Thursday, 14 May 2015

அமைதிக்குப் பெயர் ...

அந்தக் காலம் , மனிதர்கள் , சம்பவங்கள் எல்லாமே ஒரு கனவுபோல மறைந்துவிட்டது . சிலது நிரந்தரமாக மறந்த போதும் , சிலது மறக்கவில்லை. அதில ஒன்று யாழ்பாணத்தில எங்களின் வீட்டுக்கு அருகில் ஆனந்தன் அண்ணை எண்டு ஒருவர் இருந்தார் . அவர் பாக்கிறதுக்கு மார்க்கண்டேயர் போல கருப்பா இருந்தாலும் , நல்ல வாட்ட சாட்டமான எழும்பின ஆம்பிளை.


                                              சாந்தி அக்காவை, எல்லா ஆம்பிளைகளும் ரெம்ப நல்லவங்கள் போல,  நேரம் கெட்ட நேரத்தில விதி விளையாடும் போது விடுற " உன்னைக் கண் கலங்காமல் கடைசிவரை காப்பாற்றுவேன் " எண்டு டயலக் பேசி ,  நல்லாப் படிசுக்கொண்டு கம்பஸ் போற கனவில இருந்த அவாவை காதலித்து கலியாணம் கட்டி , அவாவின் பட்டதாரிக் கனவில மண்ணை அள்ளிப்போட்டுக் குடியும் , குடித்தனமுமா வாழ்ந்தார் !

                                 சாந்தி அக்கா தான் அந்த வீட்டில ஒரே ஒரு பெண் பிள்ளை, மற்ற அஞ்சு பேரும் ஆம்பிளைகள். அதில நாலுபேர் ஜெர்மனிக்கும், பிரான்சுக்கு
ம்,  போயிட்டாங்க,  ஒருவர் …..... என்ற இயக்கத்துக்கு " தமிழ் ஈழம் எடுக்காமல் திரும்பி வரவே மாட்டேன் " எண்டு  போனவர் !  போனவர் போனவர்தான் ,



                                    அவர் எடுக்கப் போனது எடுத்துக் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை அவர் சும்மா தன்னும் வீட்டுக்கு உயிரோடு திரும்பி வந்ததே இல்லை. அவர் பற்றி யாருக்கும் ஒண்டும் தெரியாது.


                                        அரசாங்க வேலை செய்து கொண்டு இருந்த அவாவின் அப்பா, சாந்தி அக்கா சின்னதா இருந்த போதே, அவரோட நடு வயசில் குடியால ஒரு நாள் இதயம் இறுக்க , ரெண்டு தரம் இருமிப் போட்டு இறந்திடார்,

                                     

நாலு அண்ணன்களும் சாந்தி அக்காவை ஏ எல் வரை நல்லா படிக்க வைக்க, எப்படியோ ஆனந்தன் அண்ணை அவாவை எங்கயோ விதியின் விளிம்பில் சந்திச்சு, என்னவோ சிலப்பதிகாரக் கானல் வரிகள் சொல்லி மயக்கி, என்னத்தையோ மன்மதன் அம்புபோலக் காட்டி இளக வைத்து


                                                " படிச்சு என்னத்தைக் இனிக் கிழிக்கப் போறாய்,நீ இல்லாட்டி பொலிடோல் குடிப்பேன் "


                                                         எண்டு எப்படியோ பெண்களின் பலவீனத்தை சாதகமாக்கி மனம் மாற்றி ஒரு நாள் ஊருக்கு அதிகம் தெரியாமல் அவர்கள் கலியாணம் நடந்தது.

                               " தங்கச்சி கட்டும் வரை நாங்கள் கலியாணம் கட்ட மாட்டோம், அவளுக்கு டாகுத்தர் அல்லது எஞ்சினியர் அல்லது அக்கவுன்டன் மாப்பிள்ளை பார்த்து , வீடு வளவு சீதனம் கொடுத்து , நகை நட்டு அள்ளிப் போட்டு , கலியான வீடுக்கு வீதிவரை பந்தல் போட்டு , ஊருக்கு வெத்திலை பாக்கு வைச்சு, வாற எல்லாருக்கும் ரோசாப்பு பன்னீர் தெளிச்சு, புதுத் தம்பதிகள் கால்கள் பூ மியில் படாமல் கோவிலில் இருந்து வீடு வரை நடை பாவாடை விரிச்சு,  பத்மநாதன் மேளக் கோஸ்டி பிடிச்சு, இரவு ரங்கன் கோஸ்டியின் பாட்டுக்கோஸ்டி கூப்பிட்டு ஊரை அதிர வைச்சு .....ராசாத்தி போல வாழ வைப்போம் ...." 


                            எண்டு உறுதிமொழி கொடுத்த நாலு அண்ணன்களும் வெறுத்துப்போய் அதுக்கு பிறகு அவாவோட தொடர்பையே துண்டித்து விட்டார்கள்.

                                     

ஆனந்தன் அண்ணை கலியாணம் கட்டின நேரம் மிக மிக நல்ல மனிதர். பிறகு கொஞ்சம் அவர் வேலை அவரை உலைக்கத் தொடங்கின நேரமும் மிக நல்ல மனிதர் . கொஞ்சநாள் சாந்தி அக்காவோட கதவழிப் பட்டுக்கொண்டு இருந்த நேரமும் நல்ல மனிதர் .


                              அதன் பின் என்ன நடந்ததோ தெரியாது குடிக்காத நேரத்தில மட்டும் அவர் கொஞ்சம் நல்ல மனிதரா இருந்தார். !

                                   

அவர் யாழ்பாணத்தில இருந்து சங்கானை மனியதிண்ட இசுசு லோரியில புகையிலை ஏற்றிக்கொண்டு கொழும்புக்குப் போகும் லோரியில டிரைவரா வேலை செய்தார்.


                                                   மாசத்தில ஒரு கிழமைதான் சாந்தி அக்காவோட வீட்டுக்கு வந்து நிற்பார் ,மற்ற நாட்கள் எல்லாம் நேரம் ,காலம் இல்லாமல் , யாழ்ப்பாணம் - கொழும்பு இரண்டையும் இணைக்கும் கண்டி ரோடில , அந்த இசுசு லோறியக் கலியாணம் கட்டின மாதிரி அதோட தான் அவரோட சீவியம் போகும்.

                                                 

ஆனந்தன் அண்ணை வீடுக்கு வார அந்த ஒரு கிழமை நாட்களில் , கையோட அவர் ஓடுற இசுசு லொறியையும் கொண்டு வந்து எங்களின் வீடுக்கு பக்கத்தில இருந்த பால்ப் பண்ணை இருந்த வெறும் பள்ளக் காணிக்கை விட்டுட்டு , அதை, வேண்டுமெண்டே ஏறக்குறய மறந்த மாதிரிதான் இருப்பார்.


                                                   நான் அதில ஏறி விளையாடுவான் ,கியர் மாத்துவன் ,கோன் அடிப்பன் , அச்சிலேடரை அமத்துவன், அங்கால இன்காலா கையால சிக்னல் போடுவேன் , சில நாட்கள் அந்த லொறியை யாழ்பாணத்தில இருந்து கொழும்புக்கு ஒரு அக்சிடண்டும் படாமலே கண்டி ரோட்டில ஒட்டிக் கொண்டு போய், முருகண்டியில் சயிட் எடுத்து நிற்பாட்டி, இறங்கி பிள்ளையாருக்கு தேங்காய் உடைச்சுப்போட்டு ஒரு சேதாரமும் இல்லாமல் கொழும்புக்கே கொண்டு போயிருக்கிறேன் .

                        ஆனந்தன் அண்ணை நான் லொறி ஓடுறதை பாத்திட்டு , ஒருநாள்

                           " உமக்கு என்ன லொறி ஓடுற டிரைவர் ,வேலை வளர்ந்து செய்ய விருப்பம் போல இருக்கு , ஆனால் அந்த நசல் வேலை மட்டும் செய்யவேண்டாம் , நான் ரோட்டு ரோட்டா வீடு வாசல் இல்லாமல் , பொஞ்சாதி முகத்தைப்பார்த்து மாதக்கணக்கில் சீரளியிர கேவலத்தை பாரும் , நல்லாப் படிச்சு கதிரையில் இருந்து உத்தியோகம் பார்க்கிறதுக்கு படியும், வாகனம் ஓடுறது ஆபத்தான வேலை, சறுக்கினா சில நேரம் சவுக்காலையில் தான் வாழ்க்கை முடியும் "

                                             எண்டு அடவைஸ் போல சொன்னார் ,



                                          அவர் சொன்னது எனக்கு நடந்தது ,அதை  முடிவில் சொல்லுறன் .

                                         

ஆனந்தன் அண்ணை வீட்டுக்கு வந்த முதல் இரண்டு நாளும் ,தலை கரணமாக் குடிப்பார். குத்துவிளக்குப் போல எந்த முக்கியமான சமய நாட்களின் நல்ல நேரமெல்லாம் சாமி அறையில அபிராமி அந்தாதி பாடிக்கொண்டு இருக்கிற சாந்தி அக்காவைப் போட்டு அடிப்பார்.


                                              அயல் அட்டை வீடுகளுக்கு அடிச்சு நொறுக்குற, சத்தம் கேடகாமல் இருக்க ,டேப் ரெகொர்டரில் " ஆனந்தம் விளையாடும் வீடு ,இது அன்பாலே உருவான கூடு ,,,,," என்ற பாடலை உரத்துப் போட்டுடுதான் ,சாந்தி அக்காவுக்கு போட்டு விளையாடுவார் ,


                                              சாந்தி அக்கா ,பிறந்ததே கணவனிடம் உதை வேண்டவும் , காதலித்துக் கலியாணம் கட்டினதே அடி வேண்டத்தான் என்பது போல ,ஒண்டும் சொல்லாமல் , நல்ல அடக்க ஒடுக்கமான குடும்பப்பெண் போல அடி வேண்டுவா !

                                

 இரவு நல்லா வெறி ஏற, அவர்கள் வீடுக்கு முன்னால , எங்களின் வீட்டு மதிலோட ஒட்டிக்கொண்டு நின்ற வேப்பமரத்துக்கு கீழ, ஓலைப் பாயைப் போட்டு , ஆனந்தன் அண்ணை அண்ணாந்து கிடந்து கொண்டு

                            " அமைதிக்குப் பெயர் தான் சாந்தி ,,எடியே சாந்தி , எடியே சாந்தி , என் அமைதியில் ஏதடி சாந்தி ,எடியே சாந்தி ,எடியே சாந்தி ,,உன் உறவினில் ஏதடி சாந்தி,,எடியே சாந்தி ..... "

                                 எண்டு கோவமாப் பாடுவார் , சாந்தி அக்கா சத்தமில்லாமல் அவர்கள் வீட்டு வெளி விறாந்தையில் இருந்து அன்புக் கணவன் மனமுருகிப் பாடுறதைக் கேட்டுக் கொண்டிருப்பா. அவர் படுத்து கிடக்கும் வேப்ப மரம் காத்தில ஆட

                              " ஆரடா அவன் வேப்ப மரத்தை ஆட்டுறவன் , எடியே சாந்தி உன்ற கள்ளப் புருஷன் வந்து மரத்தில ஒளிஞ்சு நிக்குரான் போல "

                                                      எண்டு பேசுறது எங்களின் வீடுக்கு கேட்கும் ,நான் அம்மாவிடமே கேட்டிருகேறேன்

                    " ஏனம்மா ஆனந்தன் அண்ணை , சாந்தி அக்காவை வாய்க்கு வந்தபடி திட்டுறார் ?"

