Sunday, 13 May 2018

ஒரு தீர்த்தயாத்திரை

ஸ்டாக்ஹோலம் என்னோட புதிய தளம். ஒரு காலத்தில் சுவீடனில் படித்த போது இந்த நகரத்தையும் சல்லடை போட்டு தேடித் தேடி ரக்ஷித்து இருக்கிறேன். காதுக்குள் மிக ஆழத்தில் அமுங்கிப்போன சுவிடீஷ் மொழி வேறு கொஞ்சம் கொஞ்சமாய் தூசு தட்டிக்கொண்டு வருகுது. 
                                                           மிக நெருக்கமான ஸ்டாக்ஹோலம் நிலத்தடி ரெயிலில் பிரயானிக்கும் போதெல்லாம் சக பயணிகளின் உரையாடல் வெளிகள் அந்த மொழியின் அலாதியான போக்கை இன்னொரு முறை மீட்டு எடுத்துத் தருகிறது.பிடிகொடுக்காமல் உதறி எறிந்து பிடிக்காத நகரம் கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்கத் தொடங்குது .

                                              ஆச்சரியம் கலந்த நனவோடைக்குள் இழுத்துச் செல்கிற  ஸ்டோக்ஹோலோம்  விசாலமான ஐந்து சந்திகளில் விவரணம் காட்டும் பரந்து விரிந்த நகரம்.  ஒஸ்லோவில் அனாமிக்கா என்னை எழுத வைத்தாள்.  பிரிந்து போன என் அன்புக்குரிய ஒஸ்லோ மிகச் சிறிய மூத்திரச் சந்து போன்ற நகரம். ஆனாலும் அது தந்த ஆதர்சங்கள் மறப்பதுக்கில்லை . மறைப்பதுக்குமில்லை !

                                             2017 இல்  எழுதியவைகள் இவைகள்.  வழக்கம் போல   சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன்

இன்றைக்கொருநாள்
தென்கிழக்கு வெய்யிலோடு 
சிரிக்கிறது 
ஸ்டோக்ஹோலம் நகரம்

என் 
ஆத்மாவின் அலைவரிசையில்
தாய்மொழி தேடுகிறேன்


நிழல் விழுந்தழியும்
பழைய பாதைகளில்
முகமிறுகிய வெள்ளைமனிதர்களின்
காலடி வைப்புக்களில்
அர்த்தமில்லா அங்கலாய்ப்பு

அவசரமான தந்திரங்கள்

இந்த நகரம்
என் பழைய எதிரி


வடதுருவத்தை வருடிக்கொண்டிருக்கும்
சுதந்திரமான
அதன் பின்மாலைச் சிரிப்பு
எனக்கெப்போதும் பரிகசிக்கும்
இளிப்புப் போலிருக்கும்


இப்போதெல்லாம்
கொஞ்சம் கிட்டநெருங்கிவந்து
யவ்வனாமான வாசனைகளோடு
கன்னமுரசுவது போலிருக்கு


இப்படித்தான்
பலமுறை ஏமாந்துபோனேன்!

எதட்காக என்னைத்தேர்ந்தெடுத்து
கதவுகளை அடைத்து
திறப்புக்களை ஒழித்துவைக்கவேண்டும்?


இதை எழுதவைத்த

அளவில்லாக் கோபத்தில்
அதிகமிருப்பதுபோலிருப்பது
என்னுடைய
அதீதமான அலட்சியங்களேயென்கிறபோது
நான்
பயணத்தில் பின்வாங்கிவிடுகிறேன்

நகரம்
அதேயிடத்தில் 

அப்படியேதானிருக்கிறது !.

..........................................................................


ஒரு 
கடிதத்துக்காய்க் காத்திருக்கிறேன்


சகஜமான மாற்றங்களுக்கு 
தாமதத்தை உருவாக்கும் 
அனுபவத்தில்
பழைய பாதைகள்
எங்கெல்லாம் சிதிலமானதோ
அவற்றில் சில திருப்பங்கள்
செப்பனிடப்படலாம் ,


எல்லா அலுவலங்களில்
வரவேட்புக் கைகுலுக்கல்
நிட்சயமாய்க் கிடைக்கலாம் ,


நீண்ட உரையாடல்
மிகநீண்ட விளக்கங்கள்
மிக மிகக்குறுக்கிய 

சலிப்பான வாக்குறுதிகள்

அலைகள் போலவே
கரைகளை நனைத்துவிட்டு
நீள்கின்றன பகற்பொழுதுகளைக்
காத்திருத்தலில்க்
களவுகொடுத்துவிட்டதாக நினைக்கையில்
இன்னுமின்னும் சவால்களைச்
சரிசெய்யும் உத்தேசம்
இந்தக் கடிதத்தின் செய்தியாகலாம்,


பிறகு
தாய்நாட்டின் முகவரியை
நிரந்தரமாக அழித்துவிடலாம்,


அதுக்குப் பிறகு
வெளிறிய வெள்ளைகளோடு
சரிக்குச் சமன் சடடம் வாதாடி
குடுமியைப் பிடிச்சு சண்டைபிடிக்கலாம்


இதட்க்காகத்தானே
நம்பிக்கையின் அடிப்படையிலே
அந்த ஒரேயொரு
கடிதத்துக்காய்க் காத்திருக்கிறேன்.........


