Tuesday, 12 June 2018

ஜன்னலின் வழியிருட்டு...

மொத்தமாகவும் சில்லறையாகவும் சொல்வதுக்கே   கவிதைகளில் ஏகப்பட்ட வடிவங்கள் இருக்கு. பலரும் பலவிதமாக புதிய கட்டமைப்பு உருவக வடிவங்களை அறிமுகம் செய்து இருக்கிறார்கள். இதில உருவகித்து எழுதும் முறை ஒரு தனித்துவமானது. இன்றைக்கு எழுதுபவர்களும் புதுக்கவிதைப்பாணியில் நிறைய அவன் அவளென்றும், அவள் இவனென்றும், யாரோ ஒருவரை மனவெளிக்குள் இழுத்துக்கொண்டு நிறுத்தி   எழுதுகிறார்கள். இந்த அமைப்புக்குள்  பக்தி இலக்கிய காலத்தில்  ஒரு  தென்னிந்தியப் பெண்மணி மிகவும் சாதனை செய்து இருக்கிறார்.
                                                    
                                                                 அக்க மகாதேவி என்கின்ற கன்னட மொழிக் கவிதாயினி   சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னரே கவிதைகள் எழுதி இருக்கிறார் என்று ஒரு  பதிவில் படித்த போது ,அட அட அட , என்று ஆச்சரியம் கலந்த பிரமிப்பு வந்தது. அக்க மகாதேவி  சிவபெருமானைக் காதலனாகவும், கணவனாகவும் உருவகித்து கவிதைகள் எழுதி இருக்கிறார் சிவபெருமான் சைவ சமயத்தவர்களின் முழுமுதட் கடவுள் என்று நம்புகிறார்கள். . ஒரு எல்லாம் வல்ல கடவுளை ஒரு சாதாரண மனுஷி எப்படி அவ்வளவு சிம்பிளாக ஒரு கவிதைவடிவத்துக்குள் இணைக்கமுடியும் என்ற குழப்பம் இருந்தது.
                                        
                                                    வழக்கம் போல  என்னைப்போல  ஆர்க்கோளாறுகளுக்கென்றே வடிவமைக்கப்பட்ட     தேடுதளத்தில் சொடுக்கிப் பார்க்க. அக்க மகாதேவியின் கவிதைகள் பக்தி இலக்கியகாலத்தில் மீரா கண்ணனை நினைத்துப் பாடிய பாடல்கள் போலத்தான் இருந்தது. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும்  கவிதைகள் அதிகம் ஆன்மிகத்தைத் தாண்டிப் போகவில்லை.  ஒரு விதமான சமய நம்பிக்கை  எல்லைக்குள் நின்று சுழண்டுகொண்டே இருக்கிறது.
                                                   
                                                    அக்க மகாதேவி பெண்ணடிமைப் போக்கையும், சாதியரீதியிலான கொடுமைகளையும் எதிர்த்துக் குரல்கொடுத்த  புரட்சியாளரும் என்று சொல்கிறார்கள்.  வசன கவிதைகளின் மூலம், சிவபெருமான் மீது இவர்கொண்ட பக்தியை ஆழமாக உணர்த்தியுள்ள அக்க  மகாதேவி கவிதைகள் " வீரசைவ இயக்கம் " என்பதுக்கு முன்னோடியாக இருந்து இருக்கு. தனிப்பட   அக்க மகாதேவியின் திருமண  வாழ்க்கை, துக்கமும் துணிச்சலும் நிரம்பியது. கன்னட பக்தி இலக்கியத்தில் பெருமையோடு கூறப்படும் இவரது வாழ்க்கை வரலாறு வீரம் செறிந்த கதை என்கிறார்கள்.


                                                       அப்புறம் இந்த வருடமும் ,சென்ற வருடமும்   முகநூலில் நிலைத்தகவலாக எழுதிய எழுத்துருக்களை தொகுத்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
 




மனதாகவே செல்லும் 
வாழக்கையையே கொண்டுவந்து 
கைப்பிடித்து 
அழகான பயணத்திற்குள் 
அழைத்துச்சென்ற 
நமக்குரிய
ஆதி நிறங்கள்தான்
அழிந்து விட்டதே !
ஆனாலும் .
நீ
சமைக்க விரும்பாத
நாட்களிலெல்லாம்
அழகைத்தானே ஆராதித்தாய் !
நானும்
முன்முடிவுகளைக்
காதலின் மீது திணிக்காது
விரதமென்று
பொய் சொன்னதை
உன்
கைவிரல்
நகப்பூச்சுக்கூட
நினைவூட்டுகின்றன !




....................................................................



அந்த 
மரஅணில் 
வழிதடுமாறி 
வீதிக்கு வந்திருக்கலாம்,
பாதைகடந்த 
வாகனமொன்றின் சில்லை
மர அடியென்று நினைத்திருக்கலாம் ,
நெடுஞ்சாலை
அதி வேகத்தில்
முகமிருந்து வால்நுனிவரையில்
சப்பென்று நசிந்து கிடந்தது,
ஒவ்வொரு
வாகன ஏறிமிதிப்புகளும்
கறுத்தப் பாதையிலேயே
அதையொரு
சிவப்பு நிற மழுப்பலோடு
அடக்கமாக்கிவிடலாம் போலிருக்கு !
யாவரையும் வசீகரிக்கும்
ரெண்டு பக்கமும்
இன்னும் நிறைய மரங்களும்
மர அணில்களும்
நடுவில்
விதியும் !




