Thursday, 14 January 2016

மறுபடியும் நினைவுக்கு..

விழாக்காலங்களில் வாழ்க்கையின் சந்தோஷ்பக்கங்கள்  பற்றி தெரிந்துகொள்ள வாழ்க்கையைப்  பற்றி கதைகளில் வந்த கதைகளை விடவும் அறிஞர்களும் ,ஞானிகளும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையும்  தேடிப்போகாமல் ,பண்டிகை  விழாக்காலம் உருவாக்குகிற சாதாரண சம்பவங்களைத்  தேடிப்போக வேண்டி இருக்கு , அவைகளிடம் தான் விழாக்கால வாழ்க்கைக்கான உண்மையான பொருள் இருக்கும்

                                      ஊரில சின்ன வயசில் என்னோட அப்பா இறந்த பின் அம்மா ஒருநாளும் வெளிய முற்றத்தில் தைப்பொங்கல் பொங்கவேயில்லை. விதவைகள் முற்றத்தில்த் தைப்பொங்கல் பொங்கக் கூடாது எண்டு ஒரு பைத்தியக்காரச் சம்பிரதாயம் ஊரில தேசவழமைச் சட்டம் போல இருந்தது, அதால தானோ தெரியவில்லை இப்பவும்தான், அப்பவும்தான் தைப் பொங்கல் ஒரு இனிய அனுபவமாக எப்போதுமே இருந்ததில்லை!
                                       அம்மா வெளியே முற்றத்தில் , அயல் வீடுகளில் பொங்குவதுபோல சாத்திர, சடங்காக பொங்குவது இல்லைத்தான், ஆனால் எங்களின் விருப்பத்துக்காக வீடுக்கு உள்ள சமையல் அறையில் ஒவ்வொரு நாளும் சோறு வடிப்பதுபோல தைப்பொங்கல் சமைப்பா ! அது கலர்ப்படம் பார்க்க வேண்டிய நேரம் பிளக் அண்ட் வைட் படம் பார்ப்பது போல இருக்கும்.
                                          எங்களின் அயல் மன்னோன்மணி மாமி வீட்டில ,அதிகாலையே முற்றத்தில் மாட்டுச் சாணி போட்டு மெழுகி , சதுரமாக மாக்கோலம் போட்டு அதின் நாலு பக்கமும் வாசல் வைச்சு , மஞ்சள் இலை கட்டித் தொங்கவிட்டு , மண் பானையில் " பொங்கலோ பொங்கல் " எண்டு தைப்பொங்கல் பொங்கித் தள்ளுவார்கள்! " பொங்கலோ பொங்கல் " எண்டு சொல்லும்போது சீன வெடி சீனாவுக்கே கேட்கிற மாதிரி எங்கள் ஊரையே அதிரவைக்கும் .
                                            அம்மா வெளிய வீட்டு முற்றத்தில் தைப்பொங்கல் கடைசியாப் பொங்கினது நினைவு இருக்கு , பால் பொங்கி கிழக்குப் பக்கமா வழிய ,அம்மா சொன்னா
                          " கிழக்குப் பக்கமா பொங்கி வழியுது ,பால் பவுர்ணமி நிலவு போலப் பொங்குது , இந்த வருஷம் சுபிட்சமான வருசமா அமையப்போகுது, தை பிறந்தால் வழி பிறக்கும் "
                                       எண்டு முகமெல்லாம் சந்தோசமா சொன்னா, எனக்கென்னவோ அம்மா பொங்கல் பானையைக் கிழக்குப் பக்கமா வேண்டும் எண்டே சரிச்சு வைச்சு இருந்த மாதிரி எனக்கு தெரிந்தாலும் நான் ஒண்டுமே சொல்லவில்லை.
                                  பொங்கல் பானையில் முதலில் பால் பொங்குறதுதான் முக்கியம் என்பது போலவும் அது எந்தப்பக்கம் பொங்கி வழிந்தாலும் பரவாயில்லை என்பது போன்ற சிந்தனை மன ஒழுங்கில்த்தான் நான் இருந்தேன். எது எப்படியோ அந்த வருஷம் அப்பா செத்துப் போனார், எங்களுக்கு இருந்த ஒரே ஒரே வழியும் அதோட வழிதவறிப் போனது !
                                  பொங்கலுக்கு எங்கள் வீட்டில் வெடி கொளுத்தக் கூட சந்தர்பம் கிடைத்தது இல்லை. வீடில பூந்திரி மத்தாப்பு மட்டும் வேண்டித்தருவார்கள், அம்மா வெடி தவறுதலாக வெடித்தால் கையைக் ,கண்ணைக் கொண்டு போயிடும் என்ற பயத்தில வேன்டித்தரமாட்டா ! அயல்வீடுகளில் தைப்பொங்கல் இரவு, பகல் எல்லாம் உலகம் அழியிற மாதிரி முழங்குவார்கள்! கேவலமா இருக்கும் !
                                         தைப்பொங்கல் அன்று வெடி கொளுத்தாத வீடு என்பது ஊரில் உள்ள வீடுகள் எல்லாத்திலும் தரக்குறைவான வீடு என்று மோட்டுத்தனமாக நினைத்துக்கொண்டு இருந்ததால், அதை மறக்க மற்ற அயல் நண்பர்கள் வீட்டுக்குப் போய்விடுவேன் , போய் அவங்களிட்ட வெடியை வேண்டிக் கொளுத்திக் கோவத்தில நாயிண்ட காலுகை போட அது உலகம் எல்லாம் கதறிக் கதறி " நாசாமாப் போன பொங்கல் ,, நாசாமாப் போன பொங்கல் ,," எண்டு திட்டிக் கொண்டு ஓடித்திரியும் !
                                  எங்களின் வீட்டுக் அருகில் அம்மன் ரோட்டிலதான் , " எடுப்பு செடுப்பு " பிடிச்ச , "உலக அழகுராணிகள் நினைபில" இருந்த அழகான ,அறிவான பெட்டைகள் வசித்தார்கள், அவர்கள் எங்களோட படிச்சாலும் , எங்கள் அழகில மயங்கி விழாவிட்டாலும் பரவாயில்லை, அசந்து மறந்து தன்னும் எங்களை ஏன் நாயே எண்டும் கணக்கில் எடுப்பதில்லை . அந்தக் கோவத்தில ,பொங்கல் இரவு வெடி அமோகமா முழங்குற நேரம் பார்த்து , நாலஞ்சு அனுமான் வெடிய ஒன்றாகக் கட்டி ,அதன் கந்தகத் திரிய நீட்டா வைச்சு அவர்களின் வெளி ரோட்டோரம் வாசலில் தொங்கும் தபால்பெட்டிக்க போட்டுடு நைசா நழுவிவந்திடுவம் ,
                                            காலையில அந்தப் பெட்டி " கிளைமோர் கண்ணி வெடியில அம்புட்ட கவசவாகனம் " போல , சிக்கி ,சிதறி ,சின்னா பின்னமாகி ,சீரளிஞ்சு தொங்கும். அதைப் பார்க்க ஒரு பழிவேண்டிய ஆத்மதிருப்தி கிடைக்கும். அந்த வெற்றிகரமானா தாக்குதலில் பங்கு பற்றிய சின்னக் கண்ணன் ,பின் நாட்களில் ," .........." என்ற இயக்கத்தில " வெடிகுண்டு நிபுணரா " இருந்து ..ஒரு தாக்குதலுக்குப் போகுமுன் தவறுதலா டிக்னேட்டார் இறுகி வெடிச்சு சிதறிப்போனான்.
                                       என் வயது அயல் வீட்டு நண்பர்கள் ஒரு முறை ,அவர்களின் வீட்டில அனுமான் வெடி, யானை வெடி , சங்கு வெடி ,சர வெடி எல்லாம் வேண்டி வைத்து இருப்பதாகவும்
                               " உங்கள் வீடில என்ன வெடி வேண்டினீங்கள் ?"
                                என்று என்னைக் கேட்டார்கள். அம்மா வேண்டித்தந்தது பூந்திரி ,மத்தாப்பு எண்டு சொல்லவது உலகமகா வெட்க்ககேட்டு, அதால
                                  " அணுக்குண்டு வெடி வாங்கி வைத்திருக்கிரம் "
                                என்று சும்மா சத்த வெடியைக் கொழுத்திப் போட்டன் ! அவர்கள் திகைத்து,"அது என்ன புதுவெடி,
                                   " அது எப்படி இருக்கும் ,நாங்கள் இதுவரை அப்படி ஒரு வெடி பெயரே கேள்விப்பட்டதில்லையே ?",
                                   என்றார்கள் நான் அது வெடித்தால் வரும் கதிரியக்க பக்க விளைவுகளை விளக்கி சொல்ல , அவர்கள் பதறிப்போனார்கள்!
                                  காலையில முதல் வேலையா எங்க வீடுக்கு வந்து என்னை எழுப்பி அந்த வெடிய கொளுத்தும்படி கேட்டார்கள், நான்
                                  "ராத்திரி பன்னிரண்டு மணிக்கே அதை நான் கொளுத்தி விட்டேனே "
                                       என்டு இன்னுமொரு தைப்பொங்கல் வெடிய போட்டன்! அவர்கள்
                                 "இப்ச் ,அடுத்தவருடம் , தவறவிடக்கூடாது "
                                       என்று தைப்பொங்கல் சபதம் எடுத்து கொண்டு போய்விடார்கள்!
                                          எங்கள் வீட்டில வெளிய " பந்தா போட்டு "பொங்காததால் எல்லா அயலட்டை வீடுகளிலும் இருந்தும் , பெரிய " பந்தா போட்டு " விதம் விதமான கலர்ல ,விதம் விதமான விறுத்ததில ,வெள்ளைப் பொங்கல் ,தைப்பொங்கல் சாதம்,சக்கரைப் பொங்கல் ,உளுந்துவடை வரும், வந்து அதுபாட்டில மேசையில எவசிலவ்ர் தட்டில கிடக்கும் ,அனாதையா காசு கொடுத்தாலும் சாப்பிட மனம் வராத மாதிரி இருக்க ,யாரும் சாப்பிடமாட்டம் !
                                               வருசத்தில எதுக்கு எல்லா வீடிலையும் ஒரே நாளில தைப்பொங்கல் பொங்குகிறார்கள் எண்டு நினைக்க வெறுப்புவரும் , வருஷம் ஒவ்வொருநாள், ஒவ்வொரு வீடில தைப்பொங்கல் பொங்கினால் என்ன குடியா முழுகிப் போயிடும் ? என்று அப்போது நினைத்ததுண்டு!
                                              எங்கள் வீடில மாடு இல்லை. பக்கத்து வீடு முத்துலிங்கம் முதலாளி வீட்டில தைப் பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப் பொங்கல் வைப்பார்கள், அவர்களின் மாட்டுக் கொட்டிலில் எப்பவுமே மாடுகளும் கன்றுகளும் நிக்கும். பின் மதிலில தொங்கிக் கொண்டு நின்று பார்த்திருக்கிறன். அவர்கள் வளர்த்த பசு மாட்டை அன்றைக்குமட்டும், மாலை போட்டு , மஞ்சள்தண்ணி தெளித்து , முத்துலிங்கம் ஐயா ஏதோ ஜீவாகாருன்ஜ மூர்த்திபோல மாட்டுக்கு கற்பூர ஆரத்தி காட்டுவார் !
                                         மாடு இந்த தைப்பொங்கல் திடீர் அனுதாப மனிதப்பதர்களைக் கணகில எடுக்காத மாதிரி அதுபாட்டில தைப்பொங்கல் வைக்கலைத் திண்டு கொண்டு, கடசியா சந்தித்த காளை நாம்பன் மாட்டோட செய்த " ரோமான்ஸ் " ஐ நினைத்துக் கொண்டு ,அப்பாவியா இருக்கும் ! முத்துலிங்கம் வீட்டில மாலைய போட்டு , மஞ்சள்தண்ணி தெளித்து ,வீட்டோட செட்டில் ஆகிற மாதிரி அழகான பெண்களும் இருந்தார்கள்.....அது வேற கதை,அதையும் பிறகு சொல்லுறன் !
                                        சென்ற வருடம் ,ஒஸ்லோவில் , வெளிய ஸ்நொவ் விழுந்து , சூரியன் இல்லாத இருட்டு நேரம் என்னோட வீடில் , காஸ் குக்கரில் , " நொன்-ஸ்டிக் எனாமல் " பாத்திரத்தில்.....
                                   " தை திருநாள் இல்லம் எல்லாம் தளிர்த்திடும் தைபொங்கல் ,,இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கல், கூவி அழைத்திடும் சேவல் கூவி விழித்திடுவோம் குளிப்போம் ".........
                                 எண்டு பாடிக்கொண்டு அரிசியைக் கழுவிப் போட்டு ..
.                             " புத்தாடை பூண்டு மனம் மகிழ்ந்திடுவோம் நாமே ,விரும்பிய மா வாழை பல விதம் விதமாய் கனிகள் "...
எண்டு பாடிக்கொண்டு,,போத்தல் பாலைச்  சரிச்சு பாத்திரத்தில் ஊத்தி ....
                     ." பாலெடுத்து பொங்கலுக்கு பானை வைப்பார் அப்பா .கோலம் இட்டு விளக்கேற்றி கும்பிடுவாள் அம்மா ".....
                                        எண்டு பாடிக்கொண்டு.. ,சக்கரை , காசுக் கொட்டை , முந்திரி பிளம்ஸ் ,நிலக் கடலை , பேரிச்சம்பழம் எல்லாத்தாயும் அள்ளி எறிஞ்சு ஆனதமாய்ப் பொங்கினேன் , பொங்கிப்போட்டு
                                  " பொங்கலோ பொங்கல், பொங்கல் "
                                     எண்டு பொங்கலைக் கண்டு பிடிச்சவனை வாயாரப் புகழ்ந்து பாடிப் போட்டு, நான் அதிகம் இனிப்பு சாபிடாததால் , " எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும், எல்லாரும் எல்லாவற்றையும் பகிர்ந்துண்ண வேண்டும்!" என்ற சமதர்மக் கொள்கையில் என் அயல் வீடுகளுக்கு பொங்கல் பாத்திரத்தை தூக்கிக்கொண்டு போனேன் !
                                         என்னோட வீட்டுக்கு பக்கத்தில அரபி பேசும் ஈரான் நாட்டுக் குடும்பம் இருக்கு ! அவர்களுக்கு கொஞ்சம் தைப்பொங்கல் கிள்ளிக் கொடுத்தேன் அவன்கள் முதலில
                                   " இது என்ன" ஹலாலா,,பார்க்க அழகா இருக்கே,,குக்குஸ் அரிசியில் அவித்து வடித்து செய்வதா இது "
                               எண்டு கேட்டாங்கள்
                               " இல்லை, இது வெறும் இந்திய வகை அரிசியும் , பாலும் , சக்கரையும் , இது சுத்த சைவச் சாப்பாடு "
                                 எண்டேன் ,அவர்கள்
                                          " இன்சா அல்லா, உன்னோட பெருநாளில் எங்களையும் இணைத்துக்கொண்டதுக்கு நன்றிப்பா "
                                    எண்டு சந்தோசமா வேண்டினார்கள் ! என் இன்னொரு அருகில் ஒரு வியட்நாம் நாட்டுக்காரி , சப்பட்டை மூக்கோடு ,பாம்பு போல வளைஞ்சு வளஞ்சு நடக்கும் ஒருத்தி இருக்குறாள், அவளுக்கு கொஞ்சம் கொடுக்க
                                        " இதை எப்படி சாபிடுவது,வாசம் அந்த மாதிரித் தூக்குதே "
                                 எண்டு கேட்டாள் ?
                                         " சைனிஸ் சோயா சோஸ் இருந்தா கொஞ்சம் விட்டு சாப்பிடு , சுவிட் அண்ட் சோர் சோஸ்,,ஏன் சில்லி சோஸ் இருந்தா அதுவும் விட்டு சாப்பிடு, அப்புறம் விரும்பினால் நீ பாவிக்கும் மூங்கில் தடியால கிள்ளியும்  சாப்பிடு ஒன்றும் குறைஞ்சு போகாது  "
                                          எண்டேன் , அவள் அன்பாக வேண்டினாள் ! முன் வீட்டில நோர்வே நாட்டு வெள்ளை கணவனும் மனைவியும் இருகிறாங்க! இனிப்பா எது கொடுத்தாலும் சும்மா வெளுத்தெறிவாங்கள் ! அவங்களுக்கு மிச்சம் முழுவதையும் பாத்திரத்தோட கொடுத்தேன்,ஆச்சரியமா பார்த்தாங்கள் 