................................................................

அகலமான தெருக்களில் 
கலாச்சார வெளிச்சத்தை 
மனமெங்கும் 
கைதியாக்கி வைக்குது
ஸ்டாக்ஹோலம் 


கால் வலிக்க
நடநட நட நடவென்ற

கால்நடையாக
இளைப்பாற முடியாத கணத்தில்
அவசரங்களை
வேகமாகச் சுமந்து திரிந்தபடி
நட்பில்லாத
மேம்போக்கான மனிதர்கள்தான்
அதிகம் தென்படுகிறார்கள்


நடிக்க மறந்த
வின்டர் உறைபனி
உண்மையாகவே சபதமெடுத்து
உயிரைக் கொல்லுது


பயணத்தின் முடிவில்
மிகப் பெரிய நகரம்
வழிகளை
இன்னும்தான் மறைத்து வைத்திருக்க


ஆங்காங்கே
சில கற்றை ஒளிக்கீற்றுக்கள்
ஒரு குகையின் முடிவில்
அதிசயங்கள் தரலாம்


இல்லாவிட்டால்
நம்பிக்கை கொடுக்கும்
நாலு நண்பர்களின்
நட்பான உதவிகளில்
கடந்துசெல்ல
ஒரு நீண்ட தீர்த்தயாத்திரை
காத்திருக்கு.........


.........................................................................

அதிகமதிகம்
பரஸ்பர மரியாதையை
தன்னளவில் சுயகவுரம்
மனிதத்தை மனிதனாக்குவது
நேரத்தைப் பொன்னாக்குவது 
இதையெல்லாம்
மிக இயல்பாக எதிர்பார்ப்பவர்கள்
தயவுசெய்து
ஸ்டாக்ஹோலோம் நகரத்தை
நினைத்தே பார்க்கவேண்டாம்


பத்து வருடம் முன்
இளகிய உதவும்

இதயம் இருந்த கதிரைகளில்
இப்போது நரிகள்
இருக்கிறார்கள் என்பதைவிட
இல்லாமலிருக்கிறார்கள்


பழக்கப்பட்டே
வழக்கமாகிவிட்டது
நீண்ட வரிசை
அதில்க் காத்திருந்து
நெருங்கிவரும் போது
தந்திரங்கள் கண்களில்
பிசாசின் நாக்கு வெளியேதள்ளப்
பிரகாசிப்பதைப் பார்ப்பீர்கள்


அவளவுதான்
பிறகு நைச்சியமான பேச்சு
இல்லாத ஊருக்கு

வழிசொல்லும் பரிந்துரைகள்

மாஷான சமாளிப்புக்கள்
தட்டிக்கழிக்கும் கணக்கு வழக்கு


அர்த்தமில்லாத புன்னகை
வாழ்வாதார உரிமைகளில் உரித்தெடுப்பு


கையை உதறி உத்தரவாதமான
அரசமுறை விடைபெறுதல்


முடிவில்
உத்தியோகப்பூர்வாமாக
வெளியே தள்ளப்படுவீர்கள் !


..................................................................................

பயணங்களுக்குத்
தயார்படுத்தப்பட்ட பாதையொன்றின்
வழிக்குறிப்பில்
தீர்க்கமாக எழுதப்பட்டவாறே
பிரியமான சஹியே 
இப்போதே தயாராகிவிடு !


நேற்றைவரையில்
வயதான முகங்களுக்குள்
இன்றைய
புத்தம் புதிய முகவரிகள்
மாற்றிவைக்கப்படப்போகிற
தீட்ஷன்ய யாத்திரை
நிகழ்காலத்தில் இறந்து
எதிர்காலத்தில் பிறக்கிறது


புள்ளிட்ட இடங்களை
நிரப்பிவைக்கும்
கேள்வித்தாள்போலவே
வாழ்க்கை


விடைகளுக்காகத் தவமிருக்க
இப்படியாகிப்போன
உருகிவழிந்தொழுகும்
உணர்வு வெளியாவதுக்கு
அடிப்படையான காரணங்களை
எத்திசை தேடினாலும்
நிறைவடைய முடியவில்லை

 .
நிலாப்பிரதேசங்கள்
எல்லைதொட்டு மாறப்போகின்ற
வளைந்த வானத்தில்
சிறைப்பட்டிருக்கும் மேகங்களும்
நினைவுக் கண்ணாடியில்
படிந்துபோன பிம்பங்களும்


மலர்கள் சிறைப்பிடித்துள்ள
செந்தாழ வாசனைகளும்
மழையில் நனைத்துப்போன
பஞ்சனைக் கதைகளும்
இனிதொடரப்போகும்
முடிவான பயணத்தில்
துருவ நட்சத்திரமாகலாம்


பிரியமான சஹியே
இப்போதே தயாராகிவிடு............!