..................................................................…


தொடங்கிய 
இடத்தைச் சென்றடையும்வரை 
சுற்றுப் பாதையில் 
சுற்றிநகரும் 
அனைத்தின் மீதும் 
விருப்பு வெறுப்பின்றி
வெளிச்சத்தை தூவிக்கொண்டே
உரத்துக் கதைக்காமல்
புன்னகையுடன்
சகபயணியாக வருகிறது
நிகழ்காலம் !
ஒரு
விட்டேந்தியாய்
அலைந்துகொண்டிருக்கும்
மனதிலிருந்து
சொல்லவேண்டுமென்றால்
தனியாகப் படிக்க
ஓராயிரம் பேர்
பிரவேசித்திராத வெளி இது !



......................................................................


நான் 
நாடற்றவன் என்பதை 
நேரடியாகச் 
சொல்லியிருக்கலாம். 
ஆனால் 
அவர் சொல்லவில்லை
நிரப்பிக் கொள்ளச் சொன்ன
இரவல் வாங்கிய
இடங்களில்
வெளிச்சங்களேதுமில்லை !
நேராகச்
சுட்டுக்காட்டுவதில்
உடன்பாடுகள் இல்லையென்றார்,
எனக்கு
ஊகிக்கக்கூடியதாகவிருந்ததெல்லாம்
அடைக்கலமாகி
இருட்டில்த் தடவிப்பார்த்து
ஒரு
சூனியவெற்றிடத்தில்
அமர்ந்துகொள்வது போலிருந்தது !



........................................................................…



முகத்தை மறைத்து 
இருள் விலகுவது போல
உட்காந்திருந்தாள் !
உள்ளங்கையில் 
அனாதரவாகக் கிடந்தது
மருதாணி ஓவியங்கள்,
அவளின்
நீள் மயிர்க்கற்றைகளில்
சிக்கெடுத்து
அள்ளிமுடிய முன்னர்
திசையறிந்து செல்லும்.
நட்சத்திரங்களை
ஆங்காங்கே
பின்னிச் செருகிவிட்டேன் !
இப்போது
இன்னுமிருட்டாகவிருக்குக்
கருங்கூந்தல் !



....................................................................


தாழ்வாரக் குரலில் 
கதைத்துமுடிய 
உரத்து வாயெடுத்துச் 
சிரித்துக் கொண்டிருந்தார்கள். 
அது 
அனிச்சையாய்
வழிந்து பரந்து பரவி
என்னை வந்தடைந்த போது
சட்டென்று
திருப்பத்தில் சுதாகரித்தேன்,
என்னவாக இருக்கும்?
இதுவரை
எங்கோ இருந்த
என்னைமறந்து சிரித்த
ஒருநாளில்
சத்தமாகச் சிரிக்காவிட்டாலும்
உள்ளுக்குள்
நானும்
இப்படிதானே இருந்தேன். !




.............................................................


விளிம்பு தெரிந்த
சிவந்தநிலா
உறங்கியிருக்கலாம் !
பால் வீதி
முழுமையாக ஒளிந்து 
தென்கிழக்கில்
ஒரேயொரு விண்மீன்
மூக்குத்தி சிமிட்டியது !
மின்விளக்குகளில்
சூழ்ந்து கொண்டிருந்த
நேரம்
ஏதுமின்றி நகர்ந்தது.!
இரவுகளில்
இந்தமாதிரி
எண்ணங்களைத் திரத்திவிட்டு
வானத்தை
வேடிக்கைப் பார்க்க
அடிப்படைக்காரணங்கள்
தேவையில்லைதான்.!




..........................................................................


சாயுங்காலம்
முழுநிலாநாள்.
கிழக்கில்
ஜன்னலின் வழியிருட்டு
பச்சைமலைகளில் 
எழுந்திருக்க வேண்டும்!
அலங்கார
நகர வெளிச்சம்
நட்ச்சத்திரங்களைக்
கூட்டி அள்ளிக்கொண்டுபோய்
ஒதுக்கிவிட்டது,
தொடர்வண்டிகளின்
இரைச்சல்களில்
குருவிகளின்
பாடல்கள்
கேட்கமுடிவதில்லை,
உயிர்த்தெழுந்த
ஞாயிற்றுக்கிழமை
வெறித்தபடி
திராட்ச்சைப்பழரசத்தை
நிரப்பிய
கிண்ணத்தை
முட்டி முகர்ந்து பார்க்கிறேன்
வாசனையில்
இயற்கையிருந்தது !




....................................................................



ஒரு 
தனிப் பறவை 
எதிர்வினைகளில்லாத 
மழை மேகத்தை ,
சுழல் காற்றின் 
வாய்ப்புகளில்ப்
புறக்கணிப்புக்களை,
எல்லைகளை
நீட்டி வைக்கும்
ஆழ்கடலின் வானத்தை,
சமரசம் செய்துகொள்ளாத
பெரும் புயலின்
சமிக்ஞைகளை
எதிர்கொள்ளவேண்டிவந்தால் .
சரியான நேரத்தைத்
தேர்ந்தேடுத்து .
சிறகுகளை மட்டும்
விரிக்கத் தெரிந்தால்
வேறெந்தத்
திசைகளும் தேவையில்லை !.




.........................................................................


.

