Sunday, 17 December 2017

ஏராளம் மிச்சமிருக்கின்ற நாளை !

  " கவிதைகள் என்பது வானிலையை ஒத்ததல்ல சடக்கென்று வியாபகத்தில் ஆக்கிரமித்து பொழிய. எல்லா போக்குகளையும், ஈடுசெய்ய இயலாதவைகளையும், விநோத வகை வேர் பீடித்த உலகியலையும், ஒடுக்குமுறை பீர்க்கங்கூடு வாழ்வியலையும், உட்செறித்து ஒரு தனியன் தன் படைப்பை முன்வைக்கையில் என்ன செய்வோம். தவிர கட்டமைக்கப்பட்ட சாதாரணத்துவத்தை மீற எவன் ஒருவன் முன்வருவான் ?. "

                                 இப்படி ஒருமுறை  " இறையியல் போல தீவினையற்ற போதை "  எழுதியிருந்தார் ஷக்தி என்கிற கவிஞ்சர் .இந்த வரிகளை எவ்வளவு ஆழமாக ஒரு கவிதையை அதை எழுதியவனுடன்  உரசிப்பார்க்கிறது என்று பார்த்திங்களா 

                                                        நான் எழுதிய நீண்ட கவிதைகள் போன்ற முயட்சிகளே  எப்போதுமே திசை இல்லாமல் பினாத்துறது போல இருக்கும், முக்கியமாக எனக்கே இருக்கும். அதை ரெண்டாக,மூன்றாக உடைத்தால் என்ன என்று நினைப்பது. அது அவ்வளவு இலக்கு இல்லை. ஆதாரமான செய்திகள் அடிவேண்டும் சாத்தியம் இருக்கும், என்றாலும் சிலதை உடைக்கும் போது சின்னதாக அதெல்லாம் கனதியான ஒரு செய்தி சொல்லும் மொழியின் வீரியம் வருகிறது .

                                                                     அதனால நான் எழுதிய நீண்ட பினாத்தல்களை கொஞ்சம் உடைச்சுஇருக்கிறேன். சில இடங்களில் வரிகளை மேலும் கீழும் மாற்றிப்போட்டு பாம்பும் ஏணியும்  இருக்கிறேன். அதில ஒரு கேம்ஸ் விளையாடும் திரில் கிடைக்கும் அதேநேரம் கோணம் புதுவிதமான அனுபவமும் சேர்ந்து கொண்டது.

                                                                           மற்றபடி இந்தக் கவிதைகள் ஒரு மனநோயாளியின் மன்னிப்புக் கோரல் போல இருக்கலாம், ஏனென்றால் கொஞ்சம் உணர்வுகளோடு கை கோர்த்துச் செல்லும் காலமொன்றில் வாழும் போது இயல்பாக எழுதியவை. மேலெழுந்து மனப்பிறழ்வு எண்ணங்கள் மேவிக்கொண்டிருக்கும் ஒரு விதமான அபத்த நிலையில் இருந்து இதைப் பார்த்தால் குழப்பமாகத்தான் இருக்கும். 


                                                                எப்படியோ நவீன கவிதைகளே குழப்பங்கள் கொண்டுவரும் குறியீடுகளை மொழிபெயர்க்கும் முயட்சி தானே,,இல்லையா ?
.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
.
உனக்கும் 
உணர்வுகளுக்கும் 
எனக்குமிடையில்
குணாதிசயங்களைத் 
தனித்து அடையாளப்படுத்தும்
எதுவுமிருந்ததில்லை !

.
........................................................................
.
இன்னுமின்னும்
மனச்சாய்வுகளை எடுத்து
முடிவுகளை அனுமானிக்கமுடியாமலா
உருமாற்றிக்கொண்டு
என்னோட சேர்ந்து 
இந்த இரவும் விழித்திருக்கிறது ?
சூனிய நேரத்தை
என் தரப்பில்
மென் காதல் நிரம்பிய
மூர்க்கமுடன் எதிர்கொள்ள
ஆரோக்கியங்கள் இழந்துவிட்டேன், 

.
............................................................................
.
இது ஒன்றும் புதிதல்ல,
ஜன்னல்களை அகலத்திறந்து
திரைச்சீலைகளை நீவிவிட்டு
காற்றைக்
கைபிடித்து உள் அழைக்கிறேன்,
ஒரு
இரவுப் பறவைமட்டும்
நாதங்களில் நாக்கை நீட்டி
கிண்ணர இசையை ருசிக்கத்தருகிறது,
பெரிய நகரத்தை
சமச்சீராக இணைக்கும்
கழிமுகத்தில்
ஒரு பாதையின் முடிவில்
இருட்டின் வாசனைகள் குறித்து
தீவிரமாக ஆராய்கிற
ரெண்டு காதலர்களும்
கன்ன முத்தமிடுவத்துக்கே
தயங்கிக்கொண்டிருக்கிறார்கள் !

.
...............................................................
.
ஞாபகம் வைத்துக்கொள்ள சாத்தியமில்லாத
இலக்கமொன்றிலிருந்து
அலைபேசியைத்
தொடர்பில் அழைத்துவிட்டு
கவிதை உணர்வுகளுக்கு
ஒருசில பொதுத்தன்மைகளை
உதாரணம் காட்டென்கிறாய் !
ஏதேனுமொன்றை
வர்ணித்திருக்கலாம்தான்,
உன்னளவுக்கு
எனக்கது தெரியாதென்கிறேன் !
.

...............................................................................
.
அலுப்பூட்டக்கூடிய
மிகப்பழைய உத்தியாகத் தோன்றினாலும்
விளங்கிக்கொள்ளமுடியவில்லை
எனும் போது
வார்த்தைகளின் உண்மைத்தரம் 
மோசமானதாகத்தான்
இருந்திருக்க வேண்டுமென்றில்லை,
என்
நிஜத்துக்கு உரிமையுள்ள
அமைதி நிழல்களை
யாரும் தீண்டவேண்டாம், 

.
.................................................................
.
பிறகெல்லாம் 
நீடுகையில் பேசாதிருந்தாலும்
நினைவைக் குடையும்
உன்
உடல்மொழி ,
வெளித்தோற்றதைக் கிழிக்கும்
முகப்பாவனை,
நெற்றிமேட்டில் விழும்
செல்லக்குமிழி ,
ஓரத்தில் பிரிக்கப்பட்டு
ஆராயப்பவேண்டிய
உன் முறுநகைச்சிரிப்பு ,
அப்போதிலும்தான்
நிகழாமலே போய்விட்டதெல்லாம்
துல்லியமாக
எப்படியோ வந்துவிடுகிறது.!

.
.........................................................................................
.
தேவைக்கதிகமாக 
வெளியேதான் இருக்கிறேன்
வீடு வாசல் 
நீட்டிப்படர்ந்துபடுத்திருக்கும் 
ஒரு மரக்கிளையில்
கரணமடித்துக் களைத்த
ஒரு 

பறவை வந்திறங்கும்போது
சுவாசத்தை இதமாக 

உள்வாங்கி
நினைவுப் பெருமூச்சு !

.
.................................................................................
.
எனக்கான
ரசக்கண்ணாடியில்
என் முகம்தான் பார்க்கிறேன்
கிழவயதை
விடாப்பிடியாக நிர்ணயிப்பதுபோல 
வெள்ளை மயிர்கள்
முன்னிறுத்துகின்றன
அவற்றை
மை பூசி மறைக்கும்
உத்தேசங்கள் இல்லவேயில்லை,
மேலோட்டமாகவே
நாளைக்கே இறுதி நாளென்று
கன்னச் சுருக்கங்கள்
அவற்றைக்
கழிம்பு தடவி நிரவும்
வழவழப்பு எண்ணங்களுமில்லை!
அப்போதெல்லாம்
நாள்ப்பட்ட வலிகளென்றால்
என்ன என்று கூடத் தெரியாது
இப்போதெல்லாமது
எனக்கு முன்னமே எழுந்துவிடுகிறது!

.
..............................................................................
.
உங்களை
விண்மீன்கள்வரையில்
உயர்த்திவைப்போமென்று
உறக்கமில்லாக்
கனவுகளை மேம்படுத்தியவர்களே 
மிகச் சரியான
தந்திரத்தருணமொன்றில்
விலைபேசி
உயிரோடு விளையாடி
துருவவழிகாட்டித்
திசைவெளிச்சங்கள் விடிவதற்க்குள்
இரவுகளையும்சேர்த்தே
களவாடிவிடுகிறார்கள் !

.
..................................................................................

இல்லாத 
புள்ளிகளை ஒருங்கிணைத்து 
அர்த்தங்களையும் 
எதிர்வினைகளையும் 
நீங்களாகவே சேர்க்காதீர்கள் .
எனக்கு 
உங்களில் நம்பிக்கை இல்லை !
கண்களில்க் கிறக்கம் 
மூச்சுத்திணறல்கள் 
வலிமையான 
அன்றாட பின்வாங்கல்களிருந்து 
தப்பிப்பதற்கான 
லௌகீக வழிகளைத் தேடுவதால் 
கட்பனைகளில் 
ஒருவித தேக்கநிலை !

.
.....................................................................................
.
விண்மீன்கள் தூங்கியிருப்பதால்
ஜன்னல்களுக்குள்
நிலையெடுத்து நின்றுகொண்டு
வீதிவிளக்கோடு
முட்டிமோதிக்கொண்டிருக்கும்
மின்மினிப்பூச்சிகளின்
பின்கோட்டு அழகோவியமெல்லாம்
சிதறிவழியும் நிழல்களைப் பற்றிக்
கவிதை எழுதுகிறாய் !
ஆழிக்கடலின் அமைதியோடு
இரவெல்லாம் ஒருவன்
மன அலைகளோடு ஒட்டாமல்
அந்தக் குறுமண் பாதையிலே
வெறுங்காலில்
நடந்தலைவதைப் பார்த்திருக்கிறீயா ?
கவித்துவ எண்ணங்கள்
கரையேறித் தவழ்ந்துமிழும்
பட்டாம்பூச்சி வார்த்தைகளோடே
வாழ்ந்துகொண்டிருக்கும்
நீயெங்கே
அதையெல்லாம் கவனிக்கப்போகிறாய் ,
சிலநேரம்
புகைமூட்டம் போலவே
அவன் அசைவுகளைக் கண்டிருப்பாய் ,
அவனின்
கொப்புளம்போட்ட பாதங்களின்
வலியுனக்குத்தெரியவர வாய்ப்புகளேயில்லை
அதைப்பற்றி
விபரமாகத் தகவலறிந்த
அதிகாலைத் துருவநட்ச்சத்திரம்
எத்தனைமுறை கண்கலங்கியதென்பது
மிகப்பிரபலமான உனக்குத்
தெரியவரவும் வாய்ப்புகளேயில்லை !

.
..........................................................................................
.
இனிமேல்
இளமை திரும்பாதென்று
மனதை நினைக்கவைத்துக்கொண்டுதான்
தினங்களைத் தொடங்குகிறேன்
வாழ்க்கை வானத்தை
நொடிகளில் அசையும் மேகங்கள்
தேர்வுசெய்யும் காலத்தில்
விரித்து வைத்திருக்கின்றன!
எனக்கு தெரியும்.
இறுதிக் கட்டத்தை நோக்கி
மெதுவாகச் செல்லும்
சகுனங்களில் ஒதுக்கப்பட்ட
நல்ல நேரம்
மிகமிகக் குறைவாகத்தானிருக்கு ,
உங்களுக்கும்தான் !

.
........................................................................
.
என்னவோ தெரியவில்லை
ஒரு
கானகப்பாதையில்
வண்ணத்திப்பூச்சியின்
சிறகுகளைத் தொட்டபோது 
என் நிறம்
சாயம் கழண்டுபோய்விட்டது!

.
............................................................................
.
பலருக்கு வாய்த்ததுபோல்
என் நிறமொன்றும்
இழுவைக்கவர்ச்சியின்
முழுமையான அதிர்வில்
அலாதியான அலங்கரிப்பல்ல
என் நிறத்தையாரும்
சிலாகித்துக்குறிப்பிட்ட
பேருவகைகளும்
எனக்கதிகமாய் வாய்க்கவில்லை.
அதைப்பற்றி நான் வருந்தவும் இல்லை.
ஆனால்
லயித்துக் கிடக்கும் நேரம்
செவ்வந்தி மலரிதழ்களை
உரசி ரசிக்க வேண்டும்,
அவற்றின் சொண்டு
தொட்டுணர வேண்டுமென்ற ஆசை!

.
.....................................................................................
.
வண்ணாத்திப்பூச்சி
நாள்ப்பொழுது தவறாமல்
அமிர்தகளி
வாச மோப்பம்பிடித்து
செவ்வந்திகளின் மாமாங்கமுகம் தடவுகிறது
சிலநேரம்
என்நிறம் மறுபடியும்
வந்தே தீரும் என்ற நம்பிக்கையில்
எண்ணங்களின் பெரும்பகுதியை
தொட்ட விரல்களில் உதிராமல் ஒட்டியிருக்கும்
வாசனைகளில்க்
குவித்து வைத்திருக்கிறேன்.

.
..........................................................................
.
ஒரு இடத்தில
ராத்திரி வீதியெங்கும்
மின்மினிப்பூச்சிகளின் ஒளிச்சுடர்,
இன்னொருஇடத்தில
மணல்ப் பாதங்களை வருடும்
மல்லிகைப்பூ வாசனை ,
மற்றோர் இடத்தில
மழையோசை கேட்டபடியே
இருட்டோடு உரையாடல்,
தேவைப்பட்ட நேரங்களிலெல்லாம்
சுயமாகவே நெகிழ்ந்து .
என்னையே இழந்துபோகவைக்கும்
என்போன்ற நட்புமனிதர்கள்,
.

..........................................................................
.
ஓசையாகவே அலையையும்
ஆத்மாவுக்கும்
பழகிப்போனதாலோ தெரியவில்லை
இப்போதைக்கு வாழ்க்கை
கணப்பொழுது அணைக்கும்
பெண்ணின்
அடர்நெருக்கம் தரும் வெப்பதைவிடவும்
சுகமானதாய்த்தானிருக்கு !

.
..............................................................................
.
என்னை 
எப்படியென்றாலும் 
சொல்லி அழையுங்கள் !
என் அம்மா போல 
அஃறிணையில் திட்டியென்றாலும் சொல்லுங்கள்,
சிரம்தாழ்த்தி
எளிதாக எடுத்துக்கொள்வேன் 1
என் நண்பர்கள்
தலையிலடிச்சா போல
டேய் மச்சான் என்றுங்கள்
வாசலோடு ஒதுங்கி நின்று
வணக்கமாகவே வரவேற்பேன் !
எனக்கென்ன வந்தது
என்
சொந்தப் பெயர்
ஒருநாளில் எனக்கே
உரிமையில்லாமல்ப் போவதுதானே ! 

.
.......................................................................................
.
எந்த இடத்திலும்
மிகையாகத் தூக்கிவிடாத ,
வக்கிரமாகத் தாழ்த்திவிடாத
சரிவுகளைப்பற்றிய கோபதாபங்களோடு

ஏதோவொன்றை
மனதில் வைத்துக்கொண்டிருந்தபடி
எழுதிக்கொண்டிருந்த
குறியீட்டுப்படிமங்களை
பொறுமையாக வாசிக்கிறேன் 
அங்கேயும்தான்
மீளப்பயன்படுத்திக்கொள்ளவே முடியாத
உள்ளோட்டங்கள்
வெறுமையாகிவிடுகிறது.!

.
.........................................................................
.

இன்னொரு 

விசம் தோன்றியது.
என்றோவொருபொழுது
பயன்படுத்திய எந்தச் சொல்லை
இற்றைக்கும்
நெகிழ்த்திப் பயன்படுத்தினாலும்
அது
ஓரங்களை உரசியபடி
பாதிப்பக்கம்தான் போகிறது
திருப்பி வாசிக்கிறேன்
அக்கணமும்
நடுக்கொள்ள நிற்கவேமுடியவில்லை
சொற்கள் எல்லாம்
தொடங்கிய இடத்திட்க்கு மட்டுமே
வைப்புமுறையில் சொந்தமானவை .
ஒரேயொரு முறை
பதியப்பயன்படுத்திவிட்டால்
சுயமதிப்பு ஆளுமைகள்
அடையாளமாகி அழுத்தமாக விழுந்துவிடுகிறது.
இன்னொருமுறை
திருத்தி வாசிக்கிறேன்
அப்போதும் சக்கைதான் மிஞ்சுகிறது !

.
......................................................................................
.
உங்களுக்கு
எத்தனை வயதாயிருந்தாலும்
மதிப்புகளில் குறைவில்லாதவரை
ஏதோவொரு பெயர் பரவாயில்லை !
என் பெயர் எனக்காக
எங்கே உரிமைகொண்டாடி நிற்கிறதென்று
எனக்கே தெரிவதில்லை !
ஒரு
கவிதைதரும் ஆனந்தங்களைவிடவும்
என்
பின்னடியில் வரும்பெயர்
யார் ஏறெடுத்துச்சொன்னாலும்
என் உள்ளாடையை விடவும்
நெருக்கமாகிவிடும் !

.
......................................................................................
.
நானொரு
மனதின் ரம்மியமான பிரதேசத்தில்
எழுத வாசிக்க மட்டுமே
மட்டுப்படுத்தப்பட்ட
சாதாரண மனிதப்பிறவி !
தயவுசெய்து கெஞ்சிக்கேட்கிறேன்
சொன்னபடிக்குக்
கொஞ்சமேனும் அதிகமாக
உரிமைகளை வாரியெடுத்து
என்னைக்
கவிஞன் என்றுமட்டும் சொல்லாதீர்கள்
நானே
என்னை எனக்குளே
கவிஞன் ஆக்குவதில்
நிரந்தமாய்த் தோற்றுப்போனவன் !