...................................................................


இரைச்சல்களில் கலவரமான
மத்தியரெயில்நிலையம்

ஒரு
அடைக்கலக்குருவி
எப்படியோ உள்நுழைந்துவிட்டது 


குளிர்கால ஜன்னல்கள்
இறுக்கி அடிச்சுச்சாத்தியதில்
திசையறிதந்திரமிருந்தும்
இடைவெளிகளின் சாத்தியமேயில்லை


புத்திசாதுரியமாகத்
தாழ்வானபறைப்பைத் தவிர்த்து
வெளியேற்றப்பாதை தேடுது


வாசல்களை 
அடைத்துக்கொண்ட
மனித அவசரத்தில்
இன்னுமெவளவு நேரமதன்
இறைக்கைகள் வேகம் தாங்கும் ?


ஓய்வெடுக்கும் 
சில தருணங்களோடு
ஒரு
பயணத்தடத்தில் காத்திருக்கும்
எனக்குத் தெரியவில்லை,


அதன் பின் அதைக் காணவில்லை !

மேலே விட்டத்தில்
ஒரு பாதுகாப்பானமறைவில்
ஒளித்திருக்கலாம்


ரயில்நிலைய அவசரங்கள்
நடுராத்திரி பன்னிரண்டில்
களைத்து ஓய்ந்த பின்னர்
கடைசியான தப்பித்தல்
முயட்சிக்காகக் காத்திருக்கலாம்


அடைக்கலக்குருவிக்கு 
எங்கே தெரியப்போகுது
அனைத்து வழிகளுமந்தநேரம்
விளக்குகள் அணைக்கப்பட்டு
விடிகாலைவரையிலும்
அடைக்கப்படுமென்று .!



...................................................................


தொடக்கத் தடுமாற்றத்தை
எதிர்கொள்ள நேரிடுமென்பதை
நினைத்ததில்லை.
இயலாமைகளில்
விட்டுக்கொடுப்போடு இருக்கலாம். 


நீண்ட முடிவுக்குக் காத்திரு
என்பதைச்
சொல்வதெல்லாம் அராஜகம் .


முதல்க் காதல் போல
அனுசரணையுடன் அணுகவேண்டி
தவிப்புகள் நிறயவேயிருக்க
மலைப்பாம்பு போல
ஏப்பம் விடக் காத்திருக்கு
ஸ்டாக்ஹோலம் நகரம்


நடுக்கம் தருகிற பயத்தை மறைக்க
உக்கிரமடைந்து போகிறது
ஆத்மா


முன்னெப்போதும் இல்லாதபடி
விழித்துக்கொள்ளும் மனது
நான் யார் என்பதை முடிவுசெய்கிறது


நன்றாகப் பழக்கமான
இந்த நகரத்துக்கு
நானொரு எழுத்தாளன் என்று
சொல்லிவைத்திருக்கிறேன்


அதில்
அது நிறைவு கொள்வதுபற்றி
அதன் முகத்தில்
ஒன்றுமே தெரியவில்லை


புரிந்து கொள்ளக்கூடிய அளவில்
அது பதிலும் தரவில்லை


வைராக்கியமான அதன்
அகங்காரத்தின் முன்
என்
பரிதாபமான மொழி
தாக்குப்பிடிக்குதில்லை....


......................................................................

பிடித்த தடம் பதித்து நடந்த
பழைய வழிகளில்
விழித்தெழாத கனவொன்றில்
புரியமுடியாத
வாசனை மோப்பம் 


ஒளிதரும் திசைகளை
வேண்டுமென்றே
மறைத்து வைத்திருக்கு
ஸ்டாக்ஹோல்ம் நகரம்


அதன் அபரிமிதமான
காற்றின் செய்திகளில்
என்
குளிரில் விரைத்த
உள்ளங்கையைத் தடவிப்பார்த்து
சட்டென்று கண்டுபிடிக்கும்
வித்தைகள் பலிக்குதேயில்லை .


அனுபவம் என்ன பாவம் செய்தது ?

முக்கித்தக்கி
இன்னொருமுறை முன்னேற
முயட்சிக்கு எப்படி
முடக்குவாதம் வந்தது ?