ஒரு
அமைதிப் பூங்கா,
ஒரு
போர்வீரனின் சிலை,
ஒரு 
பள்ளி ஆசிரியை
ஆரம்பக் குழந்தைகளுக்கு
அதிதீரவரலாறு விளக்குகிறாள்!
அவன் கையில்
பதம் பார்க்கின்ற
கூர்மழுங்காத வாள்,
விசுவாசத்தின்
ஆதிக்கக் குறியீடாக
இரும்புக் கவசங்கள்,
முன்னம்கால்கால்களில்
எகிறிப்பாயும் வெள்ளைப் புரவி ,
கண்களில்
ரத்த நிறத்தில் கொலைவெறி,
அதிகாரமென்றால்
அடுத்தது அராஜகம்தானே!
குழந்தைகள்
தமக்குரிய
எல்லைக்குள் நின்று
குதிரையின் வாலைத்
தடவி விளையாடுகிறார்கள் !











Monday, 4 June 2018

ஞானமடைதலும் மோட்சமும் ...


புதுக்கவிதைகள் எப்போது எழுதத்தொடங்கினார்கள்,  யார் எழுதினார்கள், என்பது போன்ற கேள்விகள் பலகாலமாய்  குடுமிபிடி சண்டைகளோடும் , விவாதங்களோடும்  முட்டிமோதிக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறது. நமது தாய்வழித் தமிழ்மொழியில் நா, பிச்சமூர்த்தி பிள்ளையார் சுழிபோட பின்தொடர்ந்த  மணிக்கொடி கால, எழுத்துக் கால,  வானம்பாடிக்கால  கவிஞ்சர்கள்  புது விதைகளை நவீனமான பொருளடக்கத்தில் , புதியபாணிக் கட்டமைப்பில்  அறிமுகம் செய்தார்கள் என்றுதான் ஒத்துக்கொள்ளும்படியாக பலரும் சொல்கிறார்கள்.


                                                                 இன்றைக்கு அள்ளுகொள்ளையாக  சமூக வலைத்தளங்களில் அளவுகணக்கு இல்லாமல் வாசிக்கிறவர்களின் கண்கள் மங்கிப்போகும் அளவுக்கு   கவிதை எழுதித்தள்ளும்  பெண்கள்  அதிகம் எண்பதுகளின் கவிதைப் பொற்காலத்தில்   பங்கெடுக்கவில்லை . ஆங்கிலத்தில் சமகாலத்தில் ஆண்களோடு  பெண்கள் போட்டி போடும் நிலை இருந்தபோதும் தமிழ்கூறும்  நல்லுலகில் இந்தப் பின்னடைவுக்கு  என்ன காரணம் என்று தெரியவில்லை. 


                                                            ஆனால் உலக அளவில் முதன் முதலில் புதுக்கவிதை  எழுதியவர்கள் பெண்கள் என்று ஒரு கட்டுரை வாசித்தேன். அதுவும் அந்தப் பெண்கள்  புத்தசமயம் வட இந்தியாவில் செழிப்பாக இருந்த காலத்தில் பாளிமொழியில் எழுதி இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே பிக்குனிகள்  என்ற புத்தமத துறவிகள்.


                                                               அவர்களில் விம்லா என்கிற பிக்குனி அதிகம் பிரபலமாய் இருந்து இருக்கிறார்,. ஒரு சாதாரண பெண்ணாக இருந்தபோது ஒரு பிக்கு மீது காதல் வயப்பட்டு அந்தப் பிக்குவைக் குழப்பி , தானும் குழம்பி, வாழ்க்கையைச் சிதைத்து, ஒரு விபச்சாரியாக வாழ்ந்து கெடுமுன் பிக்குனியாக மாறி இருக்கிறாய் , அதன் பின் கவிதைகள் எழுதி இருக்கிறார், பிக்குனி விமலாவின் கவிதைகள் சில ஆங்கிலத்தில் அந்தக் கட்டுரையில் இணைத்து இருந்தார்கள்.


                                                                       உலகத்தின் முதல்ப்   புதுக் கவிதைகள்  என்று சொல்லப்படும் அந்தக் கவிதைகளில் அதிகம் இருப்பது பவுத்தமதப் போதனைகளில் உள்ள ஆசைகளை அழித்தல் , வாழ்வியல் துறப்புப் போன்ற கருத்துக்கள், ஒரு புதுக்கவிதையில் இருக்கவேண்டிய கவர்ச்சியான சொல்லாடல்  கிளர்ச்சியான பின்தொடர்பு,  சுருக்கமாக நிறையச் சொலவது போன்றவை இல்லை, 


                                                                    பாளி மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் நிகழ்ந்த  போது அவைகள் அடிபட்டுப் போய்விட்டதா என்று எனக்கு தெரியாது , அறளை பெயர்ந்த கிழவி பொட்டனி கட்டிப் பினாத்துவது போல இருக்கும் இதுக்குமேல எழுதினால் . அதனால   நீங்களே மேட்கொண்டு எங்காவது தேடிவாசித்து பார்த்தால் எனக்கும் சொல்லுங்க ! அப்புறம் நிலைத்தகவலாக எழுதிய என்னோட எழுத்துருக்களை தொகுத்து உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்,


ஒரு
மாந்திரீக
யதார்த்தவாதப் புனைவு.
ஒரு
நிறுவப்பட்ட
நிர்மலமான பொய்,
ஒரு
ஆழமான
துன்பியல் விதை,
ஒரு
எப்போதும்  
வைத்திருக்கவேண்டிய
சம்பவம் ,
ஒரு
மொழி தெரியாது
குரல் ,
இதில்
ஏதோவொன்றின்
அலைவரிசையில்ப்
பயணிக்கமுடியாவிட்டால்  
ஆத்மகிலேசத்தின்
எந்தப் பாகத்துக்குள்ளும்
ஊடுருவி
நுழைய முடியாது. !


