Sunday, 29 April 2018

இன்னும் சலிக்கவில்லை.!

யுத்தம் அகோரமாக நடந்த ஆண்டுகளில் தாய்திருநாட்டில் படுகொலைகள் நடந்தேறின. அதைப்பற்றி  எழுதினால் " இப்ப எதுக்கு  ஆறிய புண்ணை மீண்டுமொருமுறை சொறியத்தான்  வேண்டுமா?  " என்பதுதான் முதன்மையான கருத்தாடலாக வந்து விழுகிறது.  அப்பட்டமாய் இது ஏற்றுக்கொள்ள முடியாத அநியாயம் என்று தெரிந்தும் அதையும் பத்தோடு பதினொன்றாக வாசித்துவிட்டு சென்றுவிடுகிறவர்களும் இருக்கிறார்கள். .  

                                            காலத்தில் பின்னோக்கி செல்லும் போது   அழுத்தமாய் இதயத்தில்  ஆணி அடித்து இறக்கியது போன்றவொரு சம்பவத்தை நாமே நேரடியாகச் சந்தித்திருக்கலாம்.. நன்கு படித்த, நல்ல மனிதநேய  சிந்தனை உள்ள,  புத்தகங்கள் வாசிக்கும் பல  நண்பர்களில் சிலரின்  விவாதப்பதிவுகளில்   வெளிப்படும் விளக்கமில்லாத காரணங்களை அடுக்கும்  சாயல் கண்டு வியப்பும், எதிர் மனநிலையும் அடைவதுண்டு. 


                                                  சக மனிதர்களின் உயிர்வாழ்தல்   மீதான அன்பைத் தவிர, எதுதான்  உயர்வானதாய், முக்கியமானதாய் நமது மனசாட்சியோடு நெருக்கமாக  இருக்கப் போகிறது? 

                                            உள்ளே கனன்றுகொண்டிருக்கும்  நினைவு வெப்பத்தை , வார்த்தைகளுக்குள்  கடத்தி  சரியாய் எழுத்தில் கொண்டுவருவது ஒரு கலை. அது  கவிதை எனும்போது இன்னும் கஷ்டமான விஷயமாகத்தான் எனக்குத் தெரிகிறது. மிகக் கச்சிதமாய்க் கட்டமைக்கும் வடிவத்திற்குள் பொருந்திப்போவது எத்தனை அற்புதமான விஷயம்; அந்த அற்புதம்  நம்மை அறியாமலே சிலநேரம் நிகழ்வதற்கும் சாத்தியங்கள் உள்ளன, 

                                                           அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க. 


நிசப்தங்களை 
நிலைகுலையவைக்கும் 
நகரத்தில் 
இரவு நடனவிடுதிக்கு வெளிக்கிடுகிறாள் 
பெரிய மகள் !


முடிவுகளை அவளே நிர்ணயிக்கும்
சட்டரீதியான வயதெல்லை
குழந்தைத்தனத்தை
இந்தப் பக்கமாக தள்ளிவிட்ட
முதல்ப் பிரவேசம் அது !


யார் யாரெல்லாம்
அவள் நண்பிகள் கூடப்போவது பற்றி
நம்பிக்கை விபரங்களை
அடுக்குகிறாள் !


தன் குழந்தை
சமாளிப்பாளாவென்று
ஓரத்தில்
அப்பாவுக்கு பயமாகவேயிருக்கு !


தேர்வுசெய்துள்ள
பழக்கமில்லா இடங்களில்தான்
வாசனைகள் இணைக்கப்பட்டிருக்கு என்கிறாள் !


அப்பா
அரண்டுபோய்க்கொண்டிருப்பதை
பலவீனமான பின்வாங்கல்
என்பதுபோலப் பார்க்கிறாள்.


அவளின் துணிச்சலில்
அப்பா இளமைக்கால அட்டகாசங்களை
மீட்டு எடுக்கிறார் !


கலைத்துப் போட்ட கூந்தலை
அள்ளிமுடிக்க நேரமில்லாமல் மேகங்கள்
அலைபாய்ந்துகொண்டிருக்கும்
இரவுவேற நெருக்கியடிக்க
நம்பிக்கை உடைப்புக்களில்
நூறு நூறு விதமான கேள்விகள் !


வெளி முற்றத்தில்
சிவாலோப் பறவைகள்
கைவிட்ட காற்றில்

கேவிக்கொண்டிருந்தன!
வெளியே புன்சிரித்தும்
உள்ளுக்குள்
அப்பா பதட்டமாகவே !


" எத்தனை மணிக்குத் திரும்பி வருவாய் ?"
என்கிறார் அப்பா தவிப்பாக.!


தைரியமாகவே
தயத்தமனிகள் ததும்பவைக்கும்
அப்பா தொலைத்த சிரிப்பை
முன்னுக்குத் தூக்கிப் போட்டுச்
சவாலாகவே சிரிக்கிறாள்
பெரிய மகள் !


...............................................................................

விஸ்தீரணமான 
கருவூலமாக முஸ்தீப்புக்கள் 
பழக்கப்பட்டுப்போயிருந்த 
அந்தக் காலத்தில் 
ஒரு 
கோடை நாளில்
இரவுகளில் நடமாடியதால்
வெளிச்சத்திட்க்குப்
பழக்கப்படாமலிருந்த கண்களில்
கொலைவெறி !


