Friday, 5 January 2018

இடியாப்பச் சிக்கல் 1

கறுத்தப் பூனையை மடியில வைத்துக்கொண்டு இருட்டில சகுனம் பார்ப்பது போலிருந்தது அந்த லாயரின் அலுவலகத்துக்குப் போன போது . அவ்வளவு பூனைப் படங்கள் சுவரில் தொங்கியது. எல்லாமே புஸ் வாக்னர் என்ற டென்மார்க் நாட்டு ஓவியர் வரைந்த படங்கள். ஒரு லாயர் எதுக்காக பூனைப்படங்களை முதன்மைப்படுத்தி காட்ட்சிக்கு வைத்திருக்கிறார் என்று விளங்கவில்லை. பூனைகள் அலட்டிக்கொள்ளாத புத்திசாலியான ஜீவன்கள். அது காரணமாக இருக்கலாம்.

                                                              ஒரேயொரு பிரேம் போட்ட படத்தில லாயர் லம்பர்ஷினி ஸ்போர்ட்ஸ் காருக்கு அருகில் வெற்றிக்கேடயம் ஒன்றைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நிக்கும் படம் மாட்டி இருந்தது.
                                                              அந்த அலுவலகத்தில் நான் சந்திக்கப்போன சீனியர் லாயர் மட்டுமே ஒரேயொரு ஆண். அவருக்கு ஜூனியர் ஆக வேலைசெய்து கொண்டிருந்த இளையவர்கள் எல்லாருமே இளம் பெண்கள். தாய்வீட்டிலேயே அழகுக்கு அணிந்துரை எழுதியது போல இருந்தார்கள். ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்படட தொடரான அலி மக்கபேல் இல் வரும் கதாநாயகி அலி மக்கபேல் போலவே அழகான கட்டமைப்பில் உட்சாகமான வேலைச் சூழ்நிலையை இயல்பாகவே அமிர்தாஞ்சன வாசனையாகப் பரவவிடும் இளம் லாயர்கள்.
                                                             அந்த லாயர் நிறுவனம் ஸ்டோக்கோலமிட்க்கு வெளியே ஒரு அதிகம் பிரபலமில்லாத இடத்தில இருந்தது. அந்த இடத்துக்கு சொன்ஷுபாரி என்று படட உடனேயே நினைவுக்கு வந்தது மார்க்கிடின் கொள்ளுத் தாத்தா .
                                                          கார்ல் மார்க்ஸ் போலவே கொள்ளைத் தாடியோடு பருத்த உருவமான நிலச்சுவான்தரான திருவாளர் நர்டன்மார்க் சுங்கானில் சுருட்டு அடைஞ்சு பத்தவைக்கும் கறுப்பு வெள்ளைப் படத்தை அவள் எங்கள் வீட்டு முன்னறையில் மாட்டி இருந்தாள் . மார்க்கிட் சின்ன வயதில் அவள் வளர்ந்த அந்த இடத்துக்கு ஒரேயொரு முறை கூட்டிக்கொண்டுபோய்க் காட்டியும் இருக்கிறாள்.
                                                                  லாயர் அலுவலகத்தில் சவுகரியமான சோபா வரவேட்பு அறையில் போடப்பட்டு இருந்தது . ஒரு இளம் ஜூனியர் வந்து கொஞ்சநேரம் காத்திருக்கும் படி சொன்னாள். அவள் நெற்றிப் புருவ மயிர்களை மழுப்பி வழித்து கறுப்புப் பென்சிலால் அவுட்லைன் போட்டு இடதுபக்கக் கிளிச் சொண்டில் பியர்சிங் வளையம் கொழுவி இருந்தாள் .
                                                                    ஒரு சின்ன மேசையில் தானியங்கிக் எக்பிரஸோ கோப்பி மிஷின் இருந்தது. ஜன்னல்களில் திரைச்சீலை வெளியே உள்ள மரங்களை நிழலாக அசைத்துக்கொண்டிருந்தது . சோபாவுக்கு முன்னே இருந்த கண்ணாடி மேசையில் செழிப்பான அந்தூரியம் மலர்கள் ஒரு வாஸில் வைக்கப்பட்டிருந்தது.
                                                                           கொஞ்ச நேரத்தில் சீனியர் லாயர் இறுக்கிச் சாத்தப்பட்டிருந்த அவரோட கொண்டமேனியம் அறையத் திறந்துகொண்டு வெளியேவந்தார். அவர் கையில ஒரு நோட்டுப் புத்தகமும், ஹெவ்லட் அண்ட் பக்காட் மடிக்கணணியும், சில பென்சில்களும் இருந்தன, அலட்சியமான கண்களில் அளவுக்கு அதிகமாக நிறைய சட்டச் சிக்கலான கேஸ்களை லாகவமா வென்ற தைரியம் இருந்தது. அது எனக்கு நிறையவே நம்பிக்கை கொடுத்தது. ஏனென்றால் என்னோட கேஸ் ஒரு இடியாப்பச் சிக்கல் போன்ற கேஸ்.
" நீதானப்பா அந்த ஆள்.."
" ஓம் ஓம் ,,நான் தான் அந்த அப்பாவி "
" என்னது அப்பாவியா,,,,அதை நீ இப்ப சொல்லக்கூடாது ,, உன்னோட பெயர் இவளவு நீண்டதாக இருக்கே,,வாயுக்க நுழையுதே இல்லையே,,உன்னை எப்படி சுருக்கமாக கூப்பிடுவது,,"
" எனக்கு கிடுக்குப் பிடிபோல சுருக்கமான பெயர் இருக்கு "
" உன் பெயரைச் சொல்லி உரையாடினால்தான் நெருக்கமாக இருக்கும். வெளிநாட்டவர்களின் பெயர்களே சுவாரசியம்,,வாசித்து விளங்கிறதுக்கு அரை வேலை நாள் தேவை இல்லையா,, ."
" ஓம் ஓம்,,அதில ஒண்டும் பிரச்சினை இல்லை ."
" ஏனென்றால் இந்தக் கேஸ் எடுத்த எடுப்பில கவிட்டு முடிக்க முடியாத கேஸ்.,,நிறைய எடுக்கும்,,மாதக்கணக்கே எடுத்து கோடு கச்சேரி வாசல்படி என்று ஏறவைச்சு அலைக்கழிக்கலாம் ,,இப்பதான் வாசித்துப் பார்த்தேன் உன் கேஸ் "
" ஓ,,அப்படியா,,சிம்பிளா முடியாதா "
." அதுக்கு சான்ஸ் நிகழ்தகவுப்படி சொல்லுறது என்றால் பத்துக்கு ஒன்றுதான் இருக்கு..."
" ஓ,,அப்படியா,,"
" ரெண்டு முக்கிய சுவீடிஷ் அரச அலுவலகங்கள் உனக்கு எதிராக சட்டப்படி வழக்குத் தொடுத்து இருக்கின்றன "
" அட..."
"பேந்துபார், என்ன அட போடுறாய்,, இந்த ரெண்டு முக்கிய சுவீடிஷ் அரச அலுவலகங்களோடு தனக்கிறது,,புலியோடு வாலைப்பிடிச்சுக்கொண்டு ஓடுறது போல "
" அட..இது அநியாயத்துக்கு அகடவிகடமா இருக்கே "
"பேந்துபார், என்னப்பா,,,சின்னப் பிரச்சினையை இடியாப்பச் சிக்கல் போல ஆக்கிவைச்சுப்போட்டு சிம்பிளா முடியாதா என்று கேட்க்கிறாய் "
" இல்லை,,அதில்ல புலியின் வாலைப்பிடிக்கிறது என்ற வார்த்தைப் பிரயோகம் வயித்தில புளியைக் கரைக்குது "
" வேற என்னெண்டு சொல்லுறது..புலியின் வாலைக் கைவிடால் புலி அடிச்சுக் கொண்டு போடும்..ஆனாலும் பார்க்கலாம்,,,ரெண்டு கேஸ் இதுபோல முன்னம் எடுத்து வாதாடி இருக்கிறேன்,"
"
" ஓ அதைக்கேட்க வயித்தில டின்பால் வார்த்த மாதிரி இருக்கு "
",,நீ முதல் பொய் புரட்டு புரளியை ஒரு பக்கமா உன்னோட மட்டும் வைச்சுக்கொண்டு எனக்கு உண்மையை சொல்லவேணும் ,,கொலையே செய்து போட்டு வந்திருந்தாலும் லாயரிடம் மட்டும் உண்மை சொல்லவேணும், மிச்சம் நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம் "
                                                                                          என்று நிறுத்தாமல் சொல்லி முடிச்சுப்போட்டு, எனக்கு முன்னே சுற்றிக்கொண்டு இருந்த குஷன் கதிரையை இழுத்துப்போட்டுக்கொண்டு இருந்து கேட்டார் . நான் வாய்க்குள் நுழையுறமாதிரி நாலு சொல்லில் என் பெயரைச் சொன்னேன். கழுத்தில் கட்டி இருந்த டையை கொஞ்சம் இளக்கி லூசாக்கிப்போட்டு புஸ் வாக்னரின் பூனைகளை ஒருமுறை சரிபார்த்துப்போட்டு நோட்டில் என் பெயரை பிள்ளையார் சுழி போட்டு நோட்டுப் புத்தகத்தின் வலது மூலையில் குறித்துக்கொண்டார்.

