Thursday, 17 September 2015

ஒரு நாயும், ஒரு பூனையும் ,ஒரு சமூகப் பிறழ்வும் ..

எங்கள் எல்லாரோட  வாழ்கையும்  ஒரு  நாவல். ஆனால்  எல்லாராலும் அதை ஒரு கைதேர்ந்த  எழுத்தாளர் போல எழுத முடியாது. ஆயிரம்  கதைகள்  நிறைந்த  வாழ்க்கைப்பயணம்  ஒரு  நிஜமான அனுபவத் தொகுப்பு. சிலரால் மட்டுமே  அதை  ரசனையாக  எழுதமுடிகிறது. அவர்களை எழுத்தாளர் என்று சொல்கிறார்கள். சிலநேரம் அந்த எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தைவிடவும் சுவாரசியமாக இருப்பார்கள்.

                                                 ஒஸ்லோவில் சில நாட்கள் முன் நோர்வே மொழியில் எழுதிய புத்தகக் கண்காட்சி நடக்குது எண்டு செய்திகளில் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.அதை விட சில முக்கியமான எழுத்தாளர்கள் வேறு அந்த இடத்தில வந்து இருந்து கொட்டாவி விட்டுக்கொண்டு அவர்களின் புத்தகம் வேண்டும் பாவப்பட்ட ஜீவன்களுக்கு அந்தப் புத்தகத்தின் முதல்ப் பக்கத்தில் கையெழுத்து வைத்துக் கொடுப்பார்கள் எண்டும் பீதியக் கிளப்பிக்கொண்டு செய்திகளில் அழகான இளம் பெண்கள் விபரமா " ஏன் புத்தகங்கள் வாசிக்க வேண்டும் " எண்டு விளக்கம் வேறு கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்,

                        " அழகான இளம் பெண்கள் விளக்கம் கொடுத்தால் அதில கட்டாயம் விசியம் இருக்கும் " எண்டு என்னோட குருநாதர் " தமிழ்த் தென்றல் " பாவலேறு மன்மதராஜன் சொல்லி இருக்குறார் அதால வந்தா வா போனாப் போ எண்டு " தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! " என்று சொல்லிக்கொண்டு போனேன்.  

                               வாழ்க்கையையே நினைச்சுப் பயப்பிடக் கூடாது எண்டு " நோதலும் தணிதலும் அவற்றோ ரன்னசாதலும் புதுவது அன்றே, வாழ்தல்இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் ..." என்று ஆயிரம் வருடம் முன் கணியன் பூங்குன்றனார் சொல்லி இருக்க,யாராவது புத்தகங்களுக்கோ,அல்லது அதை எழுதியவர்களுக்கோ பயப்பிடுவான்களா,சொல்லுங்க பார்ப்பம்...

                              தமிழே தடுமாறும் என்னைப் போன்ற " ஆ " வெண்டு அண்ணாந்து விடுப்பு பார்க்கும் அரை அவியல்களுக்கு நோர்க்ஸ் மொழியில் புத்தகங்களின் அறிமுகம் எல்லாம் கொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும்,  " புத்தகக் கண் காட்சி ஒஸ்லோவில்  " என்ற  தலைப்பில் ஒஸ்லோவில் வாழும் ,அழகான இளம் தமிழ்ப் பெண்கள் மளிகைக் கடையில வேண்ட வேண்டிய பொருட்களின்  விபரம் எழுதிய லிஸ்ட் ஐ உலகத் தரமான கவிதை எண்டு சொல்லி வேப்பம் குழை அடிக்கும்  தமிழ் எழுத்தாளர் அவரின் பொழுது போகாத நேரம் முதுகு தேய்க்கும் " ப்ளொக்கில்" இது தொடர்பாக எழுதியிருந்தார் .

                                     அது இன்னும் ஆர்வத்தைக் கிளப்ப ,  அங்கே போய் விடுப்புப் பார்த்த போது இந்தளவுக்கு  " தென்னாலிராமன் தென்னை மரத்தில ஏறிப்  புல்லுப் புடுங்கின " மாதிரி பாமரத்தனமாயா ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்  எழுதுவாரா  எனத் தான் நினைத்தேன்.

                         நான் அறிந்த மற்றும் உணர்ந்தவைகளை என் கோணத்தில் பகிர்ந்துகொள்வதே இந்தப் பதிவு.... 

                             நகரின் முக்கிய இடத்தில போடப்பட்ட பந்தல்களின் கீழே , தஞ்சைப் பெரிய கோவில் போல நிறையப் புத்தகங்கள் குவித்து வைத்து இருந்தார்கள். அவளவு படைப்புகள் ,கதைகள்,நாவல்கள்,உரை நடைகள்,புனை கதைகள்,கவிதைத்தொகுப்புக்கள் ,அதில வரும் சம்பாஷனைகள்,உரையாட்டல்கள்,வாக்கு வாதம்கள், எல்லாம் புத்தகங்களில் இருத்தும் அந்த இடம் மயான அமைதியாக இருந்தது. புத்தகங்கள் அப்படிதான் எவளவோ அறிவான விசியங்களை வைத்துக்கொண்டு அடக்கமாக இருக்கும் போல இருந்தது அந்த இடம் . 

                               நோர்வே பணக்கார நாடு, இங்கே புத்தகம் படிப்பவர்கள் அதிகம் இருக்குறார்கள் என்பதைப் பல வருடம் குப்பை கொட்டுவதால் அறிந்து இருக்கிறேன். அதனால உலகத் தரமான தரத்துடன், சும்மா கையை வைக்க வழுக்கிக்கொண்டு போகும் வள வள பேபரில்,அழகா பயின்டிங் பண்ணி, அதுக்கு

                                     " நட்டுவ மேளம் வாசிக்கிறவன் பொஞ்சாதி வெத்திலைப் பெட்டிக்க விழுந்த "

                                மாதிரி பரபரப்பான தலைப்பு வைத்து நிறையப் புத்தகம் ஒவ்வொரு வருடமும் பதிப்பித்து வெளியிடுகின்றார்கள் . இந்த நோர்வேயிய மொழிப் புத்தகங்களில் சொல்லும் விசியம், அல்லது சொல்லும் முறை எப்பவும் நோர்வே காலநிலை போலவே " சப் " எண்டு தாமோதரவிலாஸ் சாம்பாரு போலத்தான் அதிகம் இருக்கும். ஜோஸ்டின் கார்டரின்  " சோபிஸ் வேர்ல்ட் " போன்ற அட்டகாசமான கதை உள்ள சில நாவல்கள் எப்பவாவது சிலது உலக அளவில் நோர்வேயிட்கு வெளியே கவனிக்கப்படும். 

                                ஆனாலும் நான் போனேன், போய் சுவாரசியமான அந்தப் புத்தகங்களின் தலைப்புகளை கொஞ்சம் மேய்ந்தேன் . உண்மையில் பல புத்தகங்களின் தலைப்புக்கள் கவிதை எழுதக் கூடிய சில சாத்தியங்களை எப்பவும் போல தந்தது உண்மை. மற்றப்படி சில எழுத்தாளர்கள் கையில பேனையை வைச்சு சுழட்டிக்கொண்டு ,ஒவ்வொருத்தரும் கல்யாணராமன்கள் போல இருந்தார்கள்,

                             ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் எப்படி இருப்பார் எண்டு இதுவரை தெரியாததால் கொஞ்சம் கிட்டத்தில போய் அவர்களைப் பார்த்தேன்.  நம்பும்படியாக அவர்களும் என்னைபோலவே இருந்தார்கள். சிலர் என்னைவிடக் கேவலமா இருந்தார்கள். சிலர் பேனையை மேசையில் தட்டிக்கொண்டு அங்கே புத்தகங்களை பிரட்டிப் பிரட்டிப் பார்த்துக்கொண்டு இருந்த இளம் பெண்களின் பின் அழகையும், முன் அழகையும் இலக்கியத்தனமாகப் பார்த்துக்கொண்டு

                       " இவளை அடுத்த கதையில் காதலித்துக் கம்பி நீட்டுற மாதிரிப் போடுவமா, அல்லது அவளை அடுத்த கதையில் கதாநாயகி ஆக்கி சோரம் போக வைப்பமா "

                      எண்டு ஜோசிக்கிற மாதிரி இருந்தார்கள். 

                         ஜோ நாஸ்போ என்ற பிரபல கிரிமினல் நாவல் எழுதும் எழுத்தாளரைச் சுற்றி நிறைய அவரோட விசிறிகள் கும்பலா நிண்டுகொண்டு அவரின் அடுத்த புத்தகம் பற்றி திகில் முகத்தில தெறிக்க கேட்டுக்கொண்டு இருந்தார்கள், அந்தாள் அவளவு பேமஸ் இங்கே . அவர் கதைகளில் " சதக் சதக் " எண்டு கத்தியால கண்ட பாட்டுக்கு கண்ட இடமெல்லாம் குத்தி, " டுமில் டுமில் " எண்டு துவக்கால சுட்டுத் தள்ளி ,அவரோட நாவல்களில் உத்தரவாதமாக ரத்தம் வழிய வைக்கும் ஜோ நாஸ்போ நேரில் பார்க்க ஒரு சின்ன பூனைக்குட்டி போல இருந்தார், 

                                 குறைந்த பட்சம் ஒரு கடுவன் பூனை போலத் தன்னும் இல்லை அவரின் தோற்றம், ஆனால் அவரின் எளிமையின் பின்னே கண்கள் நிறைய மர்மங்களை மறைப்பது போல இருந்தது அவரின் ரகசியப் பொலிஸ் பார்வையில் நிறைய  முடிச்சுக்கள் அவிள்க்கப்படாத கதைகள்  கடைசி  வரிகளில்  எதிர்பாராத திருப்பங்களுடன் காத்திருப்பது போல இருந்தது  ... 