கங்குவேலிகளுக்கு மேலாக
மிடுக்கான முகத்துடன்
நடுவில்
தயார் நிலைப்படுத்தப்பட்ட
தானியங்கிச் சுடுகலன்களோடு
அவர்கள்
மூர்க்கமாக வந்தார்கள் !


யார் அவர்கள் ?

பருவமழைக்கு முன்னதாக
மண்டியிட்டுருந்த
செம்பாட்டு மண்புழுதி
காற்றில் மிதந்துகொண்டிருந்தது !


பிறகு
கந்தகம் கக்கி வாந்தியெடுக்கும்
இலக்குகளற்ற
மரண வெடியோசைகள் !


கண்டுபிடிக்கும் சாதியங்களுள்ள
காலத் தடயங்களும்
தப்பிஓடிவிட்டது !


சுவாரசியமான வியப்போடு
வரிசையாக நின்ற முத்திரைமரங்கள்
அவர்கள் ஓடிப்போன
காஞ்சோண்டிகள்
தலையைக்கவிழ்க்கும்
காட்டுப்புதர்ப் பாதையை
வெறித்தபடியேதான் இருக்கின்றன !


சரி
யார் அவர்கள் ?


........................................................................................

மழை 
தண்ணியாகிய தண்ணியோடு 
வட்ட வட்டமகாக 
யாரோ ஒருவர் வந்திறங்கி
தெருவோரத்தில் 
வாழ்க்கையாக்கிவிட வைத்திருக்கு,


இப்போதைக்கு
அதன் வட்டங்கள் வெறும் வட்டங்களே
ஏனென்றால்
வானவில்லின் வளைகாப்பைப்
பிரதியெடுக்கிக்கொண்டிருக்குமதன்
சுழிக்கும் வளைகோடுகளை
யாரும் தீண்டப்போவதில்லை !


ஒரு வயதில்
பெரிய மகள்
வெறும் பாதங்களோடு
சேறுகளைச் சதுப்பாக்கி
என்முகத்திலும் விசிறியடித்து
நாலு பக்கமும் சிதறடிக்க
உந்திக் குத்தி விளையாடி
நனைந்தே நனைந்து போவாள்!


தெறித்த தென்பாண்டி முத்துக்களை
நானாக ஒருநாளும்
துடைத்ததில்லை
வரம்போல வேண்டிக்கொண்டிருப்பேன்


வளுக்கான உலகத்திலிருந்து
குளம்போலவிருக்கும்
சின்ன ஆழத்தையே
ஆழ்கடல் என்பாள் !


இப்போதெல்லாம்
வடிவமைக்கப்பட்ட சப்பாத்துகளில்
பொறுப்புணர்வு வந்ததுபோல
தேங்குதண்ணியை

விலத்தியே போகிறாள்

நான்
ஆயிரம் நேசமான ரசனைகள்
இழந்துவிட்டேன்
அதில இதுவுமொன்று !


..............................................................................

நேற்றைக்கு
வெட்டியாகவிருந்த பொழுதொன்றில்
வடமேட்கு வானத்தை
எல்லைகளை
மிக எளிதாக்கிவிட்டு 
தகர்த்துத் தாவிச்சென்று
உடைத்தெடுத்துக்கொண்டுவந்து
தாழ்வாரத்தின்
மறைவில் வைத்திருக்கிறேன் !


சாமத்தில் களவாடப்பட்டதால்
நட்சத்திரங்களுக்குத்

தெரியவர வாய்ப்பில்லையென்றே
நினைத்திருந்தேன்
ஆனால்
கீழ்வானில் ஒருபெரிய ஜன்னல்
திறக்கப்பட்டது பற்றியவை
விடியவிடிய விவாதித்திருக்கின்றன !


ஏற்க இயலாத
அவ்வளவு அகலமான வெற்றிடம்
விரித்துவைக்கப்பட்டதால்
தென்திசையிழந்த பறவைகள்
பதட்டமாகியிருக்கின்றன !


சூரியன்
உதித்தெழுந்த முதல் வேலையா
விசிறி அழுதழுது
முறைப்பாடு வைத்துக்கொண்டிருக்கு!


அலைந்தோடிய மேகங்கள்
மறுக்க இயலாத
கலைந்தோடிய பகுதியைத்
சல்லடைபோட்டுத் தேடுகிறன !


கல்லறை மீது சத்தியம் செய்து
ஒப்புக்கொடுத்தபடியே
இற்றை இரவுக்குள்
மறுபடியும் 

வானத்தைத் தூக்கிப்பொருத்தப்போறேன்

ஆனால்
சண்டமாருதம் வீரியமானது போல
வந்து ஒருநாளுக்குள்
கனதியாகி உருப்பெருந்துவிட்டது
இப்போது
உதவிக்கு நாலுபேர் தேவையாகவிருக்கு


யாராச்சும் வர்றேளா ?

..............................................................................................

அந்த
அமைதியலைந்த சனிக்கிழமை ,
அந்தத்
தந்திரச் சுற்றிவளைப்பில்
செம்பாட்டுமண் செறிவில் 
கிழக்குப் பார்த்த புகையிலைத்தோட்டம் ,


சீமைக்கிளுவை வேலிகளில்
ஆங்காங்கே

முருங்கைப் பூக்களையும்
பதறவைத்த
காட்டுத்தனமான கூச்சலடங்க
தனித்து ஒருமித்த
தானியங்கித்

துப்பாகியொன்றின் முழக்கம்!

