Monday, 10 October 2016

ஓவியங்கள் வரையும் கவிதைகள்

வரைந்த ஓவியங்கள்  எப்போதும் கவிதை எழுதுவதுக்கு  நிறைய மறந்துபோன  விசியங்களைக்  கிளறிவிடும். ஓவியங்களே முக்கால்வாசிசிக் கவிதைகள்  மிச்சக் கால்வாசியை கவிதைமொழி  வார்த்தை ஜாலத்தில் சிலாகித்து எழுதுவது எப்பவுமே அலாதியாக  இருக்கும் . அப்படி எழுதிய சில கவிதைகளை ஒன்றாக்கிப் போட்டுள்ளேன்.  இன்னும்  நிறைய அங்காங்கே முகநூல் சுவரில்  இருக்கு. அவற்றையும் இப்படி ஒரு தொகுப்புக்குள் கொண்டுவர வேண்டும். இந்த ஓவியங்களை வரைந்த அருமையான ஓவியர்களுக்கு  எப்போதும் மிகுந்த நன்றியைத்  தெரிவித்துக்கொள்கிறேன் ..



இப்ப நினைக்கும் போதும் 
ஈர நினைவுகள்
பக்குப்பக்கென்று அடிக்குது 
அப்போதெல்லாம்
மெலிஞ்சிமுனையும்
தரவைக்கடலும்
விஷமத்தனமாக
அமைதியாகவிருந்தது

காதல்
உயிரின் கயிற்றில்
முடிச்சுப்போட
காலம் என்னவோ
வேறுமாதிரியிருந்ததென்று
சொன்ன ....... ர்களும்
இப்போது இல்லை

வரலாற்றை
யாரும் எழுதிப்போட்டுப்
போகட்டும்
இன்னொருமுறை
வாழ்ந்து பார்க்க
என்னிடம் உயிர்ப்பு இல்லை

எதுக்காக
எதுவும்சொல்லாமல்
மாடப்புறாபோல
சும்மா லயித்துக்கொண்டிருந்தாய்
நெஞ்சு மட்டும்
விம்மி விம்மியதன்
முடிவிலா அர்த்தம்
ஆயுளுக்கே விஷமடி

ஏதாவது
சொல்லுவேனென்று
பார்த்துக்கொண்டேயிருந்தாய்
சைகைகளில்
சேதியை முடிந்துவிட்டு
அடிமைகள் போலவே
சரணாகதியடைந்தோம்

அதுக்குப்பிறகு
தேவாலயப் போதகர்
பொறுப்பெடுத்த கணத்திலிருந்து
உனக்கு என்னவெல்லாம்
தெரியாதோ
அதுவெல்லாம்
எனக்கும் தெரியாது

உன்
கர்த்தரின்
பிராத்தனைகளில்
கடல் கடந்து
நான் என்னவோ
உயிரோடு இருக்கிறேன்

வீணாய்ப்போன
ஒவ்வொரு நிமிடத்திலும்
கெஞ்சிய
கருவாட்டு வாசமும்
விடத்தல்தீவும்
அன்பேதிருவானவர் கோவிலும்
இன்னொருமுறை
வரவே வராதடி

சரி
நான் இப்போது
ஒஸ்லோவில் இருக்கிறேன்
நீ இப்போது
எங்கே இருக்கிறாய்
அல்லது
உயிரோடுதான்
இருக்கிறாயா ?



உனக்கு
இருட்டுக்கடை
அல்வா பிடிக்குமென்று
வெளிச்சத்திலேயே
வேண்டிவைத்தேன்
மல்லிகைப்பூ
காத்திருந்து பூத்திருந்த
நேரமெல்லாம்
நீ வரவில்லை
அது மழையில் நனைந்த
மாலையும்
உன் முகமில்லை
இப்ப
இரகசிய இரவு
வாசமெல்லாதையும்
அள்ளிக்கொண்டுபோய்
யாரோ ஒருத்தியின்
கூந்தலில்
ஒதுக்கிவைத்த பின்
வந்து நின்று காளிபோல
என்னையும்
மரத்தையும்
உலுப்புகிறாய்
குங்குமப் பொட்டு வைத்து
அதை சிதறவிடும்
கோலங்கள்
எப்படி இருக்குமென்று
நாள் பார்த்த நேரங்கள்
நழுவியே போய்விட்டதடி
மோட்டுக் கழுதை
சரி விடு
நாளைக்கு விடியமுதல்
காதலுக்கும் காலுக்கும்
வெள்ளிச்சலங்கை வேண்டித்தாறேன்


கனவில மழை
" குளிக்கலாம்
வாவேண்டா "என்றது
தூக்கம் தூறலாக
இழுத்துமூடிக்கொண்டு
நனையாமல்ப் படுத்திருந்தேன்

அவளும்
நித்தியகல்யாணி மலர்களின்
வாசத்தைத்
ஈரமாக்கித் தெளித்துக்கொண்டு
குடையைப்பிடித்து
நளினமாக
விலத்திக்கொண்டிருந்தாள்

கால்களை மெல்லத்
தொடக்கிடைத்த
சின்ன இடைவெளி
தூவானங்களின்
கிளுகிளுப்புக்கு
பின்னணி இசை சேர்த்தது

என்னைப்போலவே
அவளுக்கும்
துளிகள்
தொட்டுச்செல்லும்
எல்லா உணர்வுகளும்
உள்ளுக்குள்ளேயே
சில்லென்று இருக்கலாம்

எழும்பிப்பார்க்க
ஜன்னலில் திரண்ட
முத்துக்கள் தவிர
அவளும் இல்லை
குடையும் இல்லை
வாசங்களுமில்லை

மழை மட்டும்
ஈனக்குரலில்
" அணைக்க யாருமில்லையே
என்கனவு
பெருமூச்சுடன் முடிகிறதே " என்று
திட்டிக்கொண்டே
வெளியோடு
பெய்துகொண்டிருக்கு



ஒரு
தேக விருப்பத்தின் 
தேர்ந்தெடுப்பு
இப்படித் தொடங்கலாம்,
பறவைகளின்
ஒருமித்த சிறகடிப்பு,
பூனைக்குட்டியின்
ரோம உரசல்,
ஆற்றின்
மையமான சலசலப்பு,
செவ்வரளிகளின்
மொட்டவிழ்ப்பு,
நீறு பூத்த
பொய்மைத் தணல்,
நாசியில்
வருடும் குங்கிலியம்,
நாணதிரும்
உருத்திர வீணை,
பார்வையிழந்த
தேவையற்ற ரகசியம்,
எரிமலையின்
வெளிச்சுவாச மூச்சு,
பிசுபிசுக்கும்
ஈரலிப்பு வியர்வை,
காதையடைக்கும்
கனதியான கூக்குரல்,
ஜிவ்வென்று பறக்கும்வரை
தேடியதெல்லாம்
அவ்வளவுதான்
அதன் பின்
இரவே கலைந்து கிடக்கும் !

ஒரு
வழிப்போக்கன் போலவே
பார்த்தேன்
யாருக்குத் தெரியும்
உன் பார்வை
என் திமிர் பிடித்த
ஆணவ ஆண்மை எல்லாத்தையும்
நொடிப்பொழுதில்
சரணடைய வைத்து
நொண்டியாக்கி
ஒரு யுகத்துக்கே
ஒருவழிபண்ணிவிட்டுத்தான்
போகுமென்பது
அப்போது தெரியாமல்
இப்போது
வாடி வாடி வாடி வாடி என்று
வசந்தகாலம் வருவதை
தேரோடிச் சொல்லும்
காற்றோடு கெஞ்சுகிறேன்
நீயோ
நேற்றோடு போனவள்தான்
வரவேயில்லை
ஹ்ம்ம்
எங்கேயாவதொரு
நல்ல இடத்தில போய்ச்சேர்ந்து
நல்லாவேயிரு
உன் எல்லாச் சந்தோஷங்களிலும்
அப்போதும்
நானிருப்பேன் உன்னோடு
மறக்காமல்
வளைகாப்பு விருந்துக்கு
எனக்கும்சொல்லிவிடு



நீதான் 
சிரித்திருக்க வேண்டும்
வேறயாருமே
அந்த இடத்தில இல்லை
குறுக்கே
எது வந்தபோதும்
எதிர்பார்க்கவே இல்லை
வெள்ளிப் பாத்திரங்கள்
உருண்ட
சத்தத்தை
இந்த முகத்தில்
இனியொருமுறை
மழை தூவும்
மேகம்
ஒதுங்கிக்கொள்ள
இடமிருந்தால்
சுற்றுவட்டாரத்தில்
எந்தப்
பறவைகளும்
முயல்க்குட்டிகளும்
வணங்கிவிடும்
இதுக்குமேலும்
உனக்கு
என்னடி குறை
கண்ணாடிச்சில்லுகள்
பல்வரிசையில்
பதிக்கபட்டிருக்கும்
ஒரேயொரு
பிரமிப்பில்
படைத்தவனே
லயித்துப்போன நேரம்
சிரிப்பு !


எனக்குத் தெரிந்த
எல்லாவற்றிலும்
என் ரத்தமும் சதையுமாக 
சிலதைத்தான்
நான் சொல்லமுடியும்
மற்றவர்களின்
காலத்தைக்கேட்டும்
கடன்வேண்டமுடியாது

பட்டுத் தாவணி
ஒருநாள் சொல்லாமல்
சைக்கிளிலில் செருகி
அழுக்குப்பிடிக்குமென்ற
ஆதங்கங்கள்
தெருப்புபுளுதியைக் கூட
சரியவிடாமாலிருக்க
யாரோ ஒருத்திக்கு
நான் பிறந்த நாட்டில் காதல் சொன்னேன்

அப்போதெல்லாம்
புரிதலற்ற பார்வைகள்
எங்கள் இருவரையும்
விலத்திப்போய்க்கொண்டு இருந்தாலும்
என் எதிர்கால மனைவி
எப்படியிருப்பாள் என்றதுக்கு
உத்தரவாதமான
உறுதிகள் இருந்ததில்லை

சவுக்காலைகளைத்
தயாராக்கிக்கொண்டு
எனக்கென்று
எதுவுமே இல்லாத போது
வெள்ளையாகவே வந்தாள்
புது மொழியில்இன்னொருத்தி

நான்செய்தபுண்ணியம்
எங்கோவொரு
வட துருவ நாட்டில்
ஏதோவொரு கணிப்பில்
அவள்ஜனித்த போது
இழந்த எல்லாவற்றையும்
வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு
என் அம்மா போலவே பிறந்தாள்
என் மகள்


இரகசியமான 
வேண்டுதல்களின் 
விருப்பப் பட்டியல் 
யாரும் கவனிக்காத 

தேவார 
சன்னதியில்
ஆராதனைகளாகிறது

மஞ்சள்
காத்திருக்கும் நாளின்
குங்குமத்தில்
ஒன்றுசேரும்
சந்தோஷத்துக்காக
இப்போதைக்கு
சந்தனப் பொட்டை
வைத்துக் கொள்கிறாள்

அவனோட
விரத நினைவுகளின்
கைகளைப் பிடித்து
அடியழித்து முடிக்க
சுற்றுப்பிரகாரம்
முழுவதையும்
தியானமாக்கி விடுகிறது
ஊதுபத்தி வாசம்

அர்ச்சனைப்பூக்களின்
நம்பிக்கை
தோல்வியில் மட்டும்
கை வைக்கக்கூடாது
என்பதுவே
இப்போதும் அவளின்
ஒட்டுமொத்தப்
பிராத்தனை

காதலின்
எதிர்பார்ப்புக்கள்
ஒரு நீண்ட
திருவிழாப்பருவக்
கன்னி மனதுக்குள்
வேண்டியபடியே
பிரசாதம் போல
இருந்துவிட்டுப் போகட்டும்
என்று
விட்டுவிடுகிறார்
பிள்ளையார்.