அந்த லாயர் பார்க்கிறதுக்கு சப்பிறானோ மாஃபியா படத்தில வாற டோனி கடல்பினோ போன்ற அகன்ற முகம் உள்ளவர். முகத்துக்கு பொருந்தாத முழுவியளம் போல இத்தாலியன் மூக்கு . ஸ்டிக் லார்சன் அண்டர்சன் பெயர் ஆதியான சுவீடிஷ் பெயர். காட்டுமாவிலங்கு மர வாட்டசாட்டமான தோற்றம். எல்விஸ் பிரெஸ்லி போல வடக்குத் தெற்கு வாடைக்காற்றில் அலைபாய்ந்து முன் நெற்றியில் விழும் நேர்த்தியான மயிர், ஜி ஜி பொன்னம்பலம் போல குறுக்கு விசாரணையில் வெருட்டி மருட்டும் கிரிமினல் லோயர் போலக் கண்கள் இல்லை. பூனைக்கண் போல பசுந்தாக இருந்தது அதில் அமுக்கமாக சந்தேகமும் இருந்தது .
                                                                     விலையதிகமான ஒமேகா ஸோர்னோகிராஃ பவுன் கைக்கடிகார மணிக்கூடு, லம்பர்ஷினி ஸ்போர்ட்ஸ் கார், டிரேஸ்மான் ட்ரேட்மார்க் கோட் சூட்டில் சீனியர் லாயரின் பந்தா அந்த இளம் ஜூனியர் லாயர் பெண்களின் சனிக்கிழமை இரவுகளை சந்தேகப்பட வைத்தது. நமக்கென்ன வந்தது வசதியானவன் அல்வா திண்ணுறான், வசதியில்லாதவன் வெறும்வாயில் அவலை மெல்லுறான். முதல் நான் போன விசயமே என்னோட முக்கிய அலுவல்
" புலிவாலைப் பிடிச்ச மாதிரி என்றால்,,,அதில இருந்து தப்ப குறுக்கு மறுக்க பாயும் வழியேதும் இல்லையா ,,அண்டர்சன் "
" இருக்குப்பா,,புலி ஒருநாள் காட்டுக்குள்ளே எசகு பிசகா எப்பாவது எங்காவது ரெண்டு மரத்துக்கு நடுவில தலைய கொடுத்து மாட்டிச்சுது என்றால் .வாலை உதறிப்போட்டு .தப்பி ஓடவேண்டியதுதான் ,,அதுதான் சாத்தியமான ஒரே சந்தர்ப்பம் "
" ஹஹஹஹஹஹஹ "
" பேந்துபார்,,இப்ப எதுக்கு சிரிக்கிறாய்..நான் சீரியஸ் ஆக சொல்லுறேன் "
" எங்கட ஊர்ல இப்படியான ஒரு கொசப்புக் கதை இருக்கு,,அதை நினைச்சேன் சிரிப்பு வந்தது அண்டர்சன் "
" ஓ,,அப்படியா,,அதென்ன கதை ,,சொல்லுப்பா கேட்பம் "
" ஒரு காட்டில ஒரு வடிவான பெண் சிங்கம் இருந்தது,,அதே காட்டில ஒரு தினவெடுத்த ஆண் நரியும் இருந்தது,, அந்த நரிக்கு சிங்கத்தில கொள்ளை ஆசை.....கொஞ்சம் வில்லங்கமான ஆசை "
" ஓகே,,பிறகு "
" ஒருநாள் அந்த சிங்கம் வேட்டை அவசரத்தில் வெட்டை ஒன்றுக்குள்ளால பாயும் போது விளாத்திக் காட்டுக்குள்ளே எசகு பிசகா ரெண்டு மரத்துக்கு நடுவில தலைய கொடுத்து மாட்டி பாட்டில விழுந்து படுத்திட்டுது "
" அட அட ,,பிறகு "
" நரி அந்த நேரத்தைப் பயன்படுத்தி செய்ய நினைச்சதை செஞ்சிட்டுது "
"கிழிஞ்சுது போ ..செய்ய நினைச்சதை செஞ்சிட்டுது ... ஹஹஹஹ,,பிறகு,,சொல்லு என்ன நடந்தது "
"செய்ய நினைச்சதை செஞ்ச நரி தப்பி ஓடிவந்து,,எங்கள் ஊர் வாசிகசாலையில் உதயன் பேப்பர் படிச்சுக்கொண்டு இருந்தது "
" வாவ்,,பிறகு ,,சொல்லுப்பா,,என்னமோ இனிதான் தலையில பானையைக் கவுக்கப்போறாய் போல இருக்கு "
" ஓம். ஒருமாதிரி தலையை வெளிய எடுத்த சிங்கமும் செய்ய நினைச்சதை செஞ்ச நரியத் தேடிக்கொண்டு அந்த வாசிகசாலைக்கு வந்தது, சிங்கத்தைக் கண்ட நரி டக்கென்று முகத்தை உதயன் பேப்பரால் மறைச்சுப்போட்டு தீவிரமா வாசிக்கிறமாதிரி பாவனையில் இருந்தது.."
" ஓ...பிறகு என்னப்பா நடந்தது "
" சிங்கம் கேட்டிச்சு,,ஆரப்பா இப்பிடி ஆர்வமா நியூஸ் பேப்பர் வாசிக்கிறது, எல்லாம் கேட்க நேரமில்லை. காட்டில ஆயிரம் சோலி போட்டது போட்டபடி கிடக்கு ,இண்டைக்கு என்ன தலையங்கம் அதையாவது சொல்லுப்பா எண்டிச்சு "
" பேந்துபார்,,முசுப்பாத்தியை.. அதுக்கு செய்ய நினைச்சதை செஞ்ச நரி என்னப்பா சொல்லிச்சு "
" இன்றைய அதிரடித் தலையங்கம் ............. ............... ..................... என்று சொல்லிச்சு "
" கிழிஞ்சுது போ..ஹஹஹஹா,,அதுக்கு சிங்கம் என்ன சொல்லிச்சு பா "
" ...................................... ............யேல்ல ..அதுக்குள்ளே தலையங்கமா போட்டுட்டாங்களே ,,எண்டிச்சு "
" கிழிஞ்சுது போ..ஐயோ சாமி ,,ஹாஹாஹா,,ஹாஹாஹா,,,நீ என்னப்பா வில்லங்கமான கேசில் என்னிட வந்து நின்றுகொண்டு சிரிப்புக்கு கதை சொல்லிக்கொண்டு இருக்கிறாய் "
                                                                                                                       என்று சொல்லிச் சிரிக்க அந்த இளம் ஜூனியர் லாயர்கள் அவர்களுக்கு முன்னுக்கு மேசையில் இருந்த வேலைகளை விட்டுப்போட்டு சீனியர் லாயரைப் பார்த்தார்கள்
" சரி,,விடு..இப்ப விசயத்துக்கு வாறன் ,,இன்னாருக்கு வாசிக்கிறேன் உன்னோட பேப்பர்களை,,,என்ன பொயிண்ட்ஸ் பிடிக்கலாம் என்று பார்ப்பம்,,கோப்பி குடிக்கப்போறியா,,அந்த மிஷினில் போட்டு எடுத்துக் குடி "
                                                                          என்று பழையபடி என்னோட பேப்பர்களை வாசிக்க தொடங்கினான். நான் பர்ராசிங்கம் பரியாரியின் கடுக்காய் பேதிக்குளிசை குடிச்ச மாதிரி கொஞ்சம் வயித்தில அசவ்கரியமா உணர்ந்தாலும் வெளிய காட்டிக்கொள்ளாமல் சும்மா புஸ் வாக்னரின் பூனைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் இயல்பாக எந்தக் கலவரமும் இல்லாமல் வாசித்துக்கொண்டிருந்தான்.