பிறகு
செம்புலப் பெயர் நீர் போல
அன்னங்கை மண் உறிஞ்சிய இரத்தம்
பிறகுகளை முடிவாக்கிவைக்க
ஒரு
சுருக்கமான விளக்கம் !


வன்முறைகளை
முடிந்தவரை எதிர்ப்பதுபற்றி
அனுதாபங்களை வேண்டிக்கொள்ள
எதிர்பார்க்கப்படும் மொழியில்
அந்த
முடிந்துபோன சம்பவத்தை
சுழண்டுகொண்டிருக்கும்
மனதின் கண்களிலிருந்து
வெளியேற்றி
இனியொருபோதும்
நகரவேமுடியாதவாறான
சதுரமொன்றுக்குள் அடக்கிவிடுவது
என் நோக்கமல்ல !


ஆனால்
வரலாற்றின் விருப்பம்

அதுவாகவேயிருக்கும்
மயக்கம்தரும் பொழுதொன்றில்
முகத்தைப்
புறமுதுகின் பக்கமாகத்
திருகித் திருப்பி வைத்து ,
தீக்கோழிகள் போலவே
தலைகளைப் புழுதியில் ஆழப்புதைத்து ,
குரல் அடைத்த அத்தனை
மனிதாபிமான மனசாட்சிகளும்
குற்றவாளிகளே !


.................................................................................

நம்பமுடிகிறதா ?
ஏதுமறியாமல்
அதுபாட்டுக்குப் பூவரசம் பூக்களோடும்
தைலமர வண்டுகளோடும்
உச்சிக்கொட்டி விடிகாலை,!


திட்டமிடுதல்கள்
கசிந்துகொண்டிருப்பது பற்றியெல்லாம்
நாலு திசைகளிலும்
வெக்கப்பட்டுக்கொண்டே
இயலாமையில் மவுமான
அந்தரங்க அமைதி,!


கற்றைக் கோடு கிழிக்கும்
விசிலடிப்புச் சத்தங்களுடன்
குறிபார்த்து நேர்கோட்டில்
தணல் உரசிய
சடசடசடசடசட என்ற
சனங்களின் சிதறல் வெடிப்புகள் !


தெருவோரப் பாதிகளில்
சிதறி விழுந்த தசைகள் ,


வைகாசி வெய்யிலில்
சட்டென்று
காய்ந்து போன இரத்தம்,


மின்விளக்குகளில்
விரல்கள் முறிக்கப்பட்டுப்
பிணைக்கப்பட்ட புறங்கைகள் ,


சந்தையருகில்
சவுக்கம் தோப்பில்
முச்சந்திமுடுக்கில்
முகங்களில் இலையான் மொய்க்கும்
உருக்குலைந்த சடலங்கள் !


வாய்திறக்க முடியாத
இனமொன்றின்

ஈரமில்லா ஓரவஞ்சனை
நடுவில் முறிக்கப்பட
அதட்டி சிதிலமாக்கப்பட்ட

நீண்ட கனவு , !

ஒரு கணம்
நம்பத்தான் முடிகிறதா ?


முப்பத்தியொரு வருடங்களின்முன்
இந்த வாரத்தில்த்தான்
இதெல்லாம்தான் நடந்தேறியதை ?


................................................................................

மிகச் சிறந்த 
பல்லின நிறங்களையே 
ஆத்மாவைக் கிண்டியெடுத்துத் 
தேர்வுசெய்கிறேன் !


தலைக்கறுப்புநிறத்தவனும் 
வெள்ளைவெளீர்த் தேவதையும்
நடைபாதையில்
நின்று நிதானமாக மூச்சுவிட்டு
முத்தமிட்டுக்கொள்கிறார்கள் !


கேட்க மனமிருக்கும்
எல்லாருக்குமாகவே
மரங்களின் கிளைகளோடு
மெல்லெனவே அலைகிறேன் !


மிகச் சரியான
சுரக்கோவை அளவுகளில்
வயலின் வாசிப்பவனின்
விரல்கள் நகருகின்றன !


உன்
கண் காண்பதெல்லாம்
உனக்கு மட்டுமில்லை
எனக்குள்ளேயே
இறங்கித் தேடியெடுத்துவிடு !


ஏழு வர்ணங்களில்
துப்பட்டாவை விரித்து
மேக மெகந்திக் கைகளால்
முகத்தை மூடிக்கொள்கிறது
வானவில் !


நீயென்
இதழ்களைப் பார்க்கிறாய்
நானுன்
விருப்பங்களாகியேவிடுகிறேன் !


இலைகளை வீழ்த்துவது பற்றி
மொழி பேசி கொஞ்சமும்
விழிசிந்திக் கவலைப்படாத
மேப்பிள் மரங்கள் !


என்
அவசரங்களைப் பற்றிக்கொண்டு
அர்த்தங்களில் ஊறி
இப்படித்தான்
விவரணங்கள் தருகிறது
இயற்கை !


...................................................................................