......................................................................



உங்களைப்போல
நேர்த்தியாக நகர்த்தும்
சிந்தனைகள்
என்னிடமிப்போதில்லை !
ரசனையின்
அடிப்படையில்
ஒரு எண்ணத்துக்கு
மிகத் துல்லியமான
வரைகோடுகளை வரைகிறது
பார்வைகள் !
வெற்றிகரமான
கோட்பாடுகளோடு
அணுகித் தோற்றுவிட்டேன் !
ஆதலினால்
கவிதைகளின் மீதான
பிரியத்தில்
சொற்களென்றும்
வார்த்தைகளென்றும்
மனதில்
நிரம்பி வழியும்
குப்பைகளைப் பற்றிக்
கவலைகளின்றியிருக்கிறேன் !



 ...................................................................


தூக்கமின்றித் தவிக்கிற.
கண் பார்வைகள்
எதைத்தான்
பிரதிநிதித்துவப்படுத்துகிறது?
நான்தான்
தலையைக் குனித்தபடி
அவதானிப்பிலிருக்கிறேன் ,
அதிலுள்ள
அநாதித்தன்மைகள்
மிரட்சியூட்டக்கூடியது போலிருந்தது ,
அதன்பின்
ஒருபோதும்
தொட்டுணரமுடியாத
பிரமையாகவே
அனைத்துச் சம்பவங்களும்
தொடர் நெருங்குவதால் ,
மெழுகுபோல உருகிக்கொண்டிருக்கும்
கிளர்ச்சி அலைகள்
காமமாகத்தான் இருக்கவேண்டும் !


…………………………………………………………


நீலவானத்தையும்
அதன் முன்னால் நீட்டும்
செர்ரி மலர்களையும்
எதட்காக 
இவ்வளவுநேரம்
பார்த்துக்கொண்டிருந்தேன் ?
மேலதிகமான
விவரங்களையோ
பூமழை  விசிறித்  தூவுவதன்  
புரிதல்களையோ
பெற்றுக்கொள்ள  முடியவில்லை !
எதேசையாக   இதழ்கள்
காற்றில் அசைந்தாடியிறங்க 
அந்தக் கணத்துக்குப்
பொருத்தமான
ஒரு
பல்நிறப் பறவை
மழைக்கால வானவில் போல
அதன் இறக்கைகளால் 
ஒருமுறை மின்னியது 
கிளைகள் 
உதறிச் சிலிர்த்துக்கொண்டன .


............................................................................


நான்
 பிரபஞ்சத்தைக்
 கற்பனை செய்கிறேன்.,
ஏரிக்கரையின்
 வெளி முற்றத்தில் ...
வாடாத செர்ரி மலர்கள்
 சிதறிக்கிடக்கின்றன .
நிர்வாணமென்று
 நினைக்கும்படியாக
 இங்கெதுவுமேயில்லை
 எனக்குள் இருந்த
 எல்லா வக்கிரங்களும்
 நீர்த்துப் போய்விட்டது
 ரகசியமாக
 என்னிடம்
 எதையோப்பற்றி
 சொல்லிவைக்க
 விரும்புவது போலிருந்தது
 வெள்ளை அன்னங்களின்
 விசாரிப்புக்கள் !



..................................................................…


இந்தச்
சந்தேகம்
பிடிபட்ட நாளிலிருந்து
கிட்டத்தட்ட
ஆறுமாதங்கள்
நொருங்கிபோன
நினைவுகளுடன்தான்
கதைத்துக்கொண்டிருக்கிறேன் ,
நேராகவே கேட்கலாம்தான்
இத்தனைநாள்
தியானித்து உருவாக்கிய
ஒரு நட்பின்
உள்நுழைய முடியாத
கட்டுமாணங்கள்
வெறுமனே ஒரு விசாரிப்பில்
உடைந்தும்போகலாம்.


……………………………………………………….


ஒரு
 தனித்த
 இளம் பெண்ணின்
 பிரத்தியேக அறைக்குள்
 நுழைவதுபோல ...
சங்கடமாயிருக்கிறது
 உல்லாசக் கடற்கரையில்
 ஒதுங்கியிருந்து கவனிப்பது ,
நீள் வெளிகளில்
 இடங்களைத் தெரிவுசெய்து
 அமர்ந்துகொள்கிறது
 கோடை வெளிச்சங்கள்,
செர்ரி மலர்கள்
 காற்றில் மிதக்கின்றன
 அவற்றின்
 வாசனையில்
 மழையின் ஈரமிருக்கிறது !
நானிருக்கும்
 குளிர் நிழலிலிருந்து
 வெய்யிலை
 எப்படிப் பிரித்தெடுப்பது ?


...................................................................


