Sunday, 19 January 2020

இரவை எடுத்துக்கொள்ளுங்கள் !


ஒரு முகக்குறிப்பை
மூச்சிழுத்து எழுதிவிட நினைக்க
மீண்டு திரும்ப
வழி சொல்லாமலே
கலைந்து போய்விட்டன
சில நாட்கள் !

தொலை தூரம்
எல்லாம் சரியாக அமைந்திருக்க
எதிர்பார்த்திராத நேரத்தில்
ஏமாற்றம்


உள்ளுக்குள்
அனைத்தும் சரியும்
மிக ஆழத்தில்
நுரையீரல்கள் வீங்கிக்கொண்டன,
தனித்து விடப்பட்ட
திரை விளிம்பில்
வீழ்த்திக்கொள்வதுபோலிருந்தது
பரிசாகத் தந்த
ஊமைக்காயங்களின் நடனம் !
மருத்துவக் குறிப்பேட்டில்
நம்பிக்கை எஞ்சியிருந்தாலும்
முதுகைத் தேய்த்தபடி
எரிச்சல் கொள்ள செய்தது
மல்லாந்தவாக்கில் முடங்கியிருந்தது
எழுந்து மறைத்திருந்த போதும்
வருத்தப்பட ஒன்றுமில்லை...

புன்னகைத்து  முடிவெடுத்து
என்னை
எனக்குள்ளே உரசிப்பார்த்தேன் !
மனதிற்குள்
அவஸ்தையிருந்தும்
கனவுகளுக்கும்
கவிதைகளுக்கும் பிடித்த இடத்தில்
ஓய்விலிருந்ததால்
மறைந்திருந்த வலிக்குள்ளும்
ஒரு சுகமிருந்தது !

*

எல்லாவற்றையும்
விரும்பியது போலவே செய்துவிட்டு
எதையோ கடந்துவந்து
விசாரிக்கின்றது போனகாலம் !


அன்றொருநாள் வந்து சேர்ந்து
அப்படியே தொடர்ந்துகொண்டேயிருக்கிறதை
அப்படியே ஏற்றுக்கொள்வதுதான்
இன்றைவரையான புரிதல் !


முழுமையற்றவைகள்
மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தாலும்
சம்பந்தப்பட்ட
எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன் !


ஏதுமற்ற மையத்திலும்
அடையாளங்களுக்கும் வயதாகிவிட
இத்தனை வருடங்கள்
தூக்கியடித்து அலைக்கழித்திருக்கிறது
விதியின் வீச்சு !


ஒழுங்கின்றி நிரப்பப்பட்டு
விழுந்த இலைகள் மறைத்துவிட்டன
ஒற்றையடி நடைபாதையை
மறுமுனையில் எங்கோ மறைந்திருக்கலாம்
மீதிக் காலம் !


*

தூக்கிப் போட்டுவிட்டு
பூனை மாதிரி அமைதியாகவிருக்கிறது
துயரசம்பவங்கள் !

வரைந்து பெரிதுபடுத்துவதாக இருக்கும்
ஒவ்வொன்றும் 
தன்னிலையாக நிகழ்ந்திருக்கக்கூடும் 


இயல்நிகழ்ச்சியாகமுடியாது !


திரும்பிப்பார்க்கும் போதெல்லாம்
தடயங்களைத் தேடியழிப்பதிலும்
தன்னிரக்கமான தொனியில்
சிலகேள்வி தொடர்ந்தபடியேதானிருக்கு !


சமுத்திரம்போல நெருடல்கள்
அலைகளின் மீதேறிவரும் நினைவுகள் ! 


ஆற்றுப்படுத்த
சமாதானம் செய்துகொள்கிறது
அடையாளங்களைத் தாண்டிய
சகோதரஅன்பும் நேசக்கருணையும் !


வருத்தமிருந்தாலும்
இதையும் பதிவுசெய்யத்தான் வேண்டியிருக்கு 


ஞாபகஉஸ்ணம் தீண்டும்போதெல்லாம்
வரம்புமீறி தனித்துவிடப்பட்டுக்
கலவரமாக விவாதித்துக்கொண்டிருபவர்களின்
நரம்புகள் ஆர்ப்பரிக்கின்றன ! 


நெடும்பகல்களும்
நீள்விசும்பும் அமைதியிலிருந்தாலும்
ஆழப்படுத்திப் புரிந்துகொள்ள
ஊளைக்காற்று சாந்தமாக இல்லையே !



*



சர்வேசுவர சுவாமி தேவரீர்
வெடிகுண்டுகளின் மீதும் இரக்கமாயிரும்
அவைகளுக்கு
இரத்தத்தின் வாசனை தெரியும்
ரத்தத்துளிகளின் பெறுமதிகள் தெரியாது !

ஞானமேய்ப்பரான கர்த்தாவே
அவர்களையும் ஸ்தோஸ்திரமாக மன்னித்தருளும்
அவர்கள் திருப்பெயரால் வழிகாட்டப்படவில்லை
தீமைகளால் வழிநடத்தப்பட்டார்கள் !


ஆண்டவராகிய ஆதிக்கடவுளே
நடுத்தீர்ப்பு நாளிலாவது
சீவியத்தில் மரித்துப்போன குழந்தைகளுக்காக
உமது ஆசனத்தை முழுமையாக விட்டுக்கொடுத்துவிடும் ! 


பரலோகத்தில் எங்கும் நிறைந்தவரே
பாவிகளின் பூலோகத்திலும்
அசம்பாவிதங்களுக்காய் உருமறைப்பில் வருபவர்கள்மீது
இனிமேலாவது கொஞ்சம் விழிப்பாகவிரும் !


கர்த்தாவே
ஜெபம் செய்யும்போதும் கண்மூடியிருக்காமல்
சுற்றிவர நடமாடங்களைக் கண்காணிக்கும்படி
புதியஏற்பாடொன்றைப் பிறப்பித்துவிடும் ! 


ஆசிர்வதிக்கப்பட்டவரே
நைந்து போனவர்களிடம் இராச்சியத்தை கட்டியெழுப்பும்
வல்லமைகளை இப்போதில்லை
நீராகவே வந்து சிதைந்துபோன தேவாலயங்களைக்
கழுவித்துடைத்து கட்டித்தாரும் நல்ல பிதாவே !


உமக்கேயுரிய தேவபாசையில்
மதங்கடந்த மனிதநேசிப்பை
பதினோராவது கட்டளையாக்கிவிடும் மீட்பரே ! 


உயிர்த்தெழுந்த திருப்பலியில்
துரோகங்களின் திருப்பீடத்தில் சிதறிப்போன
அப்பாவி ஜீவாத்மாக்களுக்கு
வரப்பிரசாதங்களையும் மோட்ச்பாக்கியத்தையும் கொடும் ! 


மிக முக்கியமாக
முக்காலத்திலும் எல்லாமறிந்தவரே
கையாலாகாதவர்போல
நடந்ததுகொண்டுவகையில் நீரும் உடந்தை என்பதையும்
ஒப்புக்கொடுத்துவிடும் சுவாமி !


ஆமேன் !

*

ஒரு வைத்தியசாலையின்
சோதிக்கவைக்கும் காத்திருப்பு நேரம் !

தனித்திருந்தபடி
சின்னப்பெண்குழந்தை
வெற்றிடமான
மீன் படத்துக்கு நிறம் தீட்டுகிறாள் !


மீனின் வால்களுக்கு
செவ்வரத்த சிவப்புநிறம் பூசினாள்,

கார்களின் பின்புறத்தையவள்
பாதுகாப்புக்காகக் கவனித்திருக்கலாம் !


அதன் செட்டைகளுக்கு
செம்பகப்பூ நிறத்தை தேர்வுசெய்தாள்,
மலர்களின் இதழ்களோடு
நிறையவே நெருக்கம் இருந்திருக்கலாம் !


பூசுமஞ்சள் நிறம் குளித்த
முதுகுப் பிரதேசத்திற்கு
மேலதிகமாக நீலமேகம் தேய்க்க
பச்சை வெளியாகியது வயிற்றுப்பகுதி ,


பிரித்து வைப்பதிலும் பார்க்க
சேர்த்து விடுவதில் அதீத பிரியங்களிருக்கலாம்
ஆவாரம்பூப்போல
அலாதியாக்கி வைத்தாள் கண்களை !


அவளின் எண்ணம்போலவே
வண்ணமயமாக
மீன் இப்போது உயிர்த்துக்கொண்டது ! 