இரண்டு தளபதிகளும் 
கிழமையொருநாள் 
நட்பாகக் கை குலுக்கினார்கள்,


ரகசியமான 
முன் எச்சரிக்கைகள் 
மொத்தத்தையும் திரட்டிக்கொண்டு
தீர்ப்பு நாளுக்குள்
இறங்கியடிக்கக் காத்திருந்தது,


பனி மூடியிருந்த
அராலித் தரவைக் கடலும்
வெள்ளைவாய்க்காலும்

சந்திக்குமிடத்தில்
ஆள்காட்டிக் குருவிகள்
தயங்கியபடியே
நாடோடி யாத்திரைக்காரணின்
அகாலமான முடிவுபற்றிப் பாடுகின்றன,


எதிர்காலத்துக்கு எந்தவிதமான
உத்தரவாதங்களும் தரமுடியாத
இந்த
ஒடுக்கமான வர்ணனையை நீங்கள்
பொய்யென்று சொன்னாலும் பரவாயில்லை


சொல்லியேவிடுகிறேன்
பொழுதொன்றில்
அவர்கள்
ரவைகள் ஏற்றிவைத்த
துவக்குகளை நீட்டிக்கொண்டு வந்தபோது
இவர்கள்
வீங்கிச் சிவந்து கசியும்
கண்கள் திறக்க முடியாத
நோயின் உபாதையில்
அரண்டு கலைந்து

சுருண்டு கிடந்தார்கள் !

சிதைக்கப்பட்ட
அறைக்குள் வைத்துதான்
நினைவுக் கதவுகளை
இறுக்கமாக மூடியிருக்கிறார்கள் !


தாழ்வாரத்திலும்
வாசல்ப் படிகளிலும்
விழிசொரிந்த மேகங்களின்
மேமாத மழை நீராலும்
ரத்தத்தைக் கழுவமுடியவில்லை !


ஆயிரம்முறையும்
மன்னிக்க மனதில் இடம்வைக்காமல்
கடைந்தெடுக்கிற கண்களில்
தளபதின் கையில்
ஆட்டொமேடிக் கலாஸ்னிக்கோ 47 !


அந்த இவர்கள்
கண்களை ஒருமுறை திறக்கவே
நேரம் இருக்கவில்லை
அதட்குள்
எல்லாத் தலைகளுமே சிதறிவிட்டது!


...............................................................................

பழக்கதோஷப் பாவனையில்
கண்களைச் சிமிட்டி
மின்மினிகளுக்கு அழைப்புவிடும் 
தெருவிளக்குகள் !


காத்திருப்புக்காகவென்றே 
அலைக்கழித்தும்
மீட்டுக் கொண்டிருத்தலை
வெறுப்படையவைக்காத
பயணம் !


முழுகாமலிருக்கும்
பெரிய இச்சைகளையடைக்கி
உறைபணியை
உருட்டித் திரட்டி இறக்கிவிடும்
ஆலங்கட்டிமழை !


இரவெல்லாம்
பின் உளைச்சலாகவிருந்த
ராத்திரியை
ஆவேசமெடுத்துக்கொண்டு
துரத்தும் உத்தேசங்களுடன்
முன் வெளிச்சங்கள்!


தனித்துவக் குரலில்
உள்ளுக்குள் ஆழ்ந்துவிடுவது போன்ற
வசந்தப் பறவைகளின்
விடியல்ப் பாடல்கள் !


உணர்ச்சிகளை வெளிக்காட்டி
வாழ்க்கையை அலசுவதை
தவிர்க்க நினைத்து
தோற்றுக்கொண்டிக்கும்
ஒவ்வொரு
அதிகாலையிலும்
மீண்டும் மீண்டும்
இந்தக் காட்சியை
பார்த்துக் கொண்டிருக்கிறேன். !


ஹ்ம்ம் !
இன்னும் சலிக்கவில்லை.!

............................................................................

என் 
இழிநிலை மனதின் 
அடங்க மறுத்துத் திமிரும் 
ஓயாத பெருங்கூச்சலுக்கு 
ஒருநாளுமே 
என்
மனசாட்சியை
ஒப்புக்கொடுத்ததில்லை !


அதில்
அப்பாவிகளான நீங்கள் ,
தேர்ந்தெடுத்த
வெறிக்கூத்தாடல்களைத்
திட்டமிட்டு மறைக்கும்
தந்திரமான
நான்,


ரத்தக் கறைபடிந்த
கைகளுடன் அவர்கள் ,


கொஞ்சம்
முகமூடித்தனத்துடன் இவர்கள்,


எல்லாவற்றையும்
சகித்துப் பொறுத்துக்கொள்ளும்
எல்லாரும்,
என்றெல்லாம்
நீளும் பட்டியலில்
விபரங்கள் மேலெழுந்துகொள்கிற
வெளிப்படையில்
உண்மை என்பது அத்தனை
முக்கியமானதா என்ன?


சிலநேரம்
ஆம் !

பலநேரம்
இல்லை !


இந்த எடுகோள் இரண்டில்
எந்த பதிலை தேர்ந்தெடுத்தாலும்
அதில்
இந்தக் கவிதை
தோற்றுப்போவது
கொஞ்சம் வினோதம்தான்.!







Friday, 27 April 2018

" காற்று "

பிறப்பென்பது எதுக்கு நிகழ்ந்தது ?பின்னர்  யார் அதை வாழ்தல் என்ற சொல்லாடலில்  வடிவமைத்தது ?  மனதோடு ஒரு எண்ணம் அது நிறைவேறாமல்  செயல்களில் வேறொன்று என்று   எதுக்காக  விடிகிறது ஒவ்வொரு நாட்களும் ?   வாழ்க்கையை  ஒரு வட்டம்போலவே சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டு இருக்கவா ? இதுபோன்ற கேள்விகள் இப்பெல்லாம்   மண்டையை அரிக்குது. கேள்விகள் என்னமோ கச்சிதமாக இருந்தாலும் விடைகள் இன்னும் வெற்றுத்தாள்களாகவே இருக்கின்றன .


