Wednesday, 11 September 2019

வேறோர் குரல் !


நிலப்பரப்பை
மூழ்கடிக்கும்முன்னிரட்டு !
குரல்வளையத் திருகிக்கொண்டிருந்த
நெரிசலான இரைச்சல்
பூமியெங்கும் அதிர்ந்து கொண்டிருந்தது !...
பின்னணியில் மேகங்கள்
ஆவேசமாக முறுக்கிக்கொண்டிருந்தன !
இன்றளவும் உறவைத்தொடர்கிற
பூர்வஜென்ம பந்தம்போல
பெயர்தெரியாப் பறவை
காற்றில்க் கலைந்தபடியிருந்த
கடைசித் தருணங்களுக்கான காட்சிப்படிமத்தின்
இறுதிவரியை பாடிக்கொண்டிருந்தது !





*


பின்மாலை வெய்யில்
எப்ப வேண்டுமென்றாலும் கண்மூடலாம் போலிருந்தது !
அவ்வப்போது அலையெழுப்பி
போட்டுஉருட்டி விளையாடிக்கொண்டிருக்கும்
சாயங்கால மனதுக்குள்

சுள்ளென்று இழுத்துப்பிடிக்கும் சலிப்பு !
முகப்புத்தாழ்வாரத்தில்
குளிர்காற்றில் சுழன்றபடியிருந்தன
பழுத்து விழுந்த இலைகள் !
எப்பவும் இப்படித்தான் என்றில்லை . !
எல்லாரும் சொல்றமாதிரி
தலைமுழுகிவிட்டுப் போகமுடியுமா?
உள்ளங்கைகளை விரித்து வைத்து
அதிஷ்டரேகைகளை உறுப்பார்க்கும்போது
மையத்திலிருந்து ஓரத்திற்கு நகர்ந்துவிடுகிறது
ஒரு பிரியமான குரல்
அல்லது
ஒரு நேசமான நினைப்பு
அல்லது
ஒரு அன்பைப்பிழியும் சொல் !



*


இடம் சரியாக இல்லையென்பதுபோல
வழக்கத்துக்குமாறாக
அசுமாத்தம் ஏதுமின்றிக்கிடந்தது
வழக்கமாகச் சலசலக்கும்
வளைசதுக்கம் ,

தூங்குமூஞ்சி மதுப்பிரியர்களும் இறந்தவர்கள்போல
நிசப்தத்தில் அமர்ந்திருந்தனர்.
காற்றசைந்தபோதும்
ஒருவர் கூட நகரவில்லை
வெய்யிலைத் தவிர
வேறு ஒரு ஓசையும் அங்கே இல்லை.
தப்பிச் செல்வதுக்கு
ஒரு வழியையும் பற்றி
அதிகம் ஜோசிக்கமுடியாத நேரம்
ஆகாயத்தில் மேகங்கள் இருந்தன,
குளிர் இன்னும் எழும்பவில்லை.
தூரத்தில்
சலனமாக பிரார்த்தனைக் குரல்
எல்லாம் அமைதியாகி விட்டது.



*


இடிந்துபோன கடந்தகாலத்தை
அழிவிலிருந்து மீட்டெடுத்து ...

காட்சிப்படுத்தமுடியுமா ?
சந்தேகமாகவிருக்கிறது !!!!
அபத்த நாடகத்தின்
நடுப்பகுதியில் ஸ்தம்பித்துவிடுவது போலிருக்கு
நினைவுகளின்மீதேறிப் பயணிப்பது !
சராசரி மனநிலையிலும்
ஈர்ப்புக்களைக் குறையவிடுகுதில்லை
அடுத்தகட்டத்தை நிர்ணயிக்காத
எதிர்காலம் !
இயல்பாகப் பயணித்துக்கொண்டிருப்பது
உணர்ச்சிகரமாக மாறி
கேள்விகளால் துளைக்கும்போது
எரிச்சல் வருகிறது !
திணறிக்கொண்டிருக்கும் அன்றாடங்களில்
தேங்கிவிட்டது போலிருக்கும்
நாளையென்பது
கனவுலகத்துக்கு ஒருவழிப்பாதை !
அதில் மூழ்கித்திழைத்துச் சஞ்சரிக்கும்
மிகமிக மென்மையான
ஒவ்வொரு நொடிப்பொழுதுகளும்
மாறிக்கொண்டிருக்கும் நிகழ்காலத்திற்கு
தற்செயலாக அமைந்துவிட்ட
பொருத்தமான குறியீடு !



*


நிலை மாற்றங்களும்
அதைத் தாங்கியடி நின்றுகொண்டிருக்கும் ...

நீண்ட பொழுதுகளும்
வெறுமனையே காலப்பிரமாணமில்லை !
நகர்த்தலிலும்
முழுமை பெறாது கசிந்து வழிகிறது
குளிர் உறிஞ்சும் அதிகாலை !
பெரிதாக வெளிப்படாவிட்டாலும்
கண்கொண்டு கூச்சமடைய வைக்கிறது
முன்கோடை வெயில் !
வாய்ப்புகள் அதிகமில்லாதபோதும்
வந்துபார்த்துவிட்டுப்போகிறது
காதலுணர்வு !
சொல்லமுடியாத தருணத்தில்
மதிப்பில்லாத அவமானங்கள் !
உயிர்ப்புடன் கடைசி வரையிலும்
எரிந்து கொண்டிருக்கிறது
நம்பிக்கை !
மெளனத்திற்கு எதிராக
ஓயாது உளறியபடியிருக்கிறது மனது !
அமைதியாய் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறது
நிழல்தந்து ஆத்மா!
ஆற்றாமையின் உள்ளக் குமுறலாக
நோகடிக்கும் அனுபவங்கள் !
அடி நீரோட்டமாய்க்
கால்களை நனைத்துக்கொண்டிருக்கிறது
புள்ளியாக நகரும் காமம் !
என
எழுதலிலும் , வீழ்தலிலும் வாழ்கின்றது
ஒரு மிகச் சாதாரண நாள் !