என்று  , அம்மா அதுக்கு

                                          " சாந்தி பாவமடா , சிவானந்தனும் நல்ல பொடியன் தான் , வேலை கஸ்ரத்தில ரெண்டுநாள் குடிச்சுப் போட்டு உளறுறான் , உலகத்தில இப்படி பல வீடுகளில் நடக்குது தானே, குடி மனுசரை நிதானமாய் ஜோசிக்க விடாது , புத்திசாலி நரியே கள்ளைக் குடிச்சுப் போட்டு ஓட்டைப் பானைக்க விழுந்த மாதிரி ஒருநாள் கஷ்டத்தில விழுத்தும்,  நீயும் இந்த குடி வெறியப் பழகி சீரளியாதையடா!"

                                    எண்டு சொன்னது நினைவு இருக்கு !.



                                                 அம்மா நரி ஓட்டைப் பானைக்க விழுந்த மாதிரி ஒருநாள் கஷ்டத்தில விழுத்தும் எண்டு சொன்னதும் எனக்கு நடந்தது ,அதையும் கதையின் முடிவில் சொல்லுறன் .

                                       

ஆனந்தன் அண்ணை தூங்கின பிறகுதான் சாந்தி அக்கா ,அவாவுக்கு விரும்பின , எப்பவுமே பாடும் ஒரு பாடலை பாடுவா ! சும்மா சொல்லவில்லை சாந்தி அக்கா நல்லாப் பாடுவா .  அவா சங்கீதம் படித்தவர்கள் போல " கமகம் , சங்கதி " எல்லாம் வைத்து பாடுவா ,அவா பாடிய அந்த ஒரே ஒரு பாட்டு , அவா அந்த யாழ்ப்பான இரவின் அமைதியில் பாடியதால் மட்டு மே இப்பவும் 25 வருடங்களின் பின்னும் எனக்கு நினைவு இருக்கு ,

                               "ஊரெங்கும் தேடினேன் ஒருவனைக் கண்டேன் , அந்த ஒருவனுக்குள் தேடினேன் உள்ளதைக் கண்டேன் " என்ற அந்த
பாடலின் சரணத்திலவரும்


                     " காண வந்த மாளிகையின் கதவு திறந்தது ,அங்கு கருணையோடு தெய்வம் ஒன்று காத்திருந்தது ,.." 


                                      என்ற வரிகள் அவா படிக்கும் போது விக்கி விக்கி அழுவா ,,அந்த பாடலின் கடைசி வரிகளான 

                           " வாழ எண்டு நீங்கள்சொன்னால்  வாழ சம்மதம் , இல்லை மறைய எண்டு நீங்கள் சொன்னால் அதுக்கும் சம்மதம் ....." 

                                என்ற வரிகளை திருப்பி திருப்பி வேப்ப மரத்தைப் பார்த்துப் பாடிப்போட்டு ,கொஞ்சம் அமைதியாகி , அந்த கடைசி வரியை கொஞ்சம் மாற்றி "

                                        " வாழ எண்டு நீங்கள் சொன்னால்   வாழ சம்மதம் , இல்லை சாக எண்டு நீங்கள் சொன்னால் அதுக்கும் சம்மதம் ....."

                                     எண்டு பாட்டிப்போட்டு, வேப்ப மரத்துக்கு கீழ குறட்டை விடும் ஆனந்தன் அண்ணையை , ஒரு " பெட் சீட் " எடுத்துக்கொண்டு வந்து , காலையில குளிரும் எண்டு நினைச்சோ என்னவோ , இழுத்து மூடிப் போட்டு , வீட்டுக்குள் போய்ப் படுத்துருவா!






காலையில ஆனந்தன் அண்ணை ,வேற மாதிரி இருப்பார் . சாந்தி அக்கா அதேபோல இருப்பா .பொதுவா இப்படி சம்பவங்கள் இரவில நடக்கும் வீடுகளில் அடுத்தநாள் காலை "தாய்குலம்களின் " சூரன் போர் நடக்கும் ! ஆனால் சாந்தி அக்க ஒண்டுமே சொல்லமாட்டா , ஒண்டுமே நடக்காத மாதிரி

                                      " இண்டைக்கு கூனி இறால் வேண்டியந்து , முருங்கை இலை போட்டு சுண்டுவமாப்பா ? "

                                           எண்டு கேட்க ஆனந்தன் அண்ணை , மூலயில் ஒரு பூனைக் குட்டி போல பதுங்கிக்கொண்டு இருந்து , அந்த கேள்விக்கு வாயைத் திறந்து பதில் சொல்லவே சக்தி இல்லாத மாதிரி தலையை மட்டும் ஆட்டுவார் , சாந்தி அக்கா

                                     " மட்டுவில் கத்தரிகாயும் வேண்டிக்கொண்டு வாறன் , உங்களுக்கு விரும்பின வெள்ளக் கறி வைப்பம் ,என்னப்பா !" 


                       எண்டு போட்டு ஒரு பிளாஸ்டிக் கூடை யை எடுத்துக்கொண்டு

                                   " தலை இடிகுதென்டா, நேற்றையான் மிச்சம் கொஞ்சம் கிடக்குதெல்லோ , அதை மட்டும் சாப்பிட முதல் குடியுங்கோ , என்னப்பா "

                                         எண்டு சொல்லி போட்டு சந்தைக்குப் போவா ! ஆனந்தன் அண்ணை தலையைக் குனிஞ்சுகொண்டு இருப்பார்.



ஆனந்தன் அண்ணையையும் ,சாந்தி அக்காவையும் பற்றி ,20 வருடங்களின் பின் ,யாழ்ப்பாணத்தில. சின்ன வயசில்......" நடந்த சம்பவத்தை நினைவில்த் தொடக்கி எழுவதில் ஒருவித அலாதியான இன்பம் கிடைகிறது , தொலைந்து போன ஒரு தொடர்கதையை தொடர்வது போல இருக்கு அதுதரும் நினைவுகளின் இரைமீட்டல்....

                                   
சாந்தியக்கா  போன்ற யாழ்ப்பாணக் ..,"...கதைகளுக்கு "அவுட் லைன் ஸ்கெட்ச் "எழுதி வைத்து ,இன்னும் எழுத நேரம்கிடைக்கவில்லை .  அந்தக் கதைகள் எல்லாம் சாந்தியக்கா வீட்டு வேப்பமரம் போல ஏக்கமா என்னைப் பார்த்துக்கொண்டு இருக்குதுகள் . முதல் பிரசினை எனக்கு கொம்புடரில் தமிழ் எழுதுவது .  அதைவிட தமிழ் இலக்கணம் உதைக்குது.. ஒழுங்கா தமிழ் மொழியில் பூனைக்குட்டி போல பூந்து விளையாடி எழுதமுடிவதில்லை . எப்படியோ

                              ஆனந்தன் அணையையும் ,சாந்தி அக்காவையும் பற்றி நினைவு வந்ததே ...ஒரு முறை பிரான்ஸ் பாரிஸில் இருந்து வைனைக் குடிச்சுப்போட்டு , 


                " வைன் குடிச்சா காத்துப்படத்தான் வெறி ஏறும் " 

                                      எண்டு ஒரு வெறிக் குட்டி சொன்ன அட்வைசை நம்பி , காத்துப் படாமல் இருக்க காரின் ஜன்னல்களை இறுக்கி மூடிப் போட்டு , கார் ஓடிக்கொண்டு பல மணித்தியாலம் பிரான்சில் இருந்து சுவீடன்க்கு , ஜெர்மன் நாட்டு அதிவேக ஓட்டோபான் நெடுஞ்சாலையில் அசராமா , போர்மிலா வன் டிரைவர்  ,மைகள் சூமெகர் போல ஓடிக்கொண்டு வந்து ,பெல்ஜியத்தில் ஒரு சின்ன குறுக்குப் பாதையில் இறக்கி , மெதுவாக ஓடிவந்து , கார் பார்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த ஒரு காருக்கு ,பின்னால அடிச்சு ,என்னோட கார் எஞ்சின் தீப்பிடிச்சு எரிய ,மயிரிழையில் உயிர் தப்பினேன் !


                                                     20 வருடங்களின் பின், உபதேசம் உறைத்த அதுக்குப் பிறகு இன்று வரை கார் ஓடுவதில்லை !

                                      சின்ன வயசில் அம்மா சொன்ன அட்வைசிலும் , ஆனந்தன் அண்ணை சொன்ன அட்வைசிலும் வாழ்க்கைப் பாடத்தை யாரும் தியரியாப் படிக்கவே முடியாத விசியம் இருக்கு எண்டு விளங்க எனக்கு 20 வருடங்கள் எடுத்து இருக்குது !.


.



" சொல்வதெல்லாம் பொய் "

விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்தில், தமிழ்மொழி எல்லைகளை வரையறுக்க, தமிழ் ஈழம் ஒரு தேசமாக, சுதந்திரமாக போக வர முடியாத சுற்றிவளைப்புகள், கண்களைக் கட்டிக் கடத்தும்  நடு இரவுக் கைதுகள் , இராணுவச் சீருடைகளை  வெறுக்கும் இறுதிக் கனவாக, விடுதலைதான் ஒரே வழி என்று தலைமறைவாகத் தத்துவம் சொன்ன முன்னொரு காலத்தில் " இருந்தால் உசிர் போனால் மசிர் " என்று எல்லா இளையவர்களும் திடீர் திடீர் என்று சொல்லாமல்க் கொள்ளாமல் இயக்கங்களுக்குப் போனார்கள். அதில யார் யார் எந்த எந்த இயக்கத்துக்குப் போனார்கள் என்று அந்த நேரம் சரியாத் தெரியாது, அதுக்குக் காரணம் எல்லாருமே இருட்டில் தான் ஏதோ ஒரு இயக்கத்துகு திசை தெரியாத பறவைகள் போலப்   போனார்கள்.

                                   இளவயதில் எங்களின் குளத்தடிக் குழப்படிக் குருப்பில் இருந்த பலரருக்கு  மீசை அரும்பா முளைச்சு, தோள்ப் பட்டை நடு விலா எலும்பால் விரிஞ்சு, கசகச எண்டு சூரைப் பத்தை போல மயிர் கண் காணாத இடத்தில வளரத் தொடங்கின நேரம் ,நெஞ்சை நிமித்திக்கொண்டு எல்லா இயக்கத்துக்கும் அரசியல் அடிப்படை தெரியாமல் வெளிக்கிட்டுப் போன வீராதி வீரன்களில் முக்கியமான ஒருவன்  கொழுவி குமாரு, முப்பது வருட விடுதலைப் போராட்டத்தில் சிதறு தேங்காய் ஆகாமல் தப்பி இப்பவும் மாதுளம்பூ  நிற  வீராளி அம்மாளாச்சியின் அண்டமெல்லாம் காக்கும் கடைக்கண் பார்வையால்த் தப்பி  யாழ்பாணத்திலயே இருக்கும் ஒரு அதிசய பிறவி அவன்.

                                 கொழுவி குமாரு எப்படி தப்பி இருக்கிறான் என்பது எனக்கு தெரியவில்லை. அதுக்குக் காரணம் துவக்கைக் காட்டி எல்லாரையும் பாப்பா மரத்தில ஏத்தின இயக்கத்துக்கு  ,மலிபன் பிஸ்கட் வேண்டிக் கொடுத்து, முடக்கொத்தான் வேலிக்கை மடக்கி வைச்சு நெஞ்சுச் சட்டைக்கை கையைப் போட்டுத் துலாவி லவ் பண்ணிக்கொண்டு இருந்த, கொழும்பில பிறந்து வளர்ந்து எண்பத்து மூன்று கலவரத்தில்  கப்பலில் அகதியா யாழ் வந்த  சாருலதா என்ற  லைனுக்கும் சொல்லாமல் ஒரு இரவு நாகர்கோவிலுக்கு வான் ஏறி, மணல்காட்டில் வள்ளம் ஏறி , மரவள்ளிக்  கிழங்கு திண்டு ட்ரைனிங் எடுத்து , தேசவிடுதலையை வெறும் காலில் செருப்பும் இல்லாமல் சொல்லிக் கொடுத்த இயக்கத்துக்குப் போனவன், குறைநினைக்க வேண்டாம் ,  சொறி இப்படி சொல்வது பிழை ,அவன் தேசியத்தில்   உள்வாங்கப்பட்டவன் எண்டு தான் சொல்ல வேண்டும் ,இல்லாட்டி வரலாறு என்னை இந்த நுற்றாண்டு முழுக்கவும்  மன்னிக்காது.

