Wednesday, 4 April 2018

அசாதாரண முயற்சிகள்...

கவிதைகளில் சொல்லும் செய்தியிலும்,சொல்லப்படும் விதத்திலும் நவீனத்துவத்தைக் குறியீடாக உருவாக்கி இலக்கியவெளியில் தங்களை முன்நகர்த்திக்கொண்டு போகும் நண்பர்கள் முகநூலில் பலவித பரிசோதனை முயட்சிகளில் மொழியின் அசாத்தியமான எல்லைகளை தொட்டு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
                                                        நவீன தமிழில் ஆக்கபூர்வமான இந்தத் தீவிர படைப்பு முயற்சிகள் சமகாலத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கு .
                                                         ஊர்கூடித் தேர் இழுத்தது போன்ற மனநிறைவில் புனைவு மனவெளியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் இவர்கள் நிறையவே ஜோசிக்கும்படியா எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நீங்களும் வாசித்து இருப்பீர்கள். தமிழ் இலக்கிய மொழியில் அதிகம் பாவனையில் இல்லாத அல்லது மறைந்திருக்கும் சொற்களை இவர்கள் அதிகம் பாவிப்பார்கள். அதுவும் நல்ல முயட்சியே .
                                                                   இன்னொரு வகையினர் இருக்கிறார்கள் வடமொழியின் பாதிப்பில் தமிழில்க் கலந்த சமஸ்கிருத மணிப்பிரவாள வார்த்தைகள் எப்போதும் மென்மையான அனிச்சம் பூப் போன்ற உணர்வை எழுப்புவதால் அந்தச் சொற்களை அதிகம் கலந்துவிடுவார்கள்.
                                                               இந்தக் கலவை பல நேரம் சாதாரண வாசக மனதுக்குள் குழப்பமாக இருக்கும் . ஆனால் அவர்கள் நினைப்பது இப்படியாக நாலு வார்த்தை தேவையில்லாத இடத்தில போட்டால்த் தான் " ontological argument, " என்று ஆங்கிலத்தில் சொக்கிறார்களே அது  கவிதைக்கு அபரிமிதமான ஒரு அந்தஸ்துக்கு கிடைக்க வைக்கும் என்று.
                                                                மொத்தத்தில் காரண காரியங்களுக்கு விளக்கம் தேடும் மூளையைக் கழட்டி ஒரு பக்கமாக வைத்துப்போட்டு ஜோசித்துப் பார்த்தால் இவர்களின் " நவீனத்துவப் புனைவு மரபு " சாதாரண வாசகர்களுக்கு விளங்குமா? , இல்ல நெம்பி வளைந்து முயட்சித்து விளங்கிக்கொள்கிறார்களா ? இல்லை முகத்துக்கு முன்னே முகஸ்துதி போடும் மனப்பான்மையில் தூக்கிப்பிடிக்கிறார்களா ? என்பது போன்ற கேள்விகள் ஒவ்வொருவரின் தனிப் பார்வையில் மிகவும் அந்தரங்கமானவை.

                                                                 அதே நேரத்தில் ஊர்கூடித் தேர் இழுத்து அந்தத் தேரைத் தெருவில விட்டுப்போட்டு ஓடிப்போன மாதிரி தெளிவற்ற படிம உருவகங்களையும், நினைவுப் பிம்பமங்களையும் , கட்பனைகளைக் கட்டுடைத்தல் என்றும் , மர்மக் குறியீடுகள் , ஐந்தாம் பரிமானம் என்று கவிதைமொழியின் மிக உயரத்தில் ஜீவன்முக்தி நிலை அடைந்திருக்கிறதாக நம்பும்படியாகக் கவிதைகளும் வந்திருக்கின்றன .

                                                               நேரடியாகச் சொல்ல வழியிருந்தும் தலையைச் சுற்றிவந்து மூக்கைத் தொடுகிறார்கள் , வாசிக்கிற என்னைப் போன்ற ஞானசூனியங்ககளுக்கு  " வார்த்தைச் சித்து விளையாட்டு " பிடிபடாது, அப்பிடி இல்லை என்று முயன்று வாசித்தால்   சுத்திற சுத்தில கொம்மாவும்  கொப்பரும்  கோச்சியும் வீட்டுக் கோடியெல்லாம்  சுத்தி , தலையும்  கிறுக்குப்பிடிச்சு சுற்றி உலகமும் ஒருக்கா சுற்றும்.  

வழக்கம்போல முகநூலில் எழுதிய என் சொற்கட்டமைப்பு  முயட்சிகளைத் தொகுத்து உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் 

முற்றிலும் 
புதிதானவொரு 
நெருக்கத்தை 
உரையாடலற்ற மவுனத்தில் 
கட்டியெழுப்பவேண்டும். 
புதிய பெயர்,
புதிய சிரிப்புகள் ,
புதிய கோபங்கள்,
புதிய சைகைகள்
புதிய பார்வைகள்
புதிய அர்த்தங்களும்தான் ,
ஏனெனில்
பழையவை அனைத்தும்
பேச்சு வார்த்தைகளில்
பிளவுற்று பிரிந்து
அர்த்தமிழந்து ஸ்தம்பித்துவிட்டன !


...........................................................................

கவிதை பற்றி 
பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்த 
இன்றையநாள் 
முடிவத்துக்குள் 
மூச்சைப்பிடித்து சொல்கிறேன்
உங்களிடம்
கவிதைமனது இல்லையென்றால்
உங்களிடம்
எதுவுமேயில்லை. !


...................................................................

இக்காட்சியை
வேறெங்கோ பார்த்த நினைவு.
அப்போதைய
வாசனைகளும் கூட
இப்போதும் 
நுகரும்படியாகவிருக்கு ,
மின்னி மறைந்து
மிகவும் ஆச்சரியப்படுத்திய
எதையுமே
நம்பக்கூடாதென்கிறது
சபல மனது,
ஒரு
குற்றத்தை
ஏற்றுக்கொள்வதாகவே
நான் இதை
அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். !


.......................................................................

சலிப்புத்தரும்படியாக
எரிய வேண்டிய சுடர்
சப்பென்று 

அணைந்துகொண்டிருந்தது
அப்போதும்
அந்தக் கவிதையை 
தொடர்ந்து 

வாசித்துக்கொண்டிருந்தேன்
பின் வந்து கொண்டே
என் 

முடிவு பற்றிய 
அனுமானத்தோடும்
அது
இசைந்து விடலாமென்று
நம்பிய போதுதான்
அதிர்ந்துபோனேன்!


......................................................................