இறுக்கங்கள் 
பலவற்றையும் 
சரி செய்து விடும்
விழாக்கால 

வீதி அலங்கார 
மின்மினி விளக்குகள்
பறப்பதற்கு
சிறகுகளைத் தருகிறது

மனம்
பூக் கூடையைப் போல
லேசாக இருக்க
ஏதாவது ஒரு காரணம்
இருக்க வேண்டுமென்பது
அவசியமில்லாமல்
தெருவின் சத்தங்கள்
தலையை வருடிவிடுகிறது ,

பூசு மஞ்சள்
வர்ணதில் உலாவும்.
மாலைப்பொழுதின்
நேசமான வாசம்
அலைகளைப் போலத்
தொடர்ந்து பரவி
விரல்களைப் பிடித்து
அணைத்துக் கொள்ளுது

அமைதியாக
உள்நோக்கியபடி
மின்னல் போல
வாசலில் காலெடுத்து வைக்கும்
அடி மனதின் ஆசைகள்
மலராகும்
மொட்டின் கோலமாகி
ஏங்க வைக்கும்
சின்னவளுக்கு
உலகமாக இருக்கலாம்
ஜன்னல்.


உன் 
கால்களில் 
ஒட்டியிருந்த 
மணல் மண் 

விருப்பமில்லாமல் தான் 
குளத்து தண்ணியில்
கரைகிறது

முகத்தின்
பின் நிழலை
கலைக்க விரும்பாமல்
அலைகள்
அளவுக்கதிகமான
முன் எச்சரிக்கை
அமைதியில்

சந்தனப் பூக்களின்
இளமை வாசம்
உன் கைகளை
உதறிவிட்டுப்
போகமாட்டோமென்று
அந்தரித்து
அடம்பிடிக்குது

நிகழ்வுகள்
சந்தேகமாக
இறங்கிக்கொண்டிருக்க
சின்னவளோ
ஒரு
கேணியடிப்
படிக்கட்டிலிருந்து
அடுத்த கட்டுக்கு
படிப்படியாக
சந்தோஷமாக
ஏறிக்கொண்டுடிருக்கிறாள்.


இகல் 
இருளாகி விழ 
அறிவுடைமை 
இல் வாழ்க்கையை 

வெளிச்சமாக்கி 
விட்ட இடத்தில
நலம்புனைந்துரைத்த
நன்மைகள்
அறத்துப்பாலாகத்
திரண்டு விடும்

பொருள் செயல் வகை
குறிப்பறிந்து
பிறனில் விழையாமை
தேர்ந்தெடுத்த
குடும்ப
விருந்தோம்பலில்
பொருட்பால்
ஒப்புரவறிந்து
பரிமாறப்பட்டு விடும்

புணர்ச்சி விதும்பிய
தாமரை முகத்தில்
அடக்கமுடைய
அந்தரங்கம்
கடக்க நினைக்காத
வரைவின்மகளிர்
போலவே
இடனறிந்த
காமத்துப்பாலில்
ஒழுக்கமுடமையின்
எல்லைகள் வகுக்கப்படும்

அதிகாரங்கள்
அதிகம் உள்ள
குறளோவியத்தில்
பெண்ணிண்
அன்புடைமையை
மட்டும்தான்
வலியறிந்த
பிறனில் விழையாமையில்
மெய்யுணர்த்தி
வான்சிறப்பாக்கி விடுகிறாள்
வாசுகி.


சேமக்கலமும் 
வெண் சங்கும் 
பொழிந்துவிட்டுப் போன 
மங்கலங்கள் 

திரு விழாக் காலம் 
முழுவதும்
மனமலைந்து
மல்லிகைப்பூ மாலைப்
பார்வை போல
நிறைவாயிருந்தது

அருச்சனைத் தட்டில்
வில்வம் இலைகளோடு
பிரகாரமெங்கும்
விரதமிருந்து தேடிய
தரிசன வேண்டுதல்
சட்டென்று
செங்கழுநீர்த்தொட்டியில்
நிரம்பித் ததும்பியது

அவல் கடலை சுண்டல்
அடி நெரிபட்டு
உள்ளங் கைகளில்
சிதறி வழிந்து வந்ததை
விலகித் தூர நின்றே
ரசித்துச் சுவைத்து
ரகசியமாகச் சிரித்து
பஞ்சாமிர்தம் ஆக்கினாய்...

அபிஷேகங்களில்
அளப்பெரிய
வேண்டுதல்களை
அள்ளிக் கொடுத்த
உற்சவம்
ஏனோ
தேர் முட்டியில்
வடம் இழுத்து இரதம் வந்து
இருப்பாகியதோடு
இல்லாமலே போனது.



மோகம் 
கலந்துரையாடிய 
பாதையெல்லாம் 
வேப்பிலை தோரணம்

மஞ்சளாக 
வானமெங்கும்
தேடியது
இளமை எழுதிய
பங்குனித் திங்கள்

அலகு குத்திய
தீர்த்தக் காவடி
ஞாபகங்கள்
சேர்த்து வைத்த
சித்திரைக்
கோலமெல்லாம்
அதிசயமாக
வைகாசி விசாகம்

தீ மிதிக்க
ஓடிவந்து நின்று
எள்ளெண்ணை
ஊற்றிக்கொண்டே
விசாலமான உலகத்தை
நீ நினைப்பதுபோல
எரிப்பதில்
புரட்டாதிச் சனி

பால் குடம்
புள்ளி புள்ளியாக
தளும்பி
கன்னமெல்லாம்
வழிந்து
சொல்லி வைச்சுக்
கொள்ளை அடிக்குது
ஆடி வெள்ளி.



 
சிம்மினி 
விளக்கின் பின் 
வெளிச்சத்தை விட 
பட்டுச் சேலை

மொட்டு விரிக்கும் 
வாசம் அதிகம்

சில்வண்டுகளுக்குப்
போட்டியாக
மென்மையான
அபஸ்சுரங்களில்
ஏறி மிதிக்குது
மூச்சுச் சத்தம்

அரை இருட்டான
மூலைகளில்
தட்டு முட்டுச்
சாமான்களோடு
முட்டிமோதியது
வியர்வை வாசம்
.
விழிகளில்
வியப்பு ஆரவாரம்
அடங்கியும்
விடியும் வரை
மருதாணிக் கைகள்
தூங்கவில்லை
.
சிரித்து சிரித்துக்
களைத்துப்போன
நிசி நேரத்தில்
ஒவ்வொரு அசைவும்
ஒவ்வொரு கதையும்
நிலவிரிப்பில் வரைபடம்

வளர்ந்து கொண்டே
பெரியவள்கள்
ஒவ்வொருவராகப்
புகுந்த வீடு போக
சின்னவளுக்கு
ஒவ்வொரு இரவிலும்
இந்த அறை
நினைவுகள் தரும்
நேரம்
நின்றுபோக !




மவுனமான 
ஏக்கங்கள் தந்த சென்ற
பார்வையில்
இவளுக்கும் 

அவளுக்கும் 
வேற்றுமைகளை
விடவும்
ஒற்றுமைகள் அதிகமிருந்தது

இவள்
அரபியில் தன்
பாலைவன இதிகாசத்தை
மொழிபெயர்த்தாள்
அவளோ
காட்டில் பிறந்து
கண்வ முனிவரின்
காப்பியத்தில்

பளிங்குமாளிகை
பவளக் கற்களில்
நட்போடு கால்கள் உரசிய
மாடப்புறாக்கள்
இவளின்
எண்ணமாகிச் சிறகடிக்க
அவளோ
சகுந்தலைப் பறவைக்களால்
செறிந்த மரங்களின் நடுவே
வளர்க்கப்பட்டாள்

வாழ்கையின்
சமனின்மைக்கு இடையே
புதையலாகக் கிடைத்து
புதியதாய்த்
தொடக்கி வைத்த
கனவுகளைக் கையில் தந்து
மறந்து போன
ஒரு
துஷியந்தன்
இருவருக்கும்
எப்பவுமே சவாலாக
இருந்திருக்கலாம்.

மறுபடியும் 
சந்திப்பேன் என்ற 
பழைய நான் 
தடயமில்லாமல் போனது பற்றி 

காத்திருக்கும் உனக்கு 
எதுவுமே தெரியாது..

கொஞ்சம் கூட
இரக்கமுமின்றி
எப்படி
நேரம் குறித்துக்
காலத்தால் மட்டும்
இருவரையும்
பிரிக்க முடிந்தது

எந்தவித முன்னறிவுப்புமில்லா
இது வேடிக்கையாகத்
தோன்றும் போதெல்லாம்
இந்த
அவநம்பிக்கையின்
பிடியில் தான்
பாதைகள் வளைந்து
சென்று கொண்டிருக்கிறது

எப்போதுமே
உறுதிப்படுத்தப்பட்ட
முடிவுகளோடு வருகிற
உனக்கு
எதுவும் தெரியக்கூடாதென்றே
நானும்
அப்போது விரும்பினேன் .

கொஞ்சம் கொஞ்சமாக
விடுவித்துக்கொண்டு
என்னை
மாற்றிக்கொள்ளவும்
மோட்டுக் கழுதை
என்னுடைய
உலகம்
உன்னுடையதாகத் தான்
மாறியதடி.







கூடவே பிறந்த 
உறவுகளின் 
சுப முகூர்த நேரம் 
வயதாகிப் பிந்தி 

மாங்கல்யமாக 
நீயுன் தருணத்துக்காக
விட்டுக் கொடுத்துக்
காத்திருந்தாய்

அதிகார மனிதர்களின்
சின்ன எண்ணங்களில்
உன்
முதல் காதல்
பிடுங்கி எறியப்பட்டது
யாருக்கும்தெரியாது

படிகளைத் தாண்ட
ஜோசித்தவளே
பகலில் உன் விதியை
ரகசியமாக வாசித்தவர்களின்
வேண்டுதல்களில்
உன் சுதந்திரம்
கடைசியாக இருந்தது

உன்னைச் சுற்றி
எல்லாமே அம்சமாக அமைய
விடியாத உன்
உன் விருப்பங்களோடு
நீ எங்கேயோ
அங்கேயே
தங்கிவிட்டாய்

அதனாலென்ன
போனாப் போகுதடி
இப்பவும் நினைத்துக்கொள்
உன் திசை
ஒருவனுக்கு
இன் இசையாகி
ஆத்மாவை இன்னும்
உயிர்ப்பித்துக்கொண்டிருக்கலாம்.


மவுனமாகவிருக்க 
எவ்வளவு முறை
முடிகிறதோ
அவ்வளவு தடவை
மல்லிகையைக்  
கோர்த்து கொண்டே 
மாலைக்குள் முடிக்கிறாள்

ஒற்றைச் சரமாலை  
எவ்வளவு
நீளமாகிறதோ 
அது வரை நீண்டு 
மொட்டுக்கள்
கூந்தலோடு 
முத்தமிடுகின்றன 

பூக்களின்  
சுவாசம் உள்ளே
செல்லும்போது
அதனுடன் உள்ளே சென்று 
வெளியே வரும்போது
அதனுடன்
நந்தவனமாகி 
வெளியே வருகிறாள்

ஆண்டாள் மாலைக் 
கனவுகள் 
கல்யாண மாலையாகி 
வருவதற்க்கு முன்
ஒரு கணம்
சுவாசத்தில்
இடைவெளி வரும்

புத்துணர்வு தரக்கூடிய
வேறுபட்ட
குணத்தில் இருக்கும்
நேரம் வரை
சின்னப் புன்சிரிப்பு 
தொடர இந்தக்  கவனித்தல்
புறாக்களால் 
தொடரப்படுகிறது

கனவு 
மாலைகள் 
கை மாறிய பின் 
வாடா மல்லிகையின்  மனதில்
எங்கோ ஆழத்தில்
இங்கிதங்கள் நிரப்ப 
இரவு முழுவதையும் 
தியானமாக்கி விடுகிறது
விரல்களில் 
மொட்டுக்கள்
விட்டுச் சென்ற
வாசம்.


Saturday, 8 October 2016

அனாமிக்காவின் நாட்குறிப்பிலிருந்து..

