாசித்து காட்டி,  


                      "இதை கேட்கும் போது உன்னுள்ளே எப்படியான பீலிங்க்  வருகிறது? " 

                     
                                                          எண்டு கேட்டேன், நான் கிடாரில வைச்சு நோன்டியத்தை  , என்னோட நட்பாக இருக்கும்  ஒரே ஒரு குற்றத்துக்காக பொறுமையாகக் கேட்டுப்  போட்டு, அந்தப் பாடலின் அடி நாதமாக இருந்த ராகம் , அதன் உணர்ச்சிப் பிரவாகம்  , சாஸ்திரிய  இசை வடிவம்,  அவளை மயக்க கொஞ்ச நேரம் பொறுமையாக் கேட்டாள்..
 

                                  " இதை கேட்கும் போது உன்னுள்ளே எப்படியான பீலிங்க் வருகிறது " 

                           
                                                 எண்டு மறுபடியும் கெஞ்சிக் கேட்டேன்  , அவள்  உண்மையாகவே சீரியஸ் ஆக என்னைப் பார்த்து நம்பமுடியாத மாதிரி சொன்னது,  

                     
                                                  "  music is a kind of spritul dimension ,,i red  that many years back,,but feel that now,,,உருகி உருகி  அடி மனதில் அமைதியான, எளிமையான அர்த்தமுள்ள , தெய்வீகமான , கடவுளுக்கு நெருக்கமான ஒரு  பக்தி உணர்வு வருகிறது, அதை வார்த்தைகளில் மொழி பெயர்த்து  சொல்ல முடியவில்லை "  

                   
                                        என்றாள்.


                         ..ஒரு ஐரோபியப் பெண் "அலை பாயுதே கண்ணா,........." பாடலை சிலை போலவே நின்று ரசித்துக் கேட்டு அதைக்   " கடவுளுக்கு நெருக்கமான ஒரு  பக்தி உணர்வு " என்று சொன்னாள் பாருங்க , அதுதான் கீளைத்தேய கர்நாடக சாத்திரிய சங்கீதத்தின் பலம்!













Wednesday, 14 September 2016

அனாமிக்கா,,இறுதிக்கு முந்திய கவிதைகள்.

...............................................................  061
அனாமிக்கா
அவள்பாட்டுக்கு
ஒரு கல்யாணமேடை
ஒரு சுகமான பொழுதென்று
அரிதாகக் கிடைப்பதில் 
சந்தர்பங்களை வரமாக்கி
இருப்பைத்தேடிக்கொள்கிறாள்
எனக்குத்தான்
நேற்று இன்று நாளை
கண் கெட்டுப்போய்
இடத்தையும் காலத்தையும்
தணியாத ஆசைகளாக்கி
தேவையில்லாத வேகத்தில்
நீட்டிவைக்குது

கற்பனைகளின்
தொடர்ச்சி முடியுதேயில்லை
இங்கே காண்பதெல்லாம்
இன்னொரு உலகம்
நெஞ்சமெல்லாம் நினைவிருந்தும்
எதையும் எதனோடும்
பொருத்தவே முடியவில்லை

ஒரேயொரு
நிகழ்தகவில் அவளுக்கு
தேர்வுகள் முக்கியமில்லை
நிகழ்காலமே எனக்கு
நிமிடங்களைக் கொல்லும்
அநாவசியமான சுமை
உன்
கடப்பு அனுபவங்களே
நடப்பு நிலவரத்தில்
இடைஞ்சல்கள் என்பாள் அனாமிக்கா
இதுக்குமேலே விளக்கம் கேட்டால்
மவுனமாக இருப்பாள்
நான் என்ன
கவுதம போதிசத்துவனா
நிசப்தத்தைப் பிரபஞ்சஅளவில்
மொழிபெயர்க்க ?
..............................................................062
வாழ்தலின் மீது
அழுத்தமாகவே நெரிக்கும்
விலத்திநகர முடியாத
அபத்தங்களைக் குறிவைத்து விவாதிக்கிற
அனாமிக்காவின் 
எப்போதுமான தெரிவுகள்
மென்நீலநிற ஆடைகளே