நான் லாயர்களை இவளவு அருகில் வைத்துப் பார்த்ததில்லை. துறைசார் நிபுணர்கள் எல்லாருமே அவர்கள் துறையில் கரைத்துக்குடித்தவர்கள். என்னோட கேஸ் தலைக்கு கயிறு போடுவது போல நின்றாலும் அவன் அந்த நேரமும் சட்டப்புத்தகத்தில் பொயிண்ட்ஸ் தேடுவது போலவே இருந்தது.
                                                                           இந்த சின்னச் சிக்கல் என்னால்தான் இந்தளவு இடியாப்பச்சிக்கல் ஆனது. எவ்வளவுதான் நாங்கள் வாழ்க்கையில் பிளான் போட்டாலும் துரியோதனன் குதிக்காலில் சனியன் ஒட்டின மாதிரி வாழ்வின் தீராத பக்கங்களில் சில சம்பவங்கள் நம்மையும் மீறித்தானே நடந்தேறுகின்றன. லாயர் இப்ப தலையை நிமிர்த்தி , நடு நெற்றியில் சுட்டுவிரலை வைச்சு தேச்சுப்போட்டு ,,
" இச் இச் இச் இச் இச் ...இவளவு சிக்கல் இருக்கே இதுக்குள்ளே "
                                                                            என்றான். அவன் " இச் இச் இச் " என்று சொன்னவுடனே ஒரு ஸிவாவா லத்தின் அமெரிக்க நாய்க்குட்டி அவனோட ரூமுக்க இருந்து ஓடிவந்து, அவனோட மடியில பாய்ந்து ஏறி என்னைச் சந்தேகமாகப் பார்த்தது. ஜேம்ஸ் பொண்ட் படங்களில் பயங்கர வில்லன் ஒரு தனி அறையில் தனிக் கதிரையில் கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு அவனோட காதலியோடு தோளில உரசிக்கொண்டு அலட்சியமாக இருந்துகொண்டு ஒரு முயல்குட்டியை மடியில வைச்சுத் தடவிக்கொண்டு
" மிஸ்ட்ர் பொண்ட் ,,இதுவரைக்கும் நீங்க செய்ததெல்லாம் வெறும் தூசு.. இனித்தான் உங்களுக்கு முக்கியமான வேலையே இருக்கு "
                                                                         என்று டயலாக் சொல்லுவானே அதுபோல இருந்தது அந்த நேரம் லாயரைப் பார்க்க . லாயர் வாசிக்கும் போதே சின்னச் சின்ன குறிப்புக்கள் பெஞ்சிலால் எழுதிக்கொண்டு இருந்தான். முடிவில் அந்தப் பேப்பர்களை என்னமோ ஆயுள் தண்டனை கேஸ் முடிஞ்சு ஜெயிலில் இருந்து விடுதலை கிடைச்ச மாதிரி மேசையில் எறிஞ்சு போட்டு என்னை நிமிர்ந்து பார்த்து.
" உன்னோட விளக்கம் என்னவும் சொல்லப்போறியா "
" இல்லை,,ஏற்கனவே அதை எழுதி இருக்கிறேன். என்னமோ அந்த ரெண்டு முக்கிய சுவீடிஷ் அரச அலுவலகங்களுக்கும் எதிராக என்னால .செய்ய நினைச்சதை செஞ்சிட்டேன் "
" ஹாஹாஹா ஓம்..பார்த்தேன்..நீ எழுதியுள்ளது சென்டிமென்டலா இருக்கே,, நீ கதைகிதை எழுதி விடுற கதாசிரியனா,,நீ எழுதின மறுப்புக் கடிதம் புனைவு போல இருக்கே,,,வாசிக்க டச்சிங்கா இருக்கு என்றது உண்மை "
" ஏன் அப்படி கேட்க்குறீங்க அண்டர்சன்,, என்னை லைட்போஸ்டில் கட்டி நெற்றியிலே சுட்டு போட்டாலும் கதை எழுதுறது மட்டும் கைவரவே வராது "
" ஏன்பா,,இப்பிடி பயங்கரமா சொல்லுறாய் "
" இதெல்லாம் எங்கள் நாட்டில ,எங்க ஊர்ல சிம்பிளா சந்திக்கு சந்தி ஒருகாலத்தில் நடந்தவிசியம்தானே... "
" நீ எழுதியுள்ள மறுப்புக் கடிதம் சென்டிமென்டலா இருக்கே, "
" அப்ப மனிதாபிமான அடிப்படையில் எழுதவா "
" டேய்,,இப்ப என்னத்துக்கு முந்திரிக் கொட்டை போல முன்னால பாயுறாய். இன்னும் உன் முதல் அப்பீலே போடவில்லை ,,பொறுமையா இருப்பா ..
" சிக்கல் இருக்கே இதுக்குள்ளே "
" மனிதாபிமான அடிப்படை கட்டக்கடைசியில கையைக் காலை விழுந்து கெஞ்சிப் பிடிக்கிற டாக்டிஸ் பா "
" சரி,,ஒத்துக்கொள்கிறேன் ,,உங்களில் நிறைய நம்பிக்கை இருக்கு அண்டர்சன் "
" டேய் என்னோட வழக்கறிஞர் வாழ்நாளில் உன்னைப்போல எத்தனை கேஸைப் பார்த்திருப்பேன் தெரியுமா..எத்தினை அனுபவத்தில் புருட்ஸ் திண்டு நட்ஸ் போட்ட பனங்காட்டு நரி நான் தெரியுமா "
" சரி,,ஒத்துக்கொள்கிறேன் ,,அண்டர்சன் "
" இல்லைப்பா சட்ட ரீதியாக அதில விவாதம் செய்ய உன்னோட கடிதத்தில் ஒன்றுமேயில்லை..சட்ட்ம் என்று ஒன்று இருக்கே அதுக்கு மறுமொழி அதன் பாஷையில் எழுதினால்தான் எடுபடும் பா "
" அப்படி எனக்கு எழுத தெரியாதே,,அண்டர்சன் "
" அதுக்குத்தானே நாங்கள் சட்டப்புத்தகத்தைக் படிச்சுக்க கிழிச்சு வைச்சு இருக்கிறம்,,நான் எழுதுறேன் பார் , சட்டம் என்றால் நிறைய அவிழ்க்கமுடியாத முடிச்சுக்கள் உள்ள ஒரு சிக்கல் "
" ஓ,,அப்படியா,,அப்புறம் எப்படி நீதிமன்றத்தில் எதிராக வாதாடி வெல்லுறிங்க "
" ஓம்,,அந்த முடிச்சுக்களை அவிழ்க்க லூஸ் எண்ட் என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே,,அப்படி சில விசயங்கள் சில சந்தர்ப்பத்தில் உதவிசெய்யும் பா "
" ஓ,,அதை வைச்சுக்கொண்டுதான்,,தொழிலை ஒட்டிக்கொண்டு இருக்கிறீங்களோ ,,எங்கட ஊர்ல இருந்த அருளம்பலம் அப்புக்காத்து இன்னொரு விளக்கம் சொல்லுவார் "
" யாருப்பா அ ரு ள ம்பழ ம் யா ப்பு க்கா து "
" அவரும் ஒரு லாயர்,,எங்கள் ஊர்ல இருந்த ஒரேயொரு லோயர் ,,அட்டனி அட் லோ,,பப்ளிக் பிரசிகியூட்டர் ,,அவர் சொல்லுவார் சட்டம் ஒரு பச்சைத்தண்ணி என்று "
" என்னப்பா இப்பிடி காத்தில கையை விசிக்கின மாதிரி அர்த்தமில்லாமல் சொல்லுறாய் "
" அவர் சொல்லுவார்,,,அந்தப் பச்சைத்தண்ணிக்கு உள்ளாள நெருப்புக்கொள்ளியை அணையாமல் கொண்டுபோற வித்தை பிடிபட்டவன் தான் சொல்லப்பட்ட பிரக்கிராசி என்று,,ஐ மீன் சக்ஸஸ்புல் லாயர் என்று "
" ஹஹஹஹ,,இது உண்மையில் லொயிக் ஆகத்தான் இருக்கு சரி ,,விடு,,இதெல்லாம்,,கேட்க எனக்கு நேரம் இல்லை,,ஆனால் சுவாரசியமாத்தான் இருக்கு, "
" ஒத்துக்கொள்கிறேன்,,,நானும் சும்மா அலட்டிப்போட்டேன் ,மன்னித்துக் கொள்ளுங்க அண்டர்சன் "
" மார்க்கிட் நிலாண்டர்ஸ் விக்கிடோரியா நூர்டான்மார் ,,உன்னோட.......... ...தானே "
" ஓம்.. "
" நாலு விசியம் செய்ய வேணும்,,செய்வியா,, ஒவொன்றாய் சொல்லுறேன்.. பார்க்கலாம்,,,வேர்ட் அவுட் ஆகுதா என்று "
" சரி,,அண்டர்சன் "
" முதலாவது.........ரெண்டாவது...மூன்றாவது....நாலாவது............... மார்க்கிட் இடமிருந்து எடுத்துத் தரவேண்டும் "
" என்னது ,,நாலாவது....? "
" பேந்துப்பார்..சின்னச் .சிக்கலை இடியாப்பச்சிக்கல் ஆக்கிவைச்சுப்போட்டு பதறுறாய்...மார்க்கிட் செய்ய மாட்டாளா "
" அதுதான் ஜோசிக்கிறேன்..ஏற்கனவே எனக்கும் அவளுக்கும் இடையில் சங்கிலி புங்கிலி கதவைத்திற நான் மாட்டேன் தேங்காய்ப்புலி என்று பிடுங்குப்பாடுகள் நிறைய நடந்தது "
" எனக்கு அந்த இந்தக் கதைகள் தேவை இல்லை,,அவளை வழிக்கு கொண்டுவந்தால் வழக்கில் சில விசயங்களை வெண்டுதரலாம் ,,என்ன சொல்லுறாய் "
" பார்க்கலாம்..அவளை வழிக்கு கொண்டு வரலாமா என்று.."
" என்னபா பார்க்கலாம்,,என்னபா  சொல்லுறாய் "
" எப்படியோ நான் என்ன சொன்னாலும் அவள் நம்ப மாட்டாள்.. ஏற்கனவே நிறையப் பொய்யும் புரளியும் பித்தலாட்டமும் செய்து சொதப்பி வைச்சு இருக்கிறேன் "
" பேந்துபார்...பினாத்துறியே எனக்கு அந்த இந்தக் கதைகள் தேவை இல்லைப்பா நாலு விசியமும் செய்ய வேணும்,,செய்வியா "
" சரி,,ஆனால் முதலில் நீங்கள் அவளோடு நேரடியாக கதைக்க வேண்டும்  ஆண்டெர்சன்,, ,,.நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்.."
"என்ன சொல்லுறாய் " 
" நான் சொன்னால் அதுகள் மலைய கெல்லி எலிய புடிச்சானாம் கதை போலத்தான் அவளுக்கு விளங்கும்..பிரச்சினை அதிகமாகும் "
" சரி,,நான் கதைக்குறேன்,,டெலிபோன் நம்பர் தா ,,இப்பவே கதைக்குறேன் "
                                                                        இப்ப ஒரு ஜூனியர் அலி மக்கபேல் லாயர் வந்து
" ஸ்டிக் ,,,நாளைக்கு, மால்மோ டிங்கிறீட் பிர்மா ,கோட்ஸ் கேஸ், அதில அபிடேவிட் ,,கொஞ்சம் உதைக்குது, ஸ்டிக் ,,பழைய டேக்கில் வேறமாதிரி டிபென்ஸ் ,,இந்த வெர்டிக்ட்டில் இன்னொரு மாதிரி கொங்குலுசன்..ஒண்ணுமே புரியுதில்லை ஸ்டிக் ..., .இண்டைக்கு ரெயிட்டார் ஸ்டில் ,,கடைசி நாள் ,,இண்டைக்கு ..முடிச்சு அனுப்பவேணும் .. ஸ்டிக் "
                                                      என்று என்னவோ தலைக்கு வந்த அம்பைத் திசை திருப்பி தலைப்பாகையோடு போகவைக்கிற கேஸ்போல உள்ள ஏதோவொரு வழக்குப் பற்றி அவசரமாய் சொல்ல, லாயர் சடார் எண்டு எழும்பி
" கொஞ்சம் இரு,,இருந்து யோசி ,,நான் ஒரு பேப்பரில் கொஞ்சம் எடிட்டிங் செய்துபோட்டு வாறன்,,நல்லா யோசி ,,ஏதுமொரு ஐடியா உனக்கும் வரும் பா .."
 " சரி,,ஆனால் முதலில் நீங்கள் அவளோடு நேரடியாக கதைக்க வேண்டும் "
" முதல் மார்க்கிட் விசயத்தை யோசி,,ஓகே யா ,,சில நிமிடத்தில் நான் திரும்பி வாறன் "

நான்.யோசித்தேன்...இந்த சமுதாயத்தில் அல்ல எந்த சமுதாயத்திலும் எழுதிவைக்கப்பட்ட சட்ட்திட்ட்துக்கு எதிராக யாருமே இயங்காமல் அச்சொட்டாக எல்லாமே மிகக் கச்சிதமான ஒழுங்கமைப்பில் நடந்தால் ,போலீஸ்,,நீதிபதி,,வழக்கறிஞர்,,சிறைச்சாலை ஊழியர் ,,சிறைச்சாலை என்று எதுவுமே தேவையில்லை. இவளவு பேருக்கும் வேலை இல்லாமல் போகும்.
குற்றமும் தண்டனைகளும் இயங்கியலின் ஒரு மாற்றமுடியாத விதி. சீராழிவு அல்லது சீர்குலைவு என்று ஒன்று இல்லை என்றால் புதியன தோன்றும் இயக்கம் நடைபெறாது.
                                                                                                 இது பிரபஞ்ச அளவிலேயே நடக்குது என்கிறார்கள் , மொடேர்ன் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் இல் அதை " எண்டோபி " என்ற தியரியில் நிறுவி இருக்கிறார்கள். ஒவ்வொரு நானோ செக்கனிலும் மைக்கிரோ லெவலில் உள்ள சடப்பொருள்களில் சீரழிவு அல்லது சீர்குலைவு நடக்கிற அதே நேரம் யூனிவேர்சல் அளவில் கொஸ்மிக் ஸ்கேலில் கலக்சிகள் ஒன்றோடு ஒன்று மோதி புதிய சூப்பர் நோவாக்கள் உருவாகுது என்கிறார்கள்.
                                                                            யூனிவேர்சல் அளவில் கொஸ்மிக் ஸ்கேலில் ஒப்பிடும்போது நான் செய்தது மைக்கிரோ லெவலில் உள்ள ஒரு சின்னக் குழப்பம், அதோடெல்லாம் ஒப்பிடும்போது ,,இப்பிடியே யோசித்துக்கொண்டிருந்தேன்
                                                                    சொன்ன மாதிரி சில நிமிடத்தில் திரும்பி வந்து ,
" என்னப்பா ஜோசித்துக்கொண்டு இருந்தாய்,,என்னாவது பொயிண்ட்ஸ் நீயாகவே எடுத்தியா..ஒரு அக்கா தங்கச்சி சாகப்போற அப்பனுக்கு மேலே போட்டுள்ள சொத்து வழக்கு கேஸ் நாலு வருடமா கிடந்தது இழுக்குது ,,அதுவும் ஜூடிக்கல் கோட்ஸ் மால்மோ சிட்டியில,, "
" இல்லை, வேற என்னமோ எல்லாம் யூனிவெர்சல் ஸ்கேலில் ஜோசித்துக்கொண்டு இருந்தேன் "
" அட,,,அதுக்கும் உன் வழக்குக்கும் என்னப்பா சம்பந்தம் "
" ஒன்றுமில்லை, ,அண்டர்சன் நீங்க மார்க்கிட்டுடன் இப்போதே கதையுங்க ,,சுருக்கென்று நடக்கிற அலுவலைப் பார்ப்போம் "
                                                                     மார்க்கிட்டுடன் லாயர் கதைத்தான். மார்க்கிட் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்க்கிட்டோட முதல் குளறுபடியே அவள் உதவி செய்வாள் என்று நினைக்கும் தருணங்களில் உதவவே மாட்டாள் . உதவ மாட்டாள் என்று நினைக்கும் சம்பவங்களில் தலையைக் கொடுத்து உதவுவாள். அவள் மட்டும் தானா இப்படி அல்லது உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரின் பொதுவான குணாம்சம் அதுவா என்று எனக்குத் தெரியாது.
                                                         லோயர் கதைத்து முடிய நானும் கதைத்தேன். சனிக்கிழமை வீட்டுக்கு வா என்று நாலடியில் சுருக்கமாகச் சொல்லிப்போட்டு போனை வைச்சிட்டாள் .
                                                             பழைய நண்பர்கள் அவர் அவர் பாதைகளில் பிரிந்து போனாலும் சில சந்திப்புகளில் கொஞ்சநேரம் நின்று பார்ப்பது போல மார்க்கிட்டுடன் பலவருடம் தொலைபேசியிலில் கதைத்துக்கொண்டு இருந்தாலும் நேரடியாக அவளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை ரெண்டு பேருமே உருவாக்கவில்லை. அதுக்குத் தேவையும் இருந்ததில்லை.
                                                                காலமும் இடமும் திணிப்புகள் அற்று சாதாரணமாய் மனதை ஈரமாகவே வைத்திருந்த ஓடைக்குளிர்மலரின் சுகந்தம் வீசிய இடைவெளிகளில் நிறையவே புரிந்துணர்வு சரியான பயணிப்புத் திசைகளைக் காட்டிக்கொண்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்
                                           சனிக்கிழமை,,,,
                                                               சொர்மலாந்து புல்வெளிப்பிரதேசத்தில் பாச்சல் குதிரைகள் சோம்போறித்தனமாக மேய்ந்துகொண்டிருந்தன , ச்ஜெர்ந்ஹோவ் நெடுங்சாலையில் பேர்ச்பித்துளா மரங்கள் இலையுதிர்குளிர் வருவதுபற்றி விவாதம் செய்துகொண்டிருந்தன ,கேநேஸ்தா வடிசாளைப் புறநகரம் புழுதிக் காற்றில் எந்தக் கனவுகளும் இடைப்புகாமல் உறங்கிக்கொண்டிருந்தது பிளேன் அடைக்கல கிராமம் என்னைப்போலவே ஏதிலிகள் போலிறங்கும் பிளிக்கன் பறவைகளுக்கு திசைகள் காட்டி்ககொண்டிருக்க, மார்க்கிட் வசிக்கும் கிராமப் புற வீட்டுக்குப் போனேன்
...................இடியாப்பச் சிக்கல் 2...தொடரும்...................