அனாமிக்காவின் நாட்குறிப்பிலிருந்து...இப்பிடி ஒரு பார்வையில் ஒரு பெண்ணின்தனிமனுஷி வாழ்கையின் வீழ்ச்சியை கவிதைகள்போலவே எழுதத் தொடங்கினேன். " எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி "என்று பெண்களைச் சொல்லும் ஆணாதிக்க சமுதாயப் பின்னணியின் அவலத்தை என்னையும் அறியாமல் எழுதவைத்தது. ஏன் அப்படி எழுத ஒரு உத்வேகம் வந்தது என்றால் அதுக்கு எனக்கு விடை தெரியவில்லை!
                                             காதல் ஒரு கண்ணைக்கட்டிவிட்ட பாதையில் பூக்களின்வாசனையை முகர்ந்துகொண்டே கற்பனையில் மிதந்து பயணிக்கும் ஒருவித ஆக்சிடோசின் ஹோர்மோன்கள் நேரம் தவறிய நேரம் எழுதிய புதுக்கவிதை . அதன் அடுத்தகட்டம் கலியாணம் . அதென்னவோ அவளவு இலகுவாக இருப்பதில்லை. ஒருவேளை சுவாரசியமாக இருந்தாலும் அதை வருடங்களாய் நீடிப்பது ஒரு மன்மத அம்புகளை இடைவிடாமல் எய்தும் கலை.

                                                       அதில் உள்ள வாழ்வினைக் குழப்பமே அனுபவம். ‘அனு’ என்பதற்கு ‘அடுத்த’ என்று பொருள் என்கிறார்கள். ‘பவம்’ என்பதற்கு ‘பிறப்பு’ என்று பொருள். மீண்டும் மீண்டும் பிறக்கவேண்டும், புதிதுபுதிதாய் பெற வேண்டும் எனும் தூண்டுதலை உடையது ‘ இந்த அனுபவம்’. முற்றுப் பெறாதது. வாழ்வின் மீதான ருசி நிறைவை ஏற்படுத்துமாயின் அது அனுபவமல்ல அது ‘அனுபூதி’. என்கிறார்கள் அதயும் விரட்டிவிட முடியாது.
                                              
                                                         அனாமிக்காவின் நாட்குறிப்பிலிருந்து. தனித்த மனுஷியாக வாழும் ஒரு பெண்ணின் தோற்றுப்போன காதல் பற்றியது. அதில எல்லாப்பெண்களும் ஏதோவொருகட்டத்தில் தங்களை ஏதோவொரு சம்பவத்தில் இணைத்துக்கொண்டு மறுபரிசீலனை செய்யும் சாத்தியங்களைச் சொல்லும் கவிதைகள்.இப்போதைக்குக் கவிதைகள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
                                               
                                                       இதெல்லாம் ஒரு பெண்களின் உரிமை பற்றி வாய்கிழியக் கத்தும் பெண் கவிதாயினிகள் எழுதவேண்டிய மனக்குமுறல். நான் சும்மா பரிசோதனை முயற்சியாக " அரைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி ஆயிரம் பொன்னை அரை க்காசு ஆக்குகிறவளும் பெண்சாதி " என்று பெண்களை மட்டம் தட்டும்  சமுதாயத்தில் இருந்துகொண்டு பெண்கள்  புத்திசாலிகள் என்ற  கொன்செப்டில்  எழுதுகிறேன்.
                                                      
                                                    சிலநேரம் உப்பில்லாத சாம்பாருபோல இருக்கலாம். என்னோட எழுத்துமொழி வீச்சு இவளவுதான். உங்களுக்குப் பிடித்து இருந்தால் கருத்து சொல்லுங்க. இல்லாவிட்டால் கடந்துபோங்க. யாரையும் இழுத்துப் பிடித்தி இருத்தி வைத்து ரத்தவாந்தி எடுக்க வைக்கும் நோக்கத்தில் இவைகளை எழுதவில்லை.!

.
வலுவிழந்து 
கொண்டிருக்கின்றது
இரவு பூத்த நிலவு, 
பொறுமையோடு காத்திருக்கு
பொலிவான வானம், 
நீறு பூத்த மனது
விழுந்துவிடவில்லை,
சூடேற்றிக்கொண்டிருக்கு
குளிர்ந்த நிலம் ,
நீங்காத நேயத்திலும்
தத்துவம் சொல்வேன்,
உனக்கே உனக்காக
பரிவுணர்வுதான்
என் பிரதானமான
உள்ளுணர்வு,
நெளிவுசுளிவுகளோடு
ஓடிக்கொண்டிருக்கு

ஒரு தனி மனுஷியின்
வற்றாத ஜீவநதியின் 

நீரலைகள்  என் நாட்குறிப்பு !
.
.............................................................................. 001 

.

இரக்கமிக்கவன் என்பதும்
விட்டுக்கொடுத்துப் போகும்
வழிகளில் வாழக்கூடியவன் என்பதும்
எவளவு பெரிய பொய்
மாறாக
நீ
சுயநலமானவன்.
அப்படித்தான்
நீயே உனக்காக
பரிணாமத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற
மூளையும் அதற்கேற்ப
மாற்றி அமைந்திருக்கிறாய்,
அளப்பரிய பலம் பற்றிய
ஆய்வு முடிவுகள்
கருத்துக்களையெல்லாம்
தனி மனுஷியாக
விழுங்கவேண்டிய அவசியமெல்லாம்
எனக்கில்லை,
நீயொரு
வினோத விலங்கென்று
நீயேதான் நிரூபிக்கிறாய்.
.
...........................................................................002 

.

உன்
மனப்பான்மையே
இப்போதுமென்
எண்ணங்களை வடிவமைக்கிறது,
என்னில் குதித்து 
எனக்குள் ஆழம்காண
நான் ஒன்றும் ஞானி அல்ல
மிகச்சாதாரண மனுஷி,
நதியைப் பார்கிறேன்
தவறிய இலைகள்
தப்பமுடியாத தழைகளைகள்
இழுத்து ஓடும் வேகம்
கரையில் கைகட்டி நின்று
நீ
வேடிக்கை பார்க்கிறாய்
பின்னர்
நீரலைகளின் துள்ளோட்டத்தை
ரசானுபவக் கண்களோடு
கவிதை படைப்பாய்
நதியின் பிரவாகத்தைக்
என்னையே
விழுங்கப்போகிற அரக்கனாய்த்தான்
நான்அச்சமடைகிறேன் .
.
................................................................. 003

.

நாளைய நாளுக்கு
நாலு வாரம்முன்னே
திட்டுமிடுபவள் நான்
நீயோ
இன்று விடிந்ததே
இப்பவரை தெரியாதவன்,
பிறகு எதுக்குக்காக
இலையுதிர்காலம் பற்றிக்
குறை சொல்கிறாய் ?
ஒரு
தனிமனுஷியின் வைராக்கியத்தை
பணயம் வைத்து
காம்பு பழுத்த
மஞ்சள் இலையின் விழுதலோடு
நானும்
புறப்பட்டுப்போகும் திட்டத்தை
சென்ற வருடக் கோடையில்
முடிவுசெய்தேன்.
நீ
இதை வாசித்துச் சிரிப்பாய் !
நல்லாவே சிரித்துகொண்டிரு !
ஒன்றுசொல்கிறேன்
ஏற்கனவே
பேசிமுடித்து ஒப்பந்தமாகியபடியே
வேர்களுக்கு
உரமாகத்தான் அதிலும் போகிறேன்.
.
................................................................ 004

.

நீ
திருந்தி வந்துவிடுவாய்
என்பதில் நம்பியே
தளராத நம்பிக்கையில்
நம்பிக் கையை வைத்தேன்,
உனக்கு
யாத்திராவும்
மாயாவும்
கந்தர்வனும்
இரவிரவா இங்கிதம் செய்வதும்
நல்லாவே தெரியும்,
அது முற்றுப் பெறாத
படுக்கையறையில்
இச்சைகளைச் சுற்றிவைத்து
வாழ்வின் மீதேறி
ருசியைத் தூண்டுவதும் உண்மை,
அப்படியில்லாமல்
நிறைவை ஏற்படுத்துமாயின்
அது அனுபவமல்ல
விரட்ட முடியாத குற்றவுணர்வு,
அதை
தைரியமாய் எதிர்கொண்டால்
ஏணிப்படிகளாய் உன்னைச் செதுக்கும்
உளிகளாய் அமையுமென்று
தனித்த மனுஷியாய்
சொல்லியே அலுத்துப்போனேன்,
நீ
இப்பவும் என்னைக்
கடைநிலையில்
வாசல்படியாகவே வைத்திருக்கிறாய்.!
.
................................................................ 005

.

ஒன்பது மாதங்கள்
நீ
ஓடிப்போய்ஒதுங்கி நின்று
ஒழித்துக்கொண்டிருந்தாய்,
வாயும்வயிறுமா
வாந்தியை வாய்வரை எடுத்தே
தனி மனுஷியாக வாழ்ந்தேன்,
அம்மா வீட்டிலேயே
பன்னீர்க்குடம் உடைந்து
பாடை ஏறுவதுபோலவே ஏற்றி
அழுக்கான பிரசவவாங்கில்
கடைசி நிமிடம்
எங்கள்
மகள் பிறந்தாள்!
நான் தப்பிவிட்டேன்
ஆண்டவனுக்கு நன்றி
அவளும் தப்பியேவிட்டாள்!
நேற்று நீவந்து
உன் உயிரை மறுபதிவுசெய்த
எங்கள் மகள்
யாருக்குப் பிறந்தாள் என்று
இரத்தமரபணுப்பரிசோதனை
செய்தேபார்க்கவேண்டும் என்கிறாய்!
உனக்கு எதுக்கு
இல்லாத பிள்ளைக்கு வீண் செலவு?
அதைக் கேட்டபோது
அந்த ஆசுப்பத்திரியில்
நானும்
உன்மகளும்
செத்தேபோனோம்
இப்ப சந்தோஷம் தானே உனக்கு.?
.
................................................... 006

.

சந்தோஷங்களில்
சந்தேகத்தை வேண்டுமென்றே
உள்நுழைத்து
வானவேடிக்கையாக்கிப் பார்த்ததே
நீதான்,
எனக்குதான்
உன்னைத்தவிர
எல்லாமனிதர்களும்
அன்பின்வடிவாகவேயிருந்தார்கள்,
அதிகாலை அலாரத்தோடு
மணியடித்த பால்க்காரன்,
மொட்டைமாடியில்
உடட்பயிட்சி செய்த பக்கவீட்டுக்காரன்,
அம்மி பொழியவந்த
சின்னதான நோஞ்சல்ப் பையன்,
ஐயப்ப சாமி கோவிலில்
அப்பாவின் வயது ஐயர்,
மின்சார இணைப்ச் சீராக்கிச்
சரிசெய்தவந்த வயதான ஐயா,
கொஞ்சம் தாமதித்த
தபால்க்காரன்,
நீதான்
யாரையுமே விட்டுவைக்கவில்லையே!
நீ
எல்லாரையும் திட்டிக்கொண்டு
போயேபோய் விட்டது சந்தோஷம் !
இப்போதுதான்
தனித்த மனுஷியாக
எல்லா ஜன்னல்களையும்
வாசல்க் கதவுகளையும்
அகலத் திறந்து வைத்திருக்கிறேன்
காற்று
சுதந்திரமாக வந்து போய்க்கொண்டிருக்கு!
.
....................................................................... 007

.