இந்த நாட்டில்
நீயே உனக்கு அதிபதி
உன்னோட
தன்னம்பிக்கைதான் விதி
மற்றவர்கள் எல்லாருமே
தூரமாகி நிட்பவர்கள்


சிலர் விழுந்துகொண்டிருப்பதை
வேடிக்கை பார்ப்பவர்கள்

ஏதாவது பார்த்து செய் என்கிறாள்
லாமியா .


பிரயோசனம் இல்லாத போதும்
இப்போதைக்கு இதனை
யதார்த்தம் என்று சொல்லமுடியவில்லை.


............................................................................................

சிலந்திவலை போலவே
அளவுக்கு அதிகம் உரிமை எடுத்து
அமைதி கசிந்துகொண்டிருக்கும்
பிராத்தனை நாள்


மெலிந்துபோன குளிர் காற்று 
புனித செயின்ட்கிளாரா
தேவாலயக் கதவைத் தொடுகிறது


நடு மண்டபத்தில்
பழைய மரப் பியானோவில்
செபாஸ்டியன் பாச் இன்
முடிவுறாத சிம்பொனியை
மெய்மறந்து வாசிக்கிறான் ஒருவன்


திருச்சபை மேடையின்
ஊதுபத்தி வாசனையில்
பாட்டியின் செத்தவீட்டு நினைவுகள்
சுழன்று சுழன்று அப்பிக்கொண்டது


ப்பரிகையில்
இராப்போசனத்தில்
ஜேசுநாதரை கண் ஜாடையில்
ஜூதாஸ் சக்காரியாஸ்
காட்டிக்கொடுக்கும் கன்வஸ் ஓவியம்


வயதான வெள்ளை மனிதர்களின்
விழிமூடிய பிராத்தனையில்
வருடம் தவறாமல்
கர்த்தர் பிறக்கும் நம்பிக்கை


வீடில்லாத தெருவாசியொருவன்
அடக்கவே முடியாமல்
நெஞ்சு விலாஎலும்புகள் குலுங்க
தொடர்ச்சியாக இருமிக்கொண்டிருக்கிறான்


நானோ
சூடானவொரு கோப்பி கிடைக்குமாவென்று
சொண்டு உலர அங்கலாய்க்கிறேன்


வெளியே உல்லாசமாக
எதையுமே கணக்கிலெடுக்காமல்
முழங்கால் வரையில் சலங்கைகட்டிச்
குதி அதிர சதிராடிக்கொண்டிருக்கு
ஸ்டாக்ஹோலம் நகரம்.


....................................................................................

காலை நடைபாதை
வழக்கத்திற்கதிகமான குளிர்
மெட்ரோவில் கூட்டத்திற்கு குறைவில்ல


ப்போதும் ஒரு அங்கலாய்ப்பு
ஏதேனும் ஒரு மறதி 
நீண்ட முடிவில்லாவொரு
வரிசையிலேயே
காத்திருக்கும் பிரமை


தேவாலயக் கதவுகள் அகலத்திறப்பு
மேம்பாலத்தைக் கடக்க
பராமரிப்பற்று உறைபனி மூடிக்கிடக்கும்
சிறுவர் பூங்கா.


அலைகிற ஒவ்வொரு மனமும்
சாகமாட்டாது என்கிறது
முன்னேறும் முன்னிருட்டு


யன்னல்களில் நட்ச்சத்திர
அலங்கார குமிழ் விளக்குகள்


இழுத்து மூடப்பட்டிருக்கிறது
கடன் கொடுக்கும் வங்கி


திறந்திருந்து மினுங்கும்
கிறிஸ்ம்ஸ்
திரை வெளிச்சத்தை சிதடிக்கும்
விளம்பரங்கள்


முண்டியடித்துக் கொண்டு நிற்கிற மக்கள்
பண்டிகை கொள்வனவின் கனவில்
உதட்டைப் பிதுக்கியபடி
வெளியேறும் மூச்சுக் காற்று


பாலன் பிறப்புக்கு
பிரத்யேகமாக திறந்து விடப்படும் என
நம்பிக்கைதரும் காலநிலை


அனைவரையும் கோமாளிகளாக்கிவிட்டு
யாராவது ஒருவர் சிரிக்கலாம் என்கிறது
ஸ்டோக்ஹோலம் நகரம்


அந்த நபர் நானாகவும் இருக்கலாமோ
தெரியவில்லை.!






Thursday, 10 May 2018

ஒரேயொரு வார்த்தை.