                   ஒரு வயதான எழுத்தாளர் தலையை எங்கோ எழுதத் தொடங்கின காலமே தொலைத்த மாதிரி,

                     " என்னத்தை எழுதிக் கிழிச்சு என்ன வரப்போகுது "

                                    என்பது போல சூனியதைப் பார்க்கிற மாதிரி பார்த்துக்கொண்டு சோகிரடிஸ் போல தாடி வளர்த்துக்கொண்டு இருந்தார்,ஒரு வேளை அவர் தத்துவ நாவல்,கதை எழுதுவாரோ எண்டு நினைச்சுக்கொண்டு அவரைப் பார்க்கவே மார்க்ஸ் அரேலியஸ் போலப் பாவமா இருந்தது. அதிசயமா அவர்தான் என்னோட கதைத்தார்.ஒரு வேளை அந்தாளோடு கதைச்சாலே வம்பு எண்டு பலர் கதைக்காமல் இருந்து இருக்கலாம் போலவும் இருக்கலாம்.அவர் என்னிடம் 

                      " என்ன விதமான புத்தகம் தேடுறாய் " எண்டு சிரித்துக்கொண்டு அன்பாகக் கேட்டார் ,¨

                                  நான் " புத்தகம் வாசிக்க நேரம் இல்லை ,அதால வேண்டுவதில்லை, சும்மா தலைப்புகளைப் பார்கிறேன் " என்றேன்,    

                           அவர்   " அப்படியா, ஏன்பா உன்னைபார்த்தாலே பொறுப்பு ஒன்றுமே இல்லாதவன் போல இருக்கிறாயே, ஏன் உனக்கு புத்தகம் வாசிக்க நேரம் கிடைப்பதில்லை "

                               எண்டு இன்னும் கொஞ்சம் அன்பாகக் கேட்டார் ,  அதுக்கு நான்

                        " கிடைக்கிற நேரங்களில் எங்கள் நாட்டின் சினிமா நடிகைகளின் சேலை இடுப்பில இருந்து ஏன் வழுக்கி வழுக்கி கழண்டு விழுந்தது போன்ற கிசு கிசு செய்திகள் வரும் பத்திரிகைகள் தான் அப்பவும் வாசிப்பேன் அய்யா "  

                        "  ஒ ..அதென்ன கிசுகிசு க் கதைகள் ஈரோடிக் இலக்கியம் என்று சொல்வார்கள் அதுவா  "

                               " இல்லை,,இது அதைவிடக்  கேவலம் அய்யா,,இரவு ராணிகளின் ஜில் ஜில் மசாலாக் கதைகள் அய்யா " 

                    " ஒ..அதுவா,,,அந்த மாதிரிப்  புத்தககங்கள் இங்கே இல்லையேப்பா...உன்னோடு முகத்தில  அதுகள் வாசிக்கிற  களை கொஞ்சம் தெரியுது ,,அதுகள்  புத்தகங்களே இல்லைப்பா..ஒரு  நல்ல புத்தகம் வாழ்கையின் பிரதி பிம்பம் பா ,," என்று சொன்னார் 

                       அவருக்கு நான் சொன்னது முழுவதும் விளங்கவில்லை போலவும்  ஆனாலும் அவர் இதை சொல்லியே ஆக வேண்டும் என்பது போல

                                   " சார்ல்ஸ் புயூகொவ்ஸ்கி சொன்ன மாதிரி புத்தகங்கள் ஒரு வாழ்க்கையின் வரன்முறைக்கு உட்படாத நிழலின் இருட்டு பிம்பம் , நாங்க எல்லாருமே எங்கள் வாழ்கையில் அரைவாசிதான் நாங்களா வாழுறோம், 

                             "  அப்படியா  அய்யா,,ஆச்சரியமா  இருக்கே "

                                    அல்லது     ஜீன் பால் சார்த்தர் சொன்ன மாதிரி இப்படியும் சொல்லலாம்,  யதார்த்தம் நினைவின் மீட்டல்களை மறுதலிக்கும் இயங்கியலின் வழி மொழிதலை மிகுதி அரைவாசி அபத்தமான அந்த அனுபவங்களுடன்  இரை மீட்டி வாழ்கிறோம்,"

                                    " இதைக்கேட்க  உடம்பெல்லாம்  புல்லரிக்குது,,ஆனால்  புரிந்துகொள்ள முடியவில்லை  அய்யா "

                                " புத்தகங்கள் மிச்ச வாழ்கையின் அர்த்தத்தை இன்னொருவரின் பிரஞ்சை இன் ஆத்மதேடுதலாய் இருப்பின் அர்த்தத்தைச் சொல்லும் "   

                                  "     ஜீன் பால் சார்த்தர்  யார்  அய்யா  "

                                " அவர் ஒரு பிரெஞ்சு எழுத்தாளர்,,சாத்தரிசம்  என்பதை  அவர்தான்  எழுதிக்காட்டினார் "

                                  "  அப்படியா,,இப்படியான  இசம்கள்  எனக்கு  விளங்காது  அய்யா "

                                " ஆல்பர்ட் காம்யு  தெரியுமா ,,அவர்  நாவல்  வாசித்து  இருக்கிறாயா "

                             "     ஓம்,,அய்யா  அவர்  எழுதின  அந்நியன்,,பிளேக்  ,,ரெண்டும்  வாசித்து இருக்கிறேன் "

                               " பிளேக்  ..அது  ஒன்று  போதுமே,,,உனக்கு  உலகத்தின் போக்கை விழிப்புணர்வு செய்ய வைக்க "

                             "   பிளேக்  ஜனரஞ்சக நாவல்  போலதானே  எனக்கு இருந்தது,,ஒரு  கதைசொல்லி போல  இருந்தார் ஆல்பர்ட் காம்யு  அதில "

                        "  இல்லை,,பிளேக்  நீ ஒருமுறை வாசித்தால்  அப்படி  இருக்கும்,,நாலுமுறை  வாசி,,நாலாவது முறை அதில உள்ள தத்துவம் விளங்கும்    "  என்றார்,

                               நான் குழம்பிப் போட்டேன். இந்த ஆளிட்ட வந்து தெரியாமல் மாட்டிப் போட்டேனே எண்டு ஜோசித்து, 

                           " நீங்க சொல்லுறதைக் கேட்ட என்னோட மண்டை பம்பரம் போல கிறுகிறுக்குது , புத்தகக் கண்காட்சி செய்தியில் விளம்பரத்தில் அந்த இளம்பெண்கள் இப்படி ஒரு விளக்கம் சொல்லி இருந்தால் நான் இந்த இடத்துக்கு வேலை மினக்கெட்டு வந்தே இருக்க மாட்டேன் " 

                       எண்டு காலில விழாத குறையாகச் சொன்னேன், 

                          அவர் சடார் எண்டு 

                             " என்ன இப்படி சொல்லுறாய்,என்னோட ஒரு நாயும் ஒரு பூனையும் ஒரு சமூகப் பிறழ்வும் என்ற நாவல் நோர்வே பல்கலைக்கழக தத்துவ டிகிரி மாஸ்டர் பாடத் திட்டத்தில் உள்ளது,உன்னைப்பார்த்தால் நிறைய ஜோசிக்கும் ஒரு ஆள் போல இருக்கே உன்னோட முன் நெத்தியில் ஒரு பொறி இருக்கு தத்துவ ஆன்ம விசாரணையின் போக்கு இருக்கே " எண்டு சொன்னார் ,

                         நான்  " ஐயா எனக்கு பொறியும் இல்லை, இப்ப வெறியும் இல்லை ,நானே போக்கிடமே இல்லாமல், " சக்கடத்தார் குதிரையில் ஏறிக் கூடவே மணியகாரன் பெண்டிலையையும் ஏத்தின  " மாதிரித் தடுமாறுகின்றேன் நீங்க என்னை வைச்சுக் காமடி செயுரின்களே ,என்னோட குல தெய்வம் வீராளி அம்மாளாச்சியே  இதைப் பொறுக்க மாட்டா " 

                      எண்டு சொல்லி முடிய, பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்று  நினைச்சு என்ன நடக்குது எண்டு பார்ப்பம் எண்டு போட்டு 

                       " நானும் சும்மா பேஸ் புக்கில ஆலை இல்லா ஊரில இலுப்பைப்பூ சக்கரை போல எல்லாரையும் குழப்பிக் கவிதை ,வெங்காயம் தெரியாத .. இக்கு ..... ஐ நல்லா இழுத்துக் காட்டின மாதிரி ரீல் விட்டுக் கதை விட்டுக் கதை எழுதுவேன் " எண்டேன்.