.
...................................................................................
.
எல்லா மூலைகளிலும் 
சமகாலத்தைப் பிரதிபலிக்கும்
வெற்றிடங்கள் ,
மானுடங்களைத் 
தழுவிக்கொள்ளும் பார்வைகள் 
இல்லவேயில்லை,
மொழிகளால் தழுவிக்கொள்ளும்
அழகானதும்
அந்தரங்கமானதுமான
சில குறிப்புக்களோடு
பட்டப்பகலிலேயே மவுனமான
ஏதோவொரு பாதையைத் தெரிவுசெய்து
கவிதைகள்
உடைந்து போகலாம்
அதைவிட
மேலதிகமாக எதிர்பார்க்கவேண்டாம் !

.
...................................................................................
.
முள்ளந்தண்டுவடத்தைக்
குப்புறவிழுத்தி
முதுகுப்பாட்டில் விழுந்த அடி!
பிரஸ்தாபிக்கும்
அடிக்குரலில் மூச்சிழுப்பு !
கைவிசிறித் துணைதேடி
கால்களைச் சவ்வடியகற்றி
எழுந்துதான் நிக்கிறேன் !
இழுத்தெடுத்து
நெஞ்சை நிமித்திக்காட்டி
சேதாரமில்லை என்கிறேன் !
திரும்பிக்கவனித்த
யாராவது பார்த்துச் சிரித்தார்களா ?
உறுதிப்படுத்துகிறேன்
மேப்பிள் இலையுதிர்மரத்தில்
ஒரேயொரு புளினிக் குருவி
கண்ணசைவில் வேறுயாருமில்லை !
அதிர்வு எல்லைக்குள்
பாடார் என்ற வெடியழுத்தம்
யாருக்கேனும் கேட்டிருக்குமா ?
அழுகிப் பிசிறுதட்டிய
என் நெஞ்சடிப்பைத்தவிர வேறேதுமில்லை !
இப்போது நடக்கத்தொடங்குகிறேன்
விரக்தி வியர்வையில் வலி !
வேகமெடுத்து ஓடுகிறேன்
விலா எலும்பு துலா மிதிக்குது !
எம்பிக்குதிக்கிறேன்
காற்று தீனமாக அஸ்தமிக்குது !
என்னையே ஏமாற்றுவதை நினைக்கப்
பெருஞ் சிரிப்பு வருகுது !
உண்மையென்னவென்றால்
அடிவிழுந்த நினைவிடத்திலிருந்து
இன்னுமென்னை
இம்மியளவும் நகர்த்தவேமுடியவில்லை !

.
........................................................................................
.
நீங்கள்
அர்த்தம் கொடுத்து
மனம் விரும்பி நேசிக்கும்
கவிதைகள் போலவே
அதை 
ஏனோதானோவென எழுதியவனின்
வாழ்க்கையையும்
கட்பனை செய்யவேண்டாம்.
முற்றுமுழுதாகவே
ஒத்துக்கொள்ளும்படியாகவே
ஏமாந்து போவீர்கள் !
படிமப் புனைவுகள் வேற
படியளக்கும்
வாழ்க்கையென்பது வேற.!.
எல்லாவற்றையும் பேசவைக்குமுவன்
அவசியங்களோடு
எப்பவும் மவுனமாகவிருக்கலாம்
ஆத்மார்த்தங்களை
அடையாளம் காட்டுமவன்
மனநிலையில் சரிந்துயிருக்கலாம்
ஊரெல்லாம்
கொண்டாடுமவன்
வெற்றிபெற்றுச் சிறந்தகவிதை
"சிகரம் தொட்ட அகரங்கள் "
நாலுநாள்
பட்டினியில்
குப்பைத்தொட்டியில்
கண்டெடுக்கப்பட்ட பேனாவால்
கை துடைக்கும் பேப்பரில்
எழுதபட்டது உங்களுக்குத் தெரியுமா ?

.
................................................................................
.
சிக்கல் ஆரம்பிப்பது
இங்கிருந்துதான்
சிலநேரம்
சில்லறைத்தனமான வம்புகளும்
கேளிக்கை நையாண்டிகளும்
ஒட்டுமொத்தமாக
அணைந்துவிட
மறுபக்கங்களில்
சமநிலையில் குழம்பியே
வெறுமை மட்டும் மிஞ்சிவிடலாம்
நட்பிலும் !

.
.............................................................................
.
எப்போதாவதில்லை
எப்போதுமே
இப்போதைய இரவுகளில்
விண்மீன்களை எண்ணமுடிவதில்லை !
நேர்கொண்டு நிமிர்ந்த நேரங்களில் 
பால்வீதியெங்கும்
வெள்ளிச் சலங்கைகள் தெரிந்தாலும்
சப்தங்கள் இல்லை !
நானும்தான்
தேய்ந்துகொண்டே வளர்க்கிறேன்
அழிந்தபின்னும் பிறக்கிறேன்
மனச்சார்பு நிலைகள்
நெருக்கும் சூழ்நிலையைப்
பொறுத்தவரை தற்காலிகமானவை என்றது
பவுர்ணமி நிலவு !.
பலம் பொருந்தியவையெல்லாம்
வானவீதி முழுவதிலும்
சதிக்கூட்டுசேர்கின்றன !

.
.................................................................
.
ஒரு நட்ச்சத்திரம்
ஒட்டுப்பிரித்து வீழ்ச்சியுறும் போது
ஒரு
அறுதித் தீர்மானத்தை
இறுதியாக நினைத்துக்கொண்டு
பிணைப்புக்களை அறுக்கலாம் ,
இப்பிடித்தான்
சுயநலமாகத் தப்பித்து ஓடுவத்துக்கு
நானும் தயாராகிறேன்
ஆனால்
தயக்கங்கள் நிறையவேயிருக்கு .!

.
....................................................................................
.
எங்கிருந்தும் 
வார்த்தைகளைப் 
கடன் பெற்றுக்கொள்வதில்லை
இலக்கண 
கட்டமைப்பு வடிவங்களைத் 
தவணைமுறையில்
வாங்கிக்கொள்வதுமில்லை
அதன்
இலட்சியங்கள்
யாரையோ எழுதவைத்து
உள்ளிருப்பதை வெளிக்கொணர்வதுதான்
அதை நிகழ்த்தியபின்
விடுதலையடைந்துகொள்கிறது
மொழி !

.
................................................................................
.
எனக்குள்ளேயே 
அலைந்துகொண்டிருக்கிறேன்,
வெய்யிலின் 
வெளிச்ச வேடங்கள் 
விழுந்துகொண்டேயிருக்கின்றன. 
கறுப்புநிறம்
குளிர் முன்னிரட்டை
அணைக்கப் பிரியப்படுகின்றது.
தனிமை வாந்தியெடுக்கும்
மனஅழுத்த எரிச்சல்களை
பெருமூச்சுக்களாகவே
அமிழ்ந்து போகவைக்கிறேன் ,
வெளியே
என்னைப்போலவே
மழையும்
தீக்குளிக்குது !

.
...............................................................
.

நேற்றுக்கள் 
மீதமில்லாமல் 
மேலெழுந்து வருகிறது ,
அதில் 
இன்றைய பார்வைகளை 
அடையாளம் காட்டித்
தலையாட்டும்
வெறுமை,
என்னையே
மேலதிகமாகச் சித்தரிக்க
உரையாடல்களற்று
மவுனமாகவிருப்பதைத் தவிரவும்
இன்றையநாட்களில்
செய்வதுக்கு
வேறு ஏதுமில்லை !

.
.................................................................................
.

உங்களைப் 
பின்தொடர்ந்துகொண்டிருக்கும் 
பெரும்பாலான
துயரசம்பவங்களிலும் 
சிதறடிப்புகளிலும் 
அவநம்பிக்கையிலும்
வாழ்வை விலகி நின்று அவதானிக்கும்
மையமாக
வெளித்தோற்றமாக
அகக்கிளர்ச்சியாக
இறுதியில் விட்டுச் செல்லப்பட்ட
நானுமிருக்கலாம் !

.
............................................................................
.

அவள் 
இருபது கடிதங்கள் எழுதியிருக்கிறாள் 
என நினைக்கிறேன். 
அதை ஒரு 
காலம்முந்திய 
வாழ்க்கை மட்டுமே என்றுதான்
அலட்சியமாய் நினைத்திருந்தேன்
சிலசமயம்
சிரித்திருக்கிறேன்
இதற்குப் பல காரணங்கள்!
என் வழியாக
முக்கியமான சமகாலதில்
அவளும் ஓடிச்சென்றிருப்பதை
இன்றுதான்
தாமதமாகவே உணர்கிறேன்.

.
................................................................................
.
மங்கலமான
அடர் வெள்ளை
நிறத்திலேயே
அலங்கோலமான
எண்ணத்தை 
நிரூபிக்கக் கொடுத்துவிட்டு
கேலிசெய்துகொண்டே
வேகமெடுக்கும் தீற்றல்களின்
விரகதாப மோதல்களில்
உதிர்ந்து கொண்டே இருக்கின்றது
ஒரு
விதவையின்
ஏக்கமெல்லாமாகிய மனது !
.

......................................................................................
.
எழுத்தாளனுக்கு
ஆறுதல்ப்பரிசு
ஆரம்பித்துவைக்கப்பட்டதே
அலட்சியமாக,
பெருங்கவிஞ்சனின் 
மூன்றாம்பரிசுபற்றி
முடிவெடுக்கத் தாமதம் ,
புனைகதாசிரியராக
இரண்டாவது பரிசுக்கு
தகுதியுடைய போட்டியாளர்கள் பலர்,
இருந்தாலும்
எழுத்தாளுமைகுரிய
முதல் பரிசு
தகுதியுடையவருக்குக்
கிடைக்காமல் போகலாம் என்பதில்
வாசகனுக்கு
எந்தவித சந்தேகமும் இல்லை !

.
..............................................................................
.
பருவநிலவு இரவுகளில்
கனத்த தலைப்பாரங்களுடன்
நானும் நானும்தான்
பேசிகொண்டிருப்போம்,
சிலநேரம் 
காதுக்குள் வந்து உக்காந்துகொண்டு
நிமிஷநேரம் கண்ணயரவிடாமல்
சங்கீதம் பொழியும்
லேசாகத்திறந்த ஜன்னல்,
வயதான இந்த அறைக்குள்
நானும் நானும்
நானுறு வருடங்கள் அலைக்கழிந்தகுரலும்
பிரிக்கமுடியாமல்
நீடித்திருப்பதே அதிசயம்தான்,

.
...........................................................................
.
பார்வையை முன்னிலைப்படுத்திக்
கழுகின் கழுத்தில்
தொலைதூரநோக்கி,
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட
மரமேறும் அணில் கையில் 
சின்னக் கோடாலி,
அலைகள் ஓய்ந்த பின்னர்
வாத்தின் பாதங்களில்
ரப்பர் மிதப்புக்கள்,
சமுத்திரங்களில் அதிர்ச்சி ஏற்படுத்திய
டொல்பினின் முதுகில்
ஓட்ஸிசன் சிலிண்டர் ,
உத்தரவாதமாகப்
பரிணாமத்தைப் பரிகாசிக்குது
எளிமையானவொரு
காப்புறுதி நிறுவனத்தின்
விளம்பரம் !

கவிதை
காலத்தின் விதிவிலக்கென
எப்போதும் நம்பியதுமில்லை !

.
............................................................................
.
ஒருக்களித்த ஓடுகள் 
நீவல்விட்ட
வெளித்தாழ்வாரத்தோடு
நீங்கள்
நின்றுகொள்ளுங்கள்,
எனக்கெங்கோ
பிசகென்று முடிவெடுத்தாலும்
கோபங்கள் இல்லவேயில்லை
குடிவந்த நாளிலிருந்து
எப்போதும் திறந்தபடியேயிருக்கும்
நாள்ப்பட்ட அறைக்கதவை மட்டும்
முஸ்டியிறுக்கித் தட்டவேண்டாம்,
முடிந்தால்
ஆறுமாதக் கர்ப்பிணிபோல்
வயிறுபெருத்த பவுர்ணமியை
அடர் இரவில் மறைந்துநின்று
கொஞ்சநேரம் ரசியுங்கள் !

.
............................................................................
.
வெள்ளிக்கிழமை
கழுவித் துடைத்து
சாணமிட்டு மெழுகியதுபோல
மனசாட்சி,
அது 
கிழக்கு வானில்
எண்ணிமுடிக்க முடியாத அளவு
விடிமுன்வெள்ளிகள் போலவே
மனோபாவங்களில்
சாத்தியங்கள் நிறயவேயிருந்த
சென்ற வருடம்,
.

..................................................................
.
சமரசங்களின் கட்டுமீறி
முடிவிலாதவொன்றோடு
முட்டி மோதிக்கொண்டு
இன்றைய நாள்,
நெஞ்சு வலிக்கும்
இருண்ட பிரதேசங்கள்
சோளகக்காற்றைப்போல கடந்துசெல்ல
ஏராளம் மிச்சமிருக்கின்ற
நாளைக்கும்
அதுவே நடந்தால்
எதிர்காலம் உள்ளீடுகளைத்
தேர்வுசெய்யும் வருடமொன்றில்
சந்திக்கிறேன் !

.
.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Thursday, 14 December 2017

எதார்த்த உலகம் .

நம்மை அண்மித்து பார்க்க ஏதுவான  சுற்றுவட்டார அவதானிப்புகளில் கிடைக்கும் அனுபவங்கள் கவிதையாகும் போது கூடுதலான எதார்த்த உலகம் ஒன்றை அது சிரிஸ்டிஸ்த்து விடும். என்ன அந்த அவதானிப்புகளை அப்படியே உள்ளபடி எழுதினால் சப்பென்று பத்திரிகை நேரடி ரிப்போர்ட் போல வரும், அப்படி எழுதாமல் அதில் கொஞ்சம் வார்த்தைச் சித்துக்களை செய்து, கவிதைமொழி கலந்து, பரிமாணங்களை உடைத்து, இன்னொரு தளத்தில் உணர்வுகளை சடப்பொருள்களுக்கும் கொடுத்து விட்டு, அதிகம் அல்லாடாமல் சுருக்கமாக வரிகளில் வாசனைகள் தடவி,  எழுதினால் ஓரளவு நல்ல கவிதைகள் வரலாம் என்று எப்போதும் நினைப்பது.


                                                      என்னால் அப்படி எழுத முடியுமா என்பதே ஒரு பரிசோதனை முயட்சிதான். என்னோட இன்றைய வாழ்க்கைநிலை நிறைய நேரம் பிரயாணம் செய்யவும், திசைகள் இல்லாமல் அலையவும் இடைவெளிகள் தந்துள்ளது. அப்படியான சந்தர்ப்பம்தான் அதிகம் எழுத வைத்தது. என்ன இது ஒரு ஸ்கண்டிநேவிய என்ற வடக்கு  ஐரோப்பிய நாட்டின் அன்றாட வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட்து ,இங்குள்ள காலநிலை, மனிதர்கள், அவர்களின் பழக்கவழக்கம், கலாச்சாரம் இதுகள் அதிகம் தெரியாதவர்களுக்கு  கொஞ்சம் விளங்க  இலகுவாக இருக்காது. எப்படியோ மனித உணர்வுகள் நாடுகளின் எல்லை கடந்து ஒன்றேதான் . . .
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
.
விறைப்பாக
நகரத்தை ஊடறுத்து
படுத்துக்கிடக்கிறது நடைபாதை,
முட்டாக்குத்துணியால்
தைலையைச் சுற்றி இழுத்துவிட்ட ...
ரோமேனியா
நாடோடிப்போன பெண்
முகமெல்லாம் ஜோசிக்கிறாள்,
அவளருகில்
அவள் காதலனாய்தான் இருக்கவேண்டும்
ஆனந்தமாய்
எக்கோடியன் வாசிக்கிறான்,
ஊரோடு பஞ்சம்வந்ததென்றவள்
அப்பாபோலிருக்கும்
புஸ்திமீசைக் கிழவன்
குரலெடுத்துப் பாடுகிறார்,
விறைத்துப்போகிறது
மூக்கை நுழைக்கும்
ஆகஸ்ட்மாதக் குளிர்காற்று,
பிரியோஜசனமில்லாத மனிதர்கள்
பட்டனத்துப் பவுசுவில்
சாதாரணமாக ஓரமாகிறார்கள்,
தயங்கிநின்றபடி
அம்மச்சியாகுளத்தடிப்
பீநாறிமரத்தின்
பூவாசங்கள் சேர்ந்துகொள்ள
நான்தான்
அந்தப் பாடலின் மெட்டுப்பற்றி
அதிகமதிகமாய் மோப்பம் பிடித்தேன்
அது
தற்கொலைச்சிந்து போலிருந்தது. !

.
....................................................................
.
பெண்களின்
நவீன உள்ளாடைக்கடைக்
காட்சியறையில்
அந்தரங்க
அழகுப் பிரமிப்புக்களை
" ஆ " வெண்டுபார்த்து விரும்பி
விழுங்கியபடியே கடப்பவன்
சமநிலையிழந்து
அங்காடி முனையில்
திரும்ப மறந்து
வெள்ளைச் சுவரோடு
முகமோதுகிறான்
அவன்
நேராகத்தான் நடந்துபோனான்!
பிரமிப்பு
எண்ணமெல்லாம்
அந்தரங்கமாகக்
குறுக்குவழியில் போயிருக்கலாம் !
.