நிறங்களின்

விருப்பத்தடங்களை
பின்தொடர்ந்து போகும்போது
அழிந்து போய்விடுகிறது
ஆதாரமான செய்திகள் என்பவள்
இன்றுவரையில்
நீலநிறத் தேர்ந்தெடுப்புக்கான
உறவுச்சமன்பாட்டை
நிறுவிப் பதிவுசெய்ததில்லை

அலையிழந்த ஆழக்கடல்
லீலைசெய்த மாயக்கண்ணன்
பாற்கடலின் விஷம்
மேகமில்லாத வானம்
தோகைமயிலின் கழுத்து
துருவப்பெண்னின் கண்கள்
சாமந்திப் பூக்கள்
பிசாசின் நீண்ட நாக்கு
எல்லாமே எப்போதும் நீலநிறம்தானே

பரவசங்கள்
பிணைந்திருக்கின்றதான
இளமைத் திருவிழாக்களில்
அடியும் நுனியும் தேடிக்கொண்டு
அந்த நிறத்தில்
ஏதாவது இருப்புகளை
மேற்கோள்காட்டிவிடலாமென
நினைக்கிறாளா ?
அதுவும் கணிக்கமுடியவில்லை
என்
புரிதல்களின்
போதாமைகள் வெளிப்படையாகி
திமிர் அடங்கமறுத்து
வயதுக்குவந்த பாலினச்சுரப்பிகளுக்கு
வடிகாலாகிய வயதின்
நீலப்படங்கள்
நினைவுக்குள் தத்தளிக்க
காமமும் நீலநிறமா? என்று கேட்டேன்
அனாமிக்கா
அன்று ஒருநாள்தான்
நாணிக்குறுகி வெட்கப்பட்டாள் !
...........................................................063

விரத நாளை 
நினைக்க மறந்து 
ஆட்டுக்கால் குழம்புக்கும் 
வெள்ளை ஆனப் பாயாவுக்கும் 
என்ன வித்தியாசமென்று 
அனாமிக்காவிடம்
வாய்தவறிக் கேட்டேன்
.
அவள் பதில் முடியமுன்
மவுலானா ஹோட்டல்
நினைவில் வந்து
நாக்கு வேற
முன்னேப்பதுமில்லாதவாறு
நனைந்து தொங்கியது
.
ஏதோவொன்று
மீண்டெழுகிறது என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்து
இதுவரையில்
நிறுத்தப்பட்ட காலத்தை
உயிர்ப்பித்தத்துக்கு
அன்புள்ள நன்றி.என்றேன்
.
அனாமிக்கா
கோபமாகவே இருந்த போதும்
எலும்புகளைக்
கையளைந்த விரல்கள்
ஒவ்வொன்றின் துவக்கத்திலும்
முகமறியா வாசனைக்கு
அழைப்பு வந்தபடியே இருந்தது.
.
ஏழைகளின் பசியைப்
படித்துக்கொள்ள
இன்னொருவராகி
இச்சைகளை
அடக்கி வைக்கும்
சோதனைக்களமே விரதங்களென்றாள்
.
நானோ
பரிசீலனை செய்யவேண்டிய
நோன்பின் மகத்துவத்தை
அனாமிக்காவின்
விளக்கத்துப் பிறகுதான்
வேதாந்தியின் புரிதலென்பது
எனக்குப்
போதவே போதாதென்று
முடிவாக்கிக்கொண்டேன் .

.................................................................064

உலகத்தின் 
அழகெல்லாம் 
அவள் நெஞ்சு விழிம்பில் 
தஞ்சமடைந்த மாதிரி 
அனாமிக்கா 
ஸ்பானிஷ் டுனிக்காவை
வேன்றுமென்றே
இறக்கி விட்டுருந்தாள்

உடுப்புகளில்
கலையம்சரசனை இருக்கென்று
தெரிந்து வைத்திருக்கிறேன்
ஆனாலுமதில்
ஒருவித பணிவு, பாவம்
உன்னைப்போலவே
எவராலும் கொடுக்கவே முடியாதென்றேன்