                                அவன் போன இயக்கம் தான் அதி நவீன ஆயுதங்கள் வைச்சு இருந்த இயக்கம். மற்ற இயக்கங்கள் எல்லாமே இந்தியா கொடுத்த AK 47 துவக்கை வைச்சு  " பனை மரத்தில வவ்வாலாம் சிங்களவன் சவாலாம்  " எண்டு நேர்சறிப் பிள்ளைகள் போல நோண்டிக் கொண்டு இருந்த நேரம் , கொழுவி குமாரு அவன் இருந்த இயக்கம் வைச்சு இருந்த ஜெர்மன் நாட்டு ஹெக்ளர் அண்ட் கொச் நிறுவனம் தயாரிச்ச G3A3 துவக்கை கொழுவிக் கொண்டு முதல் முதல் படம் எடுத்து எல்லாருக்கும் காட்டினவன். அதுக்காக தான் அவனுக்கு கொழுவி குமாரு என்று பெயர் வந்தது என்று நினைக்க வேண்டாம், அது வேற ஒரு காரணம் சாருலதா கதையில் இருக்கு . பிறகு அதை எழுதுறேன்..

                         குமாரு இப்பவும் யாழ்பாணத்தில் இருக்கிறான். அவன் இயக்க அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறான்.  நான் ஐரோப்பாவில் அரசியல் அகதி என்று டமால் டுமில் விட்டு, வெள்ளைக்காரனின் சுதந்திர நாட்டில்  கொக்கத்தடியில் கொம்பு வைச்சு, அதில கோவணத்தைக் கொடி போலக் கட்டித் தொங்கவிட்டு வாழ்கையை  ஒட்டிக்கொண்டு  வசிப்பது அறிந்து, எங்கயோ தேடிபிடித்து ,யார் மூலமாகவோ என் தகவல் பெற்று ஒரு மெயில் என்னைபோல தப்பி ஓடிவந்து வெளிநாட்டில் வசித்துக்கொண்டு, சொத்தி ஆடு எட்டிப் பார்த்ததுக்கு  அடியடா படலையில் எண்டானாம் போல  அது மலருது ,,இது  மலருது .,தேசம் விடியுது ,,கொடி  ஏறுது என்று உசுப்பு ஏற்றும் கோஸ்டிகளை  நார் நாராகக் கிழித்து அனுப்பி இருந்தான்.   அதில அவன் ஏதோ ஒரு சண்டையில் வலது காலை இழந்து, இப்ப ஜெய்பூர் செயற்கை பிளாஸ்டிக் கால் போட்டு இருப்பதாக சொல்லி, அதை உறுதிசெய்ய படமும் அனுப்பி இருந்தான்.

                குமாரு எழுதின , " எடேய்  வம்பில பிறந்த தேவடியாள்  மக...... . ஒருநாள் இல்ல ஒருநாள்  மாட்ட வேண்டி வரும்  அப்ப......... கருக்கு மட்டையால ......விளாசுவேன் ....ஓடிப்போய் நிண்டு......இக்க   குசு குசுதுக்கொண்டு ... முதுகெலும்பு இல்லாத  பச்சோந்தி பரதேசிகள் ,,,,,,அம்பிட்டா .......இழுத்து வைச்சு   அரிஞ்சு  போட்டுதான்  மற்ற  வேலை   பார்ப்பேன்...... ஒருநாள்....... நீங்கள்...... எல்லாம்....க்க ..,,,ஐப்  பிடிச்சுக்கொண்டு . இங்கே வந்து தானே   ஆகவேண்டும் ..  " என்று  எழுதி இருக்கும் உணர்ச்சிப் பிழம்பான அந்த  மெயில் தனியா ஒரு நாள் இங்கே போடுறேன். என்ன அவன் பச்சை பச்சையா படு தூசனத்திலேயே பச்சையா எழுதியுள்ளதால் அதை எடிட் செய்யாமல்  போட முடியவில்லை.

                                        மூன்று தசாப்த காலத்தின் பின் குமாரு உசிரோடு இருப்பது எவளவு ஆச்சரியமோ அவளவு ஆச்சரியம் அவன் தன்னோட அனுபவங்களை எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டுருப்பது. கொழுவி குமாரு எங்களோட குளத்தடிக் குழப்படிக் குருப்பில் இருந்த நேரமே சூடு சொரணை இல்லாதவன், அவனோட கமக்கட்டில காஞ்சோண்டி இலையை சும்மா விளையாட்டாக தடவினாலே, பழங்கிணற்றடிப் பிள்ளையார் போல ஒரு அசுமாத்தமும் இல்லாமல் இருப்பான், அப்படி அவன் கழுவுற மீனில நழுவுற மீன் போல இருந்ததால் ,ஒருவேளை  குளறுபடிகளில் குத்துக்கரணம் போட்டு தப்பி இருக்கலாம் என்று நினைக்கிறன்.

                                   கதை புனைவதில் தயிர் கடைவதைப் போலக் கில்லாடியான கொழுவி குமார எழுதி அண்மையில் வெளி வந்த " சொல்வதெல்லாம் பொய் " புத்தகம் எப்படியோ எனக்கும் வாசிக்கக் கிடைத்தது. யாழ்பாணத்தில ஒரு சின்ன வாசிகசாலை அறையில் தொடக்க நிகழ்வாக  குத்துவிளக்கும் கொழுத்த மனசாட்ச்சி விடாததால் தலைமை தாங்கியவர் நுளம்புத்திரி ஒன்று பத்த வைச்சுப் போட்டு , வெளியீட்டு விழாவிற்கு பெருந்திரளாக வந்திருந்த வாசகர்கள் முன்னால் வாயத் திறந்தால் இன்னும் அதிகம் பொய் வரும் என்பதால், தலைமை தாங்கிய விழாத்  தலைவர் விநாயகமூர்த்தி விதானையார் ,

                       " இது உண்மைக் கதை இல்லை, முழுவதும் கற்பனை. முடிவில் யாவும் கற்பனை என்ற முடிவை  நீங்களே போட்டுக்கொள்ளுங்கள் என்ற சிந்தனையின் போக்கில் வரிக்கு வரி எழுதப்பட்ட புத்தகம் ,ஆனாலும்  எல்லாக் கதைகளில் வரும்  உண்மை மனிதர்களின் கற்பனைக் கதை போல கொழுவி குமாரு  ஆதரங்களுடன் எழுதிய புத்தகத்தைப் பற்றி தன்னடக்கத்துடன் இன்று ஒன்றும் பேசமாட்டார்...."

                                     என்று விநாயகமூர்த்தி விதானையார் , சொல்லி அந்த நிகழ்வு அதோடு முடிந்தது என்று கேள்விப்பட்டேன் .  ஆனால் கொழுவி குமாரே மனசாட்சிக்கு விரோதம் செய்யாமல் நடு நெத்தியில நாராயணா நாராயணா என்று நாமம் போட்டு, கொஞ்சம் ஒத்துக் கொல்லும்படி,  நியாயமா கொஞ்சப் பொய்கள் தான் அதில தேர்ந்தெடுத்து எழுதி இருக்கிறான். அப்படிதான் அந்த இயக்கத்தில் இருந்து காசைச் சுருடிக்கொண்டு அல்வா கொடுத்திட்டு வந்து  ,பின்நாட்களில் சர்வதேசப் பொறுப்பாளர் என்ற பதவியில் இருந்த நேரம் இன்னும் கொஞ்சம் காசை சுருட்டிக்கொண்டு ஓடிய ஜே ,கே . கருத்து சொல்லி இருக்கிறார்.

                                  " சொல்வதெல்லாம் பொய் " புத்தகம் பற்றி எனக்கு விமர்சன ஜாம்பவான்கள் போல விமர்சனம்  செய்ய தெரியாததால் ஒன்றுமே எழுத முடியவில்லை,ஆனாலும் பல கதைகளில் பனை மரங்களுக்கு நடுவால பட்டாம்பூச்சி பறக்குது, கொலை விழுத்திய துவக்குகளின் நுனியில் நாவூறு  படாமல் இருக்க தேசிக்காய் நேர்ந்து தொங்கவிட்டு இருக்கு ,பொம்மைவெளி  பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட சம்பவக் கதையில் ஒரு சின்ன சொப்பின் பாக்குக்க கொத்துரொட்டி கொத்தும் தண்டவாள தகட்டை வைச்சே குமாரு கதைவிட்டு இருக்கிறான். கப்பல் தண்ணியில ஓட்டிச்சா,,அல்லது தண்ணி கப்பலுக்க ஓடிச்சா என்று புரியமுடியாமல் உளுந்துவடையில உளுந்து இல்லாமல் சிந்தாமணிக் கடலை தெரியுது. அப்புறம் குமாரே மண்டையில் போட்ட என்று நாங்கள் கேள்விப்பட்ட சுக்குட்டி, நடுவில், தனபாலசிங்கம் , கொலைகள் பற்றி குமாரு நல்லா ஜட்டியை இறுக்கிப் போட்டு மறைச்சிட்டான் போல இருக்கு.  

              தகடு வைச்சுச், காத்து இறக்கிறதுக்கு முதலே சண்டையில் கால் இழந்ததால் விலத்திப்போக அனுமதிக்கபட்டு , நொண்டி நொண்டி வெளிய வந்து,  இயக்கத்துக்கு போன நேரம் ,காதலும் கத்தரிக்காயும் என்று விட்டுப்போட்டுப் போன பழைய  சாருலதாவைத் தேடி இருக்கிறான்  அவள் ,

                      " நீ செத்தா அடுத்தநாளே மண்ணெண்ணெய் ஊதிக் கொழுத்திப் பத்த வைச்சுப் போட்டு செத்துப்போவேன் "

                                         என்று காதலித்த நேரம் சொன்ன  வசனம்  " சொல்வதெல்லாம் பொய் " என்ற புத்தகம் போலவே உறுதியாகச் சொல்லி அழுது குழறிய   அவள்,   ஹொலண்டுக்கு இன்னொருத்தனோடு கலியாணம் கட்டிப் போனது கேள்விப்பட்டு உடைந்து போய்..... எப்படியோ குமாரு பாவம்,  அவனும் எல்லா உண்மைகளையும் போட்டு எழுதி இருக்கிறான். அதால  பல்லு இருக்கிற நேரம் தானே பகோடா சாப்பிட முடியும் என்று மனித உரிமைகளை மதிக்கும் மனிதாபிமானிகள் அவனுக்காகப் பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தில் வரும் பாத்திரங்கள் பலரோட பெயர் உண்மையாக இருப்பதால் அதை ஒரு வரலாற்று ஆவணம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வரலாற்று அறிஞர் கறிக்கடை கந்தசாமி சொல்லியுள்ளார்.

                                       ஆனால் அந்தப் புத்தகத்தை பற்றி கொம்புடர் குத்து மன்னன்களில் விமர்சன விசர்த்தனத்தில் அளவுக்கு அதிகமாக பொய் கலந்திருக்கு. பெட்டிசம் பாலசிங்கம் போன்ற நேர்மையான விமர்சகர்கள் தற்சமயம் உசிரோடு இல்லாததால் இதில எது உண்மை,எது பொய் என்று பிரித்தறிய முடியவில்லை என்று இன்னுமொரு பின்கதவால புகழ் பெற்ற  விமர்சகர் அவரோட வயிதெரிச்சல் இணயத் தளத்தில் அற்புதமாக எழுதி இருக்கிறார்.

