Saturday, 6 January 2018

பிரத்தியேக வாசனைகளும் கொஞ்சம் ஏமாற்றமும் !


 கவிஞ்சர் பிரமிள் என்ற  தருமு சிவராமு  எழுதிய கவிதைகள் அப்பப்ப வாசித்து " அப்பப்பா  ஒன்றுமே புரியவில்லையே " என்று மூக்கிலே விரலை வைச்சு ஜோசிப்பது." காற்றின் தீராத பக்கங்கள்..." " தவளை "  போன்ற  சில கவிதைகள் புரிந்தது.. நான் நினைக்கிறன் பிரமிள் உருவாக்கிய ஒருவிதமான புதிய சொற்களை அவ்வளவு இலகுவாக எல்லாராலும் விளங்க முடியாது  என்று. அல்லது என்னுடைய மொழியாளுமை ஒரு தடையாக இருந்திருக்கலாம். அல்லது பரிசோதனை  உத்வேகத்தை மட்டுமே நம்பி இயங்கிய ஆளுமை  விரைவிலேயே அடங்கியிருக்கலாம்.

                                                                        நவீன தமிழ்க்கவிதையின் மொழி மணல் வெளியில்  அதிகம் தன்னுடைய பாதங்களை பதிந்து சென்ற  உச்ச சாதனையாளர் என பிரமிளை பலர் சொல்லுகிறார்கள். . அதன் பின்னர் அடுத்த தலைமுறையில் அவரைப்போலவே பலர் எழுத ஆரம்பித்தார்கள். முகநூலிலேயும் அவரின் தாசர்கள் இப்பவும் எழுதுகிறார்கள். அதுவும் அவ்வளவு இலகு  இல்லை விளங்க்கிகொள்ள. ஆனால் நாங்க எல்லாம் பிரமிள் கவிதை வாசித்து விளங்கிய ஆட்கள்  என்று ஒரு பஜனைக்கோஸ்ட்டி சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். 

                                                                 பிரமிள் உத்வேகத்துடன் கவிதையில்செயல்பட்டது வெறும் பத்து வருடங்கள் மட்டுமே என்கிறார்கள். அதன்பின் அவரது விமர்சனம் ,இலக்கியக்  கொலுவல்கள்,  அவரின்  கவிதைகளுக்கு அவரே  கொடுத்த குழப்பமான தன்னிலை விளக்கம் என்று அவரின் ஆற்றல் எல்லாம்  வம்புதும்புகளை நோக்கி திரும்பிவிட்டது.  ஆனால் ஒருவகையில் அதுவும் இயல்பே. அது எந்தக் கொம்பனாக இருந்தாலும் . ஒரு கட்டதுக்கு மேலே ஆரம்பம் போல  எழுதவே முடியாது என்கிறார்கள். 


                                     அப்பறம் வழக்கம் போல என்னோட சிதறல் கவிதைகள் பலத்தை தேடித் தொகுத்து போடுகிறேன். வாசித்து பாருங்க . 

ஒரு பேச்சுக்கென்று 
வைத்துக்கொள்ளுங்களேன் 
முதலிரவில் 
அகல் திரிவிளக்கு
விடியும்வரையில் எரிந்திருந்தால் 
இதையெல்லாம் பார்த்திருக்குமா?
விபரமறியாப்பெண்ணின்
தன்னைக் கொடுத்த 

புது வெட்கம்,
அடங்காத ஆடவனின்
அவசரமான ஆண்மை 

ஆக்கிரமிப்பு,
கொஞ்சும் பரிவுக் 

கெஞ்சல் ஆயிழையின்
பின் அந்திமாலை 

மழைத்துளிகள் ,
கனிவான பார்வைப் பரசுராமனின்
பணிவுள்ள தொடுகைப் 

பரிசம்,
விருப்பமில்லாப் பெண்ணின்
எதிர்கமுடியாத விசும்பல்க் 

கண்ணீர்,
இதய ஈரம்வறண்டு போன ஆணின்
கைவிடுதலுக்கான 

மிரட்டல்,
கனவுகளை 

இறக்கிவிடும் பெண்ணின்
எல்லையில்லாப் 

பேரானந்தம்,
இசைந்ததே போய்க்கொடுத்த இளைஞனின்
திருப்திகரமான 

இலக்குகள் ,
மனதை திரு மணமாக்கிய நாயகியின்
உச்சக்கட்ட 

ஆனந்த உதறல்கள் ,
பரமசிவன் வடிவில் வந்தவன்
படைப்புப் பரம்பொருளில் 

பிரம்மம் ,
வைபோக நாளின் அலைச்சலில்
நாளெல்லாம் களைத்துப்போனவளின்
சன்னமான தூக்கம் ,
வாழ்நாள் ஆசைகளைச் சேர்த்தவனின்
கைகளைப் பிசைந்தபடியான 

விழிப்பு ,
அல்லது
நாலு சுவர்களுக்கு மட்டுமே
விடைகள் தெரிந்த
இரண்டு மனதுகளின் 

நீண்ட மவுனம் !
அல்லது
தொடக்கத்திலையியே
வெளிச்சங்கள் அணைக்கப்பட்டு
இருட்டில்
காமன் கதை எழுதியிருக்கப்பட்டிருக்கலாம் !
அப்படியென்றால்
விளக்கிடம் மிச்சமிருப்பது
வெறும் பெருமூச்சு சத்தங்களும்
பிரத்தியேக வாசனைகளும்
கொஞ்சம் ஏமாற்றமுமே !

.
..................................................................................................
.
வேப்பமரத்துக் குயில் 
அதிகாலையே 
காதல் பொழியும் கூவல் 
விழுந்த மல்லிகை மலர்கள்
மழை ஈர மண்ணுக்கும் 
வாசனை கொடுப்பது
கொட்டாவி விடும்
வெள்ளை நிறத்துப்
பூனையைப் பார்த்துக்கொண்டிருப்பது
இப்படித்தான்
இசை தரும் பருவமும் கடந்து விடும் !

.
..........................................................................................
.
அம்சமான அனுபவம்
மவுனமாகி விழுங்குவதட்கல்ல
விவரணங்களாக்க்கி
எழுத்துவத்தட்குமல்ல
வாழ்நாள் சந்தோஷங்கள் வசப்பட்ட
நினைவுகளில் ஏற்றிவிட்டு
அதன்பாட்டில் அசைந்தாட
வழிவிட்டு ஒதுங்கி நில்லுங்கள் 

.
.................................................................................................
.

மொட்டு 

முகை அவிழ்க்கும்
அதிகாலை மெட்டுக்கள்
காற்றுக்கே சொந்தம் !

.

.................................................................................
.
சுரங்களையும் ராகங்களையும்
பிரிக்கவே வேண்டாம்
முக்கியமாக மொழியைவிட
இசை உருவமற்றது
சிலசயம் காற்றைவிடவும் மெல்லியது
நட்புப் போலத் தூய்மையானது
காதல் போலக் கனிந்துவிடுவது
அதன்
முடிவில்லா எல்லைகள் தரும்
அளவில்லாத சுதந்திரம்
ஆத்மாவை
அடுத்த கட்டத்துக்கு உயர்த்திவிடுகிறது.