                             " என்னப்பா,,இவளவு சாப்பாடு,,இதென்ன வகை சாப்பாட்டு பா, பார்க்க நோர்க்ஸ் ரைஸ் குரோத் போல இருக்கே,,ஆனால் கலர் என்ன இப்படி இருக்கு,,,யப்பா சாமி,,இப்படி வாசமா இருக்கே,,அப்பிடி என்னதான் போட்டு செய்தாய்,,பொறு ஒரு பிடிச்சிட்டு மிச்சக் கொமென்ட் சொல்லுறேன்  "

                              என்று அந்த மனைவி சொன்னாள். அவள் கணவன் சிரிச்சுக்கொண்டு பார்த்துக்கொண்டு நின்றான். கொடுத்து சில நிமிடங்களில் , தைப்பொங்கல வழிச்சு , தைப்பொங்கல துடைச்சு தைப்பொங்கல் பாத்திரத்தை திருப்பி தந்தாங்கள் !
                                               கச்சான் காத்தில வேப்பம் சருகு அள்ளி எறிஞ்ச மாதிரி அடிபட்டு, இடிபட்டு ,இடம்பெயர்ந்து,புலம்பெயர்ந்து , தாறுமாறாய் வாழ்க்கை வந்த வழி, போன வழி முழுவதும் வலி தந்து பண்டிகைக் காலங்களில் மட்டும்தான் சின்ன வயது நினைவுகள் இப்ப நான் வாழும் காலாச்சார சூழலில் இருந்து மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது ! இந்த வருஷம் பொங்கலும் இல்லை ,ஒரு படையலும் இல்லை , மனதுக்கு நெருகமானா பலர் தொடர்பு இல்லாமல் போனது முகியமானா காரணம் !

.

Sunday, 10 January 2016

மங்கல்ஸ் ,,முடிவான கதை

இங்கிலிங் மர மேசையில் எனக்கு முன்னால் நேர் எதிரே இருந்தாள். மங்கல்ஸ் அந்த மர மேசையின் ஒரு பக்கத் தொங்கலில் இங்கிலிங் இக்கு ஹாய் சொல்லிப்போட்டு விழுகிற மாதிரி  தொங்கிக்கொண்டு விருப்பமே இல்லாத  மாதிரி இருந்தா.  கையில வைச்சு இருந்த ஆப்டன் போஸ்டன் பத்திரிகையால் முகத்தை மறைத்துக்கொண்டு அதைத் தீவிரமா  வாசிக்கிற மாதிரி பாவனையில் செய்துகொண்டு இருந்தா .இங்கிலிங் என்னோட கதைத்தாள்

                            "  எப்படி இருகிறாய் ,  என்னது இங்கே இன்ஸ்பெக்சனுக்கு வெள்ளிகிழமை ரெண்டுபேர் வாறது என்று கேள்விப்பட்டேன் ,என்ன நடக்குது இங்கே "

                           "  நடக்க வேண்டியதுதான் நடக்குது இங்கிலிங் ,என்னக்கு ஆப்பு வைக்கத்தான் அவங்கள் வாறாங்கள் "

                              " ஒ அப்படியே,,அப்பிடி என்ன குழப்பம் இங்கே,,நீ தான் நல்ல ஒழுங்கா வேலை செய்யுறியே ,நல்லா சமைக்கிறியே "

                              "   நீ தான் இங்கே சாப்பிடுவதில்லையே,பிறகு எப்படி சொல்லுறாய் இங்கிலிங் "

                              " நான்   இங்கே சாப்பிடுவதில்லை.அது உண்மை நான் வெளியே எங்கேயும் சாப்பிடுவதில்லை, ஆனால் இங்கே சாப்பிடும் பலர் நீ ஒரு நல்ல சமயல்க்காரன் என்றுதான் சொல்லுரார்கள்,விதம் விதமா வித்தியாசமாக  மெனு போடக்கூடியவன் என்று சொல்லுறார்கள்."
                             