ஆனால்
எந்தவித உணர்ச்சியும் வெளிப்படுத்தவில்லை !


மீதியாகவிருந்தது
முத்தம் கொடுப்பதுபோல
முன்னோக்கிக் குவிந்த மீனின் சொண்டு!


என்ன செய்யப்போறாள்? என்று ஆர்வமாகினேன் 


கொஞ்சம்போல ஜோசித்தாள் 


அந்திக்கருக்கல் நிறத்தையவள் உரசியபோது
நாணப் பயிர்ப்பில்க் குறுகிய மீன்
சிரிக்கத்தொடங்கியது !


*

முடிவேயில்லாதுபோல
நம்பிக்கையில்
நாட்களை நகர்த்தமுயற்சிப்பதும் ,


நாளையென்பதை
திசைதவறிப்போன

இறுதிநாள்போல ஆசுவாசிப்பதும் ,


எனக்கே எனக்குரியவையான
வெறும் இச்சைகள் !


வாசல்ப்படியிலேயே விட்டுவிட்டு
இறங்கிநடக்கும்
தினசரி வாழ்க்கையைப்போல
சொன்னபடி அவைகளும் கேட்பதில்லை .


எனக்கவைகளின் மொழி தெரியும்
பரிமாணங்களும் தெரியும்
இருந்தும்
அவைகளின் நோக்கங்கள் புரியவில்லை.


அதனால்தான்
நீண்ட மவுனத்தோடு
அலைமோதிக்கொண்டிருக்கும்
விருப்பங்களை
வெளியே சொல்லப் பயமாக இருக்கிறது.


*


இனி
எழுதமுடியுமாவென்று
மனதிற்குள் சலித்துக்கொண்டிருந்தபோது
நெருங்கி நின்று
எந்திரத்தனமாகக்
கவனித்துக்கொண்டேயிருந்தது
சுயபுத்தி !

புறக் கவனமற்ற
பிளாஸ்ட்டிக் குழாய்களில்
வெண்திரவம்
இடது புறங்கையில்
குமிழிகுமிழியாக
ஏறிக்கொண்டுருந்தபோது
பிடிமானமாக
வலது கணுக்கட்டிலிருந்து
இறங்கிக்கொண்டிருந்தது
இரத்தம் !
நிர்மலமான முகத்தில்
எதைத் தேடுவதென்று யோசித்தபடி
போர்வையைப் போர்த்தி
தட்டிக்கொடுத்தாள்
தாதி !
ஓரளவுக்குமேல்
லயித்திருக்க முடியவில்லை
மிகத்தாமதமாக வேகமெடுத்து
எதற்காக
எழுதவேண்டுமென்ற
கேள்வி எழுந்து பதில் தேடியது.
நினைப்பதைப்போல
எனக்குள் பாரமாக
மீறி எடுக்கும் முடிவுகளென்று
எதுவுமேயிருக்கவில்லை ....
அனுபவத்தில்
கசிந்துகொண்டிருந்த ஈரத்தை
கடைசிச் சொட்டுவரை
இறுக்கிப்பிழிந்து உலரவிட்ட போது
இன்னுமின்னும்
எழுதமுடியுமென்று
நிமிர்ந்து நிரூபிக்கமுடிந்தது !


*

கேலிசெய்வதுபோல
நொடிகளின் நுனியில் நழுவிக் கொண்டிருக்கும்
விதியும் மூடநம்பிக்கையா ?


பக்கச்சார்ப்பாக
வியாக்கியானங்களிருந்தும்

இன்னும் உறுதியாகத் தெரியவில்லை !


மகோன்னதமான தளமொன்றுக்கு
அலாதியாகச் தூக்கிச்செல்லும் 


அல்லது
அடுத்த கட்டமொன்றில்
அக்கினிகளைப் பிரசவிக்கும் 


அல்லது
சாந்தமாகக் காற்றுவீசும்
வாக்கியங்களை அறிமுகப்படுத்தும் 


வெற்றிடமனநிலையொன்றில்
மூழ்கியபடியிருக்கும்போது
அதற்கான பொறி கிடைக்கலாமென்று
எப்போதோ
நினைத்துவைத்திருந்தேன் !


பயித்தியகாரத்தனத்தில்
சத்தியமாகத்
துவங்கும்போது நிச்சயமாய் அந்த எண்ணமில்லை. 


மையநிலையை அணுகமுடியாது
இப்போதைக்கெல்லாம்
திணறத் திணற
எல்லாவிதமான அனுமானங்களும்
பூஜ்யத்துக்குள்ளே வீழ்ந்துகொண்டிருக்கின்றன !


*

புத்துயிர்ப்பைப் பிரதிபலிப்பதுபோல
முன்னதாகவே
நிர்ணயிக்கப்பட்ட தொடக்கம் !


வேறொரு வகையான
மீள்சுழற்சியில் பரந்து விரியும்

வாழ்தலின் கதை !


வழமையானவைகளிலிருந்து
மாறுபடுவதற்கான
ஏற்றஇறக்கக் கோட்டில்
வயதாகிவிடுகிற திருமேனி ! 


காலம்காலமாக
அகழ்ந்தெடுக்கப்படுகிறது
நிலையாமைபற்றிய அனுபவங்கள் !


கைப்பற்றப்பட முடியாத
இறுதி பயணத்தில் திசைமாறிவிடுகிறது
உயிர்த்துடிப்பு !


நிழல் போன்ற நெருக்கத்தில்
மெய்ப்(!)பாதுகாவலன் போல
நம் கூடவே
நகர்ந்துகொண்டிருக்கிறது
மரணம் !


*

சம்பந்தமே இல்லாமல்
இப்படித்தான் வந்துசேர்கிறது
ஒற்றை வெளிப்பாடு !


வரிசைப்படி தொகுத்திருந்தால்
நேரடியாய் தெரியாத

காலத்தின் எச்சங்களிலிருந்தும், 


வாய்ப்பில்லாத
நினைவுகளிலிருந்தும், 


தோளொடு அணைத்துக்கொண்ட
கனவுகளின் தேக்கங்களிலிருந்தும் , 


எதைஎதையோ
எப்படிஎப்படியோ
எங்கெங்கோ
வெளிப்படுத்திவிடுகிறது
மனம் !


*


தூக்கத்துக்கும் விழிப்புக்கும்
போராடிக்கொண்டிருந்த பின்மனசில்
ஊடுபாவாக உள்நுழைந்த ஞாபகம்

அந்தப்பறவை !

அதன் கண்டப் புலம்பெயர்வையும்
கடல்தாண்டிய கூடு திரும்புதலையும்
ஒரு வெள்ளிக்கிழமை
அழைத்து நலம் விசாரிக்கக்காத்திருந்தேன் !

கவிதையொன்றுக்கு சகஜமாய் உரையாடி
வார்தைகளைக் கோர்க்கநினைத்திருந்த
ரெண்டுவாரமளவில் நானே சிதைந்துபோயிருந்தேன் !

நேற்று சனிக்கிழமை
நெடுஞ்சாலையின் நலிவுவாசலோரம்
பறவை பிய்ந்துபோய்க்கிடந்தது !

குற்றவுணர்ச்சிக்குள்
போட்டுவைத்த மரணக்குறிபோல
இழையறாமல் ஓடிக்கொண்டே இருந்தது
கடைசியான அதன் பார்வை !

அமைதியை ஒளித்துவைத்துவிட முயற்சிப்பது போல
மெதுவாய் என்னைக் கவிழ்த்த
இந்தக் கவிதை
வெளிமுகப்புக்கு இறங்கிப் பறந்து
அங்கே வட்டமிட்டுக்கொண்டிருந்தது !




*

பின்னாலிருந்து எட்டிப்பார்த்து
வானத்தை வளைப்பதுபோல
பந்தலின் கீழே
கைப்பிடிச் சுவர் !

அருகே ...
நீட்டிய காம்பில்
ஒற்றைப் பூ !


*

வயதிற்கு மீறிய சுறுசுறுப்பு
சுருட்டிப் பிடித்துக் கொண்டு
தோளுரச நடந்துகொண்டிருந்தார்கள் ,

இவ்வளவு பக்கத்திலும்
வயது வித்தியாசமாகவிருந்த

அம்மா யார்?
மகள் யார்?
மனம் தேடியலைந்து
வீதியைத் தாண்டிப்போய்க்கொண்டிருக்கிறது!