                         அந்தாளுக்கு " குருவுக்கும் நாமம் தடவி போட்டு, கோபால பெட்டியில் கைபோட்டது போல " கோபம் வந்திட்டுது, 

                              " பேஸ் புக்கில எழுதுறதும் நல்ல வெய்யில் எறிக்கிற நேரம் தார் ரோட்டில தூறல் மழை பெய்யுறதும் ஒண்டுதான் " எண்டு கையை மேசையில் பிடல் காஸ்ட்ரோ போல குத்தி கோபமா சொன்னார் ,

                               நான்  " ஐயா நானே கொஞ்சம் புது புது விசியங்களை,புது புது விதமாத் தொடக்கி எழுதுறேன், அதையே தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப் பொன் திருடுவான் பழமொழி போல  கொப்பி அடிச்சு எழுதுறாங்க ஐயா, என்னோட பல கவிதைகளில் இருந்து சில சில வரிகளையும், வசனம்களையும் ஒருவர்  சுட்டு ஒரு தனிக் கவிதை எழுதி ,அது புகழ் பெற்ற ஒரு இலக்கியப் பத்திரிகையில் வந்துள்ளது, "   எண்டு சொன்னேன்,

                    அதுக்கு அவர் 

                 " கொப்பி அடிக்கிறவன் பிட் பொக்கட் அடிக்கிறவனை விட கேவலம் கெட்ட மனுஷன், சரி நீ என்ன எல்லாம் எழுதுவாய் " 

                      எண்டு கேட்டார், நான் அதுக்கு பதில் சொல்லவில்லை. அவர் கொஞ்சம் ஜோசித்தார் 

                     நோர்வே மொழியில் கதைத்துக்கொண்டு இருந்த அவர் சடார் எண்டு,ஆங்கிலத்தில பாஞ்சு

                      " Anyone who lives in her or his own world is crazy. Like schizophrenics, psychopaths, maniacs. I mean people who are different from others. Like you,me and anyone,,do you know most of the well known writers are Sociophobia affected ? 

                      எண்டு கேள்விக் குறி போட்டுக் கேட்டுப் போட்டு ,,அவர் ஆங்கிலத்தில் சொன்னதின் அர்த்தம் பிடிக்க நான் தடுமாறுவதைப் பார்த்து,

                    " கவிதை எந்த மொழியில் எழுதாவாய் " எண்டு நோர்ஸ்கில் கேட்டார், 

                     " "வட வேங்கடத் தென்குமரித் தீம்புனல் பெளவமென்று என் யாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தில் அகஸ்தியர் பொதிகை மலையில்க் கண்டு பிடித்த என் தாய் மொழி தமிழில்த் தான் இலக்கணப்  எழுத்துப் பிழை விட்டு விட்டு எழுதுவேன் " ,

                     எண்டு சொன்னேன், அதுக்கு அவர் 

                         " ஏன்பா உன் தாய் மொழியைக் கழுத்தை நெரிச்சு கொல்லுறாய், நாசமாப்போக,,தன்னோட தாய் மொழியில் இலக்கணப் பிழை விட்டு எழுதுபவனை மன்னிக்கவே முடியாது "

                              எண்டு சொல்லிக் ,  கொஞ்சம் ஜோசித்துப் போட்டு ,

                          " தமிழ் மொழியா உன் தாய் மொழி,நல்லா இருக்கே கேட்கவே ,உலகத்தில் உள்ள ஆறு கிளாசிக்கல் மொழியில் அதுவும் , ஒரு கிளாசிக்கல் மொழியே , அப்படியான மொழியை கை விடாதை  ,என்னவோ எழுது, எழுத்து அழியும் வரை எழுது,முதலில் உனக்காக எழுது , ஒரு நதியில் நீர் ஓடுவது போல அந்த நதிக்கரை வழியே வரும் யாரோ ஒருவரை அது ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கும்....."  

                          எண்டு லொரியில அடிப்பட நாய் கடைசியா இழுத்து இழுத்து கத்தினது போல நோர்வே மொழியில் அழகா சொன்னார்.பாவம் அவர் எழுதியதும் ஒரு நடுக் காட்டில ஓடுற நதி போல அதன் ஆழம், அழகு, அர்த்தம் அறியப்படாமலே ஓடி, ஒரு பரந்த கடலின் கழிமுகத்தில் விழுந்து காணாமல்ப் போய் இருக்கலாம் போல இருந்தது ... 

                      அவரே கொஞ்சம் ஜோசித்துப் போட்டு 

                    " அறியாதவன் அறியாதவனைப் போலத் தானே நடப்பான். இதில் என்ன அதிசயம். அதனை எதிர்பாராதது உன் பிழையே. வெள்ளரிக்காய் கசக்கிறதா தூர எறிந்து விடு. வழியில் முள்ளா விலகிப் போ. அதை விட்டு விட்டு வெள்ளரிக்காய் ஏன் கசக்கிறது, முள் ஏன் தோன்றியது என்ற ஆராய்ச்சியில் இறங்குவது அறிவீனம். எல்லாம் எண்ணங்களே என்பதால் எண்ணங்களை சரி செய்தால் எல்லாமே சரியாகி விடும், அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார் மார்கஸ் அரேலியஸ் " 

                        எண்டு பேஸ் புக்கில் இன்றைக்கு நடக்கும் அநியாயத்துக்கு அன்றைக்கே கிரேக்க தத்துவத்தில் பேதி மருந்து இருக்கு போல சொன்னார்..

                           நான் எனக்கு முன்னால நிண்ட இளம் பெண்ணுக்கு எதுக்கு மூக்கு கிளிச்சொண்டு மாங்காய் போல வளைஞ்சு இருக்கு எண்டு ஜோசித்துக் கொண்டு இருந்தேன்..... 

                         கொஞ்ச நேரத்தில அவரோட மேசையைச் சுற்றி நிறைய கம்பஸில் படிக்கிற பிள்ளைகள் வந்திடார்கள். அவர்களுக்கு அவரை விட அவரின் எழுத்து நெருக்கமாக இருந்து இருக்கலாம் போல இருந்தது , நான் ஒரு ஓரமாக ,ஒரு நல்ல வாசகன் போல ஒதுங்கி நிண்டு , அவர் அவர்களுக்கு என்ன சொல்லுறார் எண்டு கேட்டுக்கொண்டு இருந்தேன். அந்தாள் கம்பஸில் படிக்கும் மாணவர்களைக் கண்டவுடன் சந்தோசமாகி குழந்தைப்பிள்ளை போல அவர்களின் அறிவு மட்டத்துக்கு இறங்கி வந்து மிக மிக எளிமையாக அவரின் புத்தகம் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார் .

                              அவர் அவர்களைத் அன்போடு அதரவா பேசி பல எழுத்து, எழுத்தாளர், உலக அளவில் அச்சில் வரும் புத்தகங்களின் முக்கியம் இன்டர்நெட் வந்தபின் குறைந்து போனது போன்ற விசியங்கள் சொல்லிக்கொண்டு இருந்தார். அதில அவர் மேசைக்கு முன்னால வந்து நின்ற எல்லாப் பிள்ளைகளும் அவரின் " ஒரு நாயும் ஒரு பூனையும் ஒரு சமூகப் பிறழ்வும் " புத்தகத்தை வேண்டி அதில கையெழுத்து போடக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள், அவர் அந்தப் புத்தகங்களின் கடைசி ஒற்றையில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக்கொண்டு இருந்தார்..

                        " உனக்கு என்னோட ஒரு நாயும், ஒரு பூனையும் ,ஒரு சமூகப் பிறழ்வும் புத்தகம் வேண்டும் என்றால் நானே இலவசமா தாரேன் கொண்டு போ ,கொண்டு போய் அதன் கடைசி பக்கத்தையாவது சாக முதல்ப் படி "

                          எண்டு இலவசமாகத்  தர முன்வந்தார் ,  நான் அதை முழுக்காசும் கொடுத்து வேண்டினேன்,

                     " ஏன் கடைசிப் பக்கத்தில் கையெழுத்துப் போட்டுக் குடுக்கிறிங்க அய்யா "

                           எண்டு என்னோட கடைசிக் கேள்வியைக் கடைசியாக் கேட்டேன்,

                   " எழுதினவன் முக்கியம் இல்லை எழுத்துதான் முக்கியம் "

                        எண்டு சொல்லிக் கடைசி ஒற்றையில் கையெழுத்து போட்டு தந்தார்,  வேண்டிக்கொண்டு வந்து மேசையில் எறிஞ்சு போட்டு , என்றோ ஒரு நாள் சாக முதல் படிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்..,, 

                                        என்ன சீவியமடா இது.... 

 .

ஒஸ்லோ 17.09.14

Wednesday, 16 September 2015

வீராளி அம்மன் கோவில்....

யாழ்பாணத்தில ,  எங்களின் வீட்டுக்கு அருகில்  வீராளி அம்மன் கோவில் இருந்தது , எளிமையான அந்தக் கோவிலுக்கு அருகில் தேர் முட்டியும் ,இன்னொரு பக்கம் செங்கழுநீர் தொட்டியும் இருக்க, கோவிலுக்கு முன்னால விழுதுவிட்ட ஆலமரம் தலையை விரிச்சுப் போட்டு நிக்க , கோவிலுக்கு அருகில நிழலாக கூலாம் பழமரம் நின்றது , 

                                                 அந்த நேரம் அந்தக் கோவிலுக்கு கோபுரம் இருக்கவில்லை .அந்தக் கோவிலுக்கு முன்னால அம்மச்சியா குளம் இருந்தது , குளத்தில தாமரை மொட்டு விட ,அல்லி மலர்கள் அரிதாரம் பூச , மார்கழி மாததில அந்தக் குளம் நிரம்பி வழிந்து கோவிலுக்கு முன்னாலா கடல் போல அலை அடிக்கும்.