                                " அது உனக்குத் தெரியுது ,,உலகத்துக்கும் தெரியுது,,சிலருக்கு மட்டும் அது குத்திக் குடையுது "

                                  "  உனக்கும் உன் வேலைக்கும்  ஒன்றும் நடக்காது ,நான் ப்ரே பண்ணுறேன் உனக்காக, கர்த்தர் எப்பவுமே என்னோட பிராதனையைக் கேட்பார் , அது ஒருநாளும் வீண்போகாது "

                               "   உண்மையாவா சொல்லுறாய் இங்கிலிங்,,ப்ரே பண்ணினால் நாங்கள்  வேண்டுவது நடக்குமா "

                                 " நிட்ச்சயமா நடக்கும்,பைபிளில் அப்படிதான் சொல்லி இருக்கு ,ஜெகோவா தேவனோட வாக்குத்தத்தம் ஒருநாளும் வீண்போனதில்லை "

                              " அப்பிடியே என்னோட எதிரிகளுக்கும் ப்ரே பண்ணு, இங்கிலிங் ,அவங்களும் பாவம் தானே,,பிழைச்சுப் போகட்டும் "

                          " ஹ்ம்ம்.. ஜெகோவா தேவனின் இராச்சியத்தில் புலி புல்லுத் தின்னும்,,மானும்  சிங்கமும் ஓடி விளையாடும்,,இரவே இல்லாத பகல் ,,மனமெல்லாம் அமைதி  இருக்கும்,, கட்டாயம் நான் உனக்காகப் ப்ரே பண்ணுவேன் "

                                   என்றாள் .மங்கல்ஸ் நியூஸ் பேப்பரை மேசையில் அடிச்சு வைச்சுப்போட்டு. என்னை " குசினிக்குள்ள  வா, உனக்கு இண்டைக்கு இருக்கு  மவனே ," என்பது போலப் பார்த்தா. பார்த்திட்டு எழும்பிப் போட்டா . நான் கொஞ்ச நேரம் இங்கிலிங் உடன் கதைச்சுக்கொண்டு இருந்திட்டு குசினிக்குள்ள வந்தேன் .மங்கல்ஸ் முகத்தில கடுகு வெடிச்சு தாளிக்கக் தொடங்கினா,

                                      " அவள் ஒரு விசரிபோலக்  கதைக்கிறாள் ,நீ அதை ஒரு விசரன் போலக் கேட்குறாய்,,ப்ரே பண்ணினால் என்ன நடக்கும் சொல்லு பார்ப்பம்,,ஒண்டும் நடக்காது,,யாருக்குக் காது குத்துறாள் அவள்  "

                            " அப்படி இல்லை மங்கல்ஸ்,,நம்பிக்கை தான் பிராத்தனை "

                                " அப்படியோ,, எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கு,யாழ்பாணத்தில் எங்கட வீட்டு வளவுக்கையே ஒரு சின்ன வைரவர் கோவில் கட்டி  வைச்சுக் கும்பிட்ட ஆட்கள் நாங்கள் ,,நீ எனக்கு சாமிப்  படம் போட்டுக் காட்டாதை   "

                            " ப்ரே பண்ணினால் அது பலிக்கும் என்று இப்ப இந்தக் குசினிக்க வைச்சே நிரூபிக்கவா மங்கல்ஸ் "

                        " ஒ சவால் விடுறியா,,எங்க நிரூபித்துக்காட்ட்டிப் போடு பார்ப்பம். நான் யுனிவேர்சிட்டியில் படிச்சவள்,,நீ பத்தாம் வகுப்பே படிச்சியோ தெரியாது,,திருவிளையாடல் படத்தில நாகேஷ்  நடிக்கும் தருமி போல எனக்கு சவால் விடுறாய்  "

                          "  மங்கல்ஸ் ஒரு சின்னச் சட்டியில் எண்ணை கொஞ்சம் எண்டுங்க,,அதை இந்த மைக்கிரோ அவனுக்க வைச்சு அவனை ஹை டேம்பிரேச்சர் லெவலில் ஒன் பண்ணுங்க,,அதைச் சூ டாக விடாமல் ,நான் ப்ரே பண்ணுறேன் ,,என்ன நடக்குது என்று  பாருங்க "

                             உடனயே மங்கல்ஸ் மரக்கறி எண்ணையை எடுத்து ஒரு சின்ன சட்டியில் ஊற்றி மைக்கிரோ அவனில வைச்சு ஹை ஹீட் இல செட்பண்ணி வைச்சா. நான் ப்ரே  பண்ணுவது போல மவுனமாக நிண்டுகொண்டு இரவுக்கு எந்தப் பப்புக்கு தண்ணி அடிக்க யாரோடு போகலாம் என்று ஜோசித்துகொன்டிருன்தேன் . மங்கல்ஸ் பத்து நிமிடம் கழிச்சு எண்ணையை ஒரு சூடு தாங்கும் கிளவுஸ் கைக்குப் போட்டு வெளிய எடுத்தா. எண்ணை உள்ளுக்கு வைச்ச மாதிரி இருந்தது , எந்த மாற்றமும் இல்லை .

                             "   ஹ்ம்ம்,,,என்ன நடந்தது ,, எண்ணை அப்படியே இருக்கே, இந்த மைக்குறோ அவன் வேலை செய்யுது இல்லை போல "

                             " இல்லையே நீங்க இதுக்கு முதல் என்னவோ வைச்சு சூடாக்கினின்களே , "

                            " பொறு இன்னொருக்க வைச்சுப் பார்கிறேன், நீ என்னவும் மயிக் காட்டி இருகிறாய்,,உன்னோட  பிரேயர் எண்டது பொய்,,இதுக்குள்ள என்னவோ ட்ரிக்ஸ் இருக்கு "

                                 " சரி இன்னொருமுறை நல்ல வடிவா வைச்சு,,பக்கத்தில் நின்றே செக் செய்து பாருங்க."

                          மங்கல்ஸ் மறுபடியும் எண்ணையை உள்ளே வைச்சுப் போட்டு பத்து நிமிடம் கழிச்சு எண்ணையை ஒரு சூடு தாங்கும் கிளவுஸ் கைக்குப் போட்டு வெளிய எடுத்தா. எண்ணை உள்ளுக்கு வைச்ச மாதிரி இருந்தது , எந்த மாற்றமும் இல்லை.

                               " ஹ்ம்ம்,,எனக்கு ஒன்றுமே புரியவில்லை ,,ஆனால் இது என்னவோ உன்னோட சுத்துமாத்து ,,அது மட்டும் நல்லாத் தெரியுது "

                                         இந்த விளையாட்டை நான் வேண்டும் என்றே மங்கல்ஸ் இக்கு மண்டையைக் குழப்ப செய்தேன் , மைக்குரோ அவனில எண்ணை யார் வைச்சாலும் சூடாகாது.கடவுளே வந்து வைச்சாலும் சூடாகாது ,அதுக்குக் காரணம் சயன்ஸ். என்னோட பிராத்தனை அல்ல. எண்ணையின் மோலிக்குயுலர் அணுக்களின் மூலக்கூறு  வடிவம் அதன் மழுப்பிய முனைகளில் வழுக்கும் தன்மை உள்ளது. தண்ணி போல மைக்குரோ வேவ் அதில மோதி வெப்பம் உண்டாக்க முடியாது. அதுதான் காரணம் . மங்கல்ஸ் கொஞ்சம் ஜோசிதுக்கொண்டு நின்றா

                                 " சரி விடு,,நாளைக்கு உனக்கு விசாரணை இங்கே நடக்கப்போகிறது ,என்ன செய்யிற பிளான் அதுக்கும் என்னவும் ப்ரே பண்ணி திரிக்கிஸ் காட்டாலாம் என்று நினைக்காதை ,அது ஒண்டுமே நடக்காது "

                                "   ம். அது எனக்கும் தெரியும் "

                              " நீ தனியாவா இருகிறாய்,, இண்டைக்குத்தான் கடைசி நாள் உன்னோட கதைச்சு முடிக்க அதால கேட்குறேன் "

                               "  ம்,, தனியா இல்லை .."

                               " யாரோடு இருகிறாய்,,உன்னோட நோர்க்ஸ் உச்சரிப்பைப் பார்த்தா ,,யாரோ நோர்ஸ்கியோடு இருக்கிற மாதிரி இருக்கு..சில புக்மோல் சொற்கள்  அப்படியே நோர்க்ஸ் இல  அழகா சொல்லுறாயே, அதால கேட்டேன் "

                               " ஹ்ம்ம்... அதைப்பற்றிக் கதைக்க விருப்பம் இல்லை மங்கல்ஸ் "

                         " உனக்கு ஒரு விசியம் தெரியுமா,,இந்த நாலு நாள் நான் இங்கே ரிப்போட் எழுத வந்த நாட்கள் போல வேற எங்கேயும் எனக்கு எரிச்சல் தாற மாதிரி இருக்கவில்லை,,அதுக்குக் காரணம் யார் தெரியுமா "

                                " தெரியும்,,நான் தான் மங்கல்ஸ் "

                                 " அட அட அட அதெல்லாம் நல்லா உனக்கு விளங்குதே..நீ ஒருவிதத்தில் எனக்கு தம்பி போல ,,சிலநேரம் உன்னைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை ,எனக்கு வீட்டில எவளவு பிரசினை என்று உனக்குத் தெரியாது "

                       " ஹ்ம்ம்,,எல்லா வீட்டிலையும் பிரச்சினைகள் இருக்கு தானே "

                        "  என்னோட புருஷன் என்னோட முகம் பார்த்துக் கதைப்பதில்லை,,நான் இப்ப குண்டு ஆகிட்டனாம்,,கலியாணம் கட்டும் போது நல்ல மெலிசா இருந்தேன்..பிள்ளைகள் பிறந்த பின்  குண்டு ஆகிட்டேன்  அது அந்தாளுக்கு ஒரு பெரிய பிரசினை "