என்
ஆர்வங்களின்
துவக்கங்களையும்
அதன் முடிவுகளையும்
அவள் 
அடக்கத்துடன்
கேட்பதுமில்லை
தீர்த்துவைப்பதுமில்லை,
குறிப்பிடத்தக்கதாக
ஏதாவது நிகழவேண்டுமானால்
நான்
அடிவானம் போலவே
அமைதியாகவிருக்கவேண்டும்
அவளோ
வெளிச்சங்கள் மறுக்கப்பட்ட
மற்றொரு தருணத்தில்
ஒரு
எரிநட்சத்திரத்தைப்போல
உட்பிரவேசித்து
மறைந்துபோய் விடுவாள் !


................................................................

காலத்தின்
புரிதலில்க் கவிஞ்சன் ,
மரணத்தருவாயில்
அவனின்
அழியாப் 
படைப்பொன்று ,
அதட்குள்
குற்றவுணர்ச்சியின்றி
உயர் தராதரங்களை
நிர்ணயம் செய்து வைத்தது
எதுவாயிருக்கும் ?


..................................................................


உள்ளேயும்
வெளி உலகோடும் ,
ஓரேகாலத்தில் வாழழும் .
சிரஞ்சீவிகளைப்
பார்த்திருக்கிறீர்களா ? ,
ஒருவேளை
உங்களுக்கு
அறிமுகங்களிருக்கலாம்,
சிதைத்து
மறுபடியுமெடுத்துப்
புத்துப்பித்துக்கொள்வதை
உயிர்வாழ்தலென்று
நான் நினைக்கிறேன்
இதில்தானே
ரசனைக்கும்
எதிர்பார்ப்பிற்கும்
கருத்துமுரண்பாடு வருகிறது !


.....................................................................

கவிதைகளில்
மையங்கொண்டுவிடும்
தனிப்பட்ட வெறுப்பு
கிஞ்சித்துமில்லை.
அலட்சியங்களின் 
அலைக்கழிப்புக்களில்
ஒரு
மலர் வாடிக்கொண்டிருக்கும்
இயலாமை ,
இதயசுத்தியுடன்
எழுதப்பட்டதெனினும்
என்
கண்களின் முன்னே
அது 

இறந்துகொண்டிருப்ப்பதைப்
பார்க்க விரும்பவில்லை. !


...................................................................

படிமங்களை நீக்கி
வேகமெடுக்கும்
வர்ணனனைகள் எழுப்பும்
கலவரம்
சடுதியாகவொரு 
நெஞ்சுவலியை உண்டாக்குகிறது,
எனக்குத் தெரியும்.
இது
வெறும் பொழுதுபோக்கல்ல.
வரிகளுடன்
மொத்தக் கவிதைககுள்
அணுகி இறங்கும் போது,
இறுக்கிக்கொண்டு
பிடித்துப்போவது
மரணத்தையும் எதிர்கொண்டு
விரட்டியடிப்பது போலிருந்தது !


....................................................................

நிறைய
நாட்களாய்
அறிமுகமில்லாத
நிழலின் சாயலில்
தேடிக்கொண்டிருந்தேன் ,
மனதெல்லாம்
தெம்புகள் சேரும்போது
வலிந்து ஜோசிப்பேன் .
ஒருகட்டத்தில்
எல்லா முயட்சிகளும்
கைவிடப்பட்டுக்கொண்டது,
நேற்றிரவு
தூக்கத்தில்த்தான்
நெகிழ்ச்சியூட்டும் வகையில்
அந்த ஒரு வரி
எதேச்சையாகக் கிடைத்தது !


.........................................................................

உன்னிப்பாகக்
கவனித்தீர்களானால்
மேடையின்
பின்புலமாகவிருக்கும்
திரைச்சீலைகள் கிடையாது.
அசைவையும்
அசைவின்மையையும் வடிவமைக்கும்
சோடனைகள்
வியர்த்து விடுகின்றன,
மிகச் சுருக்கமான
கடைசிக் கேள்வியோடு
காட்சி நிறைவடைகிறது.
நடிகர்கள்
வெளியேறுகிறார்கள்.
முடிவடைந்துவிட்டதென்று
கடந்த காலத்தை
மூச்சிழுத்து
மரணமும்
புறப்படுகிறது !


........................................................................

ஜீவத்துடிப்போடு
மாசுபட்ட இடங்களிலேயேதான்
கண்ணீரில்
வாழ்ந்துகொண்டிருக்கிறது !
சூனியப்
பின் விளைவுகளின்
பரிமாணங்கள்
ஊறணிகளெல்லாம்
முழுமையாய் வெளிப்படுகிறது !
மறுதுவக்கத்தைப் பற்றிய
எதிர்கால
அசாதாரண முயற்சிகள்
இழுபறி நிலையில் !
தீமைகளையாவது
சிந்திக்க
இன்றைக்குமொரு
வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது
தண்ணீர் !


........................................................

எனக்குக்
குரல் மட்டும்
சிறிது காலம் பரிச்சயம்,
முகத்தை
மையமாக வைத்து 
உற்றுப் பார்க்கும்
தைரியம் இருந்ததில்லை,
உறைபனிக்காலம்
சாதாரணங்களின்
வழக்கமாய்ப் போய்க்கொண்டிருந்தது !
ஒரு
அந்நியோன்னியத்தை
வலிந்துகொண்டு
உருவாக்க நினைக்க
விழுந்துவிடாத வேதனையின்
துக்கங்களைப்
பாடலாக்குவதை நிறுத்திவிட்டது
அந்தப் பறவை !






Monday, 2 April 2018

இரவல்த் தாய்மண் !