*

இளம்சிவப்பில் சூரியன்
மழைக்குளிரும் காற்றில்லை
சில்லென்று
கோடையிலும் ஈரம்
கழுத்திலும் நெற்றியிலும் !

முட்டிபோட்டு
தண்ணி மொண்டு
முகம் துடைத்து
கண் மழங்க விழித்தபடி
வெறும் தொண்டை விழுங்கி
மனசுக்குள் சலிச்சு
தினம் பழகிய கோலம்
விடிகாலை !


*

சன்னமான
இழைகளால் பின்னப்பட்டதுபோன்ற
நிலை பற்றிய தெரிவிப்புக்களில்
எப்போதுமே முரண்பாடு
முதலாவது

அருவருப்பால் முகம்கோணி
உண்மையைச் சொல்லமுடியாமல்
கையில்பொத்தி வைத்திருக்கிறதுபோல
ஒரு எண்ணம்


அல்லது எதிர்பார்ப்பு.
முடிந்தவரை அதில்
ஏதும் அறியாததுபோல
பாவனை செய்வதில் தோற்றுவிடுகிறேன் !


இரண்டாவது
உங்களைப் பற்றி எத்தனை தெரிந்திருக்குமோ
அதே அளவு
என்னைப்பற்றியதுமான
தகவல் வெளிப்பட்டுவிட்டது போல
ஒரு அவநம்பிக்கை 


அல்லது ஐயம் !
எனக்குத் தெரியும்
பணயம் வைக்கப்பட்டிருக்கின்ற
பரமரகசியங்களின் மதிப்பு அதிகமென்று! 


வாழ்க்கை என்னுமளவிலும்
கடினமான சூழல் ரெண்டிலுமே !


எப்படியோ
ரெண்டுமே நல்லதுக்கில்லை !


*


சோலை மரங்கள்
பருவக் குளிர்ச்சியையும் மீறி
உறக்கத்தில் மயங்கியபடியிருக்கும் ,


நிறங்களைச் சிதைக்க
கசகசவென்று உறுத்தியபடியே

விண்ணதிரும் கட்டிடங்கள்,


புதர்க்காடுகளில் வாசனை திருடும்
இராப்பூச்சிகளின் சப்தம்,


நிலவொளியை மூடிவைத்து
தூரிகையில்லாமல் வரையும்
மின்னொளி வீதிகள்,


கன்னங்களை
மீண்டும் மீண்டும் தடவி
புரையேறிய நினைவில்  
சொற்கள்

கண்களை மூடிக்கொண்டே
ந்த உருவமும் சரிவரப் பிடிபடாமல் 
ஏதோவொரு பிரமை ,


வேகமாய்க் கரைந்து நழுவுவதை
எழுதவேண்டுமெனில்
இரவை எடுத்துக்கொள்ளுங்கள் .






Tuesday, 15 October 2019

மூன்றாவது மழை !

அலிபாபா குகையைத் திறக்கும் மந்திரச்சொற்கள் போன்று ரகசியமாக கவிதைக்கென்று எந்தக் கவிதைமொழியும் இல்லை. சாதாரண சொற்களே சரியான இடத்தில வந்து அமர்ந்துகொள்ளும் போது இன்னொரு படி மேலேறிவிடலாம் சொல்லவரும் செய்தி.    


                                                                       துயரங்களோடு பொறுமையையும்    அசைத்துப் பார்த்துக்  கொண்டே இருக்கிற வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்துக்குப் பின்னாலும் மேஜிக்கல் ரியலிசம் போல ஒரு அபத்தமான மனவெளிச்சி பலசமயங்களில் நம்மை அறியாமல் சேர்ந்துகொள்ளும். அதை அப்படியே எழுதாமல் கொஞ்சம் வெட்டிக் கொத்தி சுருக்கமாக்கிப்  படிமவித்தைக்காட்டினால் சற்றியலிஸ்ட் வகைக்கவிதைகள் எல்லாருக்குமே சாத்தியம்தான்  !

                                                                                   மென்மையான   மொழிக்கு மிக  அருகில் இருக்கவே விரும்புகின்றன நவீனபுதுக் கவிதைகள் . புதுக்கவிதைகளுக்கான   கவிவிதிமுறை என்று  இதுவரை  கண்டுபிடித்தவர் எவருமில்லை. பிறகு விதிகள்  என்ன செய்யும்? எதற்குப் பயன்படும்? எண்ணங்களை  ஒரு வழமைச் செயல் எனும் நிலையிலிருந்து சிந்தனைச் செயல்பாடாக மாற்ற முயல்கின்றதுக்கு கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவைதான் .


                                                                         திறமை  சார்ந்த ஒரு விடயம் எழுதிக்கொண்டிருப்பது . அதை அதிகம் ஈடுபட  திறன் மேலும் மேலும் மெருகேறி கூர்மை கொள்கிறது. ஒவ்வொரு புதுமுயட்சி எழுத்தும் வெவ்வேறு பரிமாணங்களைக் கோருகிறது.


                                                                           இந்தக் கவிதைகள் முகநூல் சுவரில் எழுதிப்பதிவிட்டவைகள் .மின்னேறிஞ்சவெளியில் தொகுத்துப் பகிர்ந்துகொள்கிறேன் பகிந்துகொள்கிறேன்  !


*
வீடுகளின் தாழ்வாரங்களில்
மாட்டிக்கொண்டிருந்தது
கோமேத நிறத்தில்
இருட்டு !
ஆத்மாவின் 
ஆர்பரிப்புகளில் 
நினைப்பதைத் தெரியப்படுத்தும்
பேரமைதி !
சிறு கூட்டமாக 
பறவைகள் பறந்தபோது
தியானித்துக்கொண்டிருந்த
தனிமரம்
இலைகளை அசைத்துக்கொண்டது !
கிசுகிசுத்தபடி
எவ்வளவுநேரம்
இதையெல்லாம் பார்த்தபடி
காத்திருந்ததென்று தெரியவில்லை
கதவிடுக்கில்
வெளிச்சம்  கசிந்தபோது
உள்நுழைந்துவிட்டது
காற்று !


*


நினைவுத்தரவு
சொல்லிய விவரங்களுடன்
அந்தத் தோற்றம் ஒத்துப்போனது !
இள நரை
ஐம்பதுகளின் ஆரம்பக்கட்டம் ,

ஆனாலும்
இளமையின் தடயங்கள் ,
அடையாளம் தெரிய
கண்களில் அசாதாரண அமைதி,
அம்சமாகத் தேர்வுசெய்யும்
பெண்மயிலின் நீள்கழுத்து ,
எல்லாத்துக்கும் பொதுவான
புன்னகை !
வறண்டுபோன
ஞாபக மடிப்புகளுக்குள்ளிருந்து
பெயரை உடனடியாக மீட்கமுடியவில்லை !
போதுமான இவைகளுடன்
தயக்கமில்லாமல்
பத்துநொடியில்
பழைய முகத்தைப் புதிப்பித்து
அறிமுகம் செய்திருக்கலாம் !
ஏனோ தெரியவில்லை
பெரும்பாலான முனைப்புகள்
அந்தக் கட்டம்வரை போவதில்லை !
அன்று அப்படியே
தூரநின்று விலகிவிட்டேன் !



*


ஏதொவொருவிடத்தில்
சிதறிவிடுவது போலிருக்கும்
தனிமைக்குரலின்
தாய்மொழி எதுவென்று தெரியவில்லை !
காற்றைப் பிழிந்துகொண்டு

மழையின்
நதிநீர்க்கோலங்கள் விழுந்துகொண்டிருந்தன !
ஒரு குடைமரத்தின் கீழே
நிசப்தத்தில் ஒதிங்கியிருந்தேன் !
ஆக்ரோஷமான
பெருங்காட்டின் நீர்வீழ்ச்சி போலவே
யாருமற்றபோதும்
இரைச்சலாகக் கதைத்துக்கொண்டிருந்தது
அசை நேரம் !
வானமேகங்கள் தெளிவடைந்து
மென்மஞ்சள்த் தீற்றுகளுடன்
சமாந்தரமாக
உடன்பாடாகிக்கொண்டிருக்க
மழைத்துளிகள்
இப்போது மெலிந்துகொண்டிருந்தன !
மூடுதிரை விலக்கி
தலைநனைத்து நடைதொடங்க
அப்போதும்தான்
அனுமதியில்லாமல்
அருகே வந்துகொண்டிருந்தது
இன்னுமொரு அமைதிக்குரல் !