                             " ஹ்ம்ம்,,ஜிம்முக்குப் போகலாமே உடம்பைக் குறைக்க மங்கல்ஸ் "

                             " போகலாம்தான் அதுக்கு நேரம் வேணுமே ,,வீட்டை வேலை முடிஞ்சு வந்தா என்னோட புருஷன் இந்தியன் சட்டலைட்  டிவியில் சித்தி சீரியல் பார்த்துக்கொண்டு சோபாவில் இருப்பார்,,ஒரு சின்ன உதவிதன்னும் எனக்கு செய்வதில்லை,,வேணுமெண்டு அப்படி செய்யுறார் "

                                  "   ஹ்ம்ம் "

                                " என்னோட ரெண்டு வளர்ந்த பெட்டையளும் அம்மா சாப்பிட்டிங்களா என்று ஒருநாளும் கேட்காதுகள் ,,ஆனால் நான்தான் சமைக்கிறேன் ஒவ்வொரு நாளும் "

                                " ஹ்ம்ம் "

                          " என்னோட மகன் தான் தலை இடிக்குது என்றால் உடன நெத்தியில் விக்ஸ் தேச்சு விடுவான் "

                                  "  ஹ்ம்ம் "

                        " எனக்கு ரெண்டு தம்பி, ஒருத்தன் லண்டனில்,,மற்றவன் ஜெர்மனியில் ,,அவங்களை நான் தான் வெளிநாட்டுக்கு எடுத்து விட்டேன் பிறகு ,ரெண்டு பேருக்கும் நான் தான் பொம்பிளை பார்த்துக் கலியாணம் செய்து வைச்சேன்  "

                                " ஹ்ம்ம்,  அது நல்ல விசியம்தானே மங்கல்ஸ் "

                        " அப்படிதான் நானும் நினச்சேன்,,கடைசித் தம்பியின் மனுசிக்கு என்னில பொறாமை ,,மங்களம் மச்சாள் உங்களுக்கு கதைக்கப் பேசத் தெரியாது எண்டு எனக்கே வாய்க்கு வாய் காட்டுறாள்..அவளே ஒரு கஷ்டப்பட்ட குடும்பம்,,நல்லா வரட்டும் என்று நினைச்சு தம்பிக்கு கட்டி வைச்சேன் "

                             "   ஹ்ம்ம் ,,"

                             " இலண்டனில் உள்ள மற்றத் தம்பி மக்டொனாலில் மனேச்சர் ,,அவன் இரவிரவா முறிஞ்சு உழைக்க அவனோட பெண்டில் சீட்டுப் பிடிச்சுக்கொண்டு திரியுறா,,நகை வேண்டுறது,,சீலை வேண்டுறது ,,பிறகு அதை எனக்கு காட்டி நாக்கு வழிக்கிறது "

                              "  ஹ்ம்ம் "

                               "   யாழ்பாணத்தில எனக்கு அப்பா அம்மா சீதனமா தந்த காணியை ஆமிக்காரர் அதியுயர் பாதுக்காப்பு வலயமெண்டு பிடிச்சு,,வீட்டைத் தரை மட்டம் ஆக்கிப்போட்டாங்கள் "

                                " ஹ்ம்ம்,,இப்ப  ஆட்கள் கொஞ்சம் போய்ப் பார்கிறார்கள் என்று சொன்னார்களே "

                               "  நானும் ஆட்கள் அனுப்பிப் பார்க்க இப்ப அந்தக் காணியை யாரோ வைபோசா பிடிச்சு வைச்சு தாய் உறுதி எல்லாம் மாத்தி எழுதி வைச்சுக் கொண்டு  இருக்குதுகளாம் "

                               "   ஹ்ம்ம்,,,அப்படியா,, பரமார்த்த குரு கொள்ளிக்கட்டை ஆற்றுத் தண்ணிக்க  வைச்சுப்  பார்த்த மாதிரி இது வேறயா  "

                       "  நான் எவளவு மனத்தால தனிமை ஆக வாழுறேன் என்று வெளியால ஒருத்தருக்கும் தெரியாது..சரி  என் கதையை விடு,,நீ ஏன் இப்பிடி தலையால தெறிக்கிறன்  எண்டு நிக்கிறாய் "

                              "  ஹ்ம்ம்,,,எனக்கு விசர் "

                         " அப்படியா,,ஆனால் நீ நல்ல திடகாத்திரமாய் இருகிறாய்,,நல்லா சிந்திக்கிறாய்,,விசர் என்டுறாய் ,,ஒண்டுமே என்னால அனுமானிக்க முடியவில்லை ,,என்னவோ நான் ரிப்போட் எழுதிட்டேன்,,நாளைக்கு விசாரணை,,இனி நீயும் உன் பாடும்,,ஆளை விடு ,,சீ எண்டு போகுது உன்னை நினைச்சால்  "

                       " மங்கல்ஸ் இன்றைக்கு கடைசி நாள்,,நான் நல்ல தமிழ் சாப்பாடு சமைக்கவா உங்களுக்கு ,தமிழ்ப் பண்பாட்டில் சாப்பாடு போட்டு வழியனிப்பி வைக்க ஆசைப்படுறேன்,,இது என்னோட அன்பான வேண்டுகோள் " 

                                  என்றேன் , மங்கல்ஸ் வேற என்னவோ ஒரு விசியம் பற்றிக் கேட்கப்போற மாதிரி என்னைப் பார்த்தா. ஏனென்றால் தலைவாழை இலை போடும்  தமிழ்ச்  சாப்பாடு செய்யத்  தேவையான சேர்மானப்  பொருட்கள், சுவை சேர்ப்பிகள் , அந்த நோர்க்ஸ் எல்டர் சென்டரில் இருப்பதுக்கு வாய்ப்பே இல்லை. ஆனால் நான் எல்லாவிதமான மசாலாத்  தூள் , சரக்குத் தூள் ,அரைத்த தூள் ,வறுத்த தூள் என்று ஏறக்குறைய ஒரு நாட்டுக்கோட்டை செட்டிநாட்டுச்  சமையல் அறையே அதுக்குள்ளே ஒரு இடத்தில ரகசியமாக வைத்து இருந்தேன். 

                                  " இந்தக் குசினியின் ஒரு இடத்தில உள்ள ஸ்க்ரப் இல் நிறைய இந்திய  இலங்கை வகை சரக்குத்தூள் எல்லாம் ரகசியமாக ஒழிச்சு வைச்சு இருக்கே அதெல்லாம் உன்னோடது தானே "

                            "   ஓம்,மங்கல்ஸ்  ,,அதை பாவித்து தான்  சமைப்பேன்,,எனக்கு மட்டும்,,சில நேரம் .."

                                   " என்ன சில நேரம்,,,அதையும்  சொல்லு "

                                "   ஒவ்வொரு நாள் மெனுவில் வரும் உணவோடு சில நேரம் என்னோட ஸ்டைல் உணவு போடுவேன்,,,அப்போது இதுகளைப் பயன்படுத்துவேன் "

                              "  பார்த்தியா,,கடைசியில உண்மையைக் கக்கிட்டியே ,,அது நோர்வே சத்துணவு சட்டப்படி பிழை தெரியுமா அப்படி எழுதப்பட்ட விதிகளுக்கு எதிராக  செய்வது,,"

                               "   தெரியும்,ஆனால் வயதானவர்கள் ஒன்றும் சொல்வதில்லை,,ரசித்து சாப்பிடுவார்கள் மங்கல்ஸ் "

                               "  வயசான பழசுகளுக்கு நாக்கு நம நம எண்டு  இருக்கும்,,அதுக்கு நீ நாரத்தங்காய் தேய்ச்சு விடுறாய், சோ அதனால நீ செய்யிறது எல்லாம் நல்ல நியாயமான  செயல் , சோ, அதனால நீ சட்டத்தை மதிக்காமல் மீறலாம் அப்படித்தானே "

                             "   என்னோட  சிந்தனை இந்த மனிதர்களுக்கு என்னவெல்லாம் அவர்கள் இறுதிக் காலத்தில் செய்தால் சந்தோசமாக்க முடியுமோ அதெல்லாம் செய்வதில் சட்டம் என்ற ஒன்று தேவை இல்லை,,என்பது என்னோட கருத்து..சத்துணவு சட்டப்படி சமைச்சால் என்ன சமைக்காவிட்டால் என்ன,,,அவர்கள் எப்படியோ சாகத்தான் போகிறார்கள் "

                              "  அது உன் தனிப்பட்ட கருத்து,, நான் ஒரு அதிகாரியாக இங்கே நின்று உன்னைப்போல  எடுத்தேன் கவிட்டேன்  எண்டு  கருத்துச்  சொல்ல முடியாது,  

                                " உங்க கருத்தா இப்ப  முக்கியம் ,,எனக்கு பசிக்குது மங்கல்ஸ்,சொல்லுங்க உங்களுக்கு சமைக்கவா இப்ப "

                        "  ஹ்ம்ம்,,,என்ன சமைக்கப் போறாய்  சரி ,உன்னோட ரகசிய மசாலாத்தூள் பெட்டகம்  இருக்கே அதில பாட்ஷா மசாலா தூள் என்று ஒரு டின் இருக்கே,,அதென்ன நான் கேள்விப் பட்டதே இல்லையே,,அது எதுக்கு பயன்படுத்துவாய்   "

                                "  அது,,நோர்த் இண்டியன் ஸ்டைல் சாப்பாடு செய்யும்போது பாவிப்பேன்  மங்கல்ஸ்....இன்றைக்கு ஹைதராபாத் நிஜாம் றோயல் புரியாணி தம்பிடிச்சு சமைக்கப் போறேன் "

                                "   ஹ்ம்ம்,,பெயரைக் கேட்கவே ஒரு மாதிரி இருக்கு,,இதெல்லாம் எங்கே சமைக்கப் பழகினனி "

                                   "  இந்தியன் ரெஸ்ட்ரோரண்டில் வேலை செய்த நேரம்  பழகினேன் ,,இன்றைக்கு உங்களை சிரிக்க வைக்கவா "

                             " என்னது,,என்னை சிரிக்க வைக்கப்போறியா,,,,அது  நடக்காது,,எங்கே சொல்லு எப்படி சிரிக்க வைப்பாய் ,,சொல்லு "