*



விம்மிவிம்மி
அவர்கள் கதைத்துக்கொண்டிருந்ததில்
இடிபாடுகளுக்குள் அகப்பட்ட
ஒரு பூனைக்குட்டியின் கதறல் இருந்தது !
அதைவிட அச்சுறுத்தியதென்னவென்றால்...
பறக்கும் பழக்கத்தை
பலவிதங்களில் பிரயாசைப்பட்டுக் கைவிடும்
ஒரு பறவையை
அது ஞாபகப்படுத்தியது !
அவர்களில் பலர் என்னைச்சுற்றிலுமிருந்தார்கள்
அவர்கள் நடுவில்
ஒரு வயதான தந்தையும்கூட இருந்தார் !
ஒடுங்கிப்போய்
மவுனமாகவிருந்தபோது
எந்த முயற்சியுமில்லாமல்
அவர்களிலிருந்து மாறுபட்ட ஒருவனாய்
என்னையறியமுடியவில்லை !
இறுகப் பிணைக்கப்பட்ட
இரும்புக்கதவை அகலத்திறப்பதுபோல
ஒருகாலத்தில் கொந்தளித்த
என் பழைய கோபமும்
நாளைக்கான
அவர்களின் தீர்க்கதரிசனமும் ஒன்றாவேயிருந்தது !











*


நேற்று முழுவதும்
எந்தத் தலையீடும் இல்லாமல்
அழிவு நடனமாடிக்கொண்டு
மிச்சமின்றி
அதன்போக்கில் பொழிகிற ...

மழைநனைந்த மலர்கள்
ஒவ்வொன்றையுமே ஆர்வமாகவும்
உள்ளங்கையைத் தாடைக்கு அணைகொடுத்து
கவனித்துக்கொண்டு இருந்தேன்.
நேரத்தை
மையப்படுத்தும்
இன்றும் அப்படித்தான் !
துல்லியமா ஒரே மாதிரி
அதிதீவிர தகவமைப்புத் திறனில்
புத்தம் புதிதாக
ஏதோவொன்றை சொல்லிக்கொண்டிருந்தன.



*


சத்தமாகச் சிரித்து
கதவடைத்ததுபோல மெல்லக் கதைத்த
அப்போதெல்லாம் உடலெங்கும்
மயிர்கால்கள் சில்லிட்டன !
அடிவயிற்றைப் பிசைந்துகொண்டு ...

சிலந்திவலையில் ஊர்கின்றன
ஒவ்வொரு உரையாடலும் !
நினைத்தால் தலைகுனிவாயிருக்கிறது
பழகிப்போன குரல்கள்
கொஞ்சம் கொஞ்சமாக பயனற்றுப்போய்விடுமா?
புரிதல்களை
ஒரு சமநிலைக்குக் கொண்டுவரும் தன்மையை
இழந்துபோவதால்
தன்னைத்தானே அழித்துக்கொள்ளுமா ?
அடிக்கடி
ஒழுங்கில் இருந்து ஒழுங்கின்மைக்குச் சென்று
விவாதப்போர் நடத்துகிறது மனது
யார்நீ ? என்கிறது ,
அந்தக்கேள்வியால் திடுக்கிட்டடு
உச்சத்தில் விழித்தெழுந்தபோது
அமைதிக்குள்ளிருந்து
வேறோர் குரல் எழுந்தது,!!



*


தேவதைகள்
பூமியிலும் வாழ்ந்தார்கள் !
புள்ளிபுள்ளியாக மழைபெய்து
மாக்கோலத்தை அழிப்பதுபோல
நினைமனதை நெருடுகிற...

எந்தவிதமான சலனங்களுமின்றி
நடுநிசிகளிலும் நடுப்பகல்களிலும்
கண்டும்காணாமலும் கடந்துசென்றார்கள் !
அப்போதெல்லாம்
பழக்கப்பட்டுப்போன இயல்பாகவே
வாழ்க்கையும் வலம்வந்துகொண்டிருந்தது !
புராதனமான பாவனைபோலிருந்தாலும்
ஓரக்கண்களிலும்
வெட்கத்தை ஏந்தவைத்து
ரசனையுடன் புலம்பவைத்த அழகு !
பச்சைநிறப் பட்டுச்சேலை
முந்தானைக் கூந்தலை மூடிமறைத்தபோதும்
முகத்தை வசீகரித்து வைத்திருந்த
அந்தக் காலத்தோற்றம்
இப்போதெல்லாம் இல்லாமல்ப்போய்விட்டது !
நாளுக்கு நாள்
யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதுபோல
ஜதார்த்தங்களே
தலைமறைவாகிக்கொண்டிருக்கிறன !



*

காது மந்தமாகி வெகுகாலம்
வாயசைவில் வார்த்தைகளைப் புரிந்துகொள்வார்
மேசையிலும் தரையிலும் புத்தகங்கள்
அவர்சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தேன்.
நீண்ட சிநேகிதமெல்லாமில்லை ...

ஒட்டுதல்கள் இல்லாத பரஸ்பர நடப்பு !
" புதிதாக ஒன்றும் எழுதமுடிவதில்லை
சொன்னது பலிக்கவில்லை " என்றார்
மரணத்துக்குள்
ஒரு காலடி எடுத்துவைத்ததுபோல
அறைமுழுவதும் வெள்ளை நிறம் !
நான் குறுக்கீடுகளின்றி அமைதியிலிருந்தேன் !,
வெறிச்சோடிக்கிடக்கும் அமைதியைக்
கலவரமாக்கிவிடுவதுபோல
"கல்லறைபோல ஏதாவது எழுதிவையுங்களேன் "
இதைத்தான் கேட்க நினைத்தேன்
முரண் நிகழ்வுகளையும்
காலத்தின் ஊஞ்சல் விளையாட்டையும்
நித்தியத்தில் ஆழ்த்துகிற
மௌனத்தை இடையூறு செய்வதுபோல
அந்த விண்ணப்பம் எஞ்சியிருந்தது
நினைக்கும்போதெல்லாம்
ஒருவித அலறல்போலவே
இப்பவுமிருக்கிறது !
















Tuesday, 19 March 2019

ஆதிமனது !

புத்தகங்கள் ஒருகாலத்தில் நம்மை எல்லாம் இழுத்தி இருத்திவைத்து வாசித்து மகிழ்வடையவைத்த காலம் இப்போது எங்கேயோ போயே போவிட்டது. அந்த அலாதியான காலத்தை இப்போது அப்பப்ப  அசைபோடவே முடிகிறது. வேறு ஒன்றும் செய்வதுக்கும்  இல்லை . வாசிப்பு என்பது இப்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள்ளேயே நடந்தேறுகிறது.  அவ்வளவு அவரசமாகக் காலம் தள்ளிக்கொண்டு நம்மை முத்தி ஓடுகிறது.