ஒப்பிட்டு
நினைவுகூர்ந்தால்
சிரிப்புதான் வருகிறது !
சரணத்தில்
புதைகுழியிலிறங்குவது போல
ஆக்கிரமிப்பு
காதில் விழுகிறது !
பல்லவியில்
என்
நிம்மதிக்கள் கலைந்துவிட்டன !
அணுக முடியாத
தொலைவுக்குள் போய்விட்டது.
நேசித்த
மரபுகளிலிருந்து
விலகிக்கொண்டிருக்கும்
இசை !
 
...................................................................



சில
விஷயங்களை
அதீதமாகக் கற்பனை
செய்துகொள்ளும்போதெல்லாம்
நேர்மையை
மனசாட்சியில்
சந்திக்கவைக்க முடியவில்லை !
குற்றவுணர்ச்சி
சங்கடப்படுத்தும் போது
ஞாபகச் சுவடுகளை
முடிந்தவரையில்
தேடியழித்து விடுகிறேன் !
ஏனெனில்,
நானும்தான்
கறுப்பும் வெள்ளையும்
சமனின்றிக் குழைந்த
சாம்பல்நிற
மகத்தான கலவை. !

 
....................................................................



திரும்பத் திரும்ப
வாழ்வு ஓடுகிறது.,
சலிப்புற்றுப்
பளிங்குபோன்ற வெய்யில்
புல்வெளிகளில்
முழங்கை முகம் கொடுத்து
தலைசாய்த்துத்
தூங்கிவிழும் பொழுதுகளில்
நிழல்தரும்
பெரு மரங்களை விடவும்
அடிப்பாதங்களில்
ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்
எறும்புகளை
அதிகம் நேசிக்கிறேன் !


…………………………………………………..



அறியாமை
வெகுளித்தனம்
எல்லை மீறினால்,
அதல பாதாளத்தில்
அழுத்திவிடும்
இன்னொரு விளிம்பு நிலை
என்
சின்னவயதுப்
பயங்களாகவிருந்தது !
இப்பெல்லாம்
சமன்பாடுகளில்
எந்தப் பிரச்சினையுமில்லை
அறிவுத்
தீர்மானங்களின்றி
கருதுகோள்களில்
எதைப் பற்றியும்
எதுவும் சொல்ல முடிகிறது !


 ..................................................................


ஒரு
சராசரிகளின்
மனோபாவத்துடன்
எந்தளவுக்கு
முட்டாளாகியிருக்கிறேன் !,
பிரயாணிக்கும்
புல்லரிப்புப் பிம்பங்கள்,
அர்த்தமற்ற
விதிவிலக்குகள்,
அலட்சியமான
மனப் பிரமைகள்,
அற்ப சூழலில்
நேசப் பிறழ்வுகள்…
இப்போதும்
முழுமையாக
என்க்குள் என்னையே
அறிந்து கொள்ளவேயில்லை. !

 
............................................................................


ஒரு பக்கம்
மனது
காலை வெய்யிலோடு
பின்னிக் கொண்டிருக்க
மாடியிலிருந்து பார்க்கிறேன் !
ஒரு
அழகியபெண்
அற்புதமான
இலக்கண விதிகளோடு
தொலைதூரத்திலும்
மிக இறுக்கமாகவிருந்தாள், !
இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
நான்
சாமானிய மனிதன் !
எனக்கெனவே
ஜன்னலின்
கண்ணாடிகளின்மீது
பனி உருகிவழிகிறது !


..............................................................


பரவச அலையில்
மிதக்கிறதும்
பின்னர்
அப்பாவியாய்
முகத்தைத் தூக்கி
வைத்துக்கொண்டிருக்கிறதும்
நீயே
வடிவமைத்தவை !
நம்
மனங்களுக்கிடையே
வேறெங்கோதானே
நிகழ்கின்றன சம்பவங்கள் !
கரையத் துவங்கிய
கடற்கரை மண்ணில்
நீ
புரிதலாக இரு
நான்
கற்பனையாக இருக்கிறேன் !


...................................................................


கழட்டிவிடும்
உத்தேசங்களில்
அசாதாரணமானவொரு
கேள்விக்குள்
சிக்கிவிட்டபடியிருந்தது
அந்த இடைவெளி !
நேரம்
நீண்டு காத்திருந்த
அடுத்தடுத்த
வார்த்தைகளில்
வெறும் சமாளிப்புகள் !
தீர்மானமாகவே
அவர்களுக்காகவே
கைப்பிடியில் நின்றது
அடர் இரவு !
முகத்தைச் சுளித்து
புருவங்களை மூடி
ரயில்ப் யணம் போலவே
பிரிந்துபோய்விட்டார்கள் !



.................................................................

 
இரவு
நடுங்கும் குரலில்
கெஞ்சும் தொனியில்
கதவைத் தட்டியது
யாரென்று தெரியவில்லை !
என்
அனுபவத்தில்
காற்றைத்தவிர
இவ்வளவு
மென்மையான விரல்கள்
வேறு யாருக்குமில்லை !
இரக்கப்பட்டு
நீக்கலாகத் திறந்தேன் !
நான்
சுவாசிக்கவைத்திருந்த
வெதுவெதுப்புக்கள்
எல்லாமே
வெளியேறியேவிட்டது !


.................................................................


அதே
நிலத்தடிரெயில்
அதே
காலைப் பயணம்
அதே
திசைவழி
அதே
மெளனம்
ஒரு
தரிப்பிடத்தில்
நின்று
இன்னொன்றுக்கு
வெற்றிடமாகிப்
புறப்படும்போது கிடைக்கும்
இடைவெளிகளில்
வெறுமை
அழுத்தமாக்குகிறது. !
 