                             " ஒரு கதை சொல்லுறேன் ,,கேட்குறிங்களா மங்க்ல்ஸ் "

                       "  ஹ்ம்ம்,,சரி  சொல்லு "

                              " ஒரு ஊரில ஒரு ராஜா அரண்மனையில் இருந்தான் "

                              " ராஜா அரண்மனையில் தான் இருப்பான்,,வேறன்ன ஹோட்டலிலா இருப்பான்,,கதை தொடக்கிற விறுத்தத்தைப் பார் "

                                " அந்த ராஜாவுக்கு முன்னால முதல் மந்திரி இருந்தார் "

                                "  ராஜாவுக்கு முன்னாலதான் முதல் மந்திரி இருப்பார்,,வேற எங்க சிக்கியூரிட்டி போல வாசலியா இருப்பார்,,சரி கதையைச் சொல்லு "

                            "  அந்த ராஜா அந்த மந்திரிக்கு ஒருநாள் ஒரு ஐடியா சொன்னார் "

                                " என்ன சொன்னார் "

                              " அந்த  ராஜா ஒரு கட்டளை போட்டார்........அதைக்கேட்ட முதல் மந்திரி நல்ல ஐடியா என்றார்,,ராஜா  உடன  நீ தானே முதல் மந்திரி அப்ப  இண்டைக்கு  இரவு .உன்னோட மனுசியை முதல் முதல் அனுப்பு என்றார்....அதன்படி  ......மந்திரி  இரவு வீட்டை போய் அவர் மனுசிக்குச் சொல்ல..."..

                        "  ஒ இது கொசப்புக் கதை போல இருக்கே,,,எனக்கே இந்தக் கதை சொல்ல உனக்கு துணிவு வருதே ,,சரி சொல்லு இன்டரஸ்ட் ஆக  இருக்கே.."

                            "    இல்லை மங்கல்ஸ் ,,உங்களுக்கு பிடிக்காவிட்டால் சொல்லவில்லை,,"

                            "  இல்லை சொல்லு,,தொடக்கிப்போட்டு நிப்பாட்டாதை...எனக்கு இப்பவே கற்பனை தாறுமாறாப் பாயுது .."

                             "  ராஜா  போட்ட கட்டளைப்படி,,,மந்திரி  மனுசியை அரண்மனைக்கு இரவு கொண்டுவந்து விட்டுப்போட்டு   ,,வெளியே ரோட்டில நிண்டார் ..."

                               " அய்யோ  ,,இது  என்ன கதை,,படுக்கை அறைக் கதை போல இருக்கே "

                         "   மங்கல்ஸ்  இதுக்கு மேலே ,,உங்களுக்கு பிடிக்காவிட்டால் சொல்லவில்லை,,"

                        " அடக் கடவுளே,,இதென்ன கதை,,பயங்கரக் கொசப்புக் கதை போல இருக்கே.."

                           " இதுக்கு மேல  தான்  கிளைமாக்ஸ் வருகுது ..கொஞ்சம் ஓப்பின் ஆக வரும் ..சொல்லலாமா எண்டு ஜோசிக்கிறேன் ..உங்களுக்கு பிடிக்காவிட்டால் சொல்லவில்லை,,"

                                  "  இனி என்ன முழுவதும் நனைஞ்ச மாதிரி,,இனிக் குடையப் பிடிச்சு ஒண்டும் வரப்போறதில்லை,,சொல்லு ..பிறகு,,        "

                                "    .......................................................   ..................  ..................."

                           " அடப்பாவி..இதென்ன கதை..அய்யோ,,கேட்கவே ஒரு மாதிரி  இருக்கு "

                           " அப்ப நான் சொல்லவில்லை,,,நான் சமைக்கத் தொடங்கிறேன் "
             
                               "  ஹ்ம்ம்..பரவாயில்லை .சொல்லு  ..எனக்கு முடிவைக் கேட்காவிட்டால் தலை வெடிக்கும் போல இருக்கு "

                              "  ......  ,,,,,,,,   .....   அந்த நேரம் பார்த்து ஒரு பிச்சைக்காரன் வந்தான் ,,,அவன் முதல் மந்திரியிடம்  கேட்டான் ....."

                           "    என்ன கேட்டான்.."

                            "   பிச்சைக் கேட்டான் "

                        " ஒ ,,அதுக்கு  மந்திரி  என்ன சொன்னார் "

                          " ஹ்ம்ம்,,இது  சொன்னால் கோவிக்காதீங்க,,கொஞ்சம் ஓவர் இது."

                         " அட அட இவளவும் சொல்லிப்போட்டு நல்லவனுக்கு நடிக்கிறதைப் பார் ,,சொல்லு  ,,சொல்லாட்டியும் நீ ஒரு  உதவாக்கரை ஊத்தைவாளி தான்  அதில சந்தேகம் இல்லை "

                              " அப்ப நான் சொல்லவில்லை "

                             " டேய் ,,சொல்லடா,,இல்லாட்டி எனக்கு இரவு  நித்திரை வராது ..சொல்லு,,சொல்லித்தொலை..என் விதி கேட்டுத் தொலைக்கிறேன் "

                            "  மந்திரி சொன்னார்,,,,,ராஜாவுக்குக்  கேட்கிற  மாதிரி  ....நாட்டை ஆளுற ராஜாவே ,,,,,,,,,,  ,,,,,,,,,,  ,,,,,,,..உனக்கு  என்னடா பிச்சை வேண்டிக் கிடக்கு ,,என்று  சொன்னார் "

                                 " ஹஹஹஹா  ஹஹஹஹா  ஹஹஹஹா  ஹஹஹஹா ..அய்யோ சிவபெருமானே,,நீ எங்கதான் இந்தக்  கதை எல்லாம் கேட்டுப் படிசுக் கிழிச்சியோ,,,ஹஹஹா  ஆனால்  என்னை சிரிக்க வைச்சிட்டாய்,,எனக்கு இனி அந்தப் பிச்சைக்காரனை நினைக்கிற நேரம் எல்லாம் சிரிப்பு வரப்போகுதே..பாவி ."

                              அன்று நான் சொன்ன மாதிரியே ரோயல் புரியாணி, ரேக்க சலாட், பாஸ்மாதி ரைஸ் புலாவ்  சமைத்துக் கொடுத்தேன்.மங்கல்ஸ் அதில அரைவாசியை  பார்சல் கட்டிக்கொண்டு வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போனா. அது எப்படி செய்வது என்று மங்கல்ஸ் இக்கு நான் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தேன். மங்கல்ஸ் எனக்கு சமைக்கத் தெரியும் என்பதில் நம்பிகை வந்த மாதிரி மனது கொஞ்சம் லேசாக இருந்த மாதிரி என்னோட கதைத்தா.

                              அதில கொஞ்சம் அக்கறை இருந்தது.ஆனால் ரிப்போட் பற்றி கடுமையாகவே சொன்னா, அது அவாவின் கடமை என்று சொன்னா. நான் அதுக்கு ஒன்றுமே சொல்லவில்லை. இடைக்கிடை என்னைப் பார்த்து  சிரிச்சா. பிறகு தனிய சிரிச்சா .அந்தப் பிச்சைக்காரனை நினைச்சு சிரிச்சு இருக்கலாம் என்று நினைக்கிறன் .


                                           அடுத்தநாள் காலை நான் வேலைக்குப்போகும் போது ஒரு நடுத்தர வயது  ஆணும் ஒரு  இளம் பெண்ணும் ரெஸ்டாரென்ட் மூலையில் இருந்த ஒரு மேசையில் பைல் வைச்சுக்கொண்டு இருந்தார்கள் . நான் " தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை. நாக்கில மூக்கையே தொட்டவன் நானடி .." என்று அவர்களைப் பார்த்து பாடிக்கொண்டு .குசினிக்குள்ள போனேன்.

                                          மங்கல்ஸ் ஜன்னலுக்கால வெளியே பார்த்துக்கொண்டு எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றா. என்னோட கதைக்கவில்லை. நான் ஒரு எக்ஸ்பிரசோ கோப்பி போட்டுக் குடிச்சுக்கொண்டு இருந்தேன். பிறகு அதைக் குடிச்சு முடிய அவர்கள் என்னை விசாரணைக்கு  வரச்சொல்லி அழைத்தார்கள் .

                                     விசாரணையில் நான் சத்துணவுச் சட்டத்துக்கு எதிராக அதை மதிக்காமல் காலுக்க போட்டு மிதிச்ச  எல்லா விசியங்களையும் ஒவ்வொன்றாகக் கேட்டார்கள்.எல்லாத்துக்கும் " ஓம் " என்று சொன்னேன். அவர்கள் கேட்ட சில கேள்விகள் விளங்கவேயில்லை . அதுகளுக்கும் "ஓம் " என்று சொன்னேன் . " இல்லை என்று மறுத்து ஒரு பதிலும் நீ சொல்லுறாய் இல்லையே " என்று கேட்டார்கள்.அதுக்கும் " ஓம் " என்றேன். " நாங்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் விளங்குதா " என்று அந்த இளம் பெண் கேட்டாள்.அதுக்கும் " ஓம் " என்றேன் .

                                    நோர்வேயில் என்னவும் தவறு செய்தால் எழுத்தில் வைக்கும் ஒரு டாக்குமென்ட் ஆதாரத்துக்கு " இன்னதெல்லாம் செய்தியா "என்றுதான் கேட்பார்கள்." ஏன் செய்தாய் " என்று கேட்கமாட்டார்கள் . ஒருவன் தவறு செய்வதுக்கு அவன் மனநிலை அளவில் காரணங்கள் இருக்கும். அதை பெரிய நியாயஸ்தன் போல துக்கிப்பிடித்து அவர்கள் விளக்கம் கேட்பதில்லை. சில நேரம் சைகாற்றிஸ் அல்லது பொலிஸ் கேட்கலாம் என்று நினைக்கிறன்.