................................................................
.
எனக்கும்
அந்த இளையவளுக்குமிடையில்
நேருக்குநேர்
ஓரக்கண்பார்வைகள்
தர்ப்பூசனிப்பூ நிறக் கூந்தலைக் ...
கற்றை பிடித்து காதிலிருந்து
நிலவு முகமெல்லாம்
சடை விழுத்திவிடுகிறாள்
நீலக்கண்களில்
நீண்டு விரிந்த ஆயாசம்
நிலத்தடி ரெயில்
உறுமிக்கொண்டு வேகமெடுக்குது
பிறகு
அள்ளி முடித்துப் பின்னுக்கு
தள்ளிவிடுகிறாள்
பூர்விகக் கன்னங்களை
அநாதரவாக விட்டுவிட்டுச் செல்வதில்
குற்ற உணர்வு இல்லை
நிலத்தடி ரெயில்
தாகமாக வேகம்குறைக்குது
மறுபடியும்
வெண் நடுவகிடு கோதி
முகமெல்லாம் பரப்பிவிடுகிறாள்
போதாமையை உணரச்செய்யும்
நெற்றி அசைவின்றி உறைந்து கிடக்குது
நிலத்தடி ரெயில்
விக்கல் எடுத்தமாதிரி குத்துது
இப்போது
வாஞ்சையுடன் தழுவிக் கொள்கிற
சில கற்றைக் கூந்தலை
வாசனை முகர்ந்து பார்க்கிறாள்
அலைவுறுவதையே விரும்பி
கைவிட்டு புறப்படும் உக்கிரம் கொள்கிறது
அந்தக் கனதிநிமிடம்
நிலத்தடி ரெயில்
ஊஞ்சல் போல ஆடிக்கொண்டு அசையுது
மறுபடியும்
பின்னோக்கி தள்ளி விழுத்தி
மேகங்களைத் தொட்டுவிட முயல்கிறாள்.
அதை மகிழ்ச்சியாக மாற்றுகிறவள் .
எதையோ இணைத்துவிட்டதில் திளைக்கிறாள்
நிலத்தடி ரெயில்
நிறுத்தமொன்றை தேர்வுசெய்கிறது
நான்
என் இருக்கையிலிருந்து எழுந்து
நகரத் தொடங்குகிறேன்

.
........................................................................................
.
வயதானவர்
சுங்கான் புகைத்தபடி
அலைபேசும் இளம்பெண்னில்
இச்சைகளை அவிட்டுவிட்டு
தன்
இளமைக்காலத்தோடு
மீள் ஒப்பீடுசெய்கின்றார்
இறுக்கிப்பிணைக்கப்பட்ட
நார்த்தடத்தின் இழுப்புமுனையில்
அவரின்
குட்டிநாய்க்குட்டி
மறைவான புதர் நுழைந்து
பின்னம் கால்களை அகட்டி
அடக்க ஒடுக்கமாக
மூத்திரம் பெய்கிறது !
.
...................................................................................
.
இருள் கடத்திவைத்திருக்கும்
ஒலிகள் அடைக்கப்பட்ட
மையமான உலகத்தில்
மிகச் சிறிய
செவ்வியல் அரங்கு , ...
அந்தோனியோ விவால்டியின்
நான்கு பருவங்களையும்
எக்கித் தள்ளிவிடும்
வயலின்களின் நரம்பிழுவை ,
நிசப்த நிறுத்தங்களில்
பெரிய ஜன்னலை
வேடிக்கை பார்க்கிறேன் ,
வெளியெல்லாம்
அத்துவான அம்பலத்தில்
நட்சத்திரங்களின் நடனம்,
பின்னர்
காற்றின் தொடராகவே
நாங்கு புல்லாங்குழக்கள்
செபாஸ்டியன் ஜொகானஸ் பாச்சின்
மறுக்கப்பட்ட தேவதைகளின்
கன்னிகழியாத
இசைக்கோலத்தை விடுவிக்கின்றன,
இழுபறியாக
மூன்று மணிநேரம்
எடுப்பெடுத்தே
நாதசுரக்கோலங்களை
வாரிபோட்டுக்கொண்டுபோய்விட்டது,
முடிவுவரையில்
பூத்திருந்தது காத்திருந்தேன்
ஏனோ
எங்கேயோவொன்று
நிம்மதியாக எழுந்துவரவில்லை,
அதில் பல ரகசியங்களும்
வெளிப்படுத்தப்படவில்லை !

.
.......................................................................................
.
சில்லறைகளில்
வாழ்வோட்டமிருப்பதால்
சுழட்சிமுறைக்கு
அலுமினியபேணி பொறுக்கும்
அதிஷ்டமில்லாதவன்
அதீத நம்பிக்கையோடு
குப்பைத்தொட்டியைத்
திறந்து பார்த்து
துலாவி ஏமாந்து
கழி(வு)விரக்கமில்லாத
பணக்காரர்களை வாரித்திட்டி
உமிழ்ந்துப்பி
அறைந்து மூடுகிறான் !
.
...............................................................................
.
நான்
பயண அனுபவங்களை
நிறுத்தங்களோடு பாதுகாப்பவனல்ல.
கலையாததேன்கூடு போலக்
கூட்டமில்லாத ...
மதியநேர கடுகதிரெயில்,
வயதானவொருவர்
எங்கேயோ பார்த்துக்கொண்டு
ஓரிடம்பற்றி
எங்கேயோ கேட்கிறார்!
நான்
”எங்கே இறங்கவேண்டும் ?”என்றேன்.
என்
குரலின் திசை சரியாகவிருந்தது!
” கடல் முடியுமிடம் ?”என்றார்
கறுப்புக்கண்ணாடியைச் சரிசெய்து
ரெயில் அமர்முடுகுவதை
சந்தேகமாக உற்று
"அரண்மனைப்பாலம் தாண்டியாச்சா " என்றார்
நான்
நிலைமாறும் ஜன்னலோடு
திசைக்கேற்பத் தலைதிருப்பினேன்,
ஒருபக்கம்
சமாந்தரமாக மலைகள் மறைய
மறுபக்கமெல்லாம்
வெயில்காய்ந்த வயல் வெளிகள்
தண்ணிகாட்டிய
ராஜஸ்தானப்பாலம் எங்கே ?
ரயில் ஆர்முடுகுவதுக்குள்
அலைக்கழிப்பில்லா அவசரங்களோடு
இறங்கிப்போய்விட்டார் !
நிதானமாகத்தான்
சிலநேரம்
பார்வையற்ற உரையாடல்களைச்
சேதாரமில்லாமல் கையாளவேண்டியிருக்கு !

.
..................................................................................
.
சேர்ந்தழுவத்துக்கு
யாரையோ
யாசித்தபடி
கை விரல்களை
மேல்நோக்கிப் பிராத்திக்குது
இலையுதிர்ந்தமரம் ,
ஒருமித்த ஒத்திசைவுகள்
கிடைத்ததுபோல்
விறைத்த கிளையில்
வந்திறங்கிய சாம்பல்ப்பறவையும்
இறக்கைகளை உள்ளிழுத்து
குற்றவுணவில்லாத குளிரை
மனமொருமித்துச்
சபிக்குது !
.

..................................................................
.
மேப்பிள் மரங்கள்
இலைகொட்டிக்கொண்டிருந்த
வெறிச்ச வீதியில்
தட்செயலாகப்
பேச்சுக்கொடுத்த மனிதன் ...
சுருக்கம் விழுந்தோடும்
நேற்றுவரையில்
இளமையைத் தேடியதாகச் சொன்னான்,
அவனுக்கு
நாளையென்பதில்லாததுபோலவே
கால்களில் களைப்பு,
நெற்றியெலாம் வரைகோடுகள்,
தீப்பந்தங்கள் பற்றவைத்து
அவனருகிலொரு இளம்பெண்
அவள் கண்களில்
இரத்த சலனம்
முகத்தில் கலவரமான கோபம்,
இன்றுவரையில்
காதலைத்தேடியதாக அவள் சொன்னாள்,
மூச்சுமுட்டி விழும்
நம் மூன்று பேரின்
உரையாடல் மவுனப்பரப்பில்
உட்காந்துகொள்ளக்
காற்று இடம்தேடிக்கொண்டிருந்தது,
அவன் புலம்பியதுக்கும்
அவள் விளம்பியதுக்கும்
நான் விளங்கியதுக்கும்
முடித்துவைக்கும் பிராத்தனைகளில்
ஒவ்வொரு வாய்க்கும்
ஒவ்வொரு பெயருண்டு !

.
........................................................................................
.
கை தவறிவிட்ட
பலூனை
திரும்பிவரும்படி
அப்பாவின்
கைப்பிடியை உதறிவிட்டு
கெஞ்சிகேட்டழுகிறாள்
குட்டிப்பெண்,
நெருக்கியடிக்கும்
வாடிக்கையாளர் கூட்டத்தில்
பலூன்
காற்றில் முகவரிதேடிபடியே
திசையிழந்த
தலைகளுக்குமேலாக
அங்காடியெங்கும்
அசைந்தாடியலைகிறது !
.
............................................................................
.
எல்லாருக்கும் இலவசமென
உள்நுழைவு அச்சடிக்கப்பட்டிருந்ததை
வாசித்துத் திகிலடைந்து
சட்டென்று
படிதாண்டி உள்வாங்கிவிட்டேன் ! ...
எனக்கு
ஏற்கனவே கொஞ்சமாதான்
அதுகள் பற்றித் தெரியும் !
விளக்கங்கள் மேலதிகமாய்த் தெளிவாக்க
விடேந்தியாக விடப்பட்ட
அழகான பெண்களும்
கையைப் பிடித்து இழுக்காத குறையாக
கந்தர்வ ரம்மியங்களைத்
திணித்துக் கொண்டிருந்தார்கள்.
துரிகைகளின் மயிர் அடர்த்தியை
ஆழமாக விசாரித்ததுபோல
மூலவர்ணக்கலவைகளை அடியொற்றி
மூன்று வெவ்வேறு அரங்குகள்,
1. வஸல்லி கண்டிஸ்கியின்
அலைக்கழிக்கும் அமைதி
2. லியனார்டோ டாவின்சியின்
எண்ணைவடிப்பு வழுவழுப்பு
3. வின்சென்ட் வான் கோவின்
செவ்வியல் நீரோவியங்கள்
உஊஊஊப்ப்ப்ப்பப்ஸ்ஸ்ஸ்ஸ்
நிறங்களின் நிலைமையை ஊகித்து
சட்டென்று சுதாரித்து
சடுதியாக வெளியேறிவிட்டேன் !
இனி
தேடலின் விடுபட்ட பக்கங்களை
நீண்ட நாட்களாகவே
நிழல்போல அரித்துக் கொண்டிருக்கும்
அந்தராத்மா !

.
..............................................................................
.
என்னோடு சேர்த்து
முந்நூறு சொச்சம்
அசந்துபோன ரயில்ப்பயணிகள் ,
எஞ்சின்வேகம்
காற்றைக் கோடுகிழிக்கும்போது
நிலமதிரும் சந்தங்கள்,
அவ்வப்போது
நிறுத்தங்கள் பற்றிய
சில்லறைத்தனமான
மவுனத்தில் இடைஞ்சல்கள் ,
எல்லோருக்கும் பொதுப்படையில்
தண்டவாளச் சில்லுரச
எண்ணெய் ஆவியாகப்போகும்
கிரீச்சிடல்கள் ,
கண்களை மூடியபடி
மஞ்சவண்ணாமரக் குயில்களோடு
நான் மட்டும்
தனியாகவிருந்தேன் !
.
.................................................................................
.
அடிப்படையில்
அவரின்
அந்தாதிக் கேள்விகள்
அவராகவே இருந்துமில்லாத போதும்
ஓரளவு எளிதாகிவிட்டது. ...
நான் பேச்சுத் தமிழில்ப் பறைஞ்சால்
அவரோ
இலக்கணத் தமிழில் சல்லாபித்தார் .
அவர்
விந்திவிந்தித் தொடங்கினாலும்
வேதாந்த சித்தாந்தம்
சொல்வதில் ஓர் ஒழுங்கு இருந்தது
நான்
தன்னையறிதல் பற்றி
ஏதாவது வினாவுவதட்குள்
என்
கண்களைபார்த்தே
உரையாடலைத் தொடங்கினார்
நான்
வாழ்க்கைக்குள் மீளமுடியாதவைகள்
கேட்பதற்குள்ளாகவே
என்னைத் துளைத்தெடுத்து
என்
பின்புலங்கள் சொல்லத்தொடங்கியபின்புதான்
நான்
கருத்துக்களுக்குள் சென்றேன்.
அங்குதான்
நான் யார் ?
என்பதிலுள்ள
அத்தனை பிரச்சினைகளும் தொடங்கியது !

.
......................................................................
.
ரெயில்டிக்கெட் அளவில்
மன்றாடமாகக்
கசங்கிய காகிதம்தான்
அவசரத்துக்குக்
கையில் கிடைத்தது,
நினைவசைவிலிருந்த
ஒரு
வேரறுந்த பட்டமரத்தைப்பற்றி
முகமிருக்கும்
நாலுவரியில் உயிர்ப்பித்துவிட்டு
நாலாய் மடித்துக்
காற்றில் வீசியெறிந்தேன்,
திருப்தியடைந்தது போலவே
விரிந்துபறந்தொரு
இளமரத்தைத் தேடிபிடித்து
ஈரமான இலையில்
ஒட்டிக்கொண்டது !
.

.................................................................................
.
எனக்கெனவே
வடிவமைக்கப்பட்டது போல
அதிகாலை
நடைபாதை நிழலில்களில்
குளிர்நாளின் ...
சலிப்புத்தரும் அயர்ச்சி !
இனியும்
ஏற்றுக்கொள்ள விரும்பாத
பொறுப்புக்களையெல்லாம்
இடம்மாற்றிவைத்துவிட்டது
மேப்பிள்மர இலைகளுக்கு
தங்க முலாம்பூசிக்கொண்டிருந்த
வெளிச்சப்பகல் !
பிரதிக்கப்பட்ட
திசையில்லா அலைச்சலில்
மிச்சங்களையெல்லாம் கடந்துவிடும்
கடைநிலை உத்தேசத்தில்
மாலைப்பொழுது !
தனிமனிதர்கள் போலவே
துணை தேடும் துடிப்பில்
தன்னை இன்னமும்
ரகசியமானவொண்றாகவே
கட்பனை செய்கிறது
நடுச்சாம இருட்டு !
ம்ஹூம்.!!!!!!!!!!
ஒன்றும் தேறவில்லை. !!!!!!!!!!
பலருக்கு
முழுமையில்லாத நாள்
இப்படித்தான் முடிந்துபோகிறது !

.
.......................................................................
.
திடுக்கிடலுடன்
அதிகாலை நடைவீதி,
சஞ்சலங்களோடு
முகத்தில் வெய்யில் ,
பாரபட்சமின்றிக் குத்திக்கிழிக்கும் ...
கார்திகைக் குளிர் ,
எல்லைகள் விரிந்துகொண்டிருக்கும்
புதிய பயணம்,
எந்நிலையிலும்
உந்தித் தள்ளுவது
அசட்டுத்தனமான தொடக்கம் தந்த
மௌனத்திலிருந்து பிரவாகிக்கும்
நம்பிக்கைதான்.

.
...........................................................................
.
எல்லாப்பொருத்தமும்
அமர்க்களமாக அமைத்திருக்கும்
அந்தப்பெண்ணுக்கு
பிசாசு பிடித்திருக்கவேண்டும் !
உரத்தகுரலில் கத்தி...
கைகளைத் திக்கில் பரப்புகிறாள்,
மூச்சுமுட்ட
மழைக்குள் ஓடிப்போகிறாள்,
காதலர்கள்
முத்தமிடுவதைக் கவனித்து
நிறையவே ஜோசிக்கிறாள் ,
தெருப்பிசைக்காரனின்
குளிர்தாங்காக் கந்தலுடைக்காகக்
பரிதவிக்கிறாள் ,
ஜவுளிக்கடை ஜன்னலில்
முகம் பார்க்கிறாள் ,
கைதவறி விழுந்த
முடிச்சுப் பொதிக்கும்
பரிகாசமாகச் சிரிக்கிறாள்,
இலைகொட்டிய
வெற்று மரக்கிளைகளுக்காய்
தலைகுனிகிறாள் ,
ஒவ்வொரு
அவசர வாகனங்களையும்
வெறுப்பாகவே நோக்குகிறாள்,
எதிர் வெட்டவெளிகளைக்
கண்ணில் ஒற்றிக்கொள்கிறாள்,
புறாக்களுக்குக்
எம்பிப் பறக்கச்சொல்லி
அகலக் கைவிசிறிக் காட்டுகிறாள்,
இதையெல்லாம்
திரும்பத் திரும்பவே நிரூபிப்பதில்
அவளுக்கு வருத்தமில்லை,!
நமக்குத்தான்
எதையோ கண்டுபிடித்தது போல
விசர் வருகுது! !

.
........................................................................
.
புதிய
சந்துப்பாதைகள்,
பழக்கமில்லாத
தட்காலிகத் தங்குமிடம் ,
தனித்தும் சோடியாகவும் ...
உள்ளிழுத்துக் கொள்கிற
உல்லாசப் பிரயாணிகள் ,
விழுந்துவிட்ட ஈர்ப்பைப்
புறந்தள்ள முடியாத
முகஸ்துதிகள் ,
ஆனாலும்
பிரியத்துடனேயே இருக்கிறது
வாசனைகள் !