                                                     வீராளி அம்மன் கோவில் , சங்கிலிய மன்னன் சண்டைக்குப் போகமுதல் தன்னோட வாளை வைத்து வழிபட்ட வீர மகா காளி அம்மன் கோவில் என்ற பெயர் வந்த படியால, செய்வாய்க் கிழமை, வெள்ளிகிழமை அதிகாலை சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அபிராமி அந்தாதி பாடல்களை " லவுட் ச்பிகரில் " போடுவார்கள் , அது முடிய L .R. ஈஸ்வரி பாடிய அம்மன் பாடல்கள் போடுவார்கள். 


                                                கோவில் திருவிழா வருஷத்தில் இரண்டு முறை வரும் ,அந்த நாட்களில் நாள் முழுவதும் அந்த " லவுட் ச்பிகர் " கிடந்தது அலறும் ,கடைசி பூங்காவனத் திருவிழா அன்று சின்ன மணியின் வில்லுபாட்டு , காண மூர்தி பஞ்ச மூர்தி நாதஸ்வரம் பொழிந்து, ராஜன் இசைக் குழு அல்லது அருணா கோஸ்டியின் இசை நிகழ்ச்சி யோடு மழை பேஞ்சு விட்டமாதிரி அமைதியாகும் ,

                                             அந்தக் கோவிலில் என் வயது இளையவர்கள் பலர் " அம்பிகை  அடியார்கள் " எண்டு கோவிலோடவே, அம்மனுக்கு நேர்ந்து விட்ட மாதிரி ,கோவில் அம்மன் சிலையைக் காவுவது ,மாலை கட்டுவது ,மணி அடிப்பது ,அவல் சுண்டல் கடலை எலாருக்கும் பகிர்ந்து கொடுப்பது ,கோவிலுக்கு வரும் இளம் அம்மன்களுக்கு தரிசனம் கொடுப்பது எண்டு அவர்கள் நேரம் வீராளி அம்மன் புண்ணியத்தில எப்பவுமே விறு விறுப்பா போகும் , 


                                           வாட்ட சாட்டமான அவர்களின் நெற்றியில் திருநீறு இல்லாடியும் ,எல்லார் கழுத்திலையும் ஒரு சின்கப்பூர் செயின் கட்டாயம் மின்னும் , நான் அந்தக் கோவிலுக்கு போறது இல்லை , அந்த " அமபிகை அடியார்களோடும் " தொடசல் வைப்பது இல்லை , ஆனால் அந்தக் கோவில் தேர் முட்டியில ஏறி இருந்து குளத்தை அதிகம் பார்த்து கொண்டு இருந்து இருக்றேன் ,

                                        வருடாந்த பெரிய திருவிழாவில, பாம்பு வாகனத் திருவிழாவில எப்பவுமே கைதடிப் பழனியின் மேள தாளம் பாம்பு போலப் படம் எடுத்து ஆடும் ,அந்த திருவிழா செய்வது கோவிலுக்கு முன்னால சாராய பார் வைத்து நடத்திய நயினார் குடும்பம், மேளகாரர் கோவிலுக்கு வந்தவுடன நயினார் அவர்களுக்கு தாகசாந்தி செய்து ,சுருதி ஏற்ற நாதஸ்வரம் வாசிப்பவ ர் 


                               " சுழன்டாடு நாகபாம்பே... சுழன்டாடு நாகபாம்பே,,,,, சுழன்டாடு  நாகபாம்பே ..சுழண்டு  சுழண்டு  ஆடு  நாகபாம்பே ..பாம்பே,   ப்ளிஸ்  நாகபாம்பே..... .சுழன்டாடு நாக பாம்பே...." 

                                    எண்டு சுழண்டு வாசிக்க ,ஒரு கட்டத்தில அவர் புன்நாகவராளி ராகம் வாசிக்க அம்மன் சிலைய தாங்கி வரும் பாம்பு வாகனப் பாம்பே மயங்க்கி விழ,நயினார் கர்நாடக சங்ககிததை கரைத்துக் குடித்த மாதிரி தலைகறனமா தாளம்போட ,அதுக்கு தலை கழண்டு விழுகிற மாதிரி கைதடிப் பழனி மேளத்தில முழக்குவார் ,அந்த பாம்பு திருவிழா எப்பவுமே சண்டையில்தான் முடியும்

                                           வீராளி அம்மன் கோவில் வேட்டை திருவிழா நடுக் காடுக்குள்ள நடக்கிற மாதிரி நடக்கும் , அந்த திருவிழாவில, கோவிலுக்கு முன்னால காடு போல மரங்களை வெட்டி கொண்டு வந்து நட்டு ,அதில் காஞ்சுபோன பயித்தங்காய் ,முருங்கைக்காய் ,புடலங்காய் மரக்கறி எல்லாம் தோரணம் போல கட்டி தொங்கவிட்டு , 
எங்கள் ஊரில போஸ்ட் பியோனா வேலை செய்த அரியலிங்கம் ,வேடுவன் போல இலை குழை எல்லாத்தையும் உடம்பு முழுக்க சுற்றிக்கொண்டு ,அதுக்குள்ள பதுங்கி இருப்பார் , 

                                        யாரவது கட்டி தொங்கிற மரக் கறியை பிடுன்கி ரார்களா எண்டு பார்க்க ,போஸ்ட் பியோன் அரியலிங்கம் மேகப் போடாமலே வேடுவன் போலதான் இருப்பார் ,அப்புறம் எதுக்கு அவர் எச்ற்றாவா மேக் அப் போடுறார் எண்டு அந்த நாட்களில் ஜோசிததுண்டு .

                                   வருடத்தில ஒருநாள் மின்னேறிஞ்சன் திருவிழா நடக்கும் , ஒரு அரசனிடம் அரசவைக் கவிஞ்சரா இருந்த அபிராமிப் பட்டர் வாய் தவறி அம்மாவசையைப் பவுர்ணமி எண்டு மாறிச் சொன்னதால் " நாளைக்கு பவுர்ணமி காட்டாவிட்டால் தலை பறக்கும் " எண்டு அந்த மன்னன் சொல்ல, அபிராமிப் பட்டர் உயிர் ஆபத்தில முடிய முதல் அவர் அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதி பாட அம்மாவசை ,பூரன பவுர்ணமியாக மாறிய அந்த நிகழ்வை ஒரு நாடகம் போல செய்வார்கள், 


                                           அதில வார அரசனா நடிப்பவர் ஆணைபந்தி சந்தியில் லோன்றி வைத்திருந்த முழு நேர தண்ணி சாமி ,அவர் சும்மா நேரம் கேள்விக்குறிபோல வளைந்து கொண்டு நிற்பவருக்கு , அண்டைக்கு அம்மனின் தீர்த்தமும் ,நயினாரின் தீர்த்தமும் கொடுத்து அவர் அண்டைக்கு மட்டும் ,அம்புக்குறி போல அரசனா நிக்க , அதில அபிராமிப் பட்டர் போல நடிப்பவர் தலை பறக்கும் போல , பார்க்க அப்பாவியா இருப்பார்.

                                                     கோவிலுக்கு அருகில் எங்களின் வீட்டு பக்கமா ஒரு பெரிய கொக்கை தடியின் உச்சியில ஒரு கரண்ட் லைட்டைக் கட்டி ,அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதி பாடிமுடிய , வீராளி அம்மன் அந்தாதியில் மயங்கி ,அவாவின் காதில இருந்த வைரத் தோட்டை கழட்டி எறிய, அது பூரணை சந்திரன் போல மின்னி மின் எறிஞ்சன் வெளியில எலெற்றிக் லைட் சடாரென்று எரியும் . 


                                         எங்களின் வீடு இருந்த காணி உறுதியில் எங்களின் வளவுக்கு மின் எறிஞ்சான் வெளி எண்டு தான் எழுதி இருந்தது , அதுக்குள்ளே வீராளி அம்மன் அவாவின் காதில இருந்து கழட்டி எறிஞ்ச வைர தோட்டை நான் எவளவுதான் தேடியும் ஒரு நாளுமே கண்டு பிடிக்க முடியவில்லை .

                                            அண்மையில் இன்டர்நெட்டில் வீராளி அம்மன் கோவில் 20 வருடங்களின் பின் பார்த்தேன் , அதில கோயில் கோபுரம் கட்டி வேறு விதமாக நவீனமா சினீமா நடிகைகளை விடக் கவர்ச்சியா இருந்தது , எனக்கு பிடித்த அந்த பழைய ,எளிமையான ,வீராளி அம்மன் கோவில் போல இருக்கவில்லை, சிவனே எண்டு கிடந்த யாழ்ப்பாணக் கிராமக் கோவில்கள் வெளிநாடுக்காசில் போட்டி போட்டுக்கொண்டு கோபுரம் எழுப்பி, கோடி கொடுத்து கும்பாவிசேகம் செய்துளார்கள் .


                                           பல கோவிலுக்கு இப்ப "வெப் சைட் " வந்து " ஒன்லைனில" அருசனை செய்யக் இங்கிருந்து காசு அனுப்பலாம் போல இருக்கு , அங்க உள்ள ஐயர் அந்த காசை எடுத்து , வீட்டில இருந்த படியே "ஒன்லைனில" கடவுளுக்கு அருச்சனை செய்யலாம் போலவும் இருக்கு , இந்த தொழில் நுட்ப வளர்சி , இலற்றோனிக் இமசை கொஞ்சம் ஜோசிக்க வைக்குது ,

                                              ஐரோப்பாவின் பல நகரங்களில் பழைய தேவாலயங்களில்,கையே வைக்க மாட்டார்கள் , நூற்றாண்டுகளாக அவை அப்படயே பழைமையா இருக்கும் , நான் வசிக்கும் ஒஸ்லோ நகர விளிம்பில், என்னோட வீட்டுக்கு அருகில் ஒரு பழைய தேவாலயம் இருக்கு ,அதில் இப்பவும் 300 வருடம் பழமையான மரத்தால செய்த பைப் ஓர்கன் வாசிக்கிறார்கள், அதி நவீன ஒலிபெருக்கி இரைச்சல் சத்தங்கள் பாவிப்பதில்லை , சுவர்களில் மோதி இசை தானாகவே தன் பாட்டில தாலாட்டுது , மெழுகுதிரிகளின் வெளிசத்தில் பரம பிதாவின் முகம் பிரகாசமா தெரியுது . 