                             அந்த நடுத்தர வயது அதிகாரிதான் மங்கல்ஸ் எழுதிக் கொடுத்த ரிப்போட்டை வைத்துக்கொண்டு கேள்விகள் கேட்டார்  நான் அந்த விசாரணை தொடக்கம் முதல் முடியும் வரை அந்த இளம் விசாரணை அதிகாரியாக வந்த இளம் பெண்ணின் முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட எண்ண ஓட்டத்தை உள்ளே இறங்கி வரிக்கு வரி வாசிப்பது போல இருந்தது. இயல்பாகவே அவளோட முன்வரிசை மேற்பற்களின் ஒழுங்கில்  கங்குவேலி வரிச்சு மட்டைபோல நீக்கல் விட்ட இடைவெளிகள் இருந்தது.   முடிவில் எனக்கு கடிதம் அனுப்புவோம் என்று சொன்னார் அந்த ஆண் அதிகாரி .

                                        அந்த இளம் விசாரணை அதிகாரியாக வந்திருந்த இளம்பெண் அதன்பின் என்னோட சில விசியம் தனிப்படக் கதைக்க முடியுமா என்று நட்பாகக் கேட்டாள், ஓம் முடியும் , வெளியே வா மர வாங்கில் இருந்து  கதைக்கலாமே என்று சொன்னேன் ,அவளுக்கும் எனக்கும் ரெண்டு கோப்பி போட்டு எடுத்துக்கொண்டு போனேன் , கையைக் கொடுத்து ஹாய் சொல்லி , அறிமுகத்துக்கு  என்னவோ ஒரு அதரப்பழசான அதிகம் பாவனையில் இல்லாத நோர்க்ஸ் பெயர் தன்னோட பெயர் என்று  சொன்னாள்,அது எனக்கு நினைவில்லை, அவள் கேட்டாள் 

                                   " உன்னை இதுக்கு முதல் எங்கயோ பார்த்து இருக்கிறேன்,,எங்கே என்று சரியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை ,,ஹெல்ச முன்டிக்கெட் தலைமை அலுவலகம் வந்து இருக்கிறாயா "

                                      " இல்லை அந்த இடங்களுக்கு நான் வாசல்படியே மிதித்ததில்லை "

                                       "  பிறகு,,வேற எங்கே உன்னைக் கண்டேன்,,சொங்க்ஸ் பிறிவில்லிக் சென்றால் பக்கம் வந்து இருக்கிறாயா "

                                " ஓம்,,,அங்கே என்னோட பிரெண்ட் சிசிலியா வேலை செய்தாள் "

                          " யெஸ்,,அங்கே தான் உன்னைப் பார்த்து இருக்கிறேன்,,அங்கே நான் உப்பிளாரின் பயிற்ச்சி எடுத்தேன்,,சிசிலியாவைத் தெரியும்,,நல்ல பெண்மணி ,,உன்னிடம் ஒன்று கேட்கவா "

                              "  கேள் "

                             "  உனக்கு இந்த இடத்தில வேலை செய்யப் பிடிக்கவில்லையா "

                                  " ஓம்,,அது தான் உண்மை "

                               " ஹ்ம்ம்,,உனக்குப் பிடிக்காத வேலையையோ,,பிடிக்காத இடத்திலையோ வேலை செய்வது கஷ்டம் தான்,,வேற ஒன்றும் இல்லை,,சிசிலியாவைச் சந்தித்தால் என்னோட அன்பைச் சொல்லு ,ஓகே தானே "

                                      "  ஓகே,,கட்டாயம் சொல்லுவேன் , ஆனால் சிசிலியா இப்ப கிரீஸ் நாட்டில கோடை விடுமுறையில் சுற்றிக்கொண்டு நிக்கிறாள், வந்தபின் சொல்லுறேன், நன்றி என்னோட கதைத்ததுக்கு "
                                         

                                 ஐயர் வரும் வரைக்கும்  அம்மாவாசை சில நேரம் காத்திருந்தாலும்  காத்திருக்கும் ஆனால் நோர்வேயில் அள்ளி வைக்கிற கடிதங்கள் கொள்ளி வைக்க உடன உடன வரும். அந்தக் கடிதம் திங்கக் கிழமையே கைக்கு வந்திட்டுது. நாலு பேப்பரில் வந்தது. அதை கொஞ்சம் வாசித்தேன். பிரோகிரட்டிக்கள் உத்தியோகபூர்வ  வார்த்தைகள் தேர்ந்து எடுத்து எழுதிய நோர்க்ஸ்கில்  இருந்தது. அதை மேலோட்டமா வாசித்தேன் . அதில ஒரு மண்ணும் விளங்கவில்லை. அதை சரக் சரக் சரக் என்று துண்டு துண்டாக் கிழித்தேன் , அந்த சத்தம் கேட்கவே இனிமையாக இருந்தது. 

                                                அந்த வேலைநீக்கக்  கடிதத்தில் கடைசிப்  பக்கத்தில் ஒரு பேப்பர்  வெறுமையாக  இருந்தது . வெற்றுத்தாள்களை  எதற்க்காக  கிழிக்கவேண்டும்  என்று ஜோசிப்துப்போட்டு  அதில  கவிஞ்சர்  கலாப்பிரியா  எழுதிய  விதி  என்ற  கவிதையை  எழுதினேன். அந்தக்  கவிதையின்  வரிகள் வரிக்குவரி  நினைவு  இருந்ததால்  அதை  எழுது  முடிந்தது 

                                   அந்திக் கருக்கலில் இந்தத் திசை தவறிய
பெண் பறவை தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய் அலைமோதுகிறது
எனக்கதன் கூடும் தெரியும் குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன் பாசை புரியவில்லை

என்று எழுதி எல்டர்சென்டரில் இருந்த நோட்டிஸ் பலகையில் அந்தப் பேபரைக் கொழுவிவிட்டேன்.

                                    செவ்வாய்க்கிழமை என்னோட கடைசி நாள் அந்த எல்டர் சென்டரில்.வயதானவர்களுக்கு நான் வேலையை விட்டுப் போறேன் என்று சொன்னேன்.என்ன நடந்தது என்று சொல்லவில்லை. அவர்கள் நான் என்னமோ பதவி உயர்வு பெற்று பெரிய இடத்துக்குப் போறமாதிரித்தான் நினைசார்கள். என்னோட கையைப்பிடித்து," நீ நல்லா வருவாய்  பயப்படாதை " என்றும் மறக்காமல் அம்போ எண்டு விட்டுவிட்டுப் போகாமல்  அடிக்கடி தங்களை வந்து பார்க்கச் சொன்னார்கள்.

                                          மங்கல்ஸ் போகும்போது என்னை மறுபடியும் சந்திக்கவே கூ டாது என்று சொல்லி வாழ்த்திப் போட்டுத்தான் போனா, ஆனால் விதி எப்பவுமே வேறுவிதமாக கோடுகள் கீறி வைக்கும் என்று அவாவுக்குத் தெரிய நியாயம் இல்லை.    அதுக்குப்  பிறகு நான் அந்த எல்டர் செண்டர் பக்கமே போனதில்லை, அந்த வேலை விட்டு கிட்டதட்ட ஆறு மாதங்களின் பின்

                               ஒருநாள்

                         ஒஸ்லோ சென்றல் ஸ்டேசனில் மெட்ரோ ட்ரைன் எடுக்கப் போகும்போது எனக்கு முன்னால ஒரு பெண் மங்களேஸ்வரி  போலவே தயங்கித் தயங்கி  நடந்து போனா. பந்தயத்தில் வாத்துக்கு  வளையம் எறிஞ்ச மாதிரி சும்மா " மங்க்ல்ஸ் " என்று கூப்பிட்டுப் பார்த்தேன் ,சடார் என்று திரும்பிப் பார்த்தா.பயம் வந்திட்டுது. தேவை இல்லாத அட்டமத்துச் சனியன் மறுபடியும் அடிச்சுப் பிடிச்சு ஓட்ட வருகுதே என்று செருப்பைக் கழட்டி அடிக்கப் போறாவோ என்று ஜோசிக்க ,மங்கல்ஸ் சிரிச்சா .

                            " ஹ்ம்ம்,,என்ன செய்யுறாய்,,எப்படி  இருக்கிறாய் ,,நல்லா இருக்கிறியா "

                             " என்னவோ இருக்கிறேன் மங்களேஸ்வரி  ..இப்ப சன்விக்காவில் பள்ளிக்கூடம் கழுவுற வேலை செய்யுறேன் "

                              " ஒ அது நல்லமே.எல்டர் செண்டர் வேலை போய் கிட்டதட்ட ஆறு மாதத்துக்கு மேலேயே,,,

                                  "ஓம்   "

                                 "  ஹ்ம்ம்,,சோசியல் அது இது எண்டு நோர்வே அரசாங்கத்திட்ட பிச்சை எடுக்காமல் வேலை செய்யுறாய்  அதுவே பெரிய விசியமே,,உன்னைப் பொறுத்தவரை"

                             "  இப்ப கொஞ்சம் திரிந்திட்டன் ,,பொறுப்பு வந்திருக்கு  மங்களேஸ்வரி  ,  " 

                         "  ஹஹஹஹா ,,அதை நீ சொல்லுறாய்,,ஹ்ம்ம், "

                          "  நீங்க  இப்ப  எப்படி  சுகமா  இருகுரின்களா  மங்களேஸ்வரி ,,இப்பவும்  ரிப்போட்  எழுதுற  வேலையா  செய்யுரிங்க "

                            "   இல்லை,,இப்ப  வேற  வேலை  ஆனால்  அதே  உணவுத்துறையில்  தான் ,,சரி  இப்ப  உன்னோட  நிண்டு  கதைக்க  நேரமில்லை  ,,போகபோறேன் "

                                 " சரி  போட்டு  வாங்கோ "

                            அவளவுதான்  மங்கல்ஸ்  வெடுக்கெண்டு  போக  வெளிக்கிட்டா. நானும்  ரெயில்வே ஸ்டேசனுக்கு போகும்  எலிவேடரை  நோக்கி  நடக்கத்  தொடங்கினேன் . சும்மா  ஒருக்கா  மங்கல்ஸ் ஐத்  திரும்பிப் பார்க்க ,அவா  என்னை  நோக்கி  வருவது  தெரிய  அவடதிலையே  நின்றேன்,கிட்ட  வந்தா,வந்து  