.
..............................................................................
.
சொர்மலாந்து
புல்வெளிப்பிரதேசத்தில்
பாச்சல் குதிரைகள்
சோம்போறித்தனமாக
மேய்ந்துகொண்டிருக்கின்றன ,...
ச்ஜெர்ந்ஹோவ் நெடுங்சாலையில்
பேர்ச்பித்துளா மரங்கள்
இலையுதிர்குளிர் வருவதுபற்றி
விவாதம் செய்கின்றன
கேநேஸ்தா
வடிசாளைப் புறநகரம்
புழுதிக் காற்றில்
எந்தக் கனவுகளும் இடைப்புகாமல்
உறங்கிக்கொண்டிருக்கு
பிளேன்
அடைக்கல கிராமம்
என்னைப்போலவே
ஏதிலிகள் போலிறங்கும்
பிளிக்கன் பறவைகளுக்கு
திசைகள் காட்டி்ககொண்டிருக்கு
ஓரளவுக்கு எதிர்பார்த்தபடியே
எல்லாவிதமான முன்னசைவுகளிலும்
ஒரு மரணத்தின்
கடைசி ஒத்திகைகள் ,
ஸ்டேர்ன்ச்ட்டேர்
தேவாலயத்தின் சவக்காலையில்
ஒரு பெண்
பரமபிதாவின் பாவமன்னிப்புப்
போதனைகளோடு
மூன்றாம் நாள் எழுப்பப்பட்ட
சத்தியாமான தேவவார்த்தைகளோடு
அடக்கமாக இறக்கப்படுகிறாள்
அவளின் நிறம்
அவளின் குணம்
அவளின் வாசனை
அவளின் கோபம்
அவளின் சாபங்கள்
தனிப்பட எனக்கு நல்லாவே தெரியும்
நினைவுகளை நிறுத்தினாலும்
அவள் எழுந்துவரவே போவதில்லை
அவளின் பெயர்
இன்னும் சில மாதங்களில்
கல்லறையில் எழுதப்படும்
அதுவரையில்
அந்தப் பெயர் கொஞ்சநாளாவது
எனக்கே சொந்தமாகவிருக்கட்டும்

.
..............................................................................
.
தெருப்பாடகன்
கம்பளிக் கையுறை போட்ட
பத்து விரல்களிளும்
"ஸ்பானிஷ் லல்லபாய் "பாடலை
ஹார்மோனிக்காவில் வாசிக்கிறான் ...
அவன்
மனைவியாகவே இருக்கவேண்டும்
வெறுங்கையால்
" மெக்சிகன் பியான்கோ" தாளகதியில்
மத்தளம் அடிக்கிறாள்,
கால்நடை மனிதர்கள்
மணித்துளிகள் இடைவெளியில்
வேகமாகக் கடந்து போய்விடுகிறார்கள்,
உள்ளங்கையால்
சக்கரங்கள் உருட்டியபடியே
நடைதள்ளுவண்டியில்
அசவுகரியமாக வந்தவன்
மிகக்கிட்ட நெருங்கி வந்து
கைதட்டி
உடம்பெல்லாம் அசைத்து
இலவசமான இசை
பிடித்து அடைத்துவைத்திருந்த
சந்தோசங்களையெல்லாம்
வெளியேற்றிக்கொண்டிருக்கிறான்! 

.
......................................................................................
.
விண்மீன்கள் தூங்கியிருப்பதால்
ஜன்னல்களுக்குள்
நிலையெடுத்து நின்றுகொண்டு
வீதிவிளக்கோடு
முட்டிமோதிக்கொண்டிருக்கும்...
மின்மினிப்பூச்சிகளின்
பின்கோட்டு அழகோவியமெல்லாம்
சிதறிவழியும் நிழல்களைப் பற்றிக்
கவிதை எழுதுகிறாய் !
ஆழிக்கடலின் அமைதியோடு
இரவெல்லாம் ஒருவன்
மன அலைகளோடு ஒட்டாமல்
அந்தக் குறுமண் பாதையிலே
வெறுங்காலில்
நடந்தலைவதைப் பார்த்திருக்கிறீயா ?
கவித்துவ எண்ணங்கள்
கரையேறித் தவழ்ந்துமிழும்
பட்டாம்பூச்சி வார்த்தைகளோடே
வாழ்ந்துகொண்டிருக்கும்
நீயெங்கே
அதையெல்லாம் கவனிக்கப்போகிறாய் ,
சிலநேரம்
புகைமூட்டம் போலவே
அவன் அசைவுகளைக் கண்டிருப்பாய் ,
அவனின்
கொப்புளம்போட்ட பாதங்களின்
வலியுனக்குத்தெரியவர வாய்ப்புகளேயில்லை
அதைப்பற்றி
விபரமாகத் தகவலறிந்த
அதிகாலைத் துருவநட்ச்சத்திரம்
எத்தனைமுறை கண்கலங்கியதென்பது
மிகப்பிரபலமான உனக்குத்
தெரியவரவும் வாய்ப்புகளேயில்லை !

.
..............................................................................
.
கதகதப்பைப்
பாரக்கனதியாக்கும் ஆடை
விரல்களைத் தின்னும்
கடும்தோல்ச் சப்பாத்து
வியர்வை நாறும் ...
தடித்த கழுத்துப்பட்டி
தலை மயிர்களை
எண்ணிப் பிடுங்கும் குல்லாய்
இந்த
மரணத்தின்
விளையாட்டுதான்.
நம்பிக்
கையிழந்த
வடதுருவ மனிதர்களின்
குளிரைப் புறக்கணிக்கும்
கடைசி முயற்சி

.
.......................................................................
.
கொஞ்சம்போல
நனைத்தெடுக்கும்
சாத்தியங்கள் இருந்தது
திரண்ட முகில்களில்,
பிறகுதான் ...
பலவீனமான விடியிருளின்
திரைகளை விலக்கித்
துளிகளை அறிமுகப்படுத்தொடங்கியது
தூறல்கள் ,
பாதையோரம்
வீடில்லாதனையே அதுவும்
குறிவைத்ததுத் தாக்குகிறது,
அகலவீதிகளில்
அடித்துப் பிய்க்குது
வெள்ள வெள்ளோட்டம் ,
கவிஞ்சர்களின்
பிரியங்களை விதைக்கும்
ஆச்சரியங்களையெல்லாம்
வித்தையாக்கத் தெரிந்திருக்கிற
இந்த மழை
கூரையில்லாதவனின்
கதகதப்பான கனவில்
ஈரமாகப் பெய்து முடித்திருக்கலாம் ,
தனியொருவனைப்
பழிவேண்டிகொண்டுருக்கும்
மழையின்
இத்தனை தடுமாற்றங்களிலும்
பக்குவமின்மையிலும் கூட
அழகாகத்தானிருக்கிறது
அள்ளிக்குளித்த
நகரம் !

.
......................................................................
.



ஜோன்ஸன் .001

 வேலைத்தளத்துக்கு வந்த அன்று ஒரு கன்னங்கரேல் நிறத்தில் கவ்போய் குதிரைக்காரர் தொப்பி போட்டுக்கொண்டு வந்திருந்தார் ஜோன்சன், வேலைத்தளத்துக்கு உள்ளே வந்து ஒருமணித்தியாலத்துக்கு மேலாக நின்றும் அந்தக் க்வபோய் தொப்பியை அவர் கழட்டவேயில்லை . அந்த வேலைத்தளத்தை சுற்றிபார்த்தார். அவருக்கு அங்கே என்ன வேலை கொடுத்து மேலிடத்திலிருந்து அனுப்பினார்கள் எனறு எனக்குத் தெரியாது. அதைக் கேட்க்கும் அதிகாரமும் என்னிடம் இருக்கவில்லை. சிலநேரம் தட்காலிகமாக சிலரை மேலிடம் இப்படி அனுப்பும் என்று தெரியும் .


" இங்கே ரெண்டு திண்ணாக்கரசு வேலை செய்வதாக ஹெட்ஒபிஸில் ஜிஎம் பரன்சோதி ஐயா சொல்லி அனுப்பி இருக்கிறார், "


" ஓம், ஓம் ..இங்கே ரெண்டுபேரும் திண்ணாக்கரசுகள்தான் "


" , மானேஜர் திண்ணாக்கரசு அண்ணையை முதலே தெரியும்,,உமக்கும் பெயர் திண்ணாக்கரசுவா , அல்லது வேற ஏதும் பெயர் இருக்கா,,எப்படி உம்மைக் கூப்பிடுறது , "


" ஓம், ஓம், எப்படியும் கூப்பிடலாம்,,அரசு என்றுதான் இங்கே வேலை செய்யுறவை கூப்பிடுவினம் "


                           இதுதான் ஆரம்ப அறிமுக தொடக்கம். அவர் பெயர் ஜோன்சன் என்பதை அவர் சொல்லவில்லை. மேலிடத்தில் இருந்து கொடுத்தனுப்பிய இடமாற்றக் கடிதம் மடித்து வைத்திருந்தார். அதை எனக்கு காட்டவில்லை . அதை எனக்கு காட்டவேண்டிய அவசியமும் இல்லை. இப்பிடி யாரும் இடமாற்றத்தில் வந்தால் அந்தக் கடிதத்தை மனேஜர்தான் வாங்கி எப்பவும் பைலில் வைப்பார்.


                                        ஜோன்சன் கொஞ்சம் எங்கள் பாண் பேக்கரியின் " பிராண்ட் நேம் " போல இருந்த பிராண்டல் எண்ணெய் வாசம் ,ஈஸ்ட்டில் கோதுமை மா புளிக்கிற மணம் போன்ற வாசனைகள் அதிசயமாக முகர்ந்துகொண்டிருந்தார் . அவரோட ஸ்டைலுக்கு அந்த இடம் தெருவில துண்டைப்போட்டு பிச்சை எடுப்பது போலிருந்தது போல இருந்திருக்கலாம் .


                                        முடங்கப் பாய் இல்லை எண்டு சடங்கை நிறுத்தினவன் கதை போல தெரியாமல் குழப்பமான இடத்துக்கே வந்து மாட்டிப் போட்டனோ என்று நினைத்தாரோ தெரியவில்லை . கொஞ்சம் அமைதியாக இருந்தார். பிறகு,


" என்னோட பெயர் ஜோன்சன், நாவாந்துறை ஊர் , எஸ்கேயோடு பெரிய ஸ்டோர்ல வேலை செய்துகொண்டு இருந்தேன் ,,இப்ப இங்க பிடிச்சு அனுப்பி இருக்கினம் "


" அப்படியா,,இது பேக்கரி,,மாவும், பாணும் ,பணிசும் தான் இங்கே,,எனக்கு படிவம் செய்யுற வேலை "


                                                    என்று சொன்னேன், ஏனென்றால் பாண் பேக்கரி அரசாங்க சார்பான எம்பிசிஎஸ் நடத்தினாலும் அதில பாண் போடுற பாஸ், அவனுக்கு ரெண்டு உதவி பாஸ், அவர்களுக்கு கீழே ரெண்டு கைவேலை, ஒரு தட்டு துடைக்கிற உதவியாள், ஒரு விறகு பிளக்கிறவன் இவர்கள் எல்லாம் அன்றாடம் சம்பளம் கையில எடுக்கும் வெளி ஆட்கள். அவர்களை வைத்து வேலை வேண்டுறது குருடனை ஆடு மேய்க்க விட்டுப்போட்டு அதைத் தேட எட்டுப் பேரை அனுப்புறது போல ,


                                                  
பலவருடம் எம்பிசிஎஸ் இல் பிரான்ச் மனேஜர் ஆக இருந்து பலநோக்கு நெளிவு சுளிவுகளில் மூச்சைப் பிடிச்சு முத்துக் குளிச்சு சுழி ஓடியவர் வயதான திண்ணாக்காரசு மனேஜர் , அவர்தான் பேக்கரி மனேஜர், அதனாலோ தெரியவில்லை அவரைப்பற்றி என்னோடு உரையாடலை ஆரம்பித்தார். அது அவருக்கும் இயல்பாக ஒரு புது இடத்தில பழக்கத்தைக் கொண்டுவர உதவியாக இருந்தது,அதிகம் யாருடனும் கதைக்க விரும்பாத எனக்கும் தான் ,


" அப்பிடியே, செபமாலை மாதாவே , திண்ணாக்கரசு அண்ணை நல்ல கலகலப்பான ஆளே,,அவரோடு வேலை செய்து இருக்கிறேன்,,"


" ஓம், ஓம்,,,கலகலப்பும்தான், அங்,,,ங்,,,ங்க் ,,,,கலகமும்தான் "


" ஆள் நாட்டுக்கூத்து அண்ணாவியும் , ஒரு நாடக நடிகரும் என்று தெரியுமோ "


" ஓம், ஓம்,, சொல்லி இருக்கிறார் "


" , திண்ணாக்கரசு அண்ணை, எங்கட ஊர்ல வந்து இலங்கைவேந்தன் என்ற நாடகம் போட்டு இருக்கிறார், "


" ஓம், ஓம்,,"


"செபமாலை மாதாவே , அதில ராவணன் வேஷத்தில ஆள் சரியான கலாதி,,நடிப்பு அந்தாளுக்கு ஒட்டிப் பிறந்த கலை "


." ஓம், ஓம்,,"


" கொழும்புத்துறை குஞ்சிதபாதத்தின் அடங்காபிடாரி நாடகத்தில நடிச்சவர் எண்டும் சொல்லி இருக்கிறார், ,,ஒரே எகத்தாளமாதான் இருந்து இருக்கும் அந்த நாடகம் ."
" ஓம், ஓம்,,"


" திண்ணாக்கரசு அண்ணை நல்ல கலகலப்பான நாடக நடிகர் , செபமாலைமாதாவே , அந்தாள் சும்மா வயதிறந்தாலே முசுப்பாத்தி கதைகள் தானே,,எப்ப வருவார் இங்கே,,அவருக்கு வேலை நேரம் ஸ்டார்ட் ஆகிறது எத்திணைமணிக்கு,,"


                                                  என்று நிறுத்தாமல் ,சிரிச்சுக்கொண்டு சொன்னார். நான் எல்லாத்துக்கும் " ஓம், ஓம்,," என்று தலையை ஆட்டிக்கொண்டிருந்தேன் .ஜோன்ஸன் கலகலப்பான பேச்சு துணை என்று ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது . ஆனாலும் அதிகம் யாரோடும் கதைக்க விரும்பாத என்னிடமிருந்து அவர் எதையும் அதிகம் அறிய முயட்சிக்கவில்லை , பதிலாக நான் எப்பவும் நிறைய விசயங்களை கேட்டுக்கொண்டே இருப்பேன், அவர் சலிப்பு அடையாமல் சொல்லிக்கொண்டே இருப்பார்.
.
................................நமக்கு தெரிந்தவர்கள் இறந்துவிடும் போதுதான் அவர்கள் நினைவுகளை மீட்டும் போதுதான் காலமும் இன்னொருமுறை எழுந்து முன்னுக்கு வந்து பல சம்பவங்களை இன்னொருமுறை வாழ்ந்துவிடு என்பதுபோலத் தருகிறது.அப்படி அந்த நினைவுகள் மட்டுமே நம்மளால திரும்பிக்பாக்கமுடியும்படியாகத்தானே உயிர் வாழ்தல் என்பது வரையப்பட்டு இருக்கிறதே .....................


                                                   ஜோன்ஸன் இலகுவாக எல்லோரோடும் பழகிற ஆள் மாதிரி தெரியவில்லை. அவருக்கு மானேஜர் திண்ணாக்கரசு பற்றி தெரிந்ததெல்லாம் சொல்லி முடிய, ஒரு கதிரையை எனக்கு அருகில் இழுத்துப் போட்டு , அந்த க்வபோய் தொப்பியைக் கழட்டி கையில வைச்சு திரிசூலம் போல கொஞ்ச நேரம் சுத்திப்போட்டு , அதை மடியில வைச்சுப்போட்டு நான் நிரப்பிக்கொண்டு இருந்த F 15. 9 B . படிவங்களை பார்த்துக்கொண்டிருந்தார்.


                                             
அந்த வேலைத்தளம் தூய்மையான தமிழில் சொன்னால் ஒரு வெதுப்பகம். அப்படித்தான் அப்போது அந்தப் பெயர் பாவனையில் இருந்தது. அல்லது பாவனைப்படுத்தும்படி கட்டளை இடப்பட்டிருந்தது. அத எங்கள் ஊர் பேச்சு மொழியில் சொல்வதென்றால் பாண் பேக்கரி என்று சொல்லுவார்கள். எம்பிசியேஸ் என்ற பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமானது அந்த வெதுப்பக்கம், நான் அங்கே கணக்கு வழக்குப் பார்க்கும் கிளார்க் வேலை செய்துகொண்டிருந்தேன்.


                                   அந்த வெதுப்பக்கம். இருந்தது ஒரு கிராமப்புறத்தில். நாயன்மார்கட்டுக்குளத்துக்கும் மாம்பழம்சந்திக்கும் நடுவில் தவிட்டுத் துரையன்னை கடைச் சந்தியில் இருந்தது . காலையில் எல்லாரும் அரசாங்க வேலைக்கு டவுனுக்கு போவார்கள், நான் கொஞ்சம் இடைச்செருகல் கிராமநகரமாக இருந்த என் ஊரில் இருந்து சைக்கிளை மிதிச்சுக்கொண்டு பின்தங்கிய கிராமத்துக்கு வேலைக்கு போவேன். பின்னேரமும் அதுபோல அவர்கள் களைச்சு விழுந்து வர நானும் மாறிப் போகும் ஒரு குளறுபடி நடக்கும்.


                                      ஜோன்சன், இருட்டைப் போட்டோகொப்பி அடிச்ச மாதிரி கறுப்பு நிறம், கழுத்தில ஒரு மொத்த உருளை சங்கிலி, கை மணிக்கட்டில ஒரு உருளை கைச்செயின் , அஞ்சு விரலிலும் சவரக்கல்லு சைசில் இனிஷியல் எழுதிய மோதிரம், கோல்டன் செயின் ரோலெக்ஸ் கைக்கடிகாரம். அதன் டயலும் தங்கப்பவுன் போலிருந்தது. புத்திசாலித்தனத்தை மறைக்க முடியாத காந்தப்பார்வைக் கண்கள், வழுவழுப்பான அகல் வெளிச்ச முகம், சுத்தி வளைக்காத நேர்மையான சிரிப்பு, அன்றுதான் ஜோன்சனை முதல் முதலில் சந்தித்தேன்.


