Friday, 5 January 2018

அசிப்பான் நாட்பது மில்லிகிராம்


சேலை கட்டாத மேலைநாட்டுப் பெண்களின் கண்களில் புத்திசாலித்தனமும் துணிவும் தெரியும் என்று மேலைநாட்டவர்கள் எப்போதும் கெப்பமாக சொல்லுவார்கள். நம்ம நாட்டு இன்னிசை இளம் அணங்குகளோ கயல்விழிக் கண்களில் நவரசங்கள் காட்டிப் பரதநாட்டியம் ஆடி உலகம் மறந்து ரசிக்க வைக்கிறார்கள் . நம்ம நாட்டுப் பெண்களிடமும் தைரியமும், தந்திரமும் இருக்கத்தான் செய்கிறது. என்ன அவர்கள் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பில்த் தலையைக் குனிவதால் அதைச் சரியாகக் கவனிக்கமுடிவதில்லை.

                                                              முதன் முதலில் பார்த்த எடுப்பில அவளை டாக்டர் என்றுதான் நினைச்சேன். ஒரு வைத்தியருக்கு உரித்தான அங்க அடையாளமாகிய பூனை நடை, பளிச்சென்ற உடை, தீர்க்கதரிசியின் பாவனை எல்லாமே சட்டப்படி சாமுத்திரிகா இலட்ச்சனமாய் இருந்தது. நடை ,உடை,பாவனையில் மேட்குறிப்பிட்ட எல்லாம் பொருந்தியிருந்த அந்த இளம் சுவீடிஷ் டாக்டரின் ஆழிக்கடல் நீலக் கண்களில் அளவுக்கு அதிகமாக அவிட்டு விட்டு ஆடுற ஆர்வக்கோளாறும் இருந்தது
                                                                   அவள் கதைத்த சுவிடீஷ் பேச்சு மொழிக்கு உச்சரிப்பும் அவள் உதட்டசைவுகளும் சம்பளம் இல்லாத சேவகனும் கோபமில்லாத எசமானும் போல நிறையவே பிடுங்கல் இல்லாத ஒற்றுமை இருந்தது. ஆனால் அவள் கதைத்தது அரைவாசிக்குமேல் எனக்கு விளங்கவில்லை.
                                                                 தென்கிழக்கு சுவீடனில் உள்ள ஸ்கொனே என்ற பிரதேச வட்டார வழக்கில் உள்ள ஸ்கொன்ஸ்கா என்ற ஆதியான சுவிடீஷ் மொழியில் அவள் பிடிகொடுக்காமல் கதைத்தாலும் உச்சரிப்புகளை டேனிஷ் மொழிபோல கொடுப்புக்குள்ளே சப்பித்துப்பிக் கதைத்தாள். அந்த ஸ்கொன்ஸ்காவில் லுண்ட் என்ற தொன்மையான கலாச்சார விழுமிய அடையாளங்கள் இருந்தாலும் மத்திய கால சுவீடனில் அது ஏழை விவசாய நாட்டுப்புற மக்கள் தெம்மாங்கு பாடிய மொழி என்று சொல்லலாம் .
                                                                என்ன நல்ல குறட்டை விட்டு நித்திரையில் இருந்தவனை எழுப்பிச் சிரிக்கவைக்கக் கதை சொன்ன மாதிரி இலக்கில்லாத அலட்டலில் பினாத்துறேனா ? சரி உங்கள் பொறுமையைச் சோதிக்காமல் சடக்குப் புடக்கு என்று சக்கடத்தார் போல கிணத்துக்குள்ளேயே குதிக்கிறேன்.
                                                                     கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது போல உடம்பு நாம் நினைத்தபடி எப்போதும் மத்துப் போட்டுக் கிண்ட வளைத்து கொடுத்துக்கொண்டே போகாது. அது சில நாட்கள் அதன் விருப்பப்படி ஏதாவது அவஸ்தை கொடுத்துக்கொண்டுதானிருக்கும் . அதனோடு நடக்கும் சம்பவங்கள் நகைச்சுவையாகக் கலந்தடித்து அனுபவங்கள் தந்தாலும் அது வரும்போது சில நாட்கள் வாழ்க்கை பற்றிய எல்லாக் கணிப்புகளும் பிழைத்துப் போய் ஆரோக்கியம் எவ்ளவு முக்கியமென்று ஜோசிக்க வைக்குது. அதுவும் வயதாகும் போது அதுபற்றிய பயம்கள் குழல் விளக்குத் திரியைப் பத்த வைக்குது .
                                                                   சென்ற மாதம் வயிற்று நோவு காரணமாக ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு இரவும் பகலும் தங்க வேண்டி வந்தது. சுமாரான வைத்திய வசதிகள் உள்ள ஒரு நடுத்தரமான ஆசுப்பத்திரி அது. என்னுடைய நோயின் தன்மை அவ்வளவு ஒன்றும் பதறியடிக்கும் அவசரக் கேஸ் இல்லாததாலும். நானே உருவாக்கி வைத்திருக்கும் வேறுசில சமூகஉதவிச் சிக்கல்கள் காரணமாயும் ஆரம்பத்தில் சிறந்த வைத்திய நிபுணர் உதவி கிடைக்கவில்லை. ஒரு இளம் சுவீடிஷ் நடன நர்த்தகி நேர்ஸ் தான் கேள்விகளும் பதில்களும் பின்தொடர எனக்கு உதவி செய்யும்படியான நிலைமை இருந்தது.
                                                                             அந்த நேர்ஸ் எங்கள் ஊரில் டாக்டருக்கு பின்னுக்கும் முன்னுக்கும் ஆராத்தி எடுத்துக்கொண்டு கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கிக் கொண்டு திரியும் அரைப்பாவாடை சட்டை போட்ட நேர்ஸ் போல இருக்கவில்லை . இவள் பிரத்தியேகமான மென் நீலநிற மேட்சட்டை அணிந்து,,,கீழே நேவி நீலக்கலரில் நீண்ட காட்சட்டை உடுத்திக்கொண்டு , நிறைய கலர் கலரான பிளாஸ்ட்டிக் அடையாள காட்டும் டாக்டர்மார் போலவே கழுத்தில தெதாஸ்ஸ்கொப்பும் கொழுவி இருந்தாள். இடுப்பு நார்ப்பட்டியில் பிளாரென்ஸ் நைட்டிங்கேல் தாதியர் விருது வென்ற மணிக்கூடு செருகி இருந்தாள்.
                                                                         நான் கையைக் காலை ஆட்டிக்கொண்டு ஆரோக்யமாகப் போய் அவளுக்கு முன்னால் கதிரையில் இருந்ததைக் கவனித்தாள் . பிள்ளையார்காப்புப் போல டாக்டர்மார் வழக்கமாகக் கேட்கிற முதல் கேள்வியான
" எத்தினை நாளாக இந்த அசவ்கரியம் உனக்கு வயித்தில நோவாக இருக்கு "
                                                                                                                   என்று ஸ்கொன்ஸ்காவில் கேட்டாள். அதுவே ஒரு மாதிரி ஒரு மாதத்துக்கு இழுக்கும் போல இருந்திச்சு
" ஒரு கிழமையா இந்த உபத்திரவம் போட்டு உலைக்குது டாக்டர் "
" வேற என்னவும் நீண்டகாலப் பிரமானத்தில் வருத்தம் இருக்கா,,என்ன என்ன மருந்துகள் எடுக்கிறணி,,,சொல்லுப்பா "
" அதில ஒன்னும் குறைச்சல் இல்லை..... இருக்கு ....இருக்கு.....மருந்து.....மருந்து போடுறனான் டாக்டர் "
" ஓ..அப்படியா,,,.முதல் பல்ஸ் பார்ப்பம்...இரத்த அழுத்தமும் பார்ப்பம் ,,ரத்தமும், சிறுநீரும் எடுக்க வேண்டும் செக் செய்ய "
" உயிர்த் தவிர வேற என்ன எண்டாலும் எடுத்து செக் செய்யுங்க டாக்டர்.. எதுக்கும் சம்மதமே டாக்டர் "
" ஏன்பா என்னைப் பார்த்தா டாக்டர் போலவா இருக்கு, நான் டாக்டர் இல்லைப்பா,,நேர்ஸ்,,கொஞ்சம் டாக்டர் அளவுக்கு கிட்டத்தட்ட படிச்சு இருக்கிறோம்,,"
" ஓ..அப்படியா,,"
" பிராக்டிகல் அதிகம்,,அதால உன்னை முதல் பரிசோதனை செய்யும் அதிகாரம் இருக்கு,,அவளவுதான்பா "
" எங்கட ஊர்ல தெதஸ்ஸ்கொப்பு கொழுவின எல்லாருமே டாக்குத்தர்மார்,,நேர்ஸ்மார் அவர்களுக்கு எடுபிடிபோல முன்னுக்கும் பின்னுக்கும் திரிவார்கள் அதுதான் அண்டர்சாண்டிங்கில கொண்புயிஸ் ஆகிவிட்டேன் "
" இங்கெல்லாம் அப்படி இல்லை,,நான் ஒரு நேர்ஸ் மட்டுமே, என்ன கொஞ்சம் அதிகம் படித்த நேர்ஸ் "
" உனக்கு இந்த தெதஸ்ஸ்கொப்பு உன்னை ஒரு டாக்டர் போலவே ஆக்கிவிடுகிறது தெரியுமா அது "
" அப்படியா,,நன்றி,,ஆனால் நான் நேர்ஸ் பா "
" அது ஏன் பா ஆசுப்பத்திரியில் வேலைசெய்யும் எல்லாருமே உன்னைப்போல அழகாக இருக்கிறார்கள் "
" என்னது,ஓ. அப்படியா,,நன்றி,,நான் அழகு என்று சொன்னதுக்கு, "
" ஓம்,,உண்மையைத்தான் சொல்லுறேன்..நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்,,உன் கண்களில் நிறையவே புத்திசாலித்தனம் இருக்கு பா, நீயே போதும் பா, இந்த வயிற்றுப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க "
" ஓகே,,ஓகே,,,எனக்கு நேரம் அதிகம் இல்லைப்பா உன்னோட வாழ்த்துரைகளைக் கேட்டுக்கொண்டிருக்க,,வந்த விசியத்தைப் பார்ப்போம்,,என்னாவது என்னால செய்ய முடியுமா என்று ."
                                                                                எனக்கு அங்கே போன சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது சொல்லும்படியாக இங்கே மருத்துவ உதவி கிடைக்காது என்று. அதனால இந்த நேர்ஸ்சை எப்படியும் மடக்கிவைச்சு என்னோட வேலையைக் கொண்டுபோக வேண்டும் என்று அதனாலதான் இப்படி சொல்லி அவளைப் பாப்பா மரத்தில ஏற்றினேன். இப்பிடித்தானே பெண்களே தங்களை யாரும் புகழ்வதை உள்ளூர ரசிக்கிறார்கள் தானே. அதை விட எங்கட ஊரில புண்ணியக்குஞ்சி எப்பவும் சொல்லுவார் காரியம் ஆகிறதுக்கு கழுதையின் காலை என்றாலும் பிடிக்கலாம் என்று. அவர் என்ன சொன்னாலும் அதில மாயப்பொடி மந்திரப்பொடி வித்தை இருக்கும்.
" சரி நீதான் ஆரோக்கியமாக இருக்கிறாய் போல இருக்கே,,இந்த வயிற்றுப் பிரச்சினை ஒரு சின்னப் பிரச்சினை,,இங்கே நிறைய நோயாளிகள் மிகவும் குழப்பமான மெடிக்கல் கொண்டிஷனில் வருவார்கள் "
" அப்படியா,,எனக்கு வலி தங்க முடியவில்லை, "
" பார்க்கலாம்,,ஆனால் இங்கே அதிகம் வசதிகள் இல்லை, நல்ல துறை சார் நிபுணத்துவம் உள்ள ஸ்பெசலிஸ்ட் என்று யாருமே இல்லை,,அது தெரியும்தானே "