சென்ற ஈஸ்டர் விடுமுறையில், நாடு கொஞ்சம் வெறுத்து போனதால்,மூன்று நாட்கள் காடு,மலை எண்டு மைனஸ் குளிரில உசிர் உள்ள நோர்வேயியன் நண்பர்களுடன் இயற்கைக்கு சிநேகமகா அலைந்ததால், ஆன்லைன் இலற்றோனிக் நண்பர்களுடன் தொடர்பில இருக்கவில்லை, மறுபடியும் பழைய வாழ்க ஆரம்பித்து அரைத்த மாவையே இனி அரைக்கப் போறான்,,

                                              எனக்கு நெருக்கமான ,பணக்கார நோர்வேயிய நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். மிகவும் வசதியான வாழ்க்கை வாழும் அவர்கள் இயற்கையின் அதிசயங்களை நேரடியாகவே சென்று பார்த்து உணரும் அலாதியான ஆர்வமும் உள்ளவர்கள் ,ஒருநாள்

                                                " இந்த ஈஸ்டர் விடுமுறையில் என்ன செய்யப்போறாய், பியரைக் குடிச்சுக்கொண்டு நாசமாப் போகாமல் , பிரயோசனமா ஏதாவது செய்யலாமே, நாங்கள் காடுமலை நடந்து சுற்றி அலைய மவுண்டின் ஹைக்கிங் போறம் நீயும் வாறியா? வாறதெண்டால் சொல்லுப்பா " எண்டு கேட்டார்கள், 

நான் இதுக்கு முதல் மவுண்டின் ஹைக்கிங் போனதேயில்லை, வாழ்கையில் போகாத பாதைகளில் ஒரு நாள் புதுமையாகப் போய்ப் பார்ப்பதுதான் சுவாரசியம் என்று நினைச்சுப்போட்டு , சரி இதையும்தாண்டி என்ன வரப்போகுது என்று ஜோசிதுப்போட்டு ,

"பெண்கள் வருகிறார்களா?"

                                              எண்டு அப்பாவியாக , வாழ்க்கைக்கு முக்கியமான அந்தக் கேள்வியைக் கேட்டேன்,

"பெண்கள்தான் அதிகம் வருகின்றார்கள், "

" யார் யார் எல்லாம் வருகினம், "

" ஜோசிக்காதை,உன்னோட பெஸ்ட் ப்ரென்ட் சிசிலியாதான் ஹைக்கிங் லீடர் , "

என்று  சொன்னார்கள். சிசிலியா வாறாள் என்றால் அதுவே ஒரு தீபாவளிக் கொண்டாட்டம் , அதனால அவளிடமே கேட்டேன் 

" ஓ, என்ன எல்லாம் கொண்டு வர வேண்டும்,சிசிலியா  "

" பியர் அல்கஹோல் தவிர வேற என்ன விருப்பமோ ,எல்லாம் கொண்டு வரலாம் "

" ஹஹஹஹா, அய்யோ, என்னோட வீக் பொயிண்டில பிடிச்சு அடிக்கிறிங்களே "

" இல்லைப்பா. மவுண்டின் ஹைக்கிங் உண்மையில் எப்படி கடுமையான பாதகமான வெளியில் நிலைமைகளைச் சாதகம் ஆக்கி தப்பி வாழ்வது என்பது பற்றியது "

" அப்பிடியா, சரி முக்கியமா என்ன எல்லாம் கொண்டுவர சிசிலியா"

" தோளில கொழுவுற ட்ரவலிங் பையில் நொறுக்குத்தீனியும் ,தண்ணிப் போத்திலும் மட்டும் கொண்டுவா, "

"அட, இவளவு சிம்பிளா இருக்கே  சிசிலியா"

"ஆமாம், இயற்கையோடு வாழுறதே சிம்பிள் தானே "

" வேற ஒன்றும் தேவையில்லையா "

" உன் கால்களில் திடம் இருந்தால் போதும் மிச்சம் நாங்க காடுகளில் உனக்கு எப்படி வாழுறது என்று காட்டுறோம் "

" காட்டுக்குள்ளே அப்படி என்னதான் இருக்கு உயிர் வாழ, சிசிலியா"

" எல்லாமே இருக்கு,, காடு சொல்லித்தரும் எல்லாம்  முதலில இறங்கடா கழுதை ,, வீணாப்போன விளக்கம் கேட்டுக்கொண்டு இருக்கிறாய் "

" ஹ்ம்ம்,முன்னம் பின்னம் காடு மலை ஏறி ,பழக்கம் இல்லையே சிசிலியா"

" டேய் நாங்கள் எல்லாருமே ஒருகாலத்தில் காட்டுக்கு இருந்துதான்டா நாட்டுக்குள்ள வந்தோம் ,,அதை நினை "

" சரி  உன்னை நம்பி வாறன் சிசிலியா"

" இல்லை  என்னை நம்பாதே,,உன்னை நம்பு,,உன் மனோதிடத்தை நம்பு செம்மறி "


                                               எண்டு சொல்ல ,இதுக்குமேல என்ன ஜோசிக்க இருக்குது எண்டு போட்டு ,"நானும் ரெடி என்றேன் ",

காடுகள் மலைகள் சுற்றி அலையும் இந்த இயற்கைக்கு நெருக்கமான இந்த "mountain hiking" என்பது தலைமுறைகளாக ஸ்கண்டிநேவியர்களின் கலாச்சாரம், அவர்கள் ரத்தத்தில் ஊறி உள்ள விசியம்! இளையவர்களே அதில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் இருப்பின் அடையாளங்களைத் தேடுவார்கள்
                     
                                                       அப்புறம் நோர்வே நீண்ட பெரிய நாடு. இங்கே காடுகள் மலைகள் தான் முக்கால்வாசி நிலப்பரப்பை ஆக்கிரமித்து அழுக்கான காபனீர் ஒக்சைட்டை உள் இழுத்து தூய்மையான ஓட்சிசனை வெளிவிட்டு சுத்தமாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் முல்லைக் கொடியுடை வேந்தனின் நாடு.

                                                     மலைகள் என் தாவணியை விலக்கி என்னை நன்றாகவே ரசித்து விடு எண்டு முகடுகளை முகில்களுடன் உரச விட்டு நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொண்டிருக்கும் அழகை அனுபவிக்க விரும்புபவர்களின் லிஸ்ட் இல் ஆர்டிக் வட்ட வட துருவத்தில் இருக்கும் நோர்வே முக்கியமான ஒரு நாடு.

சிசிலியா என்னோட பெஸ்ட் ப்ரென்ட். என்னை எப்போதும் கோவேறு கழுதை, மோட்டு எருமை,உருப்படாதவன், மட்டி,மடையன் என்று அன்பாக அழைப்பாள். ஆனாலும் என் அம்மாவின் அன்புக்கு நிகரானவள். அவளோட மட்டும் காரைக்கால் அம்மையார் போல தலையால நடந்து இந்த உலகத்தை சுற்றினாலும் அலுக்கவே அலுக்காது .