                                            அங்கே வரும் வயதானவர்கள் அந்த தேவாலயம் தாங்கள் சின்ன வயசில் வந்து போனது போலவே இருக்கு எண்டு சொல்லுளார்கள், அவர்களின் வாழ்வின் கதையை எழுதித் செல்லும் அந்த தேவாலயத்தின் நினைவுகள் போல ஆயிரம் தொழில் நுட்ப சாத்தியங்கள் வந்த போதும் அவர்கள் அதை மாற்றவே இல்லை , மாற்றவும் மாட்டார்கள் !
.


07-02-2014
ஒஸ்லோ நோர்வே

Tuesday, 15 September 2015

இதுதான் வாழ்க்கை

யாழ்ப்பாணத்தில் இளவயதில் நான் வேலை செய்த நிறுவனம், இடம் பெயர்ந்த அகதிகளுக்கு நிவாரணம் கொடுத்துக் கொண்டிருந்த நேரம் அதில வேலை செய்ததால், தற்செயலாக சந்தித்த ஒரு பெண்மணியிடம், இடக்கு முடக்கா கேள்வி கேட்டுக் கதைத்த போது வெளிவந்த கதையாக இனி நான் சொல்லப்போறது , எனக்கு பிடித்த ஒரு நல்ல எழுத்தாளர், சிந்தனையாளர் ஒருவரை மறுபடியும் நினைவு கொள்ளும் நிகழ்வு பல வருடங்களின் முன் நடந்த சம்பவம்.

                                                        அந்த எழுத்தாளரர் புங்குடுதீவில் ஒரு கிராமப் பாடசாலையில் ஆசிரியரா இருந்த, " போர்ப்பறை " , " ஒரு தனி வீடு " , " மெய்யுள் "  என்ற நாவல்களும், விமர்சனப் புத்தகமும்,வேறு பல சிறுகதைகள் எழுதிய, தன்னோட வாழ்க்கைப் போராட்டத்தைக் கதைகள் முலமாக தத்துவார்த்த சிந்தனையில் எழுதிய மு.தளையசிங்கம் என்ற ஒரு அரிதான ஈழத்துச் சிந்தனையாளர். சத்தியம் என்ற பத்திரிகையை வெளியிட்ட அவரைத் தமிழ் இலக்கிய ஆளுமை எண்டும் சொல்லுறார்கள்.

                                                                  மு.தளையசிங்கம் தனிச் சிங்கள சட்டம் பண்டார நாயக்கா கொண்டுவந்த நேரம் தமிழ் சுதேசிய உணர்வில் பலர் எழுத தொடங்கு முன்னமே, " புதுயுகம் பிறக்குது " என்று இனப்பிரசினை பற்றி எழுத தொடங்கிய எழுத்தாள சிங்கங்களில் ஒருவர் என்கிறார்கள். அவர் பல்கலைக்கழக மாணவனா இருந்த போதே " சுதந்திரம் " என்ற பத்திரிகையில் முதல் சிறுகதை எழுதிய அவரின் கொள்கைகள் ஆரம்பத்தில் காந்தியம், விநோபாபவின் கொள்கைகள் ,எண்டு தொடங்கி இருக்கிறார்  


                                                   பின் நாட்களில் சாதி எதிர்ப்பு, சமவுடமை போன்ற பக்கம் போனாலும்,அவரின் சிந்தனைப் போக்குகள், மார்டின் விக்கிரமசிங்க சிங்களத்தில் " கம் பெரலிய "என்று தொடக்கிய சாதாரண கிராமப் பிறழ்வு நிகழ்வுகள் எப்படி ஒரு சமுதாயத்திலும், தனி மனிதர்களிலும் ஆதிக்கம் செலுத்து எண்டு தமிழில் கதைகள்,நாவல் ,கட்டுரைகள் எழுதியவர்,

                                                      எழுதியது மட்டுமில்லை,நல்ல தண்ணிக் கிணறு போன்ற உயர் சாதி/ கீழ் சாதி அடையாள, வெட்டுக் குத்து சண்டைகளில் நேரடியாக பங்குபற்ற அவரின் வீடு புகுந்து வாளால் வெட்ட போன சம்பவங்கள்,அவர் இலங்கைப் போலிசால் கைது செய்யப்பட்ட நிகழ்வு, எல்லாத்தையும் எதிர்கொண்ட ஒரு சமுதாயவாதி.

                                                  அவர் அந்த நாட்களில் எழுதிக்கொண்டு இருந்த முற்போக்கு எழுத்தாளர்களுடனும் சேர்ந்தும் , பின்னர் " விமர்சன விக்கிரகங்கள் " என்ற கட்டுரை எழுதி முற்போக்கு எழுத்தாளர்களுடன் பிரிந்து தனித்தும் இயங்கி இருக்குறார் ,

                                                    அவர் எழுதி என்னைக் கவர்ந்த ",,, திருவெம்பா நேரம் பனை மரம்,,,,," ,என்ற ஒரு கதை ஒரு வித்தியாசமான ஈரோடிக் கதை,சைக்கோ அனலைசிங் அதிகம் உள்ள,புங்குடுதீவு மக்களின் பிரயாசைக்கு அவர்கள் கொடுத்த விலையின் கதை.

                                                            தீவுப்பகுதியை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்த போது, அதில் வசித்த பல குடும்பங்கள் குடாநாடு முழுவதும் அகதியாக வந்து சிதறி சின்னாபின்னமாகி வசித்தார்கள்,அவர்களுக்கு நான் வேலை செய்த நிறுவனம், நிவாரணம் எண்டு மாதம் மாதம் உணவு கொடுக்க,ஒரு நாள் ,என்னோட அம்மாவின் வயசில் இருந்த ,சினேகிதமான சிரிப்பில் ,படித்த முகம் உள்ள,கவுரவமான,நெற்றியில் மருந்துக்கும் ஒரு பொட்டும் வைக்காமல். கழுத்தில,கையிலையும் ஒண்டும் இல்லாமல், கஷ்டப்பட்ட பெண்கள் போல ஒரு அம்மாவும் வந்து நிவாரணம் எடுத்தா.

                                       அவாவின் குடும்ப அட்டையில் புங்குடுதீவில் இருந்து இடம் பெயர்ந்த விபரம் இருக்க,சும்மா ஆர்வக்கோளாறில்,கொஞ்சம் படித்த முகம் உள்ள பெண் போல அறிவு அடக்கமாகக் கண்களில் இருந்ததால்


                                            " உங்களுக்கு மு.தளையசிங்கம் என்ற ஆசிரியரைத் தெரியுமா, அவர் ஒரு நல்ல எழுத்தாளர் " எண்டு கேட்டேன், அவா என்னை சந்தேகமா பார்த்தா,

                                               " எந்த தளையசிங்கம் , கணேசா வித்தியாலலயத்தில் படிப்பித்த அவரா, இல்லை இன்னொருவர் முருகமூர்த்தி கோவிலடியில் இருந்தார்,எழுத்தாளர் எண்டு சொல்லுறவரை எனக்கு நல்லா தெரியும்..நீங்களும் எங்கண்ட ஊரா, தளையசிங்கம் மாஸ்டரை எப்படி தெரியும், அவர் செத்துப் போனாரே "  எண்டு ஜோசித்து வருஷங்களின் நினைவுகளை இழுத்து எடுத்துச் சொன்னா,நான்

                                         " இல்லை,எனக்கும் உங்கண்ட ஊருக்கும் தொடசல் இல்லை, "  எண்டேன், அதுக்கு அவா

                                            " பிறகு அவரை எப்படி தெரியும் "

                                                  எண்டு கேட்டா,நான் அவரின் புத்தகம் சிலதும்,கதைகளும் வாசித்து இருக்குறேன் ,அவர் எழுதின ",,,,,, திருவெம்பா நேரம் பனை மரம்,,,,," ,என்ற கதை என்னை மிகவும் பாதித்த ஒரு கதை என்று சொன்னேன்,,,அவா என்னை இன்னும் நம்பாமல்,நெற்றியில விரலை வைச்சு தேச்சுப் போட்டு

,                                                 " அப்படியும் ஒரு கதை இருக்கோ,அதென்ன பனை மரத்தில திருவெம்பாவை நடந்த கதை "   


                                                    எண்டு கேட்டா.. அந்தக் கதை எஸ்.பொ என்ற இன்னுமொரு ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் எழுதிய சில ஈரோடிக் கதை போல உள்ள ஒரு கதை . அதுக்கு முதல் அந்தக் கதை நடந்த இடத்தைப்பற்றி கொஞ்சம் என்னோட குண்டக்க மண்டக்க கோபாலு ஸ்டைலில் சொல்லுறேன் 