                                                                             என்று ஒரு முன் எச்சரிக்கை போலவே சொன்னாலும் அதில தட்டிக்கழிக்கும் அலட்சியம் அதிகமாய் இருந்தது
                                                                ஒரு காலத்தில் நல்ல சுகாதார சேவைகளை அந்த நாட்டு மக்களுக்கு வாசல்ப் படியில் வைத்தே வழங்கிய நாடு. இப்ப அப்படி இல்லை நிலைமை. ஒரு துறை சார் நிபுணத்துவம் உள்ள ஸ்பெசலிஸ்ட்டை சந்திப்பதுக்கே ஏழு கடல் தாண்ட வேண்டும். ஒவ்வொருநாளும் பத்திரிகைகள் இந்த மோசமான குழப்ப இறங்குமுகத்தை விடிய விடிய முழிச்சு இருந்து எழுதித்தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் வெறும் செய்திகளாவே வாசிப்பதால் அதிகம் உறைப்பதில்லை. நமக்கு நமக்கு என்று பிரச்சினை காலைச் சுற்றும்போதுதான் அந்தக் குளறுபடியின் வீரியம் தெரிகிறது.
" அப்படியா,,ஏன்பா ,,ஆரம்பத்திலேயே வந்து இருக்கலாமே,,,என்னப்பா செய்துகொண்டு இருந்தனி இவளவு நாளும்,,"
" அட்டமி நவமி ராகுகாலம் எமகண்டம் வளர்பிறை தேய்பிறை பார்த்துக்கொண்டு இருந்தேன் "
" என்னது பா இதெல்லாம் ,,சுவீடனில் இதெல்லாம் பார்ப்பார்களா,,நீ எங்கப்பா இருக்கிறாய் "
" நான் இப்பவும் அங்கேயேதான் அலைஞ்சுகொண்டு இருக்கிறேன்....பாட்டி சொல்லுவா ஆசுபத்திரிக்கு நல்ல நேரம் போகவேணும் என்று
" பாட்டி,??????????,அது யாருப்பா, ?,உன் பாட்டியா? ,,சரி என்ன உனக்கு வயித்தில செய்யுது "
" சாத்வ குணம் உடம்பில அதிகரித்து அம்சவாயு,,புளிச்சல் ஏவறை செமியாக்குணம், கணப் பித்தம் போல என்னமோ வந்து இருக்குமோ என்று ஜோசித்துக்கொண்டிருந்தேன் "
" இதெல்லாம் என்னப்பா,,ஒன்றுமே விளங்குதில்லை,,விளங்கிற மாதிரி சொல்லுப்பா "
" ஆயுள் வேதப்படி மூன்று தோஷங்களாகவும்‚ ஏழு தாதுக்களாகவும்‚ மூன்று மலங்களாகவும் வெளிப்படுகின்ற தோஷங்கள் சேர்ந்தும்‚ தனித்தும் அறுபத்து இரண்டு வழிகளில் நோய்களை உண்டாக்கக் கூடியவைகள் என்று பாட்டி சொல்லுவா . அதுதான் வயித்தில சங்கடம் ஏட்படுத்தும் ரோகங்கள் என்று பாட்டிதான் சொல்லுவா "
" அட பேந்துபார், கிழிஞ்சுது போ .யாருப்பா,,இந்தப்,,பாட்டி,,அவா என்ன பெரிய டாக்டரா "
" இல்லைப்பா, ,அவா நூறு சதவீதம் இயற்கையான மூலப்பொருட்களை மட்டுமே உபயோகித்து தொண்ணூற்றி எட்டு வருடம் வாழ்ந்த நல்ல ஆன்மிக அறிவாளி, ஆயுள்வேதம் நீண்ட ஆயுளின் வேதம் என்று நம்பி வாழ்ந்த ஒரு வேதாந்தி "
" கிழிஞ்சுது போ..எனக்கு ஒரு நோயாளிக்கு ஒதுக்கும் நேரம் என்று ஒன்று இருக்குப்பா..இந்தக் ககதையெல்லாம் கேட்க நேரம் இல்லைப்பா."
" பிரம்ம பிரஜாபதி வைத்தியர்களான அஸ்வினி குமாரர்கள், முனிவர்கள்‚ தவசிகள்‚ ஞானிகள் உருவாக்கிய வேதங்களின் ஒரு பகுதியான ஆயுர்வேதத்தைக் கடைப்பிடித்த பாட்டியை யாரும் சரியாகப் பதிவுசெய்யவில்லை என்ற கவலை எனக்கு இருக்கு அதனால இதெல்லாம் சொல்லுறேன் "
" ஐயோ,,சாமி,,பேந்துபார்,,உன் பாட்டியை வரலாற்றில் பதிவுசெய்ய கதைக்கிதை என்னவும் எழுதி அவிச்சு அவிட்டு விடுப்பா,,நான் கேட்க்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு பா,,நல்ல அணில்ப் பிள்ளை போல "
" சரி "
" நேரத்துக்கு நேரம் பசிக்குதா,
" ஓம்,,எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் என்பதுபோல எப்பவுமே சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் ,"
"என்னப்பா சொல்லுறாய், நோ விட்டு விட்டு வருகுது,,அல்லது தொடர்ச்சியாக இருக்கா,,"
" ஓம், இறுக்கி அறைஞ்சு கறல் பிடிச்ச பழைய கம்பி ஆணியைக் கொண்டைச் சுத்தியலால நெம்பி இழுத்து எடுக்கிறது போல வலிக்குது ,,"
" என்னபா சொல்லுறாய், வயிற்றுக்குமட்டல் வாந்தி வாறதுபோல இருக்கா.."
" இல்லை, நாக்கிலே உப்புப் போட்டு ஊறவைக்க நாரத்தங்காய் தேச்ச மாதிரி கசப்பு இருக்கு ,"
" என்னப்பா சொல்லுறாய், இதுக்கு முதலும் இப்படி வந்திருக்கா "
" ஓம், சின்ன வயசில வந்திருக்கு,பாட்டி அதுக்கு பர்ராசிங்கம் பரியாரியிட்ட கூட்டிக்கொண்டு போனா,,அவர் கீழ்க்காய்நெல்லிவேர் குடிநீரும் அதிமதுரம் கரைசல் மருந்தும் வெள்ளைக் கப்பூரமும் தேங்காய்ச் சிரட்டையில் அரைச்சுக் குடிக்க சொல்லி ஆயுள் வேதவைத்தியம் செய்தார் ,அதைவிட சரியான விபரங்கள் இப்ப நினைவு இல்லை "
" நான் கேட்க்கிற கேள்விக்குமட்டும் பதில் சொல்லு பா, அனாவசியமா அலட்டாதே பா ,"
" நீ கேட்ட எல்லாம் இருக்கு இதுக்கு மேலேயும் இருக்கு.
" சரி,,கடைசிக் கேள்வி ,,சொல்லு, அதிகம் உறைப்புள்ள,,எண்ணை சேர்ந்த சாப்பாடு சாப்பிட்ட உடனே ,வயிறு உனக்கு எப்படியான உணர்வில் இருக்கு "
" வயிறு ரோட்டுப் போடுற நேரம் மிதிக்கிற கல்லுமெஷின் போல அப்பப்ப பொருமிக்கொண்டிருக்கும் ,சின்ன வயசில் கொஞ்சகாலம் குடல்ப்புண் இருந்தது "
" ஓ..பெப்டிக் அல்சர்போல இருக்கே, ,சரியா சொல்ல முடியாது இப்ப,, சரி நீட்டி நிமிர்ந்து படு,,வயிறை அமதிப் பார்க்க வேண்டும் ,,சேட்டைட் கழட்டு,,ஜீன்ஸ்ஸை கொஞ்சம் பதித்து இறக்கி பெல்டை இழக்கிவிடு "
" சரி ,,படுக்கிறேன் ,ஹ்ம்ம்,, பெப்டிக் அல்சர் புண்ணியத்தில நல்லா எல்லாத்தையும் இழக்கி விடுறேன் , இப்பிடி இளம் பெண் டாக்டர்களை கிட்டத்தில சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்க்காதே "
" என்னப்பா ஒரு மாதிரி சொல்லுறாய்,
" நீ சொன்னதை திருப்பி என்தாய்மொழி தேனினும் இனிய தெவிட்டாத தெள்ளமுத்துத் தமிழ்மொழியில் சொல்லிப்பார்த்தேன் "
"இப்ப பாய்ஞ்சு விழுந்து படக்கு படக்கு என்று எல்லாத்தையும் கழட்டுறாய் ,போறபோக்கில உடுப்பு எல்லாத்தையும் கழட்டிப் போட்டு நிப்பாய் போல இருக்கே பா "
" நீதானே கழட்ட சொன்னாய். நான் எதைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் வாழுறவன் ."
" ஐயோ..சாமி,,நான் சொன்னது ஜீன்ஸை கொஞ்சம் இறக்கி,பெல்ட்டை இழக்கிவிடு என்று , நான் என்ன உனக்கு தாய்லாந்து லோட்டஸ் மசாச்சா செய்யப்போறேன்,"
"அவ்வளவுதானா "
" குறிப்பாக ,எங்க நோகுது என்று பார்க்க அமதிப் பார்க்கப் போறேன் ,சிலநேரம் ,ஈரல் பிரச்சினையாக இருக்கலாம்,,உன் கண்கள் மஞ்சளாக இருக்கே "
" இருக்கலாம்,,,நிறையக் குழப்பங்கள் இருக்கலாம்,,நான் மேகங்களையும் , குழந்தைகளையும் தனித்தமனிதர்களையும், புத்தகங்களையும், புல்வெளிகளையும் , மேப்பிள் இலைகளையும், பூனைகளையும் ,நீரோடைகளையும்,,விமானங்களையும் கவனிப்பதுபோல என் உடம்பையும் ஆரோக்கியத்தையும் அவ்வளவாக அக்கறையாகக் கவனிப்பதில்லை "
" அட அட,,,நீ என்னப்பா பெரிய இன்டெலக்சுவல் அப்ஸ்ட்ரக் திங்கர் போல கதைக்கிறாய்,அதென்ன கடைசியில் விமானம்,,ஏரோப்பிளேன் அதுவா
" ஓம்,,விமானங்களை ரசிப்பேன் மணிக்கணக்கில் , விமானங்கள் பற்றி நிறைய வாசிப்பேன்,,காணொளிகளில் பார்ப்பேன்,,சிலநேரம் ஏர்போட் போயே பார்ப்பேன், ,அவ்வளவு கிளுகிளுப்பு கிடைக்கும் ஒரு விமானத்தைக் கிட்டத்தில் பார்த்தால் "
" அட,,இங்க பாரடா இவன் ஒருத்தனை,,அவன் அவனுக்கு பெண்களைக் கிட்டத்தில் பார்த்தால் கிளு கிளுப்பு வருக்குதாம்,,இவனுக்கு ஏரோப்பிளேன் பார்க்க வருக்குதாம்,,பிக்கியுள்ளார் கேஸ் பா நீ "
" ஹ்ம்ம்,,,,உண்மையைத்தான் சொன்னேன் "
" நீ இப்படி அலட்டுற மனப்பிறழ்வு உள்ளவனா அல்லது , மண்டைப்பிசகில தலகாணியைப் பிச்சு எறியிறது இப்பிடி என்னவும் இருக்கா,,இருந்தா இப்பவே சொல்லுப்பா,,கொஞ்சம் பாதுகாப்பாய் தள்ளி நிண்டு கதைக்க "
" ஹஹஹஹ,,,கொஞ்சம் இருக்கத்தான் செய்யுது,, அண்டிடிபிரஸிவ் டபிளட் போடுறனான் "
" நினைச்சேன்,,,,நீ எல்லாரும் போல வாழ்க்கையைப் பற்றி சிம்பிளா சொல்லாத நேரமே நினைச்சேன்,,கொஞ்சம் அவுட் ஒப் த ஓடேர்னரி வேய் கேசா இருக்குமோ என்று "
" ஓம்,,,அதில உண்மையும் இருக்கு "
" சரி விடுப்பா,,விசயத்துக்கு வாறன் சப்போஸ் இது பெப்டிக் அல்சர் கோர்ஸ் ஆக இருந்தால் எண்டோஸ்கோப்பி செய்து உறுதிப்படுத்த வேண்டும்..
" ஓ அப்படியா,,எதுக்கும் முதல் உன்னோட வெறுங்கையால அமத்திப்பார் பா ,,எனக்கு இந்த மெடிக்கல் இயந்திரங்களில் நம்பிக்கை இல்லைப்பா "
" எண்டோஸ்கோப்பிக்கு இங்கே வசதி இல்லை,, காஸ்ட்ரோஇன்டெஸ்ட்ட்ரனல் நிபுணத்துவ டாக்டரும் இங்கே இல்லைப்பா,,அது செய்ய சென்ஸ்ஜோரன் அல்லது டாண்டரிட் சிக்குஸ் ஹாஸ்பிடல் தான் போக வேண்டிவரும் பா "
" பரவாயில்லை நீ உன் ரெண்டு பிஞ்சுக் கையாலே முதல் அமுக்குப்பா, எதுவா இருந்தாலும் பிறகு பார்ப்பம், , உன் மென்மையான பயிற்றம்பூப் போன்ற உள்ளங்கைகள் பட்டாலே சில நேரம் குளறுபடி தானாகவே சரியாகலாம் பா "
" என்னப்பா பினாத்துறாய் ,,உனக்கு இப்ப என்ன வந்தது ,,,உண்மையாவே வயிறு நோவா அல்லது என்னவும் நாடகம் போட்டுக்கொண்டு வந்து நிக்கிறியா,",