விட்டில்ப் பூச்சிகளும்
சிம்மினி விளக்கும் போலத்தானே
வாழ்ந்துகிழித்தோம்
உன்
வெளிச்சத்தில் 
விழுந்துகொண்டிருக்க
ஆசைப்பட்டதெல்லாம்
உனக்குப் புரியவேயில்லை
நெருக்கத்தையும்
இறுக்கி மறுதலித்து
விலத்திவிலத்தியேயிருந்து
ஒரு நாள்அந்தத்
தற்பெருமை வட்டத்தை
நீ
ஒரு முடிவோடு கடந்த போது
நானும் வெளியேறிவிடுவேன்
என்றெல்லாம்கூட
நினைத்திருப்பாய்,
தைரியமானவைகளையே தேர்வுசெய்த
தனிமனுஷியாக
அந்த விளிம்புகளைத்தன்னும்
எழுந்து சென்று
நான்
இதுவரையில் விசாரித்ததேயில்லை!
உன்
பொய்த்துப்போன முகமூடிகளை
அரங்கத்தைவிட்டு வெளியேறி
இனியாவது கழட்டிவிடு
அவையுனக்குப் பொருந்தவேயில்லை !
நானோ
மிகமிக வைராக்கியமாக
இப்பவும்
சோடனைகள் எதுவுமின்றி
மேடையின் நடுவில்தான் நிக்கிறேன்!
.
.......................................................................... 008


.
நீயும்
ஓரளவுக்காவது
ஒத்தாசையாக இருப்பாய்
அபத்த சூழ்நிலைகளில்
என்னை விட்டுக்கொடுக்கமாட்டாய்
சமதர்மமாயிருப்பாய்
அப்படிதான்
காதலித்தபோது அனுமானமிருந்தது,
முதன் முதலாக
உன்
அம்மா வந்தபோது
சேலைத்தலைப்பை பிடித்து
நீயோ
அடியோடு மாறிவிட்டாய்,
விரிவாகச்
சொல்லிகொடுத்த
ஏதேதோ வார்த்தைகளை
அகாலவேளைகளில்
பிரயோகிக்கத்தொடங்கினாய்,
உனக்குத்
திடீர் என்று சீதனம்
ஆண் சிங்கமென்பதால்
கவுரவம் ஆகிவிட்டது,
உன் சாதி வேறு
சொல்லிக்காட்டத் தொடங்கிய போது
மேலெழுந்துவிட்டது.
எனக்குச் சமயமில்லை
கடவுள் எல்லாம் ஒன்றுதான்
உனக்கோ உன் ஆகமம்
ஒரு இரவோடு சதிராடத்தொடங்கியது,
நல்லாவேதெரியும்
உன்
அம்மா வந்தபிறகுதான்
நீ
இப்பிடி ஆவேசமாய் அதிகாரமானாய்
இதுக்குப்பிறகும்
நமக்கிடையில் எப்படி
அன்றில்ப்  பறவைகளின்
அன்பிருக்க முடியும்?
.
.......................................................................... 009

.
கொண்டாடும்போதே
நான்
என்னை இழந்துவிட்டேன்
நீயோ
எங்கள் காதலை

மறைக்கச் சொன்னாய்
என்ன காரணம் ?
நீயாக
இதுவரை சொன்னதேயில்லை !
உன் சிரிப்பில் மயங்கி
என்னையே கொடுத்தேன்
அப்பவும் நீ
தயங்கியே தள்ளிப்போட்டாய்
துணிந்து ஒருநாள்
என் வீட்டில் சொல்லியேவிட்டேன்!
கதைத்துமுடிக்க
அப்பாவே வரச்சொல்லி அழைத்தபோது
நீயும்தான்
ஸ்ரீராமன் போலவந்தாய்
உன் முகத்தைப்பார்த்துகொண்டே
நான்
எங்கெல்லாமோ பறந்துகொண்டிருந்தேன்,
உன்
கன்ன வழுவழுப்பை கவனிக்க
உன்மனது
என்னவெல்லாத்தையுமோ
எடைபோட்டுக்கொண்டிருந்தது,
நீ எப்படியோ
பழைய வீட்டின் பெறுமதிபார்த்தாய்,
அள்ளிப்போடும்
பவுணின் சாத்தியங்களையும்
தவறாமல்க் கணக்கிட்டாய்,
என்
அக்கா தங்கச்சியின்
சொத்துப் பகிர்வுகளில் குறியாகவிருந்தாய்,
அப்பவும்
வாழ்ந்தேவிடவேண்டுமென்ற
காதல்தான் கண்ணை மறைத்தது.
ஒரு தனிமனுஷியாக
இப்பவும் ஒத்துக்கொள்கிறேன்
அந்தஇடத்தில்தான்
என்
மிகப்பெரிய தோல்வியில்
என்னையும் தொலைத்தேன்.

.
....................................................................... 010


உன்
மதுப்பழக்கம்
மிகப்பெரிய பிரைச்சினையாக
உனக்குத்தான் இருந்தது
எனக்கல்ல
உன்னைத் திருத்திஎடுக்கவே
கேள்விகளில் எதற்க்காகக்
குடித்துக்கொண்டேயிருந்தாய் என்றேன்
அது
உனக்குமே புரியவில்லை
விவரமாக விவாதித்த போது
மிக இலகுவாக
பிடிக்காத பழியை மட்டும்
என்மேலே வீசுவதில்
ஒரு இரவுகூட விடிந்ததில்லை
எத்தனைநாள்
வேண்டுமென்றே
என் புத்தகங்களின் மேல்
காரித்துப்பி
கிழித்து எறிந்தாய்
எத்தனை மாலைப்பொழுதில்
வீடு முழுவதும்
மூத்திரம் பெய்தாய்
அன்பின் மிகுதியால்
அதையும் கழுவித்துடைத்தேன்
ஒரு தனிமனுஷியாக
இப்போதெல்லாம்
வீடெல்லாம் சுத்தமாக இருக்கு
வசவுகள் இல்லாத
அதன் வாசனைகளில்
இரவெல்லாம்
மல்லிகைப் பூக்கள் விரிகிறது
நீ
இப்பவும் வேறொங்கோ குடித்துக்கொண்டிருப்பாய்
இப்போதுதான் உன்னைக்
கேள்விக் கேட்ட யாருமேயில்லை
அது
எனக்கும்தான் வேதைனையாக இருக்கு.!
.
......................................................................... 011


யாரோவோருதியின் பெயரை
இரவெல்லாம்
விடாமல்ப் பிசத்தினாய்
யாரவள் என்று நான்கேட்டதேயில்லை
நீயாக
அவளைத் தேவதைபோல
என்னோடு ஒப்பீடுசெய்து
விவரணம் கொடுத்து விவரித்ததாய்
அவள் கன்னம்களைக்
காஸ்மீர் அப்பிள் என்றாய்
அவள் நிறத்தை
வெள்ளை முயல் என்றாய்
அவள் சிரிப்பைப்
பால்ப் பாயாசம் என்றாய்
அவள் நடையை
அன்னப்பறவை என்றாய்
இன்னும் என்னமெல்லாமோ
உடல் மொழியாக்கி அபிநயித்து
விபரமாய் சொன்னாய்
அவள் அழகானவள்
என்பதில்
எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை
ஆனால்
அவள் இப்போது
என்னைவிட அன்பானவள் என்றாய்பார்
அதில்த்தான்
முதல்ப் பிளவு விழுந்தது
ஒருதனி மனுஷியின் சபதம்
உன்னோட அந்த வார்த்தை
ஒருநாள் உன்னைப் பலிவேண்டும்
அந்தக் கணத்தில்
நினைவெடுத்து நிட்சயமாகவே
நீ என்னைநினைப்பாய்
அப்போது
எல்லாமே முடிந்துபோயிருக்கும்
.
................................................................... 012


நவராத்திரி
அணையா விளக்குகள்
எரிந்துகொண்டிருக்கு
அவைகளின்
திரிகள் கருகும் வாசம் வருகுது
நான்
எதற்க்காக இன்னொரு ஒளிநடனத்தில்
உன்
அன்பானவார்த்தைகள்
எதிரொலிக்குமென்று
காத்திருக்கிறேன்
எந்த மொழிக்கும்
நிழலிலத் தன்னும்
நெருங்காதவன்
நீதான்
என்னிடம் இப்போதும் எப்போதும்
இனியும் புயல்களுக்கு
முகம் கொடுக்கும் தைரியம்
இல்லவேஇல்லை
என்னிடம்
இந்தச் சாமி அறையிலிருந்து
உனக்கும்
எனக்குமான காதலைத்தான்
துடைத்துஎறியவேமுடியவில்லை
என்
கதறல்களுக்கு சத்தமில்லை
இதயமேஇறுக்கிப் பூட்டிவிட்டது
விதம்விதமான
சாம்பிராணி வாசனைகளில்
நீ
எப்பவும் என்னோட இருகிறாய்
அதை முகர்ந்துகொண்டு
காற்று பாதை தவறவிட்ட
வெற்றிடத்தில்
வாழ்ந்துவிடுவேன்.
.
....................................................................... 013


.

Friday, 7 October 2016

பெரிய மாமா ...ரெண்டாவது பாகம்

 பல நேரங்களில் சொல்லிமாளாத  கதை போலத்தான் வாழ்கையும், அல்லது  வாழ்க்கையும் ஒரு கதைதான். என்ன முடிவில்லாத தொடர்கதை. பெரிய மாமா எப்படி அவரோட  மட்டக்களப்பில்  இருந்த  சின்னவீடு  பித்தளைக்குடத்தை  யாழ்பாணத்தில் இருந்த வீட்டுக்குள் கொண்டுவர வேண்டிய ஒரு நிர்பந்தத்தை விதி ஏற்படுத்தியதோ  அதேபோல அந்தப் பெண்மணியை வெளியேற்றி அனுப்பியதிலும் விதிக்கு நிறையவே பங்களிப்பு இருக்கு.   
                                             
                                                         பல  குளறுபடிகள் நடந்துகொண்டிருக்கும்  என்ற எச்சரிக்கையில் ஒரு கிழமைக்கு  பெரிய மாமா வீட்டுப் பக்கம் போறதில்லை  என்ற முடிவோடு இருந்தேன் . ஆனால் நிலைமை கொஞ்சம் அளக்கிற நாழிக்கு  அகவிலை அறியுமா? போல எசகுபிசகாகி பெரிய ராசன்  அண்ணை  ஜெர்மனியில் இருந்து வந்த  நாலாவது  நாள்  பெரிய மாமி  செத்துப்போனா . அன்றைக்கு  காலையில்  பெரிய மாமா உடனடியா வரச்சொல்லித்  தகவல் அனுப்பி  இருந்தார் . 

                                                           அந்த  மாதம் முழுவதும்  மழை வேறு அடிச்சி  ஊதிக்கொண்டிருந்தது. திருக்காத்திகை  விளக்கீடு  வருவத்துகு ரெண்டுநாள் இருந்த நேரம் பெரிய மாமி செத்துப்போனா. அது கிட்டடியில் நடக்கும்  என்று  எனக்கும் தெரியும், ஏனென்றால்  மாமி  இனி பழைய நிலைக்கு வரும் சாத்தியங்கள் எல்லாமே கைவிட்டுப் போயிருந்தது. நல்ல  சாவு  நல்ல நேரத்தில் வந்த மாதிரித்தான் இருந்தது .

                                            யாழ் ஒல்லாந்தர்  கோட்டையில்  இருந்து ராணுவம் டெலிகொமினிகேசன் பக்கமாக  வெளியேற முய்ட்சிப்பதுக்கு சப்போட்டாக மண்டைதீவு மினி முகாமில் இருந்து செல் அடி  நடந்தது. கொட்டடிப் பக்கமாக ராணுவத்தை வழிமறித்து முன்னேற விடாமல் இடை மறிப்பு சண்டையில் மாறி மாறி ரெண்டு பக்கமும் சனங்கள் பாஞ்சுகொண்டிருக்க ,ஒரு பெல் ரக ஹெலிகாப்டர் குருநகர் பக்கமாக பிப்டி கலிபர்ரேசர் ரவுன்ஸ் அடிச்சுக்கொண்டிருந்தது. 