பின் அந்தி மாலை
முதலிரவு போலவே
பாலும் பழமும்
பாதாம் பருப்புகளோடு
முக்காடு போட்டுக்கொண்டு
நெருங்கிக்கொண்டிருந்தது

பார்த்துத் தேடியலங்கரித்தேன்...
என்னைப் போல்
அதுவுமுன் பார்வை தொடவில்லை
என் மூச்சுப் போல்
உனக்கு ருசிக்கவில்லை.
சொல்லத் துணிவில்லாமல்
அதை உணரும் பிரியம்
உன் உள்ளத்திலுமில்லை என்றாள்

உன் நேசமான பார்வையிலே
வாழ்கிறேன்
கருணை உள்ள விழிகளை
ஓசை இல்லாமல்க்
காதலிக்கிறேன்
நீ வழங்கும் சந்தோஷம்
முடிவில்லா  இன்பம்.
இதுவே எனக்குப் போதுமடி என்றேன் ..

இரவெல்லாம்
இருட்டு உறங்கவில்லை
ஸ்பரிசங்கள் நிறையவில்லை
தலையணையில்
எதையோ இழந்த காலம்
சில்வண்டுகளின் ரீங்காரத்தில்
எதையுமே
நினைக்கவிடவில்லை
என்ற போது
போடி விசரி போய்ப் படுடி என்றேன்.

.......................................................................065

ஒடிக்களைத்து 
மூச்ச்சு வாங்கிய முகத்தில் 
அனாமிக்கா
முத்துக்கள் விழ விழ 
குளித்துப் போயிருந்தாள் 

உல்லாசமாக
உருண்டு பிரள
வில் போல
எம்பிக் குதிக்கும்
பஞ்சு அடைத்த படுக்கை
இடுப்பின் பலத்தை
சோம்போறியாக்குதென்கிறேன்

ஓய்வான
சோம்பல் முறித்து
குஷியாக
முதுகை நிமிர்த்தும்
சாய்மனைக் கதிரை
முழங்காலின் முயற்சிகளை
ரசிக்கவில்லையென்றும் சொன்னேன்

கும்மாளம் போட்டு
நாரியை
நிமிர்த்தும்
அகன்ற குஷன் சோபா
பாதங்களுக்குப்
பவுசு தடவி விட்டு
பந்தா போடுது என்றபோது
அனாமிக்கா அமைதி இழந்தாள்

எல்லாத்தையும் நீயே
கேவலப்படுத்திவிடுகின்றாய்
வாவென்றழைக்கும்
காற்றுவெளியில்
எம்பிக் குதித்து
கடைசி தப்பி ஒடுதலுக்காவது
உன் கால்களைப்
பலப்படுத்தி வை என்றாள் ..

...............................................................066

சருகுகள் சருகுகளுடன்
சாகாவரம் பற்றி விவாதிக்கொண்டிருந்த
முன் கோடை நாளில்
சுவாரசியங்கள்
வற்றிப்போய்க்கொண்டிருக்கு 
இனியென்னவெல்லாம்
வருமென்பதில்
வசந்தகாலம்
கடைசியாகவே இருக்கென்றேன்

அனாமிக்கா
மூக்கைக் காற்றோடு உரசி
நடை வழியில்
குழைந்தைகள்
தவறவிட்டுப் போயிருந்த
லவண்டர் வாசங்களை
உறிஞ்சிக்கொண்டிருந்தாள்

நேசத்தை
விபரித்துவிட
வேஷங்கள் தேவையில்லை
நிரந்தரமாகவே
விட்டுப் போவதென்பது
நீண்ட காலம்
அர்த்தப்படுத்தும் எதையும்
இட்டு நிரப்பவில்லை என்றால்
இப்பவே சொல்லாமல்
போய்விடு என்றாள்

வார்த்தைகளில்
வெடிமருந்தை
சரியான நேரத்தில்
ஏற்றிவைக்கத் தெரிந்தவள் அனாமிக்கா
அதனால் தான்
விலதிப் போவதிலும்
நெஞ்சாங் கூட்டுக்குள்
நெருக்கத்தை
நெருக்கடியாக உண்டுபண்ண
அவளால் மட்டும் முடிகிறது