                                                                               என்று சொல்லி வயிறு முழுவதும் கைக்கு கிளவுஸ் போட்டு, தியறியாகப் படித்த வைத்திய முறையில் பிராக்டிகலாகப் பிசக்கக்கூடிய பல சாத்தியங்களை நினைவில் மீட்டிக்கொண்டு, ஒவ்வொரு அங்குலமாய் வயிறு முழுவதும் அமத்திப் பார்த்தாள் . பிறகு தன்னோட வேலை செய்யும் மற்ற நேர்ஸ் இடம் அபிப்பிராயம் கேட்பதாகச் சொல்லிப் போட்டுப் போட்டாள்
                                                                            நான் கட்டிலில் கையைக் காலை நீட்டியபடி கிடந்தேன். அந்த முன்பரிசோதனை அறையில் நான் மட்டுமே இருந்தேன். அந்தக் கட்டிலையும் , ஒரு பெரிய தண்ணீர் கலனையும் , சில பேப்பர் கப்புகழையும் , சுவரில் இரவுநேர ஸ்டாக்கோலம் நியோன் லைட் வெளிச்சத்தில் இரவைப் பகலாக்கும் ஒரு பெரிய பனோராமிக் படத்தையும் , ஜன்னலுக்கு வெளியே ஒரு கிளாசிக்கல் வோல்வோ கார் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் , அந்த நேர்ஸ் விட்டுச் சென்ற கோலோன்ஜிஜினே பிரெஞ் சென்ட் வாசனையையும் தவிர வேற ஒன்றுமே இல்லை
                                                                           நாங்கள் ஒவ்வொருநாளும் ஏதோவொரு ஆஸ்பத்திரியைக் கடந்துதான் அன்றாடம் வேலைக்கோ அல்லது வேற அலுவல்களுக்கோ ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் எல்லாக் கட்டிடங்கள் போலவே அதுவும் ஒரு சீமெந்துக் கட்டிடம் போலவே இருக்கும். ஆனால் உள்ளே ஒருநாள் தங்கி நிக்கவேண்டிய தேவை வரும்போது அது இதுவரையில் அடிக்கடி சந்திக்காத இன்னொரு உலகமாக மாறிவிடும்.
                                                                                சரியாகக் கையைப் பிடிச்சு சொன்னால் விசித்திரமான உலகம் அது . அது தட்காலிகமாகவும் ஒரு நிலையில்லா வாழ்க்கை பற்றிய ஞானத்தையேடெலிவிஷன் சீரியல்களுக்கு நடுவில வாற சரவணாஸ் ஸ்டோர் வெள்ளிப்பாத்திர விளம்பரம் போல சில நிமிடங்கள் சீரியஸ் ஆக நடுமண்டையில் மணி அடிக்கலாம் .
                                                                         அந்த நேர்ஸ் எனக்கு கொஞ்ச நேரத்தில வந்தாள். பெப்டிக் அல்சர் கோர்ஸ் இக்கு நிறைய சான்ஸ் இருக்கு என்று சொல்லி ஒரு பிளாஸ்ட்டிக் கானில் வெள்ளையாக ஒரு கிரீம் கொண்டுவந்து தந்து ,
"காஸ்ட்ரோஇன்டெஸ்ட்ட்ரனல் நிபுணத்துவ டாக்டரும் இங்கே இல்லைப்பா.. இது பெப்டிக் அல்சர் போலத்தான் இருக்குப்பா ."
.
" சரி உன்கையாலே என்ன தந்தாலும் குடிக்கலாம் பா "
" இப்ப..முதலில் இதைக் குடி,,இது ஒன்றும் பெரிய டாக்டர் தான் எழுதவேண்டிய மருந்து இல்லை,,நான் சிபாரிசுசெய்யலாம் "
" சரி சரி ,வசந்த மாளிகை படத்தில நடிகர் திலகம் சிவாயி கணேசன் ,,லதா லதா லதா விஷத்தை தானே குடிக்கக் கேட்டேன் லதா லதா விஸ்கியக் குடிக்கக் குடுத்திட்டியே,, என்ற டயலக் நினைவு வருது ,, "
.
" என்னப்பா,,சொல்லுறாய்,,, இது அசிப்பான் நாட்பது மில்லிகிராம் உள்ள கிரீம் பா காஸ்ட்ரோஇன்டெஸ்ட்ட்ரனல் பிரச்சினைக்கு நல்லது . ,ஒரு தேக்கரண்டி அளவு "
" ஓம்,,, "
" கொஞ்சமாக இது அசிப்பான் நாட்பது மில்லிகிராம் உள்ள கிரீம் பா மூன்று நேரம் குடி வாயில மிடறு போல விடு . "
"ஓம்,,ஓம், நன்றிப்பா ,,, "
" முதலில் மறக்காமல் இந்த கிரீம் கானைக் குலுக்கிக் குடி ."
" ஓம்,ஓம்,,,ஓம்,நன்றி நன்றி பா ,,,,"
                                                              அந்த அசிப்பான் நாட்பது மில்லிகிராம் கிரீம வாயில விட்டேன் . அது வெலிங்டன் சந்தி லிங்கம் கூல்பார் சர்பத் போல இருந்தது.சாடையா அமினியத்தை அரைச்சு டின் பாலில் கரைச்சது போல ஒரு டேஸ்ட் இருந்தாலும், அடிப்படையில் அது அசிப்பான் நாட்பது மில்லிகிராம் கிரீம் இல்லைபோல இருந்தது. வெலிங்டன் சந்தி லிங்கம் கூல்பார் சர்பத் போலதான் சுவையா இருந்தது. வெலிங்டன் சந்தி லிங்கம் கூல்பாரரை நினைச்சுக்கொண்டே அரைவாசிக் கானை அப்படியே சர்பத்போல உறிஞ்சு உறிஞ்சு உள்ளுக்கு விட்டுடேன் .
                                                                        நான் அசிப்பான் நாட்பது மில்லிகிராம் உள்ள கிரீம குலுக்காமல் குடிச்சிட்டேன் பிறகுதான் அந்த நேர்ஸ் குலுக்கிக் குடிக்க சொன்னது நினைவு வந்தது. அதால கட்டிலில் இருந்து எலும்பிப் போய் கொரிடோரில் அங்கேயும் இங்கேயும் குத்திக் குத்தி ஓடிக்கொண்டு இருந்தேன், அதை கொடிரோர் முடிவில் கண்ணாடி அறையில் இருந்து பார்த்த அந்த நேர்ஸ் உடன வந்து
" இப்ப எதுக்குப்பா இப்பிடி குத்தி முறிஞ்சு பிரண்டு கொண்டு இருக்கிறாய் "
" நீ தந்த மருந்த..அசிப்பான் நாட்பது மில்லிகிராம் உள்ள கிரீம குலுக்கி குடிக்க சொன்னாய் எல்லா,,நான் மறந்துபோய் குலுக்காமல் குடிச்சிட்ட்டேன் ,,அதுதான் இப்ப குலுக்கிறேன் "
" அடப்பாவி,,நீ ஒரு அகராதி பிடிச்சவன் டா, போய்க் கட்டிலில் படு பா..,பொறுவாறன்,,உன்னோட கதைக்க வேணும் டெஸ்டிங் ரிப்போட்டில் விட்டமின் ஊட்டச்சத்து குறைவாக இருக்கு "
                                                                            நான் போய்க் கட்டிலில் படுத்தேன். வயிற்று வலியத் தவிர மற்றப்படி நான் ஆரோக்யமாகத்தான் இருந்தேன். அல்லது இருப்பது போல நினைச்சுக்கொண்டு இருந்திருக்கலாம். ஏனென்றால் உடம்பில பல இரசாயனச் சுரப்புக்கள் நம்மளை அறியாமலே ரகசியமாக சமநிலை குழம்பி இருக்கலாம். அல்லது ஒரு வாழ்வாதார உள்ளுறுப்பு களைத்துப்போய் பின்வாங்கிக்கொண்டிருக்கலாம் ,சில கலங்கள் மறுபுத்தியுயிர்ப்பை முன்னறிவித்தல் இன்றி நிறுத்தி இருக்கலாம். ஒரு மெடிக்கல் ரிப்போட் அதுகளைக் கண்டு பிடிக்கலாம்.
                                                                                         அதை நினைக்க அண்மையில் எங்கேயோ படித்த " இப்போதும் மேற்பரப்பில் சலனமில்லாமல்த் தான் இருக்கிறேன் " என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்தது. நேர்ஸ் ரிப்போட் பேப்பர்களுடன் வந்து கட்டிலுக்கு அருகில் இருந்து
" உனக்காக நேரம் ஒதுக்கி இருக்கிறேன்.
" அவ்வளவுதானா "
" கொஞ்சம் மருத்துவம் பற்றி கதைக்க வேணும், இங்கே வரும் நோயாளிகள் வீட்டில கதைக்க யாருமே இல்லாதுபோல எங்களோடு கதைக்க எப்பவுமே விருப்பப் படுவார்கள்..
" பாவப்பட்ட ஜென்மங்கள் "
" ஆனால் இது எங்களுக்கு ஒவ்வொருவருக்கு இவ்வளவுதான் என்று நேரம் பிரிக்கப்பட்ட சரி இந்தக் கிரீம் எவ்வளவு குடிச்சாய் "
" அரைவாசிக்கு மேலே இழுத்திட்டுது ,,நல்ல டேஸ்ட்,,வெலிங்டன் சந்தி லிங்கம் கூல்பார் சர்பத் போல இருந்திச்சு "
" அடக் கறுமமே , மருந்துக்கும் மாத்திரைக்கும் அளவுப் பிரமாணம் இருக்கு பா,,அதென்னபா ,வெலிங்டன் சந்தி லிங்கம் கூல்பார் சர்பத் "
" அதுதான் அசிப்பான் நாட்பது மில்லிகிராம் உள்ள கிரீம் ,,அதுதான் இது இதுதான் அது ,,..சிவாயநமவும் நமசிவாயவும் போல ,வெலிங்டன் சந்தி லிங்கம் கூல்பார் சர்பத் எங்கட ஊர்ல பேமஸ் ஆனா சர்பத் ,"
" என்னது..பொறுவாறன் ,,இப்ப உனக்கு வைக்கிறேன் ஆப்பு,,ஆசுப்பத்திரியிலேயே வந்து முசுப்பாத்தியா ,,பொறுவாறன்,,சொல்லு உனக்கு மருந்துக்கும் மாத்திரைக்கும் சர்பத்துக்கும், சாராயத்துக்கும் அளவுப் பிரமாணம் தெரியாதா பா "
" பர்ராசிங்கம் பரியாரியும் இஞ்சி முலைப்பால் சங்கில அளவுப் பிரமாணப்படி சுறுக்கெண்டு கொடுத்துதான் பாட்டி பாட்டில விழுந்த போது புசுக்கெண்டு நிமிர்த்தி எழுப்பி விட்டார்"
" இந்த அலட்டல் கேட்க நேரமில்லை,,ஆனால் அறிய விருப்பம் இருக்கு,,அதனால சொல்லு அதென்ன இஞ்சி ? .ஜிஞ்சர் Zingiber Officinale அதுவா ? அது heart diseases, arthritis, migraines, depression, stress-related anxiety disorders. இதுக்கெல்லாம் சொல்லப்பட்ட சாமான் பா "
" ஓம் அதைத்தான் முலைப்பாலில் கலந்தார்,,இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும் பா "
" நான் ஓரியண்டல் மெடிசின் படித்து இருக்கிறேன்,,தனியாக படித்தேன்,,ஆர்வத்தில் . அதென்ன முலைப்பால் Breast milk அதுவா ? "
"ஓம் அதைத்தான் பர்ராசிங்கம் பரியாரி கலந்தார் "
" அதில endocannabinoids, Arachidonoyl glycerol, anandamide என்ற முக்கிய தாதுப்பொருள்கள் இருக்குப்பா ,,சரி முலைப்பால் எங்கே எடுப்பது "
" எங்கள் வீட்டுக்கு அருகில் பவளம் அக்கா பிள்ளைப்பெற்று இருந்தா அவாவிடம் இருந்து எடுத்து பாட்டிக்கு வைத்தியம் செய்தோம் "
" ஓ ,,அதென்ன சங்குபா, சொல்லு,,அதென்ன அளவுப்பிரமாணமா ? "
.....இன்னும் வரும் ....