                                                   நான்  போன நேரம்  மாமியை ஒரு பழைய மரவாங்கில கிடத்தி , கால்ப் பெருவிரல் ரெண்டையும் சீலம்பாய் துணியால ஒன்றாகக் கட்டி, கை ரெண்டையும் உள்ளங்கையில் ஒன்றாக்கி விரல்களைக் கோர்த்து , ரெண்டு  மூக்கிலயும்   பஞ்சு அடைஞ்சு     கண்களை இறுக்க மூட வைச்சு , தலைமாட்டில குத்துவிளக்குக் கொழுத்தி வைச்சு இருந்தார்கள். நிறைய  இலையான்கள் பறந்ததால் அருகில் ஒரு டேபிள்பேன்  வைச்சு ஓடவிட்டிருந்தார்கள் 

                                                    மாமியின் முகத்தில  ஒருவிதமான நின்மதியாகப் போய்ச் சேர்ந்த ஆசுவாசம்  இருந்தது. இதுக்கு மேலயும் கிடந்தது படுத்த படுக்கையாக உத்தரிப்பதில் இருந்து விட்டு விடுதலையான களை வெளிறிய முகத்தில்  தெரிந்தது.   மாமியின் வலது மூக்கில்  போட்டிருந்த வைரமூக்குத்தி  அவா உசிரோடு  இருந்த காலத்தில்  அதிகம் கவனிப்புப் பெறவில்லை . அது   இப்பதான் அடிவானில் எழும்  பிரகாச வடதுருவ  விடிவெள்ளி போல  ஜொலிப்பது போலிருந்தது .

                                        எங்கள்  ஊரில்  செத்த வீடு என்றால் பலவிதமான கதவழிகளில் பிரிந்து இருப்பவர்களும் ஒன்றாகி விடுவார்கள் .  பக்கத்து வீடு அயல்லட்டையில்  உள்ள சில நடுத்தர வயதுப் பெண்கள் ஹோலில் இருந்தார்கள். புண்ணியக் குஞ்சி  வெளிய ஈரப்பிலாக்கை மரத்துக்குக்  கீழே  சுருடுக் குடிச்சுக்கொண்டு இருந்தார். அவருக்கு முன்னால  நிலத்தில  சிங்கி மாஸ்டர் வெத்திலை   பொட்டுக்கொண்டிருந்தார். நான்  பெட்டிசம் பாலசிங்கமும்  நிக்கிறாரா  என்று தேடினேன், பெட்டிசம்  சிலமன் அதுக்குள்ளே  இல்லை . 

                                                   பெரிய மாமா வெளி விறாந்தையில்  கையைப்  பிசைந்துகொண்டு இருந்தார். சிவாயி கணேசன்  பழைய படங்களில்  சில நேரம் அழுவது  சிரிப்பது போலிருக்குமே  அதேபோல   அவர் அழுகிறாரா  அல்லது  சிரிக்கிறார , அல்லது  சிரிக்க  நினைத்து அழுகிறார, அல்லது  புரியமுடியாத ஒரு மோனோலிசா முகமா  என்று சொல்லமுடியாத ஒரு அஷ்டகோணத்தில் முகத்தை வைச்சுக்கொண்டு இருந்தார். ஆனால் அவர் முகத்தில் ஒரு  பேச்சுக்குத்தன்னும்  சோகம் அவளவாக இல்லை. 

                                    கொஞ்சம்  பொறு வாறன்   உ ன்னோட கதைக்க நிறைய விசியம் இருக்கு என்பதுபோல   என்னைப் பார்த்தார். அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும் என்பதுபோல  அவரைப்  பார்த்தேன் .  ஒன்று மட்டும்தெ ரிந்தது   அவர் செத்தவீடு ஒரு எழுப்பம் எழுப்பிச் செய்யப்போறார்  என்று  பிளான் போடுறார் போல இருக்கு என்று நினைச்சேன். நினைச்சேன் என்ன அதுதான் நடந்தது. அதுக்குத்தான் பிளான் போட்டுக்கொண்டிருந்தார் 

                                          நான்  பெரிய ராசன் அண்ணை  எப்படி  இப்ப இருக்கிறார் என்று பதினைந்து  வருடங்களின்  முன்  பார்த்த அவரைத் தேடினேன். ஜெர்மனியில்  இருந்து வந்திருக்கிறார், வெளிநாட்டு வெள்ளைக்காரன் போல நடை உடை பாவனை வெள்ளையாக  மாறி இருக்கும் என்று நினைச்சேன் .அவரோ வன்னியில உடையார்கட்டில   காடு வெட்டி  மிளகாய்த் தோட்டம் செய்துப்போட்டு வந்தவர் மாதிரி எந்த மாற்றமுமே இல்லாமல்  எங்கள் உள்ளூர் வாசிகள் போலவே இருந்தார் .

                                        இந்தக்  கதையின்  காப்பியாநாயகி பித்தளைக்குடம் என்ன செய்யுறா  என்று பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்ததால் அவாவைத் தேடினேன்.  பித்தளைக் குடம் எங்கே என்று அங்கே  யாரையும்  உத்தியோகபூர்வமாகக்   கேட்க முடியாது. ஏனென்றால் அநதப் பெண்மணி எப்படி அந்த வீட்டுக்குளே வந்து  உரிமையோடு சாவிக் கொத்தைக் கையில எடுத்தா, அல்லது பெரியமாமா எடுக்க இடம் கொடுத்தார் என்பது இரகசியமான ஒரு கதை. எனக்குதான் அது தெரியும். அதைதானே முதலாம் பாகத்தில் எழுதினேன். 

                                            பெரியமாமா  அவரோட  பெரிய குசினியின்  பின் பக்கத்தை அஸ்வேட்டஸ்  தகரக்  கூரை  போட்டு பின் பக்கமாக பத்திபோல இறக்கி வைத்து இருந்தார். சீமெந்து நிலம் இழுத்த அந்த இடத்தில்தான் கல்  உரல் வைச்சு மா இடிகிறது. இழுவை  அம்மியில் சம்பல் அரைக்கிறது. தோசைக்கு ஆட்டுக்கல்லில் உழுந்து ஆட்டுவது . தட்டு முட்டு சமையல் பாத்திரங்கள் அடுக்கி வைப்பது இதுக்குதான் அந்த இடம் பயன்பட்டுக்கொண்டிருந்தது. 

                                           பித்தளைக் குடம் கல் உரலைப்  பாட்டில விழுத்திப்போட்டு  அதில தனியக்  குந்தி இருந்தா. வாய் நிறைய வெற்றிலை போட்டிருந்தா. கொஞ்சம் இளைச்சுப் போனமாதிரி இருந்தது. மன உளைச்சல் நெற்றியில நிறைய சுருக்கம் விழுத்திக் கொண்டிருந்தது .  என்னைக் கண்டதும் வாய்விட்டுக் கதைக்க நிறைய விசியம் இருக்கிற மாதிரி கதைக்க ஆசைப்பட்ட, எனக்கும் வாயைக் கிண்டி கதை புடுங்கத்தான் விருப்பமா இருந்தது. அதுக்கு அந்த தனிமையான இடம்  

                                        " எங்க  ஓடி  ஒளிஞ்சு  போட்டீர், உம்மட கொண்ணை வந்ததை பார்க்க வருவீர் எண்டு  நினைச்சேன் ,,இப்ப பாடை தூக்க வந்து நிக்கிறீர் "

                              "   ஹ்ம்ம்,,, வேற  சோலி  சுரட்டு  அதில  ஓடுப்பட்டுத்    திரிஞ்சேன் "

                                    "   சும்மா அவிக்காதையும்,  இங்க வந்தா அவுகளுக்கும்  இவகளுக்கும் அப்பன்  சொத்தில  சண்டை நடக்கும்  எண்டு போல இங்கால வரேல்லப்போல "

                                 "   அப்படி  இல்லை,,என்ன  சண்டை "

                               "    என்ன சண்டையோ ,,ஹ்ம்ம்,,உம்மட  மாமா சரியான சருகுப்பு புலி போல சாமர்த்தியமான   புத்திசாலி "

                                   "   அதெண்டா உண்மைதான்  என்ன  செய்தார்  சொல்லுங்கோ "

                                "   உம்மட கொன்னார் வந்த கையோடு  என்னை இங்காலே  தள்ளி,,சமையல்காரி என்று சொல்லி, ஒரு மாதிரி  பூசி மழுப்பி  அலுவலைப் பார்த்திட்டார் "

                                  "   நீங்க  சமையல்காரி,,சமையல்  வேலைக்குதானே  இங்கே கொண்டு வந்ததா  எனக்கும்  சொன்னாரே "

                                     "     அடி  செருப்பால,,வாற  ஆத்திரத்துக்கு உலக்கையால  இப்ப நடு வீட்டில  வைச்சு  சாத்துவன் உம்மட பெரிய மாமாவுக்கு "

                               " ஹ்ம்ம்,,எனக்கு  ஒன்றுமே  புரியவில்லை "

                        "  எடுபிடி தொட்டாட்டு வேலைக்கு வந்தவள் எண்டு சொல்லிப்போடுதே  இந்த மனுஷன்,,எனக்கு  இரவு முழுக்க  அழுகையா வந்தது "

                         "    ஹ்ம்ம்,,,அவர்  அப்படிதானே "

                      "  எடுபட்டு  வந்த  சமயல்காரியாம்..அதுவும்  நான்  அவருக்கு "

                              " நீங்க  முழுவதும்  சொல்லுங்க,,இப்பிடி  கழுவுற மீனில  நழுவுற மீன்  மாதிரி  கதையளை   சொன்னா  என்னக்கு  என்ன  விளங்கும்  "  

                                 "  அடிடா  சக்கை  எண்டானாம்,கழுவுற மீனில  நழுவுற மீன்  மாதிரி  ,,,அய்யோ  மாமாங்கப் பிள்ளையாரே பாரு  இந்தக்  கதையை  ,  "   

                              "  ஹ்ம்ம்,,இப்ப  என்னத்துக்கு  கோவிகுரிங்க..அதுவும்  உள்ளே பிரேதம் விழுந்து கிடக்குது  இல்லையோ "

                             "   ஓம்,,அதுதான்  பேசாமல் அடக்கிக்கொண்டு  இருக்கிறேன் "

                            "  மாமா  என்ன   சொன்னார் "

                                 "  நடிக்கட்டாம்,,கொஞ்சநாள்  நடிக்கட்டாம்,,உம்மட கொண்னர்  திரும்பி வெளிநாடு  போகும்வரை  சமையல்காரி  போல  நடிக்கட்டாம் ,,எப்படி  இருக்கு  கதை  பார்த்தீரோ "

                              "  ஹ்ம்ம்ம்,,,இதென்ன  நாடகம்  ,,,இதென்ன  நடிப்பு  என்று  ஒன்றுமே விளங்குதில்லை "

                              "   அதுதான்  எனக்கும்  மட்டுப்பிடிக்க முடியவில்லை,,,இந்த வடமோடித்  தென்மோடிக்  கூத்துக்குள்ள  உம்மட  மாமி வேற செத்துப்போன "

                              "  மாமி  தப்பமாட்டா  என்று  தெரியும்  எனக்கு "

                            "  பார்ப்பமன்  இனி  உம்மட  மாமா  என்ன  செய்யுறார்  எண்டு,,இனியும் கரட்டி  ஓணான்  வெருட்டின  மாதிரிக்   குரளி வித்தை காட்டினால் ,,நான் விடமாட்டேன்,,நான்  ஆர்  எண்டு  காடுவேன்..நானும்  ரோசம் மாணம்  உள்ள  அப்பன்  ஆத்தைக்குத்தான்  பிறந்தனான் "

                        "  அய்யோ  சாமி,,முதல்  செத்த வீடு முடியட்டும்,,கொஞ்சம்  பொறுமையா  இருங்கோ ,,"

                           "  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்   அதுதான்  நானும்  விட்டுப் பிடிச்சுக்கொண்டிருக்கேறேன் ,,இல்லாட்டி வந்த  அண்டைக்கு  கொன்னருக்கு என்னை வீட்டு வேலைக்கு வந்த சமையல்காரி  என்று சொல்லிவைச்ச நேரமே  சண்டையைக்  கெம்பி எடுத்திருப்பேன் "