*


நிச்சயமின்மை
இவ்வளவு தூரம் வந்தபின்னும்
தணியவில்லை !!!
அரைகுறையான
அந்தரங்க உணர்வு போல

சலனமுறும் கேள்விகள் !
அதே
சூழ்நிலைகள்தான் !!!!
வேறுபடுகிறது
ஆழப்புரிதலிலும்
வார்த்தைகளின்றி விரிந்து கொண்டேயிருக்கிற
சிந்தனை அடுக்குகள் !
தரிசனங்களிருக்கும்
ஒரு சமாதிநிலையின்
நீட்சியாக இது இருக்கலாமோ ?
சிலர் நொறுங்கிவிடுகிறார்கள்.
சிலர் தப்பித்துவிடுகிறார்கள்.
சற்றே ஓய்ந்ததுபோல தோன்றிய தருணம்
சொல்ல முயன்று
தோற்றுபோகிற துயரம்
அதுவுமொரு சுகம்தான் !



*


சரியாகக் கணிப்பிடமுடியவில்லை
எவ்வளவு நிசப்தத்தை
அடைகாத்துவைத்திருந்தேனென்று !
அனுதாபத்துடன்
மன்னிப்பை முன்னிறுத்தி 

விழிக்கரையில் புன்சிரித்து
கைகுலுக்கும் போதே
பரஸ்பரமாக
ஏதோவொன்று கசிந்துவிட்டது !
அவளின்
இளம்பழுப்பு முகம்
திரண்டெழுகிறதைத் தவிர்க்கமுடியவில்லை!
பார்த்த சந்தர்ப்பத்தில்
ஒரு காரணத்துக்காக
வேண்டுமென்றதை மறைத்து
மீண்டு உச்சரித்து
தாழ்வுணர்ச்சியை வெற்றிடமாக்கியிருக்கலாம் !
உண்மையென்னவோ
இன்னொரு காரணத்துக்காக
சொற்களை வெளியேற்றிவிடமுடியவில்லை !
குற்றஉணர்வு எப்போதும்
மனசாட்சியின் மேல்மட்டத்தில்
நல்லவேளை
வார்த்தைகள் மனதிலேயே !



*


பெயருக்கு ஏற்றபடி
ஒன்றிரண்டுகளைத்தவிர
மற்றெல்லாம் பிரமிப்பு !
ஆழ்கடலிலும்
ஆழமான கம்பள விரிப்புகள் ,

நீர்க்குமிழிகள் பிரகாசமான
தொங்குவிளக்குகள்,
அலங்கார மரச்சட்டங்களில்
ரம்மியமான வர்ணத்தெளிப்புகள் !
எதிர்பார்த்துபோலவே
புராதனமான நுண்கலைக்கூடத்தில்
அழுத்தமான
செல்வச்செழிப்பின் ஆக்கிரமிப்பு !
நூற்றாண்டுகளின்
காலாவதியான செழிப்பைக் காட்டிய
உலகியல் லவ்கீயத்தினுள்ளும்
சிலநேரங்களில்
விரோதமான விதிமுறைகளும்
புகுத்தப்பட்டுவிடுகின்றது போலிருந்தது
ஒரு
அறைக்குள் நுழைந்தபோது
சுவரின் உயரத்தில்
மனிதத்தின் தொடர்ச்சியாக
அன்னை தெரஸாவின் ஒளியுருவ ஓவியம் !



*


நாய்க்குட்டியுடன் உரையாடும்
ஒரு குழந்தையின்
பிரியமான குதூகலங்கள் !
மொழியின் முதல் சொல்லை அறிந்ததுபோல
வாலாட்டுகிறது நாய்க்குட்டி,

அதைத் தன்மொழியில் சொல்லிப்பார்த்துக்
கண்களைப் பரவசமாக்குகிறது,
நேரிடையாகவோ
அல்லது ஏதேவொன்றுடன் தொடர்புபடுத்தியோ
உள்வாங்கிக்கொள்கிறது ,
துள்ளிக்குதிக்கும்
ஒவ்வொரு நிமிடத்திலும்
அதன் எதிர்வினைகள்
குழந்தையின் சந்தோஷத்திலே குவிக்கப்படுகிறது .
ஒரு வயதானவர்
அநாவசியமான அந்நியோன்னியத்தை மாட்டிக்கொண்டு
அச்சமுறுத்தும் பாணியில்
நிகழ்சம்பவத்தை உற்றுப் பார்க்கிறார் !
எதிர்பாரத இடறலில்
நாய்க்குட்டி
பின்னம் கால்களுக்குப் பின்வாங்கிவிடுகிறது !
நாய்க்குட்டி
நினைத்திருந்தாலும் நினைத்திருக்கலாம்
ஒருபொழுதிலும்
குழந்தை
பெரியவளாய் வளர்ந்துவிடக்கூடாதென்று !



*


காலடியோசையில்
கதவுக்குப் பின்னால்
யாரெல்லாம் இருக்கிறார்கள் ?
மறுபுறமாக மர்மமாகவிருக்கும்
எதிர்பார்ப்பே ...

காத்திருப்பை நகர்த்துகிறது !
அவ்வப்போது
காரசாரமான உரையாடலில்
ஜன்னல் வழியாக ஏறிக்குதித்து வருகிறது
விவாதிக்கும் சத்தங்களும்
வேறு சில ஓசைகளும் !
அந்தரங்கத்தை மறைக்கும்
திரைச்சீலை நிழலுருவங்கள் !
இருட்டுவதுக்குள்
யாரவது வெளியே வந்தாகவேண்டும்
அல்லது
யாருமேயில்லையான மனப்பிரமையா ?
சலிப்பாகி
அந்தப்பக்கம் பார்க்கவேயில்லை !
இன்னொரு முறை
நிதானமாகக் கவனித்தபோது
ஒருவிதத்தில்
காலத்தைக் கடந்துவிட்டதைப்போல
எல்லாம் அந்தந்த இடங்களில். !



*


அமர்ந்திருந்தவர்
முன்னும் பின்னுமாக
ஆடிக்கொண்டிருந்தார்.
பலவிதமாக உடம்பை வளைத்தபடி
உந்துருளும் பிடிவளையத்தை இயக்கி

சரிவான இறக்கத்தில்
நிதானம்தவறாமல் இறங்கினார் !
காலத்தின் எச்சசொச்சமாக
விதித்துவைக்கப்பட்ட
முஸ்டிகளின் முடிவிடத்தில்
அதீத தன்னம்பிக்கை !
நெருங்கிக் கவனித்தபோது
காற்றுப்போன பலூனைப் போல
முகச்சுருக்கங்கள் !
மௌனத்தால் தோற்கடிக்கப்பட்டு
மென்மையாகியிருந்தது
கால்கள் இல்லாத மனிதனின்
கண்கள் !
மறுபடியும்
ஏமாற்றமடைய விரும்பவில்லை.
இரண்டில் எது
என்னை மிகவும் அச்சுறுத்தியதென்று
தீர்மானிக்க முடியவில்லை.!



*


வழக்கத்தைவிட
அசந்து கிடக்கும் விழிகளில்
நேரிடையாகவே சிக்கிக்கொள்ளும் பின்னிரவுகள்
மெதுவாகிவிட்டது போலிருக்கிறது !
உள்ளீடுகளைப் பாதிக்காதவரையில்

அதைப்பற்றித் தெரிந்துகொள்ள விருப்பமில்லை,!
விழிப்பு வரும்போது
தரையோடு சரியாகத் தொடர்புகளின்றி
நுழையமுடியாத ஓரிடத்தில்
மிதந்துகொண்டிருப்பதுபோன்ற உணர்வு !
அதையும் சமாளிக்கலாம் !
மூச்சொலியில்
உறக்கப் பேரிரைச்சல்கள்
அது நேர்மையாகவே பயமுறுத்துகிறது,
நடுநெஞ்சின் மீது அழுத்துவதுபோல
அருவருப்பான முகச்சுளிப்பில்
காற்றில் அடித்துப்போட்ட கனவுகளிலிருந்து
வியர்த்துக்கொட்டி முழித்துக்கொள்ள
நகர்ந்துகொண்டிருப்பதன் வேகம் தெரியாமல்
அசைந்துகொண்டிருக்கிறது காலம் !



*


சொற்களால்
எண்ணங்களை வெற்றிடமாக்குவதைப்பற்றி
மறுபடியும் மறுபடியும்
திருத்தி எழுதிக் கிழித்துப்போட்டது
ஒரு மணித்தியாலம் போலிருந்தது !