                                                          அந்த அலைச்சல் முழுவதும் சிசிலியா காடுகளில் நின்ற மரங்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள் ,புதர்களின் பெயர்கள்,மலர்களின் பெயர்கள் எல்லாம் எனக்கு சொல்லிக்கொண்டு வந்தாள் .அவள் பாடசாலை நாட்களில் அவற்றின் பெயர்களை மனப்பாடம் செய்து படித்ததாகக் சொன்னாள்

                                                              " கரக் புறக் "எண்டு கற்கண்டு போல காலுக்குள் நெரிபடும் உறைபனியை மிதித்துக் கொண்டு பல மைல் நடந்து நடுக்காடுக்குள் போனபோது, பாதைத்தடம் இரண்டாகப் பிரியும் ஒரு இடத்தை வந்தடைய ,மனவெளி எங்கும் கவிதை பாய,அருகில் வந்த சிசிலியாவின் கையை பற்றிப் பிடித்தேன் ,அவள் திடுக்கிட்டு

" இப்ப எதுக்கு என் கையை பிடிச்சே,சொல்லு உருப்படாத கழுதை , என்னவோ ஜோசிக்கிறாய்,சொல்லு பா என் கோவேறு கழுதை ?" 
                                                  
                                                என்றாள்,நான் அதுக்கு

" இந்த பாதை பிரிவதைப் பார்க்கும்போது ரொபேர்ட் பிரெஸ்ட் எழுதிய Less travelled path கவிதை நினைவு வந்தது ,சிசிலியா,,வேற நீ நினைக்கிற மாதிரி வில்லங்கமா ஒன்றும் இல்லை, சிசிலியா "

                                                         என்றேன் . அவள் என்னோட கைய இன்னும் இறுக்கிப்பிடித்து

" ஹஹஹஹா, வில்லங்கமா என்னவும் இருந்தாலும் ,காட்டுக்குள்ளே அதிலயும் ஒரு ரொமாண்டிக் திரில் இருக்கு மடையா ,,அது உனக்கு தெரியுமாடா,மோட்டுக் கழுதை, "

" ஹ்ம்ம்,,அதுவும் தெரியும் ,கொஞ்சம்போல "

"சரி ,விடு எனக்கும் அந்தக் கவிதை ரெம்பப் பிடிக்கும்,

" ஹ்ம்ம்,,அப்புறம் அந்தக் / கன்றுக்குட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தேன் / கவிதை மறந்துவிட்டியா? சிசிலியா "

" எருமை மாடு, உனக்கே தெரியும் ரொபேர்ட் ப்ரெஸ்ட் கவிதைகள் ஒரு முறை வாசித்தாலும் மறக்கவே முடியாது தெரியுமா "

" ஹ்ம்ம்,,அது உண்மைதான் சிசிலியா "

" ஆனாலும் காட்டுக்குள்ளே ரெண்டு பாதை பிரிவதைப் பார்த்தவுடன் ரொபேர்ட் ப்ரெஸ்ட் இன் கவிதையை நினைவுக்குக் கொண்டு வந்த ஒரே ஆள் நீ தாண்டா "

                                                   என்றுசொல்லி,தொடர்ந்தும் கையை பிடித்துக்கொண்டு ,கொஞ்சம் விலங்கமான விசியம் சொல்ல தொடங்கினாள் ........

ஆனாலும் இந்தப் பாதையில் கோடைகாலத்திலும் ஒருமுறை வந்திருக்கிறேன்," காடெல்லாம் பிச்சி ,கரையெலாம் செண்பகப் பூ ,நாடெல்லாம் மணக்குதடி நல்லமகன் போறபாதை " என்ற நாட்டார் பாடல்போல அது ஜவ்வனமாக அப்போது இருந்தது...

                                                          இப்ப உறைபனி குளிரிலும், பறவைகள் பட்டுப்போன மரங்களின் அடியில் புழுக்கள் தேட,அவைகளை மர அணில்கள் பூசாண்டி காட்ட, எங்களைப் பார்த்து திடுக்கிட வெள்ளை நரி "இப்ப எதுக்கு எங்க ஏரியாவுக்குள்ள வாரிங்க?"எண்டு அதிர அதுக்கு பக்கத்தில நிண்ட ஒரு குள்ள நரி "இவங்கள் எல்லாம் சும்மா ஜுஜுபி "எண்டு சமாதானம் சொல்ல

                                                            கிளைகளிலும் ,இலைகளிலும் இயற்கை உறைபனிய அள்ளி எறிய , அந்த மரங்களின் கீழே " நானும் இருக்கிறன் " எண்டு சிற்றோடைகள் சத்தமில்லாமல் ஓட, இதமான வடதுருவ சூரியன் மிதமாக சூடு கொடுக்க, வடதுருவக் குளிர் காற்று காது நுனியைக் கடிச்சு " லாலி லாலி லல்லோ லாலி லாலி லல்லோ "என்று கோரஸ் பாட ..

                                                                    சும்மா சொல்லக்கூடாது , உண்மையை அஷ்டாங்க நமஸ்காரமா அடைக்கலம் தந்த இந்த இரவல்த் தாய்மண்ணின் மீது விழுந்து வணங்கிச் சொல்லுறேன் நோர்வேயின் காடுமலைகளில் இயற்கை இன்னும் தலை வாழை இலை போட்டு விருந்துக்கு வரச்சொல்லி நிறைகுடம் தழும்பாத இயற்கையாகவே இருக்கிறது !

.
../// 02. 04. 2013 ////


அப்படியொரு லயம், .....!

நேரடியாக முகத்துக்கு முன்னும் மறைமுகமாக முதுகுக்குப் பின்னாலும் நமக்கெல்லாம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் விமர்சகர்கள் இருக்கிறார்கள். பொதுவெளியில் என்னைப்போல எழுதுகிறேன் பேர்வழி என்று அடிக்கடி எழுதிக்கொண்டு இருக்கும் அத்துப்பூச்சிகளுக்கு கொஞ்சம் வில்லங்கமான விமர்சகர்கள் எப்போதும் இருப்பார்கள்.