                                                                              எழுத்தாளர்  திரு  . ராராஜி ராஜகோபாலன்  அவர்கள் எடுத்த  இந்த ஒளிபடத்தைப் பார்த்தபோது இளவயதில் நிறைய புத்தகங்கள் வேண்டி வாசித்த  " சோவியத் யூனியன் புக் சொப் " தான் நினைவுக்கு வந்தது. ஒரு அமைதியான சூழலில் இருக்கும் ஒரு புத்தகநிலையத்தை  அவர் விரும்பி  எடுத்த இந்தப் படத்துக்கு "
 ஒரு கவிதை போல இருக்கு இந்த இடம்  " என்று உளறிக்  கருத்திட்டேன் , அவரோ இன்னும் அழகாக  "
ஹியூறோன் வாவிக் கரையின் சிறிய ஊரில் பெரிய இதயம் " என்று அவருடைய பாணியில் பதில்க் கருத்திட்டு மிக உயர்ந்த ஒரு அர்த்தத்தில் அதைக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார்



                                                                            பலாலி வீதியில் இருந்த அந்தச் சின்னஞ் சிறிய புத்தக நிலையம்  ஒரு கட்டத்தில் அந்தப் புத்தக நிலையம் பலாத்காரமாக மூடப்பட்டு அதை நடாத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் கூடவே நினைவுக்கு வந்தது. அந்த புத்தகசாலை  நிறைய ரஷிய நாவல்கள், கதைகள் வாசிக்க ஒரு வாய்ப்பாக இருந்தது. அதில் புத்தகங்ககளும் விலை குறைவு . இப்பவும் அங்கே வேண்டி வாசித்த புத்தக தலைப்புகளும், அதை எழுதியவர்களின் பெயர்களும், கதைகளும் நினைவு இருக்கு. அப்படியான ஒரு காலம் இனி வருமா தெரியவில்லை.


                                                                          அப்புறமாய், இந்த எழுத்துருக்கள் எப்ப எழுதியவைகள் என்று சரியாகச் சொல்லமுடியவில்லை. மின்னேறிஞ்சவெளி வலைப்பூங்காவில் ஒரு பக்கமாக இவ்வளவுநாளும் இருந்த இவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்




ஒருசமயம்
இரக்கத்தின் விளிம்பிலும்,
பாட்சாதாபதிலும்
இன்னுமொருமுறை
உன்னிடம் திரும்பிவந்தால்

முடிந்தவரையில்
நிதானமாக
சாகும்வரைவாழ்ந்துவிடு !


இப்படிக்கு
அவசரமான வாழ்க்கை !



*


என்னைசத்
தேடிக்கொண்டு திரியும்
என்
கவிதைகளையே
சந்தர்ப்பம் இருந்தும்

நானின்னும்
சந்திக்கவில்லை !
உங்களை
நானெப்படி
மதிப்பிடமுடியும் !



*


இதற்குப்பிறகு
எனக்கு

என்ன நிகழும் ?
நலிவடையவைக்கும்
இதைக் கேட்கவே வேண்டாம் ,

இதற்குப்பிறகு
எனக்கு

என்ன விருப்பம்
அதைமட்டும்
விசாரியுங்கள் !



*


சொந்தமென்று
எனக்குள்
விதைக்கப்பட்ட கனவு,
அதிலேயே
சுவாச நேசிப்பைத்

தேடி எடுத்துத்தந்து
மிகவும் ரம்மியமானவற்றை
உதாரணமாக்கியவள்
நீயடி....!



*


நாட்பட்ட முதுகு
நாரி முறிக்கும்
விலா எலும்புகள்
நகரமறுக்குமிப்போதே
சேமித்துவைக்கும்நோக்கத்தில்

நிறுத்தக்குறிகள்
வைக்காமலே நிரம்பிவிட்டது
உளைவு வலி !



*


நினைவு
அருகில் இருப்பதால்
மகிழ்ச்சி நிறைந்து வழியும்
தனியிரவு !
நட்சத்திரங்கள்

ஒவ்வொன்றும்
விளக்கனைத்துப்போய்விட
விடியும் பொழுதில்
வேறு பலது
பிழைத்து விடுகிறது



*


ஓட்டைகளால்
உள்நுழைந்து வெளியேறுகிறது
தந்திரமான குளிர் !
முடிந்தவரை
தேசியக்கொடியால்
இறுக்கிப்போர்த்தபடி
நடுங்கும்
பிச்சைக்காரன்!
தைக்கப்படவேண்டிய
கிழிசல்கள்
இன்னும்தான்
நிறையவேயிருக்கு !



*


யாராயிருக்கும்
நிலவின் நிழலுக்குக்
குறிவைத்து
காறிக்குதப்பி
உமிழ்ந்து துப்பியது ?
ஒரு
அலையைப்
பின்தொடர்ந்து
விரட்டியபடியேயிருக்கு
தெருத்தண்ணி !



*


சும்மா தன்னும்
எட்டிப்பாரேன் என்றது
வழிவிடுதலைத்
தீர்மானிக்கும்
வெளிக்கதவு ,
மெதுவாகத்திறப்பதட்குள்
தோச்சுப்பிழிந்த
குளிர்காற்றை
புறங்கையால் வழித்து
முகர்ந்து பார்குது
முகம் !



*


நிலைப்பாடுகளில்
நடுக்கொள்ள
ஒரு பூனைக்கு
ஏகப்பட்ட சாத்தியங்கள் !

சுவருக்கு
அந்தப்பக்கமும்
சுவர் !
இந்தப்பக்கமும்
சுவர்தான் !



*


விவரணையை
உசுப்பிவிட்டுப் போகவும்
மேகமில்லாத
வெற்று வானம்!
கைகளை அகலவிரித்து

கொட்டாவி
பின்மூச்சு மூட
அழைப்பிதழ்கள் இல்லாமல்
எதற்காக
உள்ளே வந்தாய் என்றது
வெளி  !



*


இன்னும்
தூக்கம்விடியாத
மூஞ்சியில்
அதிகாலைப் புகார்,
தண்ணி தெளித்து
எழுப்பிக் கொண்டிருக்கு
ஜன்னலோரக்
கண்ணாடியெங்கும்
பேர்ச்மரங்கள்!



*


தன்
நிலைபடுத்தி
விமர்சிக்குமளவுக்கு
பெருமையாக
உளறிப்போட்டேன்!
அவ்வளவுதான்!
என்
தொடர்கதை
முடித்துவைக்கப்படலாம் !



*


நிசிநேரத்திற்கு
முன்னோடியாக
நம்பமுடியாத
எல்லாவற்றையும்
மனமழுந்தி உச்சரிக்கும் 
பன்னிரண்டுமணி !
சிணுங்கல்
மொழியலைகள்
இங்கிருந்துதான்
கதைக்கத் தொடங்குகிறன !