இடியாப்பச் சிக்கல் 1

கறுத்தப் பூனையை மடியில வைத்துக்கொண்டு இருட்டில சகுனம் பார்ப்பது போலிருந்தது அந்த லாயரின் அலுவலகத்துக்குப் போன போது . அவ்வளவு பூனைப் படங்கள் சுவரில் தொங்கியது. எல்லாமே புஸ் வாக்னர் என்ற டென்மார்க் நாட்டு ஓவியர் வரைந்த படங்கள். ஒரு லாயர் எதுக்காக பூனைப்படங்களை முதன்மைப்படுத்தி காட்ட்சிக்கு வைத்திருக்கிறார் என்று விளங்கவில்லை. பூனைகள் அலட்டிக்கொள்ளாத புத்திசாலியான ஜீவன்கள். அது காரணமாக இருக்கலாம்.

                                                              ஒரேயொரு பிரேம் போட்ட படத்தில லாயர் லம்பர்ஷினி ஸ்போர்ட்ஸ் காருக்கு அருகில் வெற்றிக்கேடயம் ஒன்றைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நிக்கும் படம் மாட்டி இருந்தது.
                                                              அந்த அலுவலகத்தில் நான் சந்திக்கப்போன சீனியர் லாயர் மட்டுமே ஒரேயொரு ஆண். அவருக்கு ஜூனியர் ஆக வேலைசெய்து கொண்டிருந்த இளையவர்கள் எல்லாருமே இளம் பெண்கள். தாய்வீட்டிலேயே அழகுக்கு அணிந்துரை எழுதியது போல இருந்தார்கள். ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்படட தொடரான அலி மக்கபேல் இல் வரும் கதாநாயகி அலி மக்கபேல் போலவே அழகான கட்டமைப்பில் உட்சாகமான வேலைச் சூழ்நிலையை இயல்பாகவே அமிர்தாஞ்சன வாசனையாகப் பரவவிடும் இளம் லாயர்கள்.
                                                             அந்த லாயர் நிறுவனம் ஸ்டோக்கோலமிட்க்கு வெளியே ஒரு அதிகம் பிரபலமில்லாத இடத்தில இருந்தது. அந்த இடத்துக்கு சொன்ஷுபாரி என்று படட உடனேயே நினைவுக்கு வந்தது மார்க்கிடின் கொள்ளுத் தாத்தா .
                                                          கார்ல் மார்க்ஸ் போலவே கொள்ளைத் தாடியோடு பருத்த உருவமான நிலச்சுவான்தரான திருவாளர் நர்டன்மார்க் சுங்கானில் சுருட்டு அடைஞ்சு பத்தவைக்கும் கறுப்பு வெள்ளைப் படத்தை அவள் எங்கள் வீட்டு முன்னறையில் மாட்டி இருந்தாள் . மார்க்கிட் சின்ன வயதில் அவள் வளர்ந்த அந்த இடத்துக்கு ஒரேயொரு முறை கூட்டிக்கொண்டுபோய்க் காட்டியும் இருக்கிறாள்.
                                                                  லாயர் அலுவலகத்தில் சவுகரியமான சோபா வரவேட்பு அறையில் போடப்பட்டு இருந்தது . ஒரு இளம் ஜூனியர் வந்து கொஞ்சநேரம் காத்திருக்கும் படி சொன்னாள். அவள் நெற்றிப் புருவ மயிர்களை மழுப்பி வழித்து கறுப்புப் பென்சிலால் அவுட்லைன் போட்டு இடதுபக்கக் கிளிச் சொண்டில் பியர்சிங் வளையம் கொழுவி இருந்தாள் .
                                                                    ஒரு சின்ன மேசையில் தானியங்கிக் எக்பிரஸோ கோப்பி மிஷின் இருந்தது. ஜன்னல்களில் திரைச்சீலை வெளியே உள்ள மரங்களை நிழலாக அசைத்துக்கொண்டிருந்தது . சோபாவுக்கு முன்னே இருந்த கண்ணாடி மேசையில் செழிப்பான அந்தூரியம் மலர்கள் ஒரு வாஸில் வைக்கப்பட்டிருந்தது.
                                                                           கொஞ்ச நேரத்தில் சீனியர் லாயர் இறுக்கிச் சாத்தப்பட்டிருந்த அவரோட கொண்டமேனியம் அறையத் திறந்துகொண்டு வெளியேவந்தார். அவர் கையில ஒரு நோட்டுப் புத்தகமும், ஹெவ்லட் அண்ட் பக்காட் மடிக்கணணியும், சில பென்சில்களும் இருந்தன, அலட்சியமான கண்களில் அளவுக்கு அதிகமாக நிறைய சட்டச் சிக்கலான கேஸ்களை லாகவமா வென்ற தைரியம் இருந்தது. அது எனக்கு நிறையவே நம்பிக்கை கொடுத்தது. ஏனென்றால் என்னோட கேஸ் ஒரு இடியாப்பச் சிக்கல் போன்ற கேஸ்.
" நீதானப்பா அந்த ஆள்.."
" ஓம் ஓம் ,,நான் தான் அந்த அப்பாவி "
" என்னது அப்பாவியா,,,,அதை நீ இப்ப சொல்லக்கூடாது ,, உன்னோட பெயர் இவளவு நீண்டதாக இருக்கே,,வாயுக்க நுழையுதே இல்லையே,,உன்னை எப்படி சுருக்கமாக கூப்பிடுவது,,"
" எனக்கு கிடுக்குப் பிடிபோல சுருக்கமான பெயர் இருக்கு "
" உன் பெயரைச் சொல்லி உரையாடினால்தான் நெருக்கமாக இருக்கும். வெளிநாட்டவர்களின் பெயர்களே சுவாரசியம்,,வாசித்து விளங்கிறதுக்கு அரை வேலை நாள் தேவை இல்லையா,, ."
" ஓம் ஓம்,,அதில ஒண்டும் பிரச்சினை இல்லை ."
" ஏனென்றால் இந்தக் கேஸ் எடுத்த எடுப்பில கவிட்டு முடிக்க முடியாத கேஸ்.,,நிறைய எடுக்கும்,,மாதக்கணக்கே எடுத்து கோடு கச்சேரி வாசல்படி என்று ஏறவைச்சு அலைக்கழிக்கலாம் ,,இப்பதான் வாசித்துப் பார்த்தேன் உன் கேஸ் "
" ஓ,,அப்படியா,,சிம்பிளா முடியாதா "
." அதுக்கு சான்ஸ் நிகழ்தகவுப்படி சொல்லுறது என்றால் பத்துக்கு ஒன்றுதான் இருக்கு..."
" ஓ,,அப்படியா,,"
" ரெண்டு முக்கிய சுவீடிஷ் அரச அலுவலகங்கள் உனக்கு எதிராக சட்டப்படி வழக்குத் தொடுத்து இருக்கின்றன "
" அட..."
"பேந்துபார், என்ன அட போடுறாய்,, இந்த ரெண்டு முக்கிய சுவீடிஷ் அரச அலுவலகங்களோடு தனக்கிறது,,புலியோடு வாலைப்பிடிச்சுக்கொண்டு ஓடுறது போல "
" அட..இது அநியாயத்துக்கு அகடவிகடமா இருக்கே "
"பேந்துபார், என்னப்பா,,,சின்னப் பிரச்சினையை இடியாப்பச் சிக்கல் போல ஆக்கிவைச்சுப்போட்டு சிம்பிளா முடியாதா என்று கேட்க்கிறாய் "
" இல்லை,,அதில்ல புலியின் வாலைப்பிடிக்கிறது என்ற வார்த்தைப் பிரயோகம் வயித்தில புளியைக் கரைக்குது "
" வேற என்னெண்டு சொல்லுறது..புலியின் வாலைக் கைவிடால் புலி அடிச்சுக் கொண்டு போடும்..ஆனாலும் பார்க்கலாம்,,,ரெண்டு கேஸ் இதுபோல முன்னம் எடுத்து வாதாடி இருக்கிறேன்,"
"
" ஓ அதைக்கேட்க வயித்தில டின்பால் வார்த்த மாதிரி இருக்கு "
",,நீ முதல் பொய் புரட்டு புரளியை ஒரு பக்கமா உன்னோட மட்டும் வைச்சுக்கொண்டு எனக்கு உண்மையை சொல்லவேணும் ,,கொலையே செய்து போட்டு வந்திருந்தாலும் லாயரிடம் மட்டும் உண்மை சொல்லவேணும், மிச்சம் நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம் "
                                                                                          என்று நிறுத்தாமல் சொல்லி முடிச்சுப்போட்டு, எனக்கு முன்னே சுற்றிக்கொண்டு இருந்த குஷன் கதிரையை இழுத்துப்போட்டுக்கொண்டு இருந்து கேட்டார் . நான் வாய்க்குள் நுழையுறமாதிரி நாலு சொல்லில் என் பெயரைச் சொன்னேன். கழுத்தில் கட்டி இருந்த டையை கொஞ்சம் இளக்கி லூசாக்கிப்போட்டு புஸ் வாக்னரின் பூனைகளை ஒருமுறை சரிபார்த்துப்போட்டு நோட்டில் என் பெயரை பிள்ளையார் சுழி போட்டு நோட்டுப் புத்தகத்தின் வலது மூலையில் குறித்துக்கொண்டார்.

அந்த லாயர் பார்க்கிறதுக்கு சப்பிறானோ மாஃபியா படத்தில வாற டோனி கடல்பினோ போன்ற அகன்ற முகம் உள்ளவர். முகத்துக்கு பொருந்தாத முழுவியளம் போல இத்தாலியன் மூக்கு . ஸ்டிக் லார்சன் அண்டர்சன் பெயர் ஆதியான சுவீடிஷ் பெயர். காட்டுமாவிலங்கு மர வாட்டசாட்டமான தோற்றம். எல்விஸ் பிரெஸ்லி போல வடக்குத் தெற்கு வாடைக்காற்றில் அலைபாய்ந்து முன் நெற்றியில் விழும் நேர்த்தியான மயிர், ஜி ஜி பொன்னம்பலம் போல குறுக்கு விசாரணையில் வெருட்டி மருட்டும் கிரிமினல் லோயர் போலக் கண்கள் இல்லை. பூனைக்கண் போல பசுந்தாக இருந்தது அதில் அமுக்கமாக சந்தேகமும் இருந்தது .
                                                                     விலையதிகமான ஒமேகா ஸோர்னோகிராஃ பவுன் கைக்கடிகார மணிக்கூடு, லம்பர்ஷினி ஸ்போர்ட்ஸ் கார், டிரேஸ்மான் ட்ரேட்மார்க் கோட் சூட்டில் சீனியர் லாயரின் பந்தா அந்த இளம் ஜூனியர் லாயர் பெண்களின் சனிக்கிழமை இரவுகளை சந்தேகப்பட வைத்தது. நமக்கென்ன வந்தது வசதியானவன் அல்வா திண்ணுறான், வசதியில்லாதவன் வெறும்வாயில் அவலை மெல்லுறான். முதல் நான் போன விசயமே என்னோட முக்கிய அலுவல்
" புலிவாலைப் பிடிச்ச மாதிரி என்றால்,,,அதில இருந்து தப்ப குறுக்கு மறுக்க பாயும் வழியேதும் இல்லையா ,,அண்டர்சன் "
" இருக்குப்பா,,புலி ஒருநாள் காட்டுக்குள்ளே எசகு பிசகா எப்பாவது எங்காவது ரெண்டு மரத்துக்கு நடுவில தலைய கொடுத்து மாட்டிச்சுது என்றால் .வாலை உதறிப்போட்டு .தப்பி ஓடவேண்டியதுதான் ,,அதுதான் சாத்தியமான ஒரே சந்தர்ப்பம் "
" ஹஹஹஹஹஹஹ "
" பேந்துபார்,,இப்ப எதுக்கு சிரிக்கிறாய்..நான் சீரியஸ் ஆக சொல்லுறேன் "
" எங்கட ஊர்ல இப்படியான ஒரு கொசப்புக் கதை இருக்கு,,அதை நினைச்சேன் சிரிப்பு வந்தது அண்டர்சன் "
" ஓ,,அப்படியா,,அதென்ன கதை ,,சொல்லுப்பா கேட்பம் "
" ஒரு காட்டில ஒரு வடிவான பெண் சிங்கம் இருந்தது,,அதே காட்டில ஒரு தினவெடுத்த ஆண் நரியும் இருந்தது,, அந்த நரிக்கு சிங்கத்தில கொள்ளை ஆசை.....கொஞ்சம் வில்லங்கமான ஆசை "
" ஓகே,,பிறகு "
" ஒருநாள் அந்த சிங்கம் வேட்டை அவசரத்தில் வெட்டை ஒன்றுக்குள்ளால பாயும் போது விளாத்திக் காட்டுக்குள்ளே எசகு பிசகா ரெண்டு மரத்துக்கு நடுவில தலைய கொடுத்து மாட்டி பாட்டில விழுந்து படுத்திட்டுது "
" அட அட ,,பிறகு "
" நரி அந்த நேரத்தைப் பயன்படுத்தி செய்ய நினைச்சதை செஞ்சிட்டுது "
"கிழிஞ்சுது போ ..செய்ய நினைச்சதை செஞ்சிட்டுது ... ஹஹஹஹ,,பிறகு,,சொல்லு என்ன நடந்தது "
"செய்ய நினைச்சதை செஞ்ச நரி தப்பி ஓடிவந்து,,எங்கள் ஊர் வாசிகசாலையில் உதயன் பேப்பர் படிச்சுக்கொண்டு இருந்தது "
" வாவ்,,பிறகு ,,சொல்லுப்பா,,என்னமோ இனிதான் தலையில பானையைக் கவுக்கப்போறாய் போல இருக்கு "
" ஓம். ஒருமாதிரி தலையை வெளிய எடுத்த சிங்கமும் செய்ய நினைச்சதை செஞ்ச நரியத் தேடிக்கொண்டு அந்த வாசிகசாலைக்கு வந்தது, சிங்கத்தைக் கண்ட நரி டக்கென்று முகத்தை உதயன் பேப்பரால் மறைச்சுப்போட்டு தீவிரமா வாசிக்கிறமாதிரி பாவனையில் இருந்தது.."
" ஓ...பிறகு என்னப்பா நடந்தது "
" சிங்கம் கேட்டிச்சு,,ஆரப்பா இப்பிடி ஆர்வமா நியூஸ் பேப்பர் வாசிக்கிறது, எல்லாம் கேட்க நேரமில்லை. காட்டில ஆயிரம் சோலி போட்டது போட்டபடி கிடக்கு ,இண்டைக்கு என்ன தலையங்கம் அதையாவது சொல்லுப்பா எண்டிச்சு "
" பேந்துபார்,,முசுப்பாத்தியை.. அதுக்கு செய்ய நினைச்சதை செஞ்ச நரி என்னப்பா சொல்லிச்சு "
" இன்றைய அதிரடித் தலையங்கம் ............. ............... ..................... என்று சொல்லிச்சு "
" கிழிஞ்சுது போ..ஹஹஹஹா,,அதுக்கு சிங்கம் என்ன சொல்லிச்சு பா "
" ...................................... ............யேல்ல ..அதுக்குள்ளே தலையங்கமா போட்டுட்டாங்களே ,,எண்டிச்சு "
" கிழிஞ்சுது போ..ஐயோ சாமி ,,ஹாஹாஹா,,ஹாஹாஹா,,,நீ என்னப்பா வில்லங்கமான கேசில் என்னிட வந்து நின்றுகொண்டு சிரிப்புக்கு கதை சொல்லிக்கொண்டு இருக்கிறாய் "
                                                                                                                       என்று சொல்லிச் சிரிக்க அந்த இளம் ஜூனியர் லாயர்கள் அவர்களுக்கு முன்னுக்கு மேசையில் இருந்த வேலைகளை விட்டுப்போட்டு சீனியர் லாயரைப் பார்த்தார்கள்
" சரி,,விடு..இப்ப விசயத்துக்கு வாறன் ,,இன்னாருக்கு வாசிக்கிறேன் உன்னோட பேப்பர்களை,,,என்ன பொயிண்ட்ஸ் பிடிக்கலாம் என்று பார்ப்பம்,,கோப்பி குடிக்கப்போறியா,,அந்த மிஷினில் போட்டு எடுத்துக் குடி "
                                                                          என்று பழையபடி என்னோட பேப்பர்களை வாசிக்க தொடங்கினான். நான் பர்ராசிங்கம் பரியாரியின் கடுக்காய் பேதிக்குளிசை குடிச்ச மாதிரி கொஞ்சம் வயித்தில அசவ்கரியமா உணர்ந்தாலும் வெளிய காட்டிக்கொள்ளாமல் சும்மா புஸ் வாக்னரின் பூனைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் இயல்பாக எந்தக் கலவரமும் இல்லாமல் வாசித்துக்கொண்டிருந்தான்.