                           குமாரு அவன் இயங்கிய, அல்லது அவனை வைச்சு இயக்கிய இயக்கத்தின் அலங்கோலத்தை மட்டுமில்லை ,வேற இரண்டு இயக்க அலங்கோலத்தையும் எழுதியுள்ளான், அதில ஒரு இயக்கம் பற்றி வாசிப்பவர்களின் தோளில ஏறி நின்றே ஜேம்ஸ் பொன்ட் படங்களில் வரும் றோயர் மூர்  செய்த சாகச சம்பவங்களை விட , வாயில ஈ போறது தெரியாமல் ஆவெண்டு பார்க்க வைச்சு  காதில பூ சுத்தியுள்ளான்.

                                        பெண்களைப் பற்றிய கதைகள் சிலதில் கொழுவி குமார ஆதரங்களுடன் தக்காளித் தொக்குக்கு கடுகு, சின்ன வெங்காயம் போட்டு தாளிச்ச மாதிரி நல்லாத் தாளிச்சு எடுத்து, சார்லஸ் புயுகொஸ்கி போன்ற  ஒரு சிறந்த கதை சொல்லி போலவே எழுதி இருகிறான்.ஆனால் அந்தக் கதைகள்  ஆணுறை போட்டு பாதுகாப்பாக எழுதப்பட்டு இருந்தாலும்  விரசம் அதிகமா இருக்கு என்று அவனைப் பலர் போட்டு உருட்டவும் இணுவில் அண்ணாக்கோப்பி கம்பனி  நல்லூர் கோவில் திருவிழாவில் அவர்கள் கோப்பி விளம்பரத்துக்கு ஒரு குண்டு மனிதர் சிரித்துக்கொண்டு நிற்கும் படம் போல அதை எல்லாம் அசட்டை செய்யாமல் " அலைஸ் இன் வோண்டர் லான்ட் " கதையில வாற "லூயிஸ் கரோல்  " பூனை போல அவன் இருப்பது ஒரு இலக்கிய ஆச்சரியம்.

                                            உங்களுக்கு மட்டும் உண்மையைச்சொன்னால் என்ன , வாசிக்கிற சராசரி  வாசகனுக்கு என்னமோ  நரிக்குக்  கடைசிப் பல்லு இருக்கும் வரை ஞானம் வராது என்று சொன்ன மாதிரி,  கொழுவி குமாரு உரிச்சு எடுத்து எழுதியிருக்கிற கதைகள் விளக்குமாத்துக்கு குஞ்சரம் கட்டித் தொங்க விட்டு, தென்னம் கள்ளில கோதுமை மாவை வைச்சு  மாவிளக்கு போட்டு அதைத் தீத்தியது போல உள்ள அந்த புத்தகத்தை   , புலனாய்வுப் பின் தொடர்வு ,  நெத்திப்பொட்டில டொக்கு டொக்கு , மின்கம்ப மரணதண்டனை போன்ற சாமானிய மனிதர்கள் கொட்டாவி விட வாயைத் திறந்தாலும் கிடைத்த வீரசுவர்க்க வரலாற்றுச் சாவுக்கும் பயப்பிடாமல் துணிந்து  " சொல்வதெல்லாம் பொய் "  களை   எழுதியுள்ளதை வரவேற்கத்தான் வேண்டும் போல இருக்கு.

.

Tuesday, 5 May 2015

வாழ்க்கைப் பயணம்..

ஒரு நாட்டைப் பற்றி புத்தகத்தில் படிப்பது என்பது வேற அந்த நாட்டை சுற்றிப் பார்ப்பது என்பது வேறு,இரண்டும் வேறு வேறு அனுபவங்கள். முக்கியமா ஒரு நேரடிப் பயணத்தில் ரியலிடியில் பார்க்கும் அனுபவம் அலாதியானது,அதை விட ஒவ்வொரு நகரத்திற்கும் பிரத்தியேக வாசம் இருக்கு அதை சுவாசிக்க முடியும், கலாசாரம் வழியும் பழைய இடங்களில் ஒரு வித பூமி சக்தியை உணர முடியும் ,

                                   இப்படி இருந்தாலும் பிரச்சினை ஒரு நாட்டை எப்படி சுற்றிப் பார்ப்பது என்பதுதான், தனியாக வாழ்பவர்கள், என்னைப்போல தோளில ஒரு ட்ரவல் பையைக் கொழுவிக்கொண்டு,கையில லோன்லி பிளானெட் ட்ரவல் கைடு புத்தகத்தை வைசுக்கொண்டு கிறிஸ்தோபர் கொலம்பஸ் போல வெளிகிடலாம்,
                                           சில வருடம் முன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோன,மட்ரிட்,சென் செபஸ்தியான் நகரங்களை ஒரு கிழமை கிடந்தது சுற்றினேன்,அங்கிருந்தே அந்த நகரங்களைப் பற்றி இங்கே சுட சுட ,சில நேரம் சூடு ஆறமுதல் எழுதினேன். அதை அண்மையில் நானே படித்த போது மறுபடியும் அங்கே நிற்பது போல இருந்தது, 

                                       சில இடங்களின் வாசமும்,சில பெண்களின் வாசமும் நினைவு வர, பார்சிலோன நகர தெருவோர ரூம்பா காதலான இசை காதுக்க கிடுகிடுத்தது. பிரயாண அனுபவங்கள் எப்பவுமே அப்படித்தான், நினைவுகளின் இடப்பெயர்வு தான் பயணம், மறந்து போன ஒரு வாழ்வின் தொடர்ச்சி பயணங்களில் நிறைவு பெறலாம் போல இருக்கு,ஆனாலும் எல்லாருக்கும் இப்படி உலகம் சுற்றிப் பார்க்க வாய்ப்பு,வசதி இல்லை என்பதை நினைக்கும் போது கவலையாவும் இருக்கு .

                                       குடும்பமா குழந்தை குட்டிகளுடன் போறவர்கள் அதிகம் வெளிய கவனிக்க நேரம் கிடைப்பதில்லை. பிரான்சில் வசிக்கும்,யாழ்பாணம் கம்பசிஸ் ஜோக்கிரபி படித்த ஒரு என்னுடைய உறவினப் பெண் ஒருவர் அண்மையில் கனடாவில் உள்ள ற்றொண்டோ நகரம்  போய் வந்தா எண்டு சொன்னா, நானும் கனடா போனதில்லை,ஆனால் அந்த நாட்டில் என்ன என்ன கண்னுக்க நிக்கிற மாதிரி இருக்கு என்று புத்தகங்களில் படித்தும், படங்களில் பார்த்தும் இருக்கிறேன் 
                    
                                 " ற்றோண்டோவில் என்ன பார்த்திங்க " எண்டு கேட்டேன்,

                      " சும்மா ஒண்டாரியோ  மாகானத்தில பல இடங்கள் பார்த்தேன், பிள்ளைகளை ஒவ்வொண்டும் ஒவ்வொரு பக்கம் இழுக்க , எண்ட மனுஷனுக்கு காரில எப்பவும் நோகாமல்  ஓடி ஓடி நடக்கப் பஞ்சியாம் எண்டு சொல்ல,கடைசீல  ஒண்டையும் பார்க்க விடவில்லை " எண்டு சொன்னா,

                        நான் " றோண்டோவின் லேன்ட் மார்க் ஆனா C N N கோபுரம் பார்த்திங்களா " எண்டு கேட்டேன்,

                    அவா " அவடத்தை போனோம் ,நிமிர்ந்து பார்க்க சரியா நேரம் கெடைகேல்லேயே " எண்டு சொன்னா,
                     லேக் ஒண்டாரியோவின் தண்ணி விழும்  நயாகரா வீழ்ச்சி பார்த்திங்களா எண்டு கேட்க வாய் எடுத்து, நயாகரா போய்க் குனிச்சு பார்க்க நேரம் கிடைக்கவில்லை எண்டு சொல்லுவாவோ எண்டு பயத்தில நான் கேட்கலை. 
                             அந்த உரையாடலின் முடிவில் அவா போன உறவினர் வீடுகளில் என்ன கார் வைதிருக்கிரார்கள்,என்ன அளவு பிளாஸ்மா டிவி,எவளவு பெரிய வீடு,அதில உள்ள அறைகள் எண்ணிக்கை போன்ற தமிழ் கலாசாரா அடையாளமான விடுப்பு விண்ணாணம் அறிவதில் ஒரு குறை வைக்காமல் விபரம் சொன்னா.
                                    இதில ஆகப் பெரிய காமடி ஐரோப்பாவில் வசிக்கும் பல தமிழருக்கு ஐரோப்பிய நாடுகளே உலகப் படத்தில எங்கே இருக்கு எண்டு தெரியாது,இங்கிலாந்தில் இருந்து கொண்டு கடவுளின் தேசம் என்று ஒரு வெப் ப்ளாக் வைச்சு எழுதும் பிட்டி கிட்டி என்ற ஒரு பள்ளிக்கால தோழன்,சில வருடம் முன் நான் சுவிடனில் வசித்ததாக் கேள்விப்பட்டு,
          
                          " நீ வசிக்கும் சுவிஸ் பேங்க் உள்ள சுவீடனும், நோபல் பரிசு கொடுக்கும் சுவிச்லாந்தும் வேற வேற நாடுகள் எண்டு அண்மையில்தான் தெரியும் " எண்டு சொன்னான், 

                           நான் பதில் ஒண்டும் சொல்லி அவன் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை,பரிசில் வசிக்கும் சகோதரிக்கு பிரான்ஸ் எங்க இருக்கு எண்டு தெரியாத பிரான்சை சுற்றி உள்ள நாடுகளின் பெயரே தெரியாது,ஆனலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அவர்கள் காரில GPS நேவிகேசன் பொருத்தி ஓடி ,சாமத்திய வீடு,கலியாண வீட்டுக்கு அடிக்கடி போவார்கள், சாமத்திய வீடு,கலியான வீடுகளில் பார்த்த விசியங்கள்,நிறை,குறை.பெறுமதி,மினுக்கம்,விசியங்கள் நல்ல தெளிவா தெரியும்.
                              
                          சுவீடனில் என்னோட நண்பர் தலையிடி எண்டு ஒருவர் இருந்தார் ,அவருக்கு  வரைபடத்தில்  கண்டு பிடிக்க கடினமான ,நெருக்கமான, வாயில நுழையாத பெயர் உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்,தலை நகரம், அந்த நாடுகளின் அருகில் உள்ள நாடுகள் , எல்லைகள்,எல்லைகளில் உள்ள சிறு சிறு நகரங்கள் , ஏற் போர்ட் பெயர், அங்கே பேசப்படும் மொழி, பாவனையில் உள்ள காசின் பெயர் எல்லாம் தலைகாரணமா தெரியும்,அதுக்காக அவர் யுனிவெர்சிட்டி இல ஜோக்கிரபியில மாஸ்டர் டிகிரி முடித்தவர் எண்டு நீங்க நண்பினா நான் பொறுப்பில்லை,அவர் என்ன கடத்தல் செய்திருப்பார் எண்டு பலருக்கு தெரியும்.

                                 பத்திரிகைத் தொழில் ரீதியாக பிரயாணம் செய்து நாடுகளை சுற்றிப் பார்த்து எழுதுவதை " ரவல் ஜெர்னலிஸ்ட் " எண்டு சொல்லுறார்கள்,சிலர் படம் எடுத்து போட்டு கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள் அவர்களை " ரவல் போட்டோ ஜெர்னலிஸ்ட் " எண்டு சொல்லுறார்கள், சாதாரண ஆர்வக்கோளாரில் வெளிக்கிடும் என்னைபோல ஊர் சுற்றிகளுக்கு முன்னப் பின்ன தெரியாத ஒரு நாட்டில், அந்த நாட்டின் உள்ளூர் மொழி புரியாமல் சுற்றிப் பார்ப்பது எப்பவுமே, முன்னப் பின்ன தெரியாத ஒரு இளம் பெண்ணை இரவின் அமைதியில் நேருக்கு நேர் பார்ப்பது கொடுக்கும் த்ரில் போல இருக்கும்,நல்லதும் கெட்டதுமா சில விசியங்கள் நடந்தாலும் அதுவும் அந்த பயணத்தின் மறக்க முடியாத ஒரு அங்கமாக வரலாம்.