விசித்திர உருவத்துடன்
உள்ளபடியே ஒப்புவிக்க
மொழிக்கு என்னோடு என்ன விரோதம் ?
முறைத்துக்கொள்ளும்
வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து
எழுதக் கற்றுக்கொள்ளும்
என் மீது நானே எரிந்து விழுகிறேன் !
என்னைப் பார்க்க
எனக்கே பாவமாக இருக்கிறது !
வார்த்தைகள் தரும் அர்த்தங்களை
சுயத்தாலே நிரப்பமுடியாதபோதில்
அதற்குள் கனமே இல்லாமல்ப்போய்விடுகிறது !
ஒத்துக்கொள்கிறேன்
நேசமுள்ள வாசனைகளையோடு
தேர்ந்தெடுத்து வைத்திருந்த
பிரியமான வார்த்தைகளை சொல்லிப்பார்க்க
ஒரு நிமிஷம்தான் எடுத்தது !



*


மயக்கங்களைத் தொலைத்த
மேகங்கள்
சும்மா உலாத்திக்கொண்டிருந்தன !
சட்டென்று
விழித்தெளிம்பித் தலையாட்டியபடி

தனக்குரிய
தன்னியல்பில் பின்தொடர்கிறது
பனிக்காற்று,
வெயிலில் பழுப்பான
நடுப்பகலைப் பார்த்த
வெண்மையான மாலைநேரம்
சாம்பல்நிறமாக
எளிமையாகவிருக்கும்
அடிமனதுக்குள் விழிப்புணர்வு !
குழந்தைத்தனமாக
தனக்குரிய பின்தளத்திலிருந்து
காலநேர எல்லைகளை விரித்துகொண்டு
ஏகாந்தப் பெருவெளி !
அழுத்தமாகிக்கொண்டிருக்கும்
இன்னொரு சாயங்காலம்,
இன்னொரு பூங்கா.



*


பொழுது போகாத நேரத்தில்
இப்படித்தான்
வாசல்களைத் திறந்துவைக்கின்றன
திவலைத் தூறல்கள் !
ஒரு ஓவியத்திலிருந்து

நிறங்கள் கரைந்து வழிவதைப்போல
தனக்குள்ளே சிலிர்த்துக்கொண்ட மின்னலுடன்
அடுத்த காட்சிக்கு விரைகிறது
சாதாரணமானவொரு மழைநாள் !
ஒட்டிப்பிறந்தது போல
அசாதரணமாக இரண்டு மழை ஒரேநேரத்தில் !
முதல் மழையின்
இடிமுழக்க நொடியில்
என்னைச் சுற்றி நடந்தவர்கள்
குடை விரித்து ஒதுங்கிக்கொள்ள
மழை அவர்களை விலத்திவைத்தே பொழிகிறது !
ரெண்டாவது மழை
எப்போதும்போல்
ஏதோவொரு யோசனையுடன்
ஏதோவொரு கனவு கண்டுகொண்டு
நடைவழியை சுத்தமாகக் கழுவிக்கொண்டிருக்கிறது !
நான்
நனைந்து கடந்துகொண்டிருக்கிறேன் !
எதிர்பாராத திருப்பத்தில்
மூன்றாவது மழையும் சேர்ந்துகொள்கிறது
அது பிரத்தியேகமாக
எனக்குளே பெய்கிறது !



*



Wednesday, 18 September 2019

மரணத்தின்நிழல் !

நெருக்கமான ரெண்டுவார இடைவெளியில் மூன்று அறிமுகமானவர்கள் அவர்களின் பயணப்பாதையில் இருந்து  அகாலமாகத்   தவறிப்போனார்கள் . மூன்று பேருமே நடுத்தரவயதுள்ளவர்கள் . மரணத்தோடு சமரசம் செய்துகொள்ளும் உத்தேசங்கள் எதுவுமில்லாத போது மரணம் சரியான தருணம் பார்த்து  அவர்களை விழுங்கிவிட்டது  ." மரணத்தின் நிழலில் " இந்த அவலமான   சாவின் மறைமுகமான  தாக்கத்தில் , பாதிப்பில் எழுதப்பட்டவைகள் .

கவிதைகளோடு அறிமுகமான திருமலை எம் ஏ ஷகி , உடல்நலமில்லாமல் இருந்தார். ஆனால் சடுதியாக பிரிந்துபோகும் நிலைமை இருக்கவில்லை.  ! சட்டென்று நூலறுந்து காற்றில் காணாமல்ப்போன பட்டம் போலிருந்தது அந்த அதிர்ச்சியின் வீச்சு  . 
                                                                                  
                                                              ஷகியின் ஆரம்பகாலக் கவிதைகள் அவருடைய வாழ்வின் வலி !எளிமையான கட்டமைப்பில்  அதிகம் படிமங்கள் போட்டுக் குழப்பாமல்  நிதர்சனமாக அதில் நிறையவே துன்பியல் இருந்தது.
                                              சஹியிடம் தனக்கென ஒரு பாணியில் இஸ்லாமியத் தமிழ் உரைநடை மொழியில்  ரசனையாகக்  கதை எழுதும் ஆளுமை நிறையவே இருந்தது . அதை தொடரும்படி எப்பவுமே ஊக்கப்படுத்துறது , அனால் சஹி அதில அதிகம் முனைப்புக்காட்டவில்லை !   
                                                                    
                                                    புற்றுநோயுடன் போராடித் தோற்றுப்போன   ஷகியின்  இறுதிக்கால கவிதைகள் தத்துவார்த்தமான வார்த்தைகளில் நிலையாமையின் பரிமாணத்தில் தேர்ந்தெடுத்த  ஏதோவொன்றை நிரூபிப்பதுபோல இருந்தன .





ஜீவகுமார் என்ற ஜீவா , ஆரம்பகாலத்தில் நோர்வேயில் இருந்தபோது நெருங்கிய பழக்கமான ஒருவன். சில மாதங்கள்  நானிருந்த வீட்டில் தங்குவதுக்கு  வாரதும் போறதுமாக  இருந்தான்  பியஸ்க்கோ என்ற பாரில் தண்ணி அடிப்பதும் ,பம்பலம் பகிடியும் ஆக ஒருகாலம் இருந்தது. 

                                                                          ஒஸ்லோ தமிழர்களின்  வீடுகளுக்குப்போய் சாந்தி பூசை, துடக்கு கழிவு  போன்ற    அய்யர் வேலையும் செய்வான். ஒரு முறை அவனுக்கு  உதவியாளராக நானும் போயிருக்கிறேன் .சமஸ்கிருத  மந்திரம் சொன்னதாக நினைவில்லை.  பூசை முடிய அந்தத் தமிழ் குடும்பம் தானமாகக் கொடுத்த விலை குறைந்த  வேஷ்ட்டியை தூக்கி காட்டி படுதூஷணத்தில அரைமணித்தியாலம் மந்திரம் சொன்னது நினைவிருக்கு !
                      
                                                                      ஜீவா அநியாயத்துக்கு ஒரு ஒரு உளறுவாயன் , அவனோட வாய் முன்னெடுக்கும்  அணுகுமுறை தான் அவனுக்கே எதிரி. எல்லோரோடும் வாயைக்கொடுத்து பிரச்சினையை வேண்டிக்கட்டுவது . அனால் நல்ல நேர்மையான மனதுள்ளவன், நோர்வேயில் இருந்து  யாழ்ப்பாணம் சென்றபோது அவனோட  ஊரான  கோண்டாவிலில் இறந்ததாக தகவல்கள். மரணம் மர்மம் போலவுமிருக்கு  !


மிக்கா, என்ற மீக்காயில் என்னை ஒத்த வயதுள்ள  சுவிடீஷ் நண்பன்  . ஸ்கர்ஹோலமன் என்ற நகரத்தில்  உள்ள வோர்பேரி மலையடிவாரத்தில்   அறிமுகமானவன்  வின்டர் காலத்தில் என் வாழ்வாதார  நிலைமை   மிகவும் நெருக்குவாரமாக இருந்தபோதில் நிறைய உதவி செய்தவன். 