வாழ்க்கை ஒரு முடிவில்லா அலைகளுடன் முட்டிமோதி நீச்சலடிக்கும் பயணம்.அதுக்கு முதல் உட்சாக வேலையே தண்ணிக்குள் பாய வேண்டும். நீந்துவது பற்றிக் கரையில் நின்று விவாதிப்பதில் அர்த்தமே இல்லை. யாரெல்லாம் தண்ணிக்குள் பாயத் துணிகிறார்களோ அவர்கள் வெற்றிக்கு அண்மையாகப் பயணிக்கும் சாத்தியங்களை அதிகமாக்குகிறார்கள் 

                                                     வாழ்வின் மிகப்பெரிய கொடுப்பினைகளைத் தேடியபடியே  இணையவலைகளில் நுழைந்து உத்தரவாதமிழந்து களைத்துப்போய் இயல்பாக சுற்றுச் சூழலில்  நட்புக்களும் , உறவும்  தேடும் மனிதர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறார்கள். 

                                                         வெய்யில் அவசரப்படாமல் உலாவித்திரியும் இந்த  வாரங்களில்  முன் கோடையைக் கொண்டாட்டும் உத்தேசங்களில் மனிதர்கள் சுமைகளைக் கொஞ்சம் இறக்கிவைத்துவிட்டு  ஆசுவாசமாய் இயற்கையோடு ஒன்றிப்போவது  இன்னும் இன்னும் புத்துணர்வு தருகிறது .


                                                               2017 இல் முகநூலில்  எழுதியவைகள் இவைகள்.  வழக்கம் போல   சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன்


ஒரு 
மரணவீட்டு அழுகுரலில் 
ஈரமாகிக்கொண்டிருக்கும்
வெற்றுக் கதிரைகள்.........., 

ஒரு 
குழந்தையின் சிரிப்புக்கு
காரணங்கள் கண்டுபிடிக்கமுடியாத
அம்மாவின் வியப்பு,.............


சிதிலமான
கூட்டின் முகவரியை
மறந்துபோனதால்
இடம்பெயர்ந்த பறவை ...............


நரை மயிரை
முன்னிறுத்திக் காட்டுவதால்
கண்ணாடியை
முறைக்கும் முகம்.................,


வெள்ளையாக
நிலம் எழுதப்பட்டிருக்கும்
ரம்மியமான இரவின்
பவுர்ணமி நிலவு................,


அளவோடு
அரிதாரம் பூசியவளின்
அசைவுகளையே
வன்புணரும் கண்கள் ...........


அதிகமதிகம்
பேச்சு மூச்சில்லை
இருந்தாலும்
அவனுக்காவேயிருக்கும்
அவள்................,


பிரிவு நாளின்
பயங்கரமான சொல்லாடலைக்
கிளப்பிக்கொண்டு வந்துவிடும்
பழைய ஞாபகம்............. ,


வந்து போன பாதைகளில்
கடினமாயிருக்கும்
காற்றை லேசாக்கிவிடும்
புல்லாங்குழல்............


ஹ்ம்ம்

விபரிப்பில் சம்பந்தமேயில்லாத
இதெல்லாத்தையும்
புள்ளியொன்றில் ஒருங்கிணைத்து
முடித்து வைப்பதுக்கு
ஒரு
சின்னக் கவிதை
திணறிக்கொண்டிருக்கலாம் !


........................................................................


இருபத்தைந்து வருடங்களின் பின் 
அவன் முகம் 
தட்செயலாக முகநூலில் 
கண்டபோது திடுக்கிட்டு 
வருடங்களின்பின் புன்னகைத்தாள் , 

கண்களை வைத்துதான்
சடுதியாக அடையாளம் கண்டாள் !


எப்போதுமில்லா வேகத்தில்
உள்ளே அல்பங்களில் நுழைந்து
குடும்பப்படம் தேடினாள்,


முதன் முதலில்
அவன் கல்யாண மனைவியின்
அழகை ஒப்பிட்டுக் கவனித்தாள்,

அவள் முகத்திலிருந்த
பூரிப்பில் பொறாமைப்பட்டாள்,


அவளை அகற்றிவிட்டு தன்னை
நெருக்கமாக நிறுத்தி வைத்து
வடிவு பார்த்துச் சிரித்தாள்,


அவன் வயதானதையும்
கவனிக்க மறுக்கவில்லை !


அவன் குழந்தைகளின்
முகத்தை தொடுதிரையில்
விரல்களால் தொட்டாள்,


நெருக்கமான அந்தப்படத்தில்
தன்னையும் உள்நுழைக்க
இடம்தேடிக்கொண்டேயிருந்தாள்,


மடிக்கணனி
விசைப்பலகையில் கண்ணீர் விழுந்ததை
ஏனோ கவனிக்கவில்லை

கவனித்த போது
மிக மிக மென்மையாகவதை
சேலைத்தலைப்பால்
நோகாமல் ஒத்தியெடுக்கிறாள்,


சமையலறையிலிருந்து அவள் கணவன்
" எடியே என்னடி உப்புச் சப்பில்லாமல்
சமைத்து வைச்சிருக்கிறாய் 

வந்து இன்னொருக்கா சமையடி 
மோட்டுக்கழுதை " என்கிறான்,

" ஹ்ம்ம்" என்று பெருமூச்சு விடுகிறாள்
அதில்
இருவத்தியைந்து வருடங்களின்
பிரிவு அதிகமாகிறது !