*


அலட்டிக்கொள்ளாமல்
மேனியுரசி
ஆடையவிழ்க்குது
வெள்ளுறை
வெண்பனிவெய்யில்
எனக்கு
மூக்கு நுனி மட்டுமே
வேர்க்கிறது !



*


பலவீனங்களைப்
பலப்படுத்தமுடியாத
ஊனுடம்பு,
பழையன
கழிதலுக்குள்
ஒடுங்கிவிடுகிறது
மரணம் !



*


இனிமேலாவது
ஏதாவது நடந்தேறுமா ?
நினைப்பை
முடிப்பதுக்குள்ளாகவே
இச்சை

மோப்பங்களை
அவிழ்த்து விடுகிறது
ஆதிமனது !



*


பல்லை
நெரித்தபடியேயிருக்கிறது
கையலைபேசி ,
விலகி ஓடச்சொல்லுதா ?
அல்லது

இயலாமையின்
சமீபங்களை நெருங்கச்சொல்லுதா?
அதுதான்
குழப்பமாகவிருக்கிறது. !



*






Saturday, 19 January 2019

கவனச்சிதறடிப்புக்கள் !

நனவோடையில் நனைந்தபடியோ அல்லது எதார்த்தமாக எழுத்துவத்துக்கோ எப்பவுமே அத்திவாரம் போல  ஒரு களம் எப்பவுமே தேவையாக இருக்கு. பலவருடங்கள் இருந்த நோர்வேயில் எழுதியவைகள் எல்லாம் ஒருவிதமானவை , நோர்வே போலவே வெளிப்புற அலங்காரங்கள் அதிகம் உள்ளவை. இப்போது வசிக்கும் சுவீடன் இன்னொருவகை,  சுவிடீஷ் வாழ்வியல் அமைப்புமுறை போலவே  மனதை அதிகம் விழுதிக்கொண்டிருக்கும் வகை.





                                                                      " It took me fifteen years to discover I had no talent for writing, but I couldn't give it up, because by that time I was too famous..."  என்று Robert Benchley என்ற ஆங்கில எழுத்தாளர் ஒருமுறை எழுதியிருந்தார். ஏனென்றால் இவளவு வருடங்களின் பின்  இப்பெல்லாம் அடிப்படையில் நானொரு விவரண எழுத்தாளன் என்றுதான் நினைப்பது  .


                                                                  என் வியர்வை நடந்து கடக்கும் மொழி என் வாழ்வின் மிகத் தனிப்பட எனக்கே எனக்கான அனுபவம். அதை மண்டையைத் திறந்து அதுக்குள்ளே மயிலெண்ணெய் விட்டுப்பார்த்த மாதிரி நான் உணர்கிறேன் . நான் பார்க்கும் உலகத்தைதான் நீங்களும் பார்கிறீர்கள், ஆனால் நான் அதை எப்பவும் வேறுவிதமாகப் பார்ப்பேன்




                                                              ஒரு நாட்டை சில பல காரணங்களுக்காய் அம்போ எண்டு விட்டுப்போட்டு ஓடிப்போட்டு திரும்பிவந்து " அடைக்கலமானானேன் உன்னிடமே அடைக்கலமானானேன் உன்னிடமே " என்று ரெம்ப நல்லவன் போல பாட்டுப்பாடி அந்த நாட்டில் இன்னொருமுறை வாழ்வதுக்கான அடுக்களைக்கு கட்டமைப்பது ஒத்துக்கொள்ளும்படியாக உண்மையில் மிகவும் கஷ்டமான ஒரு கைங்கரியம்.


                                                                            சுவீடனில் இப்பெல்லாம் ஒரு கழுதையைத் தேடி அதுக்குக் குதிரை போல கொம்பு இருப்பதைக் கண்டுபிடிக்கலாம் ஆனால்  எழுத்துவதுக்கென்று  உந்துதல் தரும் பொறியைக் கண்டுபிடிப்பது  பூதக்கண்ணாடி வைச்சு கிண்டினாலும் கண்டுபிடிக்க கஷ்ட்டம் போலிருக்கு  .   


                                            அதில உள்ள குழப்பங்கள் சொல்லும்படியாக நடைமுறைச்சிக்கலை இடியப்பச்சிக்கல் லெவலுக்கு ஆக்கினாலும் வாழ்க்கையை வாழ்ந்தேயாகவேண்டும் என்ற அட்ப ஐடியாவில் வாழும் எனக்கு சுவாரஸ்யமாகவேயிருக்கு,
                          
*                                                            

என்னையன்றி
வேறொருவர் நானறியேன் ,
உன்னைத்தவிர
யாருமேயில்லை உனக்கு,...

அதனால்த்தான்
நம்மை
விட்டுவிட்டு போய்
நம்மிடமே
வந்துசேர்ந்தோம் !



*


ஒருபோதும்
ஒத்துக்கொள்ளவேமுடியாது
வர்ணங்களையும்
எண்ணங்களையும் ...

பிரிக்கும்
நிறங்களின்
மனவோசையை
ஓவியமாக்கியவனின்
தற்கொலை முடிவுக்கான
காரணத்தை ! 






*

எனக்கோ
இடை நழுவிவிடும்
கவனச்சிதறடிப்புக்கள் !
உனக்கு ...

எல்லாமே
புரிந்து விடுகிறது
ஒரேயொரு
நுனிப் பார்வையில் !



*

அவசர அவசரமாக
உறைபனி
பாதைத்தடங்களை
மாற்றி மாற்றி வைக்குது ...

இது
நிகழ்ந்துகொண்டிருந்த நேரம்
பிறிதொரு
திசைப்பரிமாணத்தில்
முடிவிலி வழியில்
வெகுதூரம் போய்விட்டேன்

நான் !




*
வியந்து
திறந்து பார்க்கிறேன்,
உள்ளுக்கு
வெள்ளை இரவு,

வெளியே
கறுப்புப் பகல், !
உறைந்த ஜன்னலில்
பனிக்குளிர்காலம்
எனக்கென்ன குறைச்சலென்று
இறுமாந்துகொள்கிறது !





*



காற்றிடை
வெறுமைக்குள்
சிக்கிப் பறக்கும்
திக்குத்திசையிழந்த சருகு,...

தீராப்பெருங்காமம்
ஆக்கிரமித்துவிட்ட
மென்மனதில்
ஆரவாரங்கள் அடங்காத
தவிப்பு !