                               "  ஹ்ம்ம் ,,பொறுங்கோ  நான்  பெரிய மாமா என்னவோ  செய்ய வேணும் எண்டு சொன்னார்,,பிறகு  கதைகுறேன்  உங்களோடு "

                     "  ஹ்ம்ம்,,,என்னோட கதைச்சுப்போட்டு  அங்கலா போய் மருகா மருகா  பிரட்டிப்  பேசுறேள்ள  ,,சரி  தானே ,,பிறகு  எனக்கு  விசர்  வரும் "

                                     "    அதொண்டும் நடக்காது,,சும்மா  இருங்கோ "

                             "  அதையும்  தான் நான் இனிப்   பார்க்கப் போறனே,,இனியும்  உம்மட மாமாவின் இந்த சீனடி சிலம்படி விளையாட்டு  என்னட்ட எடுபடாது ,,தெரியுமா "

                                 "  என்னவோ  நடத்துங்கோ,,ஆனால் ஒரு கேள்வி கேட்கிறேன்  அதுக்கு  பதில்  சொல்ல முடியுமா "

                                " கேளுமேன்,,நீர்  ஒருவர் தானே  என்னட்ட கேள்வி கேட்கிறதும்,,நான் அதுக்குப்  பதில்  சொல்லுறதும்  நடக்குது,,இங்க வேற யாருக்கும் ஒளிச்சு மறைச்சு நடக்கிறது  ஒண்டுமே தெரியாதே  "

                            "    ஹ்ம்ம்,,கடைசியா  நான்  வந்திட்டுப் போன நாள் மாமி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தா,,பிறகு  யாரோடும் கதைச்சாவோ "

                           "     இல்லை,,அந்தக்  கோலம்தான் "

                            "     பெரிய ராசன்  அண்ணையோடு  கதைச்சாவோ "

                         "    இல்லை,,அவா  யாரோடும்  கதைக்கவில்லை,,அப்படியே  நாடி  விழுந்த மாதிரி  சீவன்  போட்டுது "

                        "    உண்மையாகவே  சொல்லுரிங்க    பெரிய ராசன்  அண்ணையோடு கதைக்கவில்லை  என்றோ "

                          "   உண்மையாதான் சொல்லுறேன்,  கதைச்சு  இருந்தா  கட்டாயம்  பிரசினை  எல்லோ  வந்து இருக்கும்  எனக்கு " 

                          "  ஹ்ம்ம்,,,அதுதான் கேட்டனான் "

                        "  பாத்தீரே  உமக்கும்  உம்மட மாமாபோல  மண்டைக்குள்ளே நல்ல திரிக்கிஸ் புத்தி ஓடுது,,"

                        "   இல்லை,,வந்து  வந்து ....  அப்படி  இல்லை,,ஒரு  தகவலுக்குக்  கேட்டேன் "

                       "   என்ன  வந்து  வந்து..     சும்மா இழுக்காதையும்     என்ன  இருந்தாலும்  சொந்த பந்த ரத்தம்  எல்லோ,,நான்  எப்படியும் அகத்தி  ஆயிரம் காய்  காய்த்த   பிறத்தி தானே "

                                "  சரி இப்ப இதை விடுங்கோ,,பிறகு  கதைக்குறேன் "


                               ஓரளவுக்கு நடந்த விசியங்கள் நசுக்கிடாமல்தான்  நடந்து இருக்கு, பெரிய மாமி வாயைத்திறந்து ஏதாவது பெரிய ராசன் அண்ணைக்கு  சொல்லி இருந்தால். நிட்சயம் வீட்டுக்குளே பிரகண்டம் வெடிச்சு இருக்கும் . அதன்  முடிவுகள் நல்லதாக இருந்தே இருக்காது . தலைக்கு வந்தது தலைப்பாகையைத்  தடவிக்கொண்டு போன மாதிரி இருந்தது நிலைமை. ஆனால் பெரிய மாமா ஒன்றுமே நடக்காத மாதிரித்தான்  எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி   போல பவுசாக  நடு  வீட்டில  நின்றார் .

                                           எங்கள்  ஊரில கலியான வீடுகள் நடை பாவாடை  விரிச்சு கொட்டில வெடிமருந்து அடைச்சு   வானவேடிக்கை  காட்டி  எழுப்பமாகச் செய்வார்கள். கோவில் திருவிழாவில ஏட்டிக்குப்  போட்டியா எம் கே பத்மநாதன்  ஏறுபடி மேளம் பிடிச்சு பந்தா  காட்டுவார்கள், சிலர் சாமத்திய வீட்டையே  கலியான வீடுபோல அமர்க்களப்படுத்துவார்கள். பெரியமாமா இந்த செத்த வீட்டை அப்படி  எழுப்பமாக செய்ய நினைத்தார், அதுக்குக் கையில காசும் ஜெர்மனில் இருந்து வந்த ராசன் அண்ணையிடம் இருந்தது ,

                                          என்னைக்  கூப்பிட்டு , யுத்த முனையில்  நிக்கும் ராணுவத் தளபதி போல எனக்குப்  பிளான் A  போல  கட்டளைகள் சொன்னார், அவரோட ஜெர்மனியில்   இருந்து   வந்து  நின்ற   மூத்த மகனுக்கு நாட்டு வளப்பம் நடைமுறைகள் தெரியாது என்பதும் உண்மைதான்  , பெரிய மாமாவுக்கு என்னில எப்பவும்  நிறைய நம்பிக்கை. ஆனால்  நானும் இந்த  செத்த வீடு முடிஞ்ச கையோடு அவரிடம்  இருந்து  கொஞ்சம் காசு ரொக்கமா உருவி எடுக்கிற பிளான் B போட்டு  வைச்சு இருந்தேன்  .

                                             " அங்காலே இங்காலே போகாதே என்னோட கையுக்க நில்லு,,என்ன  நான் சொல்லுறது விளங்குதே "

                                "  ஓம்,ஓம்  மாமா "

                              "நாளைக்கு  பிரேதம் எடுக்க வேணும் ,கிருத்திகை ஐயர் யார் சொல்லு பார்ப்பம்  கொண்டுவர பிளான் போட்டு இருக்றேன்  தெரியுமா "

                         "  எங்கட  வீராளி  அம்மன்  கோவில் ஈஸ்வர ஐயர்  நல்லா  செய்யுறாரே  மாமா "

                           "  என்ன,  காதைப்  பொத்தி  அறைஞ்சன்  எண்டா ,அவன்  ஒரு  மடையன்,,மந்திரம்  சொல்லத்  தெரியாத  அவன்  முதல்  சைவக் குருக்களே  "

                            "   அது  எனக்குத்  தெரியாது  மாமா "

                                " அவன் மடப்பள்ளியில்   மண்டகப்படி சமைக்கிற  கழுதை  எல்லோ  ,,அவனை வைச்சு  மரணக் கிரிகை  செய்தா  சனம்  என்னை  முதல்  மதிக்குமே,,அதை  சொல்லு "    

                                 "  அப்ப  யாரைக் கொண்டுவரப் போறீங்க "

                         " கரணவாய்  திருஞானசம்பந்தக் குருக்கல் ,,அவர் தான் வரவேணும்,,அதுதான்  என்னக்குப்  பெருமை "

                            "     மாமோய்,,காரணவாய்க்க்குப்  போய்  அவரை  யார்  இந்த சண்டை அடிப்பாட்டு நேரம் கூட்டிக்கொண்டு வாறது  மாமோய் "

                                   "   நீ இப்ப கையோட  போய்  பொன்னுத்துரையனைக்  கூட்டிக்கொண்டு வா "

                              "   மாமோய்..துரை  அண்ணை  வல்லைவெளிக்கு நடுவால  டாக்ஸ்சி ஓட மாட்டார்  மாமோய்..அந்தாள்  ஹெலி  அடிச்சா  ரோட்டுக்கே  இறங்க  மாட்டார் "

                            "    உனக்கு  இப்ப  விளக்கம்  சொல்லிக் கேட்டனா,,இப்ப  நீ  போறாய்  போய்க்  கையோடு  பொன்னுத்துரையனைக் கொண்டு வாராய்,,அவன்  ஓடமாட்டன்  என்டால்  பிறகு  பொன்னுத்துரையனின்ட  மொரிஸ் மைனர் கார்  ஊருக்குள்ள  ஓடாது.  சொல்லிப்போட்டேன் ,,கொளுத்திப் போடுவேன் "

                               " சரி  மாமோய்  நான்  போய்  முதல்  துரை  அண்ணையைக்  கொண்டுவாரன் "

                        " அதுதான்  ..கண்டியோ..நான்  சொல்லுறன்,,நீ  வாயைப்பொத்திக்கொண்டு  செய்யுறாய்,,இப்பவே  போ ,,"

                                   "  சரி  மாமோய்  நான்  போய்  முதல்  துரை  அண்ணையைக் கதைச்சுப்  பேசிக்  கொண்டுவாரன்,,மாமோய் ஒரு  நல்ல பனசொனிக்  ரேடியோ ஒண்டு நல்ல விலைக்கு வந்திருக்கு  "

                             " டேய்  எரியிற  வீட்டில  கொள்ளிக்கட்டை  எடுத்து சுருட்டுப்  பத்த வைச்ச  மாதிரி  கேட்கிறாய், நடு  வீட்டில  எண்ட பொஞ்சாதி செத்துப்போய்க் கிடக்கிறாள்  "

                                " இல்லை  மாமோய்  இப்ப அதை  விட்டா  பிறகு  வேண்ட ஏலாது,,பிறகு  நீங்க  என்னை  மறந்து போவிங்க மாமோய்  "

                                  "  ஏன்  உன்ர   வீட்டில ஒரு  ட்ரான்ஸ்சிஸ்டர்  ரேடியோ இருக்குதானே  அதுக்கு  என்ன  கொள்ளையே அல்லது  கோதாரியே "

                                      "  அதில யார் பாடினாலும் கண்டசாலா பாடுற மாதிரி அவிஞ்சு அவிஞ்சு  சவுண்ட் வருகுது, செக்குமாடு  இழுத்த  மாதிரி   சக்கடையாப் போச்சு அந்த ரேடியோ  மாமோய்  "

                                        "நீயும்  செத்த  வீட்டில  நிண்டுகொண்டு  அரியண்டம்  தாராயே ,  சரி  விடு  ,,நான்  வேண்டக்  காசு  தாரன்  ஆற்ர  வீட்டில  இருக்கு "

                              "   மசுக்குட்டி மாமி  விக்கப்போறாவாம் "

                               "  அந்த  அறுதலி  இன்னும்  உசிரோடு  இருக்கிறாளே,,,சரி  நான்  காசு தாரன்..முதல்  இந்த  அலுவலை முடி,, பொன்னுத்துரையனை  முதல் கையோடு  பிடிச்சுக்கொண்டு  வா "

                                 "  அது  நான்  வெண்டு தாரன்  மாமோய் "

                                               ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு  எண்டது போல  எங்கள் ஊரில ஓடிக்கொண்டு  இருந்த ஒரே ஒரு டாக்சி துரை  அண்ணையின் மொரிஸ் மைனர் கார். மடத்துவெளி ஆமை போல  இருக்கும்   அந்த சின்னக் காரின் மேல் மண்டையில் மஞ்சள் கலர் பெயின்ட் அடிச்சு துரை  அண்ணை  அதை ஓடிக்கொண்டு இருந்தார். ஆனால் அதிகம்  தூரம்  போக மாட்டார். ஹெலிகாப்டர்  சத்தம் கேட்டால் அவருக்கு உடம்பு உதறும் .

                                                 துரை  அண்ணை  சின்ன  உருவம்  உள்ளவர். முன் டிரைவின் சீட்ல  இருந்து ஓடினார்  என்றால் அவர்  இருகிறதே தெரியாது. ஸ்ட்ரிங் வீல் மட்டும் அசையிறது தெரியும்.  உடம்புக்கு  நோய் வந்து ஏலாமல்  அரக்கப் பரக்க அவசரத்துக்கு நடுச்சாமம் பெரியாஸ்பத்திரிக்குப்  போறவர்கள் தான்  அவரைப் பிடிப்பார்கள். அவர் ராசியான ஒரு டாக்சி டிரைவர். அவரோட டாக்சியில்  பெரியாஸ்பத்திரிக்குப்  போன  ஒருவருமே  திரும்பி  உசிரோடு வந்ததில்லை  அப்படியான  ஒரு  கைராசியான  டாக்சி டிரைவர் .