                                   நான் ஸ்பெயின் போய் சுற்றிய போது அந்த நகரங்களின் படங்கள் உள்ள நிறைய பிக்சர் போஸ்ட் கார்ட் அந்த அந்த நகரங்களில் இருந்து வேண்டி,ஆங்கிலத்தில் கொஞ்சம் காமடியா எழுதி என் சகோதரியின் பிள்ளைகளுக்கு அனுப்பி இருந்தேன்,அதைப் பார்த்த அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தார்களோ தெரியாது, ஒருவேளை பெரிய உலகம் சுற்றும் அறிவுக் கொழுந்து எண்டு அறிந்து இருப்பார்கள் எண்டு அதைப் பற்றி அறிய அவர்களிடம் 

                         " அந்தப் படங்கள் எப்படி இருந்தது ,உங்க அம்மா என்னைப்பற்றி என்ன சொன்ணா " எண்டு ஒரு முறை கேட்டேன், 
                   
                     அதுக்கு அவர்கள் " படங்கள் சூப்பர் அங்கிள் , நாங்கள் நிறைய மேடிடேர்நியன் நாடுகளின் சிட்டி பற்றி உங்களின் ஆங்கிலக் குறிப்புகளில் இருந்து தெரிந்து கொண்டோம், அப்புறம் ,,உங்களைப் பற்றி  அம்மாவிடம் கேட்க ,அவா  சொன்னா சும்மா,வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுத்துரவனைப் பற்றி தெரிந்து என்ன வரப்போகுது எண்டு சொன்னா அங்கிள் "

                                    என்றார்கள் பிரெஞ்சு மொழி நாக்கில பிரளும் தமிழ் மொழியில் அந்தப் பிள்ளைகள் .
..............................................இதுதான் வாழ்க்கைப் பயணம்..

.

பாட்டி வைத்தியம்.

" வாழ்கையே சிக்கலாகவும் எது செய்யவும் வெறுப்பாகவும், விரும்பிற மாதிரி எதுவுமே நடக்காததால் அலுப்பாகவும், மிக மிக சிக்கலாகவும் இருக்கிறது " என்று ஒரு அன்பர் உணர்ச்சிப் பிளம்பாகிப் பதிவு போட்டு இருந்தார், அவர் அது என்ன சிக்கல் என்று சொல்லவில்லை. இங்கே பேஸ் புக்கில் உள்ளவர்கள் எல்லாருமே சிக்கல் பிக்கல் பிடுங்கல் சோலி சுரட்டு எதுவுமே இல்லாமல் நின்மதியா இருப்பது போலவும் தான் மட்டும் சிக்கலில் அவதிப்படுவது போலவும் போட்டிருந்தார்.
அதுக்கு முதல் கருத்து பதிவிட்ட இன்னுமொரு அன்பர்,
" நான் நினைக்கிறன் உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கு போல " என்று போட, அந்தப் பதிவு போட்டவர்
" அதெப்படி அவளவு கரெக்டாக் கண்டு பிடித்தீங்கள் " என்று பதில்க் கொமென்ட் போட, அதுக்கு அந்த அன்பர்,
" நீங்க வெறுத்துப்போய் எழுதிய விதத்திலையே எனக்கு விளங்கியது நீங்கள் எவளவு கஷ்டப்பட்டு எழுதி இருப்பிங்க என்று அதை வைத்து மலச்சிக்கல் இருக்கு என்று கண்டு பிடித்தேன் "
என்று எழுதி பாட்டி வைத்தியம். சொல்லுறேன் பேர்வழி போல ,
" மலச்சிக்கலுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம்பழத்துடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து விட்டு சிறிய இஞ்சித் துண்டை நறுக்கிப் போட்டுக் கொதிக்க வைத்து அதனுடன் விளாம்பழத்தையும் கலந்து வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அந்தச் சிக்கலுக்கு நல்ல பயன் பெறலாம் " என்று நாட்டு வைத்தியர் அளவுக்கு அட்வைஸ் எழுதி இருந்தார்.
ஏன்பா தெரியாமத்தான் கேட்கிறேன், வருத்தம் துன்பம் வந்தால் அதுக்கு அதுக்கு என்று படித்துள்ள டாக்டரிடம் போகாமல், இப்படி குய்யோ முறையோ என்று அதை இங்கே போஸ்டிங் ஆகப் போட ,அதை வாசிக்கிற அரைகுறை அறிவுக் கொழுந்துகள் சொல்லும் அட்வைசை நம்பினால்,கடைசியில் பைத்தியம் பிடித்து வைத்தியம் அதுக்கும் இல்லாமல்ப் போய் கடைசீல இங்கேயே உங்க மரண அறிவித்தல் போட்டு அதுக்கு கண்ணீர் அஞ்சலிக் கவிதையே எழுதவேண்டி வரும்பா.
...... என்ன சீவியமடா இது.
.

Saturday, 2 May 2015

பாவ மன்னிப்பு..

எல்லோரும் நல்லவராகத்தான் பிறக்கிறார்கள் ஆனால் இடையில்தான் சிலர் வழி தவறிச்  செல்கிறார்கள். மீண்டுமொருமுறை  அப்படி நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் விழிப்போடு வழிகாட்டி,   மனிதநேயம் தனது இதய அடையாளமாக  அதிகம் இருக்கும் ஒரு சிலருக்கே எல்லாரும்  மனிதர்கள்தான் என சிந்திக்க முடிகிறது....

                                          பணக்கார நாடு நோர்வேயின் தலை நகர் ஒஸ்லோவில் தலை விதி பிழைத்து ,போதைவஸ்தில் சந்தோஷம் தேடி, இருந்த கொஞ்ச நஞ்ச சந்தோசத்தையும் இழந்த, வாழ்க்கை பற்றி அதிகம் பேசாத, பேசினாலும் அவர்கள் வாழ்க்கை அதிகம் சுவாரஸ்யமாக இருக்காத ,சந்தோஷ உச்சிக்குப்  போய்விட வேண்டும், அதற்கு , மெத் அம்பிட்டமின் போதை ஊக்கி மருந்துக்கள் அள்ளிப்போட்டு, மரியுவான ஊதித் தள்ளி  முகத்தில ஒளி இழந்து ,கையில,காலில, கெரோயின் ஊசி குத்தி, சுய நினைவு இழந்தாலும்  கூட பரவாயில்லை என்று நினைக்கும் மனநிலையில் அல்லாடும்  மனிதர்களுக்கு பல வருடமா ஒஸ்லோ நகர மத்தியில் உள்ள ஒரு பார்க்கில் உணவு கொடுத்து, தாகத்துக்கு தண்ணி கொடுத்து ,ஜேசு நாதரின் போதனைகளைக் கிடாரில் பாடலாக வாசிக்கும் ஆர்னே ரண்டி என்ற மனித வடிவில் உள்ள தெய்வத்தைப்பல வருடங்களின் பின் அண்மையில் சந்தித்தேன். 

                      போதைவஸ்துகளுக்கும்  எனக்கும் அந்த நேரம் நேரடியாக எந்தத் தொடர்பும் இருக்கவில்லை, ஆனால் மத்திய ஒஸ்லோ நகரத்தில் இருந்த பிலாத்தா  என்ற பார்க்குக்கு கோடை காலத்தில் எல்லாரும் போவார்கள், ஓய்வு எடுக்க நல்ல ஒரு இடம், அங்கே தான் ஆர்னே ராண்டியை அவரோடு கிட்டார் இசைக்காகவும் , சில நேரம் கோப்பி குடிக்கவும் சந்திப்பேன்.  பல முறை அந்தப் பார்க்கில் அவருடன் கதைத்த நட்பின் அடையாளமாக அவர் பற்றி சொல்லுறேன்.

                                   ஆர்னே ரண்டி ஒரு ஓய்வூதியர் ,தனியாக ஒரு ஆடம்பரம் இல்லாத ஒரு அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்வது  மட்டும் அடிப்படையாகக் கொண்ட சின்ன அப்பர்த்மெண்டில் வசிக்கும் மனிதர்,தன்னோட ஓய்வூதிய வருமானத்தின் பெரும் பகுதியை அந்தரித்த மனிதர்களின் ஆறுதலுக்கு உணவு கொடுத்து, தாகத்துக்கு தண்ணி கொடுத்து சேவை செய்யும் ஆர்னே ஒரு காலத்தில் நோர்வே நேவியில் கடற்படை அதிகாரியா இருந்தவர்,அவர் உணவு கொடுத்து கிட்டார் அடித்து பாடல் பாடும் அந்த பார்க்கில் எப்பவும் அவர் ஜேசுநாதர் போல நடுவில நிக்க, வழி தவறிய மந்தைகள் போல பல மனிதர்கள் அவரைச் சுற்றி நிற்பார்கள்,நிலத்தில் இருப்பார்கள். ஆர்னே அவர்களுக்கு எப்பவும்

                                        " சிலுவையில் அறைந்த போது அவர்களை மன்னித்து விடுங்கள் என்று  ஜேசுநாதர் கூறியதை போல் நான் கூறமாட்டேன். நீங்கள் செய்யும் தவறை  நீங்கள் உணர்ந்தே செய்கிறீர்கள் , அதை மன்னிக்க கர்த்தர் எப்பவுமே தயாராக இருக்கிறார் எண்டு நிட்ச்சயமாகச்  சொல்லுவேன் "

                                எண்டு சிரித்து சிரித்து உத்தரவாதமா சொல்லுவார்.

                                    நோர்வே பணக்கார நாடு ,நாட்டு மக்கள் எல்லாருமே வறுமைக் கோட்டுக்கு பத்தடி உயரமா மேலே வாழும் மனிதர்கள்,ஆனாலும் இந்த மனிதர்கள் மனதளவில் தனித் தீவாக வாழும் மனிதர்கள், அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை தான் மனஅழுத்த செயற்கை சந்தோஷம் தேடும் வாழ்க்கை. அன்பு,பாசம், கருணை இந்த அவசியமான அடிப்படை மென் உணர்வு  மொடேர்ன் அவசர,இயந்திர வாழ்க்கை உள்ள நாட்டில் எல்லாருக்கும் கிடைபதில்லை,பெற்றோர்கள் பிரிந்து போகும் குடும்பத்தில் வளரும் இளம் பிள்ளைகள் பல மன வெறுப்பில்,சந்தோசம் தேட போதைவஸ்தில் இறங்குவார்கள்,

                           ஒரு முறை இறங்கினால் அம்போதான்,அவர்கள் வாழ்கை அந்த போதையின் அடிமை ஆக்கி,ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்க்கை சின்னா பின்னமாகி  சிதிலமாகும், போதை உலகதில் விழுந்த அவர்கள்  நாடிய தடவிக்கொண்டு ஆண்களும், பெருமூச்சு விட்டுக்கொண்டு பெண்களும்" All by myself " என்று தனிமையில் இன்றைய நாளில் இருக்குறார்கள்! அவர்களைப் போன்ற பலரின் அன்றாட உணவு தேவையை ஆர்னே ராண்டி போன்ற உதவும் இதயம்கள் இருப்பதால் ஒரு இளைப்பாறல் கிடைக்குது.

                                       நோர்வே மக்களின் வரிப்பணத்தில் இந்த போதை பாவனையாளரை அதில இருந்து விடப்பட புணர்வாழ்வுக்கு நிறைய செலவு செய்கிறது அரசாங்கம். போதைப்பொருள் பாவனையாளர் தங்கள் சமூக உதவித் தொகைக் காசில் போதைப்பொருள் வேண்ட செலவு செய்வதால்,அவர்கள் ஒழுங்கா வாழ ஒரு இடமே கிடைபதில்லை .