*

இன்னுமொரு
தப்பியோடிப் போகும்
திட்டம் ,
இன்னுமொரு ...

காய் நகர்த்தும்
தந்திரம்,
பழைய இடத்துக்கே
திருப்பிக்கொண்டுவந்துவிடும்
எதிர்பாராதமுடிவில்
இன்னுமொரு
ஆட்டம் தொடங்கலாம் !



*




எதிர்ப்பில்லாத் திசையில்
பார்ப்பதுதான்
ஒரு
பறவையின் ...

இலட்சியமென்று
கடினமான உராய்வுகளிலும்
சிறகுகளைத்
தாங்கிப் பிடிக்கும்
காற்றுக்கும்
நன்றாகவே தெரியும் !


 *



ஒரு
சின்ன உயிரின்
இழப்புக் குறித்து
வருத்தப்பட்டுக்கொண்டிருந்த ...

சம்பவத்துக்கு
ஒருசில அடிகள் தள்ளி
என் கனத்த
இதயத்துடன்
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறேன்..!




 *



பருந்து
தடுமாற்றமின்றித்
தன் இலக்கைக்
குறிவைத்துப் பார்க்குது !...

தாய்க்கோழி
உசாராகி
அணைத்துக்கொள்வதை
காதில் வாங்கிக்கொள்ளாமல்
குஞ்சுகள்
விடுப்புப் பார்க்குதுகள் !



*


ஆசுவாசமாக 
நிறுத்திக்கொண்ட
நிலத்தடி ரயில், 
மூடுமுன் கதவோடு 
உந்தித்தள்ளி ஏறினேன்,
ஒரு முழம்
கால் நிமிண்டு வழுக்கி
கணநேர நிலைச்சறுக்கல் !
சுமூகமான உறவைப் பேண
ஒரு
பிடிக்கம்பி கைநீட்டியது !
நிமிர்ந்த பிரயாணிகள்
யாரும் கலவரமடையவில்லை !
என் வயது
" கிளுக் " கென்று கெக்கலித்தது
எனக்குள்ளேதான் !



*
ஆக்கிரமிக்கும்
தனிமைப் பார்வையில்
உன்
செவ்வந்தி ரவிக்கையில் 
ஜன்னல
அசாதரணமாகவே
கண்களைத் திறக்கின்றன !
சரிதான்
தாலாட்ட வாவேன் டி
பற்றித் தள்ளாடும்
பனித்தாளம்பூக்களில்
தேன்கசியும் வாசனைகள் தேடுவோம் !



*
காற்று 
தெருப்புழுதி நெரிசலில் 
என்னவெல்லாமோ
மதிக்கும்படி 
சித்துவேலை செய்துவிடுகிறது !
உன்
சேலைத்தலைப்பைத்
மெல்லத் தீண்டிப்பார்க்கும்
ஒரவிசிறிப் பிடிப்புகளில்
துணிச்சலின்றிக்
களங்கப்பட்டுத்தான்போகிறது !



*
சலனக் கெஞ்சல்களில்
உனக்குரிய
நிழல் நெருங்கியபோது
நானறியாத 
எனக்குரிய
இதயத்தமணிகளை
நீயேதான்
திறந்து காட்டினாய் !
பிறகெதற்கு
தூரமாகிப்போய்நின்று
நாடித்துடிப்பை சந்தேகப்படுகிறாய் ? 



*
மழைக்கால
மாதவிடாய் !
தத்தளிப்புகளுக்குள்
மனத்தூய்மையோடு 
மூன்று நாட்கள் தாங்கலாம் .
மூன்று வாரங்கள் ?
முடியாதப்பா !
அதனால்த்தான்
உக்காரவிரும்பாத
கருமேகங்கள்
கலைந்தோடுகின்றன !










Saturday, 12 January 2019

நினைவுக்கிடங்கிலிருந்து 003

" அரசியல் என்பது அறம் " என்று நீதியின் நிழலில் முன்னோர்கள் ஏட்டில் மொட்டையாக எழுதிவைத்தது மட்டும்தான் போலிருக்கு , ஏனென்றால் அதிகமான முன்னோர்களின் சாம்ராச்சியங்களே அதை நடைமுறைப்படுத்தியதில்லை.! இது வரலாறு ! இந்த வரலாறு முடிவில்லாமல் இப்பவும் தொடராவதுதான் நம் காலத்தின் கொடுமை ..
                                                             
                                                                     இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில ஏதோவொரு அவமானமான அதேநேரம் அவலமான சம்பவங்கள் ஆட்சிசெய்யும் அரசாங்கங்களின் கண்களுக்கு முன்னால் நடப்பதாக செய்திகளில் கேட்கும்போதெல்லாம் அதன் முழுமையான வீரியம் யாரோ ஒருவருக்கு வேறெங்கோ நடக்கிறதுபோல காற்றலைகளில் இடம்மாறிப் போய்விடுகிறது .
                                                     
                                                                     சுவீடன் இந்தப் பந்தியின் முதல் வசனத்தை நிறையவே நடைமுறையில் வைத்திருக்கும் நாடு. அதன் தலைநகர் ஸ்டோக்ஹோலாமில் நகர மையத்தில் சேர்க்கிள்டோர்க் என்ற திறந்த வெளியை ஒரு உரிமைக்குரல் அரங்கமாக வைத்திருக்கிறார்கள். அதில ஒவ்வொருநாளும் ஏதோவொரு உரிமை ஆர்ப்பாட்டம் , வன்முறை எதிர்ப்பு ,அராஜகக் கண்டனம் , சமூக விழிப்புணர்வு, என்று அமைதியாக நிகழ்வுநடக்கும் .
                                                         
                                                                       அரசியல் அகதிகளாக தங்கள் தாய்நாட்டில் இருந்து தப்பி வந்த உறவுகள் அங்கே இருந்து தப்பி வரமுடியாத தங்கள் உறவுகளின் உயிர்ப் பிரச்சினையை மனிதாபிமான உரிமைகளை இங்கே இந்த அரங்கில் வைத்து உரத்து சொல்லுவார்கள்.
                                                             
                                                                உணர்வுபூர்வமாக இருக்கும் அவர்களின் பிரச்சினைகளை அறியும் போதெல்லாம். அவசரமான வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகளை தலையில போட்டுகொண்டு இந்தத் திறந்த வெளி அரங்கைக் வேகமாகக் கடந்துசெல்லும் மனிதர்கள் கண்டும் காணாமலும், கேட்டும் கேளாமலும் கடந்து செல்வார்கள்.