                                                       புங்குடுதீவு மக்கள் பிரயாசைக்கு உலக அளவில் பிரபலம் ஆனவர்கள்,பனம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள் முதலில் புங்குடுதீவு போய் அந்த மண்ணில ஒரு மணித்தியாலம் பிரண்டு உருண்டா யாருக்கும் அந்த ஆசை வரும்.அந்த ஊரில் இளம் ஆண்கள் ஒரு வயதில் கொழும்பு நாலாம் குறுக்கு தெருவுக்குப் போய் ,அவர்கள் ஊர் ஆட்களின் ஒரு கடையில் ஒரு ஓரமாக ஒட்டிக்கொண்டு நிண்டு, வியாபார நுணுக்கம், சிங்களம் பேசப் பழகி,ஒரு கட்டத்தில் அந்தக் கடைக்கு எதிர்க் கடையின் முதலாளி ஆகுவார்கள்,அவளவு பிரயாசையான மனிதர்கள்,

                                                
                                                           அவர்கள் திரும்ப புங்குடுதீவு வந்து கலியாணம் கட்டின நாலாம் சடங்கோடு ,கலியாணப் பெண்ணின் பூவும் ,பொட்டும் வாசம் மறைய முதலே,மறுபடியும் கொழும்பு நாலாம் குறுக்கு தெருவுக்கு சம்பாரிக்க எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அது குடும்ப வாழ்வில் உருவாக்கும் சமனற்ற  தன்மை  போன்றவை தவிரக்கமுடியாமல்  பின் தொடரவைக்கும். அதுக்கு அவர்கள் கொடுக்கும் விலை மிகப்பெரியது 

                                               " ஒருவரின் அந்தரங்கம் எவ்வளவு புனிதமானது! இட் இஸ் ஸம்திங் ஸேக்ரட் ! இதிலே இன்னொரு இரண்டாவது நபரின் பிரவேசம் – அது யாராயிருந்தாலும் ரொம்பக் காட்டுமிராண்டித்தனமானது, அசிங்கமானது…” என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியது போல  அந்த பனை மரத்துக்கு கீழே நடந்த கதை அப்படி ஒரு திருமணமான இளம்பெண், திருவெம்பா நேரம் அவர்கள் வீட்டு பனை மரத்தில கள்ளு சீவ வரும் கட்டழகன், தவிப்புத் தடவிய .......... விரகதாபத்தை, .................. சமூக நீதியை புளிய மரம் போல ,........................... பெரு மூச்சு விட்டு உலுப்பும் இளம் பெண்ணின் கதை , கீறிட்ட இடைவெளிகளை கற்பனையில் நீங்களே நிரப்புங்கள் இதுக்கு மேல என்னால் சொல்ல முடியவில்லை .


                                                    அந்த அம்மா ஒரு பெண்ணாக இருந்ததால், அதில வார பல விசியம் எந்தப் பெண்ணுக்குமே நேரடியா சொல்ல முடியாதபடியால,வெட்ட வேண்டிய வார்த்தைகளை வெட்டி சுருக்கமா அவாவுக்கு சொன்னேன், அவா

                                                  " நான் அவர் கதைகள் ஒண்டுமே படிக்கவில்லை,வெள்ளை யானை என்ற புத்தகம் கொஞ்சம் வாசித்த நினைவு இருக்கு, நீர் ஆர்வமாப் படித்து இருக்குறீர்.கேட்க சந்தோசமா இருக்கு "  எண்டு சொல்லிப்போட்டு ,

                                           " அவர் யார் தெரியுமா " எண்டு கேட்டா,

                                            நான் " உங்களின் உறவினரா ,அல்லது நீங்களும் அவரிடம் பாடசாலையில் படித்திங்களா " எண்டு கேட்டேன்,

                                         அவா " வேற என்ன கதை படித்தீர் அதையும் சொல்லுமன் " எண்டு கேட்டா,

                                 " மற்றக் கதைகள் நினைவு இல்லை " எண்டு சொன்னேன், அவா ஜோசித்துப் போட்டு சிரித்துக் கொண்டு

                                        " அவர் என்னோட புருஷன் என்றா ".

                                         எனக்கு கொஞ்சம் பயம் வந்திட்டுது, கொஞ்சம் சந்தேகமா இருக்க,அவாவின் குடும்ப அட்டையைப் பார்த்தேன்,,அதில குடும்பத் தலைவி எண்டு, திருமதி...............தளையசிங்கம் எண்டும் ,நிரந்தர முகவரி இத்தனையாம் வட்டாரம் எண்டும் போட்டு இருந்தது,தற்காலிக முகவரி எண்டு நான் வேலை செய்த நிறுவனத்துக்கு கொஞ்சம் தள்ளி உள்ள ஒரு வீதியின் பெயர் போட்டு இருந்தது. நான்

                                                 " உண்மையாதான் சொல்லுறிங்களா, மன்னித்துக்கொள்ளுங்கள் நான் தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் "   எண்டு சொன்னேன். அவா ஒண்டும் சொல்லவில்லை,

                                           " அவர் எழுதின புத்தகம் படித்த நீர் ரசித்துப் படித்ததைக் கேட்கவே எனக்கு என்ர புருஷனை நினைக்கப் பெருமையா இருக்கு, ஆனாலும் நீர் பயங்கரக் கதைதான் படித்ததில் இன்னும் நினைவு வைச்சு இருக்குறீர் போல " எண்டு சொன்னா.

                                             நான் அதுக்குப் பிறகு வாயே திறக்கவில்லை,,அவாவே நிறைய விசியம் சொன்னா, நான் அவாவுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணத்தில் கொஞ்சம் அதிகமாகி எல்லாம் போட்டுக் கொடுத்து முடிய அவா போற நேரம் ,

                                            " உங்களுக்குப் பாரமாக இருந்தால் தூக்கிக் கொண்டு போகமுடியவில்லை எண்டால் வையுங்க,வேலை முடிய நானே சைக்கிளில் கொண்டுவந்து தாரேன் " எண்டேன்,அவா


                                           " பரவாயில்லை,நாங்க பக்கத்திலதான் இருக்குறோம் " 


                                    எண்டு சொன்னா,  கடைசியா வெளிக்கிடும் போது என்னவோ எனக்கு சொல்லியே ஆக வேண்டும் என்பது போல,அமைதியாக ,

                                        " நீர் என்னோட மகன் போல இருக்குறீர் உமக்கு உண்மையைச் சொன்னா என்ன ,எங்கண்ட ஊர் ஆட்கள் எல்லாம் துண்டைக் காணோம்,துணியைக் காணோம் என்று ஓடி ஓடி சம்பாரிப்பில அவதியா இருந்த நேரம்,இவர் கதை எழுதி, அதால எங்களுக்கு எவளவு பிரச்சினை வந்தது எண்டு உமக்கு எங்க விளங்கப் போகுது, "


                                       " ம் , உண்மைதான் " 

                               "  நான் பிள்ளைகளையும் வைச்சுக் கொண்டு பட்ட அமளி துமளி எங்கண்ட ஊர் ஆட்களுகுதான் தெரியும்,அவர் எழுதிய காலத்தில் நான் ஒரு கதை தன்னும் ஆர்வமாக வாசிக்கவில்லை, " 

                                        "  ம்...  ம்.. அது பொதுவா நடக்கிறதுதானே " 

                                "  இப்ப நீர் சொல்லுறதைக் கேட்க சந்தோசமா இருக்கு , மெய்யான இவளவு இடைஞ்சல்ப் பட்டு அவர் எங்கண்ட ஆட்களின் சீரழிவைப் பற்றி எழுதின அவர் எழுத்தின் பெறுமதியை இப்பதான் நினைகேறேன்  " 

                                  "   ம் ம் ம்ம்ம் ,,பரவாயில்லை அவரைப்  பலர் படித்து இருக்கிறார்கள்,அதுவே நல்ல விசியமே  "

                                     " சரி நான் போட்டு வாறன் , கொஞ்ச நேரம் உம்மோட கதைச்சதே நெஞ்சுக்க என்னவோ செய்யுது , பிறகு இன்னொரு நாளைக்கு உமக்கு நேரம் இருந்தா எங்கள்ண்ட வீடுக்கு வாருமன், ...சந்தியால திரும்பி வர .ரெயில்வே தண்டவாளத்துக்கு அந்தப் பக்கம் உள்ள ,,மூன்றாவது வீட்டில வாடைக்கு இருக்கிறம்," 

             என்று சொன்னா,,நான் அதுக்கும் " ம்ம்ம்  " என்று சொன்னேன் வேற நான் ஒண்டுமே பதில் சொல்லவில்லை,

                                                  இன்று இருவத்தைந்து வருடங்களின் பின் ஜோசிக்கும் போது இதை, இது ஒரு எழுத்தாளனின் வீழ்ச்சியா,அல்லது எழுத்தின் வீழ்ச்சியா. எப்படி சொல்வது எண்டு விளங்கவில்லை....

...........................இதுதான் வாழ்க்கை............................

.


///// 18.05.14 /////
.

Monday, 14 September 2015

ஊரெங்கும் தேடி ஒருவனைக் கண்டேன்

அந்தக் காலம் ,மனிதர்கள் , சம்பவங்கள் எல்லாமே ஒரு கனவுபோல மறைந்து விட்டது . சிலது நிரந்தரமாக  மறந்த போதும் , சிலது மறக்கவில்லை. அதில ஒன்று யாழ்பாணத்தில எங்களின் வீட்டுக்கு அருகில் ஆனந்தன் அண்ணை எண்டு ஒருவர் இருந்தார் ,அவர் பாக்கிறதுக்கு மார்க்கண்டேயர் போல கருப்பா இருந்தாலும் ,நல்ல வாட்ட சாட்டமான எழும்பின ஆம்பிளை.  சாந்தி அக்காவை எல்லா ஆம்பிளைகளும் ரெம்ப நல்லவங்கள் போல நேரம் கெட்ட நேரத்தில விதி விளையாடும் போது விடுற 

                               " உன்னைக் கண் கலங்காமல் கடைசிவரை காப்பாற்றுவேன் " 

எண்டு டயலக் பேசி , நல்லாப் படிசுக்கொண்டு கம்பஸ் போற கனவில இருந்த அவாவை காதலித்து கலியாணம் கட்டி , அவாவின் பட்டதாரிக் கனவில மண்ணை அள்ளிப்போட்டுக்  குடியும் ,குடித்தனமுமா வாழ்ந்தார் !