                            இவளவு நகை நட்டு நாட்டுக்கோட்டை செட்டியார் வீட்டுப் பெண்கள் போல அள்ளிப் போட்டுக்கொண்டு வேலைக்கு வருகிறாரே இதை எல்லாம் எங்கிருந்து சம்பாரித்தார் என்ற டவுட் எனக்கு எப்பவுமே இருந்தது. அந்த வெதுப்பக்கத்தில் வேலை செய்த வெளிஆட்களுக்கும் இருந்தது, யாரும் என்ன ஏது என்று சங்கதி கேட்ட்தில்லை.


                                முயல் பிடிக்கிறவன் முண்டாசை அவிட்டு விட்டு அதை ஆட்டிக் காட்ட சொந்த வாழ்க்கைக்கு ஆப்பு விழுந்த மாதிரி ஒருவரின் பெர்சனாலிட்டி என்பது அவர் அவர் விரும்பியபடியே அமைத்துக்கொள்வதுதானே. அதில அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள் என்றால் அது அவர்களைப்பொறுத்தவரையில் பொசிடிவ் ஆன மனநிலையை ஏட்படுத்தலாம் தானே .


..................வாழ்க்கையில் கதைகள், அதில வரும் ஒரு கற்பனை, அது ஒரு முழுக் கற்பனை , கட்பனையின் பெயர்கள் என்னைப் போலவே உண்மை இல்லை. என்பதுபோல வயதும் ஓடிப்போக . இவளவு கால தொடர்புகள் அறுந்துபோன இடம்பெயர், புலம்பெயர், தலைமறைவு, கால இடைவெளியில் ஜோன்சன் பற்றி பலமுறை ஜோசித்து இருக்கிறேன். கண்டியில் செமினரியில் வேலை செய்கிறார் என்று எங்கயோ கேள்விப்பட்டேன் . அவளவுதான்.......................


                                            
எம்பிசீயெஸ் என்ற பலநோக்குக்கூட்டுறவுசங்கம் அலிபாபாவும் நாட்பது திருடர்களும் கதை போல ஒரு மர்மஜோக மூடுமந்திரம் . அது ஒரு அரசாங்க நிறுவனமாக இருந்தாலும், அதில போதிய சம்பளம் கொடுப்பதில்லை. அதில் வேலைசெய்பவர்கள் அவர்களின் சொந்த புத்திசாலித்தனத்தால் மேலதிக வரும்படிகளை ஏட்படுத்திக்கொள்ள முடியும். ஜோன்சன் சிலவேளை மத்தியகிழக்கு நாடுகளில் வேலைசெய்திருக்கலாம் என்பதுதான் பொதுவான அனுமானமாக இருந்தது .


                                         ஜோன்சன் நாவாந்துறையில் இருந்து வருவதாகச் சொன்னார். ஆனால் அவரின் எடுப்பைப் பார்த்தால் வெளிநாட்டில் இருந்து நேரா வந்து பேக்கரிக்க குதிச்ச மாதிரி இருந்தது. அவரோட அணுகு முறைகளில் கொஞ்சம் இல்லை அதிகமாகவே ஒருவிதமான தன்னுணர்வுக் கட்டுப்பாடு இருந்தது . வெளிநாட்டில் வசித்து இருக்கலாம் போலிருந்தது பேச்சு முறையில் இருந்த கண்ணியத்தில். அது எந்தவகை நாடாக இருக்கும் என்று மட்டுப்பிடிக்க முடியவில்லை


" நாவாந்துறையில் பாலச்சந்திரனைத் தெரியுமா,"


" யார் அவர்,,, "


" நாவாந்துறைதான் அவரும்,,அவரும் இரவு பகல் எண்டு இல்லாமல் எப்பவும் ஒரு பாலுமகேந்திரா தொப்பி போட்டு இருப்பார், "


" ஹஹஹஹஹ்,.. அட.,,தாலியக்கட்டு.,,, ,என்னோட தொப்பி நல்லா கிண்டுது போல இருக்கே "


" அந்த் தொப்பி வருஷக்கணக்கில வெய்யிலில போட்டு வாங்கி நல்ல வெளிறின நிறத்தில இருக்கும் ,"


" ஹாஹாஹா...இந்த திணாக்கராசுவும் வாயில வெடிச் சிரிப்பு வைக்கிற திண்ணாக்கரசு போல இருக்கே "


" ஹ்ம்ம் ,,,நான் சும்மா வெங்காய வெடி,,மனேஜர் திண்ணாக்கரசு அண்ணை வரமிளகாய் சரவெடி "


" பிறகென்ன,,அரசுவுக்கும் ஏடாகூடமா எகத்தாளம் வருக்குதே "


" இல்லை,,நீங்க நட்பான ஆள் போல இருக்கு அதால சொல்லுறேன் "


" வேற என்னவும் பெயர் சொல்லுவினமா நீர் கேட்ட அவருக்கு ,,அல்லது சென் மேரிஸ் கோவிலடியா ,அல்லது ,சென் நிக்லஸ் கோவிலடியா ? "


"அவர் நான் பேஸ் கிட்டார் வாசிக்கிற எங்கட ம்யூசிக் குரூப்புக்கு ஈகுலைசர் மிக்ஸர், பாபர் பொக்ஸ், மைக் செட், எல்லாம் கொண்டுவருவார் "


" , அட.,,தாலியக்கட்டு..... தொம்சன் சவுண்ட்ஸ்... .நம்மளிண்ட ,, சவுண்ட்ஸ் பாலா ,அவர்தானே" ,


" ஓம், "


" சவுண்ட்ஸ் பாலா, தெரியும், அட.,,தாலியக்கட்டு.... அவர் எங்கட சொந்தம், சவுண்ட்ஸ் பாலா சென் நிக்கல்ஸ சேர்ச்க்கு பக்கத்தில வீடு ,,, நாங்கள் சென் மேரிஸ் சேர்ச் பங்கில இருக்கிறம் "


என்று சொன்னார், அதில இருந்து என்ன தாலியக்கட்டோ தெரியவில்லை நீண்ட நாள் பழக்கம் போல பிலாப்பழப் பால்போல பசை போட்டு ஒட்டிவிட்டார். இப்பிடித்தான் மனிதர்களுக்கு இடையில் உள்ள அவர்களுக்கே உரிய தட்ப்பாதுகாப்பு வெளிஇடைவெளிகளை நிரப்ப இன்னொரு பரஸ்பரம் அறிமுகமான மனிதர் தேவையாக இருக்கு,



முக்கியமாக எங்களின் ஊரில் லேசில் யாரும் யாருடனும் ராமனா, சீதையா, லட்ச்சுமணனா என்று தொடக்க விழுந்தேன் முடிச்சுக் கவிழ்ந்தேன் என்று ராமாயணம் போலக் கதைக்கமாட்ட்டார்கள். அதுவே ஒரு எட்டுப் பத்து மணித்தியாலம் ஒன்றாக இயங்க வேண்டிய தேவை இருக்கும் வேலைத்தளமாக இருந்தால் கொஞ்சம் இலகுவாக பழகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான்செய்யும் .


...........................அண்மையில், கிட்டத்தட்ட இருவது வருடங்களின் பின் வில்சன் ஒரு பதிவில் ஜோன்சன் அண்ணா என்று சொல்லி ஒரு படம் போட்டு இருந்தார். அந்தப் படம் ஜோன்சன் வெளிநாட்டில் இருந்தபோது எடுத்த படம். அது எனக்கு நல்ல நினைவாக இருந்தது , .....................


                                                ஜோன்சன் என்னோடு சில மாதங்களே அந்த வெதுப்பக்கத்தில் வேலை செய்தார்.ஆடிப்பாடி வேலை செய்யாட்டியும் இருவருக்கும் அலுப்பில்லாமல் வேலை செய்தோம். கொஞ்சம் அந்நியோன்னியமாக கொசப்புக் கதைகள் கதைச்சு பழகத் தொடங்க, என்னிடம் இருந்த இவர் எந்த நாட்டில வசித்தார் இவளவு தங்கப் பவுன் அங்கமெல்லாம் அள்ளிக்கட்ட என்ற நீண்டநாள் சந்தேகத்தைக் கேட்டேன்


" ஓம், கன வருஷம் இருந்தனான் ,


" ஓ ,,நான் நினைசேன் அப்படிதான் இருக்கவேண்டும் என்று "


" ஒரு கட்டதுக்கு மேலே பிடிக்கவில்லை,,வேற சில காரணங்களும் தான். மருகா திரும்பி வந்திடன் "


" மிடில் ஈஸ்ட் ??   எந்த நாடு,,சவூதியா,?,குவைத்,?,,,டோகாகட்டார் ?"

" இல்லை இல்லை,,,மிடில் ஈஸ்ட் எந்தப் பக்கம் இருக்கெண்டே தெரியாது, அரசு"

"அப்ப ஓமான் ? ,,அந்த நாடா ?"


" ஓமானோ????? ,,அட தாலியக்கட்டு... அது என்ன சாமான் எண்டே எனக்கு தெரியாது "


" மலேசியா பாக்டரி வேலை ?,,"

" இல்லை, அரசு " 

" சிங்கப்பூர் டொலர் எக்சேஞ் பிசினஸ் ? "


" அட.,,தாலியக்கட்டு.,,, இல்லை,...,இதுக இல்லை,,இதுக என்க இருக்கெண்டே தெரியாது "


" அல்லது கிரீஸ் கப்பலா ? "


"கப்பலோ,?,, நம்மட அராலி கடல்ல தொழில்செய்யிறவங்க வைச்சிருக்கிற நீல்மரைன் கொம்பனி அடிச்சு விட்டானே மல்டிடே பைபர்கிளாஸ் போட்டைத்தவிர வேற ,,ஒன்றுமே தெரியாது,,கப்பலோ!!!!! ,,ஹாஹாஹா "


" அப்ப வேற எங்க இருந்திங்க "


" சுவிஸ் "


" என்னது,,சுவிச் ,,அதுவா "


" லைட் போட அமத்துற சுவிச் இல்லை,, இது சுவிஸ் எண்டுறது சுருக்கமா,,சுவிஸ்ஸர்லாண்ட் ,,,"


" அப்படியா "


" டொச்சில சுவைட்ஸ் , அந்த நாட்டின் மிகப்பழைய காலத்துப் பெயர் ஹெல்வெட்ச்சியா என்று சொல்லுவாங்க அரசு "


"அப்படியா "


" ஓம்,,,சுவிஸ் .கையில கட்டுற மணிக்கூடு,, பிளாக்மணி காசுகள் பதுக்கி வைச்சிருக்கிற சுவிஸ்பாங் எல்லாம் நல்ல பேமஸ்ஸே "


" அட சுவிஸ் ,   ஆ...ல்...ல்...ல்ப்ஸ் ...   எண்டு ஒரு பனிச்சறுக்கு மலை "


"ஓம். ஆல்ப்ஸ்.....   அல்பாய்ன்ஸ் ,,..என்னெண்டு தெரியும்? ,ஆல்ப்ஸ் ..,,அதுதான் வின்டர் காலத்தில பேமஸான விளையாட்டு இடம், டூரிஸ்ட் வார இடம்  ஆல்ப்ஸ் "


" ஆ...ல்ப்...... எண்டு ஒரு பனிச்சறுக்கு மலை இருக்கெண்டு மேப்பில காட்டி சோசல்ஸ்டடி மாஸ்டர் படிப்பிச்ச நினைவு இருக்கு ,


" லுசான்ல சில வருடம்,,பிறகு சூரிச்,,,"


" பெயரைக்கேக்கவே இங்க நிக்கவே காது நுனி குளிருது ".


" பிறகு கடைசியில் செயின்ட்காளன்ல ,,,இடையில கொஞ்சகாலம் பிரஞ்சு கதைக்கிற லவுசாணியிலயும் இருந்தேன்,"


" அதுதான் பார்த்தேன் உங்களிடம் ஒருவித நளினமான நாகரீக ஸ்டைல் இருக்கு "


" அட.,,தாலியக்கட்டு.அப்படி ஒரு பளாயும் இல்லை,,,"


" என்னது,,"


" இங்கிலீஸ்,,டொச்,,கதைக்க கொஞ்சம் தெரியும், நல்லா நேரம் காலம் இல்லாமல் தும்படி அடிச்சு உழைச்சன் ,...வேற ஒரு ,தாலியக்கட்டுமில்லை ."


" சரி ஏன் திரும்பி வந்திங்க,,அவன் அவன் இங்க இருந்து தலையக் குடுதெண்டாலும்அங்கெபோக காணி பூமியை வித்து அடகுவைச்சு ஓடித்தப்பி போக இந்தா அந்தா எண்டு குதிகாலில கெம்பி குதிச்சு போக நிக்குறாங்கள் "


" அட.,,தாலியக்கட்டு.,,அதுதானே சொல்லுறேன் ..ஒரு கட்டதுக்கு மேலே பிடிக்கவில்லை..மணிக்கூடு போல ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை,,,வீடு,,,,வேலை,,,வீடு..,வாழ்க்கை,,,,வீடு...,வேலை..."


" அட,,இங்க மட்டும் என்னவாம் அதுதானே இங்கே. யும் ,,ஜோன்சன் என்ன சொல்லுறீங்க."
.
.....................வில்சன் பதிந்த அந்த ஜோன்சனின் படத்தைக் கிளிக் செய்தபோது , அது ஜோன்சனின் முகநூல் கணக்குக்கு கொண்டுபோய் விட்ட்து. ஆச்சரியமாக அந்தப் படத்தின் கீழே நிறைய அவரோடு ,நண்பர்கள் உறவினர்,May he rest in peace ,So sad to see leaving so early., என்று ஆங்கிலத்திலும் கடவுள் நித்திய இளைப்பாற்ரியை அவருக்கு அருள் வாராக! என்று தமிழிலும் எழுதி இருந்தார்கள்.......................... .


" ஹாஹாஹா...அட.,,தாலியக்கட்டு.,,அரசு,,அரசு,,உமக்கு தெரியாது அப்பனே ,"


" எனக்கு வெளிநாட்டு அனுபவம் சுத்தமாகவே இல்லை, ஜோன்சன் "


" இங்க வேலை அரைவாசி வாழ்கை அரைவாசி இருக்கே,,,,மற்றது நம்மளிட நாடு,,நம்மட சனங்கள்,,நம்மட சாப்பாடு,,,இதுபோல சுவிஸில வருமே ,,சொல்லும்பார்ப்பம் "


" உள்நாட்டிலேயே உழுதுகொண்டு இருப்பதால் உண்மையாகவே எனக்கு வெளிநாட்டு அனுபவம் இல்லை,,ஆனால் நீங்க சொல்லுறதை நம்புறேன் "


" பொறும் வாறன்,,நாளைக்கு ஒரு பெரிய ஆல்பம் கொண்டுவந்து காட்டுறேன்,,"


" அட, "


" நான் வேலை செய்த குசினி...பிறகு சாப்பாடு கொண்டுபோய் விநியோகிக்கும் ம்யூசிக் காளியாடடம் நடக்கிற இடம்,, டொச் படிப்பிச்ச டீச்சர் . ஆல்ப்ஸ் மலையில பனிச் சறுக்கி விழுந்து எழும்பினது .... என்னோட பொஸ் ,,அவன் ஒரு ஜெர்மன்காரன் ,,மரங்களால ஒரு பாக்கில மணிக்கூடு செய்து வைச்சு இருக்கிற இடம்.... லவுசான் ரிவர்..எல்லாம் காட்டுறேன் ..


" சரி ,,கொண்டுவாங்க ,,வெளிநாட்ட போட்டோ அல்பத்திலே என்றாலும் தொட்டு தடவி வாசனையை முகர்ந்து பார்த்து மனச்சாந்தி அடைவம் "


.......................ஜோன்சன் .வில்சன் பதிந்த அந்த படத்தில் ஆங்கிலப் பாடகர் லயனல் ரிச்சி போல ஜோன்சன் நீண்ட சுருள் முடி அடிக் கழுத்துவரை நீண்டு தொங்க, வெளிநாட்டு சுவாத்தியதில் முகமெல்லாம் செல்லச் சதைகள் மினுக்கு மினுக்கு என்று பளிச்சிட இளமையாக சிரித்துக்கொண்டிருந்தார்.........


" ஹாஹாஹா ......அட.,,தாலியக்கட்டு,,,அப்படி ஒண்டும் அங்கெ இல்லை,,"


" சுவிஸ் பணக்காரநாடு ,கார், வீடு எல்லாம் சும்மா கிடைக்கும் அது இது என்று இங்கே கதைகளை அவிட்டு விடுகிறார்களே,,அது உண்மையா,,அல்லது சும்மா காதில பூ சுத்துறாங்களா ? "


" .அட.,,தாலியக்கட்டு,,,அப்படி ஒண்டும் அங்கெ இல்லை,,"


" அப்ப இங்கே சொல்லுறாங்களே ,,சும்மா பொட்டனி கட்டி அள்ளி அடையலாம் எண்டு "


" ஹாஹாஹா ......அட.,,தாலியக்கட்டு, துண்டைக்காணோம் துணியக்காணோம் என்று வேலை செய்தால் தான் கார்,,வீடு வேண்டலாம் "


" அப்ப வேற என்னதான் ஓசியில இருக்கு ஜோன்சன் "


"ஓசியில மூச்சு விடுற காத்துதான் இருக்கு ,, பாத்ரூமில குளிக்கிற தண்ணிக்கும் மீட்டர் வைச்சு காசு,,குளிச்சு முடிய போற கழிவுதண்ணிக்கும் மீட்டர் ஓடக் காசு,,அரசு "


" வேற என்ன இருக்கு ஜோன்சன் "


" என்ன சின்ன நாடு சுவிஸ்,, நல்ல அமைதியான துப்பரவு சுவிஸ்ஸர்லாண்ட் ..அந்த நாட்டுக் காத்தை சுவாசித்துக்கொண்டிருந்தாலே தொன்னூறு வயசுக்கும் சுவாத்தியமா இருக்கலாம்,,,"
.
.                   ............ஜோன்சனின் நினைவுகளில் ஒரு காலத்தில் முடிவில்லாத ஒளி உயிர்ப் பிடிப்புகள் மீது ஒளிர்ந்து சமதானத்தில் இளைப்பாறிவிடும் வாழ்க்கையை இன்னொருமுறை சமாந்தரமாக பார்க்க முடியும் போலிருக்கு.......................