.
...................................................................................................
.
இருபத்தைந்து வருடங்களின் பின் 
அவன் முகம் 
தட்செயலாக முகநூலில் 
கண்டபோது திடுக்கிட்டு 
வருடங்களின்பின் புன்னகைத்தாள் , 
கண்களை வைத்துதான்
சடுதியாக அடையாளம் கண்டாள் !
எப்போதுமில்லா வேகத்தில்
உள்ளே அல்பங்களில் நுழைந்து
குடும்பப்படம் தேடினாள்,
முதன் முதலில்
அவன் கல்யாண மனைவியின்
அழகை ஒப்பிட்டுக் கவனித்தாள்,
அவள் முகத்திலிருந்த
பூரிப்பில் பொறாமைப்பட்டாள்,
அவளை அகற்றிவிட்டு தன்னை
நெருக்கமாக நிறுத்தி வைத்து
வடிவு பார்த்துச் சிரித்தாள்,
அவன் வயதானதையும்
கவனிக்க மறுக்கவில்லை !
அவன் குழந்தைகளின்
முகத்தை தொடுதிரையில்
விரல்களால் தொட்டாள்,
நெருக்கமான அந்தப்படத்தில்
தன்னையும் உள்நுழைக்க
இடம்தேடிக்கொண்டேயிருந்தாள்,
மடிக்கணனி
விசைப்பலகையில் கண்ணீர் விழுந்ததை
ஏனோ கவனிக்கவில்லை
கவனித்த போது
மிக மிக மென்மையாகவதை
சேலைத்தலைப்பால்
நோகாமல் ஒத்தியெடுக்கிறாள்,
சமையலறையிலிருந்து அவள் கணவன்
" எடியே என்னடி உப்புச் சப்பில்லாமல்
சமைத்து வைச்சிருக்கிறாய் 

வந்து இன்னொருக்கா சமையடி மோட்டுக்கழுதை " என்கிறான்
" ஹ்ம்ம்" என்று பெருமூச்சு விடுகிறாள்
அதில்
இருவத்தியைந்து வருடங்களின்
பிரிவு அதிகமாகிறது !
அவனை மென்மையாக
அணைத்துவிட்டு
மடிக்கணணியை விரக்தியாக
அணைத்துவிட்டு
கலைந்த படுக்கையறை
விளக்குகளை வேண்டுமென்றே
அணைத்துவிட்டு
மிகமிக மெதுவாக சுவாசித்தபடி
ஜடமாக எழுந்துபோகிறாள் !

.
.........................................................................................
.
மாலைப்புகையிரதத்தை 
முழுதுமாய் உள்வாங்கிக் 
கவனிக்காமல் கடப்பதுதான் வழக்கம்,
உட்சாகங்கள் 

வழிந்துவிட 
களையிழந்த முகங்கள், 
அதற்கு
நிகராகவோ மேலாகவோ
வாடிப்போன முகப்பூச்சுக்கள்,
பேசுவத்துக்கு
அநியாயம் செய்யும் விதத்தில்
ஷக்தி கொடுக்காத
மூச்சுக்களின் நெருக்கம்,
எனக்கு முன்னால் இருப்பவர்
எட்டு மணித்தியாலம்
சாதித்ததை அங்கீகரிக்கும்
நீண்ட ஆயாசம் ,
அவருக்கு அருகிலிருப்பவள்
நாரி முறிந்தது
அதிகம் தாண்டிச்சென்றிருக்கலாம் ,
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
நெரிசல் இறங்கிக்கொண்டிருக்க .
வாழ்வதட்காக வாழ்வது
துன்பம் மிகுந்ததாக
மீண்டும் மீண்டும் தோன்றுகிறது,!

.
............................................................................................
.
வாணாதிப்பூச்சியின் காதல்
எந்தவையென்று
எப்பவாவது அதனிடம்
காற்றை முன் நிறுத்தி வைத்து
விசாரித்திருக்கிறோமா ?
இல்லையே !
அதையெல்லாம் விட்டுவிட்டு
படிமங்களை
அதன் சிறகுகளில் ஏற்றி
பறப்பதைச் சிக்கலாக்கினோம் ,
நனவோடை உத்தி என்று
குறுக்குவழிகளில்
புத்தி சொல்லிக்கொடுத்தோம்,
தேடல் என்ற பிரயோகத்திலதன்
சுயநிர்ணயத்தை
மொத்தமாகக் களவாடினோம்,
தேர்வுசெய்த
தோல்வியின் விபரிப்புகளுக்கோ
கனவுகள் காணாமல்போதலுக்கோ
அதன் பெயரைப் பாவிப்பதுக்கு
முன் உத்தரவுகள் வாங்குவதில்லை,
பயங்கரமான சொல்லாடல்களில்
அதன் பெண்மைப் பாதுகாப்பே
பதறிக்கொண்டது,
திடீர் திருப்பங்களென்று
அதன் பழக்கப்பட்ட திசைகளை
மாற்றிவைத்தோம் ,
கவிதைமொழிப்பற்றி அதனுடன்
ஒருநாள்த்தன்னும்
கலந்துரையாடியதில்லை !
ஒதுங்கிக்கிடக்குமதன்
ரகசிய விருப்பங்களையும்
பிரத்யேகமாக சேர்த்து வைத்திருக்குமதன்
காதல் குறிப்புகளையும்
கணக்கில் எடுத்ததேயில்லை !
இப்படித்தான்
அதீத பலாத்காரங்களுடன்
தப்பிப்போகாதவாறு
கவிதைகளில் உள்நுழைக்கப்பட்டு
அடிவேண்டியே செத்துப்போன
அட்ப ஜீவன்
வண்ணாத்திப்பூச்சி !

.
.............................................................................................
.
கடைசியாக
இருக்கைகள் வெறுமையானபின்
நாளைக்கு வரையில்
தூக்கம் ஆட்க்கொள்ளும்
வட்டமான வளையத்துக்குள்
நன்றியோடு சுழறவேண்டியுள்ளது.
எஞ்சிய பயணத்தைச்
இத்தோடு
முடித்துவிட நினைக்க
அள்ளப்பட்டுகொண்டே போகும்
காலத்தை
யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை,
இனி
நாளைய மாலையும்
நாளைய புகையிரதமும்
இன்னொரு கவிதையின் தொடர்ச்சி...........

.
...............................................................................
.

ஒரு
மரணவீட்டு அழுகுரலில்
ஈரமாகிக்கொண்டிருக்கும்
வெற்றுக் கதிரைகள்..!

.

...........................................................................
.
அவனின்
சேதாரமில்லாத பொய்களை
மனதோடு மன்னிப்பவள்
அவனின்
திருத்தமுடியாத குழப்படிகளில் 
சின்னக்குழந்தைத்தனத்தை
தேடி வெளியேயெடுப்பவள்
அவனின்
பொறுப்பற்ற பொழுதுகளின்
அலட்சியங்களில்
தானாகவே வந்து நெருங்குபவள்
அவனின்
விழுந்த தோல்விகளில்
தன்னையும் முண்டு கொடுத்து
வெற்றியாகவிருப்பவள்
அவன்
பழக்கவழக்கங்களை
பொறுமையோடுசகித்துக்கொள்பவள்
அவனின்
தேவையற்ற பதற்றங்களில்
தேவையான அளவுகளில்
நம்பிக்கை கொடுப்பவள்
அவனின்
அவமதிப்பு நேரங்களில்
தலை கோதிவிடும்
தாயாகவேயிருப்பவள்
தேசங்களில் தூரமாயிருந்தாலும்
கரிசனையில் கிட்டவாகவேயிருப்பவள்
அவள்தான்
இன்றைவரையில்
சொல்ல முடியாத
ஒரேயொரு வார்த்தையை
தனக்கெனமட்டுமே ஒதுக்கிய
பிரத்தியேகமான இடத்தில
வைத்துக்கொண்டு காத்திருக்கிறாள் !