                                      சாந்தி அக்கா தான் அந்த வீட்டில ஒரே ஒரு பெண் பிள்ளை, மற்ற அஞ்சு பேரும் ஆம்பிளைகள். அதில நாலுபேர் ஜெர்மனிக்கும்,பிரான்சுக்கும் போயிட்டாங்க, ஒருவர் .... என்ற இயக்கத்துக்கு 

                       " தமிழ் ஈழம் எடுக்காமல் திரும்பி வரவே மாட்டேன்  " 

                                      எண்டு போய்ப் போனவர் போனவர்தான் , அவர் எடுக்கப் போனது எடுத்துக் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை அவர் சும்மா தன்னும் வீட்டுக்கு உயிரோடு திரும்பி வந்ததே இல்லை. அவர் பற்றி யாருக்கும் ஒண்டும் தெரியாது. அரசாங்க வேலை செய்து கொண்டு இருந்த அவாவின் அப்பா, சாந்தி அக்கா சின்னதா இருந்த போதே,  அவரோட நடு  வயசில் குடியால ஒரு நாள் இதயம் இறுக்க , ரெண்டு தரம் இருமிப் போட்டு இறந்திடார்,

                                    நாலு அண்ணன்களும் சாந்தி அக்காவை ஏ எல் வரை நல்லா படிக்க வைக்க, எப்படியோ ஆனந்தன் அண்ணை அவாவை எங்கயோ விதியின் விளிம்பில் சந்திச்சு, என்னவோ சிலப்பதிகாரக் கானல் வரிகள்  சொல்லி மயக்கி,  என்னத்தையோ  மன்மதன் அம்புபோலக் காட்டி இளக வைத்து  " படிச்சு என்னத்தைக் இனிக் கிழிக்கப் போறாய்,நீ இல்லாட்டி பொலிடோல் குடிப்பேன் "  எண்டு எப்படியோ பெண்களின் பலவீனத்தை சாதகமாக்கி மனம் மாற்றி ஒரு நாள் ஊருக்கு அதிகம் தெரியாமல் அவர்கள் கலியாணம் நடந்தது. 

                                        " தங்கச்சி கட்டும் வரை நாங்கள் கலியாணம் கட்ட மாட்டோம்,அவளுக்கு டாகுத்தர் அல்லது எஞ்சினியர் அல்லது அக்கவுன்டன் மாப்பிள்ளை பார்த்து , வீடு வளவு சீதனம் கொடுத்து , நகை நட்டு அள்ளிப் போட்டு ,கலியான வீடுக்கு  வீதிவரை  பந்தல் போட்டு , ஊருக்கு வெத்திலை பாக்கு வைச்சு,வாற எல்லாருக்கும் ரோசாப்பு பன்னீர் தெளிச்சு, புதுத் தம்பதிகள் கால்கள் பூ மியில் படாமல் கோவிலில் இருந்து வீடு வரை நடை பாவாடை விரிச்சு,எம் கே பத்மநாதன் மேளக் கோஸ்டி பிடிச்சு, இரவு ரங்கன் கோஸ்டியின் பாட்டுக்கோஸ்டி கூப்பிட்டு ஊரை அதிர வைச்சு .....ராசாத்தி போல வாழ வைப்போம் ...." 

                                 எண்டு உறுதிமொழி கொடுத்த நாலு அண்ணன்களும் வெறுத்துப்போய் அதுக்கு பிறகு அவாவோட தொடர்பையே துண்டித்து விட்டார்கள்.

                               ஆனந்தன் அண்ணை கலியாணம் கட்டின நேரம் மிக மிக நல்ல மனிதர். பிறகு கொஞ்சம் அவர் வேலை அவரை உலைக்கத் தொடங்கின நேரமும் மிக நல்ல மனிதர் . கொஞ்சநாள் சாந்தி அக்காவோட கதவழிப் பட்டுக்கொண்டு இருந்த நேரமும் நல்ல மனிதர் .  அதன் பின் என்ன நடந்ததோ தெரியாது குடிக்காத நேரத்தில மட்டும் அவர் கொஞ்சம் நல்ல மனிதரா இருந்தார். !

                                  அவர் யாழ்பாணத்தில இருந்து சங்கானை மனியதிண்ட இசுசு லோரியில புகையிலை ஏற்றிக்கொண்டு கொழும்புக்குப் போகும் லோரியில டிரைவரா வேலை செய்தார். மாசத்தில ஒரு கிழமைதான் சாந்தி அக்காவோட வீட்டுக்கு வந்து நிற்பார் ,மற்ற நாட்கள் எல்லாம் நேரம் ,காலம் இல்லாமல் , யாழ்ப்பாணம் -கொழும்பு இரண்டையும் இணைக்கும் கண்டி ரோடில , அந்த இசுசு லோறியக் கலியாணம் கட்டின மாதிரி அதோட தான் அவரோட சீவியம் போகும்.

                          ஆனந்தன் அண்ணை வீடுக்கு வார அந்த ஒரு கிழமை நாட்களில் ,கையோட அவர் ஓடுற இசுசு லொறியையும் கொண்டு வந்து எங்களின் வீடுக்கு பக்கத்தில இருந்த பால்ப் பண்ணை இருந்த வெறும் பள்ளக் காணிக்கை விட்டுட்டு ,அதை, வேண்டுமெண்டே ஏறக்குறய மறந்த மாதிரிதான் இருப்பார்.  நான் அதில ஏறி விளையாடுவான் ,கியர் மாத்துவன் ,கோன் அடிப்பன் , அச்சிலேடரை அமத்துவன், அங்கால இன்காலா கையால சிக்னல் போடுவேன் ,சில நாட்கள் அந்த லொறியை யாழ்பாணத்தில இருந்து கொழும்புக்கு ஒரு அக்சிடண்டும் படாமலே கண்டி ரோட்டில  ஒட்டிக் கொண்டு போய்,   முருகண்டியில்  சயிட் எடுத்து நிற்பாட்டி, இறங்கி பிள்ளையாருக்கு தேங்காய் உடைச்சுப்போட்டு ஒரு சேதாரமும் இல்லாமல்  கொழும்புக்கே கொண்டு போயிருக்கிறேன் .

                       ஆனந்தன் அண்ணை நான் லொறி ஓடுறதை பாத்திட்டு  , ஒருநாள்

                       " உமக்கு என்ன லொறி ஓடுற டிரைவர் ,வேலை வளர்ந்து செய்ய விருப்பம் போல இருக்கு , ஆனால் அந்த நசல் வேலை மட்டும் செய்யவேண்டாம் , நான்  ரோட்டு ரோட்டா வீடு வாசல் இல்லாமல் ,பொஞ்சாதி முகத்தைப்பார்த்து மாதக்கணக்கில் சீரளியிர கேவலத்தை பாரும் , நல்லாப் படிச்சு கதிரையில் இருந்து உத்தியோகம் பார்க்கிறதுக்கு படியும், வாகனம் ஓடுறது ஆபத்தான வேலை, சறுக்கினா சில நேரம் சவுக்காலையில் தான் வாழ்க்கை முடியும்  "

                   எண்டு அடவைஸ் போல சொன்னார் ,அவர் சொன்னது எனக்கு நடந்தது ,அதைக் கதையின் முடிவில் சொல்லுறன் .

                        ஆனந்தன் அண்ணை வீட்டுக்கு வந்த முதல் இரண்டு நாளும் ,தலை கரணமாக்  குடிப்பார். குத்து விளக்குப் போல எந்த  முக்கியமான சமய நாட்களின் நல்ல நேரமெல்லாம்  சாமி அறையில அபிராமி அந்தாதி பாடிக்கொண்டு இருக்கிற சாந்தி அக்காவைப் போட்டு அடிப்பார்.  அயல் அட்டை வீடுகளுக்கு அடிச்சு  நொறுக்குற, சத்தம் கேடகாமல் இருக்க ,டேப் ரெகொர்டரில்
           
                        " ஆனந்தம் விளையாடும் வீடு ,இது அன்பாலே உருவான கூடு ,,,,இது ஆனந்தம் விளையாடும் வீடு   ,அன்பாலே உருவான கூடு  " 

                                        என்ற பாடலை உரத்துப் போட்டுடுதான் ,சாந்தி அக்காவுக்கு போட்டு விளையாடுவார் , சாந்தி அக்கா ,பிறந்ததே கணவனிடம் உதை வேண்டவும் ,காதலித்துக் கலியாணம் கட்டினதே அடி வேண்டத்தான் என்பது போல ,ஒண்டும் சொல்லாமல்  ,நல்ல அடக்க ஒடுக்கமான குடும்பப் பெண் போல அடி வேண்டுவா !