நான் லாயர்களை இவளவு அருகில் வைத்துப் பார்த்ததில்லை. துறைசார் நிபுணர்கள் எல்லாருமே அவர்கள் துறையில் கரைத்துக்குடித்தவர்கள். என்னோட கேஸ் தலைக்கு கயிறு போடுவது போல நின்றாலும் அவன் அந்த நேரமும் சட்டப்புத்தகத்தில் பொயிண்ட்ஸ் தேடுவது போலவே இருந்தது.
                                                                           இந்த சின்னச் சிக்கல் என்னால்தான் இந்தளவு இடியாப்பச்சிக்கல் ஆனது. எவ்வளவுதான் நாங்கள் வாழ்க்கையில் பிளான் போட்டாலும் துரியோதனன் குதிக்காலில் சனியன் ஒட்டின மாதிரி வாழ்வின் தீராத பக்கங்களில் சில சம்பவங்கள் நம்மையும் மீறித்தானே நடந்தேறுகின்றன. லாயர் இப்ப தலையை நிமிர்த்தி , நடு நெற்றியில் சுட்டுவிரலை வைச்சு தேச்சுப்போட்டு ,,
" இச் இச் இச் இச் இச் ...இவளவு சிக்கல் இருக்கே இதுக்குள்ளே "
                                                                            என்றான். அவன் " இச் இச் இச் " என்று சொன்னவுடனே ஒரு ஸிவாவா லத்தின் அமெரிக்க நாய்க்குட்டி அவனோட ரூமுக்க இருந்து ஓடிவந்து, அவனோட மடியில பாய்ந்து ஏறி என்னைச் சந்தேகமாகப் பார்த்தது. ஜேம்ஸ் பொண்ட் படங்களில் பயங்கர வில்லன் ஒரு தனி அறையில் தனிக் கதிரையில் கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு அவனோட காதலியோடு தோளில உரசிக்கொண்டு அலட்சியமாக இருந்துகொண்டு ஒரு முயல்குட்டியை மடியில வைச்சுத் தடவிக்கொண்டு
" மிஸ்ட்ர் பொண்ட் ,,இதுவரைக்கும் நீங்க செய்ததெல்லாம் வெறும் தூசு.. இனித்தான் உங்களுக்கு முக்கியமான வேலையே இருக்கு "
                                                                         என்று டயலாக் சொல்லுவானே அதுபோல இருந்தது அந்த நேரம் லாயரைப் பார்க்க . லாயர் வாசிக்கும் போதே சின்னச் சின்ன குறிப்புக்கள் பெஞ்சிலால் எழுதிக்கொண்டு இருந்தான். முடிவில் அந்தப் பேப்பர்களை என்னமோ ஆயுள் தண்டனை கேஸ் முடிஞ்சு ஜெயிலில் இருந்து விடுதலை கிடைச்ச மாதிரி மேசையில் எறிஞ்சு போட்டு என்னை நிமிர்ந்து பார்த்து.
" உன்னோட விளக்கம் என்னவும் சொல்லப்போறியா "
" இல்லை,,ஏற்கனவே அதை எழுதி இருக்கிறேன். என்னமோ அந்த ரெண்டு முக்கிய சுவீடிஷ் அரச அலுவலகங்களுக்கும் எதிராக என்னால .செய்ய நினைச்சதை செஞ்சிட்டேன் "
" ஹாஹாஹா ஓம்..பார்த்தேன்..நீ எழுதியுள்ளது சென்டிமென்டலா இருக்கே,, நீ கதைகிதை எழுதி விடுற கதாசிரியனா,,நீ எழுதின மறுப்புக் கடிதம் புனைவு போல இருக்கே,,,வாசிக்க டச்சிங்கா இருக்கு என்றது உண்மை "
" ஏன் அப்படி கேட்க்குறீங்க அண்டர்சன்,, என்னை லைட்போஸ்டில் கட்டி நெற்றியிலே சுட்டு போட்டாலும் கதை எழுதுறது மட்டும் கைவரவே வராது "
" ஏன்பா,,இப்பிடி பயங்கரமா சொல்லுறாய் "
" இதெல்லாம் எங்கள் நாட்டில ,எங்க ஊர்ல சிம்பிளா சந்திக்கு சந்தி ஒருகாலத்தில் நடந்தவிசியம்தானே... "
" நீ எழுதியுள்ள மறுப்புக் கடிதம் சென்டிமென்டலா இருக்கே, "
" அப்ப மனிதாபிமான அடிப்படையில் எழுதவா "
" டேய்,,இப்ப என்னத்துக்கு முந்திரிக் கொட்டை போல முன்னால பாயுறாய். இன்னும் உன் முதல் அப்பீலே போடவில்லை ,,பொறுமையா இருப்பா ..
" சிக்கல் இருக்கே இதுக்குள்ளே "
" மனிதாபிமான அடிப்படை கட்டக்கடைசியில கையைக் காலை விழுந்து கெஞ்சிப் பிடிக்கிற டாக்டிஸ் பா "
" சரி,,ஒத்துக்கொள்கிறேன் ,,உங்களில் நிறைய நம்பிக்கை இருக்கு அண்டர்சன் "
" டேய் என்னோட வழக்கறிஞர் வாழ்நாளில் உன்னைப்போல எத்தனை கேஸைப் பார்த்திருப்பேன் தெரியுமா..எத்தினை அனுபவத்தில் புருட்ஸ் திண்டு நட்ஸ் போட்ட பனங்காட்டு நரி நான் தெரியுமா "
" சரி,,ஒத்துக்கொள்கிறேன் ,,அண்டர்சன் "
" இல்லைப்பா சட்ட ரீதியாக அதில விவாதம் செய்ய உன்னோட கடிதத்தில் ஒன்றுமேயில்லை..சட்ட்ம் என்று ஒன்று இருக்கே அதுக்கு மறுமொழி அதன் பாஷையில் எழுதினால்தான் எடுபடும் பா "
" அப்படி எனக்கு எழுத தெரியாதே,,அண்டர்சன் "
" அதுக்குத்தானே நாங்கள் சட்டப்புத்தகத்தைக் படிச்சுக்க கிழிச்சு வைச்சு இருக்கிறம்,,நான் எழுதுறேன் பார் , சட்டம் என்றால் நிறைய அவிழ்க்கமுடியாத முடிச்சுக்கள் உள்ள ஒரு சிக்கல் "
" ஓ,,அப்படியா,,அப்புறம் எப்படி நீதிமன்றத்தில் எதிராக வாதாடி வெல்லுறிங்க "
" ஓம்,,அந்த முடிச்சுக்களை அவிழ்க்க லூஸ் எண்ட் என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே,,அப்படி சில விசயங்கள் சில சந்தர்ப்பத்தில் உதவிசெய்யும் பா "
" ஓ,,அதை வைச்சுக்கொண்டுதான்,,தொழிலை ஒட்டிக்கொண்டு இருக்கிறீங்களோ ,,எங்கட ஊர்ல இருந்த அருளம்பலம் அப்புக்காத்து இன்னொரு விளக்கம் சொல்லுவார் "
" யாருப்பா அ ரு ள ம்பழ ம் யா ப்பு க்கா து "
" அவரும் ஒரு லாயர்,,எங்கள் ஊர்ல இருந்த ஒரேயொரு லோயர் ,,அட்டனி அட் லோ,,பப்ளிக் பிரசிகியூட்டர் ,,அவர் சொல்லுவார் சட்டம் ஒரு பச்சைத்தண்ணி என்று "
" என்னப்பா இப்பிடி காத்தில கையை விசிக்கின மாதிரி அர்த்தமில்லாமல் சொல்லுறாய் "
" அவர் சொல்லுவார்,,,அந்தப் பச்சைத்தண்ணிக்கு உள்ளாள நெருப்புக்கொள்ளியை அணையாமல் கொண்டுபோற வித்தை பிடிபட்டவன் தான் சொல்லப்பட்ட பிரக்கிராசி என்று,,ஐ மீன் சக்ஸஸ்புல் லாயர் என்று "
" ஹஹஹஹ,,இது உண்மையில் லொயிக் ஆகத்தான் இருக்கு சரி ,,விடு,,இதெல்லாம்,,கேட்க எனக்கு நேரம் இல்லை,,ஆனால் சுவாரசியமாத்தான் இருக்கு, "
" ஒத்துக்கொள்கிறேன்,,,நானும் சும்மா அலட்டிப்போட்டேன் ,மன்னித்துக் கொள்ளுங்க அண்டர்சன் "
" மார்க்கிட் நிலாண்டர்ஸ் விக்கிடோரியா நூர்டான்மார் ,,உன்னோட.......... ...தானே "
" ஓம்.. "
" நாலு விசியம் செய்ய வேணும்,,செய்வியா,, ஒவொன்றாய் சொல்லுறேன்.. பார்க்கலாம்,,,வேர்ட் அவுட் ஆகுதா என்று "
" சரி,,அண்டர்சன் "
" முதலாவது.........ரெண்டாவது...மூன்றாவது....நாலாவது............... மார்க்கிட் இடமிருந்து எடுத்துத் தரவேண்டும் "
" என்னது ,,நாலாவது....? "
" பேந்துப்பார்..சின்னச் .சிக்கலை இடியாப்பச்சிக்கல் ஆக்கிவைச்சுப்போட்டு பதறுறாய்...மார்க்கிட் செய்ய மாட்டாளா "
" அதுதான் ஜோசிக்கிறேன்..ஏற்கனவே எனக்கும் அவளுக்கும் இடையில் சங்கிலி புங்கிலி கதவைத்திற நான் மாட்டேன் தேங்காய்ப்புலி என்று பிடுங்குப்பாடுகள் நிறைய நடந்தது "
" எனக்கு அந்த இந்தக் கதைகள் தேவை இல்லை,,அவளை வழிக்கு கொண்டுவந்தால் வழக்கில் சில விசயங்களை வெண்டுதரலாம் ,,என்ன சொல்லுறாய் "
" பார்க்கலாம்..அவளை வழிக்கு கொண்டு வரலாமா என்று.."
" என்னபா பார்க்கலாம்,,என்னபா  சொல்லுறாய் "
" எப்படியோ நான் என்ன சொன்னாலும் அவள் நம்ப மாட்டாள்.. ஏற்கனவே நிறையப் பொய்யும் புரளியும் பித்தலாட்டமும் செய்து சொதப்பி வைச்சு இருக்கிறேன் "
" பேந்துபார்...பினாத்துறியே எனக்கு அந்த இந்தக் கதைகள் தேவை இல்லைப்பா நாலு விசியமும் செய்ய வேணும்,,செய்வியா "
" சரி,,ஆனால் முதலில் நீங்கள் அவளோடு நேரடியாக கதைக்க வேண்டும்  ஆண்டெர்சன்,, ,,.நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்.."
"என்ன சொல்லுறாய் " 
" நான் சொன்னால் அதுகள் மலைய கெல்லி எலிய புடிச்சானாம் கதை போலத்தான் அவளுக்கு விளங்கும்..பிரச்சினை அதிகமாகும் "
" சரி,,நான் கதைக்குறேன்,,டெலிபோன் நம்பர் தா ,,இப்பவே கதைக்குறேன் "
                                                                        இப்ப ஒரு ஜூனியர் அலி மக்கபேல் லாயர் வந்து
" ஸ்டிக் ,,,நாளைக்கு, மால்மோ டிங்கிறீட் பிர்மா ,கோட்ஸ் கேஸ், அதில அபிடேவிட் ,,கொஞ்சம் உதைக்குது, ஸ்டிக் ,,பழைய டேக்கில் வேறமாதிரி டிபென்ஸ் ,,இந்த வெர்டிக்ட்டில் இன்னொரு மாதிரி கொங்குலுசன்..ஒண்ணுமே புரியுதில்லை ஸ்டிக் ..., .இண்டைக்கு ரெயிட்டார் ஸ்டில் ,,கடைசி நாள் ,,இண்டைக்கு ..முடிச்சு அனுப்பவேணும் .. ஸ்டிக் "
                                                      என்று என்னவோ தலைக்கு வந்த அம்பைத் திசை திருப்பி தலைப்பாகையோடு போகவைக்கிற கேஸ்போல உள்ள ஏதோவொரு வழக்குப் பற்றி அவசரமாய் சொல்ல, லாயர் சடார் எண்டு எழும்பி
" கொஞ்சம் இரு,,இருந்து யோசி ,,நான் ஒரு பேப்பரில் கொஞ்சம் எடிட்டிங் செய்துபோட்டு வாறன்,,நல்லா யோசி ,,ஏதுமொரு ஐடியா உனக்கும் வரும் பா .."
 " சரி,,ஆனால் முதலில் நீங்கள் அவளோடு நேரடியாக கதைக்க வேண்டும் "
" முதல் மார்க்கிட் விசயத்தை யோசி,,ஓகே யா ,,சில நிமிடத்தில் நான் திரும்பி வாறன் "