ஹம்பர் சைக்கிள்..

அப்பாவிடம் ஒரு ஹம்பர் சைக்கிள் இருந்தது ! எதுக்காக சும்மா மொட்டையாக ஒரு சைக்கிள் இருந்தது என்று சொல்லாமல், மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பசீர் " எங்கட வீட்டில ஒரு யானை இருந்தது " என்று அவரோட புகழ் பெற்ற நாவலில் எழுதத் தொடங்குவாரே அதுபோல " அப்பாவிடம் ஒரு ஹம்பர் சைக்கிள் இருந்தது " என்று எழுப்பம் விட்டுச் சொல்லவேண்டி இருக்கென்றால், அந்த ஹம்பர் என்ற இங்கிலாந்துக் கொம்பனி அந்த அரிதானவகை சைக்கிளை உட்பத்திசெய்தார்கள்.

                                                           எங்கள் ஊரில வௌவாலுக்குத் தலைகீழாக நின்று தாம்பூலம் வைச்ச மாதிரி கிரவல் றோட்டுக்களை புழுதியால நிரவிர மாதிரி உழுதுகொண்டு திரிந்த மற்ற எல்லாச் சைக்கிளுக்கும் இல்லாத ஒரு சிறப்பான விசியம் ஹம்பர் சைக்கிளில் இருக்கு. அந்தப் பிரத்தியேகமான அடையாளமே அதன் வடிவமைப்பில் இருப்பதால் சடாரென்று அடையாளம் கண்டுபிடிக்கலாம்.
                                                                அப்பா கொழும்பில் ஒரு தனியார் வியாபார நிறுவனத்தில் தொடர்ச்சியாக இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக மனேஜர் ஆக வேலைசெய்துவிட்டு , கடைசிக்காலத்தில் எங்களின் வீட்டுக்கு வந்து எங்களோடு அவர் வாழ் நினைத்துக்குக் காரணம் அவரின் தமனி நாடிகளில் அடைப்பு ஏட்படுத்திய ஹார்டியா ஹார்ட் என்ற இருதய நோய்.
                                                      அதிக நாட்கள் அவர் உயிர் வாழும் உத்தேசங்கள் அவரிடமே இருக்கவில்லை போலிருந்தது அவரின் வரவு. அவருக்குப் பலவருடம் கொழும்பில் வைத்தியராக இருந்த இருதயசிகிக்சை நிபுணர் பேராசியர் ஆர் எஸ் தனபாலசுந்தரத்தை அவர் கடவுள்போல நம்பிக்கொண்டிருந்தவர். அந்தக் கடவுளையே கைவிட்டுப் போட்டு ஒருமுடிவோடுதான் வந்திருந்தார்
                                                           எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தபிறகு தலைநகரில் இருந்த தன்னோட வியாபாரத் தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதியாக அவர்களின் தயாரிப்புகள் சிலதை எங்கள் ஊர் டவுனில் ஒரு சின்ன இடம் எடுத்து அதிலிருந்து விநியோகிக்கும் தொழில் செய்தார். சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த டவுனுக்கு காலையில் போவதுக்கும், மாலையில் திரும்பி வருவதுக்கும்தான் அவர் சைக்கிள் வேண்டினார், ஆனால் அப்பா எதட்காக ஹம்பர் சைக்கிளைத் தெரிவுசெய்தார் என்று சொல்லமுடியவில்லை.

எல்லாச் சைக்கிளுக்கும் ஒரு இலட்சினை அதன் நெற்றியில் திருப்பதியில் போட்டசந்தன நாமம் போல இருக்கும். ஹம்பர் சைக்கிளுக்கு அப்படி இருக்கும். அதில் திடகாத்திரமான ஐந்து மடாக்குடியார் போலிருக்கும் இளம் ஆண்கள் ஐந்து திசையிலே நின்று ஒருவரோடு ஒருவர் தங்கள் மண்டையால ஒரே நேரத்தில் மோதுற மாதிரி இருக்கும். இதுக்கு என்ன அர்த்தம் என்று ஜோசித்தே என் மண்டை காஞ்சு போச்சு. ஆனால் அதில ஏதாவது அர்த்தம் இருக்கலாம், சிலநேரம் எங்க மோதினாலும் ஹம்பர் சைக்கிளுக்கு சொல்லும்படியான சேதாரம் வராது என்ற சைம்போல் ஆக இருக்கலாம் போலிருக்கு.
                                                             ஹம்பர் சைக்கிளின் முகத்தில் தெரியும் அடையாளமே அந்த போக் தான். கலியாணம் கட்டிய பெண்ணின் நெற்றியில் இருக்கும் குங்குமப் பொட்டு எப்படி சடாரென்று வேறுபடுத்தி அறிவதுக்கு உதவுமோ அதேபோல அந்த போக் இருக்கும். அதுதான் அந்த சைக்கிளின் முன்னம் சில்லுகளைக் கவ்விப்பிடிக்கும் போக் . அந்த போக் இரண்டு தனித்தனியான இரும்புக்குழாய்கள் இணைக்கப்பட்டு வெல்டிங் செய்யப்பட்டு இருக்கும். அது யோமெட்ரிக்ஸ் மெக்கானிஸ் பிசிக்ஸ்படி அதிகப்படியான தாங்குதிறன் உத்தரவாதம் கொடுப்பது. அறிவியல் ஓரளவு படித்த நாட்களில் இதெல்லாம் அறியமுடிந்தது.
                                                           முக்கியமா மற்ற சைக்கிள்களில் , அய்யர் வீட்டுப் பெண்கள் போல அழகாகவும், அதேநேரம் மென்மையாகவும் இருக்கும் ஏசியா என்ற ஜப்பான்காரனின் சைக்கிளில் எப்பவுமே பாரமில்லாத சைக்கிள். ஆனால் அதன் போக் எப்பவுமே ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் உடையும். அப்படி உடைந்தால் உத்தரவாதமாக முன்னுக்கு முகம் குப்பிற விழுந்து மூக்கும் உடையும். ஹம்பர் சைக்கிளின் போக் என்றைக்குமே உடைந்ததாக வரலாறு இல்லை. இந்த மாதிரியான டெக்னீக்கல் விபரங்கள் தெரிந்து அப்பா ஹம்பர் சைக்கிள் வேண்டியிருக்க லாஜிக் இல்லை. அப்பாவுக்கு பிசினஸ் டாக்டிஸ் நல்லதெரியும் ஆனால் பிராக்டிகல் சயன்ஸ் தெரிந்த ஆள் அல்ல.
                                                            ஹம்பர் சைக்கிள் இங்கிலாந்தில் வெள்ளைக்காரன் வடிவமைத்த சைக்கிள் என்று ஒருமுறை சொல்லி இருக்கிறார் . வெள்ளைக்காரன் வடிவமைத்ததால் அதை முதன்மைப்படுத்தி வேண்டி இருக்கலாம். அதுக்கு ஒரு சான்றும் எங்கள் வீட்டின் சுவரில் படமாகத் தொங்கியது. கொழும்பில் அப்பா வேலை செய்த தனியார் வியாபார நிறுவனம் இங்கிலாந்தின் யூனிலீவர்ஸ் என்ற உலகளாவிய கொம்பனியின் இலங்கைப் பிரதிநிதியாக இயங்கி இருக்கு. அந்த யூனிலீவர்ஸ் நிறுவனம் தங்கள் இலங்கைப் பிரதிகளுக்கு ஒரு நட்ச்சத்திர ஹோட்டலில் கொடுத்த இரவு விருந்தில் கலந்துகொண்ட அப்பா, அந்த நிறுவன வெள்ளைக்கார இயக்குநர்களோடு சேர்ந்து எடுத்தப்படம் தான் அது.
                                                       அதில வெள்ளைக்காரன் கோட் சூட் டை என்று ஐரோப்பிய அடையாளங்களுடன் கையில விஸ்க்கி கிண்ணத்தை வைச்சுக்கொண்டு நிக்க , அவர்களோடு அப்பா வேட்டி , நஷினல் , சலவை என்று தமிழ்க்கலாச்சார விழுமியங்களுடன் நிக்க ,அந்தப்படம் கறுப்பு வெள்ளையில் இருந்தது.வெள்ளைக்காரன் வெள்ளையும் சொள்ளையுமாய் இருப்பதால் மேன்மையானவைகளில் முன்னோடியானவன் என்ற தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் இருந்திருக்கலாம்.
                                                             அதனால அந்தப் படத்தை என்லார்ச் செய்து எங்கள் வீட்டு வரவேட்பு அறையில் அவர் மாட்டி வைத்திருந்தார். அதுக்கு பின்னால் உள்ள செய்தி ஒருவேளை அவர் வெள்ளைக்காரர்களை பெரிய மனிதர்களாக நினைக்கும் ஒரு எடுகோள் இருந்திருக்கலாம். அதனால ஹம்பர் சைக்கிளை வேண்டுவதுக்கு அவர் தெரிவு செய்திருக்கலாம்