                                                   ஆங்கிலத்தில் solicitations என்று சொல்கிறார்களே அந்தமாதிரியான விரும்பத்தகாத மயக்குமொழிப் பரிந்துரைகளில் சிலர் இருப்பார்கள். அவர்கள்தான் கழுதைப்புலிகள் .
                                                                 என்னோட பள்ளிக்கால நண்பன் சொப்ட்வார் எஞ்சினியர் ஒருவன் நாளொரு வெப் சைட்டும் பொழுதொரு ஒன்லைன் கேம்ஸ்ஸுமாக மணிக்கணக்கில் கணனியில் நேரம் செலவிடுபவன். அவனின் விமர்சனங்கள் எப்போதும் மேலே சொன்ன ஆங்கில வார்த்தையின் அரத்தப்படுத்தலுக்குரியவை. ஆனாலும் தனிப்பட என்னுடைய வளர்ச்சியில் கவனிப்புக்கு உரியவை.
                                                                 அண்மையில் கவிதை பற்றி ஒரு உரையாடல் வெளிக்குள் படைப்பிலக்கியத்துக்குக் கிஞ்சித்தும் சம்பந்தமில்லாத வெல்வேறு துறைசார் அறிவியலில் வெள்ளியாகப் பிரகாசிக்கும் நான்கு நண்பர்களோடு " கொன்பிரன்ஸ் கால் " என்பதில் சங்கமித்து அதில் என்னையும் இழுத்துக்கொண்டு போய் விட்டு கூழுக்குத் தேங்காயா அல்லது குரங்குக்குத் தேங்காயா என்பது போல அநியாயத்துக்குப் போய் மாட்டிய என்னை வைச்சே நாலுபேர் வேடிக்கை பார்க்கும் சம்பவம் நடந்தது.
                                                               எப்போதும்போல நான் வைரவரோட நாய் போல சிவனே என்று நாடிக்கு முண்டு கொடுத்துக்கொண்டு அமைதியாக இருந்து என்ன ஆரியக்கூத்து நடக்குது என்று கேட்டுக்கொண்டு இருந்தேன். ஒரு முடிவோடு என் கால் ரெண்டையும் லெக் போட்டு விழுத்தி வார்துறதுக்குத்தான் வந்திருக்கிறாங்கள் என்று சிவசத்தியமா தெரிந்தாலும் ஒன்றாகக் குட்டையில் ஊறின மட்டைகள்தானே என்பதில் என் கால்களுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது.
                                                           உண்மையில்ப் " படைப்பிலக்கியத்துக்குக் கிஞ்சித்தும் சம்பந்தமில்லாதவர்கள் " சொல்வதை அதிதீவிர எழுத்து முயட்சிகளில் இருக்கும் யாருமே ரெண்டு காதையும் கொடுத்துக் கேட்பதில்லை. மிகச் சரியாகச் சொன்னால் " படைப்பிலக்கியத்துக்குக் கிஞ்சித்தும் சம்பந்தமில்லாதவர்கள் " தான் நேர்மையான வாசகர்கள் என்று நான் நினைப்பது. 
                                            அவர்களின் சாதாரணமான உலகத்துக்குள் நம்மால் ஒரு சில எழுதுவடிவங்களை எடுத்துச் சென்று அவர்களை பாதிக்க வைக்கமுடியுமென்றால் அதுதான் உண்மையான ஆக்க இலக்கிய வெற்றி என்று எப்போதும் நம்புபவன் நான்,நீங்கழும் என்னை மாதிரி நினைச்சால் உங்களுக்கு அந்த சாவல்களின் அர்த்தம் புரியும், நீங்க வேற  என்ன மாதிரி நினைக்கிறீங்களோ , அது என்னோட பிரச்சினை இல்லை !

                                                     " டேய் மச்சான் கவிதை என்றால் என்ன ? சொல்லு ,உண்ணானத்தான் கேட்க்கிறேன், எது மச்சான் கவிதை ?, சரி இதுக்காவது பதில் சொல்லு,மச்சான் எதுக்காகக் கவிதை எழுதவேண்டும் ? " சொல்றாப்பா, அதை எதுக்காக மற்றவர்கள் வாசிக்க வேண்டும் ?"

                                                          என்று ஆரம்பத்திலேயே பொறுத்த இடத்தில கையை வைச்ச மாதிரி கேள்வியுடன் அவன் வந்தான்...இந்தக் கதையை தொடர்ந்து எழுதுகிறேன்,,,, இப்போதைக்கு முகநூலில் எழுதியவைகளை உங்களோடு இங்கே தொகுப்பாகப் பகிர்ந்து கொள்கிறேன் 


ஒரு
கதகதப்பான கனவு,
அதில்
காத்திரமான நிகழ்வுகளோ
அழுத்தமான 
நெருக்கங்களோ இல்லை ,
மிகப் பிரியமான
சினேகிதி.
தன்னை நம்பச்சொல்லி
நாலாவதுமுறையாக
இரங்கிக் கேட்க்கிறாள் !
என்
பிடிவாதம்
ஆதிக்கம் செலுத்துகிறது,
அவள்
ஆதங்கங்கள்
வலுவிழந்துகொண்டிருக்க
ஐந்தாவதில்
ஜன்னல் வெளிச்சம்
விழித்து எழுந்துவிட்டேன் !

.........................................................................

வாசல்க் கோலத்தில்
வானவில் நிறங்கள்,
மார்கழியில்
மிகப் பெரிய மழை,
பஜனைகளில் 
ஊதுவத்தி வாசனை ,
இளம் தென்றலும்
இளவேனிலக்காலமும் ,
பூசி மெழுகிய
தாழ்வாரங்கள்,
இன்று
பிரதோஷமாயிருக்கலாம் !
ஒரு
நொடிப்பொழுதில்
இன்னொரு வாழ்வியலுக்குள்
கடத்திவிடுகிறது
மனப்பிரமை !

..................................................................

ஒரு
குருட்டு நம்பிக்கை
தொலைந்து விட்டது.!
அவ்வளவுதான் !
எப்படித் தொலைந்தது?
எதிராகச்
செயல்ப்பட்ட .
எல்லாரையும்
விருப்பு வெறுப்பற்று
அணுகிக்கொண்டிருந்ததால்
காற்றில்
பரப்பப்பட்டு
வட்டத்தைத் தாண்டி
நினைவிலிருந்து
மீறத்துணிந்தவர்களோடு
எல்லைகளை விஸ்தரிப்பதில்த்
தொலைந்துபோய்விட்டது.!

......................................................................

மேகங்களை
நோட்டமிட்டுக்கொண்டு
வாசலோரம் நின்று
புகைபிடித்த
வளையங்களை 
பலூன்களாக்கி
சுழறவிட்டுக் கொண்டிருந்தேன்
நான் ,
எதிர் வீட்டுத்
தொடர்மாடி ஜன்னலில்
ஒரு நீள்வட்ட
முகம்பார்க்கும் கண்ணாடியில்
தனது இளமை
திருத்தமாக இருக்கிறதாவென
சோதிக்கிறாள்
வெள்ளைப்பெண் ,
உள்மனப்
போராட்டங்களின்
குறுக்குவெட்டுத் தோற்றங்களுக்கு
அறிமுகங்கள்
தேவையில்லை !

.........................................................................