நான்.யோசித்தேன்...இந்த சமுதாயத்தில் அல்ல எந்த சமுதாயத்திலும் எழுதிவைக்கப்பட்ட சட்ட்திட்ட்துக்கு எதிராக யாருமே இயங்காமல் அச்சொட்டாக எல்லாமே மிகக் கச்சிதமான ஒழுங்கமைப்பில் நடந்தால் ,போலீஸ்,,நீதிபதி,,வழக்கறிஞர்,,சிறைச்சாலை ஊழியர் ,,சிறைச்சாலை என்று எதுவுமே தேவையில்லை. இவளவு பேருக்கும் வேலை இல்லாமல் போகும்.
குற்றமும் தண்டனைகளும் இயங்கியலின் ஒரு மாற்றமுடியாத விதி. சீராழிவு அல்லது சீர்குலைவு என்று ஒன்று இல்லை என்றால் புதியன தோன்றும் இயக்கம் நடைபெறாது.
                                                                                                 இது பிரபஞ்ச அளவிலேயே நடக்குது என்கிறார்கள் , மொடேர்ன் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் இல் அதை " எண்டோபி " என்ற தியரியில் நிறுவி இருக்கிறார்கள். ஒவ்வொரு நானோ செக்கனிலும் மைக்கிரோ லெவலில் உள்ள சடப்பொருள்களில் சீரழிவு அல்லது சீர்குலைவு நடக்கிற அதே நேரம் யூனிவேர்சல் அளவில் கொஸ்மிக் ஸ்கேலில் கலக்சிகள் ஒன்றோடு ஒன்று மோதி புதிய சூப்பர் நோவாக்கள் உருவாகுது என்கிறார்கள்.
                                                                            யூனிவேர்சல் அளவில் கொஸ்மிக் ஸ்கேலில் ஒப்பிடும்போது நான் செய்தது மைக்கிரோ லெவலில் உள்ள ஒரு சின்னக் குழப்பம், அதோடெல்லாம் ஒப்பிடும்போது ,,இப்பிடியே யோசித்துக்கொண்டிருந்தேன்
                                                                    சொன்ன மாதிரி சில நிமிடத்தில் திரும்பி வந்து ,
" என்னப்பா ஜோசித்துக்கொண்டு இருந்தாய்,,என்னாவது பொயிண்ட்ஸ் நீயாகவே எடுத்தியா..ஒரு அக்கா தங்கச்சி சாகப்போற அப்பனுக்கு மேலே போட்டுள்ள சொத்து வழக்கு கேஸ் நாலு வருடமா கிடந்தது இழுக்குது ,,அதுவும் ஜூடிக்கல் கோட்ஸ் மால்மோ சிட்டியில,, "
" இல்லை, வேற என்னமோ எல்லாம் யூனிவெர்சல் ஸ்கேலில் ஜோசித்துக்கொண்டு இருந்தேன் "
" அட,,,அதுக்கும் உன் வழக்குக்கும் என்னப்பா சம்பந்தம் "
" ஒன்றுமில்லை, ,அண்டர்சன் நீங்க மார்க்கிட்டுடன் இப்போதே கதையுங்க ,,சுருக்கென்று நடக்கிற அலுவலைப் பார்ப்போம் "
                                                                     மார்க்கிட்டுடன் லாயர் கதைத்தான். மார்க்கிட் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்க்கிட்டோட முதல் குளறுபடியே அவள் உதவி செய்வாள் என்று நினைக்கும் தருணங்களில் உதவவே மாட்டாள் . உதவ மாட்டாள் என்று நினைக்கும் சம்பவங்களில் தலையைக் கொடுத்து உதவுவாள். அவள் மட்டும் தானா இப்படி அல்லது உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரின் பொதுவான குணாம்சம் அதுவா என்று எனக்குத் தெரியாது.
                                                         லோயர் கதைத்து முடிய நானும் கதைத்தேன். சனிக்கிழமை வீட்டுக்கு வா என்று நாலடியில் சுருக்கமாகச் சொல்லிப்போட்டு போனை வைச்சிட்டாள் .
                                                             பழைய நண்பர்கள் அவர் அவர் பாதைகளில் பிரிந்து போனாலும் சில சந்திப்புகளில் கொஞ்சநேரம் நின்று பார்ப்பது போல மார்க்கிட்டுடன் பலவருடம் தொலைபேசியிலில் கதைத்துக்கொண்டு இருந்தாலும் நேரடியாக அவளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை ரெண்டு பேருமே உருவாக்கவில்லை. அதுக்குத் தேவையும் இருந்ததில்லை.
                                                                காலமும் இடமும் திணிப்புகள் அற்று சாதாரணமாய் மனதை ஈரமாகவே வைத்திருந்த ஓடைக்குளிர்மலரின் சுகந்தம் வீசிய இடைவெளிகளில் நிறையவே புரிந்துணர்வு சரியான பயணிப்புத் திசைகளைக் காட்டிக்கொண்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்
                                           சனிக்கிழமை,,,,
                                                               சொர்மலாந்து புல்வெளிப்பிரதேசத்தில் பாச்சல் குதிரைகள் சோம்போறித்தனமாக மேய்ந்துகொண்டிருந்தன , ச்ஜெர்ந்ஹோவ் நெடுங்சாலையில் பேர்ச்பித்துளா மரங்கள் இலையுதிர்குளிர் வருவதுபற்றி விவாதம் செய்துகொண்டிருந்தன ,கேநேஸ்தா வடிசாளைப் புறநகரம் புழுதிக் காற்றில் எந்தக் கனவுகளும் இடைப்புகாமல் உறங்கிக்கொண்டிருந்தது பிளேன் அடைக்கல கிராமம் என்னைப்போலவே ஏதிலிகள் போலிறங்கும் பிளிக்கன் பறவைகளுக்கு திசைகள் காட்டி்ககொண்டிருக்க, மார்க்கிட் வசிக்கும் கிராமப் புற வீட்டுக்குப் போனேன்
...................இடியாப்பச் சிக்கல் 2...தொடரும்...................


ஹம்பர் சைக்கிள்..

அப்பாவிடம் ஒரு ஹம்பர் சைக்கிள் இருந்தது ! எதுக்காக சும்மா மொட்டையாக ஒரு சைக்கிள் இருந்தது என்று சொல்லாமல், மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பசீர் " எங்கட வீட்டில ஒரு யானை இருந்தது " என்று அவரோட புகழ் பெற்ற நாவலில் எழுதத் தொடங்குவாரே அதுபோல " அப்பாவிடம் ஒரு ஹம்பர் சைக்கிள் இருந்தது " என்று எழுப்பம் விட்டுச் சொல்லவேண்டி இருக்கென்றால், அந்த ஹம்பர் என்ற இங்கிலாந்துக் கொம்பனி அந்த அரிதானவகை சைக்கிளை உட்பத்திசெய்தார்கள்.

                                                           எங்கள் ஊரில வௌவாலுக்குத் தலைகீழாக நின்று தாம்பூலம் வைச்ச மாதிரி கிரவல் றோட்டுக்களை புழுதியால நிரவிர மாதிரி உழுதுகொண்டு திரிந்த மற்ற எல்லாச் சைக்கிளுக்கும் இல்லாத ஒரு சிறப்பான விசியம் ஹம்பர் சைக்கிளில் இருக்கு. அந்தப் பிரத்தியேகமான அடையாளமே அதன் வடிவமைப்பில் இருப்பதால் சடாரென்று அடையாளம் கண்டுபிடிக்கலாம்.
                                                                அப்பா கொழும்பில் ஒரு தனியார் வியாபார நிறுவனத்தில் தொடர்ச்சியாக இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக மனேஜர் ஆக வேலைசெய்துவிட்டு , கடைசிக்காலத்தில் எங்களின் வீட்டுக்கு வந்து எங்களோடு அவர் வாழ் நினைத்துக்குக் காரணம் அவரின் தமனி நாடிகளில் அடைப்பு ஏட்படுத்திய ஹார்டியா ஹார்ட் என்ற இருதய நோய்.
                                                      அதிக நாட்கள் அவர் உயிர் வாழும் உத்தேசங்கள் அவரிடமே இருக்கவில்லை போலிருந்தது அவரின் வரவு. அவருக்குப் பலவருடம் கொழும்பில் வைத்தியராக இருந்த இருதயசிகிக்சை நிபுணர் பேராசியர் ஆர் எஸ் தனபாலசுந்தரத்தை அவர் கடவுள்போல நம்பிக்கொண்டிருந்தவர். அந்தக் கடவுளையே கைவிட்டுப் போட்டு ஒருமுடிவோடுதான் வந்திருந்தார்
                                                           எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தபிறகு தலைநகரில் இருந்த தன்னோட வியாபாரத் தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதியாக அவர்களின் தயாரிப்புகள் சிலதை எங்கள் ஊர் டவுனில் ஒரு சின்ன இடம் எடுத்து அதிலிருந்து விநியோகிக்கும் தொழில் செய்தார். சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த டவுனுக்கு காலையில் போவதுக்கும், மாலையில் திரும்பி வருவதுக்கும்தான் அவர் சைக்கிள் வேண்டினார், ஆனால் அப்பா எதட்காக ஹம்பர் சைக்கிளைத் தெரிவுசெய்தார் என்று சொல்லமுடியவில்லை.

எல்லாச் சைக்கிளுக்கும் ஒரு இலட்சினை அதன் நெற்றியில் திருப்பதியில் போட்டசந்தன நாமம் போல இருக்கும். ஹம்பர் சைக்கிளுக்கு அப்படி இருக்கும். அதில் திடகாத்திரமான ஐந்து மடாக்குடியார் போலிருக்கும் இளம் ஆண்கள் ஐந்து திசையிலே நின்று ஒருவரோடு ஒருவர் தங்கள் மண்டையால ஒரே நேரத்தில் மோதுற மாதிரி இருக்கும். இதுக்கு என்ன அர்த்தம் என்று ஜோசித்தே என் மண்டை காஞ்சு போச்சு. ஆனால் அதில ஏதாவது அர்த்தம் இருக்கலாம், சிலநேரம் எங்க மோதினாலும் ஹம்பர் சைக்கிளுக்கு சொல்லும்படியான சேதாரம் வராது என்ற சைம்போல் ஆக இருக்கலாம் போலிருக்கு.
                                                             ஹம்பர் சைக்கிளின் முகத்தில் தெரியும் அடையாளமே அந்த போக் தான். கலியாணம் கட்டிய பெண்ணின் நெற்றியில் இருக்கும் குங்குமப் பொட்டு எப்படி சடாரென்று வேறுபடுத்தி அறிவதுக்கு உதவுமோ அதேபோல அந்த போக் இருக்கும். அதுதான் அந்த சைக்கிளின் முன்னம் சில்லுகளைக் கவ்விப்பிடிக்கும் போக் . அந்த போக் இரண்டு தனித்தனியான இரும்புக்குழாய்கள் இணைக்கப்பட்டு வெல்டிங் செய்யப்பட்டு இருக்கும். அது யோமெட்ரிக்ஸ் மெக்கானிஸ் பிசிக்ஸ்படி அதிகப்படியான தாங்குதிறன் உத்தரவாதம் கொடுப்பது. அறிவியல் ஓரளவு படித்த நாட்களில் இதெல்லாம் அறியமுடிந்தது.
                                                           முக்கியமா மற்ற சைக்கிள்களில் , அய்யர் வீட்டுப் பெண்கள் போல அழகாகவும், அதேநேரம் மென்மையாகவும் இருக்கும் ஏசியா என்ற ஜப்பான்காரனின் சைக்கிளில் எப்பவுமே பாரமில்லாத சைக்கிள். ஆனால் அதன் போக் எப்பவுமே ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் உடையும். அப்படி உடைந்தால் உத்தரவாதமாக முன்னுக்கு முகம் குப்பிற விழுந்து மூக்கும் உடையும். ஹம்பர் சைக்கிளின் போக் என்றைக்குமே உடைந்ததாக வரலாறு இல்லை. இந்த மாதிரியான டெக்னீக்கல் விபரங்கள் தெரிந்து அப்பா ஹம்பர் சைக்கிள் வேண்டியிருக்க லாஜிக் இல்லை. அப்பாவுக்கு பிசினஸ் டாக்டிஸ் நல்லதெரியும் ஆனால் பிராக்டிகல் சயன்ஸ் தெரிந்த ஆள் அல்ல.
                                                            ஹம்பர் சைக்கிள் இங்கிலாந்தில் வெள்ளைக்காரன் வடிவமைத்த சைக்கிள் என்று ஒருமுறை சொல்லி இருக்கிறார் . வெள்ளைக்காரன் வடிவமைத்ததால் அதை முதன்மைப்படுத்தி வேண்டி இருக்கலாம். அதுக்கு ஒரு சான்றும் எங்கள் வீட்டின் சுவரில் படமாகத் தொங்கியது. கொழும்பில் அப்பா வேலை செய்த தனியார் வியாபார நிறுவனம் இங்கிலாந்தின் யூனிலீவர்ஸ் என்ற உலகளாவிய கொம்பனியின் இலங்கைப் பிரதிநிதியாக இயங்கி இருக்கு. அந்த யூனிலீவர்ஸ் நிறுவனம் தங்கள் இலங்கைப் பிரதிகளுக்கு ஒரு நட்ச்சத்திர ஹோட்டலில் கொடுத்த இரவு விருந்தில் கலந்துகொண்ட அப்பா, அந்த நிறுவன வெள்ளைக்கார இயக்குநர்களோடு சேர்ந்து எடுத்தப்படம் தான் அது.
                                                       அதில வெள்ளைக்காரன் கோட் சூட் டை என்று ஐரோப்பிய அடையாளங்களுடன் கையில விஸ்க்கி கிண்ணத்தை வைச்சுக்கொண்டு நிக்க , அவர்களோடு அப்பா வேட்டி , நஷினல் , சலவை என்று தமிழ்க்கலாச்சார விழுமியங்களுடன் நிக்க ,அந்தப்படம் கறுப்பு வெள்ளையில் இருந்தது.வெள்ளைக்காரன் வெள்ளையும் சொள்ளையுமாய் இருப்பதால் மேன்மையானவைகளில் முன்னோடியானவன் என்ற தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் இருந்திருக்கலாம்.
                                                             அதனால அந்தப் படத்தை என்லார்ச் செய்து எங்கள் வீட்டு வரவேட்பு அறையில் அவர் மாட்டி வைத்திருந்தார். அதுக்கு பின்னால் உள்ள செய்தி ஒருவேளை அவர் வெள்ளைக்காரர்களை பெரிய மனிதர்களாக நினைக்கும் ஒரு எடுகோள் இருந்திருக்கலாம். அதனால ஹம்பர் சைக்கிளை வேண்டுவதுக்கு அவர் தெரிவு செய்திருக்கலாம்