                            " ,நீ மங்கல்ஸ் என்று கூப்பிட ஏன் சடார் என்று திரும்பிப் பார்த்தேன் தெரியுமா ? "

                           " தெரியலை நீங்களே சொல்லுங்க "

                          " உன்னோட அந்த எல்டர் சென்டரில் இன்ஸ்பெக்சனுக்கு வந்த நேரம்,,நீ தானே எனக்கு மங்களேஸ்வரி என்ற பெயரைக் கோணல் மாணலாக்கிக்  கெடுத்து மங்கல்ஸ் என்று வைச்சாய்..அதை என்னோட அவருக்கு,,வீட்டில வந்து சொன்னேன்,,,அன்றில் இருந்து அந்தாளும் என்னை மங்கல்ஸ் எண்டுதான் வீட்டில கூப்பிடுவார்,,,இப்ப நாங்கள் சந்தோசமா இருக்கிறோம். "

                               என்று சொல்லிப்போட்டு  மங்கல்ஸ்  சிரிசுப்போட்டுப் போட்டா .     நான்  அந்த  ரெயில்வே ஸ்ட்சனில்  கொஞ்சநேரம்  ரெயில்கள் தண்டவாங்களை  மாற்றி  மாற்றி  வேகமெடுத்துப் போவதைப்  பார்த்துகொண்டிருந்தேன் . சில  ரெயில்கள்  மயில்க்க் கணக்கில்  ஓடிவந்த  களைப்பில்  அமைதியாக  ஆசுவாசமெடுத்து  நின்றுகொண்டிருந்தன. ஒஸ்லோ நகரம்  இரைச்சலாக அவசரங்களை  நெருக்கி  அடிக்கிக்கொண்டு நாலா  பக்கமும்  நெருங்கிக்கொண்டிருந்தது .

.
                             
.

                               


                                             

Saturday, 9 January 2016

பெட்டிசம் பாலசிங்கம்.

நீண்ட அமைதியில் உறங்கும்  மனதை உடைத்து வெளியேறும் சம்பவங்களும் ,அதைத்  தோற்றுவித்த மனிதர்களின் விசித்திர குணங்களும்   மிக முக்கியமான விஷயமாக மாறி  அந்த மாதிரியான கதைகளைப் பல  சமயம் அழகாக அமைத்து விடும் என்பதை  மறுப்பதற்கு இல்லை . எனினும்  கிராமங்களின் உயிர்ப்பை இழந்த வரலாறு பெருகி வரும் நேரத்தில் தாமோதர விலாஸ் சாம்பாரு  எப்படி தரமாக இருந்ததோ அதேபோல மசால் தோசையும் தொட்டுக்கொள்ள  மிளகாய்ப் பொடியும் கைக்குள்  இருந்த காலத்தில் 

                                              எங்களின் ஊரில   சின்ன வயசில் எங்களின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி பெட்டிசம் பாலசிங்கம் இருந்தார் . அவரை ஏன் காரண இடுகுறிப் பெயராக பெட்டிசம் எண்டு சொல்லுறது எண்டு பெட்டிசம் எழுதுறது எண்டால் என்ன எண்டு விளங்கியவர்களுக்கு தெரியும், பாலசிங்கத்துக்கு அரசாங்கத்தில் கிளறிக்கல் என்ற எழுத்துவேலை செய்யும் வேலை செய்ததால், இலங்கை குடியரசின் நிர்வாக சட்ட திட்டங்கள் தெரியும் , பெட்டிசம் எழுதும் தகுதி அத்தனையும் பெற்றிருந்தவர். ஆங்கிலத்திலும் எழுதக்கூடிய புலமை உள்ளவர். அதாலா பெட்டிசம் எழுதுறது, யாரை யாரிட்டப் போட்டுக் கொடுக்க வேண்டும் எண்டு இலங்கை ஜனநாஜக சோஷலிச குடியரசின் நீதி நிர்வாக  சட்ட திட்டங்கள் நல்லாத் தெரியும்.

                              பெட்டிசம் அதை ஒரு சமூக சேவைபோல தான் செய்தார் ,ஆனால் அவரின் சேவை பலருக்கு பீதியக் கிளப்புவதால்  அவரை ஊருக்குள்ள ஒருத்தருக்கும் பிடிக்காது . அயலட்டையில் யாருமே அவரோடும் ,அவரின் மனைவியோடும் கதைபதில்லை , நன்மை தீமையில் அவர்களை ஒதுக்கித்தான் வைத்து இருந்தார்கள் ,பெட்டிசம் மென்மையான மனிதர், அதிர்ந்து பேசமாட்டார் , வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் போல " வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடீனேன்,," என்பதுபோல நிலம் அதிராமல் , தலையைக் குனிந்துகொண்டு போறது தெரியாமல் போவார் , வாறது தெரியாமல் வருவார் ,ஆனால் அவருக்கு ஊருக்குள்ள என்ன நடக்குது எண்டு கடுவன் பூனை போல எல்லாம் தெரியும் ,
                                            
                                              பெட்டிசம் முக்கியமா, ஊருக்குள்ள விதானை வசதியான யாருக்கு கூப்பன் காட் கொடுத்திருகுரார் எண்டு A.G.A என்ற உதவி அரசாங்க அதிபருக்கு போட்டுக் கொடுப்பார் , A.G.A எந்த மதகு கட்டுற கொன்ட்ராகில எத்தினை சீமெந்து பாக்கை சுருட்டினது எண்டு G.A என்ற அரசாங்க அதிபருக்கு போட்டுக் கொடுப்பார், பெட்டிசம் தனிப்படவும் புரளியைக் கிளப்புவார் ,  ஒருவரைத் தவிர எங்கள் ஊரில் அவரோட  வேறு  யாரும் நேருக்கு நேர் நிண்டு கதைக்க மாட்டார்கள் , கதைச்சால் விளக்கெண்ணெய்க்க வெள்ளைப் பூடு போட்ட மாதிரி வில்லங்கம் வெடிக்கும் .

                                           அந்த ஒருவர் தான்  புண்ணியக்குஞ்சி . புண்ணியக் குஞ்சி   ஆருக்குமே பயம் இல்லை. அவர் பெட்டிசம் அளவுக்குப்  படிக்கவில்லை,அரசாங்க வேலையும் செய்யவில்லை   , ஆனால் வாயல வெட்டி வீழ்த்தி  ." உதறுகாலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள் " கதை போல அவரோடு  வாயைக் கொடுத்து  முண்டினால்  கொஞ்சமாவது சந்தோசமா இருக்கும்  வாழ்க்கை கடைசியில்  அலங்கோலமாய்த் தான்  முடியும் ,அவர் தான் பெட்டிசத்தை எப்பவும் 

                                  " என்ன கிளாக்கர் ஊர் அமைதியா இருக்கு,,பிரளயம் ,,பிரகண்டம் ஒண்டும் நடக்குதில்லையே,,,மெய்யாத்தான் ஊருக்குள்ள எல்லாம் சட்டப்படி ஒழுங்கு முறையில்   நடக்குதோ  அல்லது மேலோட்டமா  சாம்பிராணி போட்டு உள்ளுக்கு அலுவல்கள் நடக்குதோ ஒரு சிலமனும் விளங்குதில்லை "

                              "  புண்ணியம்,,,இந்த ஊரில எந்தக் காலத்தில  எல்லாம் ஒழுங்கா நடந்தது சொல்லு பார்ப்பம்,,கடவுளுக்குப் பயந்த ஒரு சீவன் இந்த ஊரில இருக்குதெண்டு எனக்கு காட்டு பாப்ர்ப்பம் ,,"

                               " காட்டினா அதுக்குப் பிறகு என்ன செய்வியள் கிளாக்கர் "

                              " நான் இதோட  கொம்பிளைன் எழுதுறதை,,அடுத்தவனில பிழை பிடிக்கிறதை அடியோடு விடுறன் ..புண்ணியம்  இங்கே எல்லாரும் திருகுதாளம்,,என்ன இன்னும் பிடிபடவில்லை  நீ உட்ப்பட ,,நீ எண்டா பெரிய திறம் எண்டு நினைக்காதை "

                                 "  அதென்னெண்டு  கிளாக்கர் ரெண்டு உள்ளங்  கையாலும் அடிச்ச மாதிரி அப்படி சொல்லுரிங்க ,,ஒரு புருப் இல்லமால் சொல்லக்கூடாது...பெட்டிசம்  எழுதக்கூடாது "

                                         "  பாத்தியே நீ பொயிண்டுக்கு சுத்தி வளைக்காமல் வந்திட்டாய்,,பெட்டிசம்  எழுதுறது  எண்டுறதும்  ஒரு உண்மையின் இன்னொரு வடிவம் தான் "

                                      " எப்பன் எல்லிப்போல  எனக்கும்  விளங்கிற மாதிரி பறையவேனும் கிளாக்கர்,,நான் என்ன உங்களைப்போல கொவோர்மேன்டில கோழி மேய்க்கிற வேலையே செய்தனான்  "

                                 " புண்ணியம் இங்கிலீசில் ஒரு விசியம் சொல்லுவாங்கள்  There is an old adage that says: எனக்கு  அது இங்கிலிசில் சொன்னால்தான் அதன் அர்த்தம் சரியா வரும்,,அது என்னென்டா   If it looks like a duck, and  walks like a duck, and quacks like a duck, then it is a duck!..சில விசியங்களை அசுமாத்ததில பிடிக்கலாம்,, மிச்சம் கொஞ்சம் விசாரிக்க வெளிய வரும் .."