                                    
                               துரை  அண்ணையைக்  கையோடு  கொண்டுவந்தேன். அவர் தலைச் சொறிஞ்சு  சொரிஞ்சு 

                                          " ஹெலி அடி  பொம்பர் அடி அகோரமாய் இருக்கு ஆனையிறவு பக்கம் சண்டை வேற நடக்குது   வல்லை வெளி தாண்டி காரணவாய்க்கு  ஓட மாட்டேன்  " 

                                           என்றார், பெரிய  மாமாவுக்கு  ஓர்மம் வந்து 

                            "டேய்   நாளைக்கு  காலை நீ   கரணவாய் போறாய்  பொன்னுத்துரை ,,இல்லாட்டி  டாக்சியை  சந்தியில்  வைச்சுக்  கொளுத்துவேன்  தெரியுமா,,என்னை  ஆர்  எண்டு  நினைச்சுக்கொண்டு  இருக்கிறாய் "

                         என்றார்  ,,புண்ணியக்  குஞ்சி எழும்பி வந்து 

                        "  டேய்..துரையன் ,,வெள்ளைக் கொடி  கட்டிக்கொண்டு  ஓடு  ஒண்டும் வராது அச்சுவேலியில்  வைச்சு அமத்தினி  என்றால்  அங்காலே கட்டைவேலி வரைக்கும்  இழுத்து ஓடு  சும்மா கூழுக்கு மாங்காய் கொண்டாட்டமாம்  குரங்குத் தேங்காய் கொண்டாட்டமாம்  போல  விழல் கதை  கதைக்காதே ,,அலுவலைப்பார்  "

                          என்றார்,,,சிங்கி மாஸ்டர் வந்த 

                     "  துரை  நீ ஜோசிக்காதை நானும்  வாறன்,,முன் சீட்டில நான்  இருக்கிறன்,, ஹெலியும் புலியும் ..ஒண்டும்  வராது  வந்தா  நான்  திருப்பி அடிப்பன் ,,சாகப்  பயப்பிடுறாய்  நீ சாகத்தான்  பிறந்தாய்  அது தெரியுமோ  உனக்கு "

                     என்ற பிறகுதான் துரை  அண்ணை  ஓரளவுக்கு நம்ம்பிக்கை வந்தது " ஓம் நாளைக்கு   ஓடுறன் " என்றார் . அன்று  முழுவதும்  துரை  அண்ணையின் டாக்சியில்  சவப் பெட்டி எடுத்து, ஆறு கேஸ்  யானைச் சோடா,சவக் கிருத்தியத்துக்கு சாமான் சக்கட்டு,வாடகைக்  கதிரை  எல்லாம்  நான் தான் இழுத்துப் பறித்தேன் , பெரிய மாமா  ஓர்மம் வந்த சிங்கம் போல அங்கேயும் இங்கேயும் எனக்கும் மற்றவர்களுக்கும் ஓடர் போட்டுக்கொண்டு இருந்தார். அவர் மனைவியை ஏறக்குறைய நடு வீட்டில் மறந்தே போய் விட்டார் போல இருந்தது .

                                                       அடுத்த  நாள் பகல் பன்னிரண்டு  மணிக்கு  திருஞானசம்பந்தர் குருக்கள் கரணவாயில் இருந்து   வந்திட்டார். துரை அண்ணை அவரைக் கொண்டுவந்து இறக்கிப்போட்டு   கரணம் தப்பிய மரணம் என்று அதோடு எஸ்கேப்  ஆகிப் போட்டார். பெரிய மாமா சொன்ன மாதிரி  ரெண்டு செட் பாட்டுக்காரர் பிடிச்சுகொண்டு வந்து கொடுத்திருந்தேன் , தேவாரம் திருவாசகம் என்று அவர்கள் பி எச் அப்துல் ஹமித்தின்  பாட்டுக்குப் பாட்டுப் போல ஒரு கோஸ்டி  விட்ட இடத்தில இருந்து மற்றக்  கோஸ்டி பின் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள் 

                                                சாவு மேளம் அடிக்க ஒரு கோஸ்டி பிடிச்சுக்கொண்டு வந்து கொடுத்தேன் அவர்கள் பழைய பிஞ்சு போன ஓலைப்பாயை நெல்லி மரத்துக்குக் கீழே போட்டு அதில இருந்து முழக்கிக்கொண்டிருந்தார்கள்  ,பெரிய மாமா சொன்ன படியே ரெண்டாம் குறுக்குத்தெருவில் இருந்து  றேமன்ஸ்  கேர்க்ஸ்  பிரேத வண்டி சொல்லி வரச் சொன்னேன் .அவர்கள் வந்து இருந்தார்கள்.அது காணாது எண்டு சண்டிகைப்  பாடை  கட்டும் கோஷ்டிக்கு சொல்ல சொன்னார் .சொல்லி இருந்தேன்  அவர்களும் வந்து  நாக்கில  அமரிக்கன் மாவை  ஒட்டி ஒட்டி சோடனை செய்து கொண்டிருந்தார்கள் .

                            இவளவு அமளிதுமளியிலும் பெரிய ராசன்  அண்ணை  அமைதியாக இருந்தார். அவரின் அம்மாவுக்குத் தலைப்பிள்ளையாக  கொள்ளிக் குடம் உடைசுக் கொள்ளி வைக்கும் சந்தர்பம் அவர் வெளிநாட்டில் இருந்து வந்து நிக்கும் போதே கிடைத்தது ஒருவிதத்தில் திருப்தியாக இருந்து இருக்கலாம்,எப்பவும் அமைதியாக இருந்தார் .ஜெர்மனியில் வெள்ளைக்காரர் இப்பிடித்தான் மரண வீடுகளில் அமைதியா இருப்பார்களோ ,அந்தப் பழக்கம் அவருக்கும் வந்திட்டுதோ என்று நினைச்சேன் 
                                               
                                 செத்த வீட்டுக்கு  என்னோட  அம்மாவும்  வந்திட்டா. அம்மாவுக்குப்  பெரிய மாமாவில் பாசம்  அதிகம், அவர்தான் என் அம்மா கலியாணம் கட்டின நேரம் கன்னிக்கால் முள் முருக்கு நட்டத்தில்  இருந்து  பொன் உருக்கி தாலிக்கொடி செய்தது முதல் கலியாண மணவறை வரை நிண்டு நெஞ்சை நிமிர்த்தி உரிமையோடு எல்லாம் செய்தார் என்று சொல்லுவா . அம்மா   பெரிய  மாமாவோடு முன்  விறாந்தையில்  கொஞ்சநேரம்  கதைச்சுக்கொண்டிருந்தா , பிறகு  வந்து  ஹோலில்  ஒரு மூலையில் குந்தி இருந்தா . அதில இருந்துகொண்டு  என்னைக்  கூப்பிட்டு 

                                " அண்ணை  பாவம்,,கை  உடைஞ்சு போன மாதிரி  தனிச்சுப்  போட்டார்,,நீ தாண்டா  அவருக்கு  இனி  உதவியா  இருக்க வேணும் "

                         "  சும்மா  விசர்க்  கதை கதைக்காதையனை,,மாமா தனியா  ஒன்றும்  இல்லை "

                            "  என்னடா  சொல்லுறாய் ,,  அண்ணைக்கு  இனி  ஆறுதலா  யார்  இருக்கினம்  சொல்லு  பார்ப்பம் "
                      
                         " சும்மா  விசர்க்  கதை கதைக்காதையனை,,மாமாவுக்கு  ஆறுதலுக்கு  ஏற்கனவே  ஆட்கள்  இருக்கினம் "

                           "    என்னடா  சொல்லுறாய் "

                           "   விசர்க்  கதை கதைக்காதையனை,,உனக்கு  சொன்னா  விளங்காது "

                                "      என்னடா  விசர்க்கதை  நான்  சொல்லுறன்,,நீ  என்ன  சொல்லுறாய் "

                                     "   அம்மா,,உங்களுக்கு  ஒரு  மண்ணும்  தெரியாது,,சும்மா  இருங்க,,வாயைப்பொத்திக்கொண்டு "

                                 "  என்னடா  சொல்லுறாய் "

                               " ஹ்ம்ம்,,,நான்  என்ன  சொல்ல  எல்லாம்  அப்படி  அப்படி  நடக்குது "

                                நானும்  அம்மாவும்  ஹோலில்  நிலத்தில  பெரிய மாமியின்  பிரேதப் பெட்டிக்கு  கொஞ்சம் தள்ளி இருந்து கதைக்கிறதை பித்தளைக் குடம் பார்த்தா. அவாவுக்கு  என்னோட அம்மாவைத்  தெரியாது. ஆனால் நானும் அம்மாவும் பிடுங்குப் படுறதைப்  பார்த்திட்டு  குடுமிப் பிடி சண்டையில குத்தரிசி  குத்தலாம்  என்று  நினைச்சு நைசா வந்து என்னோட அம்மாவுக்குப் பக்கத்தில இருந்திட்டா , என்னோட அம்மாவே கதையத் தொடக்கினா,  என்  அம்மாவுக்கு  இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே என்று  ஆரும்  வந்து  மாட்டினா  கதைச்சுக்கொண்டே  இருப்பா 

                               "    இஞ்ச பாருங்கோ  நான் பெத்த பெடி  எனக்கு  ஒண்டும் தெரியாதாம்  என்று  திட்டுது "

                                     "  ஒ..அப்படியே சங்கதி,,உங்கட  மகனோ "

                              "  ஓம்  பாருங்கோ. எண்ட மூன்றாவது  பெடி  இது...என்னைத்  திட்டுறான்  எனக்கு ஒண்டும்  தெரியாதாம் "

                            "   அப்படியே,,,என்ன  தெரியாது  உங்களுக்கு "

                          "   இல்லைப்  பாருங்கோ ,,  அண்ணை  பாவம்,,கை  உடைஞ்சு போன மாதிரி  தனிச்சுப்  போட்டார்,,நீ தாண்டா  அவருக்கு  இனி  உதவியா  இருக்க வேணும்  எண்டு   சொல்ல  இவன்  என்னவோ விண்ணாணம் கதைக்கிறான்  "

                                  " அதுக்கு  உங்கட தர்மபுத்திரன்  என்ன  சொல்லுறார் "

                       "   சும்மா  விசர்க்  கதை கதைக்காதையனை,,மாமா தனியா  ஒன்றும்  இல்லை ,,மாமா தனியா  ஒன்றும்  இல்லை  எண்டுறான் "

                                "   அப்பிடியே,,"

                   "   பெரிய  ராசன்  இனி  ஜெர்மனி  போயிடுவான்  பாருங்கோ,,அண்ணை  எல்லோ  தனிச்சுப் போட்டார் "

                             "    ஹ்ம்ம் ,,அப்பிடியே "

                       "  ஓம்  பாருங்கோ,,அண்ணை ராசாத்தியை அவள்  விருப்பத்துக்குக்  கட்டிக்கொடுக்காமல்  பிரசனை  எடுத்து  அவளும்  இனி  அப்பா  வேண்டாம்  எண்டு  எல்லோ  போட்டாள் "

                         " அப்பிடியே,,இவருக்கு  ஒரு  மகளும்  இருகிறாவோ "

                       "   ஓம்  பாருங்கோ,,நீங்கள்  இங்க  சமையல் வேலைக்கு  வந்ததால்  உதுகள்  தெரியாது "

                           "   ஹ்ம்ம்        எல்லாம்  என்  விதி "