நீதான்
யாரேனுக்கும்
முகம் கொடுத்துக்
கதைக்க மாட்டாயே !
உன்னைப் பற்றி 
என்ன எழுதி விளக்க முடியும்?
அவர்கள்
வித்தியாசமாகிப்போன
அணுகுமுறையின்
உலகங்களைச் சேர்ந்த
கேலிச் சித்திரங்கள் !
நானும் நீயும்
பிரக்ஞை ஜீவிக்க
பிறக்கும்போதே
நமக்குள்
நிர்ணயிக்கப்பட்டவர்கள்!

.................................................................

தனக்குரியதுபோல 
காத்திருந்து 
பின்முதுகில் கடித்தது,
விளக்கைப் போட்டு 
படுக்கை 
மடிப்புஉறைகளைக்
காற்றில் உதறி விசுக்கினேன்,
ஒரு
மூட்டைப்பூச்சி
அற்ப ஜீவன்
ஆனால் புத்திசாலி !
இருட்டு நோக்கி ஓடமுன்
"விளக்கை அணைத்துவிடு "என்றது
பெருவிரலால்
ஒரேயொரு நசி !
சூடான
சிவப்புப் புள்ளி
அது எனக்குரிய ரத்தம் !


................................................................

சப்பாத்துக்
கால்களில் கீழே
உறைபனிப்பாளங்கள்,
உச்சிக்கு மேலே
துர்வாச சூரியன் 
தன்னை
முழுமையாக
ஒப்புக்கொடுத்தது போல
உஸ்ணம் இல்லாவிடாலும்
வியர்துக்கொட்டும்
வாசனைகள்
இன்னும் வெளிப்படவில்லை, .
அப்படி ஓர் அழகு;
அப்படி ஒரு பாவம்.
அப்படியொரு லயம், !


.....................................................................

ஏதோவொரு திருப்தி
உன்
பதில்கள்
தன்நிகழ்வாக
எவ்வளவு 
வெளிச்சம் வெளிப்படுத்தவேண்டுமோ,
அவ்வளவு வெளிப்படுத்துகிறது !
உன்
சமரசங்கலற்ற
கேள்விகள்
அடர் இருட்டிலும்
மிகவும் எச்சரிக்கையாக
ஒரு
மிகப்பெரிய பரப்பை
எனக்குள்
விரித்துவைக்கப்
போதுமானதாயிருக்கிறது !.


.................................................................

திறப்புப்போட்டு
அறைந்து மூடவேண்டிய
அவசியங்களில்லை ,
இந்த
மேசை இழுப்பானுக்குள் 
சில
தீராக் கடன் கடிதங்கள்,
ஏதோ சில
காகிதங்களில் ஒப்பந்தங்கள்,
ஒரு
செல்லரித்துக்கொண்டிருக்கும்
சிறுகதைத்தொகுப்பு,
ஒரு
நொடிக்கொரு நேரம் தவறும்
கைக்கடிகாரம் ,
இவைதவிர
பத்திரப்படுத்துவதற்கென்று
வேறெதுவுமேயில்லை !
ஆனாலும்
சாவி போடுவதுக்கு
ஒரு எலித் துளையும்
உபரியாக ரெண்டு சாவிகளுமிருப்பதால்
சம்பிரதாயமாகவெப்போதும்
அடித்துப் பூட்டிப்போட்டு
உறுதிப்படுத்த இழுத்துப்பார்க்கிறேன் !


..............................................................................

பலவீனமான
பங்குனி மாதக்கடைசி
வெய்யிலில்
நிழல்கள்
வரிசைகளைத் 
தவறவிடுகின்றன,
மேதாவித்தனங்களை
அவிழ்த்து வைத்திருக்கு
ஊசிக்குளிர்,
காட்டிக்கொள்ளாமல்
பூட்டியிருக்கும்
வயதான
வீட்டுக்கு வெளியேயும்
காத்திருக்கிறது
உறைபனி !


.......................................................................

உன்னதமான
ஒழுங்கமைவுகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கும்
ஒருவராயிருக்கலாம்
அந்த ஓய்வூதியர், 
என்னோடு
பேருந்துத் தரிப்பிடத்தில்
காத்திருந்தார்.
வந்தேறிகள்
அதிக எண்ணிக்கையில்
ஒழுக்கங்கெட்டவர்கள்போல
என்னைப்
அசட்டையாகப் பார்த்தார்.
அவருடன்
பயணிக்க வந்திருந்தாள்
ஒரு சின்னச் சிறுமி,
நிறுத்தத்தில்
வந்து நின்ற நீள்வண்டியில்
நான் அவரைக்
மேல்லெனக் கைத்தாங்கலாகப்
படியேற்றி விட்டேன்.
அவரை முந்திக்கொண்டு
குழந்தை நன்றி சொல்கிறாள். !
வளர்ச்சியடையாத
மனமொன்றில்
எளிதில்
அமிழ்ந்து போகக்கூடியது
நிறத்துவேசம் !


.......................................................................

நேரமொதுக்கி
லயித்திருந்து
பூங்காவொன்றில்
இரைச்சலிலிருந்து நிசப்தத்தை
மொழிபெயர்க்கும் 
அவசியங்கள் எனக்கில்லை !
மனம்
எழுந்து நடமாடும்
நாளொன்றின்
பாதி இரவுகளில்
மலர்களின்
சருகுகளின்
இலை அசைவுகளின்
ஆத்மாவின் ராகங்கள்தானே
கேட்டுக்கொண்டிருக்கு !


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


இதனை வருடங்களில்
இதைத்தானே
கற்றுக்கொண்டேன்.!
இது
மறைக்கப்பட்ட
குற்றவுணர்வாயிருக்கலாம்
ஆனால்
மறுக்கப்படுவதெற்கென்று
சபல நிராகரிப்புகள்
இதிலொன்றுமில்லை .
தூண்டப்படும்
மெல்லுணர்வுகள்
குளிரிரவின்
அதிகாலைத் தூக்கத்துக்கு
அவசியமாயிருக்கிறது !


..............................................................