அவனை மென்மையாக
அணைத்துவிட்டு
மடிக்கணணியை விரக்தியாக
அணைத்துவிட்டு
கலைந்த படுக்கையறை
விளக்குகளை வேண்டுமென்றே
அணைத்துவிட்டு


மிகமிக மெதுவாக சுவாசித்தபடி
ஜடமாக எழுந்துபோகிறாள் !


.......................................................................................

அவனின்
சேதாரமில்லாத பொய்களை
மனதோடு மன்னிப்பவள்

அவனின்
திருத்தமுடியாத குழப்படிகளில் 
சின்னக்குழந்தைத்தனத்தை
தேடி வெளியேயெடுப்பவள்


அவனின்
பொறுப்பற்ற பொழுதுகளின்
அலட்சியங்களில்
தானாகவே வந்து நெருங்குபவள்

அவனின்
விழுந்த தோல்விகளில்
தன்னையும் முண்டு கொடுத்து
வெற்றியாகவிருப்பவள்


அவன்
பழக்கவழக்கங்களை
பொறுமையோடுசகித்துக்கொள்பவள்

அவனின்
தேவையற்ற பதற்றங்களில்
தேவையான அளவுகளில்
நம்பிக்கை கொடுப்பவள்


அவனின்
அவமதிப்பு நேரங்களில்
தலை கோதிவிடும்
தாயாகவேயிருப்பவள்

தேசங்களில் தூரமாயிருந்தாலும்
கரிசனையில் கிட்டவாகவேயிருப்பவள்


அவள்தான்
இன்றைவரையில்
சொல்ல முடியாத
ஒரேயொரு வார்த்தையை
தனக்கெனமட்டுமே ஒதுக்கிய
பிரத்தியேகமான இடத்தில
வைத்துக்கொண்டு 

காத்திருக்கிறாள் !

...................................................................................


கறள்பிடித்த தண்டவாளங்கள்
பயணத்தை முடித்துக்கொள்ள
கடைசி இடத்திலிருக்கும்
கடைசி நகரத்துக்கு
கடைசி ரெயிலில் சென்றிறங்கினேன்


அங்கொரு
வயதான நண்பர் இருக்கிறார்


பறிபோனத்துக்கான 
அத்தனை செய்திகளையும்
தலைப்பிலேயே சொல்லும் காட்சிகள்

அமைதி அலைகளோடு
மூச்சுமுட்டும் ஏரி

வலித்துக் களைத்த துடுப்புகளுடன்
கடலோடிகளின் பாய்மர வள்ளம்

அதில்
பறந்து களைத்த சிறகுகளுடன்
ஒரேயொரு
பெயர்தெரியாத பறவை


நவீனதத்துவ காலம்கடந்த
காழ்ப்புணர்ச்சியை
சுண்ணாம்பு காரையாகப் பெயர்ந்த
புராதனமான கட்டிடங்கள்

அதியுச்ச ஆடம்பரங்கள்
வெல்லமுடியாமல்க் கைவிடப்பட்ட
அடையாளங்கள் பாதைகளில்


ஒருகாலத்தில்
இரும்புத் தொழில்ச்சாலைகள் 

விலாசமாகிய
பேய்களின் நகரத்தில்
மருந்துக்கும் மனிதநடமாடமில்லை


முன்போல இயங்க முடியவில்லையென்று
ஒத்துக்கொள்ளும்படியாக
வரலாற்றின் முகத்தில் தோல்விகள்


என்
நண்பரின் வார்த்தைகளில்
எரிச்சல்நிறைந்த
உலகமயமாக்கல் விரோதங்கள்


நானோ
ஒரு ஓவியமாக வரவேண்டிய இடத்தை
பாழடைந்த மொழியில்
எழுத்தமுடியாமல் தவிக்கிறேன்.


......................................................................................