                                                     சப்பாத்தில சக்கரம் போட்டு ஓடுவார்களே அதில  விண்ணன். மல்டிபரல்  தாவு செல் அடிச்சமாதிரி சும்மா கூவிக்கொண்டு பறப்பான் .ஒருநாள்தன்னும்  தட்பாதுகாப்புக்கு தலைக்கவச  ஹெல்மெட் போடவே மாட்டான் .அது ஏன்பா  நீ அதெல்லாம் போடுறதில்லை என்று  கேட்டால் " அதெல்லாம் எல்போட் போட்டு ஒடிப்பழகிற தவ்வல்கள் பயத்தில  பாவிக்கிறது  , நானெல்லாம் புரோபோசனல் லெவல் என்று சொல்லுவான்
                                                   " வாழ்க்கையில் எப்பவுமே ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள் " என்று பொஸிடிவாக அடைவஸ் செய்கிறேன் பேர்வழி என்று     எனக்கும் அதைப்போட்டு பாலன்ஸ் எல்லாம் பிடிக்கவைத்து ஓடப்பழக்கினான்  .வயதான என்னோட கால்கள் சும்மாவே எம் எஸ் பெர்னாண்டோ போல பைலா ஆடுவதால் அது எனக்கு ஒத்துவரவில்லை  . 

                                                       சப்பாத்தில சக்கரம் போட்டு ஒருநாள் ஓடியபோது அகாலமாக விழுந்து மண்டையை உடைத்து  அதீத இரத்தப் பெருக்கில் அந்த இடத்தில இருந்து தாமதமாகி ஆஸ்பத்திரிக்கு ஏறிப்பறிக்க  அடுத்தநாள்  மரணம்  !அவனுக்குரிய விதி அவனோடயே  சப்பாத்துச்சக்கர உருளியில் ஓடிவந்து ஒரு தருணம் பார்த்த இடத்தில அதுகுறித்த நேரத்தில்  சறுக்கியிருக்கு !!


                                                         
வாழ்க்கை  என்பது ஏதோவொன்று   நம்மை  விழுங்கக்  காத்திருக்கும்போது  அதன்  நெளிவு சுளிவுகளில் மாட்டிக்கொள்ளாமல்  உச்சிக்கொண்டு  சுழி ஓடுவது  போல  இருக்கும். இருந்தாலும்  அதன்  நல்ல  பக்கத்தில்  நல்ல  விசியங்களும்,  துன்பமான  பக்கங்களில்  விடைபெற்றுப்  போன   நினைவுகளும் சேர்ந்துகொண்டேயிருக்கிறது  .

                                                                                    நம்முடைய காலத்தில் நம்மோடு பயணிக்கும் ஒவ்வொருவரும் முன்னுக்குப் பின்னாக விடைபெற்றுப்போய்விடுகிறார்கள் . அந்த வெற்றிடம் மனதை அரித்துக்கொண்டேயிருக்கும் .  பலமுறை ஜோசிப்பது  வாழ்தல்  என்பதே  இருத்தலின்  இன்னொரு  பரிமாணம் என்றும்   . மரணம் அதன் இன்னொரு பரிமாணம் என்றும் . ! 


*
சிதிலமான கூட்டில்
அநாதரவாக
ஒரு பறவையின் சிறகு ,

எதற்கென்று தெரியாமல்
முகம்மோதி
ஈரப்படுத்தும் காற்று ,


எதிர்பாராமல்
நினைத்தபோக்கில் பெய்துவிட்டு
ஓய்ந்துபோகும் மழை ,


இருண்ட சாலையையோரம்
வீசப்படுக்கிடக்கும்
கரடிபொம்மை ,


சுமைதாங்கமுடியாமல்
வேரோடு சாய்ந்தபடியிருக்கும்
தனிமரம் ,


பாதையின் வளைவை
கண்வெட்டாமல் வெறித்துப்பார்த்கொண்டிருக்கும்
வயோதிபர் ,


தனித்தபடி சுரங்கள்
கீழ்ஸ்தாயியில் ஒலித்துக்கொண்டிருக்கும்
ஏதோவொரு பழையபாடல் ,


சந்தேக மையல் வீச்சுக்ளோடு
தலையைக்குனிந்தபடி
கடந்துபோகும் இளம்பெண் ,


ஒவ்வொன்றிலும்
ஏனோ தெரியவில்லை
இப்பெல்லாம் மரணத்தின்நிழல் !


*

இளம்சிவப்பில் சூரியன்
மழைக்குளிரும் காற்றில்லை
சில்லென்று
கோடையிலும் ஈரம்
கழுத்திலும் நெற்றியிலும் !

முட்டிபோட்டு
தண்ணி மொண்டு
முகம் துடைத்து
கண் மழங்க விழித்தபடி
வெறும் தொண்டை விழுங்கி
மனசுக்குள் சலிச்சு
தினம் பழகிய கோலம்
விடிகாலை !


*


எக்கச்சக்கமான புத்தகங்களால்
அடைசலாகிய அறை ,


வேதாந்தியைப் போல
நீண்ட வெள்ளைத் தாடியை
ஜோசிக்கும்போது நீவிவிடுக்கொண்டிருந்தார். 


நானோ பாதிரியாரிடம் பாவங்களை
ஒப்புக்கொடுப்பதுபோல
நாற்காலி விளிம்பில்
அதைரியத்தோடு உட்கார்ந்தவாக்கில்
மறுமை உலகம்பற்றிய
சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன் !


உள்ளுணர்வில்
கச்சிதமாகத் தெரிந்திருந்த ஏதோவொன்றில்
என் பார்வையைத்
தன் வெளிறிய நீலக் கண்களால்
சந்திக்கத் தயாராக இல்லாதவர் போல
மணித்துளிகள் மவுனித்திருந்தார். 


ஜன்னலுக்கு வெளியே
எதனாலோ
தூண்டப்பட்டு விழித்துக்கொண்ட
மெல்லிருட்டு நெருங்கிக்கொண்டிருந்தது !


என்ன சொல்லியும்
என்னை நம்பவைக்கமுடியாத போது
பதிவு செய்யப்பட்ட நிரூபணங்கள் ஏதுமில்லையென்றார்


உண்மையைச் சொன்னால்,
அவர் உண்மையைச் சொல்லவில்லை !


*

சன்னமான
இழைகளால் பின்னப்பட்டதுபோன்ற
நிலை பற்றிய தெரிவிப்புக்களில்
எப்போதுமே முரண்பாடு !


முதலாவது

அருவருப்பால் முகம்கோணி
உண்மையைச் சொல்லமுடியாமல்
கையில்பொத்தி வைத்திருக்கிறதுபோல
ஒரு எண்ணம்,
அல்லது எதிர்பார்ப்பு. 


முடிந்தவரை அதில்
ஏதும் அறியாததுபோல
பாவனை செய்வதில் தோற்றுவிடுகிறேன் !


இரண்டாவது
உங்களைப் பற்றி எத்தனை தெரிந்திருக்குமோ
அதே அளவு
என்னைப்பற்றியதுமான
தகவல் வெளிப்பட்டுவிட்டது போல
ஒரு அவநம்பிக்கை
அல்லது ஐயம் !


எனக்குத் தெரியும்
பணயம் வைக்கப்பட்டிருக்கின்ற
பரமரகசியங்களின் மதிப்பு அதிகமென்று! 


வாழ்க்கை என்னுமளவிலும்
கடினமான சூழல் ரெண்டிலுமே !


எப்படியோ
ரெண்டுமே நல்லதுக்கில்லை !


'

தூங்குமூஞ்சி சோம்பேறிகள் சேர்ந்திருந்து
தோற்றுப்போன குரலில்
அரக்கப்பரக்க பேசிக்கொண்டிருந்த சதுக்கத்தில்
சுவாரஸ்யமான ஒரு பாடலை
சத்தமில்லாமல் காற்றில்தேடிக்கொண்டிருந்தேன் !


வெய்யில் மாலைநேரம்
பரபரத்துபடி வேகமாகக் கடந்ததுகொண்டிருந்தது !


என் முணுமுணுப்பு 

கெக்கலிப்புப்போலிருந்திருக்கவேண்டும்
உரையாடலை நிறுத்தி
சற்று மவுனமாயிருந்தனர் சோம்புகள் !


மிரட்சிகளேதுமில்லாத சூழ்நிலையின்
இறுக்கத்தைத் மேலும் தளர்த்துவதுபோல
மரங்களின் இலைகள்
தமக்குள் பாடிக்கொள்ளும் மென்சத்தம் கேட்கிறது..