...........................................................................067

நீண்டுகொண்டே
நொடிகளை விழுங்கிய
இரவு நேரம்
அனாமிக்காவுக்கு
இருப்புப் பற்றிய பயமின்றி 
மிகத் தெளிவான விடைகள்
முடிச்சு அவிழ்க்கும்

உயிர்
வெள்ளையா கறுப்பா
சொர்கத்துக்கும் நரகத்துக்கும்
இடை நடுவில்
குறுக்கு வழிகள் இருக்கா
என்பதை அறிய
இறந்து பிறக்க நினைக்கிறேன் என்றேன்

உறைபனிப் பிஞ்சுகள்
வீதியில் நிறைந்து வழிய
ஆத்மாவின்
அடுத்தடுத்த பரிமாணம்
என்பதையவள்
உபநிதஷங்களின் உதவியோடு
விளக்கி இருக்கிறாள்

விபரிப்புக்கள்
எல்லை அழிந்து போகும்
எதுவுமே வெறுமையான
இன்னொரு அருவ நிலையில்
மனம் லயித்துவிடும்
மவுனத்தின் பின்னர்

யாரெல்லாம்
நேசிப்பில் உண்மையாக
நின்றார்கள் என்பதறிய
ஒரேயொருமுறை
இறந்து பார்க்க வேண்டுமென்றாள்
அனாமிக்கா

.................................................................................068


நகரத்தின்
கலகலப்பான இரைச்சல்
எல்லாவிதமான வாசனைகளோடும்
கலவரமாகும் இடங்கள்தான்
அனாமிக்காவுக்கு 
பருவகாலங்களைப் புறம்தள்ளி
எப்பவும் விருப்பம்

நானோ
அதீதமாக வரவேற்புக்கள்
நட்பு நாய்வாலை ஆட்டி
வாசல்படியில் இருந்தாலும்
அனுபவத்தில்
அதிகம் ஓட்டவிரும்பாத
அந்தரங்கமான மனிதன்

காற்றில் பறக்கும்
குப்பைகளையே நின்று ரசிப்பாள்
மண்புழுவின் பாதைகளையே
குனிந்து கவனித்துப் பின்தொடர்வாள்
புரியாத மொழிபேசும் மனிதர்களின்
இதயமிறுகிய வாசல்களில்
காதலைத்தேடுவாள்
வேற்றுநிறத் தோற்றங்களில்
வேதனைகள் இருக்காவென்று
விசாரிப்பாள்

அனாமிக்கா
எதையும் சமாளிப்பாள்
அவள் இதயம் மிகப்பெரிது
அவள் எண்ணங்கள்
வெள்ளைநிறத்தைவிடத் தூய்மையானவை
அவளின் முதல் அணுகுமுறை
அன்பின் அடைக்கலம்
கருணைதான் அவள்
கடைசிக் காவல் தெய்வம்
மோசமானவொரு நகரத்தின்
எச்சில்வடியும் காழ்ப்புணர்ச்சிகள்
எனக்கு
நன்றாகவே தெரியும்
அனாமிக்கா அநியாத்துக்கு
இளமைக்கு உரை எழுதும்
அழகுப் பாயிரம்
அதைவிட வெகுளியான அப்பாவி
அதையும்விட
இரைதேட விஷம்கக்கும்
நல்ல பாம்பையும் நம்புவாள்
இதெல்லாம்
உங்களுக்கு அன்றாடமாகவிருக்கலாம்
எனக்கு
அதுதான் பயமாயிருக்கிறது !
................................................................069
வருடங்களின்முன்னெழுதிய
மரணத்தின் தொடக்கம் என்ற
அனாமிக்காவின்
இறுதிக் கவிதையை
நீங்கள் இன்னும் வாசிக்கவில்லை
அதற்காகவாவது
என்னைவிட சந்தோஷப்படுங்கள்
எனக்கும்தான்
குழப்பமாகவே இருக்கு
திடகாத்திரமாக இருக்கும்போது
எப்படித்தான்
இடம்மாறியும் அவளால் அப்படி
நிலையிழந்து தடுமாறாமல்
இறப்பை ஆதங்கமாக்கி
உயிரைக்கொடுத்து
எழுதமுடிந்தது என்று
கவனித்துக்கொள்ளுங்க
அனாமிக்கா
இப்பவும் என்னைவிட
நொடிப்பொழுதிலும்
கனவுகளை நனவுகளாக்கி
தெற்கு நடைப் பயணத்திலும்
உயிரோடிருக்கிறாள்
மிகமிக நேர்த்தியான
வரிசை ஒழுங்கின் முடிவில்
மயான அமைதியான
இடத்தைத்தேர்வுசெய்தவள்
குறுக்கிடும் பறவைகளின்
வசந்தகால சத்தங்களையும்
இலையுர்த்திர்கால மஞ்சள் இலைகளையும்
சில்வண்டுகளையும்
ஏதுமறியாஉறைபனியையும்
வரவேற்றே எழுதியிருக்கிறாள்
என் கல்லறையில்
வாசனைமலர்களைவைத்துவிட்டு
திரும்பிப்பார்க்காமல் போய்விடுவென்ற
கடைசிவரிகளைத்தான்
இன்றுவரை என்னால்
புரிந்துகொள்ளவேமுடியாமல்
இனி இன்னொருமுறை அதை
வாசிப்பதேயில்லை என்ற
முடிவெடுத்தேன்.
......................................................................... 070