நண்பா
பரபரப்புத் தலைப்புச்செய்திகளின்
கிளுகிளப்பில்
உலகம் மறுப்பவன் நீ


ஒரு 
இருட்டு மூலையில் 
அர்த்தமிழந்த சொற்களைத்
தேடியெடுத்து
சிறகிழந்த பறவையின்
பறப்புப் பற்றியோ

ரெண்டுகால்கள் 
இழந்தவனுக்குக்கிடைத்த
சப்பாத்துக்கள் பற்றியோ

மழையைத் துளித்துளியாக
வெற்றுத்தாளில் வரைபவன் பற்றியோ

அலைகளேயில்லாத 
ஏரிக்கரை பற்றியோ
மரணசாசனமொன்றில்
ஊதுபத்தி வாசனை பற்றியோ

காதலையும் மண்வாசனையையும்
மகரந்தப் பூந்துணர்வோடு
இணைத்துவிடுவது பற்றியோ
எனக்கே எனக்கான
வார்த்தைகள் பிரஸ்தாபிக்கலாம்


அவற்றைக் குறிப்பிட்டு
நிறைமாத விஸ்கி மப்பில்
தேவையில்லாத குப்பை என்கிறாய்


நான்
எனக்குள்ள துணிவில்
அதைக் கவிதை என்கிறேன்


அளவுக்கதிகமான அறிவுள்ள நண்பா
உன் உலகத்துக்கு
நான் ஒருபோதும் இறங்கிவரமாட்டேன்


முடிந்தால்
பக்கம் நடக்க வா
எங்கே தொடங்கினோமோ
அங்கிருந்தே கூட்டிக் கழித்து
இன்னுமொரு 

முப்பது வருடங்களைப்
பின்னோக்கியே வாழ்ந்துவிடுவோம் !


......................................................................................


இறுக்கமெல்லாம்
தளர்த்திவிடுவது போலவே
உறைபனி பின்வாங்கிக்கரைகிறது
கொஞ்சம் கொஞ்சம்
நினைவுகளை வைத்துவிட்டுப்போக 
சிந்திக்கொண்டு மூசிப்பெய்யும்
மூடு பனியில்
முகமும் துடைத்துக்கொள்கிறது
முத்தாய்ப்பாய்
நல்ல மண்வாசனைகள்
மாசிமாத நடுவில் வரலாம்
கன்னத்தில் மஞ்சள்
அள்ளிப் பூசவிட்டு ரசிக்கும்
விசுவாசமான வெய்யிலோடு
லயித்துப்போகும் கோடை
ஒரு ஆச்சரியக்குறியாகவேயிருக்கு
ஒருகோடி இதழ்நுனிகளில்
அந்திவான மையெழுத்தியே
துளிர்த்துக்கொள்ளும்
செங்காந்தள் மலர்கள்

சம்பூரண ராகங்கள் தேர்ந்தெடுக்கும்
புவியீர்ப்புவிசை
சருகுகளைப் பறக்கவிட்டு
மிதந்து விழுத்தியே
பொறுப்பெடுத்துக்கொள்வது போலவே
பிரியமானவளே
உன் சூடான மடியில்
என்னை நீயே எடுத்துக்கொள்
பூச்சூடி நிலாப் பார்த்து
கையிரண்டிலும் இறுக்கமாகி
சந்தனமும் குங்குமம் 
வெண்சங்குகளும்
அவகைக்குள்ளேயே பேசிக்கொள்ளட்டும்!
....................................................................................................

பனிப்பொழியும்
ஒற்றை மழைக் குளிரோடு
மிக மிக இயல்பாகவே
ஓடிப்போன மஞ்சள் வெய்யில்
மனம் திரும்பிவந்து
வாழ்க்கையை ஆரம்பிக்கிறது


கசங்கிய முகம் திருத்தும்
காலை மனிதர்கள்
சடார் சடார் என்று கடந்தார்கள்


புராதன தேவாலயத்தில்
மிகச் சரியாகவே தேர்ந்தெடுத்து
எட்டுக்கு மணி அடித்தது


அகலமான நடைபாதைகளில்
உருமாற்றம்பெறத் தொடங்கி
உச்சக்கட்ட இரவின் அயர்வில்
கொட்டாவிட்டுக்கொண்டிருக்கும் வீதிகள்


எப்போதும்போல
என் விடியல் ஆயத்தங்கள்
சோம்போறித்தனமாகவேயிருந்தன


இயல்பான ஜோசனைகளையும்
கையிலில்லா முடிவுகளையும்
இடம்மாற்றி வைக்கும்
மனவிரிசல் எண்ண அலைகள்
ஸ்தம்பிக்கும் போலிருந்த போது
ஸ்டாக்ஹோலம்
என்னைப் பார்த்து பரிகசிக்கிறது


சலிக்கும்படியான அன்றாடம்தான் எனினும்
ஒருவிடிகாலையின்
உத்வேகமெடுக்கும் காட்சிகளின்
பிரத்தியேகமான பாதிப்பு
பிடரி மயிரைச் சிலிர்ப்படையச் செய்கிறது.