வாழ்க்கையில் சில சமயம் நடந்து முடிந்த சிலவற்றை நினைத்து நம்மை மறந்து சிரிப்பதுக்கும் , சில சமயம் நம்மை மறந்து குற்றவுணர்வில் வருந்திக்கொள்வதுக்கும் சில சம்பவங்களை அதே வாழ்க்கைதான் விட்டு வைத்திருக்கும் . அப்படியான ஒருசில சம்பவங்களின் தொகுப்பில் கட்டாயம் அந்த ஹம்பர் சைக்கிளும் ,அப்பாவும் பலவிசியங்களில் பிரிக்கமுடியாமல் பின்னப்பட்டு இருக்கிறார்கள். அதைவிடவும் அந்த சைக்கிள் சிலவருடங்களே எங்கள் வீட்டில் நின்றாலும் அது பதிவுசெய்துவிட்டுப் போன காலப்பெருவெளியை நிரப்பிய சம்பவங்கள் நிறையவே இருந்தது.
                                                                     ஓடிப்பழகவும் எங்கள் வீட்டில் ஒரு லொட்டு லொடக்கு சைக்கிள் அதுக்கு முன்னம் இருந்ததில்லை. முக்கியமாக, நான் உட்பட அடுத்தடுத்த வயதில் எங்கள் வீட்டில் இருந்த என் ஆண் சகோதர்கள் அந்த சைக்கிள் புதிதாக வந்த நேரம் எங்கள் வீட்டுக்கு ஒரு அஸ்வமேதக் குதிரை வந்ததுபோலவும், நாங்கள் எல்லாருமே ஒரே இரவில ராஜகுமாரர்கள் போல மாறிவிட்டது போலவும் உணர்ந்தோம்.அல்லது பகல்க் கனவு கண்டோம். அவ்வளவு சதோஷ வெளிச்சம் கொண்டுவந்தது அந்த ஹம்பர் சைக்கிள்.
                                                           ஆனால் எங்கள் ரோட்டு வீதியில் சிவனே என்று படுத்திருந்த நாய்களின் திகில்க் கனவிலே ஜமன் வந்ததுபோல நினைத்து இருக்கலாம், அதை உறுதிப்படுத்திற மாதிரியான நிறையக் காரண காரியத் தொடர்பு ஹம்பர் சைக்கிள் வந்த சில நாட்களிலேயே தொடங்கிவிட்டது .
                                                                 போக் தவிர மற்ற எல்லா விசயத்திலும் வெளிப் பார்வைக்கு வேறுபாடுகள் இல்லாமல் இருந்த ஹம்பர் சைக்கிள், மற்ற சைக்கிள்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் நிறை அளவில் கொஞ்சம் பாரமான சைக்கிள். அதன் பொருத்துக்களில் இருக்கும் இரும்புச் சேர்க்கை அதுக்கு காரணமாக இருந்திருக்கலாம். 
                                                                   அல்லது இங்கிலாந்தில் வெள்ளைக்காரன் அப்படித்தான் சைக்கிளை காற்றிலே பறக்கிற மாதிரி டிசைன் செய்யாமல் நிதானமாக புவியீர்ப்பு விசையோடு அனுசரிக்க அப்படி வடிவமைப்பானோ என்றும் குழப்பமாக இருந்தது. அதன் பாரம் அதன் உறுதிக்கு இன்னொருவிதத்தில் சான்றிதழ் கொடுத்துக்கொண்டிருந்தது என்பது உண்மைதான் .

பின்னேரங்களில் அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு அதன் பாருக்காலா ஒரு காலை விட்டுக் கெந்திக்கெந்தி, எட்டாத ஹாண்டிலை எட்டிப்பிடித்து உந்தி உந்தி ஓடப்பழகியதுதான் எங்களின் இளமை வாழ்க்கையில் ஒரு பறவையின் முதல்ப் பறப்புப்போன்ற அலாதி அனுபவம். எனக்கு அப்படி இருந்தது. நிறைய கிடுகு வரிச்சுமட்டை வேலிகளை அது தடவி, வேலிக் கதியால்களை முறித்து அடிவேண்டி இருக்கு.
                                                                 எங்கள் ரோட்டில பலர் காங்கேசன்துறை சீமெந்து பாக்ட்ரியில் உட்பதிசெய்யப்பட்ட சீமின்ட் இல மதில் கட்டி இருந்தார்கள் . அந்தச் சீமெந்துச் சுவர் எப்படிப் பலமா இருக்கா என்று காங்கேசன் சீமெந்தின் கலப்படமில்லாத நம்பகத்தன்மையை விசாரித்திருக்கு. அந்தமாதிரியான அடிபாடுகளில் சீமெந்துச்சுவரோடு முழங்கை மூட்டு சொல்லிவெச்ச மாதிரி குத்து வேண்டியிருக்கு
                                                                        ரோட்டில படுத்திருக்கிற நாய்களுக்குத்தான் அந்த ஹம்பர் சைக்கிள் சிம்ம சொப்பனம் , நாய்கள் எப்பவுமே அதில இருந்து தப்ப ஸ்ட்ராடஜிக் பிளான்ஸ் போட்டு வைச்சிருக்கும், நாங்கள் பாருக்கால காலைவிட்டு அகோர வேகத்தில போகிற ஒவ்வொரு நிகழ்விலும் நாய்கள் தப்பப் போட்டு வைச்சிருந்த ஸ்ட்ராடஜிக் பிளான்ஸ் எப்பவுமே சிதறிவிடும். 
                                                                 பலநேரம் முன் சில்லால் முகத்தில உதையோ, அல்லது பின் சில்லு காலுக்குமேலால் ஏறி உழக்கியோ , அல்லது எசகுபிசகா மொத்தமாக ரெண்டு சில்லும் நடுவில மாட்டியோ உத்தரவாதமாக உடம்பில சேதாரம் வேண்டிக்கொண்டு குளரிகுளறி ஒடித்தப்புங்கள் ,
                                                                      என்னத்ததான் நாய்கள் நம்பிக்கையோடு தப்புவதுக்கு ஸ்ட்ராடஜிக் பிளானாகப் போட்டு வைச்சிட்டு படுத்திருந்தாலும் ஒருநாளும் நாய்களின் ஸ்ட்ராடஜிக் பிளான்ஸ் வென்றதேயில்லை, ஹம்பர் சைக்கிள் வெள்ளைக்காரன் லண்டனில் வடிவமைத்ததாலும் அதைச் செலுத்திய வட்ருக்ஸ் தேரோட்டிகளின் லகவதாலும் எப்பவுமே வென்றுகொண்டிருந்தது.
                                                                          சில நாட்கள் குறுக்க மறுக்க கடக்க நடக்கும் மனிதர்களிடம் தூஷணத்தில் திட்டு வேண்டிய அனுபவம் இருக்கு. உண்மையில் அந்த ஹம்பர் சைக்கிள் எங்களை விட அதுவே நிறைய அனாவசியத்துக்கு அடிவேண்டி இருக்கு. என் சகோதரங்கள் எப்படி உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எல்லாருமே எப்போதும் தவறாமல் முழங்காலை சிராய்ச்சிக்கொண்டுவந்துதான் ஹம்பர் சைக்கிளை ஸ்டாண்ட்டில நிட்பாட்டுவோம் .
                                                                                ஹம்பர் சைக்கிளிலும் நிறைய நெளிவுகள் சுளிவுகள் யுத்தக்களத்துக்குப் போட்டு வந்த அடையாளமாக அங்கங்கே இருக்கும்,கொஞ்சம் ஒடிக்கழைத்த மூச்சுகளை ஆசுவாசமாக அப்போதுதான் வேண்டிக்கொள்ளும் ஹம்பர் சைக்கிள். முழங்காலை சிராய்ச்சிக்கொண்டுவந்து கொஞ்சநாள் நொண்டுறது .பிறகு அந்தப் புண் ஆறும்வரை ஹம்பர் சைக்கிள் நிம்மதியாய் நிக்கும். அதன் பிறகு பழையபடி பழையபடி சவாரித்தம்பரின் வண்டில்மாட்டு ஓட்டம் தொடங்கும்.
                                                                                         சில நேரம் அப்பா வேட்டியை முழங்கால் வரையில் மடிச்சுக்கட்டிக்கொண்டு எங்களுக்குப் பின்னால பாலன்ஸ் தவறி விழவிடாமல் சைக்கிளை பிடிச்சுக்கொண்டு மூச்சு இரைக்க இரைக்க ஓடிவருவார், அவர் உடல்நிலைக்கு இந்த மாதிரியான ஓடம் எல்லாம் ஒத்துவராது. ஆனாலும் நாங்கள் விழுந்துவிடக் கூடாது என்ற கரிசனையை அப்படிச் செய்திருக்கலாம்.

சைக்கிள் எப்பவுமே புவியீர்ப்புக்கு நேர் குத்தாக ஒரு இடையறாத விசையில் இயங்கினால் விழாமல் ஓடும் என்ற ஐசக் நியூட்டன் சொன்ன அறிவியல் உண்மை அப்போதுதான் நடைமுறையில் பார்க்கமுடிந்தது. அதிலும் நாங்கள் முதன் முதல் பாலன்ஸ் பிடிக்கக் கற்றுக்கொண்ட தருணங்களில் அப்பா எங்களோடு ஓடிவந்திருக்கிறார். அது ஒருவிதமான ஆசிர்வாதம் போல இருந்திருக்கு.
                                                                          அவர் வேலைக்கென்று ஹம்பர் சைக்கிள் வேண்டிய அப்பாவை விடவும் நாங்களே ஒடிப்பழக அந்த ஹம்பர் சைக்கிளை பயன்படுத்தியதால், அதில எப்பவுமே குக்கல், விக்கல், சிக்கல், பிக்கல் , பிடுங்கல் போல சின்னச் சின்ன உடைவுகளோ, அல்லது குழப்பங்களோ அதென்ன மேனியெங்கும் வரும். அப்பா ஒருநாளுமே அதையிட்டு எதுவுமே சொன்னதில்லை அதைப்பற்றிக் கவலைப்பட்டு கடிந்துகொண்டதேயில்லை. 
                                                                 அதுக்கு அவரே அவரோட நோயோடு போராடிக் களைத்துப்போகும் கடைசிக்காலத்தில் எங்களோடு இருப்பதை உணர்ந்திருக்கலாம் .
                                                                            அதை அப்பப்ப திடீர் திடீர் என்று நடுச்ச சாமங்களில் நெஞ்சுக்குத்து வரும் போதெல்லாம் நெஞ்சைப் பிடித்து இருமியபடி சொல்லியும் இருக்கிறார். அதனால அந்தக் ஹம்பர் சைக்கிள் அவரைப் பொறுத்தவரையில் நிலையாமையின் இன்னொரு குறியீடாக இருந்திருக்கலாம். ஆனால் தவறாமல் ஹம்பர் சைக்கிள் நாங்கள் எவ்வளவுதான் குத்தி முறிச்சாலும் அது இயல்பாக ஓடவேண்டும் என்பதால் கிரீஸ் போட்டு போல்டஸ் மாத்தி அதைக் கழுவிப்பூட்டும் சடங்கை எப்படியும் மாதத்தில ரெண்டுமுறை விருப்பமாகவே செய்துகொண்டிருந்தார் .