............................................................


வாழ்வு பற்றி
யோசிப்பதற்கான இடத்தை
உருவாக்கி
அனுபவங்களைப்
பின்புலங்களில் பதிவுசெய்து
இத்தனை வருடங்கள்
நினைக்க விட்டுப்போன
பிரியமான
சிவரஞ்சனியக்கா
நள்ளிரவொன்றில்
தூக்குப் போட்டுத் தொங்கிட்டா !
இரக்கமில்லாத
மரணமென்று கேள்விப்பட்டதால்
ஒரு
அஞ்சலி எழுதலாம் !
இரவெல்லாம் மீட்டெடுத்த
ஒவ்வொரு
பழைய உரையாடலும்
சருகு போலவே
உதிர்த்துகொண்டிருக்கின்றன ,
மின்னல்வெளிச்ச
ஞாபகத் துணுக்குகள்
நெஞ்சைக்குத்திக்கொண்டிருந்தும்
முடியும் புள்ளியில்
பொருத்தமான
சொற்கள் கிடைக்காததால்
காத்திருக்கிறேன் !

 
..............................................................


அவர்கள்
தலை வழிய
அன்னியோன்னியமாகி
செம்பழுப்புநிற மண்ணில்
சதிராடியபடியே
மழையில்
நனைந்ததை விடவும்
முறுக்கலாகக்
காய்ந்துவிட்டுப் போன
தளர் வெய்யிலில்
ஊசலாடிப்போன
நிலம்
தூறல் விசிறும்
திவலைகளைக்
கையேந்தி
எதிர்கொண்ட விதம்தான்
நியாயமான
கவிதையாகவிருந்தது !


.........................................................


சிந்திப்பதில்
மேன்மையடைதல் பற்றி
ஒரு எழவும் தெரியாது,!
அனுபவம்
உள்ளங்கைகளின்
ரேகைகள் போலவே
மங்கிவிட்டது !
ஞானமடைதலும்
மோட்சமும்
காரணங்களின்றி
நினைவலை மோதுகின்றன. !
யாசகப்
பொறுப்புக்களின்றி
இருந்தாலும்,
ஒப்புக்கொள்கிறேன்
நான்
போகவேண்டிய தூரம்
அதிகம்தான் !




Friday, 1 June 2018

திமிங்கலங்களின் நிழற்படங்கள் !

 வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை விட மிக வேகமாக  வார்த்தை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்க    எந்தவிதமான பொறுப்புகளும் இல்லாமல் எதயும் எழுதலாம் என்று  சோஷல்மீடியா கொஞ்சநாளா ஒரே கலவரம்,  போராட்டம் , எழுச்சி , படுகொலை என்று அமர்களமாகப் போய்க்கொண்டு இருந்தது,  அனைவருடனும் நட்பாகப் பழகி,  கைகுலுக்கிய முகநூல் நட்புகள் , ஏதோ வானத்தில் இருந்து குதித்த நீதிமான்கள் , நியாயவான்கள்  போல பிரிந்து நின்று வாதாடிக் கொண்டார்கள் .


                                      இந்தமாதிரியான விசியங்களில் எனக்கு சுத்தமாக அறிவு என்பது இல்லை.  அதனால சும்மாதன்னும்  நாலு இடத்தில செய்திகளை சுரண்டி எடுத்து அவிச்சுவிட்டாலும் , அரசியல் விமர்சனம் என்பது  ஒரு  எழுத்துக்கலை, அது எனக்கு கைவராத கைங்கரியும் , முருங்கை பருத்தால் தூணாகுமா?  அதனால சும்மா மூக்கை நுழைக்காமல் மவுனமாக இருக்கவேண்டி வந்தது .


                                                 டக்டரால விழுந்தவனை லேன்ட்மாஸ்ட்டர் ஏறிமிதிச்சா மாதிரி கும்மாயிங் கும்மாயிங் என்று குளறியடிச்சு புலம்பெயர் தமிழ்க் குஞ்சானுக்கள் எழுதிக்கொண்டு இருந்தார்கள். நம்ம நாட்டு விடுதலையையே ஒற்றுமையாக நின்று வெல்லமுடியாமல் நாசமாக்கிய இந்த ஏழறிவு  அறிவுஜீவிகள் எதுக்காக இந்தக் குதி குதிக்கிறார்கள் என்று  வாசித்தபோது மன உளைச்சல் தான் வந்தது அதிலிருந்து   கவிதைகள் எழுதும் உட்சாகமே காணாமல் போய்விட்டது.


                                                 சரி இந்த இடைப்பட்ட  காலத்தில்   ஏற்கனவே எழுதியவைகளை தொகுக்கும் முயட்சியில்  இந்த எழுத்தகு முயட்சிகள் முன்னர் ஆங்காங்கே  நிலைத்தகவலில் எழுதியபோது சிதறியவைகள்






கொஞ்சம் 
பழக்கமானதுதான் 
கரடு முரடான பாதை,

கொஞ்சம் தன்னும் 
நெருங்கிவர மறுக்குது 
புறநகரம் ,


நலம் விசாரிப்புகளற்ற
இந்த ஊரில்
அடிக்கடி
கைகுலுகிச் சிரிக்கும்
சுமுகமான நண்பர்களில்லை


நீயும்
இந்த ஊர்தானேப்பா என்று
குளிர்காற்று
குத்திக்காட்டினால்
மந்த புத்திக்காரன் போல
மவுனமாயிருப்பேன் !