பின்னணியில் சொல்லப்படும்
விளக்கங்கள் அநாவசியம் எனும் அளவிற்கு
ஒரு காட்சியின் யாத்திரை
ஓரிரு வரிகளில் முடிகிறது.


..........................................................................................

ஜன்னலோரக் கதைகள் 
தொடருமென்று போடமுதலே 
ஒரு பொழுதில் 
சட்டென்று நின்றுவிட்டது 

தொலைத்தொடர்புவலை 
கிடைக்காத போதெல்லாம்
இடங்களை மாற்றி மாற்றி பேசினோம்

ஆனால்
அந்த ஜன்னலோர வெளிச்சத்தில்தான்
அம்சமான நீ
அழகாகவே இருந்தாய்


எத்தனை முறைதான்
பக்கவகிட்டில் அடங்காதகூந்தல்
கெம்பிக்கொண்டிருந்தாலும்
அதிலெல்லாம் ஒய்யார மயிலானாய்


விதம்விதமான நிறங்களில்
ஒவ்வொருநாள்
உடுப்பு விசாரிப்புகளில்
உன் சிரிப்பு முழுமையான பவுர்ணமி


தென்னம் ஓலைகள் அசையும்
பச்சைநிற அலைகள்
அந்த மாமரத்தில்
இப்பவும் குயிலிருந்து கூவுமா ?

அந்தரங்கமான
அந்த இருட்டு அறையில்
இப்பவும் எலிகள் ஓடுதா ?


திசை திருப்பும் நோக்கத்துடன்
ஒருசில நினைவுகளைக்
காவிக்கடப்பது எளிதல்ல

ஒரு தொடர்ச்சியின்
பழக்கத்துக்கு அடிபணிந்தேவிட்டேன்
குறைந்தபட்சம்
பேசிப் பேசி நீ நடந்தபோது
உன்பின்னால் இழுபட்டதுபோல....


.......................................................................



எனக்கோ
நெருக்கித் தள்ளுகிறது
நீண்டுகொண்டேயிருக்கும் மவுனம் .


உன்
கண்களை பார்க்க அப்படித் தெரியவில்லை. 
ரகசியமான இமைகளுக்குப் பின்னால்
எப்போதும்
படிமமாகிய மன்மதப் புன்னகை

அதைத்தானே
தழுவிக்கொள்ளக் காத்திருக்கிறது
சற்றேனும் விட்டுக்கொடுத்து
விலகாத மனது .


குத்திட்டு நிட்கும்
நகரமுடியாத நினைவுகள்
நெருக்கம் கொடுக்கும் ஆசுவாசம்
விளங்கப்படுத்த
அவகாசம்தராத காலம் .


இனியும்
சமாளிக்க முடியாததை உணர்ந்த
கையறு நம்பிக்கை
விடைபெற்றுக் கிளம்பும்
கேள்விகளில்


நீ
மர்மமாயிருக்கிறாய்
துக்கம் சூழ்ந்துகொண்ட பதில்களோடு
இறுக்கம் தளர்ந்து
இன்னும் சிலவருடங்கள்
ஏற்படுத்தும்இடைவெளிகளைவிடவும்
இவளவு பழகியும்
பேசிமுடியா வார்த்தைகளை அறுத்துக்கொண்டு
இற்றைவரை
புரியமுடியாமலே
தொலைந்துபோகிறோமெனும்
அயர்ச்சி தரும் நடுக்கம்தான்
ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது


.........................................................................


நீண்டு கிடக்கும் இரவுகளோடு
நீயும்
நெடும்பகையுடன் பயணங்களுமாக
நானும்
வானமில்லா நட்சத்திரங்கள் போலவே 
நம்பிக்கைகளும்
அருகருகே பயணிக்கும் போது......
இப்படித்தான் எழுத நினைத்தேன்
அது வேறெப்படி
கனதியான பதில்கள்
கசங்கிப்போய்க் காத்திருக்கும்
மனசைப்பிழியும் கேள்வியாகியது?
போதாத காலமும்
பொல்லாத நேரமும்
இந்த முறையும் எழுந்து அச்சுறுத்தியதில்
கைவிடப்பட்ட மனவிரட்டலோடு
உனக்கான பரிசாக
ஒருசில
தேறுதலான வார்த்தைகள்கூட
தேடியெடுக்கமுடியவில்லை!
பிரியமானவளே
அங்கிருந்து நீ எவ்வளவோவெல்லாம்
முன்னெடுப்பதே முழு அன்புதான்

நானோ
குளிர்காலக் கோபங்களுடன்
வீணாய்ப்போய்க்கொண்டிருக்கிறேன்

சேரவேண்டிய
விலாசம் எழுதமறந்த கடிதம்
தொட்டுவிடும் தூரத்திலிருந்தாலும்
எப்படி முகவரி சென்றடையும் ?