சில நாட்களின் முன் ஒருநாள் சேர்க்கிள்டோர்க் பக்கமாக போகவேண்டி இருந்தது.அங்காடிக்காரியை அவரோகணம் பாடச்சொல்ல அவள் வெங்காயம் கறிவேப்பில்லை என்றாளாம் என்பது போல அரசியல் பற்றிய அடிப்படை அறிவிலதன்னும் இன்னும் நான் முதலாம் வகுப்பு தாண்டவில்லை.
                                                 போராட்டம் ,விடுதலை , புரட்சி போன்ற பிசுக்கங்காய் வார்த்தைகளைக் கேட்டாலே உடம்பில நாயுன்னிச் செடியை உரசின மாதிரி சொறியத்தொடங்கும் அதனால மனசாட்சியோடு உரிமைமீறகள் முரண்படும் கோட்ப்பாடுகளில் எனக்கு ஆர்வம் இல்லை.
                                                  சும்மா இது என்னதான் ஆர்ப்பாட்டம் என்று மேஞ்சு பார்க்க கொஞ்சநேரம் அவடத்தில நின்று கேட்டேன். அம்னஸ்டி இன்டெர்னசினலும் , ஓர்கனைசனன் எகனைஸ்ட் எக்ஸ்சிகுயுசன் என்ற அமைப்பின் ஆதரவில் மனுநீதிகேட்டு வசந்தகாலக் கவிதையொன்றில் வாழ்விழந்த வரிகளை வேறெங்கோ தொலைத்துவிட்ட இரானிய மக்கள் சோகமாக நின்றார்கள்.
                                                  அப்போதுதான் மரணதண்டனை எதிர்நோக்கி காத்திருக்கும் தங்கள் உறவுகளின் படங்களைப் தூக்கிக்காட்டியபடி நின்றவர்களுக்கு நடுவில் சுவீடனில் வசிக்கும் ஒரு வயதான அப்பா ஈரானில் தூக்கில தொங்க காத்திருக்கும் தன்னோட மகளின் படத்தை கழுத்தில மாட்டிக்கொண்டு கைவிரல்களைக் கோர்த்து ஒரு வித நம்பிக்கையில் மவுனமாக எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தப் படத்தை எடுத்தேன்.
                                                   
                                                    பிறகு அவருடன் தனியாகக் கதைத்தேன். பெண் குழந்தைகளின் உரிமைக்காக போராடிய தன்னோட மகளை இரானிய அரசாங்கம் குற்றம் சாட்டி சிறையில் அடைத்து மரணதணடனை கொடுக்க வைத்திருப்பதாகவும், தன்னோட மகள் இந்த நிலைமையில் சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாகவும் சொன்னார். ஈரானில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் முடிவில் குறைந்தது பத்துப்பேர் தூக்கில இழுக்கப்படுவதாகவும் சொன்னார் .
                                                            அவளவுதான் சொன்னார் , அதுக்குமேல நானும் ஒன்றும் கேட்க விரும்பவில்லை. மனித உரிமை அமைப்புகள் சொல்வதைப் பாலைச் சுண்டக் காச்சி ஆறவைச்சு அதுக்குக் கள்ளப் பூனையைக் காவல் வைச்ச மாதிரி அரசியல்வாத அரசாங்கங்கள் மண்ணாங்கட்டிக்கும் கணக்கில் எடுப்பதில்லை.
                                                             
                                                              மரணத்தை நிமிடங்களில் எண்ணிக்கொண்டு கைவிரல்களைக் கோர்த்து ஒரு வித நம்பிக்கையில் மவுனமாக எதிர்ப்புத் தெரிவிப்பதைத் தவிர இந்த வயதான அப்பாவால் சுவீடனில் இருந்துகொண்டு வேறு என்னதான் செய்யமுடியும் ?

                                                                 
கையில கமராமொபைல்போன் இருக்கிறதால சாகடிக்கிறது போல அதுபாட்டில இருக்கிற இயற்கையையும், நிலைமாறாத இடங்களையும், நிம்மதியான மனிதர்களையும், கனவில்ப் பயணிக்கும் காலநிலைகளையும் சுழட்டி சுழட்டி எவ்வளவோ அலப்பறைப் படங்களை எடுத்து நானே இங்கே என் சுவரில் போட்டு அதுக்கு கவிதைவேற எழுதுறேன் பேர்வழி என்று உங்களின் உசிரை பலமுறை எடுத்து இருக்கிறேன் .

                                                சலிப்புத்தரும்படியாக
எரிய வேண்டிய சுடர் அணைந்துகொண்டிருந்த
  போதிலும்  இந்தப்படத்தில முகமறியாத யாரோ ஒரு ஜீவனுக்கு கொஞ்சம் உயிர் கொடுத்ததுபோல ஒரு மனஅமைதி !







எழுதக்கூடியவர்கள் ஒரே இடத்தில ஒரே நகரத்தில் இருந்து குப்பை கொட்டுவதில் அதிகம் சுவாரசியங்கள் கிடைப்பதில்லை . அப்படி இருப்பதே குட்டையில் தேங்கிய தண்ணியின் மெல்லிய சலசலப்பு ஏட்படுத்தும் சின்ன அலைகளைத் தவிர வேற ஏதும் நடப்பதில்லை.

                                                      புதிய நாடு ,,புதிய நகரம், புதிய மனிதர்கள், புதிய முகங்கள் ,புதிய வாசங்கள் என்று ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதியின் அனுபவம் போல ஏகப்படட புது விசயங்கள் ஒவ்வொரு பொழுதும் கிடைக...
்குது. பழைய பழகிய பாதைகள் அவை தேக்கி வைத்திருக்கும் நினைவுகள் . கோடையும் உறைபணியும் தந்த பாடங்கள்.

                                                                   இப்போது ஸ்டாக்ஹோலம் என்னோட புதிய தளம். ஒரு காலத்தில் சுவீடனில் படித்த போது இந்த நகரத்தையும் சல்லடை போட்டு தேடித் தேடி ரக்ஷித்து இருக்கிறேன். காதுக்குள் மிக ஆழத்தில் அமுங்கிப்போன சுவிடீஷ் மொழி வேறு கொஞ்சம் கொஞ்சமாய் தூசு தட்டிக்கொண்டு வருகுது. மிக நெருக்கமான ஸ்டாக்ஹோலம் நிலத்தடி ரெயிலில் பிரயானிக்கும் போதெல்லாம் சக பயணிகளின் உரையாடல் வெளிகள் அந்த மொழியின் அலாதியான போக்கை இன்னொரு முறை மீட்டு எடுத்துத் தருகிறது.