வாழ்க்கையில் சில சமயம் நடந்து முடிந்த சிலவற்றை நினைத்து நம்மை மறந்து சிரிப்பதுக்கும் , சில சமயம் நம்மை மறந்து குற்றவுணர்வில் வருந்திக்கொள்வதுக்கும் சில சம்பவங்களை அதே வாழ்க்கைதான் விட்டு வைத்திருக்கும் . அப்படியான ஒருசில சம்பவங்களின் தொகுப்பில் கட்டாயம் அந்த ஹம்பர் சைக்கிளும் ,அப்பாவும் பலவிசியங்களில் பிரிக்கமுடியாமல் பின்னப்பட்டு இருக்கிறார்கள். அதைவிடவும் அந்த சைக்கிள் சிலவருடங்களே எங்கள் வீட்டில் நின்றாலும் அது பதிவுசெய்துவிட்டுப் போன காலப்பெருவெளியை நிரப்பிய சம்பவங்கள் நிறையவே இருந்தது.
                                                                     ஓடிப்பழகவும் எங்கள் வீட்டில் ஒரு லொட்டு லொடக்கு சைக்கிள் அதுக்கு முன்னம் இருந்ததில்லை. முக்கியமாக, நான் உட்பட அடுத்தடுத்த வயதில் எங்கள் வீட்டில் இருந்த என் ஆண் சகோதர்கள் அந்த சைக்கிள் புதிதாக வந்த நேரம் எங்கள் வீட்டுக்கு ஒரு அஸ்வமேதக் குதிரை வந்ததுபோலவும், நாங்கள் எல்லாருமே ஒரே இரவில ராஜகுமாரர்கள் போல மாறிவிட்டது போலவும் உணர்ந்தோம்.அல்லது பகல்க் கனவு கண்டோம். அவ்வளவு சதோஷ வெளிச்சம் கொண்டுவந்தது அந்த ஹம்பர் சைக்கிள்.
                                                           ஆனால் எங்கள் ரோட்டு வீதியில் சிவனே என்று படுத்திருந்த நாய்களின் திகில்க் கனவிலே ஜமன் வந்ததுபோல நினைத்து இருக்கலாம், அதை உறுதிப்படுத்திற மாதிரியான நிறையக் காரண காரியத் தொடர்பு ஹம்பர் சைக்கிள் வந்த சில நாட்களிலேயே தொடங்கிவிட்டது .
                                                                 போக் தவிர மற்ற எல்லா விசயத்திலும் வெளிப் பார்வைக்கு வேறுபாடுகள் இல்லாமல் இருந்த ஹம்பர் சைக்கிள், மற்ற சைக்கிள்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் நிறை அளவில் கொஞ்சம் பாரமான சைக்கிள். அதன் பொருத்துக்களில் இருக்கும் இரும்புச் சேர்க்கை அதுக்கு காரணமாக இருந்திருக்கலாம். 
                                                                   அல்லது இங்கிலாந்தில் வெள்ளைக்காரன் அப்படித்தான் சைக்கிளை காற்றிலே பறக்கிற மாதிரி டிசைன் செய்யாமல் நிதானமாக புவியீர்ப்பு விசையோடு அனுசரிக்க அப்படி வடிவமைப்பானோ என்றும் குழப்பமாக இருந்தது. அதன் பாரம் அதன் உறுதிக்கு இன்னொருவிதத்தில் சான்றிதழ் கொடுத்துக்கொண்டிருந்தது என்பது உண்மைதான் .

பின்னேரங்களில் அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு அதன் பாருக்காலா ஒரு காலை விட்டுக் கெந்திக்கெந்தி, எட்டாத ஹாண்டிலை எட்டிப்பிடித்து உந்தி உந்தி ஓடப்பழகியதுதான் எங்களின் இளமை வாழ்க்கையில் ஒரு பறவையின் முதல்ப் பறப்புப்போன்ற அலாதி அனுபவம். எனக்கு அப்படி இருந்தது. நிறைய கிடுகு வரிச்சுமட்டை வேலிகளை அது தடவி, வேலிக் கதியால்களை முறித்து அடிவேண்டி இருக்கு.
                                                                 எங்கள் ரோட்டில பலர் காங்கேசன்துறை சீமெந்து பாக்ட்ரியில் உட்பதிசெய்யப்பட்ட சீமின்ட் இல மதில் கட்டி இருந்தார்கள் . அந்தச் சீமெந்துச் சுவர் எப்படிப் பலமா இருக்கா என்று காங்கேசன் சீமெந்தின் கலப்படமில்லாத நம்பகத்தன்மையை விசாரித்திருக்கு. அந்தமாதிரியான அடிபாடுகளில் சீமெந்துச்சுவரோடு முழங்கை மூட்டு சொல்லிவெச்ச மாதிரி குத்து வேண்டியிருக்கு
                                                                        ரோட்டில படுத்திருக்கிற நாய்களுக்குத்தான் அந்த ஹம்பர் சைக்கிள் சிம்ம சொப்பனம் , நாய்கள் எப்பவுமே அதில இருந்து தப்ப ஸ்ட்ராடஜிக் பிளான்ஸ் போட்டு வைச்சிருக்கும், நாங்கள் பாருக்கால காலைவிட்டு அகோர வேகத்தில போகிற ஒவ்வொரு நிகழ்விலும் நாய்கள் தப்பப் போட்டு வைச்சிருந்த ஸ்ட்ராடஜிக் பிளான்ஸ் எப்பவுமே சிதறிவிடும். 
                                                                 பலநேரம் முன் சில்லால் முகத்தில உதையோ, அல்லது பின் சில்லு காலுக்குமேலால் ஏறி உழக்கியோ , அல்லது எசகுபிசகா மொத்தமாக ரெண்டு சில்லும் நடுவில மாட்டியோ உத்தரவாதமாக உடம்பில சேதாரம் வேண்டிக்கொண்டு குளரிகுளறி ஒடித்தப்புங்கள் ,
                                                                      என்னத்ததான் நாய்கள் நம்பிக்கையோடு தப்புவதுக்கு ஸ்ட்ராடஜிக் பிளானாகப் போட்டு வைச்சிட்டு படுத்திருந்தாலும் ஒருநாளும் நாய்களின் ஸ்ட்ராடஜிக் பிளான்ஸ் வென்றதேயில்லை, ஹம்பர் சைக்கிள் வெள்ளைக்காரன் லண்டனில் வடிவமைத்ததாலும் அதைச் செலுத்திய வட்ருக்ஸ் தேரோட்டிகளின் லகவதாலும் எப்பவுமே வென்றுகொண்டிருந்தது.
                                                                          சில நாட்கள் குறுக்க மறுக்க கடக்க நடக்கும் மனிதர்களிடம் தூஷணத்தில் திட்டு வேண்டிய அனுபவம் இருக்கு. உண்மையில் அந்த ஹம்பர் சைக்கிள் எங்களை விட அதுவே நிறைய அனாவசியத்துக்கு அடிவேண்டி இருக்கு. என் சகோதரங்கள் எப்படி உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எல்லாருமே எப்போதும் தவறாமல் முழங்காலை சிராய்ச்சிக்கொண்டுவந்துதான் ஹம்பர் சைக்கிளை ஸ்டாண்ட்டில நிட்பாட்டுவோம் .
                                                                                ஹம்பர் சைக்கிளிலும் நிறைய நெளிவுகள் சுளிவுகள் யுத்தக்களத்துக்குப் போட்டு வந்த அடையாளமாக அங்கங்கே இருக்கும்,கொஞ்சம் ஒடிக்கழைத்த மூச்சுகளை ஆசுவாசமாக அப்போதுதான் வேண்டிக்கொள்ளும் ஹம்பர் சைக்கிள். முழங்காலை சிராய்ச்சிக்கொண்டுவந்து கொஞ்சநாள் நொண்டுறது .பிறகு அந்தப் புண் ஆறும்வரை ஹம்பர் சைக்கிள் நிம்மதியாய் நிக்கும். அதன் பிறகு பழையபடி பழையபடி சவாரித்தம்பரின் வண்டில்மாட்டு ஓட்டம் தொடங்கும்.
                                                                                         சில நேரம் அப்பா வேட்டியை முழங்கால் வரையில் மடிச்சுக்கட்டிக்கொண்டு எங்களுக்குப் பின்னால பாலன்ஸ் தவறி விழவிடாமல் சைக்கிளை பிடிச்சுக்கொண்டு மூச்சு இரைக்க இரைக்க ஓடிவருவார், அவர் உடல்நிலைக்கு இந்த மாதிரியான ஓடம் எல்லாம் ஒத்துவராது. ஆனாலும் நாங்கள் விழுந்துவிடக் கூடாது என்ற கரிசனையை அப்படிச் செய்திருக்கலாம்.

சைக்கிள் எப்பவுமே புவியீர்ப்புக்கு நேர் குத்தாக ஒரு இடையறாத விசையில் இயங்கினால் விழாமல் ஓடும் என்ற ஐசக் நியூட்டன் சொன்ன அறிவியல் உண்மை அப்போதுதான் நடைமுறையில் பார்க்கமுடிந்தது. அதிலும் நாங்கள் முதன் முதல் பாலன்ஸ் பிடிக்கக் கற்றுக்கொண்ட தருணங்களில் அப்பா எங்களோடு ஓடிவந்திருக்கிறார். அது ஒருவிதமான ஆசிர்வாதம் போல இருந்திருக்கு.
                                                                          அவர் வேலைக்கென்று ஹம்பர் சைக்கிள் வேண்டிய அப்பாவை விடவும் நாங்களே ஒடிப்பழக அந்த ஹம்பர் சைக்கிளை பயன்படுத்தியதால், அதில எப்பவுமே குக்கல், விக்கல், சிக்கல், பிக்கல் , பிடுங்கல் போல சின்னச் சின்ன உடைவுகளோ, அல்லது குழப்பங்களோ அதென்ன மேனியெங்கும் வரும். அப்பா ஒருநாளுமே அதையிட்டு எதுவுமே சொன்னதில்லை அதைப்பற்றிக் கவலைப்பட்டு கடிந்துகொண்டதேயில்லை. 
                                                                 அதுக்கு அவரே அவரோட நோயோடு போராடிக் களைத்துப்போகும் கடைசிக்காலத்தில் எங்களோடு இருப்பதை உணர்ந்திருக்கலாம் .
                                                                            அதை அப்பப்ப திடீர் திடீர் என்று நடுச்ச சாமங்களில் நெஞ்சுக்குத்து வரும் போதெல்லாம் நெஞ்சைப் பிடித்து இருமியபடி சொல்லியும் இருக்கிறார். அதனால அந்தக் ஹம்பர் சைக்கிள் அவரைப் பொறுத்தவரையில் நிலையாமையின் இன்னொரு குறியீடாக இருந்திருக்கலாம். ஆனால் தவறாமல் ஹம்பர் சைக்கிள் நாங்கள் எவ்வளவுதான் குத்தி முறிச்சாலும் அது இயல்பாக ஓடவேண்டும் என்பதால் கிரீஸ் போட்டு போல்டஸ் மாத்தி அதைக் கழுவிப்பூட்டும் சடங்கை எப்படியும் மாதத்தில ரெண்டுமுறை விருப்பமாகவே செய்துகொண்டிருந்தார் .