                                                           அதிசயமாக சம்பவங்கள் நடந்தேறிய   நேரம், ஒரு நட்பின்  வாய்விட்ட சிரிப்பில்  மகிழ்ச்சி, என்றோ ஒருநாள் மறக்கமுடியாமல் நிகழ்ந்த  தோல்வி, ஒரு புன்னகையோடு பிரிந்து போன முதல்க் காதல் , என்ற எல்லாமும் வாழ்வின் பாதையில்  அதுவாகவே நம்மை கடந்து போகின்றன என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்  கொஞ்சம் நிதானமாகப் பார்த்தால்  மீண்டும்  மீண்டும் யோசிக்க வைக்கிற  சில நிகழ்வுகள் நம்மை விட்டு விலகுவதேயில்லை.
                                          
                                                      ‘இதுவும் கடந்து போகும் " என்று தத்துவார்த்தமாகச் சொல்லி நாம் எல்லாவற்றையும் மறந்துவிட நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது முழுவதும் உண்மை  இல்லை. நம்மைச் சுற்றிலும் ஞாபகங்கள் கூடு கட்டிக் கொண்டே இருக்கின்றன. அதிவேக நவீன உலகத்தின் வேகமான இயங்குதலில் சிலவற்றை அவ்வப்போது நினைக்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால் மின்னல்  போல சில ஞாபகத் துணுக்குகள் நெஞ்சைக் குத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

                                                       
                                                           அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க. 


ஒரு பேச்சுக்கென்று 
வைத்துக்கொள்ளுங்களேன் 
முதலிரவில் 
அகல் திரிவிளக்கு
விடியும்வரையில் எரிந்திருந்தால் 
இதையெல்லாம் பார்த்திருக்குமா?



விபரமறியாப் பெண்ணின்
தன்னைக் கொடுத்த

புது வெட்கம்,
அடங்காத ஆடவனின்
அவசரமான

ஆண்மை ஆக்கிரமிப்பு,




கெஞ்சல் ஆயிழையின்
பின்மாலை மழைத்துளிகள் ,
கனிவான பார்வை
பணிவுள்ள தொடுகைப் பரிசம்,



விருப்பமில்லாப் பெண்ணின்
எதிர்கமுடியாத விசும்பல்,
இதய ஈரம்வறண்டு போன
கைவிடுதலுக்கான மிரட்டல்,



கனவுகளை இறக்கிவிடும்
எல்லையில்லாப் பேரானந்தம்,
இசைந்தே கொடுத்த
திருப்திகரமான இலக்குகள் ,



மனதை திரு மணமாக்கிய
உச்சக்கட்ட ஆனந்த உதறல்கள் ,
பரமசிவன் வடிவில்
படைப்புப் பரம்பொருளில் பிரம்மம் ,



வைபோக நாளின் அலைச்சலில்
நாளெல்லாம் களைத்துப்போன
சன்னமான தூக்கம் ,
வாழ்நாள் ஆசைகளைச்சேர்த்த
கைகளைப் பிசைந்தபடியான விழிப்பு ,



அல்லது
நாலு சுவர்களுக்கு மட்டுமே
விடைகள் தெரிந்த
இரண்டு மனதுகளின் நீண்ட மவுனம் !



அல்லது
தொடக்கத்திலையியே
வெளிச்சங்கள் அணைக்கப்பட்டு
இருட்டில்
காமன்கதை எழுதியிருக்கப்பட்டிருக்கலாம் !



அப்படியென்றால்
விளக்கிடம் மிச்சமிருப்பது
வெறும் பெருமூச்சு சத்தங்களும்
பிரத்தியேக வாசனைகளும்
கொஞ்சம் ஏமாற்றமுமே !


....................................................................................

நீண்ட அலைச்சலும்
மனப்பாரமும் அதிகமான
என்னையே உதறியெடுத்து
அந்தப் பிராத்தனைக்குப் போனேன்



துருவப் பறவை போல . 
திசைகளைத் தொலைத்துவிட்டுத்
அடிவான வழிதேடுதபோல
கடிவாளமில்லாத சிந்தனையை
ஒருமிக்கமுடியவில்லை



கனவின் தொடர்ச்சியிலிருந்து
அறுபட்டுத் பிரிந்ததுபோல
பாதிரியாரின்
" அல்லேலோயா " என்ற வார்த்தை
தூக்கத்தின் விழிப்பாகியது



தேவாலயம் முழுவதும்
பிரகாசமான வாழ்வின் கருணையுடன்
தொங்குவிளக்குகள்
என் கடவுள் நம்பிக்கைகளோ
மிகவும் குறைந்த
பழுப்பு நிற வெளிச்சத்தில் கிடக்கிறது,



குந்தியிருக்கப் போடப்பட்ட
வேம்புக் கதிரைகளில்
மழையில் நனைந்து
சற்று முன் வெய்யிலில் உலர்ந்தது போல
எல்லா இடத்திலும் சுத்தமான
வெட்கப்படவைக்கும் மினுமினுப்பு



ஜோசனைகளில் நானோ
குப்பையாகவிருந்தேன்
பியானோ வாசிக்கும் இளம்பெண்
கண்ணை விட்டு அகலவில்லை
அவள்
பொன்நிறக்கூந்தல் முறுக்கேற்றியது



பாதிரியார் இப்போது
மரியாமத்தலேனாவை
ஜேசுநாதர் மன்னித்த கதை சொல்லுகிறார்
எண்ணநடையை நிறுத்தி
அதையே கேட்டுக்கொண்டிருக்கிறேன்



வழித்தவறுதலுக்குத் தடுப்பாக
சில வார்த்தையோடு
ஆமென் என்று சொல்லி ஒத்துக்கொண்டு
இருக்கையிலிருந்து எழுந்து
மறுபடியும் வீதிக்கு வந்துவிடடேன்.