                                      இரவு நல்லா வெறி ஏற, அவர்கள் வீடுக்கு முன்னால , எங்களின் வீட்டு மதிலோட ஒட்டிக்கொண்டு நின்ற வேப்ப மரத்துக்கு கீழ, ஓலைப் பாயைப் போட்டு ,ஆனந்தன் அண்ணை அண்ணாந்து கிடந்து கொண்டு

                         " அமைதிக்குப் பெயர் தான் சாந்தி ,,எடியே சாந்தி , எடியே சாந்தி , என் அமைதியில் ஏதடி சாந்தி ,எடியே சாந்தி ,எடியே சாந்தி ,,உன் உறவினில் ஏதடி சாந்தி,,எடியே சாந்தி ..... "

                             எண்டு கோவமாப் பாடுவார்  , சாந்தி அக்கா சத்தமில்லாமல் அவர்கள் வீட்டு வெளி விறாந்தையில் இருந்து அன்புக் கணவன் மனமுருகிப் பாடுறதைக் கேட்டுக் கொண்டிருப்பா.  அவர் படுத்து கிடக்கும் வேப்ப மரம் காத்தில ஆட

                           " ஆரடா அவன் வேப்ப மரத்தை ஆட்டுறவன் , எடியே சாந்தி உன்ற கள்ளப் புருஷன் வந்து மரத்தில ஒளிஞ்சு நிக்குரான் போல "  

              எண்டு பேசுறது எங்களின் வீடுக்கு கேட்கும் ,நான் அம்மாவிடமே கேட்டிருகேறேன்

                     " ஏனம்மா ஆனந்தன் அண்ணை ,சாந்தி அக்காவை வாய்க்கு வந்தபடி திட்டுறார் ?" 

                        என்று கேட்டு இருக்கிறேன் ,அம்மா அதுக்கு

                        " சாந்தி பாவமடா , சிவானந்தனும் நல்ல பொடியன் தான் , வேலை கஸ்ரத்தில ரெண்டுநாள் குடிச்சுப் போட்டு உளறுறான் , உலகத்தில இப்படி பல வீடுகளில் நடக்குது தானே, குடி மனுசரை நிதானமாய் ஜோசிக்க விடாது , புத்திசாலி  நரியே கள்ளைக் குடிச்சுப் போட்டு ஓட்டைப் பானைக்க விழுந்த மாதிரி ஒருநாள் கஷ்டத்தில விழுத்தும், நீயும் இந்த குடி வெறியப்  பழகி சீரளியாதையடா!" 

                       எண்டு சொன்னது நினைவு இருக்கு !.அம்மா நரி ஓட்டைப் பானைக்க விழுந்த மாதிரி ஒருநாள் கஷ்டத்தில விழுத்தும் எண்டு சொன்னதும் எனக்கு நடந்தது ,அதையும் கதையின் முடிவில் சொல்லுறன் .

                                          ஆனந்தன் அண்ணை தூங்கின பிறகுதான் சாந்தி அக்கா ,அவாவுக்கு விரும்பின ,எப்பவுமே பாடும் ஒரு பாடலை பாடுவா ! சும்மா சொல்லவில்லை சாந்தி அக்கா நல்லாப் பாடுவா , அவா சங்கீதம் படித்தவர்கள் போல " கமகம் , சங்கதி " எல்லாம் வைத்து பாடுவா ,அவா பாடிய அந்த ஒரே ஒரு பாட்டு , அவா அந்த யாழ்ப்பான இரவின் அமைதியில் பாடியதால் மட்டுமே இப்பவும் 25 வருடங்களின் பின்னும் எனக்கு நினைவு இருக்கு ,

                                           தேன் நிலவு படத்தில வாற "ஊரெங்கும் தேடினேன் ஒருவனைக் கண்டேன் ,,அந்த ஒருவனுக்குள் தேடினேன் உள்ளத்தைக் கண்டேன் " என்ற அந்த பாடலின் சரணத்தில வரும்

                                       " காண வந்த மாளிகையின் கதவு திறந்தது ,அங்கு கருணையோடு தெய்வம் ஒன்று காத்திருந்தது ,.." 

                                                 என்ற வரிகள் அவா படிக்கும் போது விக்கி விக்கி அழுவா ,,அந்த பாடலின் கடைசி வரிகளான 

                                        " வாழ எண்டு நீங்கள்சொன்னால் , வாழ சம்மதம் ,இல்லை மறைய எண்டு நீங்கள் சொன்னால் அதுக்கும் சம்மதம் ....."

                                                என்ற வரிகளை திருப்பி திருப்பி வேப்ப மரத்தைப் பார்த்துப் பாடிப்போட்டு ,கொஞ்சம் அமைதியாகி ,அந்த கடைசி வரியை கொஞ்சம் மாற்றி "

                      " வாழ எண்டு நீங்கள் சொன்னால் , வாழ சம்மதம் ,இல்லை சாக எண்டு நீங்கள் சொன்னால் அதுக்கும் சம்மதம் ....."

                                எண்டு பாட்டிப்போட்டு, வேப்ப மரத்துக்கு கீழ குறட்டை விடும் ஆனந்தன் அண்ணையை , ஒரு " பெட் சீட் " எடுத்துக்கொண்டு வந்து , காலையில குளிரும் எண்டு நினைச்சோ என்னவோ ,இழுத்து மூடிப் போட்டு , வீட்டுக்குள் போய்ப் படுத்துருவா!

                                          காலையில ஆனந்தன் அண்ணை ,வேற மாதிரி இருப்பார் சாந்தி அக்கா அதேபோல இருப்பா .பொதுவா இப்படி சம்பவங்கள் இரவில நடக்கும் வீடுகளில் அடுத்தநாள் காலை "தாய்குலம் களின் " சூரன் போர் நடக்கும் ! ஆனால் சாந்தி அக்க ஒண்டுமே சொல்லமாட்டா , ஒண்டுமே நடக்காத மாதிரி

                                   " இண்டைக்கு கூனி இறால் வேண்டியந்து ,முருங்கை இலை போட்டு சுண்டுவமா அப்பா ? "

                                எண்டு கேட்க ஆனந்தன் அண்ணை ,மூலயில் ஒரு பூனைக் குட்டி போல பதுங்கிக்கொண்டு இருந்து ,அந்த கேள்விக்கு வாயைத் திறந்து பதில் சொல்லவே சக்தி இல்லாத மாதிரி தலையை மட்டும் ஆட்டுவார் , சாந்தி அக்கா

                                    " மட்டுவில் கத்தரிகாயும் வேண்டிக்கொண்டு வாறன் , உங்களுக்கு விரும்பின வெள்ளக் கறி வைப்பம் ,என்னப்பா !" எண்டு போட்டு ஒரு பிளாஸ்டிக் கூடை யை எடுத்துக்கொண்டு " தலை இடிகுதென்டா, நேற்றையான் மிச்சம் கொஞ்சம் கிடக்குதெல்லோ , அதை மட்டும் சாப்பிட முதல் குடியுங்கோ ,என்னப்பா "

                                  எண்டு சொல்லி போட்டு சந்தைக்குப் போவா ! ஆனந்தன் அண்ணை தலையைக் குனிஞ்சுகொண்டு இருப்பார்.

                             ஆனந்தன் அண்ணையையும் ,சாந்தி அக்காவையும் பற்றி ,20 வருடங்களின் பின் ,யாழ்ப்பாணத்தில. சின்ன வயசில்......" நடந்த சம்பவத்தை நினைவில்த் தொடக்கி எழுவதில் ஒருவித அலாதியான இன்பம் கிடைகிறது , தொலைந்து போன ஒரு தொடர்கதையை தொடர்வது போல இருக்கு அதுதரும் நினைவுகளின் இரைமீட்டல்....

                                   ஆனந்தன் அணையையும் ,சாந்தி அக்காவையும் பற்றி நினைவு வந்ததே ...ஒரு முறை பிரான்ஸ் பாரிஸில் இருந்து வைனைக் குடிச்சுப்போட்டு ,

                               " வைன் குடிச்சா காத்துப் படத்தான் வெறி ஏறும் " 

                                           எண்டு ஒரு வெறிக் குட்டி சொன்ன அட்வைசை நம்பி , காத்துப்  படாமல் இருக்க  காரின் ஜன்னல்களை இறுக்கி மூடிப் போட்டு , கார் ஓடிக்கொண்டு பல மணித்தியாலம் பிரான்சில் இருந்து சுவீடன்க்கு  ,ஜெர்மன் நாட்டு அதிவேக  ஓட்டோ பான் நெடுஞ்சாலையில் அசராமா , போர்மிலா வன் டிரைவர் ,மைகள் சூமெகர் போல ஓடிக்கொண்டு வந்து ,பெல்ஜியத்தில் ஒரு சின்ன குறுக்குப் பாதையில் இறக்கி , மெதுவாக ஓடிவந்து ,  கார் பார்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த ஒரு காருக்கு ,பின்னால அடிச்சு ,என்னோட கார் எஞ்சின் தீப்பிடிச்சு எரிய ,மயிரிழையில் உயிர் தப்பினேன் ! 

                                  20 வருடங்களின் பின், உபதேசம் உறைத்த அதுக்குப் பிறகு இன்று வரை கார் ஓடுவதில்லை ! சின்ன வயசில் அம்மா சொன்ன அட்வைசிலும் , ஆனந்தன் அண்ணை சொன்ன அட்வைசிலும் வாழ்க்கைப் பாடத்தை யாரும் தியரியாப் படிக்கவே முடியாத விசியம் இருக்கு எண்டு விளங்க எனக்கு 20 வருடங்கள் எடுத்து இருக்குது !.

.
நாவுக் அரசன்
ஒஸ்லோ ,நோர்வே .