.
..........................................................................
.

ஒரு 
குழந்தையின் சிரிப்புக்கு
காரணங்கள் கண்டுபிடிக்கமுடியாத
அம்மாவின் வியப்பு,! 

.

.................................................................
.

ஒருமுடிவோடு
புன்னகையோடு விரோதமாகியிருந்தவளை
இன்னொருமுறை
இயல்பாகச் சிரிக்கவைத்தவன்,
சின்னதான 
பிரியமான வார்த்தைகளில்
அவளின் நம்பிக்கையை
மீட்டெடுத்துக்கொடுத்தவன்
அரவணைப்பில்
ஆதாரமான அத்திவாரங்களைப்
பாசமோடு பலமாக்கியவன் .
வலி என்றவள்
சொல்லிமுடிக்குமுன்
உயிரோடு ஒட்டிக்கொண்டு
வழிந்துருகிவிடுபவன்,
மிகக குறுகிய
காலமுருவாக்கிய விபத்தில்
முடிவில்லாக் காதலுக்கு
விளக்கம் சொன்னவன்,
தன்னிரக்கமான அவளின்
பலவீனங்களையெல்லாம்
பலமென்று நிரூபித்தவன்,
அவளாகவே
இருள்செறி பாதைகளில்
பின்வாங்கிக்கொண்டிருந்தபோது
வெளிச்சங்களோடு
முன்னுக்கு வந்தவன் ,
அவளின் நீண்ட மவுனத்தை
பூக்களின் இதழ்களில்
தென்றலைப் போல மென்மையாக
வந்திறங்கும் வண்டுகளின்
மொழியில் புரிந்துகொண்டவன் ,
இப்படியான ஒருவணுக்குள்
அவளுக்காகவே
ஆழமாக இறங்கியுள்ள
வேர்ச்சொற்களின் துடிப்புகளை
பேசிமுடிப்பதுக்கு
வார்த்தையாக்கமுடியாமலிருக்கலாம் !

.
........................................................................................
.

சிதிலமான
கூட்டின் முகவரியை
மறந்துபோனதால்
இடம்பெயர்ந்த பறவை !


.
..............................................................................
.
என் நிழலே
இப்போதைக்கு எனக்குப்போதும்,
எதன்பொருட்டு
தனித்தனியாகிவிடுகிற
உணர்வுகளை அடைக்கிறேனென்று 
தீர்மானமாகச் 

சொல்லமுடியவில்லை !
.
....................................................................................
.
உலர்ந்துபோன கண்ணீரோடும்
கடைசிப் புன்னகையோடும்
எல்லாமுமாக
பெரிய மனதொன்றை
மையமாகக் வைத்துக்கொண்டு
எழுத்தப்பட்ட உருப்படியான
புனைகதைகள் என்னிடமில்லை!
ஆச்சரியமாகவேயிருக்கு
அவசரமான தெரிவுகள் !
தேடிப்பார்த்தபோதெல்லாம் .!

.
.............................................................................
.
இது
இப்படி நடப்பது
முதல் முறை அல்ல
சிலநேரம் பொறுமையோடு
உடைப்புகளுக்குக் காத்திருந்தால் 
கடைசியாகவுமிருக்கப்போவதில்லை !
வேறென்ன
நாவல் எழுத்தலாமா ?
எண்ணிப் பின்வாங்கிவிட்டேன்.!

.
.................................................................................
.
வாசிப்புக்கு விரும்பும்படியான
நீண்ட நேரத்தை
உள்ளிறங்கித் 

தேடும்அவகாசங்கள்
அழித்துக்கொள்வதென்றே
இன்றைய தலைமுறை !

.
..............................................................................
.
கதை 

சொல்லும் ஆளுமை
அல்லது
கதையோடு 

செல்லும் லாவகம்
எதைக் கொண்டுவர நினைக்குதோ
அதை
ஏற்பதிட்குப் பதிலாக
ஆரம்பத்திலே 

நிராகரிப்புகள்தானே
அரங்கேறிவிடுகின்றன !

.
....................................................................................
.
விவரங்களைப் பார்த்து
திகிலடைய வேண்டியிருந்த
அந்தக்
காலகட்டத்திற்கு பிறகு
ஆளுமையாக உருவெடுத்த
மனவெளியை

வாசிப்பது பற்றி
எப்படி 

தெரியாமிலிருக்கமுடியும் ?
.
...................................................................................
.
முன்யோசனை 

இல்லாமல்
போகிறபோக்கில்
அடித்துவிட்டு செல்லும் 

கூட்டம்தான்
படைப்புக்கள் மீது
விழுந்து தெறிக்கும் 

வெளிச்சங்களில்
வெறுப்பை உமிழச்செய்கிறது.!

.
.................................................................................
. 
யாரையும் 
யாரோடும் ஒப்பிட்டுச்
சிலவற்றைச் சொல்லவரவில்லை .
நியாயப்படுத்தியும்
அல்லது
வேறுபடுத்தியும் சொல்லமுனைவதில்லை .
சாதனைகளை இல்லையென்றும்
சதாரணங்களை அசாதாரணங்களாக்கும்
இந்த
அபத்தங்கள் தெரியாமல்
சாமர்த்தியமாக மேலெழுந்து
விவாதித்து நிறுவவும் முடியும்.
வேண்டாம்
இருட்டே துணையாக
என்வழியில் ஒதுங்கிப் போகிறேன்.!

.
...................................................................................
.

நரை மயிரை
முன்னிறுத்திக் காட்டுவதால்
கண்ணாடியை
முறைக்கும் முகம். !

.

.................................................................
.
புதினம் என்ற சொல்
எந்த தடத்தில் இருந்ததோ
கிட்டத்தட்ட அதே இடத்திற்கு
குறுங்கதை வந்துசேர்ந்திருக்கிறது.
நினைக்கும் போதே பகீர் என்கிறததை .
நீட்டி எழுதிமுடிக்கும் போது
சப்பென்று தொய்ந்துபோகும் சாத்தியங்களால்
இனியெப்போதும்
வளரவிடாமல் விட்டதை
தேடவேண்டிய அவசியமில்லை. !
சாதாரணமாகவே
எது இலக்கியமென்ற கேள்விகள்
துருத்திக் கொண்டு உறுத்த.
அமரகாவியம் எழுதவேண்டுமென
மனசு சொல்லவில்லை.
அது சாத்தியமும் அல்ல.
இப்படியே சொல்லிக்கொண்டே
சமாளிப்பதுதான் எரிச்சலூட்டுகிறது,
இது
இப்படி நடப்பது
முதல் முறை அல்ல !

.
....................................................................................
.

வெள்ளையாக
நிலம் எழுதப்பட்டிருக்கும்
ரம்மியமான இரவின்
பவுர்ணமி நிலவு !

.