...............................................................................

இது
இப்படி நடப்பது
முதல் முறை அல்ல
சிலநேரம் பொறுமையோடு
உடைப்புகளுக்குக் காத்திருந்தால் 
கடைசியாகவுமிருக்கப்போவதில்லை !



வேறென்ன
நாவல் எழுத்தலாமா ?
எண்ணிப் பின்வாங்கிவிட்டேன்.!



வாசிப்புக்கு விரும்பும்படியான
நீண்ட நேரத்தை
உள்ளிறங்கித் தேடும்அவகாசங்கள்
அழித்துக்கொள்வதென்றே
இன்றைய தலைமுறை !



கதை சொல்லும் ஆளுமை
அல்லது
கதையோடு செல்லும் லாவகம்
எதைக் கொண்டுவர நினைக்குதோ
அதை
ஏற்பதிட்குப் பதிலாக
ஆரம்பத்திலே நிராகரிப்புகள்தானே
அரங்கேறிவிடுகின்றன !



புதினம் என்ற சொல்
எந்த தடத்தில் இருந்ததோ
கிட்டத்தட்ட அதே இடத்திற்கு
குறுங்கதை வந்துசேர்ந்திருக்கிறது.





நினைக்கும் போதே பகீர் என்கிறதை .
நீட்டி எழுதிமுடிக்கும் போது
சப்பென்று

தொய்ந்துபோகும் சாத்தியங்களால்
இனியெப்போதும்
வளரவிடாமல் விட்டதை
தேடவேண்டிய அவசியமில்லை. !



சாதாரணமாகவே
எது இலக்கியமென்ற கேள்விகள்
துருத்திக் கொண்டு உறுத்த.
அமரகாவியம் எழுதவேண்டுமென
மனசு சொல்லவில்லை.
அது சாத்தியமும் அல்ல.



இப்படியே சொல்லிக்கொண்டே
சமாளிப்பதுதான் எரிச்சலூட்டுகிறது,
இது
இப்படி நடப்பது
முதல் முறை அல்ல !


.........................................................................................

என் நிழலே
இப்போதைக்கு எனக்குப்போதும்,
எதன்பொருட்டு
தனித்தனியாகிவிடுகிற
உணர்வுகளை அடைக்கிறேனென்று 
தீர்மானமாகச் சொல்லமுடியவில்லை !



உலர்ந்துபோன கண்ணீரோடும்
கடைசிப் புன்னகையோடும்
எல்லாமுமாக
பெரிய மனதொன்றை
மையமாகக் வைத்துக்கொண்டு
எழுத்தப்பட்ட உருப்படியான
புனைகதைகள் என்னிடமில்லை!



ஆச்சரியமாகவேயிருக்கு
அவசரமான தெரிவுகள் !
தேடிப்பார்த்தபோதெல்லாம் .
விவரங்களைப் பார்த்து
திகிலடைய வேண்டியிருந்தது,



அந்தக்
காலகட்டத்திற்கு பிறகு
ஆளுமையாக உருவெடுத்த
மனவெளியை வாசிப்பது பற்றி
எப்படி தெரியாமிலிருக்கமுடியும் ?



முன்யோசனை இல்லாமல்
போகிறபோக்கில் இப்படி
அடித்துவிட்டு செல்லும் கூட்டம்தான்
படைப்புக்கள் மீது
விழுந்து தெறிக்கும் வெளிச்சங்களில்
வெறுப்பை உமிழச்செய்கிறது.!



விமர்சனத்தில்
யாரையும் யாரோடும் ஒப்பிட்டுச்
சிலவற்றைச் சொல்லவரவில்லை .
நியாயப்படுத்தியும்
வேறுபடுத்தியும் சொல்லமுனைவதில்லை .



சாதனைகளை இல்லையென்றும்
சதாரணங்களை

அசாதாரணங்களாக்கும்
இந்த
அபத்தங்கள் தெரியாமல்
சாமர்த்தியமாக மேலெழுந்து
விவாதித்து நிறுவவும் முடியும்.



வேண்டாம்
இருட்டே துணையாக
என்வழியில் ஒதுங்கிப் போகிறேன்.!


.......................................................................................