                                                      பிடிகொடுக்காமல் உதறி எறிந்து பிடிக்காத நகரம் கொஞ்சம்   கொஞ்சமாய் பிடிக்கத் தொடங்குது . என்னதான் இருந்தாலும் ஸ்டாக்ஹோலம் விசாலமான ஐந்து சந்திகளில் விவரணம் காட்டும் பரந்து விரிந்த நகரம், பிரிந்து போன என் அன்புக்குரிய ஒஸ்லோ மிகச் சிறிய மூத்திரச் சந்து போன்ற நகரம். ஆனாலும் அது தந்த ஆதர்சங்கள் மறப்பதுக்கில்லை . மறைப்பதுக்குமில்லை .

                                              

ஒஸ்லோவில் அனாமிக்கா என்னை எழுத வைத்தாள்.. என்னை ஆச்சரியம் கலந்த நனவோடைக்குள் இழுத்துச் செல்கிற அதிசயாமாக ஸ்டோக்ஹோலம் எழுத்தாளர்களைக் கொண்டாடும் நகரம்,



அவர்கள் வாழும் காலத்திலேயே உலகம் எல்லாம் இருந்து அவர்களை அழைத்துக் கவுரவப்படுத்தும் நல்ல வாசக உள்ளம் உள்ள சுவிடீஷ் மனிதர்கள் வசிக்கும் நகரம், இந்த மாதம் இந்த நகரத்துக்கு சில எழுத்தாளர்கள் வருகிறார்கள் என்ற விளம்பரம் தான் இது.




                                                       ஸ்டாக்கோலம் தியேட்ட்ட்ர் கலரிக்கு முன்னால் இருந்தது. அதில வாசித்துப்பார்க்க ஓரேன் பாரமுக் என்ற துருக்கி நாட்டு இலக்கிய நோபல்... பரிசுபெற்ற ஒருவரின் பெயர் தவிர வேறு பெயர்கள் அறிந்ததில்லை,

                                                        ஒரேன் பாராமுக் எழுதிய ஒரு நாவல் ஆங்கிலத்தில் வாசித்ததுண்டு, தமிழில் மொழிபெயர்ப்பாக " என் பெயர் சிகப்பு " என்ற ஓரன் ப்ரேமுக்கின்  வரலாற்று நாவல் வாசிக்க கிடைத்தும் இங்கேயும் அங்கேயும் இன்றி சில அத்தியாயங்கள்  பிரட்டியதைத் தவிர  முழுமையாக வாசிக்கவில்லை,



                                                            அவரின் எழுத்துநடை அபாரமானது. உண்மையானது. நிறைந்த வாசிப்பு அனுபவம் நிச்சயமாகக்  கிடைக்கும் . " என் பெயர் சிகப்பு  " இன்றைய இஸ்தான்புல் நகரத்தையும் பழைய ஒட்டுமேன் சாம்ராச்சியத்தையும் , இஸ்லாத்தையும் பின்னிய ஒரு கதை . அது வரலாற்றோடு சமாந்தரமாகப் பயணிக்கும். 


                                           அரசியல் காரணங்களுக்காக இந்தமானுட எழுத்தாளரை     துருக்கி நாடுகடத்தியது. பலவிதமான விவாதம், சர்சை, என்று அவரோட ஆளுமை எப்போதுமே ஒரு சவாலாகவே இருக்கிறது இப்ப அமெரிக்காவில் தஞ்சம் அடைந்து வாழ்கிறார். இப்பவும் எழுதிக்கொண்டிருக்கிறார் .

                                                                           மற்றப்படி அதில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டுள்ள det var inte jag igen அந்த சுவிடீஷ் வாசகம் கொஞ்சம் ஜோஷிக்கும் படியான அர்த்தமுள்ள வாசகம் ,it was not me back என்று ஆங்கிலத்தில் சொல்லலாம் . தமிழில் மொழிபெயர்த்தால் , " புதிதாக எதுவுமில்லை அந்தப் பழைய நானேதான் " என்று வரும்,

................சிலநேரம் எனக்கும் அது பொருந்தலாம்.!.......


Stockholm, Sweden.








Wednesday, 9 January 2019

வழிதவறிய பெருவெளி...

ஒரு அபாரமான  சம்பவத்தை , ஒரு ஆழமான  அனுபவத்தை , அல்லது ஒரு அகலமான நினைவை சுருக்கமாகக் கவிதைமொழியில் சொல்லாடலாக்கி "நச்  "என்று ஒருவிதமான  கச்சிதமான  வடிவதுக்குள் எழுத்தில் கொண்டுவருவதுதான் உள்ளதிலேயே சவாலான விசியம்.
                                                             
                                                           வார்த்தைகளை அளவுக்கணக்கு இல்லாமல் அவிழ்த்துப் போட்டு , விலாவாரியாக  உருவகிக்கிறேன் பேர்வழி என்று உள்ளதெல்லாத்தையும்  உளறிக் கொட்டாமல்   ஒரு  குறுகிய வடிவத்தில் இருப்பதால் அவைகள்  எப்போதும் வாசிக்க இலகுவாக இருக்கும். அதேநேரம் அர்த்தங்கள் பிரம்மாண்டமாயும் இருக்கும் . 

                                                           இந்த எழுத்துருக்கள்  சென்ற வருடம் 8 th , 9 th  January இந்த ரெண்டு நாட்களில் முகநூலில்  எழுதியவைகள் . சிலசமயம் ஜோசித்தால் எனக்கே  பின்மண்டை கிறுகிறுக்குது எப்படி இப்படியெல்லாம்  எழுத முடிந்தது என்று அதுவும் ரெண்டே ரெண்டு நாளில். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கு அது அது அந்த நேரம் வந்து சேரும் என்று முன்னோர்கள் சொன்னாலும் சொன்னார்கள். அதனால்   எழுதவரும் போது எழுதிவிடுவது நல்லது, இதயத்திலிருந்து  எழுந்துகொள்கிறது அதைச் செய்த திருப்தி  .

                                                                                பின்னொருநாள் நாடியையும் தாடியையும் தடவிக்கொண்டு  விட்டத்தை அண்ணாந்துபார்த்துக் கொட்டாவிவிட்டுக்கொண்டு    எழுதுவத்துக்கு எதுவுமே இல்லாதது போன்ற ஒரு வெறுமை வெளிக்குள் சலித்துப்போன  மனப்பிரமை வந்து சேர்ந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கும் என்று இன்றைக்கு நான் நினைப்பதுபோல இன்னொரு மனிதருக்கும் நேரலாம் , இல்லையா ? 