                             கோடை காலத்தில் பலர் தெருவோரம், பார்க்கில்,பாலங்களின் கீழே வசிப்பார்கள், குளிர் காலத்தில் சில சேர்ச் ,சில மனிதாபிமான உதவும் நிறுவனங்கள் அவர்கள் இரவு உறங்க இடம் கொடுக்கும், ஆனால் வருமான வரி கட்டும் மனிதர்கள் இவர்களுக்காக அரசாங்கம் ஏன் செலவு செய்ய வேண்டும் எண்டு எப்பவுமே விமர்சனம் செய்வார்கள். எப்படியோ இந்த " மொடேர்ன் ஹை டெக் " சமுதாயத்தின் ஒரு வித உபரி மறைமுக உற்பத்திகள் தான் இந்த அவலநிலை மக்கள் எண்டும் எல்லாருக்கும் ஓரளவு தெரியும் .

                                    ஆர்னே மரபு ரீதியான சமய ஒழுங்கமைப்பை அதிகம் நம்பாதவர்.

                                       " சண்டே என்றால் பைபிளைத் தூக்கிக் கொண்டு சர்ச் இற்கு போறது மட்டுமில்லை  கிறிஸ்தவன் என்ற அடையாளம் அல்லது சேர்ச்  பெயரில் நற்பணி மன்றம் ஆரம்பிச்சு  சமூகப் பணி செய்ய நினைபதுமல்ல கிறிஸ்தவன் எனும் அடையாளம் அது தனி மனிதனாக  ஜேசுவைத் தேடுதல், அவர் சொன்ன வழியில் வாழ்வினை நாடுதல் "

                                      என்று சொல்லுவார். ஆர்னே ராண்டி அண்மையில் கிறிஸ்தவ பாடல்கள் அவரே எழுதி, இசை அமைத்து ஒரு சிடி வெளியிட்டு உள்ளார் . அதற்கு " பாவ மன்னிப்பு " (Forgiveness)  எண்டு தலைப்பு வைத்து பன்னிரண்டு பாடல்கள் அதில உள்ளது,எனக்கும் ஒன்று தந்தார். அந்த சிடி பாடல் தொடங்கு முன் ஆர்னே ராண்டி ,

                  " அந்தரித்த மனிதர்களின் அவலத்தை  கடவுளின் சாயலில் கடவுளே படைத்த மனிதர்கள்  எந்தவித கவுரவ அடையாளமும் இல்லாமல் வாழ்வது எவ்வளவு சிரமம்,  அடையாளமும் இல்லாமல் மரியாதையும் இல்லாமல் , மனநோயாளிகளாகவும்  இங்கே பலரை வேன்டாத மனிதராகப் பாகுபடுத்தி வைத்து இருக்கிற இந்த மனிதருக்கு உதவும் ஒவ்வொரு முறையும் கடவுளின் உலகவு சந்தோசம் ஏதோவொன்றைக்  கற்றுகொடுக்கிறது..."

                               என்று ஒரு சின்ன விளக்கம் தொடக்கமா கொடுத்துள்ளார் 

                                    எல்லாரும் வாழும் ஒரு சமூகத்தில் மற்றவர்களுக்கு யாரைப் பிடிக்கிறது யாரைப் பிடிக்கவில்லை என்பது பற்றி ஆராய்ச்சி செய்ய நமக்கு உரிமையும் இல்லை. என்றாலும் விளிம்பு நிலை மனிதர்களின் வேதனை எங்கள் எலாருக்குமே புரிகிறது, இந்த உலகத்தில்  ஆர்னே ராண்டி  போன்ற உண்மையைத் தேடும் அவர்களில் ஒரு சிலர்தான் அதைக் கடவுளுடன் சேர்த்து ,மன்னிப்பின் ஆழத்தில் புரிந்து கொள்ள முடியும் போல இருக்கு .

                                   மிக பெரிய சந்தோஷங்கள் எதுவும் எங்களுக்கு நாங்களே கொடுத்து வேண்டி சேர்க்க முடியாது போலவும் அடுத்த மனிதருக்கு உதவும் ஒரு நல்ல குணத்தில் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை மறுபடியும் மறக்க முடியாத ஏதோவொன்றை எங்களைப் போன்ற சாதாரண மனிதருக்கும்  கற்றுகொடுக்கிறது போலவும் இருக்கு .

                               இந்தப்  பதிவு  பத்து மாதங்களின் முன், சென்ற வருடம்  06.07.14 ம் திகதியில்  எழுதியிருந்தேன் , எய்துவிட்ட அம்பு போல நேரம் முன்னோக்கிப் பாயும்  இடைப்பட்ட காலத்தில் இயற்கை அதன் பல உயிர்புக்களையும், சில படைப்புக்களையும் வெறுமையாக்கி, குவாண்டம் பிசிக்ஸ் லெவலில் வேறு சக்தி வடிவமாக்கி இருப்பது தெரியாமலே போனதுதான் பிரபஞ்ச ஆதார விதிகளில் ஒன்று. 

                        சில நாட்களுக்கு முன்னர் ஒஸ்லோ சென்ரல் ஸ்டேஷன் அருகில் ஆர்னே எப்போதும் நிற்கும் இடத்தைக் கடந்து செல்லும்போது ஒரு சிலை தற்செயலாக கவனத்தை ஈர்ந்தது. ஆர்னேயின் நினைவாக அந்த இடத்தில ஒரு சின்ன வெண்கல சிலை வைத்து இருந்தார்கள். ஆர்னே ரண்டி  இயற்கை எய்திய திகதி அந்த சிலையின் கீழே போட்டு இருந்தார்கள். அதில நோர்வே மொழியில்  எழுதி இருந்ததை என்னோட நோர்க்ஸ் மொழி அறிவில் மொழி பெயர்த்தால் 

                                " மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படி . இன்புற்றிருப்பதேயன்றி வேறொன்றறியேன் பராபரமே  " ...இப்படி

........மனிதாபிமானம்  என்பதை மனிதர்கள் பேசுகின்ற அற்ப வார்த்தைகளால் விவரித்து விட முடியாது என்று உலகம் எங்கும் நம்பிக்கை இழந்த மனிதர்களுக்கு சொல்வது போல நம்பிக்கையோடு சில வரிகள் எழுதி இருந்தது........ 




02.05.15

Thursday, 23 April 2015

பாத்திமா ! ஒரு புயல் .

ஒரு காலத்தில், ஒரு இடத்தில வாழ நிர்பந்திக்கப்பட்ட வழிப்போக்கன் போன்ற வாழ்க்கை வந்துபோன நேரம் ஏனோ வாசல்கள்  மூடியே கிடந்ததால் தேவை இல்லாமல்த் தட்ட தேவை இருக்கவில்லை. அந்த வயதும் அப்படியே ஒரு வித  மாயவித்தை சுழன்டுகொண்டிருக்க தேடிஅறியும்  உண்மைகள்  தேடாமலே  தெரியவரும்  கொழும்பு நகரத்தின் உண்மை மவுனம் கிழிக்க இதயம் இரந்து இறங்கி எழுத வைத்தது ஒரு கதையின் தொடக்கத்தை. அதன் பின்...

                                                                   பாத்திமா எவளவு அழகா இருந்தாளோ அதே போல கிராண்ட்பாஸ் புற நகரமும் , பாதை ஓரம் குப்பை கொட்டிய தெருக்கள், சனிக்கிழமை அதிஸ்ட லொத்தர் விற்பவனின் லவுட்ஸ் ஸ்பிகர் அலறல் , ஆனந்தபவான் தோசைக்கடையில் பாடம் நடத்தும் பழைய தமிழ்ப் பாடல்கள் , நடை பாதையில் லேகிய வித்தை காட்டுபவர்கள் , வருசமாய் விக்காத அற்ப பொருட்களை தலையில கட்டி விட இழுத்துப் பிடிக்கும் பேமென்ட் வியாபாரிகள், பள்ளிவாசலில் அஞ்சு வேளை பாங் ஓதும் புனிதப் பிராத்தனை, எல்லாத்தையும் தாண்டி களனிகங்கைத் தொடக்கத்தில் ஒருபக்கம் ஆளை ஆள் முட்டிக்கொண்டு இடிச்சுக்கொண்டு இடைவெளி இல்லாமல் பறக்கும் மனிதர்களின் நெரிசலிலும் கிராண்ட்பாஸ் எப்போதும் அழகாதான் இருந்தது,
                                                     
                                                         மறுபடியும் சொல்லுறேன் கிராண்ட்பாஸ் குப்பையில் குண்டுமணி போல அழகா இருந்ததுக்கு முக்கிய காரணம் பாத்திமா என்று சொன்னால் நான் காதல்ப் பித்தம் இரப்பையை விட்டு தலைக்கு ஏறிப் பிசத்துறேன் என்று எடுத்த எடுப்பில சொல்லுவிங்க ஆனால், என்னைப் பொறுத்தவரை, உண்மை அதுதான். ஆனால் பாத்திமா சிம்பிளா இருந்தாள் ,அதுதான் அந்த பேலியகொடை விளிம்பில் இருந்த கஞ்சலான புற நகரத்துக்கு வெசாக் கால மின்மினி விளக்குகள் போல அழகு கொடுத்தது.
                                                       
                                                               கொழும்பு ஒரு அலாதியான நளின நகரம். அந்த நகரத்தின் உயிர் முன்னேற நம்பி வந்த பலரோட விதியை வீதியில் இருந்து மாட மாளிகைக்கு ஏற்றி வைத்தது. எல்லா இன மக்களும் பல்லினக் கலாச்சாரத்தில் வாழும் அந்த அவசர நகரத்தில் நடக்கும் காதல் சந்திப்புக்கள் எப்பவுமே அவசரமா இருக்கும். அப்படி மதம் வேறான இருவர் சந்தித்த, பல காரணங்களால் அந்தக் காதல் ஆரம்பத்திலேயே புரிந்துகொள்ளப்படாமழ்ப் போன ஒரு சம்பவத்தை சிறுகதை போல எழுதுவதற்கு எல்லாராலும் முடியாது .

                                                முக்கியமா என்னால் முடியுமா என்று எப்பவும் நினைப்பது . அதுக்கு முதலில் சொந்தமான ஒரு படைப்பு மொழியில் எழுத்துநடையை உருவாக்க வேண்டும். அந்த உரையாடல் மொழி ஒரு பொது மொழியில் வந்தாலும் மனிதர்களின் குணங்கள் , இயல்புகள் , வருத்தங்கள், எதிர்பார்புகளை , மனோபாவங்களை சுவாரசியம் குன்றாமல் எழுதும் நுட்பமான மொழியில் ஒருவனுடைய அழிந்து போகாத தனிப்பட்ட குரல் போல இதை எழுத வைத்தவள் பாத்திமா. 
       
                                                           கதையை இப்படிதான் தொடக்க வேண்டி இருக்கு. ஆயிரத்து தொளாயிரத்து என்பத்தி ஒன்பதாம் ஆண்டு என்று நினைக்கிறன், யாழ்பாணத்தில் இருந்து யாழ்தேவி ரெயிலில், தலை மறைவாக,தலையைக் குனிந்துகொண்டு வவனியா தாண்டி மதவாச்சி வந்த பின்னர் தலையை நிமிர்த்திப் பார்த்து கொழும்புக்கு வந்து வேறு வழி இல்லாமல் ஒரு தமிழர்களின் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் கணக்கு வழக்கு பதிவு செய்யும் வேலை சில வருடங்களே வேலை செய்தேன். அந்த இடத்தில என்னோட வேலை செய்தரவர்தான் ரியாஸ் முஹம்மத்.