.............................................................

விறைப்பிழந்து
உருகியுருக்குலைந்து

வழிந்தோடிகொண்டிருக்கும்
பனிப்பாளங்கள் !


முன்னுக்கு
வேலைக்கமர்த்திய 
பொறுப்பாசிரியை !


பின்தொடர்ந்து
எறும்புகள்போல .
தூங்குமூஞ்சிக் .
குழந்தைகள்
நிதானமான நடையில்

அண்ணளவான
முதுகுச் சுமைகளோடு
வரிசைகட்டிப்போகிறார்கள் !


ஒரு தடவை
கீழே விழுந்தெழும்பினால் .
இன்னொரு முறை
எங்கே சறுக்குமென்று
பாடம் சொல்லிக்கொடுக்கிறது
உறைபனி !


.................................................................

பூனைகளை
அதிகம் நெருங்குவதில்லை
அவைகளின்
தும்பு மயிர்
உள்நுழைந்தால் ஒவ்வாமை ! 


அவைகளின்
சவ்கரியமனப்பான்மையில்
பொறாமை !


அவைகள் போல
முன் எச்சரிக்கையாக
நடக்கமுடியாதென்பதில் ஈகோ !


ஒத்துக்கொள்கிறேன்
கொடுமை என்னதெரியுமா ?


ஒருவருக்கொருவர்
பொய் சொல்லிக்கொள்ளமாட்டோம்
என்றவை
சத்தியம் செய்துதரச்சொல்லும்
நேர்ப் பார்வையில்த்தான்
நான்
எரிந்து விடுவேன் !


......................................................................

வானத்தில் மிதப்பது போல
மாலைப் பொழுதுகளில்
நன்றாக
அலங்காரம் செய்தாய் ,

நான் 
வழியனுப்பிவைக்க
நுழைந்தபோது
பார்க்க விருப்பமில்லாமல்
சுவரைப் பார்த்து
விழி திரும்பிக் கொண்ட
முகமில்லாத
பொழுதுகளில்
என்
பகல்கள்
இரவாகிவிடுகிறது !


..................................................................


நம்பவைத்துவிடுகிற
மொழியில் 
ஒத்துக்கொள்கிறேன் 
இப்பெல்லாம் 
அடிப்படையில் நானொரு

வாயிருந்தும்
வார்த்தையில்லாதவன்

தூங்கிவழியும்
முகத்தை வைத்துக்கொண்டு 
என்
வியர்வையோடு நடந்து

கனவில்க் கடக்கும் வார்த்தைகள்
என்
வாழ்வின் மிகத்தனிப்பட
எனக்கே எனக்கான

அனுபவம்.!

.......................................................................

தனிமைத்துணையை
இழுத்துக் கொண்டு
திசையறியா அலைச்சலில்
எப்போதோ மறைத்துவைக்கப்பட்ட
ஆத்மாவின் ஆழத்தில்
சடாரென திறந்துகொள்ளும்
பழைய அனுபவம் .
அதுக்குள்ளே
உலகத்தின் ஊர்வலம்



அபூர்வமான காட்சிகள்
ஆவணப்படுத்தப்பட்ட மாதிரி உணர்கிறேன் .
நான் பார்க்கும் உலகத்தைதான்
நீங்களும் பார்கிறீர்கள்,
ஆனால்
நானதை வேறுவிதமாகப் பார்ப்பேன்
அதனால் முதுகின் பக்கம்
உலகமகா பொய்யன் என்கிறீர்கள்


..............................................................................


நீங்கள்
போகவிரும்பாத பாதை
உங்களுக்காகவே

நான்
பயணிக்கிறேன்
என்

வழிகளின் முடிவில்
சென்ற நூற்றாண்டின்

தீர்க்கதரிசியொருவரை
தற்செயலாகச் சந்திப்பதை
தொடர்புறுத்திப் பார்ப்பது
அலாதியான அனுபவமாக இருக்கலாமோ ?
உண்மையிலேயே
அதைத்தான் தாங்கமுடியவில்லை,,


.......................................................................




ஒவ்வொருநாளும்
அறிமுகமின்றி
மோசமாகிக்கொண்டிருக்கும்
தனிமை !
வெளிச்சங்களிலும் 
துணிச்சல்
போய்விடுகிறது !
கனவொன்றை
நேரில் பார்ப்பது போல
அங்குமிங்கும்
நடந்துகொண்டிருக்கும்
நினைவு !


.................................................................

யாரும் 
யாரோடும் 
காத்திருப்பிலும் 
கதைக்கவில்லை ,
உணர்வுகளில் 
சேகரித்து வைக்கவும்
நினைவிடுக்கில்
இடம் பிடிக்கவில்லை
கவனமாகப் பட்டியலிடப்பட்ட
இணக்கமுள்ள
பரஸ்பர உடன்பாடுகள் !
சென்றடைய வேண்டிய
வெகுதூரத்தில்
இன்னொரு
அணுகக்கூடிய புகலிடம் !
ஆனாலுமென்ன
நாலு மணித்தியாலம்
ஒரேயிடத்தில்
நான் !


..................................................................