பலநேரங்களில்
சோம்பலாகவே
ஜன்னலை அகலத்திறந்தால்
உற்சாகமாக
அஞ்சுநிமிட நடைதூரத்தில்
ஐந்நூறு வருடத்தேவாலயத்தில்
கோபுரமணி அடிக்கும்,


ரெண்டுமணிகள்
ஒன்றுக்குமேலே ஒன்றுஏறி
அருச்சனையாக வரும்போது
தேவனின் திருச்சபையில்
புண்ணியகாலம்,


இதயத்துடிப்புப்போல
அடித்துக்கொண்டு
சாவின் வாசத்தை பூசிக்கொண்டு
மெல்லனவே ஒடுங்கும் போது
மரணத்திருப்பலி,


படுக்கைவிரிப்புக்கள்
முதலிரவில்
அசந்து கசங்குவதுபோல
மஞ்சள்குங்கும மஞ்சத்தில்
இதமும் பதமுமாகக் கலக்க
கல்யாணவைபோகம்,


ஞாயிற்றுக்கிழமைகளில்
உயிர்வாழ்வதுக்கு துடிப்புப்போல
இயல்பாக அடிக்கும்
நின்று ரசிக்கமுடியாமல்
துண்டைக்காணோம்
துணியைக்காணோமென்று
வேலைக்கு ரெயில்பிடிக்க
ஓடிக்கொண்டிருப்பேன்,


தேவாலய பின் வீதியில்
அனாமிக்கா
ஒரு நாள் வந்து
ஒரு பொழுதில் நின்று
கைகளில் இறுக்கிப்பிடித்து
நெஞ்சோடு நெருக்கி வைத்து
முதுகை உருட்டிப் பிரட்டி
முகத்தை மயக்கி எடுத்து
போதைவஸ்து முத்தம்கொடுத்தாள்

அப்போதும்
அள்ளி எடுத்து அந்த மணி
மனசார வாழ்த்தி
அடித்ததின் அர்த்தம் என்ன?


Sunday, 28 August 2016

மழைநாளில் ஒஸ்லோ வீதிமனிதர்கள்




 " மழை நாளில் ஒஸ்லோ வீதி மனிதர்கள் " என்ற தலைப்பில் பல படங்கள் மழையோடு மழையாக மனம் போல் நனைந்து எடுத்தேன். அதில் எடுத்த ஒவ்வொரு நிழல்படத்தையும் ஒவ்வொரு படமாகப் போட நினைத்து உள்ளேன். அவை கவிதைபோல எழுதுவதுக்கான உற்சாகத்தை தருவதால் அதோடு கவிதைபோல ஒன்றையும் தள்ளி விடப்போகிறேன். 