                                                  ரியாசுக்கு என்னோட வயசுபோலதான் இருந்தார், சொந்த இடம் ஓட்டமாவடி என்று ஒரு முறை சொன்னார், வடக்கைப் போலவே கிழக்கிலும் அரசியல் இஸ்திரமின்மை ஆயுதம் கைகளில் வைச்சு இருந்தவர்களின் கைகளில் இருந்ததால் அவர் மட்டுமில்லை அவர் குடும்பமே கொழும்புக்கு வந்து கிராண்ட்பாஸில் இருந்தார்கள். ரியாசுக்கு ஒரே ஒரு தங்கச்சி . அவள் தான் பாத்திமா. இப்ப கதை எங்க இழுத்துக்கொண்டு போகப் போகுது என்று உங்களுக்கு கொஞ்சம் விளங்கி இருக்கும் என்று நினைக்கிறன்.

                                               அவரோட உம்மவோடும் ,பாத்திமா என்ற  தங்கையுடனும்  எகலியகொடை  கிராண்பாஸ் இல ஒரு சின்ன வீடு வாடகைக்கு எடுத்து வசிப்பதாகச் சொன்னார். கொழும்புதானே  வாழ்வுக்கு அண்டிவந்த மக்களை வாரியணைத்து முன்னேற்றும் நகரம். முன்னேறிய ஆகவேண்டும் என்று ஒரு துரும்பு  அளவில் ஒரு நம்பிக்கையை  இறிக்கிப்பிடித்த மனிதர்களையும்  அது ஒருநாளும் கைவிட்டதில்லை 

                                      தன்னுடைய தங்கை   பாத்திமா  கவிதை எழுதுவாள் என்றும், கிழக்குமாகான கவிஞ்சர்களை அதிகம் முன்னிருத்து வந்துகொண்டிருந்த தினகரன்  பத்திரிகையில் அவள் கவிதைகள் பாத்திமா  ரிஸ்வான  என்ற பெயரில் வந்துருப்பதாகச் சொல்லி ஒருநாள் தினகரன் வாரமஞ்சரி பேப்பரில் வந்திருந்த ஒரு கவிதை  காட்டினார் அது  ஒன்றே போதும்போலிருந்தது  பாத்திமாவின் உலகத்தை  அறிய 

                                   அதன் பின் நீ சொல்ல விரும்பியே 
                                   சொன்னதை 
                                    நான் 
                                  கேட்க விரும்பியே
                                  கேட்பது போலக் 
                                  கேட்டேன்.....
                                  எல்லாத் 
                                  தெரிவுகளுக்கும் 
                                  தடை போட்டு  
                                  அலையவைத்த 
                                   நேசிப்பின் 
                                   பெறுமதியை 
                                   மறுபடியும் 
                                   ஜோசிக்க வைக்குது
                                   முடிவில்லாக் கேள்விகளை 
                                   ஒவ்வொன்றாய் 
                                   நீ வைத்துவிட்டுப் போன நாள் 

                            இப்படி  இருந்த அந்தக்  கவிதையின் கீழே  அதை  எழுதியது   பாத்திமா  ரிஸ்வான, ஓட்டமாவடி .  என்று  இருந்தது. நான் என்ன காரணம் என்று சொல்லமுடியாத ஒரு உந்துதலில் அந்தக் கவிதையை அப்படியே பேபரில்  இருந்து கிழித்து எடுத்து வைத்து இருந்தேன். அந்த  வரிகளில் சிலது சில வருடங்களின் பின் எனக்கே எனக்காக எழுதப்பட்டது போன்ற ஒரு சம்பவம் பின்தொடர்ந்தது தான் வாழ்கையின் விசித்திரங்களில் ஒன்று.        

                                          ரியாஸ் அந்த நிறுவனத்தில் அதிகம் ஆர்வம் இல்லாமல் வேலை செய்தார், அவர் சில மாதங்களில் டுபாய்க்கு போகப் போறதா எப்பவும் சொல்லுவார், ஆனால் அவர் வாழ்க்கை பற்றி நிறைய விசியம் எப்பவும் என்னோட கதைப்பார். யாழ்பாணம் பற்றிக் கேட்பார் ,நான் ஒண்டுமே சொல்ல மாட்டேன்,பதிலா அவரிடம் கிழக்குமாகாணம் பற்றிக் கேட்பேன்,எல்லாம் சொல்லுவார்,
                             
                                   ஏறக்குறைய யாழ்ப்பாணம் எவளவு அல்லோல கல்லோலம் பட்டுக்கொண்டு இருந்ததோ அதேபோல தான் அவர் கதைகளும் நடப்பு நிலவரமும் இருந்தது,அதனாலோ தெரியவில்லை அவர் என்னோட மிகவும் நெருக்கமாக எப்பவும் இருப்பார்,கதைப்பார். ஒருநாள் வேலை முடிந்து புறக்கோட்டை பஸ் நிலையம் வரை நடந்து கொண்டே கதைத்துக்கொண்டு போனபோது .

                                      " நாளைக்கு என்கள்ண்ட வூடுக் கடப்புக்கு பணிய உள்ள தர்காவில் அந்திக்குப் போல கந்தூரி சமைச்சு தானம் கொடுக்குறாங்க , நீங்க வாங்களேன், ஏனம் ஒண்டு எடுத்திண்டு போய் ஒள்ளுப்பம் போல கந்திரி வேண்டியாந்து சாப்பிடலாம் , அப்படியே எங்கள்ண்ட வூடுக்கும் வாங்க,உம்மாவும் பாத்திமாவும் இருகுராக, அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன் " என்றார் ரியாஸ்.

                                            நான் " பரவாயில்லை எல்லாரோடும் சேர்ந்து பள்ளிவாசலுக்கு முன்னால் இருந்தே சாபிடுறேன் அது எனக்கு விருப்பபம்,எங்கள் ஊரில வீராளி அம்மன் கோவிலில் சித்திரைக் கஞ்சி ஊத்தும் போது அப்படிதான் அடிபட்டுக் குடிப்போம் " என்றேன்.
    
                                      அதுக்கு ரியாஸ், " அதெல்லாம் ஒண்ணும் வேணாம், வேண்டிய மாதிரி சாப்பாடு இரிக்கி , எங்க பெரிய வாப்பா தான் பள்ளியில வேண்டிய மாதிரி மவுலவி , நாங்க வேண்டிய மாதிரி வூட்டுக்கே எடுத்திண்டுப் போயிட்டு வேண்டிய மாதிரி சாப்பிடலாம். " என்று சொல்லிப்போட்டு,

                                     " பிஸ்மில்லாஹ் , நான் வார மாதமளவில் டுபாய் போயிருவேன். அதுக்கு முதல் இவளவு நாளும் என் ப்ரெண்டா இருந்து இரிக்கிரிங்க, அதனால கட்டாயம் மறுப்பு சொல்லாமல் வாங்க "

                                 என்று சொன்னார்.மொபைல் டெலிபோன் இல்லாத அந்த நாட்களில் மனிதர்களின் வார்த்தைகள் மிகவும் நம்பிக்கை தருவதாக இருந்ததால் அவர் வாயால நேராகச் சொன்னார் அதை  நான் கேட்டேன் என்ற வார்த்தை உத்தரவாதம் போதுமானதாக இருந்தது. வாழ்க்கை அப்பெல்லாம் மிகவும்  நம்பிக்கையாக எளிமையாக  நட்பின் அடையாளங்கள் சிக்கலான  குழப்பத்திலும் சந்தோசமாக இருந்தது 

                                            எனக்கு கந்திரியில் தென்னம் ஓலையில் பிளா போலக் கோதிக் கட்டிக் கொடுக்கும் ரம்பைக் குழை போட்டு தம் பிடிச்சு அவிச்சு வடிச்ச வெள்ளை சோறும், முந்திரி நெய்யில மிதக்கும் ஆட்டுக்கால் பாயா ஆணமும்  தின்ன நல்ல விருப்பம் .அதைவிட ஒரு இஸ்லாமியர்களின் வீடு எப்படி இருக்கும்,அவர்கள் எப்படி வாழுவார்கள் என்று பார்க்க மிகவும் விருப்பமா இருந்ததால் வாறன் என்று சொன்னேன். ஐயர் வீட்டு நாய்க்கு அலியார் வீட்டுச் சோறு என்ற பழமொழி போல சாப்பாட்டுக்கும் சமயத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று என் சிறுகுடல் பெருங்குடல் சாட்சியாக எப்பவுமே நம்புபவன்.

                                           " உங்க வூடு போல நினைச்சே வாங்க. ஒன்னும் அலடிக்கொள்ளாம வாங்க, மார்க்கம் வேறா இருந்தாலும் நாமெல்லாம் ஒண்ணுக்க ஒண்ணு மனுசங்க தானே, நீங்க வேற கொழும்பில தனியா இருகுரிங்க "

                                            " கொஞ்சம்  தயக்கமா  இருக்கு  ரியாஸ்,  நான்  இதுக்குமுன்  இசலாமிய ஆட்கள் வீட்டுக்கு போனதே  இல்லை "

                                             "   அட, விடுங்க , இதென்ன  பெரிய  கதயா,, எங்க  ஊரில  பட்டிகளோ தமிழ் ஆட்களோட  பெருநாளுக்கு  நாங்க  எல்லாம்  போவமே,,விடுங்க "

                                          "  ஹ்ம்ம் "

                                            "   கல்முனையில  ஒரு  அம்மன்  கோவில் இருக்கு  தெரியுமா,,அதில தலைக்கு குடம் வைச்சு தீ மிதிப்பாங்க ,,நாங்க  போவம்  பார்க்க ,,அதென்ன  கத "

                                        "   எனக்கு  பட்டிகளோ  தெரியாது ,ரியாஸ், அங்கெ போனதே இல்லை "

                                          "  சரி வுடுங்க,,அதெல்லாம்  இப்ப முக்கியமொன்னும்  இல்லை ,நீங்க வாருவிங்க தானே,,என்ன  கத  "

                                           "   சரி,,நீங்க  கேட்கிறதால வாறன்  ரியாஸ் "

                                           "  எங்கண்ட  ஆட்கள்  யாழ்பாணத்தில மிச்சம் காலம் இருந்து இருக்காங்க தானே ,,இல்லையா,"

                                               " ஓம்,,பொம்மைவெளி, அஞ்சு சந்தி  போன்ற இடங்களில்  இருந்து இருக்கிறார்கள் "

                                           " அதானே,,நா  கேள்விப்பட்டு இருக்கேன்,எங்க உம்மாவோட  உறவுக்கார  சாச்சா ஒருவர் அங்கினையதான் புடவைக் கட வைச்சு இருந்தார்  "

                                             "  ஓம்,,யாழ்ப்பான டவுனில நிறையக்  கடைகள்  இருந்தது , எனக்கு பள்ளிக்கூ டத்தில  சயன்ஸ்  படிபிச்சவரே ஒரு அன்பான மாஸ்டர்  அவர் பெயர் காதர் மாஸ்டர் "

                                   "   உண்மையாவா,,எங்க  சாச்சாவுக்கும்  அப்துல்காதர் தான் பெயர்,,பாவம் அவங்க  இப்ப  புத்தளத்தில்  அகதி முகாமில இருக்காகா என்று  உம்மா சொல்லுவா "

                                               "  ஓம்,,யாழ்பாணத்தில்  இருந்து  இஸ்லாமிய மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது  நான்  அங்கேதான் இருந்தேன் "

                                             " அப்துல்  சாச்சா ,நல்ல வசதியா  இருந்திருக்கார்,,பெரிய கல் வீடு,,கடை,,எல்லாம் இருந்திசாம்  ஆனால்  வெளிகிடச் சொன்ன போது  ஒரு சொப்பிங் பாக்கோட  போக சொல்லி இருக்காங்க"

                                                  " ஓம்,,அப்படிதான்  நானும்  அறிந்தேன் "

                                          "   சரி வுடுங்க,,நமக்கு  அல்லா இருக்கான்,,அவன் சரிபிழை  பார்த்துக்குவான் , "

                                                  என்று சொன்னார் ரியாஸ்

                                            அதனால் அடுத்தநாள் பின்னேரம் ரியாஸ் சொன்ன அட்ரஸ் இக்குப் மட்டுமில்லை முதல் முதலா கிராண்ட்பாஸ் என்ற இடத்துக்கே இழுபட்டுப் போனேன், அன்று ரியாஸ் வேலைக்கு வரவில்லை,ஆனால் அவர் வீட்டு அட்ரஸ் , எடுக்கவேண்டிய பஸ் நம்பர்,இறங்க வேண்டிய பள்ளிவாசலடி எல்லாம் விபரமா ஒரு சின்னப் பேபரில் முதல் நாளே எழுதித் தந்திருதார்.