                         "  மற்ற  மகன்  சின்ன  ராசன்  பிரான்சில  அவன்  தகப்பனோடு  தொடசல்  இல்லை,,அங்கினய  யாரோ  ஒரு வெள்ளைக்காரியைக்  சம்பந்தம்  முடிச்சதால்,,அண்ணை  அவனையும்  கை  கழுவிப்  போட்டார் "

                             "   அப்பிடியே,,எனக்கு  இதுகள் இண்டைக்குத்தான்  தெரியும்,,,ஹ்ம்ம்,,அதுவும்  என்  விதி "

                                     "   அப்ப ,,பாருங்கோ  வீட்டு வேலைக்கு வாற  எல்லாருக்கும்  அண்ணை  ஏன்  குடும்ப புராணம் சொல்ல வேணும்  இல்லையோ "

                               "  ஓம்,,ஓம்,,நான்  பிறத்தி ஆள்  தானே "

                        "  இல்லைப்  பாருங்கோ ,   அண்ணை  எவளவு  மரியாதையான  ஆள்..அவர்  ம்  எண்டா  நாங்கள் அங்கால இங்கால அசைய மாட்டம்  அவளவு பண்பாடு  பழக்க வழக்கம் "

                                 "   அட அட அட அட அப்பிடியே "

                                 "    அப்பிடித்தான்  பாருங்கோ...உங்களுக்கு  குசினியில் அவிச்சுக் கொட்டி  சட்டி பானை கழுவுற  சமையல்  வேலைதானே,  அதால அண்ணை  ஏன்  குடும்ப விபரம்  எல்லாம்  சொல்லப்போறார்  உங்களுக்கு,,,இல்லையோ "

                                "  அதெண்டா  உண்மைதான்,,உங்கட  மகன்  என்னத்துக்கு  உங்களோடு சண்டை  பிடிக்கிறார்  இங்கே "

                     "   ஓம்  பாருங்கோ  அப்பிடிதான்  இவனைப்  பீ அள்ளி  மூத்திரம்  அள்ளி வளர்த்துவிட  இப்ப  இளந்தாரி தலை எடுப்பில  சும்மா  விசர்க்  கதை கதைக்காதையனை எண்டுறான் "

                                     அம்மா  இதைச்  சொல்லிப்போட்டு  சேலைத் தலைப்பை  எடுத்து  மூக்கு  சீறி சீறி விக்கி விக்கி  அழுதா. அம்மா அப்படி  அடக்க முடியாமல் அழுதது   பெரிய மாமி  செத்ததுக்கு  அழுத  மாதிரி  எனக்குத் தெரியவில்லை , என்னை  நினைச்சு  இந்த  உருப்படாதவனைப்  பெத்துப் போட்டேனே  என்று  நினைச்சு  அழுத மாதிரித் தான்  இருந்தது. அதுதான் உண்மையும் என்னோட   அம்மாவை  எனக்குத்  தெரியாதா, சொல்லுங்க  பார்ப்பம்  , பித்தளைக் குடம் என்னவோ யானை குதிரை போலப்   பதினாறு பிள்ளை பெற்று வளர்த்த மாதிரி ,

                           "  இளந்தாரிப்  பிள்ளையள்  இப்பிடித் தானே   சொல்வழி கேட்காமல்  தெறிக்கும்கள் " என்றா ,

                                   "  அண்ணை  பாவம்,  அண்ணி  மகராசி  பூவும் பொட்டும்  வைச்சுக்கொண்டே  போட்டா , அண்ணைக்கு  வலது  கை  உடைஞ்சு போன மாதிரி  தனிச்சுப்  போட்டார்,,நீ தாண்டா  அவருக்கு  இனி  உதவியா  இருக்க வேணும் எண்டுறன் சும்மா  விசர்க்  கதை கதைக்காதையனை,,மாமா தனியா  ஒன்றும்  இல்லை எண்டுறான் "

                           "  மாமா  தனியா  இல்லைதான் "

                           "   என்ன  பாருங்கோ  நீங்க  சொல்லுரிங்க "

                         "   என்னத்தை  சொல்ல ,,,"

                         பித்தளைக் குடம்  என்னோட  அம்மாவோடு கதைக்குக்  கதை  சொல்லிக்கொண்டிருந்தாலும்  முன்னுக்குக் குந்தி   இருந்த  என்னோட முகத்தை விட்டுக் கண்களை அங்காலே இங்காலே எடுக்கவில்லை.   எனக்கு  அவடதிலையே  விழுந்து கிடந்து  நரி பழைய புளிச்ச கள்ளைக்  குடிச்சுப்போட்டு விழுந்து உரண்டு  பிரண்டு  சிரிக்க வேணும்   மாதிரி  சிரிப்பு  வர  அடக்க முடியாமல் எழும்பி வந்து சாவு மேளம் அடிக்கிரவங்களுக்குப் பக்கத்தில  இருந்திட்டேன். 

                                            அவங்கள் "  நயினார் செத்தது நல்லது  நல்லது  நயினார் செத்தது  நல்லது  நல்லது "  என்ற  தாள கதியில் சாவுமேளம் அடிசுக்கொண்டிருந்தாங்கள் . நயினார் செத்து  இருந்தால்  இவளவு குழப்பம்  இலையே  அவர் தான் சாகவில்லையே,அதுதானே  முசுப்பாத்தியா  இருக்கு  என்று அவங்களுக்குச் சொல்ல நினைச்சேன். ஏன் வம்பு என்று பேசாமல் இருந்திட்டேன் .

                                  செத்த வீடு ஒருமாதிரி  பெரிய மாமா நினைச்ச  மாதிரித்தான்  ஆடம்பர டாம்பீகமக நடந்து முடிந்த நாளில் இருந்து நான் அந்த வீட்டுக்குப் போகவில்லை. பெரிய ராசன் நாலாம் நாளே கொழும்புக்குப் போட்டார். எட்டுச் செலவுக்கு போனேன். அதுவும் மாமா வலது கையா நில்லு அன்றைக்கும் எண்டு கேட்டதால் போனேன் . அங்கே அன்றைக்கு பித்தளைக்குடம் இல்லை .

                                         மாமாவே  என்னிடம் வந்து சொன்னார் 

                               "  ஹ்ம்ம்,, என்னத்தை சொல்ல,, வந்ததுகளுக்கும்  வாய் சரி  இல்லை ,,வாய்க்கு  வாய்  கட்டினாள். அடிசுக் கலைச்சுப் போட்டேன். என்னோட சரிக்குச் சரி  வாய்க்  கொழுப்பு எடுத்து கதைக்கிறாள்.முழங்காலை அடிச்சு அனுப்பி இருப்பேன்,,,என்ன  செய்ய கன வருஷமா  தெரியும் அதால வெளிய போகச்சொல்லிபோட்டேன் , இனி  இங்க வரப்பிடாது  எண்டு சொல்லிப்போட்டேன் "

                                                பெரிய மாமா  அவளவுதான் சொன்னார். அதுவே  போதும் போல இருந்தது. பித்தளைக் குடம்  பாவம்,,சிலநேரம்  என்னோட கதைக்க நினைத்து இருக்கலாம் சில பிரசினைகளை. நான் தான் அந்த இடைப்பட்ட நாட்களில் அவர்  வீட்டுக்குப் போகவில்லையே , எப்படியோ  உறவுகள் சிக்கலான ஒரு இடியப்பச் சிக்கல் என்று தெரிந்தாலும் பெரிய மாமா சுயநலம் மிக்கவர். அவர் சிந்தனையில் மனிதாபிமானம் இல்லை என்பது அவரின் அடுத்த பிளானில் தெரியவந்தது 

                                            எங்கள் ஊரில எங்களுக்கும்  பெரிய மாமாவுக்கும் உறவு முறையான திரிபுரசுந்தரி என்று ஒரு பெண் இருந்தா. முனிசிபல் லைபிறேரியில் அசிஸ்டெண்ட் லைபிறேரியன்  ஆக வேலை  செய்தா. நல்ல   அழகானவா .வாய்  திறந்து  பேசவே மாட்டா. ரமணி சந்திரன்  ரொமான்ஸ்  கதைகளில்  வருவதுபோல ஜவ்வனமான  இளமையின் மொழிபெயர்ப்புபோல  இருப்பா.   எப்பவும் கொட்டன்   சீலை  தான்  கட்டுவா, அன்பானவா   எங்களோடு  மிக நெருக்கமாக  சின்ன வயசில் வளர்ந்தவா. அப்பா அம்மாவுக்கு  ஒரே ஒரு செல்லப்பெண் . 


                                                    பெரிய மாமாவுக்கு அவா மருமகள் முறை . அவாவின் கணவர் கண்டி  கொத்தமலை   நீர்த்தேக்க அணைக்கட்டில்  சிவில் எஞ்சினியர் ஆக இருந்தார்.விடுமுறையில்  ஊருக்கு வந்த   ஒருநாள் கரன்  தியேட்டரில்  படம்  பார்த்திட்டு வர கோட்டை  ராணுவம் அடிச்ச சினைப்பரில் அவர் சூடு பட்டு இறந்திட்டார் . அவாவுக்குப் பிள்ளைகள்  இல்லை. வாழ வேண்டிய நடுத்தர வயதில்  விதவை ஆகி  இனிக்  கலியாணமே  வேண்டாம் என்று சொல்லி சாய் பாபா  பஜனை  பாடிக்கொண்டு இருந்தா. 

                                       பெரிய மாமா கொஞ்சநாள் தனியா  இருந்தார், அம்மா சில நாட்கள் போய்  சமைச்சுக் கொடுப்பா . பெரிய  மாமியின் முப்பத்தி ஒன்று  நிகழ்வுக்கு  போய்  இருந்த  என்னிடம் ,

                                      "    சுந்தரி  பாவம்  வாழவேண்டிய வயதில்  இப்பிடி  இருக்கிறாள்,,நீ  ஒருக்கா கொம்மாவை இங்க வரக்காட்ட  முடியமா,,நான்  சொன்னேன்  எண்டு  சொல்லு,,"

                                 "   ஓம்,,அம்மாவிட்ட சொல்லுறேன் "

                                         "    மனோன்மணி  கதைச்சால் , நல்லம்,,நானாப் போய் இதுகள்  கேட்கிறது  நல்லது  இல்லை,,என்ன  சொல்லுறாய் ,,சொல்லு  நாளைக்கு  மன்னோன்மணியை வரக் காட்டுவியா, "

                           "  ஓம்,,ஓம்,,கட்டாயம்  வரக்காட்டுவேன் "

                                    "  சுந்தரி  பாவம்  வாழவேண்டிய வயதில்  இப்பிடி இன்னும்  எவளவு  காலம் தான்  வாழா  வெட்டியா  இருக்கப்  போறாள்,,அவளும்  பாவம் தானே,,அவளுக்கும்  ஆசா  பாசம்  என்று  ஒரு  கனவு  இருக்கும்  தானே,,இல்லையா,,சொல்லு  பார்ப்பம் "

                             " கட்டாயம் இருக்கும் தான்  மாமோய்,  நீங்க ஆதங்கப்பட்டா  அதில ஒரு  அர்த்தம்  இருக்கும்  மாமோய் "

                                  அடுத்தநாள் மனோன்மணி, என்ற  என்   அம்மா அடிச்சுப் பிடிச்சு  அண்ணனுக்கு  உதவப்  போனா, சிவலோகநாதன்  என்ற எங்கள்   பெரிய மாமாவின் பிளான் ஓக்கே   ஆகிவிட்டது, அதுக்குப்  பிறகு  அவர் கொஞ்ச  வருடங்கள் தான் வாழ்ந்தார்.  எப்படி  வாழ்ந்தார் ?, என்ன  செய்தார் ?  என்பது எல்லாத்தையும் விட  அவர்  இறந்த விதம் பற்றிக் கேள்விப்பட்ட போது அந்த செய்தி  இயல்பாக  இருக்கவில்லை.  இப்போதும் அது  கொஞ்சம் நெருடலாகத் தான்  இருக்கிறது . நான் அப்போது சுவீடனில் இருந்தேன் . 
.
 .