சிக்கலான நேரங்களில்,
சிக்கலான இடங்களில்
சில நேரம் மிகச் சிக்கலான பாடலொன்றின்
மெட்டுக்குள் அமிழ்ந்துபோவதும்
அவசியமாகத்தான் தோன்றுகிறது.!!!


'
சாதாரண நாட்களில்
எதன்மீதும் கோபமில்லை. 


எப்போது நிலைதடுமாறுமென்று
எப்போதுமே கேட்டதில்லை. 


சம்பவங்கள் அனைத்துமே

காலஅனுசரிப்பில் அமைக்கப்பட்டவைதானே. 


கடவுளுக்கே தெரியும்
படைத்ததில்
எவ்வளவு குறைகள் இருக்கிறதென்று. 


அசாதாரணமாக
மரணவிறைப்பு நெருங்கும் சமயத்தில்
அடித்தொண்டையிலிருந்து எழும்பும் ஆதங்கம் போலவே
இரவுகளில் நான் மவுனித்திருக்கிறேன் 


இல்லையில்லை
இரவுகளில்த்தான் விழிப்புணர்விலிருக்கிறேன் 


இப்பொழுதெல்லாம்,
வெளிச்சமான பகல்கள்
என்னை கைவிடுவதற்கான காரணம் 


என் வெற்றியா ? 

அல்லது என் தோல்வியா ?
என்பது கூட சரியாகப் புலப்படுவதில்லை

*

மரநாற்காலியின் மேல் பகுதியை
விட்டு விலகிச் செல்கிறது
அந்நியர்களின் உரையாடல் !


மூன்றாவதாக என்காதுகளையும்
சேர்த்துக்கொள்கிறேன் !


அவளுக்கோ
பிறந்து இடத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது.
அந்த இடத்தை
காட்டிக் கொடுக்கும் முயற்சியில்
தன்னையும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறான்
அவன் !


இளமைக்காலம் பற்றிப்பகிர
தாய்மொழியில் 

அந்நியோன்னியமாகிவிடுகிறார்கள் 

இலக்கில்லாமல் நானோ
எங்கெல்லாமோ அலைந்துகொண்டிருந்தேன் !


எதிர்காலத் திட்டங்களைப் பேசிக்கொண்டு
எதையோ பார்த்துச் சிரித்தார்கள் !


புரிதலின் அடி நீரோட்டம்
அவர்களிருவருக்குமிடையே
அகப்பரப்பில் வலுவடையக்கூடும் !


என்னுடைய பின்புலத்தை
நானும் விசாரிக்கிறேன் எனக்குள் !


நெருக்கமாகப் பின்தொடருகிற
ஒரே இடத்தில்
இம்மூன்று விரட்டல்களும் நிகழ்கின்றன
என்பதைத் தவிர
நமக்கிடையே எந்த சம்பந்தமுமில்லை…!


*

பாதி உலகில்
கதகதப்பாக உட்கார்ந்துகொண்டு
மணித்தியாலங்கள்
உபதேசம் செய்கிறது
அவர்களுக்குச் சுலபமா இருக்கு....


மிகவும் தீனமாக
கச்சிதமான
நரம்புகளின் முடிவில்
கேலிக்குரிய விதமாக
வெகுதூரம் தள்ளி இருக்கறது
என் ஆத்மா !


‘நான்’ ஒன்றும் மகிழ்ச்சியாக இல்லை,
அப்படித்தானே?
மனதை வெறுமையாக்கி
வடியவிட்டு
பத்து நிமிடங்கள்தான் கடந்திருந்தன.


தெரிந்தவற்றிலிருந்து
அழித்த பின் எதை நினைவு வைத்திருப்பது ?


மறுபடியும் துவங்கி விட்டது.
என்னுடைய
மறுபாதி உலகம் !


*

இதுகாறும் கேட்டிராத
ஏதோ ஒன்று
விலா எலும்புக்கூட்டுக்குள் 


சிறைப்பட்டது மாதிரியே
சட்டென்று
நெஞ்சு நெருக்கும் வலி
இறுக்கிப்பிடித்தது !


இதயத்தமணித் துடிப்புகள்
வெற்றிடத்தில்
இட்டுக்கட்டப்பட்டவை போல ,,,


வேடிக்கையாகவிருந்த நிமிடத்தில்
எனக்கதில்
சிறிது கூடத் தொடர்பில்லை போலத்
தூரமாகிப்போய் நின்றேன் !


மனதின் மவுனம்
நியாயப்படுத்தியிருக்கிறது
உயிரோடிருத்தல்
ஓரங்க மேடையென்றும்
வாழ்ந்துகொண்டிருப்பது
அதிலொரு அபத்த நாடகமென்றும் ! 


அந்தப்
பிரமையை உடைத்து
கனவில் விழிக்கவும், 


மெதுவாக எழுந்து பார்க்கவும்
நடந்து கொண்டிருக்கவும் 


ஒரு பாவனையோடு
நிறுத்திக்கொள்கிறேன் !





Wednesday, 11 September 2019

வேறோர் குரல் !


நிலப்பரப்பை
மூழ்கடிக்கும்முன்னிரட்டு !
குரல்வளையத் திருகிக்கொண்டிருந்த
நெரிசலான இரைச்சல்
பூமியெங்கும் அதிர்ந்து கொண்டிருந்தது !...
பின்னணியில் மேகங்கள்
ஆவேசமாக முறுக்கிக்கொண்டிருந்தன !
இன்றளவும் உறவைத்தொடர்கிற
பூர்வஜென்ம பந்தம்போல
பெயர்தெரியாப் பறவை
காற்றில்க் கலைந்தபடியிருந்த
கடைசித் தருணங்களுக்கான காட்சிப்படிமத்தின்
இறுதிவரியை பாடிக்கொண்டிருந்தது !





*


பின்மாலை வெய்யில்
எப்ப வேண்டுமென்றாலும் கண்மூடலாம் போலிருந்தது !
அவ்வப்போது அலையெழுப்பி
போட்டுஉருட்டி விளையாடிக்கொண்டிருக்கும்
சாயங்கால மனதுக்குள்

சுள்ளென்று இழுத்துப்பிடிக்கும் சலிப்பு !
முகப்புத்தாழ்வாரத்தில்
குளிர்காற்றில் சுழன்றபடியிருந்தன
பழுத்து விழுந்த இலைகள் !
எப்பவும் இப்படித்தான் என்றில்லை . !
எல்லாரும் சொல்றமாதிரி
தலைமுழுகிவிட்டுப் போகமுடியுமா?
உள்ளங்கைகளை விரித்து வைத்து
அதிஷ்டரேகைகளை உறுப்பார்க்கும்போது
மையத்திலிருந்து ஓரத்திற்கு நகர்ந்துவிடுகிறது
ஒரு பிரியமான குரல்
அல்லது
ஒரு நேசமான நினைப்பு
அல்லது
ஒரு அன்பைப்பிழியும் சொல் !



*


இடம் சரியாக இல்லையென்பதுபோல
வழக்கத்துக்குமாறாக
அசுமாத்தம் ஏதுமின்றிக்கிடந்தது
வழக்கமாகச் சலசலக்கும்
வளைசதுக்கம் ,

தூங்குமூஞ்சி மதுப்பிரியர்களும் இறந்தவர்கள்போல
நிசப்தத்தில் அமர்ந்திருந்தனர்.
காற்றசைந்தபோதும்
ஒருவர் கூட நகரவில்லை
வெய்யிலைத் தவிர
வேறு ஒரு ஓசையும் அங்கே இல்லை.
தப்பிச் செல்வதுக்கு
ஒரு வழியையும் பற்றி
அதிகம் ஜோசிக்கமுடியாத நேரம்
ஆகாயத்தில் மேகங்கள் இருந்தன,
குளிர் இன்னும் எழும்பவில்லை.
தூரத்தில்
சலனமாக பிரார்த்தனைக் குரல்
எல்லாம் அமைதியாகி விட்டது.



*


இடிந்துபோன கடந்தகாலத்தை
அழிவிலிருந்து மீட்டெடுத்து ...