ஒரு
இரயில் பயணம்,
முன்னிலைப்படுத்துகிறது
முன்னிருபவள்
உள்ளிறங்கி வாசிக்கும் 
தினசரி செய்தித்தாளில்
முன்பக்கமாக
வெகுண்டெழும்
இரண்டு முக்கிய செய்திகள் !
ஒன்று
முறைதவறிய
அரசியல்வாதியொருவர்
பெண்ணிடம் அடிவேண்டியது !
இரண்டாவது
பாதிரியாரொருவர்
ஓரினப் பாலினச் சேர்க்கையை
ஒத்துக்கொண்டது !
பரவசம் அவள் முகத்தில்
மின்னி மறைகிறது ,
அவள்
உள்பக்கத்தில்
எதைப்பற்றி வாசித்திருப்பாள் ?
முகம் சோர்ந்துபோய்
சலித்துக்கொள்கிறாள் ,
இப்போது
எதைப்பற்றி வாசித்திருப்பாள் ?
அவள்
நாலாய் மடித்து
குப்பைத் தொட்டியில்
விசிறி வீசியெறிந்து போது
அச்சொட்டாக
நிறுத்தம் வந்தது !
சொல்லாமல்ச் சொல்லி
எல்லாருக்கும் புரியக்கூடாதென்று
பயணங்களும்தான்
வடிவமைக்கப்படுகின்றன !








Tuesday, 27 March 2018

நாளை மறுநாள்...

மற்றவர்கள் போல வலிய பிடிச்சுக்கொண்டு வந்து முன்னுக்கு இருத்தி கெக்கே பிக்கே என்று சிரியடா என்று வெருட்டி மருட்டி சிரிக்க வைக்கிற மாதிரி நகைச்சுவையாக எழுதவோ ,அல்லது அங்கே இங்கே இருந்து இரவோடிரவா தள்ளிக்கொண்டுவந்த சரக்கை ஆகோ ஓகோ என்று மூக்கில விரலைவைச்சு ஆச்சரியப்படத்திற மாதிரி எழுதவோ ,.

                                             அல்லது ஒளிஞ்சு நின்றுகொண்டு தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி அரசியல் கருத்துக்களில் பட்டையைக் கிழப்பவோ ,அல்லது பாஞ்சு விழுந்து பரபரப்புகளில் கடமை உணர்ச்சியோடு பதிவு போடவோ மந்திரக்கோல் எடுத்து எழுதும் மாயவித்தை எனக்கு இன்னும் கைக்குள் வரவில்லை .


                                                          அதனால,கவிதைபோல அப்பப்ப எழுதியவைகள் இவைகள். முகநூல் சுவரில் கிடந்ததை எடுத்துப்  பகிர்ந்துகொள்கிறேன் .....



விவாதங்களால் 
வடிவமைக்கப்படும் 
சுதந்திரத்தின் 
சுத்தமான சுவாசக்காற்றை
போனாப்போகுதென்று
ஒரேயொரு வாரம் 
சுவாசிக்கலாம்
காதலர்கள்
பிழைக்கத் தெரியாத
உறவுகளை
நம்பிக்கையில் வரவாக்கி
மனதோடு பேசவைத்து .

............................................................

முதல் மூன்று வரிகளை 
இயல்பாக அதன்போக்கில் 
வேண்டுமென்றே 
கை நழுவ விட்டேன் 
நாலாவது வரி 
நான் நினைத்ததுபோல வராமல்
கைவீசிக் கைவீசி
அது விரும்பியபடி வந்தது
அஞ்சாவதிலும் ஓரளவுக்கு
என்ன சொல்லவாறேன் என்ற
கட்டுமானம் வீச ஆரம்பித்தது
ஆறாவதில்
வாயுபகவானையும்
நன்றியோடு இணைத்துக்கொண்டேன்
ஏழாவது
அரைவாசியில் புத்தியைக் காட்டி
சூறாவளியாக சுழன்றடித்து
சனியன்போலவே மாறியது
எட்டாவதைக் கட்டி இழுத்து
மேக எல்லைக்குக்
கிட்டக்கொண்டு வந்தேன்
பத்தாவது வரியில்
தென்றல் போல மென்மையான
பாதுகாப்பை உணர்ந்தேன்
பதினொன்றில்
வாடையும் பருவமும்
மறுபடியும் ஒன்று சேர்ந்தது
பன்னிரண்டில் ஆச்சரியம் வைத்து
மேகங்களோடு மோதி
பதின்மமூன்றில் அதிசயமாகியது
மிச்ச ரெண்டு வரிகளில்
திசைகளைத் திருப்பி வைத்தபோது
எழுத்துக்கள் மிதக்கத்தொடங்கின
பறவைகள் கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி
எழுதிமுடித்த
அந்தக் கவிதைக்குக்
" காற்று " என்று பெயர்வைத்தேன்.!


..........................................................................

சிவப்பு ரோசாவின் 
பரீட்சை முடிவு 
காதலர் தினம் !

..................................................................

நேசிப்பின் 
முறைமையின் மீதே
கவலையை உண்டாக்குகிறது
விலைகளில் உயர்ந்த
பரிசுகள் தேடும்
தினம்!


....................................................

நெருக்கமான 
அதிகாலைப் புகையிரதம், 
திரும்பும் நிறுத்தத்தில்
கிட்டத்தட்ட நான்தான் கடைசியாக 
நுழைத்து ஏற்றிக்கொண்டேன், 
இருக்கை விளிம்புகளில்
கனவுகளைப் பாதியாக விட்டுவந்த
அரை நித்திரை மனிதர்கள்,
ரெண்டுபக்கமும் ஜன்னல்கள்
சுழல்காற்றில் சருகுபோல
நகர்ந்தகொண்டிருக்கும் வேகம்,
நாயோடு ஏறியவள்
முழங்கால்களுக்கு நடுவேயதை
அதட்டி அமத்திவைக்கிறாள்,
ரெண்டு காதலர்கள்
இரவின் மிச்சத்தை வீணாக்காமல்
இறுக்கி அணைத்து முத்தமிடுகிறார்கள்,
எக்கோடியனில் இரங்கி
பிலாஸ்ட்டிக் கோப்பையில்
கையேந்தும் பிச்சைக்காரன்,
இதயத்தில் பற்றிக் கொண்ட
ஏதோவொன்றை நினைத்து ரசிக்கிறார்
நடுத்தர நரை வயதுக்காரர்,
ஆழ்மனதிலிருந்து தோண்டிய
உதடுபிரியாச் சிரிப்போடு
தொடுதிரையில் விரலோடியபடி
சின்னவள் இணையவலைவெளியில்,
நடைச்சுற்ற்றில்
ரெண்டுபேருக்கு நடுவில் நசிந்து
நிண்டுகொண்டிருப்பவளில்
முகமிழந்த களைப்பு ,
இடுங்கி உள்வாங்கிய கண்களில்
ஒரு வாழ்நாளில்
பிரிவுகளே மிச்சமாகிப்போன
ஈரக்கசிவோடு வயோதிபர்,
பூங்காவில் ஊஞ்சலாடுவதுபோல
எம்பி எம்பிக் குதிக்கும் குழந்தையை
அன்பாக தட்டுகிறாள் அம்மா,
அனேகமாக
என் மூலை இருக்கையிலிருந்து
கவனிக்க முடிந்த எல்லாமே
வடிவமைக்கப்பட்டதுபோலிருக்கு
பெரும்பாலும்
இனி வரும் இறக்க நிறுத்தத்தில்
இந்தபிரமை ஒழுங்கின்றிக் குலைந்துவிடலாம் !