............................................................................
.
முதல் மூன்று வரிகளை
இயல்பாக அதன்போக்கில்
வேண்டுமென்றே
கை நழுவ விட்டேன்
நாலாவது வரி 
நான் நினைத்ததுபோல வராமல்
கைவீசிக் கைவீசி
அது விரும்பியபடி வந்தது
அஞ்சாவதிலும் ஓரளவுக்கு
என்ன சொல்லவாறேன் என்ற
கட்டுமானம் வீச ஆரம்பித்தது
ஆறாவதில்
வாயுபகவானையும்
நன்றியோடு இணைத்துக்கொண்டேன்
ஏழாவது
அரைவாசியில் புத்தியைக் காட்டி
சூறாவளியாக சுழன்றடித்து
சனியன்போலவே மாறியது
எட்டாவதைக் கட்டி இழுத்து
மேக எல்லைக்குக்
கிட்டக்கொண்டு வந்தேன்
பத்தாவது வரியில்
தென்றல் போல மென்மையான
பாதுகாப்பை உணர்ந்தேன்
பதினொன்றில்
வாடையும் பருவமும்
மறுபடியும் ஒன்று சேர்ந்தது
பன்னிரண்டில் ஆச்சரியம் வைத்து
மேகங்களோடு மோதி
பதின்மமூன்றில் அதிசயமாகியது
மிச்ச ரெண்டு வரிகளில்
திசைகளைத் திருப்பி வைத்தபோது
எழுத்துக்கள் மிதக்கத்தொடங்கின
பறவைகள் கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி
எழுதிமுடித்த
அந்தக் கவிதைக்குக்
" காற்று " என்று பெயர்வைத்தேன்.!

.
..............................................................................................
.

அளவோடு
அரிதாரம் பூசியவளின்
அசைவுகளையே
வன்புணரும் கண்கள்!

.

....................................................................
.
நெருக்கமான
அதிகாலைப் புகையிரதம்,
திரும்பும் நிறுத்தத்தில்
கிட்டத்தட்ட நான்தான் கடைசியாக
நுழைத்து ஏற்றிக்கொண்டேன், 
இருக்கை விளிம்புகளில்
கனவுகளைப் பாதியாக விட்டுவந்த
அரை நித்திரை மனிதர்கள்,
ரெண்டுபக்கமும் ஜன்னல்கள்
சுழல்காற்றில் சருகுபோல
நகர்ந்தகொண்டிருக்கும் வேகம்,
நாயோடு ஏறியவள்
முழங்கால்களுக்கு நடுவேயதை
அதட்டி அமத்திவைக்கிறாள்,
ரெண்டு காதலர்கள்
இரவின் மிச்சத்தை வீணாக்காமல்
இறுக்கி அணைத்து முத்தமிடுகிறார்கள்,
எக்கோடியனில் இரங்கி
பிலாஸ்ட்டிக் கோப்பையில்
கையேந்தும் பிச்சைக்காரன்,
இதயத்தில் பற்றிக் கொண்ட
ஏதோவொன்றை நினைத்து ரசிக்கிறார்
நடுத்தர நரை வயதுக்காரர்,
ஆழ்மனதிலிருந்து தோண்டிய
உதடுபிரியாச் சிரிப்போடு
தொடுதிரையில் விரலோடியபடி
சின்னவள் இணையவலைவெளியில்,
நடைச்சுற்ற்றில்
ரெண்டுபேருக்கு நடுவில் நசிந்து
நிண்டுகொண்டிருப்பவளில்
முகமிழந்த களைப்பு ,
இடுங்கி உள்வாங்கிய கண்களில்
ஒரு வாழ்நாளில்
பிரிவுகளே மிச்சமாகிப்போன
ஈரக்கசிவோடு வயோதிபர்,
பூங்காவில் ஊஞ்சலாடுவதுபோல
எம்பி எம்பிக் குதிக்கும் குழந்தையை
அன்பாக தட்டுகிறாள் அம்மா,
அனேகமாக
என் மூலை இருக்கையிலிருந்து
கவனிக்க முடிந்த எல்லாமே
வடிவமைக்கப்பட்டதுபோலிருக்கு
பெரும்பாலும்
இனி வரும் இறக்க நிறுத்தத்தில்
இந்தபிரமை ஒழுங்கின்றிக் குலைந்துவிடலாம் !

.
...............................................................................................................
.

அதிகமதிகம்
பேச்சு மூச்சில்லை
இருந்தாலும்
அவனுக்காவேயிருக்கும்
அவள்..!

.

..............................................................
.
நீண்ட அலைச்சலும்
மனப்பாரமும் அதிகமான
என்னையே உதறியெடுத்து
அந்தப் பிராத்தனைக்குப் போனேன்
துருவப் பறவை போல . 
திசைகளைத் தொலைத்துவிட்டுத்
அடிவான வழிதேடுதபோல
கடிவாளமில்லாத சிந்தனையை
ஒருமிக்கமுடியவில்லை
கனவின் தொடர்ச்சியிலிருந்து
அறுபட்டுத் பிரிந்ததுபோல
பாதிரியாரின்
" அல்லேலோயா " என்ற வார்த்தை
தூக்கத்தின் விழிப்பாகியது
தேவாலயம் முழுவதும்
பிரகாசமான வாழ்வின் சுருணையுடன்
தொங்குவிளக்குகள்
என் கடவுள் நம்பிக்கைகளோ
மிகவும் குறைந்த
பழுப்பு நிற வெளிச்சத்தில் கிடக்கிறது,
குந்தியிருக்கப் போடப்பட்ட
வேம்புக் கதிரைகளில்
மழையில் நனைந்து
சற்று முன் வெய்யிலில் உலர்ந்தது போல
எல்லா இடத்திலும் சுத்தமான
வெட்கப்படவைக்கும் மினுமினுப்பு
ஜோசனைகளில் நானோ
குப்பையாகவிருந்தேன்
பியானோ வாசிக்கும் இளம்பெண்
கண்ணை விட்டு அகலவில்லை
அவள்
பொன்நிறக்கூந்தல் முறுக்கேற்றியது
பாதிரியார் இப்போது
மரியாமத்தலேனாவை
ஜேசுநாதர் மன்னித்த கதை சொல்லுகிறார்
எண்ணநடையை நிறுத்தி
அதையே கேட்டுக்கொண்டிருக்கிறேன்
வழித்தவறுதலுக்குத் தடுப்பாக
சில வார்த்தையோடு
ஆமென் என்று சொல்லி ஒத்துக்கொண்டு
இருக்கையிலிருந்து எழுந்து
மறுபடியும் வீதிக்கு வந்துவிடடேன்

.
......................................................................................
.

பிரிவு நாளின்
பயங்கரமான சொல்லாடலைக்
கிளப்பிக்கொண்டு வந்துவிடும்
பழைய ஞாபகம்.!

.