*
மவுனம்தான்
இட்டுநிரப்பிக்கொண்டிருந்தது
அதுக்குப்பிறகு
நானாகி நீயும் 
நீயாகி நானும்
பேசவேயில்லையே !

*

மழைக்கூந்தல்
துவட்டியபடியே
விரதமிருந்து
பனிப்பூக்கள் சொரியும் 
நீர்மேகம் !

*

அந்தத்
தேன்வண்டின்
முதல்க் காதல்த்தோல்வி
முதல் சந்திப்பில் 
முத்தமிட்ட
வாசமில்லாத மலர்!

*

குரைக்கவைத்து
நாயை
உறங்கவிடாமலாக்கியது
சதிரான சத்தங்களும் 
திகிலான இரவும்
பழியெல்லாம்
அப்பாவி நிலவுக்குமேல் !

*

நுனிக்காம்பில்
காலைப் பனித்துளி
அந்தநேரம்தான்
விடாப்பிடியாக 
ஊஞ்சலாட விரும்புகிறது
இலை !

*

வானம்
அடர் இரவுகளில்
சில்லறைத்தனமாகப்
பிச்சைதான் எடுக்கிறது, 
அலுமினியத்தட்டில்
சிதறிக்கிடக்கும்
நட்சத்திரங்கள் !

*

தந்திரமான
குளிர் நீரோடை
தலைகுனிவு நாணல்கள்
பிறகெப்படி
தனித்துவமிழக்காத
நிலவும் சேர்ந்தே
மிதந்து கிடக்குது ?

*

செறிவான
முன்னேற்பாடுகள்
குறைவான
அத்தியாவசியங்கள் 
இத்தனை
சுழிப்புகளை எதிர்பார்க்கவில்லை
வாழ்க்கை !

*

வெளிச்சம்
உந்திப்பறக்கமுடியாமல்
உறைந்துவிடத் தொடங்குகிறது ,
குளிர்காற்றில்
செதுக்கிக்களைந்த
இலைகள் !

*

எல்லாத்தையுமே
கொடுத்துவிட்டுப்போய்விட்டது
நடுக்கோடைமழை !
நனைத்த யாருமே 
நன்றியோடு இரங்கவில்லை !
கூரைக்கு மட்டும்
அடங்காத சோகமுகம் !
தாள்வாரத்தில்
சொட்டுச்சொட்டாக
கண்ணீர்த்துளிகள் !

*
மூன்றாம்
சாமக்கனவு
ரகசியமாக ஏற்படுத்தும்
உக்கிர சலனங்கள்,
ரெண்டாவது
வெண்பனிப்பொழிவு,

*

உருவப்
புரிதலின்றிதான்
நிராகரிக்கப்படுகின்றன
ராத்திரிகளை 
விடியலாக்கிவைக்கும்
வெள்ளிகள் !

*

ஏராளம்
காதல் உத்தரவாதங்கள்
ஒன்றாகவே
விசிறிக்கொள்ளும் போதும்
மொழியை
விறைக்கவைக்குது
நினைவிலொரு
தனிக்கவிதை !

*

மழை
தேங்கவைத்த
சிதறல் வெள்ளத்தில்
காணாமல்ப்போன
நிலவின்
நீர்த்த வாசனை !

*

பின்னிரவின்
பிரத்யேகப் பார்வை
திருடப்படுகிறது
தீங்கிளைப்
பயங்கள் அடர்த்தியான
கறுப்புநிறத்தில் !

*

முந்தநாளிருந்து
பிரிந்துபோன நேற்று
நாளையிலிருந்து
இடப்பெயரும் நாளைமறுநாள்
தத்தளிப்பு
இன்றைய மனநிலை !

*

ஒரு பக்கம்
நிறையா வெறுமை
இன்னொரு மறுபக்கம்
தோல்விகள்
பின்னுக்கு
அந்நியமாகிப்போனவர்கள்
ஒரே ஒரு நம்பிக்கை

எதிரில் நீங்கள் !

*

விவாதங்களின்
பயங்கர விரட்டல்
துல்லியமான
எதிர் விமர்சனம்
எதிர்பார்ப்புகள் தரும்
ஏமாற்றம்
இடையில் நிகழும்
பயணம் !

*

வழி தளரும்
நடைபாதை
விழிக் காத்திருப்புகளின்
சூட்ச்சுமங்களை
நிலைமழுங்க வைத்த
நாட்குறிப்பு !

*

வலியைக்
கவிதைக்குள்
வழிக்குக்கொண்டுவந்ததே
வெளிப்படும் பாவத்தில்
நுழைந்துகொண்ட
விதி !

*

அவதானிப்பில்
நீட்சிகுறித்த பயம்
ஓய்வாக
மரக்கிளையிலும்
சிறகை
நீள விரித்தபடியே
பறவை !

*

உள்ளெல்லாம்
திருப்த்தியின்மை
அத்திவாரமில்லாத
அந்தக் கணத்திலும் 
வெளிநோக்கி
அந்தமெல்லாம் முடிவில்லா
வாழ்வு சுரக்கிறது !

*

இருட்டில்
மின்மினிப்பூச்சிகளோடு
சலசலசலசலக்கும்
அதே
நதியில்தான்
மூழ்கிக்கொண்டிருக்கிறது
பிசுக்கேறிய
நகரத்தின் இரைச்சல் ! 

*
நேர்த்தியான நீள்பாதை
தெருவிளக்கின்
நீளமான நீலவெளிச்சம்
சட்டென்று 
விபரீதமாகக்
குறுக்குவழியில் இறங்கினேன்
கூடவந்த நிழல்
பின்வாங்கிவிட்டது ! 

*
நான்
அவஸ்தைகொடுத்துத்தான்
பிறந்திருக்கிறேன்
அம்மாவின் 
மடிவயிறு முழுவதும்
தழும்புகள் !

*

அமைதி நகரம்
நீண்ட நிசித்தூக்கம்
வழிதவறிய
பெருவெளிகளிலும் 
காத்திருக்கிறது
வெண்பனி !

*

தவறி விழுந்த
சருகின் மேல்
நீர்ப்போக்கில்
ஆற்றுக்கு 
அடங்காத பெருமிதம்
வழிகாட்டி நகர்த்தும்
இரு கரைகளை
யாருமே
மதிப்பதில்லை !


*
காற்றில்
உல்லாசமாய்
ஏறிப்பயணிக்கும்
இன்றைய மனம் 

கதை சொல்லியினுடைய
விதை !