ஒரு மழை நாளில் மொபைல் போனில் படம் எடுப்பதில் உள்ள முதல் நடைமுறைச் சிக்கல் அதன் தொடு திரையில் தண்ணி விழுந்துபட்டவுடன் தொடுதிரையை உருட்ட முடியவில்லை. அங்கால இங்கால அசையவே அடம்பிடிக்குது. " இத விட்டாலும் வேற கதி இல்ல, அப்பால போனாலும் நாதி இல்ல " எண்டது போல அதைத் துடைத்து மறுபடி இயக்கவேண்டி இருந்தது.

அதுக்கு போஸ் கொடுத்தவர்களிடம் பேசி முன்அனுமதி பெற்று அவைகளை எடுத்தேன், உண்மையில் படம் எடுப்பதை விடசுவாரசியமாக அவர்கள் எல்லாருமே என்னோட பத்து நிமிடம் பேசிவிட்டுத்தான் சென்றார்கள். ஜோசித்துப் பார்த்தா இந்தப் படங்களுக்கு " பேச யாருமில்லா ஒஸ்லோ வீதி மனிதர்கள் " என்று பெயரை இந்தப் படத்தொகுப்புக்கு வைச்சு இருக்காலம் போல இருக்கு....

பொதுவா இப்படி " ப்ரோஜெக்ட் " எல்லாம் " ப்ரோபோசனால் ஸ்டில் போட்டோகிராபர்கள் " தான் செய்வார்கள். நான் அந்த வகை இல்லை, என்னிடம் சும்மா பிலிம் காட்டவும் ஒரு காமராவே இல்லை,அதுகளை இயக்கவும் தெரியாது . அது எனக்கு தேவையும் இல்லை. அப்புறம் " எள்ளுதான் எண்ணெய்க்கு அழுவுது, எலி புழுக்கை ஏன் அழுவுது? " என்று நீங்க நினைத்தா, அதில கொஞ்சம் உண்மை இருக்கு..ஆனால் எனக்கு நிறையவே மனநிறைவு கிடைத்தது.

அழகான பல வர்ணக் குடைகள் , அதில் நடமாடும் இளம் பெண்கள், சாட்டோடு சாட்டா இறுக்கிப் பிடிக்கும் காதலர்கள். குடையிருந்தும் விரித்துப் பிடிக்க மறந்த மனிதர்கள், பிளாஸ்டிக் மழைக்கவசங்களில் நடனமாடும் மனிதர்கள், எதுவுமே இல்லாமல் வானமே கூரை பூமியே வீடு என நினைத்துக் குளிக்கும் மனிதர்கள்...ஏகப்பட்ட சாத்தியங்கள்.

அடிச்சு ஊத்தும் மழையை வீட்டு ஜன்னலுக்கால " நோகாமல் நொங்கு தின்னுற " மாதிரி பார்த்து ரசிப்பதுக்கும், மழைக்குள் இறங்கி அதோடு பேசிக் கொண்டு அதைப் படம் பிடிப்பதும் வேறு வேறு வித்தியாசமான அனுபவங்கள். காலநிலைகள் கடந்து செல்லும் காலத்தின் நிலைப்படிகள். அதில் தாண்டி பாதங்களை வெளியே வைக்க சுவாரசியத்தைத் வேற எதுவும் தேவையில்லை.

மழை நாளில் ஒரு நகரம் படு உற்சாகமாகத்தான் இயங்குது. அப்படி அதன் ஆத்மாவை பிரியாமல் ரசிக்க மறந்த நாட்கள் சபிக்கப்பட்டவை. அதை நினைக்க முன்னம் எல்லாம் " என்ன சீவியமடா இது " என்ற ஒரு " பன்ச் டயலக்கை " எப்பவுமே போகிற போக்கில் கடைசியில் வேண்டா வெறுப்பாக போட்டு விட்டுப் போவது, ,உண்மையில் அதை இன்றைக்கு மனம் விரும்பியே பொசிடிவ் ஆகப் போடவேண்டியிருக்கு...


                                    அருமையான  சீவியம்  இது.!