அப்பா ஹம்பர் சைக்கிளை எப்பவுமே ஒரு குறிப்பிட்ட ஒருவரிடம் தான் கழுவிப்பூட்டக் கொடுப்பார். அந்த சைக்கிள் திருத்துபவர் அப்பாவின் வயதில இருந்தார். அவர் " சைக்கிள் திருத்துமிடம் " என்று, நாலஞ்சு கம்பிக்கட்டு பிஞ்சுபோன டயறும் , லெக் எடுத்து சிதறிய ரிம்மும் தொங்கவிட்டு கிரீஸ் அப்பியபடி தகரத்தில் கரல் பிடிச்சுப்போய் ஒரு உழைப்பாளியின் வறுமையைப் பதிவுசெய்யும் போட் தொங்கிற கடை என்று எதுவும் வைத்திருக்கவில்லை அவரோட வீட்டுக்கு உள்ளே பத்தி இறக்கி வேர்க்சொப் வைத்திருந்தார்.
                                                                                அவரைப் பார்த்தால் யாருமே, வழமையாக வாடி வதங்கி காத்துப்போன டயர் போல இருக்கும் சைக்கிள் மெக்கானிக் போல இருக்க மாட்டார் , முதல் எடுப்பிலேயே யாருமே பார்த்து சைக்கிள் மெக்கானிக் என்று சொல்லமாடடார்கள். ஜலராக் கட்டை சுத்துற குஸ்தி பயில்வான் பொடி பில்டர் போல ஆரோக்கியமான தேகம். அதுவும் வாழ்க்கை அரைவாசி விழுங்கிய அந்த வயசில. எப்பவும் ஸ்ரீலசிறி ஆறுமுகநாவலர் போல உடம்பு முழுக்க திருநீற்றுப் பட்டை அடிச்சு இருப்பார். நிறைய சமயப் புத்தகங்கள் வைச்சிருப்பார்.
                                                                      அப்பாவும் அவரும் ஹம்பர் சைக்கிளும் சந்திக்கும் சில தருணங்கள் நானும் உடனிருந்திருக்கிறேன். அவர் அமைந்தகரை மறைமலை அடிகள் பெயரால் நடைமுறைத் தனித்தமிழ் இயக்கம் நடத்திய என் அப்பாவைக் கண்டவுடனே , தூய தமிழில்
" என்ன நடராசர், கண்டுகனகாலம் ,"
" சைக்கிள் கொஞ்சம் சத்தம் போடுமாப் போல இருக்கு ,ஞானாசிரியர் "
" என்ன நடக்குது,,என்ன நடந்தது,, என்ன நடக்கவேண்டும் "
"  அதைத் தாங்கள் தான் கண்டறிந்து சொல்லவேண்டும் ,ஞானாசிரியர்  " 
" சிந்துமணி வைரநடை ஸ்ரீ ராமன் போலிருந்த உந்துருளிக்கு என்ன வந்தது,, சொல்லும் நடராசர், "
" ஓம் ஓம், கொஞ்சம் பிரச்சினை குடுக்குது கண்டியலே  ,,ஞானாசிரியர்  " 
" உந்துருளிக்கு பரிகாரம் செய்யவேண்டும் போல இருக்கே நடராசர் ," 
 " ஓம் ஓம், ஞானாசிரியர் "
" இந்துசாதனம் கடைசி சஞ்சிகையில் தாங்கள் எழுதிய  கட்டுரை  வாசித்தேன் நடராசர் "
" மிகவும் சதோஷம் சந்தோஷம்  ஞானாசிரியர் "
" ஆறுமுகநாவலரின் முதன்மையான சீடன் ஒரு சாக்கு வியாபாரியா என்ற கட்டுரை பற்றி நிறய விசியம் கதைக்க வேண்டும் இண்டைக்கு நடராசர் "
                                                                                     இப்படித்தான் தொடங்குவார், என்னோட அப்பா நடராசர் தமிழ் மொழிக்கு உயிரைக் கொடுக்க நிக்கிற பயங்கரவாதி, அந்தாளோ சைவசயமத்துக்கு எல்லாத்தையும் இழக்கத்தயாரா நிக்கிற தீவிரவாதி. அப்புறம் ரெண்டுபேரும் கதைக்க சந்தர்ப்பம் கிடைச்சா ஆளை ஆள் தள்ளிவிழுத்தி கால நேரம் தள்ளிக்கொண்டு போவதே தெரிவதில்லை ,
                                                                                
அவரோட தேகக்கட்டு முல்லைத்தீவு முத்திரை மரம் போல இருந்தாலும், முகத்தில ஒருவித விகாரம் இருந்தது. அவர் மூக்கு சப்படடையாக உள்வாங்கி அமுங்கிப்போய் இருக்கும். அவ்வளவு சின்ன மூக்கு அதில ரெண்டு சின்ன ஓட்டைகள் , சரியா சொல்வது என்றால் சொக்கன்கடை வடை போலிருக்கும். அதனால அவர் குரல் கீச்சிட்டான் சுடலைக்குருவி கத்துவது போலிருக்கும். சிலநேரம் அவர் வாயால கதைக்கிறாரா அல்லது காதலா கதைக்கிறாரா என்று குழப்பம் உண்டாக்கும்.
                                                                                            அந்தாள் அப்பா சைக்கிளைக் கொடுத்தவுடன் , சீட்டில நாட்டு வைத்தியர் போல ஒரு குத்து விடுவார், அதன் சத்தத்தை உன்னிப்பாகக் கனைப்பார், அடிச்சுப் பிழிஞ்சு தோய்ச்ச் வேட்டியை காற்றிலே விசுக்கிற மாதிரி நாலுதரம் உதறிப் பார்ப்பார்,ஐயர் பூசைக்கு கைமணியை அடிக்கிற மாதிரி ஒரு ஹாண்டிலில் மட்டும் பிடிச்சுக்கொண்டு அங்காலும் இங்காலும் பக்கவாட்டில சரிச்சு ஆட்டிப்பாப்பார்,

                                                                 பிறகு அவர் வீட்டு முற்றத்தில் ரெண்டு ரவுண்ஸ் ஓட்டிப்பாப்பார் . கொண்டுவந்து ஆடு அறுக்கிறதுக்கு கொழுவிக் கம்பியில் கட்டித் தொங்கவிடுற மாதிரி வேர்க்சொப் கூரையில இருந்து கட்டி இறக்கப்பட்ட ஒரு பழைய சைக்கிள் செயினில் உள்ள கொழுக்கியில் துக்காக்கி தொங்கவிடுவார் ! அவளவுதான் .
                                                                                            அவர் கணிப்புக்கள் சரியாக இருக்கும்படியாக தொடையில புண் நடையிலே காட்டுற மாதிரி ஹம்பர் சைக்கிள் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கும் !
                                                                                    அதுக்குப் பிறகு அப்பாவும் அவரும் ஹம்பர் சைக்கிளை மறந்துவிடுவார்கள். சைக்கிள் பின்னம் சில்லில அசைந்தபடி தொங்கிக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும். அதிகமா அவர்தான் பேச்சைத் தொடங்குவார். அது திருமுருகாற்றுப்படையில் இருந்து, உமாபதி சிவாச்சரியார் , சிவஞ்ஞானபோதம் , எல்லாம் இறங்கித் துலாவி திருத்தொண்டர் புராணம் வரைக்கும் அலைந்து கொண்டிருக்கும். அப்பாவும் அவரும் தேவரம் பாடிய நாயனார்கள் காலத்துக்குள் நுழைந்து வெளியேறி புராண இதிகாச சமய விவாதங்களில் ஆழமாகிக்கொண்டிருப்பார்கள்.

பலநேரம் நினைப்பது இந்தாள் எதர்க்காக சைக்கிள் திருத்திரா வேலை செய்யிறார் என்று. பேசாமல் நல்லை ஆதினத்தில போய் குருமகா சன்னிதானம் போல இருக்கலாம் என்று. ஆனாலும் வாழ்க்கையில் இப்படியான ஆழ்மனது விருப்பங்களுக்கு செய்யும் தொழிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் சமூகத்தி சமாந்தரமாகப் பயணிக்கும் மனிதர்களை நாங்கள் சந்திக்கிறோம் தானே. 
                                                                                                  செய்யும் தொழில் என்பது ஒரு வாழ்வாதார உத்தரவாதம். அந்தக் கொம்போர்ட் சூன் உத்தரவாதமாக சில நம்பிக்கைகள் கொடுக்க அதன்மேல் கால்கள் இல்லாத கட்பனையோடோ. விருப்பங்களோடு நடந்துகொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளம் பேர் இந்தப் பூமிக்கு போக்குகாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்களே !
                                                                            கழுவிப்பூட்டி புதிதாக கிறிஸ் அடைஞ்சு , போல்ஸ் உருளைகள் மாற்றியபின் ஹம்பர் சைக்கிள் முதன் முதல் வீட்டுக்கு வந்து நிட்கும் போது கஸ்தூரிக்கலைமான் போல பொலிவிருக்கும், அதை ஓட்டும் போது வெள்ளிப்பணம் அள்ளிவீசியது போல அதன் சில்லுகள் உருளும்போது எழுப்பும் சத்தத்தில் ஒருவித சொகுசுத்தனம் இருக்கும். 
                                                                     எல்லாம் ஒருநாள் கூத்துதான் !ரெண்டாம் நாளே அதை பழையநிலைக்கு கொண்டுவந்து சேர்த்திடுவம். அப்பா அதுக்கும் ஒன்றும் சொல்லவே மாட்டார். ஹம்பர் சைக்கிளையும் எங்களையும் ,நாங்கள் போட்டிருக்கிற அரைக்காட்சட்டையும் பார்த்து சிரிச்சுக்கொண்டிருப்பார்.
                                                                       எப்படியோ அன்றைய முதல் நாள் எங்கள் வீடு முழுவதுமே தலைவாழை இலைபோட்டு ஊரையே விருந்துக்கு அழைத்தது போல கலகலப்பா இருக்கும். அப்பா ஞானப்பிரகாசம் தேத்தண்ணி கடையில வாழப்பழவாய்ப்பன் வேண்ட செலவுக்கு காசும் தருவார் ,ஆனால் அதை சொல்லும் விதம்   விசித்திரமான சிங்கள வார்த்தைகளையோடு வரும்   
" சாக்குப் பையில சில்லறையா சல்லி இருக்கு எடுத்துக்கொண்டு போங்கடா "
                                                                               இப்படித்தான் சொல்லுவார், காசை அவர் சிங்களத்தில் சொல்லும் சல்லி என்றுதான் சொல்லுவார், ஒருநாளும் காசு,பணம் என்று சொன்னதில்லை, சிங்களமொழி எனக்கு இப்ப தெரிவதால் அது தெரியும் . அதேபோல் சேட்டுப் பொக்கெட்டை சாக்குப்பை என்றுதான் அந்தநேரம் சொல்லுவார், ஏன்தான் அப்படி சொல்லுவாரோ என்று இன்றுவரை எனக்கு விளக்கம் கிடைக்கவில்லை,
                                                                                அந்தநேரம் சேட்டுப் பொக்கெட்டை சாக்குப்பை என்று ஏன்தான் எங்கள் அன்புக்குரிய அப்பா அப்படிச் சொன்னார் என்று என்னோட உடன்பிறப்புகளிடம் கேட்கலாம்தான், அதுகள்தான் பித்தம் தலைக்கேறி புளிச்சல் ஏவறை விட்டுக்கொண்டு இங்கிலீசிலையும், பிரெஞ்சிலேயும், டொச்சிலையும் பினாத்திக்கொண்டு வேலைக்கு ஆகாத மாதிரி எனக்கெதிரா நிக்குதுகளே.

ஒரு சைக்கிளில் இருந்து நாம் எதையும் வாழ்க்கைப்பாடமாக கற்றுக்கொள்ள முடியாது என்பது உண்மை என்று நினைப்பவர்களுக்கும் இனி வரப்போற கதைக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை . 