அப்பா ஹம்பர் சைக்கிளை எப்பவுமே ஒரு குறிப்பிட்ட ஒருவரிடம் தான் கழுவிப்பூட்டக் கொடுப்பார். அந்த சைக்கிள் திருத்துபவர் அப்பாவின் வயதில இருந்தார். அவர் " சைக்கிள் திருத்துமிடம் " என்று, நாலஞ்சு கம்பிக்கட்டு பிஞ்சுபோன டயறும் , லெக் எடுத்து சிதறிய ரிம்மும் தொங்கவிட்டு கிரீஸ் அப்பியபடி தகரத்தில் கரல் பிடிச்சுப்போய் ஒரு உழைப்பாளியின் வறுமையைப் பதிவுசெய்யும் போட் தொங்கிற கடை என்று எதுவும் வைத்திருக்கவில்லை அவரோட வீட்டுக்கு உள்ளே பத்தி இறக்கி வேர்க்சொப் வைத்திருந்தார்.
                                                                                அவரைப் பார்த்தால் யாருமே, வழமையாக வாடி வதங்கி காத்துப்போன டயர் போல இருக்கும் சைக்கிள் மெக்கானிக் போல இருக்க மாட்டார் , முதல் எடுப்பிலேயே யாருமே பார்த்து சைக்கிள் மெக்கானிக் என்று சொல்லமாடடார்கள். ஜலராக் கட்டை சுத்துற குஸ்தி பயில்வான் பொடி பில்டர் போல ஆரோக்கியமான தேகம். அதுவும் வாழ்க்கை அரைவாசி விழுங்கிய அந்த வயசில. எப்பவும் ஸ்ரீலசிறி ஆறுமுகநாவலர் போல உடம்பு முழுக்க திருநீற்றுப் பட்டை அடிச்சு இருப்பார். நிறைய சமயப் புத்தகங்கள் வைச்சிருப்பார்.
                                                                      அப்பாவும் அவரும் ஹம்பர் சைக்கிளும் சந்திக்கும் சில தருணங்கள் நானும் உடனிருந்திருக்கிறேன். அவர் அமைந்தகரை மறைமலை அடிகள் பெயரால் நடைமுறைத் தனித்தமிழ் இயக்கம் நடத்திய என் அப்பாவைக் கண்டவுடனே , தூய தமிழில்
" என்ன நடராசர், கண்டுகனகாலம் ,"
" சைக்கிள் கொஞ்சம் சத்தம் போடுமாப் போல இருக்கு ,ஞானாசிரியர் "
" என்ன நடக்குது,,என்ன நடந்தது,, என்ன நடக்கவேண்டும் "
"  அதைத் தாங்கள் தான் கண்டறிந்து சொல்லவேண்டும் ,ஞானாசிரியர்  " 
" சிந்துமணி வைரநடை ஸ்ரீ ராமன் போலிருந்த உந்துருளிக்கு என்ன வந்தது,, சொல்லும் நடராசர், "
" ஓம் ஓம், கொஞ்சம் பிரச்சினை குடுக்குது கண்டியலே  ,,ஞானாசிரியர்  " 
" உந்துருளிக்கு பரிகாரம் செய்யவேண்டும் போல இருக்கே நடராசர் ," 
 " ஓம் ஓம், ஞானாசிரியர் "
" இந்துசாதனம் கடைசி சஞ்சிகையில் தாங்கள் எழுதிய  கட்டுரை  வாசித்தேன் நடராசர் "
" மிகவும் சதோஷம் சந்தோஷம்  ஞானாசிரியர் "
" ஆறுமுகநாவலரின் முதன்மையான சீடன் ஒரு சாக்கு வியாபாரியா என்ற கட்டுரை பற்றி நிறய விசியம் கதைக்க வேண்டும் இண்டைக்கு நடராசர் "
                                                                                     இப்படித்தான் தொடங்குவார், என்னோட அப்பா நடராசர் தமிழ் மொழிக்கு உயிரைக் கொடுக்க நிக்கிற பயங்கரவாதி, அந்தாளோ சைவசயமத்துக்கு எல்லாத்தையும் இழக்கத்தயாரா நிக்கிற தீவிரவாதி. அப்புறம் ரெண்டுபேரும் கதைக்க சந்தர்ப்பம் கிடைச்சா ஆளை ஆள் தள்ளிவிழுத்தி கால நேரம் தள்ளிக்கொண்டு போவதே தெரிவதில்லை ,
                                                                                
அவரோட தேகக்கட்டு முல்லைத்தீவு முத்திரை மரம் போல இருந்தாலும், முகத்தில ஒருவித விகாரம் இருந்தது. அவர் மூக்கு சப்படடையாக உள்வாங்கி அமுங்கிப்போய் இருக்கும். அவ்வளவு சின்ன மூக்கு அதில ரெண்டு சின்ன ஓட்டைகள் , சரியா சொல்வது என்றால் சொக்கன்கடை வடை போலிருக்கும். அதனால அவர் குரல் கீச்சிட்டான் சுடலைக்குருவி கத்துவது போலிருக்கும். சிலநேரம் அவர் வாயால கதைக்கிறாரா அல்லது காதலா கதைக்கிறாரா என்று குழப்பம் உண்டாக்கும்.
                                                                                            அந்தாள் அப்பா சைக்கிளைக் கொடுத்தவுடன் , சீட்டில நாட்டு வைத்தியர் போல ஒரு குத்து விடுவார், அதன் சத்தத்தை உன்னிப்பாகக் கனைப்பார், அடிச்சுப் பிழிஞ்சு தோய்ச்ச் வேட்டியை காற்றிலே விசுக்கிற மாதிரி நாலுதரம் உதறிப் பார்ப்பார்,ஐயர் பூசைக்கு கைமணியை அடிக்கிற மாதிரி ஒரு ஹாண்டிலில் மட்டும் பிடிச்சுக்கொண்டு அங்காலும் இங்காலும் பக்கவாட்டில சரிச்சு ஆட்டிப்பாப்பார்,

                                                                 பிறகு அவர் வீட்டு முற்றத்தில் ரெண்டு ரவுண்ஸ் ஓட்டிப்பாப்பார் . கொண்டுவந்து ஆடு அறுக்கிறதுக்கு கொழுவிக் கம்பியில் கட்டித் தொங்கவிடுற மாதிரி வேர்க்சொப் கூரையில இருந்து கட்டி இறக்கப்பட்ட ஒரு பழைய சைக்கிள் செயினில் உள்ள கொழுக்கியில் துக்காக்கி தொங்கவிடுவார் ! அவளவுதான் .
                                                                                            அவர் கணிப்புக்கள் சரியாக இருக்கும்படியாக தொடையில புண் நடையிலே காட்டுற மாதிரி ஹம்பர் சைக்கிள் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கும் !
                                                                                    அதுக்குப் பிறகு அப்பாவும் அவரும் ஹம்பர் சைக்கிளை மறந்துவிடுவார்கள். சைக்கிள் பின்னம் சில்லில அசைந்தபடி தொங்கிக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும். அதிகமா அவர்தான் பேச்சைத் தொடங்குவார். அது திருமுருகாற்றுப்படையில் இருந்து, உமாபதி சிவாச்சரியார் , சிவஞ்ஞானபோதம் , எல்லாம் இறங்கித் துலாவி திருத்தொண்டர் புராணம் வரைக்கும் அலைந்து கொண்டிருக்கும். அப்பாவும் அவரும் தேவரம் பாடிய நாயனார்கள் காலத்துக்குள் நுழைந்து வெளியேறி புராண இதிகாச சமய விவாதங்களில் ஆழமாகிக்கொண்டிருப்பார்கள்.

பலநேரம் நினைப்பது இந்தாள் எதர்க்காக சைக்கிள் திருத்திரா வேலை செய்யிறார் என்று. பேசாமல் நல்லை ஆதினத்தில போய் குருமகா சன்னிதானம் போல இருக்கலாம் என்று. ஆனாலும் வாழ்க்கையில் இப்படியான ஆழ்மனது விருப்பங்களுக்கு செய்யும் தொழிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் சமூகத்தி சமாந்தரமாகப் பயணிக்கும் மனிதர்களை நாங்கள் சந்திக்கிறோம் தானே. 
                                                                                                  செய்யும் தொழில் என்பது ஒரு வாழ்வாதார உத்தரவாதம். அந்தக் கொம்போர்ட் சூன் உத்தரவாதமாக சில நம்பிக்கைகள் கொடுக்க அதன்மேல் கால்கள் இல்லாத கட்பனையோடோ. விருப்பங்களோடு நடந்துகொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளம் பேர் இந்தப் பூமிக்கு போக்குகாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்களே !
                                                                            கழுவிப்பூட்டி புதிதாக கிறிஸ் அடைஞ்சு , போல்ஸ் உருளைகள் மாற்றியபின் ஹம்பர் சைக்கிள் முதன் முதல் வீட்டுக்கு வந்து நிட்கும் போது கஸ்தூரிக்கலைமான் போல பொலிவிருக்கும், அதை ஓட்டும் போது வெள்ளிப்பணம் அள்ளிவீசியது போல அதன் சில்லுகள் உருளும்போது எழுப்பும் சத்தத்தில் ஒருவித சொகுசுத்தனம் இருக்கும். 
                                                                     எல்லாம் ஒருநாள் கூத்துதான் !ரெண்டாம் நாளே அதை பழையநிலைக்கு கொண்டுவந்து சேர்த்திடுவம். அப்பா அதுக்கும் ஒன்றும் சொல்லவே மாட்டார். ஹம்பர் சைக்கிளையும் எங்களையும் ,நாங்கள் போட்டிருக்கிற அரைக்காட்சட்டையும் பார்த்து சிரிச்சுக்கொண்டிருப்பார்.
                                                                       எப்படியோ அன்றைய முதல் நாள் எங்கள் வீடு முழுவதுமே தலைவாழை இலைபோட்டு ஊரையே விருந்துக்கு அழைத்தது போல கலகலப்பா இருக்கும். அப்பா ஞானப்பிரகாசம் தேத்தண்ணி கடையில வாழப்பழவாய்ப்பன் வேண்ட செலவுக்கு காசும் தருவார் ,ஆனால் அதை சொல்லும் விதம்   விசித்திரமான சிங்கள வார்த்தைகளையோடு வரும்   
" சாக்குப் பையில சில்லறையா சல்லி இருக்கு எடுத்துக்கொண்டு போங்கடா "
                                                                               இப்படித்தான் சொல்லுவார், காசை அவர் சிங்களத்தில் சொல்லும் சல்லி என்றுதான் சொல்லுவார், ஒருநாளும் காசு,பணம் என்று சொன்னதில்லை, சிங்களமொழி எனக்கு இப்ப தெரிவதால் அது தெரியும் . அதேபோல் சேட்டுப் பொக்கெட்டை சாக்குப்பை என்றுதான் அந்தநேரம் சொல்லுவார், ஏன்தான் அப்படி சொல்லுவாரோ என்று இன்றுவரை எனக்கு விளக்கம் கிடைக்கவில்லை,
                                                                                அந்தநேரம் சேட்டுப் பொக்கெட்டை சாக்குப்பை என்று ஏன்தான் எங்கள் அன்புக்குரிய அப்பா அப்படிச் சொன்னார் என்று என்னோட உடன்பிறப்புகளிடம் கேட்கலாம்தான், அதுகள்தான் பித்தம் தலைக்கேறி புளிச்சல் ஏவறை விட்டுக்கொண்டு இங்கிலீசிலையும், பிரெஞ்சிலேயும், டொச்சிலையும் பினாத்திக்கொண்டு வேலைக்கு ஆகாத மாதிரி எனக்கெதிரா நிக்குதுகளே.

ஒரு சைக்கிளில் இருந்து நாம் எதையும் வாழ்க்கைப்பாடமாக கற்றுக்கொள்ள முடியாது என்பது உண்மை என்று நினைப்பவர்களுக்கும் இனி வரப்போற கதைக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை . 

                                                                     நானும்தான் வாழ்க்கை பற்றிய உணர்வற்ற விடத்தல் வயதில் , நினைவுகளையோடு சமாந்தரமாகப் பயணித்த ஒரு பொருளின் பெறுமதி பற்றி அடிப்படை புரிதல் இல்லாத ஒரு காலத்தில் அந்த ஹம்பர் சைக்கிள் தொலைந்து போவதுகுக்குக் காரணமாயிருந்தேன், அந்த உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

டவுனில முனியப்பர் கோவிலுக்கு அருகில் இருந்த  ஒல்லாந்தர் கோட்டையைச் சுற்றி  முற்றுகை முறியடிப்பு என்று    யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்த ஆண்டுகளில் ஊர்ல இருந்து கொழும்புக்கு பயணிக்கும் பயணிகள் டவுனில் இருந்து வெகுதொலைவில் இருந்த ஒரு இடத்தில இருந்துதான் பிரயாணம் தொடங்குவார்கள். 

அந்த இடத்துக்கு தான் பின்னிரவிலும் கொழும்பில் இருந்து வரும் பயணிகள் வந்திறங்கி அவர்களின் வாழ்விடங்களுக்குப் போகக் காத்திருப்பார்கள். அப்போதெல்லாம்  இரவுகளில் வாகன வசதி இருக்காது. அவர்களை ஏற்றிக் கொண்டுபோய் விட சைக்கிள்களுடன் பலர் நிட்ப்பார்கள். சைக்கிள் தான் கால் டாக்சி போல அப்போது முக்கிய பப்ளிக் டிரான்ஸ்போர்ட் .