............................................................
.
கடைசி இரவுப்பேருந்து
மெல்ல வெளிக்கிட்டு
கும்மிருட்டுப் பாதையில் ஏறி
முன் வெளிச்ச உமிழ்வுகளோடு நகருது,
நெருக்கமான இருக்கையோடு 
முழங்கால்கள் இடிக்காதவாறு
நான்
குறுகி ஒடுங்கியிருக்கிறேன்,
ஜன்னல்களில்
பனிகலந்த மழைத்துளிகள்
தூக்கத்தைத் தட்டி எழுப்ப
குதிக்காலைச் சூடாக்கிக்கொண்டிருக்கிற.
மிதமான வெப்பம்
நினைவுகளைத் திடுக்கிடவைத்த
ஒட்டுமொத்த திட்டையும் வேண்டிக்கொள்கிறது
இந்தப் பயணத்திலு ம்
பாதைகள் பழகிய கோடுகளில்
முழுமைக்கும் கட்டுப்பாட்டுடன்
செலுத்துனர் கைகளை உதறிக்கொள்கிறார்
முன்னிருக்கையில்
நீண்ட பகலோடு கொஞ்சம் மேலதிகநேரம்
உழைத்துக் களைத்த
இளம்பெண்ணின் வியர்வைக்கூந்தல்
மூச்சில் ஆதிக்கம் செலுத்த
எவருமில்லாத இருக்கைகளில்
அக்கறையில்லாத
நடுநிசிக் காலத்தின் வாசனை!

.
................................................................................
.
விடிந்தால்போதுமென்பதில்
தீர்க்கமான தெளிவுடன்
விடிவெள்ளி 

நட்ச்சத்திரங்களும்
அடிவானத்துடன் 

ஒப்பீடுகள் செய்யவில்லை,!
.
....................................................................................
.
சென்றடையும் இடம்பற்றிய
நம்பகத்தன்மையில் குழப்பமில்லை
அதனாலோ தெரியவில்லை
" நானென்றாலது நானும் அவளும் "
என்ற பாடலை முனுமுனுத்துக்கொள்கிறேன்.
அது 

பேருந்தின் அசைவோடு
குரல் எடுத்து எதிர்பார்த்த மாதிரியே
தனிமையை நிரப்பிவிட
இன்றைய இரவின் கதையை
முடித்துவைத்துத் 

திருப்திப்பட்டுக்கொள்கிறேன்!
நாளை
இன்னொரு பின்னிரவு !
இன்னொரு இயந்திரப்பயணம் !
இன்னொரு பழையபாடல் !
இன்னொரு பகல்க்கனவு !

.
...............................................................................................
.

வந்து போன பாதைகளில்
கடினமாயிருக்கும்
காற்றை லேசாக்கிவிடும்
புல்லாங்குழல்.  !

.

.............................................................
.

ஹ்ம்ம்
விபரிப்பில் 

சம்பந்தமேயில்லாததெல்லாத்தையும்
புள்ளியொன்றில் ஒருங்கிணைத்து
முடித்து வைப்பதுக்கு
ஒரு
சின்னக் கவிதை
திணறிக்கொண்டிருக்கலாம் !

.
.


Friday, 5 January 2018

இன்னும் இடைவெளிகள் உள்ளது...!

" தமிழைப் பொருத்தவரையில் எல்லோருமே முப்பது வயசுக்குள்ளேயே இந்த ஒழுங்கமைப்பை ஏற்றுக்கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள். எந்தக் கவிஞன் குடித்துவிட்டு வீடு திரும்பாமல் இருக்கிறான். எந்தக் கலகக்காரன் அண்டை வீட்டாரோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். ஏன் எல்லாக் கவிஞர்களும் சொந்தத்திலேயே கவிதைத் தொகுதி வெளியிட வேண்டும். எந்தக் கவிஞன் நூலக ஆணைக் குழுவில் கவிதை புஸ்தகங்களை எடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதிக் கேட்கிறான். எல்லாமே ‘சிஸ்டம் ‘தான், இல்லையா. "  


                                                         இப்படி எழுதியிருப்பார் கவிஞ்சர் நம்பி எனப்படுகிற  விக்ரமாதித்யன், நியாமான கேள்விதான் இல்லையா ?

                                                      நிறைய எழுதிக்கொட்டியும்   இன்னும்தான்   தமிழ்  மொழியில்  உள்ள உணர்ச்சி உரசும் வார்த்தைச்  சூட்ச்சுமம்  அபூர்வமாகவே என் மனதைத் தொடுகின்றது. தமிழ் மொழியில் உரைநடை இலக்கியம் உள்வாங்கிய அளவு கவிதைமொழி அதிகம் பரிசோதனை செய்யப்படவில்லை என்று நினைப்பது.   கவிதை என்பதுக்கும் உரைநடை  என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. 

                                                                நல்ல கவிதைகள் என்று பொதுவாக கருதப்படுபவை எனக்கும்  எப்பவுமே விசேஷம்தான் . அதை ரெண்டு மூன்றுமுறை திருப்பி நேரமெடுத்து வாசிக்க வேண்டும் போலிருக்கும். அனுபவத்தைப்    பொறுத்தவரை என் அலைவரிசைக்கு ஒத்து வரும் பல  அமர்க்களமான கவிதைகளை  நான் ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன். தினம் தினம்  முகநூல் வாசலில் வந்து விழும் நூறு மல்லிகைப்பூக்களில்  நாமேதான்  நல்ல கவிதைகளைத் தேடிப்பிடித்து  படிக்க வேண்டி இருக்கிறது.  
.

ஒவ்வொரு முறையும் 
நான் 
சேமித்து வைத்த வார்த்தைகள் 
வேறெங்கோ சேர்ந்து 
புகழ்பெற்று 
புல்லரிப்பாவுகளாகவே பரவுகிறது. 
சகித்துக்கொண்டு போனாலும் 
நிரந்தர இழப்பென்னும் 
மறக்க முடியாத 
ரகசியக் கதவுகளின்பின் 
உள்ளூர உடைவு நிகழத்தான்செய்கிறது 
அதுவும் 
ஒவ்வொரு முறையும் 
உந்திச்செலுத்துவதாக 
உறுதிமொழிகள் தந்த வார்த்தைகள் 
பெரிதான வாஞ்சையுடன் 
இன்னொருவரிடம் 
அடைக்கலமாகிவிடும் போது !

.
......................................................................................
.

நீங்கள் 
அதிகமதிகமாய் 
சகிப்புத்தன்மையிழந்து கொண்டே 
விமர்சித்த போதெல்லாம் 
பிரியங்கள் 
இல்லாத ஒரு ரகசியத்விடத்திலதான்
உங்கள் இஷடப்பட
இருத்திவைத்திருந்தீர்கள் ,
ஆராதனைகளுக்கும்
அழகியலுக்கும் இடையே உள்ள
முரண்பாடு உறுத்திக்கொண்டேயிருந்தது .
நிறைவேற்ற முயன்று முடியாமல்
காலம் தாழ்த்தி வரும்
இரங்கல்களில் அனுதாபங்களை
அப்போதும் தேடியதேயில்லை !

.
..........................................................................
.
இன்றைக்கு வரைக்கும்
நியாயமாகவும்
வணங்காமுடித்தனமாவும் தெரிகிற
நான்
முற்றிலும் மாறிவிட்டதாக
அதீத தோழமை உணர்வுடன்
நீங்கள்
பிரகடனம் செய்த போது
உங்களுக்காக இவ்வளவுநாள்
வளைந்து கொடுத்த
பழைய பாதையிலிருந்து
எனக்கான
தனித்துவ இலக்குகளை
தேர்ந்தெடுத்தது பற்றி அறியாதிருக்கலாம் !

.
.......................................................................
.
நீங்கள் விரும்பும்
ஆனாலும்
பரிச்சயமான கோணத்தில்
நீங்கள் தேர்வுசெய்யும்
குறியீடுகளில்
இந்தப் பிழையைச் சரிசெய்ய
இன்னும் இடைவெளிகள் உள்ளது...!