                                                      அவர் சொன்ன பள்ளிவாசலடியில் போய் இரைச்சலோடு இறங்கினேன். அவர் தந்த அட்ரஸ் வீரகேசரி பத்திரிகை அடிக்கும் பிரிண்டிங் அச்சகம் இருக்கும் இடத்துக்கு அருகில் ஒரு சின்ன கை ஒழுங்கை போல இருந்த இடத்துக்குள் இறங்க முதலே பின்னுக்கு வந்த மக்கள் என்னை முன்னுக்கு தள்ளிக்கொண்டு போனார்கள். பள்ளிவாசலுக்கு முன்னாள் பெரிய அண்டா வைச்சு அரிசி வடிசுக்கொண்டு இருந்தார்கள், பெரிய பெரிய ரப்பர் மரக் கட்டைகளைப் பிளந்து போட நெருப்பு ஜுவாலை விட்டுக் கிளம்பப், பல வறிய மக்கள் பாதை ஓரமாக வெத்திலை போட்டுக்கொண்டு குந்தி இருந்தார்கள்.

                                                   அந்த இடத்தில ரியாசைத் தேடினேன் அவர் இல்லை. ஒருவேளை கந்திரி கொடுக்கத் தொடங்கத்தான் வருவாரோ அல்லது ஒருவேளை என்னை முதலில் வீட்டில் சந்திக்க விரும்பினாரோ எண்டு ஜோசிதுப்போட்டு. வீதி தொடக்கத்தில் எழுதி இருந்த பெயர்களை வாசிக்க முயற்சிக்க, அந்த முடுக்கில் இருந்த சுவர்களில் ஒட்டி இருந்த சுபிட்சமான எதிர்காலத்துக்கு  வாக்குக் கொடுத்து வாக்கு சேகரிக்கும்  அரசியல் கட்சி ஒன்று தேர்தலில் வாக்குறுதி கொடுக்கும் வின்ஞாபன நோட்டிஸ்களை ஒரு மாடு சுவரில் இருந்து இழுத்து சுவாரசியமா திடுண்டுகொண்டு இருந்தது. முடிவில் ரியாஸ் தந்த அந்த சின்னப் பேபரை எடுத்து அருகில் இருந்த வீதியின் பெயர்களைப் பார்த்து தேடிய வீதியைப் பிடிச்சேன்.

                                                     அந்த சின்னப் பாதையின் ஆரம்பத்தில் சுலைமானியா என்று பெயர் போட்டு ஒரு முஸ்லிம் ஹோட்டல் இருந்தது. அதன் கண்ணாடி சோக்கேசில் வட்டிலப்பம் சின்ன சின்ன கிண்ணத்தில் வைச்சு,கலர் கலரா மஸ்கட் அடுக்கி ,முந்திரிப்பருப்பு போட்ட தொதல் பெரிதாக வைச்சு இருந்தார்கள்,கொஞ்சம் தள்ளிப்போக ஒரு டேயிலரின் கடை வந்தது அதில ரியாஸ் தந்த வீட்டு இலக்கத்தை தமிழில் கேட்டேன்,

                                       " சுருக்கெண்டு கொஞ்சம் பணியப் போங்க, ஒரு சின்ன முடக்கு வரும், வுடாம கொஞ்சம் நடந்து அங்கனய இருந்து வலது கையைப் புடியுங்க , செக்கால அபூபக்கர் பாறை வரும் அதில ரோஸ் கலர் வூட்டுக்கு இங்கிண்டு தண்ணித்தாங்கி கழிய மையத்தில இந்த நம்பர் சேர்ந்த வூடு பசுந்தா வரும் " என்று சொன்னார்கள்,

                                                     அந்த டியிலரிங் கடையில் பூவாளி மார்க் லுங்கிகள் முன்னுக்கு தொங்க விட்டு இருந்தார்கள், ஒரு வயதான நசருதீன் முல்லா போல இருந்த அய்யா ஒரு வயதான சிங்கர் தையல் மிஷினில் நிமிர்ந்து பார்க்காமல் இருந்து காலால் அமதிக்கொண்டு இருக்க ஒரு சின்னப் பையன் சேட்டுப் பொத்தான் தைத்துக்கொண்டு ரோட்டை விடுப்புப் பார்த்துக்கொண்டு இருந்தான், அந்த டேயிலரிங் கடை முதலாளி கழுத்தில அளவு நாடாவைப் போட்டுக்கொண்டு சோக் கட்டியால அங்கேயும் இங்கேயும் துணியில் கோடு இழுத்துக்கொண்டு இருந்தார்.

                                 ரியாசின் வீடுக்கு கிட்டக் கிட்டப் போக சன நடமாட்டம் கொஞ்சம் குறைந்து, ஒரு வயதான தாத்தா தலையில லேஞ்சியைக் கட்டிக்கொண்டு அவர் வைச்சு இருந்த சவ்வரிசிக் கஞ்சி விக்கிற வண்டிலின் அலுமினிய தட்டில் விரல்களால் தட்டிக்கொண்டு இருக்க ஒரு சிரங்கு வந்த நாய் சவ்வரிசி கஞ்சி வண்டிலைப் பார்த்துக்கொண்டு இருந்தது. . வேற மனித நடமாட்டம் அந்த இடத்தில இருக்கவில்லை.

                                       " இந்த நம்பர் சேர்ந்த வூடு பசுந்தா வரும் " என்று டெயிலர் சொன்னாலும் அபூபக்கர் வீதியில் அரை மணித்தியாலம் கிடந்தது அலைஞ்சேன் ..கடைசியில் முன்னுக்கு முற்றம் இறுக்கமான, சுவரோடு சுவர் உரசிக்கொண்டு நெருக்கமா சின்ன சின்ன வீட்டுகள் இருந்த இடத்தில அந்த இலக்கத்தைக் கண்டு பிடிச்சேன் .நல்ல காலம் .ரியாஸ் அவர்கள் வீட்டு வாசலில் நின்றார்.

                                        " வாங்க வாங்க எங்க வூடு பஞ்சிகாவத்தை கொரியா வூடு போல உங்களுக்கு சிலநேரம் இருக்கும், வாப்பா எங்களை வுட்டுப்போட்டு போன பின்னாடி  பெரிய றாசாத் நானா தான் இந்த வூட்டுக்கு எல்லாம் கொடுத்து எடுத்து தந்தார் , றாசாத் நானா இல்லைனா நாங்க இப்ப இதுவும் இல்லாமல் இருந்து இருப்போம்,நானா மவுத் ஆனா நேரம் நாங்க யாருமே அவருக்கு அருகில இருக்கலை " என்றார் ரியாஸ். .
                   
                         நான் ஒண்டும் சொல்லவில்லை ,ரியாஸ் இன் அண்ணா எப்படி  கல்முனையில் வைத்துக் கண்கள் கட்டப்பட்டு கடத்தப்பட்டுக்  கொல்லப்பட்டார் என்று அவர் ஏற்கனவே சொல்லி இருந்தார் 

                                   " இங்கேயே வூட்டில சாப்பிடுவம். உம்மா ஏனத்தில் கந்தூரி எடுத்து வைச்சு இரிக்கா, "

                          எண்டு அவரின் அம்மாவைக் கூப்பிட ஒரு வயதான அம்மா தலையை மூடிக்கொண்டு வந்து

                                " மகன் ,வேண்டிய மாதிரி போட்டு சாப்பிடுங்க ,"

                                "  ஓம் அம்மா ,,எனக்கு கந்திரி  சாப்பாடு நல்ல விருப்பம் அம்மா "

                      "  எங்கட வயலே கல்முனையில் இருந்தது,,இப்ப அங்கே போகமுடியாம அவனுகள் தடை போட்டு வைச்சு இருக்காங்க "

                                      "   ஹ்ம்ம்,அப்படியா ,"

                                     "  இல்லேன்னா நாங்க மூணுவேளை கஞ்சி குடிச்சாவது அங்கேயே இருந்து இருப்போம் "

                                           "   ஹ்ம்,,ஓம் அம்மா  சொந்த இடத்தில இருக்குமாப்போல ஒருநாளும் வராது அம்மா "

                                         "  என்னோட பெரிய மவன் மவுத் ஆனதில இருந்து அந்த ஊர்ல இருக்க பயம்,,அதான் ரியாஸையும் பாத்திமாவையும் கையோட கூட்டிக்கொண்டு இங்கே கொழும்பு வந்தோம் "

                                         " ஓம்,அம்மா  இப்பிடித்தான்  பலரோட நிலைமை இப்ப "

                                         " இப்ப ரியாஸ் சுருக்குப் பண்ணி சுருக்குப் பண்ணி டுபாய் போக நிக்குறான் ,,அவனும் போனா  நம்ம வாழ்க்கை கொஞ்சம் அல்லாடிப் போயிடும் போல இருக்கு,,ஆனாலும்  அல்லா  அவனை அனுப்பி வைக்கணும் என்னு நினைச்சா  நா  என்ன பண்ணமுடியும் ,,இல்லிங்களா மகன் "

                                       "  ஓம் அம்மா,,ஜோசிக்க வேண்டாம்,,அம்மா,,ரியாஸ் போறது  உங்களுக்கு பினான்சியலா சப்போட் ஆக இருக்குமெல்லோ "

                                  "  பாத்திமா வேற கடப்பு வருஷம் மட்டில்  மருதானை ஸாஹிரா கொலீஷில் படிச்சி முடிச்சி வூட்டோடவே இருக்கா ,,,அன்றாடம் காச்சி வடிக்கற செலவு நம்ம தலையை மீறிப் போகுது "

                                                        "      ஹ்ம்ம் "

                                     "   என் மகேன் உங்களை பற்றி சொல்லி இரிக்கான், நாமளும் அல்லல்ப்பாட்டு பாடி முன்னப்பாட்டு திரியாத இடமான இங்கே வந்தும் இன்னிக்குப் பாட்டு வரைக்கும் அந்தரிக்க வுடாம  அல்லா வைச்சிரிக்கான்  அவன் கருணையால் ஏதோ இருக்கோம் "
                                          என்று ஒரு பெரிய பாத்திரத்தில் சோறும்,ஒரு பித்தளைப் பாத்திரத்தில் சொதி போல குழம்ம்பும் கலந்த கறி இருக்க ,அவர்களின் அந்த சின்ன வீட்டில இருந்த சின்னக் குசினி வாசலில் செவ்வரளிப் பூப் போட்ட துணியில் தலையை மூடிக்கொண்டு ஒரு சின்னப்பெண் அவள் முழங் கைகளில் எதுவும் இல்லாமல் காப்புப் போல எதுவோ இருப்பது போல உள்ளங் கைகளை மாறி மாறித்  தடவிக்கொண்டு எழுதத் தொடங்காத ஒரு கவிதையின் கடைசி வரிகள் போல என்னைப் பார்த்தாள். அந்த பாஸ்மாதிப்  பார்வை மிச்சக் கதையை எழுத வைத்தது  .....

.....தொடரும் .............

.