நெருக்கமான
அதிகாலைப் புகையிரதம்,
திரும்பும் நிறுத்தத்தில்
கிட்டத்தட்ட நான்தான் கடைசியாக
நுழைத்து ஏற்றிக்கொண்டேன், 



இருக்கை விளிம்புகளில்
கனவுகளைப் பாதியாக விட்டுவந்த
அரை நித்திரை மனிதர்கள்,



ரெண்டுபக்கமும் ஜன்னல்கள்
சுழல்காற்றில் சருகுபோல
நகர்ந்தகொண்டிருக்கும் வேகம்,



நாயோடு ஏறியவள்
முழங்கால்களுக்கு நடுவேயதை
அதட்டி அமத்திவைக்கிறாள்,



ரெண்டு காதலர்கள்
இரவின் மிச்சத்தை வீணாக்காமல்
இறுக்கி அணைத்து முத்தமிடுகிறார்கள்,



எக்கோடியனில் இரங்கி
பிலாஸ்ட்டிக் கோப்பையில்
கையேந்தும் பிச்சைக்காரன்,



இதயத்தில் பற்றிக் கொண்ட
ஏதோவொன்றை நினைத்து

ரசிக்கிறார்
நடுத்தர நரை வயதுக்காரர்,



ஆழ்மனதிலிருந்து தோண்டிய
உதடுபிரியாச் சிரிப்போடு
தொடுதிரையில் விரலோடியபடி
சின்னவள்

இணையவலைவெளியில்,


நடைச்சுற்ற்றில்
ரெண்டுபேருக்கு நடுவில் நசிந்து
நிண்டுகொண்டிருப்பவளில்
முகமிழந்த களைப்பு ,



இடுங்கி உள்வாங்கிய கண்களில்
ஒரு வாழ்நாளில்
பிரிவுகளே மிச்சமாகிப்போன
ஈரக்கசிவோடு வயோதிபர்,



பூங்காவில் ஊஞ்சலாடுவதுபோல
எம்பி எம்பிக் குதிக்கும் குழந்தையை
அன்பாக தட்டுகிறாள் அம்மா,



அனேகமாக
என் மூலை இருக்கையிலிருந்து
கவனிக்க முடிந்த எல்லாமே
வடிவமைக்கப்பட்டதுபோலிருக்கு



பெரும்பாலும்
இனி வரும் இறக்க நிறுத்தத்தில்
இந்தபிரமை ஒழுங்கின்றிக் குலைந்துவிடலாம் !


.................................................................................................



வேப்பமரத்துக் குயில் 
அதிகாலையே 
காதல் பொழியும் கூவல் 


விழுந்த மல்லிகை மலர்கள்
மழை ஈர மண்ணுக்கும் 
வாசனை கொடுப்பது



கொட்டாவி விடும்
வெள்ளை நிறத்துப்
பூனையைப் பார்த்துக்கொண்டிருப்பது



இப்படித்தான்
இசை தரும் பருவமும் கடந்து விட
இந்த
அம்சமான அனுபவம்
மவுனமாகி விழுங்குவதட்கல்ல





விவரணங்களாக்க்கி
எழுத்துவத்தட்குமல்ல
வாழ்நாள் சந்தோஷங்கள் வசப்பட்ட
நினைவுகளில் ஏற்றிவிட்டு
அதன்பாட்டில் அசைந்தாட
வழிவிட்டு ஒதுங்கி நில்லுங்கள்



மொட்டு முகை அவிழ்க்கும்
அதிகாலை மெட்டுக்கள்
காற்றுக்கே சொந்தம்
அதிலும்
சுரங்களையும் ராகங்களையும்
பிரிக்கவே வேண்டாம்



முக்கியமாக மொழியைவிட
இசை உருவமற்றது



சிலசயம் காற்றைவிடவும் மெல்லியது


நட்புப் போலத் தூய்மையானது


காதல் போலக் கனிந்துவிடுவது


அதன்
முடிவில்லா எல்லைகள் தரும்
அளவில்லாத சுதந்திரம்
ஆத்மாவை
அடுத்த கட்டத்துக்கு உயர்த்திவிடுகிறது..


................................................................................

கடைசி இரவுப்பேருந்து
மெல்ல வெளிக்கிட்டு
கும்மிருட்டுப் பாதையில் ஏறி
முன் வெளிச்ச உமிழ்வுகளோடு நகருது,



நெருக்கமான இருக்கையோடு 
முழங்கால்கள் இடிக்காதவாறு
நான்
குறுகி ஒடுங்கியிருக்கிறேன்,



ஜன்னல்களில்
பனிகலந்த மழைத்துளிகள்
தூக்கத்தைத் தட்டி எழுப்ப
குதிக்காலைச் சூடாக்கிக்கொண்டிருக்கிற.
மிதமான வெப்பம்
நினைவுகளைத் திடுக்கிடவைத்த
ஒட்டுமொத்த திட்டையும் வேண்டிக்கொள்கிறது



இந்தப் பயணத்திலு ம்
பாதைகள் பழகிய கோடுகளில்
முழுமைக்கும் கட்டுப்பாட்டுடன்
செலுத்துனர் கைகளை உதறிக்கொள்கிறார்



முன்னிருக்கையில்
நீண்ட பகலோடு கொஞ்சம் மேலதிகநேரம்
உழைத்துக் களைத்த
இளம்பெண்ணின் வியர்வைக்கூந்தல்





மூச்சில் ஆதிக்கம் செலுத்த
எவருமில்லாத இருக்கைகளில்
அக்கறையில்லாத
நடுநிசிக் காலத்தின் வாசனை.



விடிந்தால்போதுமென்பதில்
தீர்க்கமான தெளிவுடன்
விடிவெள்ளி நட்ச்சத்திரங்களும்
அடிவானத்துடன்

ஒப்பீடுகள் செய்யவில்லை,


சென்றடையும் இடம்பற்றிய
நம்பகத்தன்மையில் குழப்பமில்லை
அதனாலோ தெரியவில்லை
" நானென்றாலது நானும் அவளும் "
என்ற பாடலை முனுமுனுத்துக்கொள்கிறேன்.