......................................................................................

பணத்தின்
பெறுமதியைக் கூட்டி
நாதியற்று போன
கண்ணாடி

பரிசுகெட்ட
அலங்கார அங்காடி
பொறுமை நிறை
வெள்ளை நகரத்தில்
வெப்பச்சலனத்தை காட்டுகிறது
கடைகளின்
காட்சிப்படுத்தலில்
உருவேற்றிய அலங்காரங்கள்.


...................................................................

பார்வையொன்றே 
பரலோகமென்று 
அதிகமாக ஏற்றி வைத்த
கற்பனையில்
வர்ண அலைகளை
விரித்து விட்டாள்
ஒருநாளை 
மறைத்துக் கசக்கிக் கொடுத்த 
சின்னக் கடிதத்தில்!

........................................................................
.
காலமானது தோற்றம் 
நிறம் மங்கவேயில்லை
நீளமான நேசம் !

................................................................

ஒப்பனைகள் தேவையற்ற
ஒரு நாள் 
சங்கடங்களின்றி
உண்மைகளை
ஒவ்வொன்றாக எடுத்து
சந்தேகங்களை
நேராகவே மோதவிட்டு
இரங்கிப் பார்த்த
பார்வை !

......................................................................

வெண்மை முடி 
வயதாக மறுக்கிறது
உண்மைக் காதல்.!

..................................................................

பார்வையொன்றே 
பரலோகமென்று 
அதிகமாக ஏற்றி வைத்த
கற்பனையில்
வர்ண அலைகளை
விரித்து விட்டாள்
ஒருநாளை 
மறைத்துக் கசக்கிக் கொடுத்த 
சின்னக் கடிதத்தில்

....................................................

அன்று
சிரிக்க மறந்து
மூக்கைச் சிந்திக்கொண்டு
அவள்
மரங்கொத்திப் பறவையைப்
பார்த்துக்கொண்டிருந்தாள்
அவனோ
கைபொத்திப் கொட்டாவிட்டு
வானத்தின் எல்லைகளைத்
தேடிக்கொண்டிருந்தான் .

.............................................................



ஈரமான
முத்தங்கள் காய்ந்து
கைப்பிடிப்பின்
வாசனைகள் வியர்த்து
பூங்கொத்துக்கள் வாடிவிடும்
இன்றிரவுக்குள்
கொடுத்துவைத்த
வாக்குறுதிகள் எல்லாவற்றையும்
நிறைவேற்றிவிடுங்கள் !

................................................................


மடித்துக் கொடுத்த 
பெரிய பதில் மடலில்
உன் 
ஸ்பரிசமே 
சொர்க்கத்துக்குப் போகும்
குறுக்கு வழியென்று
பொய்களுக்குப்
பொன் தடவினான்
காதலித்த தினமொன்றில் !

...............................................................

முடிந்த
எதிர்பார்ப்புக்கள்
சூழ்ந்துள்ள உறவுகள்
எதிர்காலம்
மாங்கல்யத்துக்கு
மட்டுமென்றே
உரிமைகோரவிடுவதில்லையே
இன்றைய
பின்மாலைப்பொழுது !

............................................................

பிறகு
கரையோரம் 
காற்றுக் கைவீசி நடக்க
நாணல் அசைந்தது
தாளம் பூ மணந்தது
முகில் இருண்டது
மழை தும்மியது
இப்பெல்லாம்
ஏதோவொரு கோவில் மணி
யாரோவொரு கடவுளை அழைக்க
காரணங்கள்
எதுவும் சொல்லாமல் 
இன்னமும் 
ரகசியமாகக் காத்திருக்கிறது
காதல் !

..........................................................


நாளை
யாழிசை மீட்டி
மதுக்கிண்ணங்களில்
மீறல்கள்
தேன் வழியும் பொழுதுகளில்
காமம் தலைக்கேறி
யாதார்த்தத்தை
நினைக்க நேரமிருக்காது
நாளை மறுநாள்
இன்னொரு
மகத்துவங்களற்ற
மறுநாள்தானே !

..................................................................

அவளுக்காக
அவனுக்காக
எழுதி முடிக்கப்பட்ட
எல்லாக்
கவிதைகளில் இருந்தும்
ஊடலின் அவஸ்தைகள்
சாயம் கழண்டு விட
கேவலப்படுத்தப்பட்ட
வார்த்தைகள்
மவுனமாக
அடுத்த வருடத்துக்கு
அசைபோட்டுக்கொண்டிருக்கும்.!

........................................................................

பழகிப்போன
ரெயில்ப் பயணம்
பார்த்துச்சலித்த
ஜன்னலோரம்
வெளிச்சம் சுருங்கும்
பகல்ப்பொழுது
குரல்களில்
பிசிறிக்கொண்டிருக்கும்
மொழிகளின் சம்பாஷணை
ஒரு
வெள்ளைவனாந்தரத்தைக்
கடக்க நேர்ந்ததுபோது
அடிமனதிலேறிவிடுகிறது
அமைதி !

................................................................................

நெடும்விசும்பு
புதிய சட்டை அணிந்து
மென்குளிரை
அரவணைத்துக்கொள்ள
எல்லாவற்றையும்
களைந்து போட்டு
வெய்யிலோடு உரசி
நெருங்கும்
பகல்ப் பொழுது
ஒரு நாளை
நிறைவு செய்ய
உந்திக்கொண்டு
காற்றைச்
சிநேகிதமாக்கும்
மொட்டை மரங்கள்
வானத்தை
வாசித்துக் கொண்டே
பறக்கிற பறவை
சில நிமிடம்
விரித்துவைத்த சிறகில்
மிதக்கிறது
ஒரு
மரஅணில் குஞ்சு
வாயில் ஏதோவொன்றைக்
கவ்வுவதைக்
குழந்தைகள் மட்டும்
கவனிக்கிறார்கள்
வெளிப்புறத்தில்
சந்தோஷம் வைச்சு
தொலைந்த வெளிச்சம்
திரும்பக்கிடைத்த
பருவத்தின்
அலைபாச்சலுக்கு
இதெல்லாம்அவசியம்தானே!

..............................................................