                                         அடுத்த நாள் அல்ல அதுக்கு அடுத்தநாள்தான் சொன்ன மாதிரியே ஜோன்சன் ஆல்பம் கொண்டுவந்தார். அதில அவர் சொன்னதுபோலவும் அதுக்கு மேலேயும் நிறைய அவரோட சுவிஸ் வாழ்க்கை பற்றிய டாக்குமெண்டரி போல நிறைய கலர் படங்கள் இருந்தது. எல்லாமே மிகச் சிறப்பாக இருப்பது போலிருந்தது அந்த ஆல்பத்தில் .


                                                          சாம்பல் வாழைக்காய் நிறத்தில மாலைநேர பனிப்பொழிவுகளும் ,
பெயர் தெரியாத மலர்களும், அழகான வீதிகளும், வைட்சுவான் தேவதைக்கதைகளில் வருவதுபோல உயரமான சமயலறைச் சிம்மினி வைச்ச சுண்ணாம்புக்கல் வீடுகளும் , வெளிச்சமான கோடைகாலமும் , ஆறுகளும் ஏரிகளும், வெள்ளை மனிதர்களும் ஏகப்பட்ட நிறங்களில் பூலோக சுவர்க்கம் போலவே இருந்தது சுவிஸ்ஸர்லாண்ட்.


                                           ஜோன்சன் பிளாஸ்டிக் போலியெத்திலீன் போன்ற ஒரு உடுப்பால தலையில் இருந்து கால்வரையில் மூடிக் கட்டிக்கொண்டு ஸ்டைன்லெஸ் ஸ்டீல் அண்டா குண்டா பாத்திரங்களில் ச்பக்கத்தி நூடில்ஸ்க்குள்ளே தக்காளி ஸோஸ் போட்டு கிண்டிக்கொண்டு சமைக்கும் படங்களும், பின்னர் அதை ஒரு வானில இசை நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கு கொண்டுபோய் விட்பனை செய்யும் படங்களும் இருக்க, அவரோட பொஸ் அந்த ஜெர்மன்காரனைப் படங்களில் காட்டி அவனைப் புகழ்ந்து விபரங்கள் சொல்லிக்கொண்டிருந்தார் ஜோன்சன்.


                                                   
நமக்கெல்லாம் அப்போது வெளிநாடு என்பது கதைப்புத்தகங்களில் வாசிக்கும் போதோ, அல்லது டவுனில் தியடரில் ஓடும் இங்கிலீசு படம் பார்க்கும் போதோ, அல்லது இப்படி வெளிநாடு போட்டு வந்தவர்கள் விமானமேறி வந்து சொல்லும் விவரணங்களில் இருந்தோதான் ஒரு விதமான கண்ணா பின்னா என்று பிக்காஸோவின் தி லேடிஸ் ஒப் அவிக்னன் ஓவியதில நிக்கிற பெண்களில் எதையுமே உருப்படியாக கண்டுபிடுக்க முடியாதது போலத்தான் இருக்கும்.


                                           அப்படி இருந்தாலும் வெள்ளைக்காரர்களை ஓரளவு கிட்டவே நெருங்கி வாசனையே பார்க்கும் அளவுக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்து இருக்கு. எங்க ஊர் நல்லூர் திருவிழா பார்க்க வெள்ளைக்கார டூரிஸ்ட்கள் சுவிங்கம் சப்பிகொண்டு பெரிய பெய்ய ஏசி பஸ்ஸில் வந்து எங்கள் வீட்டுக்கு முன்னால் நிட்பாட்டி போட்டு , பிறகு கோவிலடிக்கு அதிலிருந்து வெறுங்காலில் இறங்கித்தான் போவார்கள். .எங்க அயலட்டை தெரு நாய்கள் தலைக்கு தோயாத அவர்கள் மணத்தில் கவரப்பட்டு ஓடிப்போக அதுகளுக்கு பிஸ்கெட் போட்டு அதுகளோடு இங்கிலீஷில் கதைப்பார்கள்.


                                                        ஜோன்சன், சுவிஸில் அவரோட வேலை வைன் கொடுத்த மணிக்கூடு போல உணர்ச்சி இல்லாத மெஷின் போல என்று சொன்னார். அவர் வேலைசெய்தபோது எடுத்த படங்களை பார்க்கவே கடைந்த மோரைத் தூளியில திருகி நெய் எடுக்கிற மாதிரித்தான் இருந்தது. . அதுதான் ஒரு கட்டத்துக்கு மேலே தாக்குப்பிடிக்க முடியாதவாறு வெறுக்கவைத்தது என்றும், அவரோட காதலி அப்போது இலங்கையில் இருந்ததாலும், ஒரு முடிவோடு சுவிஸ் வாழ்க்கைய மூட்டை கட்டி வைச்சுப்போட்டு அப்போது யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்த போதும் ஊருக்கே வந்துவிட்ட்தாகச் சொன்னார்.


..............................தெரிந்தவர்கள் இறந்தது பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் ஏனோ கவலை வருவதில்லை. எனக்கு வயதாகிக்கொண்டிருப்பதாலா ,,,அல்லது எல்லாருக்கும் போல எனக்கும் முடிவுக் காலமென்பது ஏற்கனவே மிகக் கச்சிதமாக வடிமைக்கப்பட்ட ஒன்று என்பதால தெரியவில்லை ................


                                        ஜோன்சன் அதுக்கு பிறகு ஒரு சில மாதங்களே வெதுப்பக்கத்தில் வேலை செய்தார். பின்னர் இடம்மாறிப் போய்விட்டார். ஆனால் அவர் சுவிஸில் செய்த அவரோட வேலை வைன் கொடுத்த மணிக்கூடு போல உணர்ச்சி இல்லாத மெஷின் போல என்று சொன்னார் அல்லவா அதை இன்னொருமுறை கேட்க்கும் சந்தர்ப்பம் வன்னியிலே கிடைத்தது. அதுவும் அப்போது அவர் ஸ்டோர்கீப்பர் ஆக அவர் வன்னியில் இடம்பெயர்ந்து வேலைசெய்தபோது,,
.
......................................ஒருநாள் அவரைச் சந்திக்கப் போனபோது, ஒரு மணிக்கூடுதான் அதுக்கு காரணமாய் இருந்தது..............


                                                   
ஜோன்சன் வெதுப்பகத்தை விட்டு போன கையோடு வலிகாமம் வடக்கில் இலங்கை ராணுவம் ரிவரிச சூரியகதிர் ராணுவ நடவடிக்கை தொடங்கியது. ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணுற்றி ஐந்தில் அது டிசம்பர் பருவ மழையோடு , அகோர செல் மழையும் சேர்ந்து குடாநாட்டைப் பிடித்த போது, குடாநாடு முழுவதும் இயல்பாக வாழ்ந்த மக்கள் இஸ்ரேலியர்கள் ஜோர்டான் நதியைக் கடந்து எகிப்துக்குப் போன எஸ்சோடாஸ் போன்று நாவற்குழி பாலம் தாண்டி தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய சோகமான வரலாற்றுச் சம்பவம் நடந்தது ,


                                                                                      பின்னர் கொஞ்சநாள் கொடிகாமதில குந்தி இருந்து இந்தா விடமாடாங்கள் அந்தா விடமாடாங்கள் என்று நம்பி ஏமாற ஒருநாள் காலை புகையிலைத் தோட்டப் பனிப்புகாருக்கு ஊடாக எதிர்ப்பு சமரோ,,முறியடிப்பு சமரோ எதுவும் இல்லாமல் இலங்கை ராணுவம் வாரத்வத்தை சரசாலை முனையால் உடைச்சுக்கொண்டு மீசாலைவரை பிடிக்க, பலர் திரும்பி ராணுவம் பிடித்த இடங்களுக்கு சென்றார்கள். அப்படிப் போவதில் சிக்கல்கள் உள்ளவர்கள் பலர் வள்ளத்தில் ஏறி கிளாலி கடலால் வன்னிக்கு போகவேண்டிய நிலைமை வந்திட்டுது.


                                                     எம்பிசீஸ் தென்மராட்சியை ராணுவம் பிடிக்கலாம் என்று நினைத்தோ தெரியவில்லை , கொஞ்ச ஊழியர்களை வன்னிக்கு அனுப்பி , அங்கெ இடம்பெயர்ந்துள்ள குடாநாட்டு மக்களுக்கு அரசாங்க நிவாரணம் வழங்கும் வேலைகளைத் தொடங்க அதில வேலை செய்த பலரை வன்னிக்கு போய் வேலைசெய்யும் விருப்பம் இருந்தால் போகும்படி அறிவுறுத்தினார்கள்.


                                                  ஆர்வக்கோளாறில் வன்னிப்பெருநிலப் பரப்பில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றதிலும், தனியாக ராணுவம் விடுவித்த ஊருக்கு திரும்பி போவதில் ஆபத்து இருந்ததாலும் , நான் வன்னிக்கு போனேன். ஜோன்சன் ஆரம்பத்திலேயே வன்னிக்கு போய்விட்டார். அப்படிதான் பின்னர் அவரைப் பரவிப்பாஞ்சான் கிளிநொச்சியில் சந்தித்த போது சொன்னபோது அறியமுடிந்தது. பரவிப்பாஞ்சான் ஸ்டோர் ஒபிஸில் அவர் வேலைசெய்தார் என்று நினைக்கிறன். சரியாக சொல்லமுடியவில்லை.


                                                                 அதுவும் கொஞ்சநாள்தான், இலங்கை ராணுவம் கிளிநொச்சியையும், தாண்டிக்குளத்தையும் நெடுஞ்சாலை ஊடாக இணைக்க A 9 பாதையில் வன்னிவிக்கிரம சண்டை தொடக்கிபரந்தன் கெமிக்கல் பக்ட்ரீயில் நின்ற ராணுவம் முன்னேறி கிளிநொச்சி நகரையே பிடிக்க, மீண்டும் ஒரு இடப்பெயர்வு வன்னிக்கு உள்ளேயே நடந்தது. எங்கள் இடம்பெயர்ந்த எம்பிசியெஸ் தலைமை அலுவலகம்
ஸ்கந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது


                                                             அங்கே இயங்கிய கிளைகளுக்கு விநியோகிக்கும் மையமாக,கரும்புத்தோட்டமும் ,வாய்க்கால்ப் பிள்ளையார் கோவிலும், நஞ்சுண்டகாட்டு வயல்களும் , ஆணைமுறிப்புக் காடும், அக்கராயன் குளமும், கோணல்த் தென்னை மரங்களும் நிறைந்த அழகான இரண்டாம் வாய்க்கால் ஸ்கந்தபுரத்தில் ஜோன்சன் ஸ்டோர்கீப்பாராக வேலை செய்தார். அவருக்கு கிளார்க் ஆக வில்சன் வேலை செய்துகொண்டிருந்தார்.


            .........................ஜோன்சன் நல்ல இதயமுள்ள அன்பான மனிதர் .இருந்துமென்ன எல்லாமே மிகச் சிறப்பாக இயங்குவது போலிருக்கும் ஒரு வாழ்வோட்டம் ஒரு சின்ன அதிர்வோடு அடங்கிவிடுகிறது . அதுபோலத்தான் வளைவுகள் இல்லாத பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் நதியும்தான் ஒரு வெள்ளம் வரும்போது சுழித்து விடுகிறதே ...............


                                                                            
ஒருநாள் அவரைச் சந்திக்கப் போனபோது, ஒரு உறவினர் லண்டனில் இருந்து வன்னிக்கு வந்தபோது எனக்குக் கொண்டுவந்து தந்த ஒரு மணிக்கூடுதான் அதுக்கு காரணமாய் இருந்தது. நான் கட்டியிருந்த அந்த வெளிநாட்டு மணிகூட்டை ஜோன்சன் கேட்டார். எனக்கு அந்த மணிக்கூடு பற்றிய பெறுமதியான விசயங்கள் ஒன்றுமே தெரியாது. ஜோன்சன் அதை வேண்டிப்பார்த்திட்டு நிறைய விசியம் சொன்னார். அதனால அவருக்கே அந்த மணிகூட்டை அவரிடமே கொடுத்திட்டேன்........


                                                                          அந்தக் கடிகாரம் ஒரு காந்தக் கடிகாரம் . அதில திசை எல்லாம் கொம்பாஸ் போல பார்க்கலாம், அது மூடி போட்டு மூடி இருந்தது. மூடியைத் திறந்துதான் டயல் பார்க்க வேண்டும். மூடிக்கு மேலே வெளியே கிரேசி கோர்ஸ் செவ்விந்தியத் தலைவன் குதிரையில் இருக்கும் படம் வெட்டி இருந்தது. அதன் இணைப்பு வார்களில் ஸ்பிரிங்ஸ் இணைப்புகள் இணைக்கப்பட்டு இருந்தன. ஜோன்சன் தான் அதை பார்த்திட்டு இந்த விபரங்களோடு இது பெரிய பெரிய ஹார்ஸ் பவர் உள்ள ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள் ஓடித்திரியும் ஹெல் ஏஞ்செல்ஸ் என்ற ஒரு கும்பல் அணிவது என்று சொன்னார்.


                                                                                 இதுவரைக்கும் அறியப்படாத வன்னிப் பெருநிலப்பரப்பில் சில வருடங்கள் ஜோன்சனுடன் ஒரு நடுக்காட்டுப் பகுதியில் ஒன்றாக தங்கி வசிக்கவேண்டிய சம்பவம்தான் அவரைப்பற்றி இன்னும் நிறைய விசயங்கள் அறியக் காரணமாக இருந்தது .


.....அந்த வாழ்க்கை துன்பங்களோடே இன்பமாகக் கடந்துபோன கனவு...அந்த நினைவுகள் .தொடர்ந்து வரும் .....
.
This  pics was taken by  dear friend  Thevaraja Wison,  thanks wilson.   

Wednesday, 23 August 2017

மார்க்கண்டேயன்

" போயாவைச் சுட்டுப்பபோட்டங்களே, இனி போயா விடுமுறை வராதே "


                                          என்று என் அம்மாவிடம் கேட்டேன், அம்மா ,என்னடா இவன் இப்பிடிப் பினாத்தறானே என்று என்னை ஆச்சரியமாய் பார்த்தா


                                     " எந்தப் போயாவை,,யார் சுட்டது "
என்று திருப்பிக்கேட்டா,


                                               " கொட்டட்டிப்போயாவை , பெரியாசுப்பத்திரியில் வைச்சு இயக்கம் சுட்டுப்போட்டுடுடாங்கள் " என்று விபரமாச் சொன்னபோதுதான், ,


                                           " அந்தப் போயா வேற, அது சிங்களவங்களோட போயா,,இவன் ஒரு பொல்லாத சண்டியன்,,,நீ பயப்பிடாதை, போயா லீவு ஒவ்வொரு மாதமும் வரும், நீ பள்ளிக்கூடம் போகத்தேவையில் வீட்டில நிண்டு என்னோட நின்மதியக் குழப்பி எனக்கு தெண்டால் போடலாம் "இப்பிடிச் சொன்னா,


                                               மாசத்தில் ஒருநாள் வரும் போயா விடுமுறைக்கு பள்ளிக்கூடம் விடுமுறை. பள்ளிக்கூடம் போகாத என்றைய நாளுமே ஜெயிலில் இருந்து தப்பிவந்தது போல ஒரு உணர்வு அப்பெல்லாம் படிக்கிற காலத்தில் இருந்தது. அதனால ஒரு ஆதங்கத்தில் அப்படி முட்டாள்தனமாகக் கேட்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது.


                                                      ஒரு காலத்தில் எங்கள் ஊரில் முறைச்சுப் பார்த்தாலே முகத்தில குத்துவிடுற மாதிரி நிறைய சண்டியர் இருந்தார்கள். இன்றைக்கெல்லாம் வாடல்ப் பயித்தங்காய் போல இருந்துகொண்டு இடுப்பில பிஸ்டல் செருகி வைச்சு இருக்கிற பயத்தால் கும்பிடு போட்டுட்டு ஒதுங்கிப் போகவேண்டிய நிலைமையை ஏட்படுத்துபவர்கள் போல அந்தக்கால சண்டியன்கள் இருக்கவில்லை.


                                                          அடிப்படையில் ஆரோக்கியமான திடகாத்திரமான உடல்வாகு உள்ள அவர்கள் சுருள்வாள் வீசுறது, யூடோ கராட்டி , மல்யுத்தம், பாரம் தூக்குவது , சீனடி சிலம்படி. குறக்கழியில் லொக் போட்டு விழுத்துறது , கம்பு சுத்துறது என்று தசைகளை முறுக்கும் வித்தைகள் கற்று இருந்ததால், உண்மையாகவே அவர்கள் உருவம் கனவிலையும் புலி திரத்திர மாதிரி பார்க்கவே பயமாக இருக்கும்.


காடுப்பூனைகுச் சிவராத்ரி விரதமா போல அவர்கள் எந்தநேரம் எகிறுவார்கள் என்று சொல்லவே முடியாது. அவர்கள் எதட்காக எல்லா மனிதர்களும் போல இயல்பான ஒரு வாழ்வொழுக்கத்தில் இருக்காமல் , அதிலிருந்து கொஞ்சம் வழிமாறிப்போய் சண்டியர்கள் ஆனார்கள் என்று சொல்லவேமுடியவில்லை.

                                                          பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வு சார்ந்த ஜாதி ஒடுக்குமுறை ஒருவிதமான காரணமாக இருந்திருக்கலாம், ஏன்னென்றால் அதிகமான சண்டியர்களின் பின்னனியில் அவர்கள் பிறந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பழிவாங்கல் இருந்திருக்கு.