அது
பேருந்தின் அசைவோடு
குரல் எடுத்து எதிர்பார்த்த மாதிரியே
தனிமையை நிரப்பிவிட
இன்றைய இரவின் கதையை
முடித்துவைத்துத்

திருப்திப்பட்டுக்கொள்கிறேன்!


நாளை
இன்னொரு பின்னிரவு !
இன்னொரு இயந்திரப்பயணம் !
இன்னொரு பழையபாடல் !
இன்னொரு பகல்க்கனவு !


...................................................................................

நான் 
பரீட்சயமில்லாத மொழியில் 
எழுதவிரும்பாத 
அந்நியன் !



புரியாதவைகளை 
மெதுவாக உச்சரிச்சும்
சொல்ல விரும்பாதவன் !



இலட்சியங்களின்றி
வாழ்வதுக்காய்
முகத்தைச் சுளிப்பதுமில்லை !



இந்தப் பிடிமானம்
அதுதான்
ஆத்மாவைத் தழுவிக்கொள்கிறது !
எல்லார்
கைகளைப் பிடித்துக்கொள்கிறது !



கடவுளிடம் வேண்டிக்கொண்ட
நிசப்த கணங்களுடன்
தனித்திருப்பதாக
உணரவதை விடவும்
சருகுகளோடு
காற்றில் நடனமாடிக்கொண்டிருக்கும்
வெய்யில் போலவே
ஒன்றோடு ஒன்றைச்
சம்பந்தப்படுத்திக்கொண்டிருப்பதில்
நேரம் கடந்துவிடுகிறது !



உங்களில் யாரவது
என்
வார்த்தைகளை நம்புபவர்களாயின்
ஏற்றுக்கொள்ளுங்கள்
தவறுகள்தான்
இன்னமும் இன்னமும்
முயட்சித்துக்கொண்டிருப்பதுபற்றி
வெட்கமின்றி
மனித மனச்சாட்சியை
ஒத்துக்கொள்ளவைக்கின்றன !


...................................................................................

ஒருமுடிவோடு 
புன்னகையோடு

விரோதமாகியிருந்தவளை 
இன்னொருமுறை 
இயல்பாகச் சிரிக்கவைத்தவன்,



சின்னதான 
பிரியமான வார்த்தைகளில்
அவளின் நம்பிக்கையை
மீட்டெடுத்துக்கொடுத்தவன்



அரவணைப்பில்
ஆதாரமான அத்திவாரங்களைப்
பாசமோடு பலமாக்கியவன் .



வலி என்றவள்
சொல்லிமுடிக்குமுன்
உயிரோடு ஒட்டிக்கொண்டு
வழிந்துருகிவிடுபவன்,



மிகக குறுகிய
காலமுருவாக்கிய விபத்தில்
முடிவில்லாக் காதலுக்கு
விளக்கம் சொன்னவன்,





தன்னிரக்கமான அவளின்
பலவீனங்களையெல்லாம்
பலமென்று நிரூபித்தவன்,



அவளாகவே
இருள்செறி பாதைகளில்
பின்வாங்கிக்கொண்டிருந்தபோது
வெளிச்சங்களோடு
முன்னுக்கு வந்தவன் ,



அவளின் நீண்ட மவுனத்தை
பூக்களின் இதழ்களில்
தென்றலைப் போல மென்மையாக
வந்திறங்கும் வண்டுகளின்
மொழியில் புரிந்துகொண்டவன் ,



இப்படியான
ஒருவனால்
அவளுக்காகவே
ஆழமாக இறங்கியுள்ள
வேர்ச்சொற்களின் துடிப்புகளை
பேசிமுடிப்பதுக்கு
வார்த்தையாக்கமுடியாமலிருக்கலாம் !


.......................................................................................



முதல்
மூன்று வரிகளை
இயல்பாக அதன்போக்கில்
வேண்டுமென்றே
கை நழுவ விட்டேன்



நாலாவது வரி 
நான் நினைத்ததுபோல வராமல்
கைவீசிக் கைவீசி
அது விரும்பியபடி வந்தது



அஞ்சாவதிலும்
ஓரளவுக்கு
என்ன சொல்லவாறேன் என்ற
கட்டுமானம் வீச ஆரம்பித்தது



ஆறாவதில்
வாயுபகவானையும்
நன்றியோடு இணைத்துக்கொண்டேன்



ஏழாவது
அரைவாசியில் புத்தியைக் காட்டி
சூறாவளியாக சுழன்றடித்து
சனியன்போலவே மாறியது



எட்டாவதைக்
கட்டி இழுத்து
மேக எல்லைக்குக்
கிட்டக்கொண்டு வந்தேன்



த்தாவது வரியில்
தென்றல் போல மென்மையான
பாதுகாப்பை உணர்ந்தேன்





பதினொன்றில்
வாடையும் பருவமும்
மறுபடியும் ஒன்று சேர்ந்தது





பன்னிரண்டில்
ஆச்சரியம் வைத்து
மேகங்களோடு மோதி
பதின்மமூன்றில்
அதிசயமாகியது


மிச்ச ரெண்டு வரிகளில்
திசைகளைத்

திருப்பி வைத்தபோது
எழுத்துக்கள்

மிதக்கத்தொடங்கின


பறவைகள்
கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி
எழுதிமுடித்
அந்தக் கவிதைக்குக்
" காற்று " என்று பெயர்வைத்தேன்.!