                                                                     நானும்தான் வாழ்க்கை பற்றிய உணர்வற்ற விடத்தல் வயதில் , நினைவுகளையோடு சமாந்தரமாகப் பயணித்த ஒரு பொருளின் பெறுமதி பற்றி அடிப்படை புரிதல் இல்லாத ஒரு காலத்தில் அந்த ஹம்பர் சைக்கிள் தொலைந்து போவதுகுக்குக் காரணமாயிருந்தேன், அந்த உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

டவுனில முனியப்பர் கோவிலுக்கு அருகில் இருந்த  ஒல்லாந்தர் கோட்டையைச் சுற்றி  முற்றுகை முறியடிப்பு என்று    யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்த ஆண்டுகளில் ஊர்ல இருந்து கொழும்புக்கு பயணிக்கும் பயணிகள் டவுனில் இருந்து வெகுதொலைவில் இருந்த ஒரு இடத்தில இருந்துதான் பிரயாணம் தொடங்குவார்கள். 

அந்த இடத்துக்கு தான் பின்னிரவிலும் கொழும்பில் இருந்து வரும் பயணிகள் வந்திறங்கி அவர்களின் வாழ்விடங்களுக்குப் போகக் காத்திருப்பார்கள். அப்போதெல்லாம்  இரவுகளில் வாகன வசதி இருக்காது. அவர்களை ஏற்றிக் கொண்டுபோய் விட சைக்கிள்களுடன் பலர் நிட்ப்பார்கள். சைக்கிள் தான் கால் டாக்சி போல அப்போது முக்கிய பப்ளிக் டிரான்ஸ்போர்ட் .


                                                                                           


Monday, 1 January 2018

போதையேற்றும் கற்பனை !

 படைப்பு உலகத்தில்   பிரபலமானவர்கள்   எழுதியவைகளைப்   பொறுமையாக வாசிப்பதென்பது நேரமின்மையை திருடி எடுக்கும்  அன்றாட வாழ்க்கைச்சோலிகள் நிறையவே குவிந்து போவதால்  என்னதான்  மெகாஜிகா வேகத்தில்  இன்டர்நெட்  அவசர உலகம் இயங்கினாலும்  இப்பெல்லாம் மிகவும் கடினமாக இருக்கு. பிறகு எப்படி பிரபலம் இல்லாத  நான் எழுதியவைகளை மற்றவர்கள் வாசிப்பார்கள் என்ற மனசாட்சியின் உறுத்தல் எப்பவுமே இருக்கும், 

                                                        நல்ல கவிதை என்றால் என்ன என்று எழுத்தாளர்  ஜெயமோகன் ஒரு பதிவில் எழுதி இருந்தார் சரியாகச் சொன்னால் அதை வரையறுத்திருந்தார். அதைப் படிக்கும்போது என் வரையறை என்ன என்று யோசித்துப் பார்த்தேன்.

                                                       "  எல்லா மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய உணர்வையோ அல்லது ஒரு கணத்தையோ அல்லது ஒரு தரிசனத்தையோ ரத்தினச் சுருக்கமாக பதிவு செய்ய வேண்டும்.  அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியது என்றால் அது மொழியை சுலபமாக தாண்டக் கூடியதாக இருக்க வேண்டும்  புரிய வைக்க முடியாத கவிதை கவிதையே அல்ல.மொழியே தாண்ட வேண்டிய தடை என்றால் சந்தம், வார்த்தை விளையாட்டு, அலங்காரம் எல்லாம் பொருட்டே அல்ல.20-30 வரிகளுக்குள் இருந்தால் உத்தமம். நூறு வரிக்கு மேலே போனால் அது காவியமாக இருக்கலாம், கவிதையாக இருக்க முடியாது. "


                                               இப்படி எழுதுகிறார் பலராலும் அங்கீகரிக்கப்பட்ட  ஜெயமோகன் !   இதெல்லாம் நான் எழுதியவர்களை தொகுக்கும் முயட்சி  என்று அவ்வப்போது நான் சொல்வதுண்டு. உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் ஜெயமோகன் சொல்வதைப் பார்த்தா என் பினாத்தல்களில் தேறுவது கொஞ்சம் தான் !
.
...............................................................
.
நேற்றைய கருக்கலில் 
எதிர்பாராமல் வந்திறங்கிய 

விருந்தினர்போல 
அடிச்சுப் பிழிஞ்சு கொட்டிய 
முன்கோடை மழை, 

முக்கிக்கொண்டிருந்த
மேகங்களின் முற்றுகையிடும்
முஸ்தீப்புகளில்
ஏற்கனவே உஷாராகியேயிருந்த 

நான் 
நல்லகாலமாகவே நனையவில்லை !

.
.....................................................................
.
நிசப்தங்களை 
நிலைகுலையவைக்கும் 
நகரத்தில் 
இரவு நடனவிடுதிக்கு வெளிக்கிடுகிறாள் 
பெரிய மகள் !
முடிவுகளை அவளே நிர்ணயிக்கும்
சட்டரீதியான வயதெல்லை
குழந்தைத்தனத்தை
இந்தப் பக்கமாக தள்ளிவிட்ட
முதல்ப் பிரவேசம் அது !
யார் யாரெல்லாம்
அவள் நண்பிகள் கூடப்போவது பற்றி
நம்பிக்கை விபரங்களை
அடுக்குகிறாள் !
தன் குழந்தை சமாளிப்பாளாவென்று
ஓரத்தில்
அப்பாவுக்கு பயமாகவேயிருக்கு !
தேர்வுசெய்துள்ள
பழக்கமில்லா இடங்களில்தான்
வாசனைகள் இணைக்கப்பட்டிருக்கு என்கிறாள் !
அப்பா
அரண்டுபோய்க்கொண்டிருப்பதை
பலவீனமான பின்வாங்கல்
என்பதுபோலப் பார்க்கிறாள்.
அவளின் துணிச்சலில்
அப்பா இளமைக்கால அட்டகாசங்களை
மீட்டு எடுக்கிறார் !
கலைத்துப் போட்ட கூந்தலை
அள்ளிமுடிக்க நேரமில்லாமல் மேகங்கள்
அலைபாய்ந்துகொண்டிருக்கும்
இரவுவேற நெருக்கியடிக்க
நம்பிக்கை உடைப்புக்களில்
நூறு நூறு விதமான கேள்விகள் !
வெளி முற்றத்தில்
சிவாலோப் பறவைகள்
கைவிட்ட காற்றில் கேவிக்கொண்டிருந்தன!
வெளியே புன்சிரித்தும்
உள்ளுக்குள்
அப்பா பதட்டமாகவே !
" எத்தனை மணிக்குத் திரும்பி வருவாய் ?"
என்கிறார் அப்பா தவிப்பாக.!
தைரியமாகவே
இதயத்தமனிகள் ததும்பவைக்கும்
அப்பா தொலைத்த சிரிப்பை
முன்னுக்குத் தூக்கிப் போட்டுச்
சவாலாகவே சிரிக்கிறாள்
பெரிய மகள் !

.
.....................................................................
.
நான் 
பரீட்சயமில்லாத மொழியில் 
எழுதவிரும்பாத 
அந்நியன் !
புரியாதவைகளை 
மெதுவாக உச்சரிச்சும்
சொல்ல விரும்பாதவன் !
இலட்சியங்களின்றி
வாழ்வதுக்காய்
முகத்தைச் சுளிப்பதுமில்லை !
இந்தப் பிடிமானம்
அதுதான்
ஆத்மாவைத் தழுவிக்கொள்கிறது !
எல்லார்
கைகளைப் பிடித்துக்கொள்கிறது ! 

.
....................................................................................
.
நேற்றைக்கு 
வெட்டியாகவிருந்த பொழுதொன்றில் 
வடமேட்கு வானத்தை 
எல்லைகளை 
மிக எளிதாக்கிவிட்டு 
தகர்த்துத் தாவிச்சென்று
உடைத்தெடுத்துக்கொண்டுவந்து
தாழ்வாரத்தின்
மறைவில் வைத்திருக்கிறேன் !
சாமத்தில் களவாடப்பட்டதால்
நட்சத்திரங்களு தெரியவர வாய்ப்பில்லையென்றே
நினைத்திருந்தேன்
ஆனால்
கீழ்வானில் ஒருபெரிய ஜன்னல்
திறக்கப்பட்டது பற்றியவை
விடியவிடிய விவாதித்திருக்கின்றன !
ஏற்க இயலாத
அவ்வளவு அகலமான வெற்றிடம்
விரித்துவைக்கப்பட்டதால்
தென்திசையிழந்த பறவைகள்
பதட்டமாகியிருக்கின்றன !
சூரியன்
உதித்தெழுந்த முதல் வேலையா
விசிறி அழுதழுது
முறைப்பாடு வைத்துக்கொண்டிருக்கு!
அலைந்தோடிய மேகங்கள்
மறுக்க இயலாத
கலைந்தோடிய பகுதியைத்
சல்லடைபோட்டுத் தேடுகிறன !
கல்லறை மீது சத்தியம் செய்து
ஒப்புக்கொடுத்தபடியே
இற்றை இரவுக்குள்
மறுபடியும் வானத்தைத் தூக்கிப்பொருத்தப்போறேன்
ஆனால்
சண்டமாருதம் வீரியமானது போல
வந்து ஒருநாளுக்குள்
கனதியாகி உருப்பெருந்துவிட்டது
இப்போது
உதவிக்கு நாலுபேர் தேவையாகவிருக்கு
யாராச்சும் வர்றேளா ?

.
...........................................................................
.
தூறல் பூச்சிகள்
தலையை மெல்லத் துவட்டினாலும்
ஈரமான தாவணி விசிறிகள்
வாய்ப்பாக ஒத்துவருவதில்லை !
என்
ஒதுங்கிப்போதல்களுக்கும்
மழையின் தினவெடுத்த திமிருக்கும்
மிகப்பெரிய
அடிப்படைத்தவறு 

நடந்துகொண்டேயிருக்கு !
.
.....................................................
.
முதல்முதலா 
உங்கள் வெளிறிய முகத்தைக் 
கதவை திறக்கச்சொல்லும் வெளியில்
காற்றோடு அறிமுகமாகித்தான் 
பார்த்தேன் !
என்
உறவுமுறை தேடிவந்த
உங்களுக்கு எதுக்கு
முகம் சட்டேன்று வெள்ளையானது ?
அது எனக்கும் புரியவில்லை !
தலைமுறைப் பிறழ்வுகள்
நீண்ட தூரங்களை அனுமதிக்கும்
பார்வைப்பரிமாற்றத்தில்
அளவில்லா அதிர்ச்சிகளை
நீங்கள்
எதிர்பார்த்திருக்க நியாயமில்லை !
ஒருவேளை
அந்த இடத்தில என்னை
பலவருடம் முன்னைய
பால்ய நாட்களில்
அடையாளம் கண்டிருக்கலாம் !
அதில் தான்
என்
வயதை நேரடியாகச் சந்திக்கிறீர்கள்,!
இரண்டாம் முறையாக
கதவைத்திறந்து நீக்கலாக விட்டு
காலத்தைக் கொஞ்சநேரம்
கசியவிட்டேன் !
நீங்கள்
மேம்படுத்தல்களில்லா
எனக்குரிய வாசனையை
அடையாளம் கண்டதுபோல
தலையைக் குனிந்துகொள்கிறீர்கள்,
தயைகூர்ந்து
அம்மாவின் சாயலோடிருக்கும்
என்னை
நானே
எனக்குள்ளே
பத்திரமாக வைத்திருப்பது பற்றி
யாருக்கும் சொல்லிவிடாதீர்கள் !