                                                             பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு கள்ளனுக்கு களவிலே சாவு என்பது போல சண்டித்தனம் என்று வரும்போது தங்களை எல்லாவிதத்திலும் முதன்மைப்படுத்திய அவர்களின் வீரதீர அட்வென்ச்சருக்கு அவர்கள் கொடுத்த விலையும் அதிகமாகவே இருந்தது. அதுவும் விடுதலைப் போராட்ட நெருப்பு கொஞ்சம் போல புகையில் இருந்து நெருப்பாக கிளம்பிக்கொண்டு இருந்த நேரம்,உள்ளுர்ச் சண்டியர்களுக்கு ஆப்பு வைக்கத்தொடங்கினார்கள் துவக்குகளோடு வெளிப்படையாக நடமாடத் தொடங்கிய " மூமென்ட்ஸ் போய்ஸ் " என்ற இயக்கப்பொடியள் .


டவுன் பாடசாலையில் சாதாரணதரத்தில் படிக்கிறகாலத்தில் முதல் முதலில் டவுனை அண்டிய ஒல்லாந்தர் கோட்டையையும் முனியப்பர் கோவிலடியையும் அண்மித்த கொட்டடி என்ற இடத்தைக் குறுநிலமன்னர்கள் போல கட்டுப்பாட்டில் வைத்திருந்து அட்டகாசம் செய்த கொட்டடிப்போயா என்ற சண்டியனை இயக்கப் பொடியள், சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றுக்கொண்டிருந்த நேரம் கட்டிலில் வைச்சுப் போட்டுத் தள்ளினார்கள்.


                                                       ஆனால் அந்த முதல்ச் சூட்டூச் சம்பவத்தில் கொட்டடிப்போயா காயங்களோடு தப்பிவிட்டார். இயக்கப்பொடியன்கள் வைச்ச வெடிகள் குறிதவறிவிட்டது. அதுவும் ஆசுப்பத்திரிக் கட்டிலில் படுத்துக்கிடந்ததால் உடனடியாக ரத்தப்போக்கை நிப்பாட்டி அவசர சிகிச்சை உதவி கிடைத்திருக்கலாம் .


                                                     கொட்டடிப்போயா ஆசுப்பத்திரிக் கட்டிலில் கிடந்தது சுடுகலன்களை இயக்க இராணுவப் பயிட்சி எடுத்த சுடவந்த இயக்கப்பொடியன்களுக்கே தண்ணி தெளிச்சுக் காட்டுற மாதிரி கட்டிலுக்கு கீழே உருண்டு லெக் கவர் பொசிசன் எடுத்து காயங்களோடு தப்பிவிட்டார். இராணுவம் போலீஸ் எல்லாம் கொஞ்சம் நடமாடிய அந்தநேரம் சட சட சட என்று வெடிவைச்சுப்போட்டு பொடியன்கள் தப்பித்போட்டாங்கள்

                                                    . கொட்டடிப்போயா சுடப்பட்டது, அதிலிருந்து தப்பியது செய்தியாகக் கசிய, விடக்கூடாது என்று அடுத்தநாளே திரும்பி வந்து பொடியன்கள் வெச்சாங்கள் வெடி. கொட்டடிப்போயா அதிலிருந்து தப்பவே முடியவில்லை

                                             ஆங்கிலத்தில் லெதல் வெப்பன் என்று பயங்கரமாய்  உயிராபத்து விளைவிக்கும் ஆயுதங்களை சொல்லுவார்கள், அப்படியான ஆயுதம் கட்டாயம் ஒவ்வொரு சண்டியனிடமும் இருக்கும். கொட்டடிப்போயா வைச்சிருந்த ஆயுதம் சுருள்வாள். சுருண்டு கையடக்கமாக இருக்கும் அந்த வாள் நீட்டி விசிக்கினால் காற்றைக் கிழித்துக்கொண்டு புடையன் பாம்பு படமெடுக்கும் நேரம் கோபமாக உஷ் உஷ் உஷ் என்று மூச்சு எறியுமே அதுபோல நாலு பக்கமும் விசிறும் சத்தமே அகோரமா இருக்கும்.

                                                      அதை எப்படிக்  கொட்டடிப்போயா பயன்படுத்தினார் என்று தெரியவில்லை .

                                                 கொட்டடி  என்ற போயாவின் கட்டுப்பாடுப் பிரதேசத்துக்குள் அதிகம் வசித்த டவுன் பெரியக்கடை வீதியில் கொழும்பிலிருந்து வரும்  லொறியில் இருந்து மூட்டை  தூக்கி இறக்கும் உழைப்பாளி மக்கள் இருந்தார்கள். போயாவும் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கும்   அருகில் இருந்த இஸ்லாமிய சமூகம் வாழ்ந்த பொம்மைவெளி  அஞ்சுசந்தி  பகுதிக்கும் இடையில் எப்பவுமே அடிதடி கைகலப்பு   சண்டை நடக்கும்.

                                                      அது பலவருஷமா  நடந்துகொண்டிருந்தது. அதுக்கு அடிப்படைக்காரணம் என்ன என்று தெரியவில்லை. கொட்டடிப்போயா இருந்த காலத்தில் அவர் சார்ந்த சமூகம் அவர் சண்டியன்போல இருந்ததால் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். தன் சமூகத்தை நிமிர்ந்து நடக்க வைச்ச நல்ல ஒரு லீடராக இருந்திருக்கிறார்,


                                           கொட்டடிப்போயா அப்படி என்ன கொடூரமான சண்டியரா, என்பது பற்றி அதிகம் தெரியாது, ஆனால் டவுனில்  பெரியகடை வீதியில்  இயங்கிய வியாபார நிறுவனங்களுக்குள் போய் கிரீஸ் கத்தியைக் காட்டிப் பயமுறுத்தி மாதம் மாதம் கப்பம் வேண்டிய தகவல்கள் அப்போது பரவிக்கொண்டிருந்தது. கொட்டடிப்போயாவின் மரண வீடு அவரோட ஆதரவாளர்களால் மிகவும் பெரிய எடுப்பிலே கொண்டாடப்பட்டது. பிரேதம் எடுத்து சவ ஊர்வலத்தில் அவர்கள் மிகவும் பயங்கரமான வெடிகள் கொளுத்தினார்கள். டவுனே ஹைட்ரையின் போம் போட்டமாதிரி அதிர்ந்தது


இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வேறுபல சண்டியர்களும், டவுணிலையும், அதை அண்டிய சின்ன ஊர்களிலும் விசாரணை என்ற பெயரில் கண்கள் கட்டப்பட்டு கடத்தப்பட்டு, லைட் போஸ்ட்டில கட்டப்பட்டும், தெருவோரத்திலும் , சந்தி முடக்குகளிலும் ஏன் ,எதுக்கு என்ற கேட்டுக்கேள்விகள் இல்லாமல் தாறுமாறாய்ப் போட்டுத்தள்ளப்பட்டார்கள்.

                                                              அமைதியான சமூகத்துக்கு சட்டவிரோதமாகச் சண்டித்தனம் செய்துகொண்டு இடைஞ்சலாக இருக்கும் சண்டியர்கள் தானே கொல்லப்படுகிறார்கள் என்று பொதுஜனங்களும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.


எங்கள் ஊரில் ஒரு சண்டியர் இருந்தார். அவர் பெயர் கன்னுத்துரை, கசிப்புக் கன்னுத்துரை என்றால் தான் பிரபலம் , அதைவிட கை கால் உதறல் எடுக்கிற மாதிரியான ஒரு பெயரும் அவருக்கு இருந்தது, அந்தப் பெயர் நெப்போலியன். நெப்போலியன் பெர்னபாட் போலவே குள்ளமான தோற்றம். ஆனால் ரெண்டு மண்ணெண்ணெய் பரல் போல வாட்ட சாட்டமான உடம்பு. முன்னுக்கும் பார்த்துப் போகவிட்டுப் பின்னுக்கும் பார்த்தால் டுபாய்ப் பூசணிக்காய் போயிருப்பார்.

                                                                 அவருக்கு நெப்போலியன் என்று பட்டப்பெயர் வைத்த சிலம்படிச் சீமான் உண்மையில் மிகவும் ரசனையுள்ள பிரெஞ்சுப் புரட்சி வரலாறு தெரிந்த உள்ளூர்த் தத்துவ ஞானி சிங்கிமாஸ்ட்டர் .


                                           ஏனென்றால் நெப்போலியன் பெர்னபாட் போலவே கன்னுத்துரைக்கும் முன் மண்டையில் தலைமயிர் இல்லை. நெப்போலியன் பெர்னபாட் போலவே கன்னுத்துரையும் முன்நெற்றி வழுக்கலை மறைக்க கொஞ்சம் நடுமண்டை மயிரை முன்னோக்கி விழுத்தி இருப்பார். நெப்போலியன் பெர்னபாட் போலவே காதுக்கு மேலால நிறைய முடியை கும்மி போல தூக்கி விட்டு இருப்பார்.

                                                                          நெப்போலியன் பெர்னபாட்க்கும் அவருக்கும் இடையில் இருந்த முக்கிய வேறுபாடு இருட்டுப்போல கறுப்பு நிறமும் எந்த நேரமும் செக்கச் சிவப்பா இருக்கும் ரெண்டு கண்களும் தான். வேற ஒன்றுமில்லை. அவருக்கு நெப்போலியன் என்று பட்டப்பெயர் வைத்த உள்ளூர்த் தத்துவ ஞானி சிங்கிமாஸ்ட்டர் ஒரு விபரமான ஆள்த்தான்


                                                  நெப்போலியன் எப்பவும் வெயில் அடிக்கும் பகல் நேரம் ஆள் எப்பவும் வீட்டுக்குளே பதுங்கிக்கொண்டு இருப்பார், இடுப்பில கிரீஸ் கத்தி செருகிக்கொண்டுதான் எப்பவாவது பின்மாலைப் பொழுதுகளில் மம்மல் நேரம் ஊர்ல ஆள் நடமாட்டம் இல்லாத போது சாரத்தை முழங்காலுக்கு மேல மடிச்சுக் கட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியவருவார், அதுவும் அவர் வசிக்கும் மரவள்ளித் தோட்ட ஒழுங்கையை விட்டு மெயின் ரோட்டுக்கு தலைக் கறுப்புக் காட்ட மாட்டார் . அவ்வளவு தன் நிழலுக்கே பயந்தாள் ஆள் .

                                                    அவர் சண்டித்தனம் செய்துவாற எல்லாப் பிரச்சினையையும் முன்னுக்கு போய் முண்டுகொடுத்து எதிர்கொள்வது அவரோட இரண்டு பொஞ்சாதிகளும் தான்.


நெப்போலியனின் ரெண்டு பொஞ்சாதிகளும் நல்ல வெள்ளாவி பிடிச்சு வெளுத்தது போல வெள்ளை நிறம், ரெண்டுபேருமே எங்கள் ஊருக்கு அயல் ஊரில் வசித்த சண்டித்தனத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.சாமத்தில் ரெண்டுபேரையும் நெப்போலியன் வீடு புகுந்து வைபோசாய் தூக்கிக்கொண்டு வந்து, தாலி கூறை காட்டிக் கலியாணம் கட்டாமல்த்தான் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார்.

                                                 ஒரு சண்டியனுக்கு வாழ்க்கைப்படத்துக்காய் அவர்கள் ஒருநாளும் சலித்துக்கொண்டதில்லை , பதிலாக எல்லாரும் பயப்பிடும் ஒரு ஹீரோவோடு வாழ்வது போலவே பெருமையாக நிமிர்ந்து நடப்பார்கள். சத்தமாகக் கதைப்பார்கள். நெப்போலியனை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்கமாடார்கள் .


ஒருநாள் மம்மல் நேரம் நெப்போலியன் கிரிஸ்க்கத்திய இடுப்பில செருகிக்கொண்டு.மாட்டொழுங்கை இருட்டில சுப்பிரமணியம் கடைக்கு பின்பக்கம் இருந்த தார்ப் பீப்பாவை வெட்டி அடிச்ச தகரவேலிக்கு அருகில் நின்று இருக்கிறார், அவரிண்ட கசிப்பைக் குடிச்சுப்போட்டு சைக்கிள் ஹாண்டிலில் இருந்து ரெண்டு கையையும் எடுத்துப்போட்டு கந்தக் கடவுளை நம்பிக் காற்றில் மிதந்தபடி

                                           " கந்தப்பனே ஞாப்பனே பன்னிருகை வேலவனே "

                                                 என்று பாடிக்கொண்டு சைக்கிள தலைகரணமா வளைச்சுக்கொண்டு வந்த அவரோட வாடிக்கையாளர் தார்ப் பீப்பா தகர வேலியோடு படார் என்று மோதிவிழ,


                                                     நெப்போலியன் விழுந்தடிச்சு, கிறிஸ் கத்தி கீழ விழ அதையும் எடுக்காமல் , சாரம் அவிண்டுவிழ குண்டியில் குதிக்கால் தெறிக்க உசைன் போல்ட் போல ஒழுங்கையால ஒடித்தப்பி வீட்டுக்குள் ஓடி அதையும் தாண்டி பின்னால மரவள்ளித்தோட்ட்துக்குள்ளே விழுந்து படுத்து, மூச்சு விட்டு பதுங்கியிருந்தபடி பொஞ்சாதி ரெண்டுபேரையும் உடனே மெயின் ரோட்டுக்குப் போய் பார்க்கச் சொல்லி அனுப்பினார் .


                                                             அவர்கள் போய்ப் பார்த்தபோது அந்தக் " கந்தப்பனே ஞாப்பனே " ஒருமாதிரி பாலன்ஸ் பிடிச்சு எழும்பி, இடத்தைக் காலிபண்ணிப் போட்டுப் போட்டார் . பொஞ்சாதி ரெண்டுபேரும் வந்து ஒரு சிலமனும் இல்லை என்று சொன்னபிறகு தான் , நெப்போலியன் மரவள்ளித்தொட்ட்துக்குள்ளால வெளியேவந்து, சாரத்தை இடுப்புக்கு மேல உயர்த்திக்கட்டிக்கொண்டு , ஒரு முதிரமர மண்டான் உருட்டுக் கட்டையைத் தூக்கிக்கொண்டு , ஒழுங்கைக்குள்ள இறங்கி.


                                              " டேய்,,யாரடா அவன்,,,சண்டித்தனம் செய்யிறது என்றா நேரா முன்னுக்கு வரவேணும்..ஆரட அவன் எளியவனே , பெண்டுகள் போல சீலைய முடிஞ்சுகொண்டு பின்னால முதுகிலே பயந்து நிண்டு குத்த வந்தது...வெட்டிக் கண்டம் போட்டு உப்புத்தூள் தடவிப்போடுவன்..நெப்போலியனோட சண்டித்தனம் விடுறது எண்டா நேருக்கு நேரா வந்து மோதிப் பார் பார்ப்பம் துணிவு இருந்தா."


                                இப்படி சொல்லிப்போட்டு அங்கால இங்கால தட்பாதுகாப்பாய் திரும்பித் திரும்பி சுழண்டு பார்த்தபடி,,கத்திப்போட்டு வீட்டுக்குள்ளே போட்டார் .


சட்டவிரோதமாய்க் வெட்டிரும்புக் கசிப்புக் காச்சி அதை சட்டவிரோதமாய் விட்பனை செய்வதுதான் நெப்போலியனின் பிரபோசனல் ஜாப் , அதுக்கு வலு வசதியாய் இருந்தது அவர் வசித்த மாட்டொழுங்கை . அது முடியும் இடத்தில இருந்த மரவள்ளித்தோட்டமும். வெட்டிரும்பு வாடிக்கையாளரைத் தவிர யாருமே அந்த ஒழுங்கையை எல்லிப்போலவும் எட்டித்தன்னும் பார்ப்பதில்லை.

                                               அந்த ஒழுங்கையில் வேறு வீடுகளே இல்லை. நாலு கடி நாய் எப்பவுமே ஒழுங்கை முகப்பில் படுத்திருக்கும். நெப்போலியனின் அலேர்ட் டிபென்ஸ் அந்த நாலு நாய்களும்தான். இரவில மாட்டொழுங்கையில் இருந்த ஒரேயொரு லைட் போஸ்டில் பல்பு என்றைக்குமே எரிந்ததில்லை . அந்த ஒழுங்கை மெயின் வீதியில் சுப்பிரமணியம் கடைக்கு வலதுபக்கமாய் வந்தேறும்.


                                                      நெப்போலியனின் கசிப்பு பிரெஞ்சு கவினியர் ஷாவைரா ஸ்பார்க்கிளிங் றோஸ் வைன் போல ஒரு தனியான சுவையுள்ள தயாரிப்பு. சீனியும், பாண் பொங்கப் போடுற ஈஸ்ட் என்ற வெதுப்பியும், அலுமினியம் பித்தளை சில்லறைக்காசும், ஸ்பெஷலாக செத்துப்போனவர்களை ரெண்டு மூன்றுநாள் பழுதாகாமல் வைக்க உடம்பைக் கீறி அடைவார்களே இம்பாம் பவுடர் , அந்தப் பவுடரும் சேர்த்து, வாசத்துக்கு அழுகின வாழைப்பழமும்,,

                                                   சிலநேரம் பேரிச்சம்பழமும் சேர்த்து தேங்காய்எண்ணெய் பரலில் புளிக்க வைச்சுப் பின் நொதிக்க வைச்சு, அதை பெரிய கண்டக்கல் அடுப்பில வைச்சு கொதிக்க வைச்சு அதிலிருந்து வரும் ஆவியை ஒரு சின்ன வெண்கலக் குழாயால் ஒடுக்கி அதைப் பச்சைத்தண்ணிக்கு நடுவால விட்டு எடுத்து சொட்டுச் சொட்டாக விழாவைச்சு வடிக்கப்படுவது.