மழை 
மும்மரமாக
வெள்ளிகளை
இழுத்து நீட்டி 
இறக்கி விட்டு 
ஓய்வெடுத்து 
தார் போட்ட 
வீதியெல்லாம் 
தேரோடி நீராடி 
விளையாடிக்கொண்டிருந்த 
நேற்றைய மாலை


தூறல் 
விதைத்துக்கொண்டிருந்த
சாரல் துளிகளோடு 
வெய்யில் 
இடையே குறுக்கிட்டு 
நிமிடத்துக்கு ஒரு 
வெளிச்சம் 

பிரதிபலிக்க 
ஒரே படத்திலையே 
கற்றுக்கொண்ட 
மொத்த வித்தையையும்
தானியங்கித் தன்பாட்டில் 
செருகி விட்டது
கையடக்கி...!

                                              


முற்பகலில்
சாரல் விசிறியபடி
கால்களில்
தப்புத் தண்ணி
தெளித்துக்கொண்டு 
நெருக்கமாக
வரவிரும்பும்
மழைப் பாதைகள்...

அந்தி மாலை
ஈரமாகத்
தெரிந்தாலும்
பச்சை மரங்களைப்
பொறுத்தவரை
அதன்
குளிர்மை
பக்கத்து வீட்டு
இரகசியக் காதலிகள்....

இனிப்
பின்னிரவெல்லாம்
கிளைகளிளிருந்து
சொட்டுச்சொட்டாக விழும்
பருவத் துளிகளை
புல் வெளிகள்
மன்மதலீலை செய்து
சுற்றி வளைத்து
தாராளமாகப்
பயன்படுத்திக்கொள்ளும்! 

.

அக்கறையோடு 

மழை
அதைவிடக் கரிசனையோடு 
நனையாமல் குடைபிடி 
மனிதர்கள். 
யாரோ ஒரு கர்ணன்   
விளம்பர மொடல் 
நனையக் கூடாது என்ற 
உயர்ந்த சிந்தனை
தன்னோட குடையை 
அவளுக்கு கொடுதுப்போட்டு 
நனைந்துகொண்டே 
வீடு போயிருக்கிறான். 
ஆண்களுக்கு இரக்கம் தான்!
 அட நம்புங்கப்பா 
" முல்லைக்கு குடை கொடுத்த பாரி வள்ளல்கள் " 
இந்த  
நகரத்தில் நிறையப் பேர்.

                                   
 


மனம்போல 
நனைய விரும்புவன் 
தாழ்வாரத்தில் 
ஒதுங்கும் போது
விசிறுகிறது

அவன்
விருப்பமாக
வீதியெங்கும்
இறங்கி
நடக்கும்போது
அள்ளிக்கொட்டுது

ஒரு
தனி மனிதனோடு
தன்னுடைய
சந்தோசங்களைப்
பகிர்ந்துகொள்ள
விரும்பியே

அந்தரங்கமாக
ஒதுங்காமல்
அடக்கத்தை
அவிட்டு எறிஞ்சுபோட்டு
ஆட்டம் போடுது
மழை !

                                   



மதித்து
ஒதுங்கியே 
நடைபாதைக்கு
வழி விட்ட
மிதிபடாத
சருகுகளின்
உணர்வுகளில்
மனித
அவமதிப்புக்கள்
இல்லை.!

.

அரைகுறைகள்தான்
ஆடுவார்கள் என்று 
கேள்விப்பட்டிருப்பீர்கள்
புது வெய்யிலோடு
பூபாளம் பாடி
அழகாய்
விடியாத நாளுக்கு
வானமே கூரை
வீதியே வீடு
என்று
நினைப்பவன்
யார்
முகத்தில்
இன்று விழித்தேன்
என்று யோசிப்பதில்லை!
                                      
.

அத்தனை
நவீனத்துவம்
நிறைந்த நகரத்தில்
அபத்தமான
பிரதிபலிப்புகளும்
இடறுவது
விநோதமாகத் தோன்ற
சவால்களின்
உச்சகட்டப்
பிரதியாக
மழை கழுவிவிட்ட
தார் வீதிகள்
இப்படியான
மனிதர்களை
அடையாளப்படுத்துவது
எப்பவாவது
ஒரு முறையே
கிடைக்கிறது ! 

.