.
..........................................................................................
.
கடந்துபோய் 
ஒரு
கணப்பொழுதின் 
எண்ணங்களை மறந்துவிட்டேன் என 
உண்மையாகவே ஒத்துக்கொள்ள 
எத்தனை பெரிதான 
ஆற்றமுடியாத துயரத்தை 
ஆத்மா சுமந்து வந்திருக்க வேண்டும்? 
நினைவுகளைப் பிரட்ட விரும்பாத 
அது குறித்த 
ஏக்க மனதைவிட 
கலவரமான விஷயம் வேறில்லை!

.
.............................................................................
.
பிரித்தறியமுடியாத வாசனையோடு 
ரெயில் பயணத்தில் 
என்னருகில் வந்திருந்தாள் 
எங்கேயோவொரு வயதில் பரிச்சயமான வாசனைதான் 
இப்போது 
வயதாகியதால் வாசனைகளும்
உணர்வுக்குள்
மாறிக்கொண்டிருக்கிறதால் மங்கிவிட்டதா ?
கொண்டை போட்டு
கலியாண வீட்டுக்கு வெளிக்கிட்ட
சுமங்கலி நாட்களின் வாசனையா ?
சரியாக சொல்லமுடியவில்லை !
ஓடிக்கொண்டிருக்கிற
நாலு பக்கமும்
கசிந்துகொண்டிருந்து அந்த வாசனை
ஏகாதசிக்குப் பிடுங்கிய
துளசி இலைகள் திறுநீரோடு
சேர்ந்து கொண்ட வாசமா ?
அதுவும் தெளிவில்லை !
தண்ணி போலவே
தளும்பிக் கொண்டிருந்தது அந்த வாசனை
வீட்டு முற்றத்தில் பூத்துக் குலுங்கிய
நந்தியா வெட்டையும் கனகாம்பரமும்
கதைத்துக்கொண்ட வாசனையா ?
அதிலும் விபரமில்லை !
என்னை விழுங்குவதுபோல
நகர்ந்து கொண்டிருக்கிற நேரம் .
இயல்பாய் செயல்பட ஆரம்பித்து .
மூச்சுமுட்ட சுவாசித்து
சேமித்துக் கொண்டிருந்தேன் !
தலை துவட்டிய ஈரத் துவாயின் வாசமா ?
இருக்கவே முடியாது
என் நானும் நானும் ஒரு வாசனையே !
தலையைக் குனிந்தபடி
கடினமான அசௌகரியமாகவிருந்தும்
உள்சுவாசத்தில் உல்லாசமாகிகொண்டிருந்தேன் !
அல்லது
தள்ளி விலத்தி நின்ற
அந்த மூன்று நாட்களின் அவஸ்தை வாசனையா ?
ஹ்ம்ம்
இலகுத்தன்மையோடிருக்கிறதால்
எத்திசையிலும் நகரமுடிகிற தீர்மானம் !
வெட்கத்தை த் தள்ளிவிட்டு
அவளிடமே கேட்டிருக்கலாம்
அதட்குள் அவள்தான் எழுந்து போய்விட்டாளே !

.
...........................................................................................................
.
எனக்குக் 
கொஞ்சமும் தெரியாமலேயே 
எனக்குள்ளேதான் நுழைந்துவிடுகிறது 
நீட்ட முடியாத கால்களின் 
வலி ,
முடிவு வரும் வரையில்
சமாளித்துவிடலாமென்கிற
சிநேகிதமான சமாதானம்
கலங்கல் நீரில் விழும் .
வெளிச்சங்களில்லா நிழல்,
ஒவ்வொரு
ஏமாற்றங்களுக்கும்
எதிர்பார்ப்புகளுக்குமிடையிலான
விழித்தபடியிருக்கும் அலைக்களைப்புகளில்
மனசிலும் இறுக்கிக் குத்திவிடுகிற
பரிதவிப்பு
எந்த எதிர்ப்புமின்றி அப்படியே சாய்ந்துவிடுகிறது, 

.
..........................................................................................................
.
எழுதியேவிடுவதென்று 
ஆயத்தமாகிவிடும்போதோ 
அல்லது 
தள்ளிப்போடும் உத்தேசங்கள் 
சோம்பலாகியே வீழும் போதோ 
தவறாமல்
பலசொற்கள் கடத்தப்பட்டுவிடுகிறது

.
............................................................................
.
அளவுக்கதிகமான சோம்பல்களுடன் 
இன்னும் கொஞ்சம் 
அலுப்புகள் சேர்த்துக்கொள்ள 
தற்செயலாக வெய்யிலைப் பார்த்தேன். 
கண்ணுக்குள் 
நேராகவே குத்தி
இப்போதே எழுந்துவிடு என்றது .
ஒரு
வெய்யில் விடியலில்
அசதியாகத் தூங்குபவன்தான்
உலகத்திலையே உருப்படாத உதவாக்கரை
எனக்கு நானே சொல்லிக்கொண்டே 

எழுந்துவிட்டேன்.
.
.....................................................................................
.
ஒரு
விடிகாலையில் வெய்யிலின் உத்தரவாதங்கள்
ஒரு நாள் முழுவத்துக்குமான
உட்சாக விநியோகம் ,
ஸ்டோக்ஹோலம் நகரம்
இன்று
வெய்யிலில் அபரிமிதமாக குளித்தெழும்பும் போலிருக்கு,
மையத்தைக் கடக்கும்போது
முகத்தை
மஞ்சள் நிறத்தோடு கொடுத்துக்கொண்டிருக்கும்
மனிதர்களின் ஆசுவாசத்தை
என்
மஹாலக்ஸ்மி விழுத்தியது திருப்தியே,
இப்போதைக்கு இது போதும்!
பின்மாலையில்
தென்மேக்குப் பருவக்காற்று
கொஞ்சலின் தூறல் போட்டு,
ஏப்பிரல் மழை
மந்தார வானத்திலிருந்து மெல்லவே
பெய்யுமென்ற
வானிலை அறிக்கையை
அதிகம்
கணக்கில் எடுக்கவேண்டிய அவசியமில்லை !

.
........................................................................................................
.
ஒரு
முழுமையான நாளை
முந்திக்கொள்ளும் இரவுகளும்
பிந்தி எழுந்துகொள்ளும் பகல்களும்
சுவாரசியமான இடத்திலிருந்தே
அசைக்கும் பயணங்களில்
தயவுசெய்து
என்னுடைய இடத்தில்
நீங்களாகவே
உட்கார நினைக்கவேண்டாம் !

.
..........................................................................
.
இப்போதுதான்
வயதை விட 

எதையாவது
சாதித்தேதீரவேண்டுமென்று 

தெரிகிறது.!
.
.............................................................................
.
இளவேனில் பருவத்தில்
பூக்கக் காத்திருக்கும் 

டுயூலிப் மலர்களோடு .
என் கால்களிழும்
பலங்களை 

சேர்த்துக்கொள்வதென்னவோ
இரண்டு கைகளையும்
தீர்க்கமாக இறுகப்பற்றுவது போல
இப்படியாவது உணரமுடிவதே
இந்த நிமிடத்திலும்
பெரிய நம்பிக்கைதரு விஷயம்தான் !