காட்சிப்படுத்தமுடியுமா ?
சந்தேகமாகவிருக்கிறது !!!!
அபத்த நாடகத்தின்
நடுப்பகுதியில் ஸ்தம்பித்துவிடுவது போலிருக்கு
நினைவுகளின்மீதேறிப் பயணிப்பது !
சராசரி மனநிலையிலும்
ஈர்ப்புக்களைக் குறையவிடுகுதில்லை
அடுத்தகட்டத்தை நிர்ணயிக்காத
எதிர்காலம் !
இயல்பாகப் பயணித்துக்கொண்டிருப்பது
உணர்ச்சிகரமாக மாறி
கேள்விகளால் துளைக்கும்போது
எரிச்சல் வருகிறது !
திணறிக்கொண்டிருக்கும் அன்றாடங்களில்
தேங்கிவிட்டது போலிருக்கும்
நாளையென்பது
கனவுலகத்துக்கு ஒருவழிப்பாதை !
அதில் மூழ்கித்திழைத்துச் சஞ்சரிக்கும்
மிகமிக மென்மையான
ஒவ்வொரு நொடிப்பொழுதுகளும்
மாறிக்கொண்டிருக்கும் நிகழ்காலத்திற்கு
தற்செயலாக அமைந்துவிட்ட
பொருத்தமான குறியீடு !



*


நிலை மாற்றங்களும்
அதைத் தாங்கியடி நின்றுகொண்டிருக்கும் ...

நீண்ட பொழுதுகளும்
வெறுமனையே காலப்பிரமாணமில்லை !
நகர்த்தலிலும்
முழுமை பெறாது கசிந்து வழிகிறது
குளிர் உறிஞ்சும் அதிகாலை !
பெரிதாக வெளிப்படாவிட்டாலும்
கண்கொண்டு கூச்சமடைய வைக்கிறது
முன்கோடை வெயில் !
வாய்ப்புகள் அதிகமில்லாதபோதும்
வந்துபார்த்துவிட்டுப்போகிறது
காதலுணர்வு !
சொல்லமுடியாத தருணத்தில்
மதிப்பில்லாத அவமானங்கள் !
உயிர்ப்புடன் கடைசி வரையிலும்
எரிந்து கொண்டிருக்கிறது
நம்பிக்கை !
மெளனத்திற்கு எதிராக
ஓயாது உளறியபடியிருக்கிறது மனது !
அமைதியாய் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறது
நிழல்தந்து ஆத்மா!
ஆற்றாமையின் உள்ளக் குமுறலாக
நோகடிக்கும் அனுபவங்கள் !
அடி நீரோட்டமாய்க்
கால்களை நனைத்துக்கொண்டிருக்கிறது
புள்ளியாக நகரும் காமம் !
என
எழுதலிலும் , வீழ்தலிலும் வாழ்கின்றது
ஒரு மிகச் சாதாரண நாள் !



*



விம்மிவிம்மி
அவர்கள் கதைத்துக்கொண்டிருந்ததில்
இடிபாடுகளுக்குள் அகப்பட்ட
ஒரு பூனைக்குட்டியின் கதறல் இருந்தது !
அதைவிட அச்சுறுத்தியதென்னவென்றால்...
பறக்கும் பழக்கத்தை
பலவிதங்களில் பிரயாசைப்பட்டுக் கைவிடும்
ஒரு பறவையை
அது ஞாபகப்படுத்தியது !
அவர்களில் பலர் என்னைச்சுற்றிலுமிருந்தார்கள்
அவர்கள் நடுவில்
ஒரு வயதான தந்தையும்கூட இருந்தார் !
ஒடுங்கிப்போய்
மவுனமாகவிருந்தபோது
எந்த முயற்சியுமில்லாமல்
அவர்களிலிருந்து மாறுபட்ட ஒருவனாய்
என்னையறியமுடியவில்லை !
இறுகப் பிணைக்கப்பட்ட
இரும்புக்கதவை அகலத்திறப்பதுபோல
ஒருகாலத்தில் கொந்தளித்த
என் பழைய கோபமும்
நாளைக்கான
அவர்களின் தீர்க்கதரிசனமும் ஒன்றாவேயிருந்தது !











*


நேற்று முழுவதும்
எந்தத் தலையீடும் இல்லாமல்
அழிவு நடனமாடிக்கொண்டு
மிச்சமின்றி
அதன்போக்கில் பொழிகிற ...

மழைநனைந்த மலர்கள்
ஒவ்வொன்றையுமே ஆர்வமாகவும்
உள்ளங்கையைத் தாடைக்கு அணைகொடுத்து
கவனித்துக்கொண்டு இருந்தேன்.
நேரத்தை
மையப்படுத்தும்
இன்றும் அப்படித்தான் !
துல்லியமா ஒரே மாதிரி
அதிதீவிர தகவமைப்புத் திறனில்
புத்தம் புதிதாக
ஏதோவொன்றை சொல்லிக்கொண்டிருந்தன.



*


சத்தமாகச் சிரித்து
கதவடைத்ததுபோல மெல்லக் கதைத்த
அப்போதெல்லாம் உடலெங்கும்
மயிர்கால்கள் சில்லிட்டன !
அடிவயிற்றைப் பிசைந்துகொண்டு ...

சிலந்திவலையில் ஊர்கின்றன
ஒவ்வொரு உரையாடலும் !
நினைத்தால் தலைகுனிவாயிருக்கிறது
பழகிப்போன குரல்கள்
கொஞ்சம் கொஞ்சமாக பயனற்றுப்போய்விடுமா?
புரிதல்களை
ஒரு சமநிலைக்குக் கொண்டுவரும் தன்மையை
இழந்துபோவதால்
தன்னைத்தானே அழித்துக்கொள்ளுமா ?
அடிக்கடி
ஒழுங்கில் இருந்து ஒழுங்கின்மைக்குச் சென்று
விவாதப்போர் நடத்துகிறது மனது
யார்நீ ? என்கிறது ,
அந்தக்கேள்வியால் திடுக்கிட்டடு
உச்சத்தில் விழித்தெழுந்தபோது
அமைதிக்குள்ளிருந்து
வேறோர் குரல் எழுந்தது,!!



*


தேவதைகள்
பூமியிலும் வாழ்ந்தார்கள் !
புள்ளிபுள்ளியாக மழைபெய்து
மாக்கோலத்தை அழிப்பதுபோல
நினைமனதை நெருடுகிற...

எந்தவிதமான சலனங்களுமின்றி
நடுநிசிகளிலும் நடுப்பகல்களிலும்
கண்டும்காணாமலும் கடந்துசென்றார்கள் !
அப்போதெல்லாம்
பழக்கப்பட்டுப்போன இயல்பாகவே
வாழ்க்கையும் வலம்வந்துகொண்டிருந்தது !
புராதனமான பாவனைபோலிருந்தாலும்
ஓரக்கண்களிலும்
வெட்கத்தை ஏந்தவைத்து
ரசனையுடன் புலம்பவைத்த அழகு !
பச்சைநிறப் பட்டுச்சேலை
முந்தானைக் கூந்தலை மூடிமறைத்தபோதும்
முகத்தை வசீகரித்து வைத்திருந்த
அந்தக் காலத்தோற்றம்
இப்போதெல்லாம் இல்லாமல்ப்போய்விட்டது !
நாளுக்கு நாள்
யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதுபோல
ஜதார்த்தங்களே
தலைமறைவாகிக்கொண்டிருக்கிறன !



*

காது மந்தமாகி வெகுகாலம்
வாயசைவில் வார்த்தைகளைப் புரிந்துகொள்வார்
மேசையிலும் தரையிலும் புத்தகங்கள்
அவர்சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தேன்.
நீண்ட சிநேகிதமெல்லாமில்லை ...

ஒட்டுதல்கள் இல்லாத பரஸ்பர நடப்பு !
" புதிதாக ஒன்றும் எழுதமுடிவதில்லை
சொன்னது பலிக்கவில்லை " என்றார்
மரணத்துக்குள்
ஒரு காலடி எடுத்துவைத்ததுபோல
அறைமுழுவதும் வெள்ளை நிறம் !
நான் குறுக்கீடுகளின்றி அமைதியிலிருந்தேன் !,
வெறிச்சோடிக்கிடக்கும் அமைதியைக்
கலவரமாக்கிவிடுவதுபோல
"கல்லறைபோல ஏதாவது எழுதிவையுங்களேன் "
இதைத்தான் கேட்க நினைத்தேன்
முரண் நிகழ்வுகளையும்
காலத்தின் ஊஞ்சல் விளையாட்டையும்
நித்தியத்தில் ஆழ்த்துகிற
மௌனத்தை இடையூறு செய்வதுபோல
அந்த விண்ணப்பம் எஞ்சியிருந்தது
நினைக்கும்போதெல்லாம்
ஒருவித அலறல்போலவே
இப்பவுமிருக்கிறது !