அசௌவ்கரியமான 
திணிப்புக்களிலும் 
மிகவும் மென்மையானவள், 

பிடித்தமான
கவிதைகளை 
உறுதிப்படுத்துவாள் ,
வடிகட்டிகளைச்
சமாளிக்கத் தெரிந்தவள்,


விதம்விதமாக
மின்னஞ்சல்கள் எழுதுவாள்,
குறிப்பாகத்
திமிங்கலங்களின் நிழற்படங்களில்
மகிழ்ந்துகொள்வாள்,


என்
வெளிப்படையான எழுத்துப்பிழைகளை
நகைச்சுவையாக்குவாள்,
என்ன காரணமாக
இருக்கக்கூடும் ?


தலையசைத்துவிட்டுக்
கடந்து செல்ல
எளிமையானவற்றைக்
கடினமாக்கி
அர்த்தம் புரிந்துகொள்கிறாள் ?


......................................................................

இரவு
நேரத்தில்த்தான்
வேதனைத்தரும்
மன உளைச்சலாகிறது
இருட்டு !


இன்று
இறந்து விடுவது போலவே
தூங்கமுடிந்தால்
அதைப் பற்றி
நாளைக்கு உங்களிடம்
நிறையவே
கதைக்கப்போகிறேன் !


................................................................

சில்லறையான
சிரிப்புகள்
பரிமாறப்பட்டும்
முக்கிய காரணத்தை பற்றி 
அவளிடம்
கதைத்துமுடிவெடுக்க
இன்னும்தான்
தைரியம் வரவில்லை.!


நிலமையைச் சமாளிக்க  
நம்பிக்கை இல்லாமல் 
முடிவு குறித்த 
வேறு நல்ல  பதில்கள்
இருக்கிறதா ?
எனக் கேட்டேன். 

நிற்கும் இடத்தில் நின்ற 
வழக்கமான பதில் !.

ஒரேயொரு  
சுவாரசியத்தை  எதிர்பார்த்தேன்!

ஈர்ப்பு அவ்வளவுதானா...?
முன்னதை விட
அதிகாரமாகத்தானிருந்தது
முகம் ,
யூகித்திருப்பாள்
என்றும்தான் நினைக்கிறேன்!


............................................................

நினைப்பதைப் போல
என்னைத் தவிர
வேறுயாருமே
ஏறெடுக்கவில்லை !
அசைக்கமுடியாத 
தன்நம்பிக்கை
அவளுக்குள் ,
சம்பிரதாயமில்லாத
பாதையில்
வாழ்வு என்ற படிமத்தை
ஒரிரு வரிகளில்
எழுதிவைத்துவிட்டு
இறப்பைக்
கடந்துவிட்டாள் !.


............................................................

விவாதத்திற்குட்படுத்தி
அதில்
எதிர்பார்க்காமலேயே
நுழைந்துவிடும்
எதை ரசிக்க?


அந்த
வார்த்தைகளின் அழகையா?
அதட்குழிறங்கும்
அர்த்தங்களின் அசைவையா ?
அதட்குரிய
சம்பவக் காட்சியையா ?
அதன்
நகர்வு புரிபடாத
மறு கணத்தையா?


நமக்குள்
உருவாகிக்கொள்ளும்
ஒரு வகையான
குழப்பம்,
இறுகப்பிடித்து
ஆளையே உலுக்குவதுபோன்ற
உரையாடல்கள் !


......................................................................

கால்களைச் சுற்றி
விடைபெறுகிற
பனி
பொழிந்து கொண்டிருக்கு !


பறவையின் 
பாரமில்லாத
உதிர் சிறகு
சுழன்று கொண்டிருக்கும்
குளிர் காற்றில்
பாதை தேடுகிறது !


குறுக்கும் நெடுக்குமாய்
நிழலாக நகர்ந்து
விளிம்புகளைக் காட்டுது
துருவ வெய்யில் .!


தனக்குரிய இடத்துக்குப்
பிரவேசிக்கும்
கடைசிப்
பயணமென்பது
எவ்வளவு பெருமைக்குரியது !


.........................................................................

கோட்டோவியம் போலவே
தீட்டிச்சென்ற
அன்றைய
பகல் முழுவதிலும்
மௌனம்
அவஸ்தை போலிருந்த
அந்தக்
குறிப்பிட்ட தருணம்
உனக்கு
நினைவில்லையென்றாய் !


அமைதி
மனதுக்குள்ளிருந்து
அலையடித்துக் கொண்டிருந்த
இரைச்சல்
எப்படியிருந்ததென
அன்றைய
இரவுமுழுமைக்கும் .
எனக்கு
நல்ல நினைவிருந்தது . !


..............................................................

என் 
ஞாபகத்தில் தங்கியிருக்கும் 
மொழியறிவு 
சரிதானாவென்று பார்க்க 
அந்தப் 
புத்தகத்தை
வேகமாகத் திருப்பினேன்,


ஒரு
புதையலைப் பார்த்ததுபோல
சிக்கிக்கொண்ட
ஆழ்மனம் தாவியது.!


சொல்லாடல்களின்
பரவசத்தில் திளைத்து
தொட்டு நகர்த்தி
ஒரே மூச்சில் படிக்கமுடியவில்லை . !


பாதியில் வெட்டப்பட்ட,
பழைய சம்பவத்துக்குத்
திரும்புவது போலிருந்தது!


நினைவழிவுக்கு
எதிரான
மனச்சாய்வுகளுடன்
இனியெப்போதும்
போராடவேண்டியுள்ளது.!