.
........................................................................................
.
ஆச்சரியம் கொடுக்கும் அனுபவம் 
நுட்பமான தந்திரம் 
மனதை வடித்துவிடும் முடிவுகள் 
இவற்றோடுதான் 
எப்போதும் 
ஆழமான மனப்பதிவுகளாக 
கனவுமுடிகிறது !

.
.....................................................................................
.
நிறங்கள் அடர்தியானவொரு 
ஓவியத்தின் 
இருட்டின் நிழல்த் தெரிவுகள் 
அருகருகில் தடுமாற்றமாய் நிக்க 
இப்போதைய தேவையெல்லாம் 
ஒரு 
மூலையிலாவது 
பதுங்கியபடியிருக்கும் 
வெளிச்சங்களைத் தேடியெடுக்கும் 
முயட்சி மட்டுமே !

.
..................................................................................
.
என் 
முகவரி பிரபலமில்லை 
இப்போதும்தான் 
அதுவொரு கைவிடப்பட்ட பாதையொன்றில் 
காலத்தில் பாழடைந்த 
முகப்புக் கதவில்
நைந்துபோன எழுத்துக்களில்
அறையப்பட்டுத்
தொங்கிக்கொண்டிருக்கு
வீட்டிலக்கம் !
அதனாலோ தெரியவில்லை
அதிகம்பேர் தேடிவந்ததில்லை
நேசத்துக்குரிய வாசனைகளோடு
தட்செயலாக கண்டுகொணடவர்கள்
தயங்கியபடியே
மரணத்தைப் பார்ப்பது போல
உள்ளே எட்டிப்பார்த்தார்கள் !
என்
தனிமைக்கு இந்த ஒதுங்கிப்போதல்
மிக இயல்பாகப் ஒத்திசைந்ததால்
இன்றைவரையில்
அப்படியேதான் விட்டுவைத்திருக்கிறேன் !
சில நேரம்
அதீதமான இருட்டின் பின்னே
பிரகாசமான
தொலைதூர நடச்சத்திர வெளிச்சத்தை
அடையாளம் கண்டு
உங்களில் ஒருவர் கதவுதட்டி
என்
விலாசம் சரியாவென வினவலாம் ,
மன்னித்துக்கொள்ளுங்கள்
என்
நிசப்த இடுகாட்டு
அமைதியைக்குலைக்கும் யாருக்கும்
நான்
உள்ளிருந்து பதிலளிக்கப்போவதில்லை !

.
..................................................................................................
.

குளிருக்கு 
மாங்கல்யத் தாலிகட்டி 
பதிவிரதைப் பவ்யத்துடன் 
வாழ்நாளெல்லாம் வாழ்க்கைப்பட்ட்து போல 
வெய்யிலின் சூடான 
கோடை அரவணைப்புகளையும்
துளிர்கள் வயதுக்குவரும்
வசந்தகால வரவுக்கான முன்னறிவிப்புகளையும்
பறவைகளின்
பாடல்கள் அரங்கேறும்
கிழக்குவான உட்சாக உதிப்புகளையும்
மேகங்களே விரும்புகின்ற
பின்னந்தி மயக்க முழுக்குகளையும்
விதண்டாவாதமாக
தள்ளி வைத்து கொண்டிருக்கும்
நகரத்தில்
நானிருக்கிறேன் !

.
.....................................................................................

எதிர்பார்த்த வேகத்தைவிட 
தயங்கியபடியே 
எத்தனையோ வருடங்கள் 
அலைக்கழித்தும் கலையாமலிருந்த
அந்த சந்திப்பு 
இரண்டு புள்ளிகளை இணைக்குமிடத்தில்
தூக்குமாட்டிய தற்கொலை போலிருந்தது!
ஒன்று
அமரஜீவிதக் காதலும்
அசட்டுத்தனமான காமமும்
நேரடியாகவே சம்பந்தப்பட்டது !
இரண்டாவது
குற்றமும்
அதுக்கான தண்டனையையும்
மேலோட்டமாக உரசிச் செல்வது !
ஆனால்
ரெண்டையும் சேர்த்து
அந்தப் பழைய சம்பவம்
ஒரு
நேர் கோட்டில் மேலும்கீழுமாகவே
தலைகீழாக அறையப்பட்டிருந்தது !

.
..................................................................................
.
எனக்கு
கட்டுப்பாடுகளிலும்
சுதந்திரத்திலும்
காற்றில் பறப்பது போன்ற ஆயாசங்கள்
அப்போதெல்லாமிருந்தது !
மறப்பதை விடவும்
மன்னிப்பதில் குறியாகவேயிருந்தேன் !
நேர்தியாகத் திட்டமிட்டு
நகர்த்திய வியூகங்களைப்
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை !
ஆனாலும்
ஒரு கட்டத்தில்
அவள் உடைந்துபோய்க்
குமுறி அழுத நிமிடத்தை
இப்பவும்
பொக்கிஷமாகவே சேகரித்துவைத்திருக்கிறேன் !