.
................................................................................
.கடவுளிடம் வேண்டிக்கொண்ட
நிசப்த கணங்களுடன்
தனித்திருப்பதாக
உணரவதை விடவும்
சருகுகளோடு
காற்றில் நடனமாடிக்கொண்டிருக்கும்
வெய்யில் போலவே
ஒன்றோடு ஒன்றைச்
சம்பந்தப்படுத்திக்கொண்டிருப்பதில்
நேரம் கடந்துவிடுகிறது !

.
................................................................................
.
மழை 
தண்ணியாகிய தண்ணியோடு 
வட்ட வட்டமகாக 
யாரோ ஒருவர் வந்திறங்கி
தெருவோரத்தில் 
வாழ்க்கையாக்கிவிட வைத்திருக்கு,
இப்போதைக்கு
அதன் வட்டங்கள் வெறும் வட்டங்களே
ஏனென்றால்
வானவில்லின் வளைகாப்பைப்
பிரதியெடுக்கிக்கொண்டிருக்குமதன்
சுழிக்கும் வளைகோடுகளை
யாரும் தீண்டப்போவதில்லை !
ஒரு வயதில்
பெரிய மகள்
வெறும் பாதங்களோடு
சேறுகளைச் சதுப்பாக்கி
என்முகத்திலும் விசிறியடித்து
நாலு பக்கமும் சிதறடிக்க
உந்திக் குத்தி விளையாடி
நனைந்தே நனைந்து போவாள்!
தெறித்த தென்பாண்டி முத்துக்களை
நானாக ஒருநாளும்
துடைத்ததில்லை
வரம்போல வேண்டிக்கொண்டிருப்பேன்
அவளுக்கான உலகத்திலிருந்து
குளம்போலவிருக்கும்
சின்ன ஆழத்தையே
ஆழ்கடல் என்பாள் !
இப்போதெல்லாம்
வடிவமைக்கப்பட்ட சப்பாத்துகளில்
பொறுப்புணர்வு வந்ததுபோல
தேங்குதண்ணியை விலத்தியே போகிறாள்
நான்
ஆயிரம் நேசமான ரசனைகள்
இழந்துவிட்டேன்
அதில இதுவுமொன்று !

.
...........................................................................................
.உங்களில் யாரவது
என்
வார்த்தைகளை நம்புபவர்களாயின்
ஏற்றுக்கொள்ளுங்கள்
தவறுகள்தான்
இன்னமும் இன்னமும்
முயட்சித்துக்கொண்டிருப்பதுபற்றி
வெட்கமின்றி
மனித மனச்சாட்சியை
ஒத்துக்கொள்ளவைக்கின்றன !

.
..............................................................................
.

தனித்தனியாக நின்று 

இருட்டின் 
மொழிபெயர்ப்புகளை 
உறக்கமின்றி 
ஒன்றோடொன்று தொடர்பிளக்கச் செய்யும் 
கனவுகள்
பயணமாகிக் கொண்டிருக்கும்
நெடுந்துராப் பாதையில்
அச்சம்தரும் அமைதி ! 

இருத்தலைப்
பொறுமையோடு அணுகிக்கொண்டிருக்கும்
வெவ்வேறு கணங்களில்
அருகருகே
வெளிச்சக் குறுக்கீடுகள் !
ரகசியமாகப் படர்ந்திருந்தாலும்
நிசப்தங்களை
நீட்டிக்கொண்டேயிருக்கும்
நிசி மவுனம் !
இதெல்லாம்
இயங்கக் காரணமாயிருக்கிற.
இரவின் குரலை
எப்போதாவது
கேட்டேவிடுவதென்று முயட்சித்த
அத்தனை நாட்களிலும்
முதலில்த் தூக்கம்
அப்புறம் தான் மற்றதெல்லாமென்று
சொல்லாமலே
விடிந்துவிடுகிறது !

.
..............................................................................
.
என்னை 
வேகமாக உந்திச் செலுத்தி 
நான் 
அறிந்திருந்கும் 
முன்னரங்க எல்லைகளை 
உடைத்துக்கொண்டே தகர்த்து
வலிகளையே
வார்தைகளாக்கும்
மிக முக்கியமானவொரு
சம்பவத்தில் முழுமையடையாமல்
தொக்கி நிக்கிறேன் !

.
......................................................................................
.
கறுப்பு நிறத்தை
நேருக்குநேர் சந்திக்க
வெறிச்சோடிக்கொண்டிருக்கும்
இரவுநேரத்தெருக்கள்,
கரண்ட் வயரின் 
மீதமர்ந்து பாடிக்கொண்டிருக்கும்
மோர்கோப் பறவைகள்,
சின்ன வெளிச்சக்கீற்று
வசீகரமான கட்பனையாக
அடிவைக்கத்தவறிய வேகத்தில்
முன்னோக்கி விழுந்தேன் !
விவரிக்கமுடியாத
பயங்கரவலி முள்ளந்தண்டில் !
மொத்த உலகமும்
என்
தோல்வியால் போர்த்தப்பட்டு
மென்மஞ்சளாக மங்கியது,!
மனதின்
கபடமான பகுதி
திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்கிறது,
தடுமாறும் மற்றையபகுதி
பைத்தியக்க்காரத்தனமாக
முடித்து வைக்கப்போகிறதென்கிறது !
வயதாகும் வயது
மறைமுகமாகக் கிண்டல்செய்கிறது
என்பதே என்னோட சமாதானம் !
முற்றிலும் மாறுபட்ட
தொனியில்
முனகிக்கொண்டு எழுந்துவிட்டேன்!
விழுகிறதே
எழுவத்துக்குத்தானே
என்றுசொல்லி முடிப்பதுக்குள்
ரெண்டாவது முறையும் சறுக்கிவிட்டது!

.
..................................................................................................
.


மனமகங்காரம்
அவ்வளவு இலகுவாக
சமயங்களில் விட்டுக்கொடுக்குதில்லை,
மோனத்தை ஆனந்தமாக்கும்
செப்படி வித்தைகளும் 
பிடிபடுகுதில்லை,
அப்பட்டமாகச் சொல்வதென்றால்
விழிப்புணர்வின்றி
நாளைகளை களவெடுத்து
இன்றோடு பொருத்திக்கொண்டு
அத்தமில்லாக்
காலத்தில் வாழ்ந்து போவது குறித்து
வருத்தப்படமுடியவில்லை !

.
........................................................................
.
உள்வாங்கி உச்சக்கடத்தில்ப்
பாவிக்க வேண்டியிருந்த
கவிதைமொழி
கடைசி நேரத்தில்
புத்தியையைக் கபடமாகக்காட்டிப்
பின்வாங்கிவிட்டது !

.
..............................................................................
.
பார்த்துக்கொண்டிருக்கும் போதே
பருவங்கள்
புதுப்பிக்கப்படும் அனுபவம் அது !
மனதோடு
பூத்துச்சொரியவைக்கும்
அந்த ஒரேயொரு
காரணத்துக்காகவே
மழையோடும் 

உன்னோடும் 
அனுசரிக்கிறேன் !
.
.....................................................................................
.
மேன்மையானவொன்றை இழக்கிற
கவலை
உதறி எழ முடியாதவாறு
ஆக்கிரமிக்கிறது !
இன்னும் இன்னும் வேண்டுமென்ற
மனப்பான்மை
ஆழ்ந்த விவாதத்திறகுரிய
எளிதில் மறுக்கவியலாத
நோக்கங்கள் நோக்கி
வழி நடத்தும் பொறுப்பிருப்பதாகவும்
நம்பமுடியவில்லை !
புரிகிறதோ
இல்லையோ
ஆழ்மனக் கொந்தளிப்புக்களை
முடிந்தவரையில் அடக்கிக்கொண்டு
நேர்மையான
சிருஷ்டிகர்த்தாக்களுக்கு
உண்மையானதை விட்டுக்கொடுத்து
ஒதுங்க வேண்டியதுதான்.!

.
....................................................................................
.
ஒரு
குறிப்பிட்ட
பின்விளைவுச் செயல்பாட்டில்
கைகளை பிசைந்தவாறு
ஏதுமில்லாமல்
திரும்பிப் பார்க்கையில்
இழந்தவை அத்தனையும்
சமாதானம் சொல்லி ஈடாகுமாவெனும்
சின்னக் கேள்வியை
பெரிய வரலாற்றிடம் கேட்கிறேன் ! 

விட்டுக்கொடுப்புகளற்ற
கபடத்தனமான வரலாறு
அந்தக்
கனதியான கேள்விக்கு
சீரழித்துக் கொண்ட
மிருகத்தின் மூர்க்கத்துடன்
இப்போதும்
ஆம் என்றே பதிலுரைக்கிறது. !

.
...............................................................................
.
ஒரு
வெளிச்சமான நாளில்
விழித்திருக்கும் கனவில் கடன்வேண்டி
பிம்பங்களை உடைக்கும் மழையை
வெறுக்கிற அளவுக்கு
உறைபனியோடு போராடியே
இறந்துபோன மஞ்சள் சருகுகளை
அது
சேர்த்துக் கூட்டி அள்ளிக்கொண்டு
ஒரு
திசையைத் தேர்ந்தெடுத்து
வெகுதூரத்துக்கு அணைக்கும் வெள்ளத்தை
வெறுப்பதில்லை !

.
..........................................................................
.
சாதாரணமான பார்வையில் 
எளிதாகவே 
கவனிக்கப்படாமல் தப்பிவிடும் 
சின்ன விபரங்கள்,
பிரத்தியேகமாக அனுபவங்கள் 
எதிர்கொள்ள விரும்பாத
நேரடியான யதார்த்தம்,
நீண்ட கதைகளாகவேண்டியதை
வரிகளுக்கிடையில் சுருக்கிவிடும்
நரித் தந்திரங்கள்,
நல்ல சந்தர்பங்களைத்
தள்ளிப் போட்டுவிடும்
அசந்த மன அழுத்தம்,
இன்னார் என்று பெயர்சொல்லி
இந்த இடத்திலென்று குறிப்பிடமுடியாத
இணைக்கப்பாடுகளற்ற
கணநேர சம்பவங்கள்,
எந்தச் சந்தேகங்களையும்
சிக்கலாகிவிடும்
போதையேற்றும் கற்பனை ,
நிறைவேற்றமுடியாத
மவுன வெளிகளில்
தனித்து நின்று கேலிசெய்யும்
மொழிப்பிரயோகம்.
சில உண்மைகளையும்
பல பொய்களையும்
நம்பும்படியாகவே
உருவாக்கிய விதம் ,
இவற்றோடு போராடித்தான்
ஆச்சரியங்கள் தருகின்ற
ஒரு கவிதையை
எழுதிமுடிக்கவேண்டியிருக்கு !


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Happy New Year, 

for  all of my   Facebook friends  ,, my blogg readers  ,   wish you a year filled with laughter, friends and the connections that matter most. Happy 2018!
.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;