                                                    அதுதான் முதல் வடி . அதுக்கு பிறகு தண்ணி கலந்து விட்பது. மிகவும் கஷ்ட்ட நிலைமையில் இருந்த நெப்போலியனின் வாடிக்கைக் குடிகாரர்களுக்கு அந்த கசிப்பு எக்கோனோமிக்கலா கட்டுப்படியாக இருந்தது.


                                             " குறைந்தவிலையில் நிறைந்த பேரின்பம் "


                                                   என்று அதுக்கு விளம்பர வசனம் சொல்லுவார் கோடாப்போட்ட வையண்ணாசீனாக்கூனா சுருட்டைத் தவிர வாயில எதுவுமே வைக்காத சிங்கி மாஸ்ட்டர் . அதைவிட


                                                       "துரையன்ற வெட்டிரும்போ, சொல்லப்பட்ட சங்கிராந்திச் சாமான் கண்டியளோ , அத குடிச்ச செத்தால் அந்த மூதேசிகளுக்கு இம்ப்பாம் செய்யிற செலவும் இல்லை. ஏற்கனவே வேண்டிய அளவு இம்ப்பாம் பவுடர் உடம்பில ஊறி இக்குமே ,,பிறகென்ன செத்த உடம்பு நாலு அஞ்சு நாளுக்கு சவம் கெடாமல் கண்டக்கோடாலி வைச்சுப் பிளந்தாலும் சொல்லிவைச்சுத் தாக்குப்பிடிக்கும் " என்று சொல்லுவார் தனிப்பனைக் கள்ளத் தவிர வேற எதிலுமே நாக்கு நனைக்காத புண்ணியக்குஞ்சி .


நெப்போலியனின் சட்டவிரோத கசிப்பு வருடம் முழுவதும் வீட்டுக்குள் விற்றுக்கொண்டிருந்தாலும். நெப்போலியன் வருடத்தில் இருவத்திஐந்துநாள் நாள் தான் வெளிய வந்து சண்டித்தனம் செய்வது.

                                                            அது நல்லூர் திருவிழா நடக்கும் இருவத்திஐந்து நாட்கள். கோவிலின் மேட்குப் பக்கம் முனுசுபால்டி கல்யாண மண்டபத்தைச் சுற்றி சின்ன சின்ன கடைகள் போட முனுசுபால்ட்டி நிலத்தை வாடைக்கு கேள்வி விண்ணப்ப அடிப்படையில் கொடுப்பார்கள். அதில் கச்சான் கடலைக்கடை , வளையல் காப்புக்கடை, சுவீட் இனிப்பு விக்கிறக்கடை , குழந்தைப்பிள்ளைகளின் விளையாட்டு சாமான் விக்கிற கடை எல்லாம் சின்ன ஓலைக்கொட்டில் போட்டு நடத்துவார்கள்.


                                                 என்னதான் முனுசுபால்ட்டி பவர் உள்ள அமைப்பாக இருந்தாலும். அந்தக் கடைகள் நெப்போலியனுக்கு ஒவ்வொருநாளும் கிள்ளுக்கீரை போல வருமானத்தில் ஒரு பங்கு கொடுத்தே ஆக வேண்டும். இல்லாட்டி சாமத்தில் தென்னம் ஓலைக் கூரையில் திடீர் என்று நெருப்பு பத்தும். அல்லது நித்திரைப்பாயில் கிரீஸ் கத்திக் குத்து விழும். எல்லாம் இரவிலேதான் நடக்கும். அதெல்லாம் நெப்போலியனின் இருட்டுக் கைவேலை. ஆனால் பகலில் அவரின் ரெண்டு பொஞ்சாதிகளும்தான் கலக்சனுக்கு வருவார்கள். அதிகம் கதைக்காமல் காசை வேண்டிக்கொண்டு போவார்கள்.

                                                        யாராவது தனகி முண்டினால். இரவு மேலே சொன்ன டிரீட்மென்ட் நடக்கும்.


இதெல்லாம் இயக்கங்கள் சாடைமாடையையாய் வெளிய தலைகாட்ட முன்னம் நடந்தது. பொடியன்கள் நிலப்பிரதேசத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்பு ஒருநாள் கசிப்பு வடிக்கிற பரலைத் தலையில தூக்கி வைச்சு
                                  " இனிமேல் வெட்டிரும்பு வடிக்க மாட்டேன் "

                                                 என்று எழுதிய மட்டையைக் கழுத்தில தொங்க விட்டு நெப்போலியனை ஊர் முழுவதும் ஊர்கோலம் போக வைத்தார்கள் இயக்கப்பொடியன்கள் . அன்றைக்கு இதை மீறினால் நெத்தியில பொட்டு வைக்கவேண்டிவரும் ,அல்லது காதுக்குள்ள பூ செருக வேண்டிவரும் என்று டெத் வார்னிங் கொடுத்தார்கள்.  

                                      நெப்போலியன் அன்றோடு கப் சிப் . அதுக்கு பிறகு திருவிழா கடைகளில் சண்டித்தனமும் அடியோடு கைவிடப்பட்ட்து.


அதுக்குப் பிறகு ஒரே ஒருமுறைதான் நெப்போலியன் பொதுமக்களின் முன் மிகச் சாதாரணமான மனிதராகத் தோண்றியது . எங்கள் ஊர் சனசமூக நிலையத்தில் றோட்டரிக் கழகம் என்ற தொண்டு நிறுவனம் கண்தானம் செய்யவிரும்புவர்களை பதியும் நிகழ்வு நடந்தது. அதில முதல் முதல் வந்து எங்கள் ஊரிலிருந்த எல்லாரையும் அதிர்ச்சியாக்கும்படி நெப்போலியன் தன்னோட பெயரைப் பதிவு செய்தார். அதன் பின் சிலவருடங்களில் ரெண்டு சிறுநீரகங்களும் இயங்காமல் இறந்துவிட்டார்.

                                                   அதுக்குப் பிறகுதான் மாட்டொழுங்கையில் லைட் போஸ்டில் இரவுகளில் பிரகாசமாக லைட் எரியத்தொடங்கியது.


நாங்கள் வசித்த வீதியிலே ஒரு சண்டியர் இருந்தார். ஒரு கிளாசிக்கல் சண்டியனுக்கு இருக்கவேண்டிய உடல்த் தோற்றம் இருந்தாலும் அவர் ஒரு காலத்திலும் முழுநேர சண்டியராக இருந்தமாதிரித் தெரியவில்லை. இலங்கைப் போக்குவரத்து சபையில் ட்ரைவர் ஆக வேலை செய்தவர். ஆறடிக்குமேலே உயரம், பெயரே கொஞ்சம் நடுங்கவைக்கிற மாதிரி மார்க்கண்டேயன்,


                                                                          மார்க்கண்டேயர் போலவே கறிச்சசட்டியைக் கவிட்டு வைக்கிற கறுப்பு நிறம். சேட்டுக்கு மேலால சரத்தைக் கட்டி அதுக்கு வளவுகார சிங்களவர்கள் போல அகலமான பெல்ட் கட்டி இருப்பார். கமலா பீடிதான் விரும்பிக் குடிப்பார். அவரரோட பேஸ் குரலில் ஆழமான அதட்டல் தொண்டை நரம்புகள் புடைக்க எதிரொலித்தாலும், கொஞ்சம் " மொடரேட் டைப் " சண்டியரான மார்க்கண்டேயன் மிகவும் மரியாதையாக மரியாதை கொடுத்து வேண்டுபவர்களுடன் கதைப்பார்.


எங்களின் வீதியின் தொடக்கத்தில் ஒரு சின்ன வயிரவர் கோவில் இருந்தது, வயிரவருக்கு முன்னால ஒரு கறுப்பு நாய் படுத்திருக்கும், நாய்க்கு முன்னால ஒரு கட்டுக்கிணறு இருக்கும் , கட்டுக்கிணத்துக்கு வலது பக்கமாய் மண்ணில் அரைவாசி புதையுண்டு ஒரு பெரிய கருங்கல்லு இருக்கும். அதன் நிறை நாலு ஐம்பதுகிலோ சீமெந்துபாக் இந்த பாரம்.

                                                               மார்க்கண்டேயன் ஒருவர் தான் இளந்தாரி வயதில் அதை பஸ் ஓடி டிப்போவில் விட்டுப்போட்டு வேலை முடிஞ்சு வரும் ஒவ்வொருநாளும் தோளுக்கு மேலே தூக்கி வைச்சுபோட்டு திருப்பி நிலத்தில போட்ட ஒரே ஒரு ஆம்பிளை என்று பெட்டிசம் பாலசிங்கம் பலமுறை அந்தக் கல்லில குந்தியிருந்தபடி சொல்லி இருக்கிறார்.

                                                 மார்க்கண்டேயன் வீதிக்கு இறங்கி  சண்டித்தனம் செய்த காலத்தில் ஆயுதம் என்று எதுவும் கொண்டுதிரிவதில்லை, ஆனால் அவரிடம் திருக்கைமீன்வால் இருந்ததாகவும் , அதுக்கு கைபிடிசெய்து  பித்தளைப் பிடிபோட்டு வைச்சு இருந்ததாகவும்   புண்ணியக்குஞ்சி சொல்லுவார், அதுவும் நாலடி நீளமான திருக்கைவால்.

                                                                  ஒரு மீனின் வாலில் அப்படி என்ன பெரிய ஆபத்து இருக்கு என்று நீங்க நினைக்கலாம், திருக்கைமீன்வாலால்  அடிவேண்டினால் அந்த இடத்தில  அட்டை போல    சுருண்டுவிழ வேணும். அவ்வளவு சடுதியான அதிர்ச்சி வலி கொடுக்கும் . பிறகு வாலில் உள்ள முள்ளு  நீண்ட கோடுபோல வெட்டிக் கிழித்த புண்  சீழும் சிதலும் பிடிச்சு மாதக்கணக்கில் உலைச்சுப்போட்டுத்தான் மாறும்,அவ்வளவு விஷத்தன்மை இருக்கு.

                                      ஆனால் அந்தப் பயமே கிலி ஏட்படுத்தப் போதுமானதாய் இருந்தது. எப்படியோ வீராளி அம்மாளாச்சி அறிய  மார்க்கண்டேயன் அதை யார் மீதும் எந்த அவசரகால சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தியதாக தகவல்கள் இருக்கவில்லை.


மார்க்கண்டேயன் சண்டியராக இயங்கிக்காலத்தில் நான் பிறக்கவேயில்லை, எங்கள் வீட்டில் அவரைப்பற்றி நிறையக் கதைகள் சொல்லுவார்கள். அவரோட பொஞ்சாதிக்குப் பெயர் குஞ்சுப்பிள்ளை , பெயரைப்போலவே நாலடி உயரமுள்ள சின்ன உருவம்.

                                                               பின்னேரங்களில் அவர் சாராயம் குடிச்சுப்போட்டு பொஞ்சாதியோடு தனகிக்கொண்டு இருப்பாராம் எங்கள் வீதியால் யாரவது மார்க்கண்டேயன் வீட்டுக்கு முன்னால உரத்து சத்தம்போட்டுக் கதைச்சுக்கொண்டு போனாலே பிரச்சினை தொடங்கும், படலைக்கால வெளிய வந்து மார்க்கண்டேயன் ,


                                           " ஆரடா அவன்,,இப்ப வந்து கொரக்கில போட்டு கழுத்தில பிடிச்சனெண்டா சங்கு அறுத்துப்போட்டுத்தான் விடுவன் ,,ஆரடா அவன் மார்க்கண்டேயன் வீட்டு படலைக்கு முன்னால வாள் வாள் எண்டு கத்திக்கொண்டு போறது,,வடுவா ராஸ்கலுகள் "


                                                          இந்த அதட்டலோடு பலர் ஓடித்தப்பி விடுவார்கள்..அதுக்குப் பிறகு இன்னொருமுறை மார்க்கண்டேயன் படலையக் கடக்கும் போது மூச்சு விடுற சத்தத்தை விட வேற எதுவுமே வராது.

                                                            யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்த ஆண்டுகளில் காலையிலயே ஒல்லாந்தர் கோட்டைய சுற்றி செல் மழை பொழியும், அல்லது அதிகாலை வீராளியம்மன் கோவில் லவுட்ஸ்பீக்கர்ல இருந்து அபிராமி அந்தாதி சீர்காழி எஸ் கோவிந்தராஜன் குரலில் மிதக்கும், அல்லது வீட்டுக்குப் பக்கத்தில வெள்ளவாய்க்கால் ஓரமாகச் சடைச்சு நின்ற மஞ்சவண்ணா மரத்தில இருந்து குயில்கள் பாடும் ,

                                                                இது மூன்றும் நடக்காத ஒரு அநாதிக்காலையில் மார்க்கண்டேயன் வாசிக்கும் இசைக்கருவியின் நாதங்கள் அயலட்டை முழுவதையும் திருப்பள்ளிஎழுச்சி பாடி எழுப்பிவிடும்.


                                                     மார்க்கண்டேயன் வாசிக்கும் அந்த இசைக்கருவி என்ன என்று பலவருடம் மர்மமாகவே இருந்தது.அவரோட பொஞ்சாதி எங்கள் வீட்டுப் பக்கம் வந்தால் கேட்பது, தனக்குச் சரியாகப் பெயர் தெரியாது என்றும். தான் அதை டைபிரேட்டர் எண்டு சொல்வதாகவும் சொல்லுவா,எழுத்துக்கள் அடிக்கிற டைப்பிரெடரில் யாராவது இவளவு இனிமையான இசையை வாசிக்க முடியுமா,என்ன ஒரு முட்டாள்தனமான விளக்கமாய் இருக்கே என்று குழம்பியதுதான் மிச்சம்.  ஆனால் இசை பிரவாகிக்கும் சத்தத்தில் அது ஒரு கம்பி வாத்தியம் என்று சொல்லக்கூடியதாய் இருந்தது.

                                                         மார்க்கண்டேயன் வயதாகி நடக்க முடியாத ஒரு நிலை வந்தபோது அந்த இசைக்கருவியை வாசிப்பதை நிறுத்திவிட்டார்.


எங்கள் வீட்டில் அந்த நேரம் உருத்திரவீணை, மிருதங்கம், அக்கோஷ்டிக் கிட்டார் என்ற இசைக்கருவிகள் இருந்தது. ஆனால் அதுகளை முறைப்படி வாசிக்கும் ஞானம் யாருக்குமே இல்லை. எலி அலுமினியப் பானைக்குள் விழுந்து உருட்டினமாதிரி வாசித்துப்பழகும் நிலைமைதான் இருந்தது. அந்த சத்தங்களைக் கேள்விப்பட்டோ தெரியவில்லை,

                                                          ஒருநாள் அந்த வாத்தியத்தை மார்க்கண்டேயன் தூக்கிக்கொண்டு கால் ஒன்றை இழுத்து இழுத்து நடந்தபடி வந்து எங்கள் வீட்டுக்கு கொண்டுவந்து எங்களிடமே தந்தார். அப்போதுதான் அந்த வாத்தியம் என்ன என்ற நெடுநாளைய மர்மம் உடைக்கப்பட்டது.


அந்த இசைக்கருவி ஹவாயின் கிடார் போல இருந்தது, சின்ன சைஸ் சாய்பாஷ என்ற இசைக்கருவி போலவும் இருந்தது, யூகலிகாஸ் என்றபசுபிக் தீவுகளில் வாசிக்கும் கருவி போலவும் இருந்தது, மார்க்கண்டேயன் பொஞ்சாதி குஞ்சுப்பிள்ளை சொன்ன மாதிரி நோட்ஸ் வேறுபடுத்தி அழுத்துவத்துக்கு அதில டைபிரேட்டர் போலவே கீபோர்ட் இணைக்கப்பட்டு இருந்தது, அதனால்தான் அதை டைபிரேட்டர் என்று சொல்லி இருக்கிறா.

                                                             சும்மா தட்டித்தப்பட்டி நோண்டிப் பார்க்க உண்மையில் அந்த இசைக்கருவி வாசிப்பதுக்கு மிகவும் கடினமான ஒரு கருவியாகவே இருந்தது


இந்த சம்பவம் நடந்து சில மாதங்களில் மார்க்கண்டேயன் அதை எங்கே வாசிக்கப் பழகினார் என்று அறிவத்துக்கோ,அந்த இசைக்கருவியின் ஆதியிடம் எதுவென்று அறிவத்துக்கோ, அல்லது அவரிடம் அதை வாசிக்கும் முறையைக் கற்றுக்கொள்ள சந்தர்ப்பமோ கொடுக்காதமாதிரி காலம் அவரை ஒரு நாள் பாட்டில விழுத்தி ,நாக்குச் சழிஞ்சு போக வாய் பேசமுடியாமல் ஸ்ட்ரோக் போல வந்து, நாலே நாலுநாள்தான் தாக்குப்பிடித்தார்.

                                                 அஞ்சாம் நாள் அதிகாலை வீராளியம்மன் கோவில் லவுட்ஸ்பீக்கர்ல இருந்து அபிராமி அந்தாதி சீர்காழி எஸ் கோவிந்தராஜன் குரலில் மிதந்த நேரம் ,

                                             " ஆரடா அவன்,,இப்ப வந்து கொரக்கில போட்டு கழுத்தில பிடிச்சனெண்டா சங்கு அறுத்துப்போட்டுத்தான் விடுவன் ,,ஆரடா அவன் மார்க்கண்டேயன் வீட்டு படலைக்கு முன்னால பதுங்கிக் கொண்டு   நிக்குறது வடுவா ராஸ்கல் "

                   என்று வெருட்டு விட்டு  அனுப்பும் தைரியம் எல்லாம் இறங்கிப்போய், ஜடமாகக் கிடந்தபடி , மார்க்கண்டேயனுக்கே பாசக்கயிறோடு வந்து படலைக்குள் நிண்ட யமனோடு போராட முடியாமல் போய்விட்டது.