.
......................................................................................
.
ஒரு 
பகல் பொழுதில் 
அலைகழிந்தே கழிந்துவிடும் நேரம் 
இருட்டில் தான் 
அதிகமான இடங்களை ஆக்கிரமிக்குது 
ஒரேயொரு 
மெழுகுதிரி தியாகமாகிடும் 
வெளிச்சச் சிதறல்களை 
நெஞ்சோடு நெருக்கமாக்கி 
ஒன்றுவிடாமல் சேகரித்து வைத்து 
ஒரு 
வாழ்வின் கதையை எழுதிவிட நினைக்கிறேன்
.
................................................................................................
.அதன் நிறம் 
என் கண்களுக்குத் தெரியவில்லை 
ஆனால் 
அந்த இரவு ஊதா நிறத்தில் 
விடியும்வரை முணுமுணுத்துக்கொண்டிருந்தது. 
எப்படிச் சரியாகச் சொல்லமுடிகிறதென்றால் 
அதை நானே 
என்னில் ஒருபகுதியாக உணர்ந்தேன்.
என் 
அடுத்த ஆத்மாவின் பகுதியில் 
கவிதை எழுதும் உட்சாகமெலாம் 
வறண்டுபோயிருந்தது, 
குளிர் காற்றின் 
கிசுகிசுப்பையும்
ஈரமான தீண்டலையும்
தேவதைகளை வர்ணிக்கும் 
தெய்வீக பாக்கியங்களையும் 
வசனங்களின் நடுவில் 
ஊடுருவி எகிறிப்பாயும் வல்லமையெல்லாம்
அதுக்கு நிராகரிக்கப்பட்ட 
நிபந்தனைகளாவேயிருந்தது . 
எண்ணங்களை மாற்றியமைப்பது பற்றியும் 
அதுவாகவே 
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.!
ஏதோவொரு 
கவிதைப் புத்தகத்தில் 
அது 
சத்தமில்லாமல் 
அடங்கிப்போயிருக்க வேண்டும் !
அல்லது 
உங்கள் சந்தேகப் பார்வையைச் 
சுண்டியிழுத்துக்கொண்டே 
அது இறந்தும் விடலாம் !
.
........................................................................................
.
தொலைபேசி இணைப்புகள்தான் 
இப்போதும் 
உடன்பிறப்பு உறவுப்பாலத்தை இனைக்கக் 
விருப்பமோடு காத்திருக்கு
நானாகவே நானிருக்கும் 
பழக்கத்தை வழக்கமாகி வைத்திருப்பதால்
அந்தப்பக்கத்தில்
நீங்கள்
உருவாக்கி வைத்திருக்கும்
அளவுக்கதிகமான ஆடம்பரங்களில்
எனக்கு
ஆச்சரிய அக்கறைகளில்லை !
.
..................................................................................................
.
அந்த 
தடுப்புகள் தேவையற்ற இளமையான 
தாய்லாந்துக்காரி 
இரவுகள் தந்துசெல்லும் 
மன்மத வாடைகளோடு 
வயதான மனிதரை
இறுக்கி இறுக்கிக் கொஞ்சுகிறாள்,
அவரோ
சொத்துப்பத்தெல்லாம்
எங்கோ எழுதித் தொலைத்ததுபோல
ஆயாசமாகவிருக்கிறார் !
அந்த சவுகரியமான
சரிவு இருக்கை ரெயில்பெட்டியில்
எங்கள்
மூவரையும் அநாதையாக்கித்
தவிக்க விட்டுக் கொடுத்துக்கொண்டு
குமஞ்சான் வாசம்
விசிறிப் பரவிக்கொண்டிருந்தது!
தாய்லாந்துக்காரி
தொடுதிரையில் வந்துகொண்டிருக்கும்
குறுஞ்சசெய்திகளுக்கு
சொண்டு இளகிவிடுவதுபோலச் சிரித்து
உடனுக்குடன் பதில் அனுப்புகிறாள்,
அது
இன்னுமொரு
வலையில் சிக்கிய
பணக்கார முதியவராக இருக்கலாம் !
மத்தியான ரெயில்
உயிர் உள்ளவரை தொடர்வது போல
மெதுவாக நகர்த்துக்கொண்டிருக்க
நான் அவளையே
பார்ப்பதை அவளும் பார்த்தாள்,
வயதானவர்
உறவுக்கென்ன அர்த்தமென்ன என்பதுபோல
ஜோசித்துக்கொண்டிருந்தார்,
அவள்
ரெண்டாம் முறை
முறைத்துப் பார்த்தபோது
உள்ளடக்கப் பண்புக்கூறு
மனசாட்சியை உரசியதால்
ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன் !
காடுவெட்டிகள்
வயதான மரங்களை
வெட்டிச் சரித்துக்கொண்டிருந்தார்கள்.....!
.
....................................................................................................
.
செய்வினை சூனியம் போலவே
வேகமெடுத்துக் கடந்த காலம்
நினைவுகளை சுற்றிவைத்து
எதிர்காலத்தை
சூனியமாக்கிக்கொண்டிருப்பதிலிருந்து
தப்பமுடியவில்லையென்பது உண்மைதான்!
அவ்வளவு இலகுவாக
வரட்டுக்கவுரவதை உதறவிட்டுப் பேசுவத்துக்கு
உங்களையே ஆட்டுவிக்கும்
மனதில் உத்தரவுகள் இல்லை !
ஆனாலும்
உங்களுக்கேயுரித்தான
நேரமில்லை என்ற சமாளிப்பில்
நேர்மைகள் இல்லவேயில்லை !
.
.............................................................................................
.
தெருச்சுவரில்
அபத்தமான ஓவியம் வரைபவன்
தயங்கித் தயங்கிய
கோடுகளையும் புள்ளிகளையும்
சில கோணங்களையும் 
பல வளைவுகளையும்
சில பல சுழிப்புகளையும்
இணைத்துக்கொண்டிருக்கிறான் ,
வீடில்லாதா செய்திகள்
அவனின்
கலைந்த கற்றையான தலைமயிரிலும்
குளிப்பு முழுக்கு இல்லாத
விட்டேந்தியான வியர்வை வாசனையிலும்
முன்னுரை எழுதிக்கொண்டிருக்கு,
அவனின்
நிறத்தெரிவுகள்
அவனின் மனப்பிறழ்வுகள் போலவே
புரியமுடியாமலிருந்தது !
இந்தச் சுவர்
அவனுக்கென்றே பிரத்தியேகமான
தோல்விகளில் விடைதேடும்
நாட்க்குறிப்பாகவிருக்கலாம் !
சொல்ல முடியாத
வார்த்தைகளை அவன் காயப்படுத்தாமல்
மிக மிக மென்மையாகவே
மை விசுறும் கொள்கலனை
அசைத்துக்கொண்டிருக்கிறான் !
நான்
கொஞ்சநேரம்தான் அவடத்தில்
முழங்காலில் குந்தியிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்
ஒரு
பெரிய கதையைப்
பகுதி பகுதியாக்கிப் புகுத்தி விடும்
நேர்மையான நேர்த்தியில்
நான்
இதுவரையில் வாழ்க்கையை வலிந்து
எழுதிய எல்லாக கவிதைகளும்
அர்த்தமிழந்துவிட்டது !
.
............................................................................
.
ஒரேயொரு
அழைப்பில் சொல்லிமுடிக்காத
இழப்புக்களின் பெறுமதியோடு
என்
தொலைபேசி இலக்கங்கள் சரியாகவே
இயங்கிக்கொண்டிருக்க
இந்தப் பக்கம்
இப்பவும் அப்பவும் எப்பவும் போலவே
நிறைய அன்புடன்
ஏங்கிக்கொண்டிருக்கிறேன் !
.
...........................................................................................
.
ஒரு பயணத்தின் முடிவு
இன்னொரு வாசலின் தொடக்கம்
இடைப்பட்ட
யாத்திரையின்
சொட்ப கணங்களுக்குள் சிக்கியுள்ள 
நம்பிக்கைகளை விபரித்துச்
சொல்லவேமுடியவில்லை !
நீண்டகால சந்தேகம்
தறிகெட்ட தற்பெருமை
ஒரு
திடீர் திருப்பத்தில்
இன்னுமொரு நம்பமுடியாத இடத்துக்கு
நாளையையும்
நகர்த்திவிடலாம் !
.
.....................................................................................
.
தேடுவாரற்று
ஓரக்கிடந்த சொற்கள்தான்
ஆச்சரியமாக விழிகளை உயர்த்தி
ஒரு
சலிப்புகள் மீதமாகும் 
மத்தியான வெயில் நாளில்
ஒரு
வாழ்விழந்த பெண்ணின்
முதிர்ச்சியடைந்த பொறுமையில்
ஒரு
ஆதரவுகளை அள்ளித் தருகிற
பின்மாலைப் பொழுதில்
ஒரு
குழந்தையின் விளக்கமுடியாத
கண்களின் வியப்பில்
ஒரு
நினைவுகளை நனைத்து
மூசிப்பெய்யும் மழைநாளில்
ஒரு
முகஸ்துதி விரும்பாத மனிதனின்
அழுத்தமான உதட்டசைவுகளில்
ஒரு
தடுமாற்றமில்லாமல் நெருங்கும்
கிளர்ச்சியான இரவில்
ஒரு
புரியமுடியாத உலகத்தின்
ஒட்டுமொத்தமான பேரழகில்
ஒரு
முக்கியத்துவம் கொடுத்து
பேரம் பேசிய சம்பவத்தோடு
ஒரு
ஒப்பீடோடு முரண்பட்டுக்கொண்டிருக்கும்
கட்பனைகளிடம் போய்ச் சேர்ந்து
இப்படியேதான் மறுபடியும்
ஒரு
கவிதையாகிவிடுகிறது !
.