..என்
வேதனையை
வெளியே இழுத்துவிடு
என்று
வாழ்விடமில்லாதவன்
சட்டப்படி
கேட்கிறான்

போதைவஸ்தில்
விழுந்து அழிந்துபோன
முகத்தைக்
காட்ட விரும்பாத
அவனின்
புதிய காதலி
இயலாமையைத்
திரும்பிக்கொள்கிறாள்

சமூகத் தோல்வியின்
பெரிய
அவலத்தை
சின்ன சட்டத்துக்குள்
அகப்படுத்த
நான்
அவசரப்படுகிறேன்

நிலைமையைப்
புரிந்துகொண்ட
மழை
கொஞ்சம்
தாமதிக்குது !

.

ஈரமான
மழையைப் பற்றிய
அவனின் 
கற்பனை போலவே
கடைசியில்
இதுவும் நடந்தது

அதிகம்
உளறுகிற
அவளாகவே உருவெடுத்தவை
எழுதச் சொல்லி
கையைக் கடிக்க
நிரந்தர வேலை
வருடங்களாய் இல்லை

காதல் பற்றிய
வர்ணனைகளில்
பாதுகாப்பாக இருக்கும்
உறுதிமொழிகளை
உள் நோக்க
பதுங்கிக் கொள்ளும்
அவநம்பிக்கைகள்

அவனே
உருவாக்கிய
முடக்கி அழித்து விடும்
நேசத்திற்கு
பக்குவம் தேவையென்று
உணர்ந்துகொண்ட
மேகங்கள்
இருண்டு திரண்ட
ஒரு நாளில்

எழுதி வைத்த
வரிகளுக்கும் சொல்லாமல்
திறப்பு ஓட்டையில்
செருகி வைத்த
கடைசிக் கவிதையோடு
அவனும்
பெரிய நகரத்துக்குள்
காணாமல் போனான்.

                                            
நடு நகரப் பாதை
தேக்கி வைத்து
ரசித்துக் கொண்டிருந்த 
சின்னக் குளங்களில்
கடந்த அவனின்
பிரிக்கமுடியாத முகத்தைத்
தேடித் தேடி
ரசித்துப் பார்த்தாள்

வேகமாகச் சீறிய
வாகனம்
உடை நனைக்க
சிதறியெறிந்த முத்துக்களை
முகம் சுழிக்காமல்
வரம்போல
வேண்டிக்கொண்டாள்

அப்பப்ப
அவன் கைகளை
இறுக்கிப்பிடித்து
இசை வீணை வாசிக்கும்
நாடிகளில்
சூடேற்றி இரவுக்கு
ஒத்திகை
பார்த்துக்கொண்டாள்

முகத்தில்
துவானம் கிள்ளி முடிய
ஒளி வீசிய
ஒரு துளியை
நாக்கால் நக்கி
கன்னம் சிவந்து
சிரித்துக் கொண்டாள்

மிச்சத் தூரத்தை
அரங்கேறி விரித்த
குடையில்
விழுந்த துளிகளின்
இடைவிடாத
தாளத்தின்
பேச்சைக்கேட்டுக்கொண்டே
நடை போடுகிறாள் !

அவனோ
மழையை
விட்டுத் தொலையச் சொல்லி
திட்டிக்கொண்டு
முட்டித் தட்டும்
குடைகளைச்
சபித்துக்கொண்டு
அவளையும்
இழுத்துக்கொண்டு போகிறான்! 

.
                                         


மழையின்  மாலை நேரம். 
காதலை  நெருக்கமாக்கிவிட்ட குடை. 
நடைபாதையில் 
வெள்ளித் தெறிப்புக்கள்.
மெலிய சாரல் போடும் தூறல் 
புழுதியைக் 
கழுவி எடுக்கும் பாதை. 
நீளவே நடக்கும் 
நீண்ட நிழல்கள். 
ரகசியமான  
சதிக்குத் தயாராகும் மம்மல் இருட்டு. 
வண்ணக் கலரில் 
உயிர்ப்பைத்  தேடி எடுத்தாள் 
மஹாலட்சுமி 
கறுப்பு வெள்ளைக்கு மாற்றிவிட 
மழை 
இன்னும் அதிகமாக காட்சியை
ஈரமாக  
நனைப்பது போலிருக்கு
எனக்கு. 
உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை.!