                                              இப்படிதான் அவர்கள் உரையாடல் இருக்கும்,பெட்டிசம் இங்கிலிஸ் தொடங்கினால் புண்ணியக் குஞ்சி அதுக்குமேல கதைக்க மாட்டார் . பெட்டிசதுக்கு தெரியும் புண்ணியக் குஞ்சி அவளவு மோசமான ஆள் இல்லை எண்டு. ஆனால்  முக்கியமா எங்களின் சந்தியில் சில்லறைக்கடை வைச்சு இருந்த சுப்பிரமணியத்தை , அவர் சில்லறைக்கடை வைச்சு இருந்ததால் சில்லறை மணியம் என்று சொல்லுவார்கள் ,அவரைத்தான் பெட்டிசம் கண்டபடி விமர்சிப்பார்

                             " சில்லறை மணியம் வாழைப்பழம் ஒருகிலோ 25 ரூபாய் எண்டு போட்டு , பழத்தோட தோல் ,காம்பு எல்லாத்தையும் அதுக்குள்ளேயே  நிறுக்குறான், சில்லறை மணியம் காசு உரப்பையில அள்ளிக்கட்டுற திரிக்கிஸ் விளையாட்டு இனி கனகாலத்துக்கு ஓட்டுறது கஷ்டம் , அவனுக்கு நிறுத்தல் அளவு திணைக்களத்துக்கு கொம்பிளேன் எழுதி வைக்கப் போறான் பார் ஆப்பு  ... "

                                        எண்டு சொல்லுவார். சுப்பிரமணியத்துக்கும்  கொம்பிளேன் எழுதி வைக்கப் போற ஆப்பு பற்றி  தெரியும்,  சில்லறை மணியம் கோவத்தில எப்பவும்

                        " பெட்டிசம் ,கையில் அம்புட்டான் எண்டால், அவன்ட்ட ........   ரெண்டையும் நல .....எடுத்துப் போட்டுதான் விடுவன் " எண்டு திட்டுவார்,

                                 ஆனால் ஒருநாளும் அவர்கள் இரண்டு பேரும் நேருக்கு நேர் மோதும் அந்த குருசேத்திரப்போர் நடக்கவேயில்லை , உண்மையில் அவர்கள் இருவரின் சண்டைக்கு வேற ஒரு காரணமும் இருந்தது . அது பெட்டிசதின் பொஞ்சாதி பரமேஸ்வரி !

                                   முறிஞ்சு விழுகிற மாதிரி மெலிந்த தோற்றம் உள்ள திருமதி பரமேஸ்வரி பாலசிங்கம் என்ற அந்த பரமேஸ் , எங்கள் ஊரில் ஒரு காலத்தில் பஸ் கொம்பனி வைச்சு நடத்தின பணக்காரக் குடும்பம் ஒன்றில் பிறந்தவா. அரசாங்க உத்தியோகம் செய்யும் ஆண்களை கலியாணம் கட்டுவது ஒரு வித ஸமூக அந்தஸ்து என்று அடையாளம் இருந்த நேரம் கச்சேரியில் கிளார்க் ஆக இருந்த பாலசிங்கத்தை அவாவுக்கு கட்டிவைக்க,அந்தக் கிளார்க் எவளவு கரைச்சல் பிடித்த மனுஷனா ஊரில் உள்ளவர்களுக்கு எதிர் காலத்தில் மாறுவது பற்றி அந்த மனுசிக்கி தெரிய வாய்ப்பே இல்லைதான்.

                                      மற்றப்படி அவாவை பெட்டிசம் யாரோடும் பேச அனுமதிப்பதில்லை . வீராளி அம்மன் கோவிலில் கேதாரகெளரி விரதம் நடக்கும் நேரம் , கெளரி காப்பு போட்டுகொண்டு , குழந்தைகள் இல்லாத காரணத்தாலோ தெரியவில்லை  எப்பவுமே அபிராமி அந்தாதி கண்களில் நீர் வழிய தலையைக் குனிந்துகொண்டு

                              " நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை, என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின் ஒன்றும் அரும் பொருளே! " 

                                           என்று மனமுருகி படிப்பதை பார்க்கலாம். மற்றப்படி வெளியே காண்பதே அரிது .

                                    ஆனால் கொஞ்சம் விரசமாக பெட்டிசத்தின் பொஞ்சாதி எப்பவுமே சுப்பிமணியம் கடையில வந்து நிண்டு சில்லறைச் சாமான் வேண்டி முடியவும் அவரோட சிரிச்சு சிரிச்சு பேசிக்கொண்டு நிற்பா. அவாவோட ஊருக்குள்ள ஒருவரும் கதைககாததால அல்லது வேற ஏதும் காரணமா எண்டு எனக்கு தெரியாது. முதலில் மணியமே ஒரு சுவாரசியம் இல்லதா ஒரு மனிதப்பிறவி அவரோட எப்படி ஒரு பெண் மணிக்கணகில பேசுறா எண்டு விளங்கவேயில்லை. ஆனாலும் இந்த உலகத்தில பெண்களுக்கு யாரை உண்மையாகப் பிடிக்கும் ,பிடிக்காது எண்டும் அறுதியா சொல்லவே முடியாது, சில நேரம் பேச யாருமே இல்லாததால் ஒரு நட்பாக சில்லறை மணியதுடன் பேசியும் இருக்கலாம் , இல்லையா ,  சொல்லுங்க பார்ப்பம்.

                                       பெட்டிசதின் பொஞ்சாதி விசியம் இல்லாமல் சுப்பிரமணியம் கடையில நிண்டு நோகாமல் நொங்கு தின்னுரா எண்டு கதைவெளியே  கசிஞ்சு , அது மலிஞ்சு சந்தைக்கும் வர ,ஊருக்குள்ள எப்படியோ கதைவெளி வந்திட்டுது , இவளதுகும் மணியம் ஒரு பழைய பஞ்சாங்கம், பாக்கிறதுக்கு மண்ணெண்ணெய் பரல் போல வாட்ட சாட்டமான உடம்புள்ள அவர் ஒரு நாளுக்கு ஒரு சுருட்டுதான் பத்துவார், சுருட்டை வாயில வைச்சு கொண்டு இருப்பார் பத்தவே மாட்டார் , ஆனால் பத்தினா, அது பத்தி முடியும்வரை அணுக்குண்டு வெடிச்சாலும் அசையமாட்டார், 

                             அவர் கடையில் சேட்டுப் போட்டாமல் , கட்டி இருக்கிற சங்கு மார்க் சாரத்தை பொம்பிளையல் குளிக்கும்போது பாவாடையை உயர்த்திக் குறுக்குக்  கட்டு கட்டுவது போலக் கட்டிக்கொண்டு புழுங்கல் அரிசி மூட்டைக்கு மேலே ஏறி இருப்பார் . அவர் வைச்சு இருக்கிற ரேடியோவில் எப்பவுமே கண்டசாலா ,திருச்சி லோகநாதன் பாடல்கள் பாடும் இலங்கை வானொலி தமிழ் சேவை இரண்டில் பழையபாடல் நிகழ்ச்சிதான் பாட விட்டுக்கொண்டு இருப்பார். கடையில் ஒரு இளம் பொடியனை எடுபிடி வேலைக்கு வைச்சு இருந்தார். அவனைக் கல்லாப்பெட்டிக்குக் கிட்டப் போகவே விடமாட்டார்  

                       ஒருநாள் அவர்

                                           " என்னட்டை ஒரு கேசட் இருக்கு , பரமேஸ் கொண்டு வந்து தந்தாள் ,உங்கட வீட்டு கேசட் ப்ளேயர்ஐக் கொண்டு வந்து  அது என்ன பாட்டு எண்டு போட்டுக் காட்டுறியா?"           

                                                எண்டு கேட்டார் ,  நான் பரமேஸ் யார் எண்டு கேட்கவில்லை, நான்  அவரிடம் இருந்து அந்த கெசட்டை  வேண்டிக்கொண்டு வீட்டு கேசட் ப்ளேயரில்  போட அதில முதல் பாடல்

                       " நேற்று ராத்திரி யம்மா ,,தூக்கம் போனதே யம்மா , ஆத்தாடி நான்  அல்லாடுறேன்....எங்கே சுகம் ..,,"

                எண்டு கேசட் ப்ளேயர் படத்தொடங்க,  அம்மா வந்து  

                          "  நிப்பாட்டடா இந்தக் கண்டறியாத பாட்டை,  இந்தப் பாட்டுதானா  இப்ப உனக்கு கேக்குது,  இந்தப் பாட்டுக்  கேட்கிற வயசா இப்ப உனக்கு,  எங்க இருந்துதான் இந்த சீ எண்டு போற வளருற பிள்ளைகளைக் சீரளிக்கிற பாட்டுகளை எடுத்துக் கொண்டு வாரியோ அம்மாளாச்சி ஆனா இந்தப் பொடியிண்ட போக்கே ஒண்டும் விளங்குதில்லை "

                                   என்று  சாயங்காலப் பூசையை ஆரம்பிக்க, நான் பேசாமல் கேசட்டையும் , எங்களின் கேசட் ப்ளேயரையும்  கொண்டு போய் அவரோட கடையில் வைச்சிட்டு  

                            " நல்ல நல்ல பாடல் எல்லாம் இதில இருக்கு மணி அண்ணே , நல்லா ரசிசுக் கேளுங்கோ மணியண்ணை ,கேட்டு முடிய பிறகு வாறன் மணியண்ணே" எண்டு போட்டு .நான் பேசாமல் வீட்டை வந்திட்டன்.

                                  சுப்பிரமணியம் தனியாத்தான் அந்தக் கடையை நடத்திக்கொண்டு இருந்தார் , அவருக்கு மனிவி பிள்ளைகள் இல்லை எண்டுதான் ஊருக்குள்ள அறிய்பட்டாலும், அவர் கடைக்கு பின்னாலா ஒரு பத்தி இறக்கி சின்ன இருட்டானா ரூமில ,நிறைய யானைச் சோடாப் பெட்டிகளால் அந்த ரூம் வாசலை மறைச்சு ,அது அலாவுதீன் குகை போல இருக்க ,நான் ஒருநாள் அதுக்குள்ளே என்ன இருக்கு எண்டு சந்தேகமா எட்டிப்பார்த்தன் ,மணியம் என்னைக் கண்ட்டுடு  ,

                       " பிறன் மனை நோக்குதல் பஞ்சமா பாதகம் " எண்டு சந்தேகமாவே சொன்னார் ,

                           நான் அவருக்கு உதவி செய்வேன் ,சனிகிழமை முலவை சந்திக்குப் போய் அரிக்கன்  கிடாய் இறைச்சி வேண்டிக் கொடுப்பேன் ,அவர் அதை முகர்ந்து பார்த்து , ஆட்டுக் கிடாய் மொச்சை மணம் வந்தாத்தான் சமைப்பார் , இல்லாட்டி அவர் வளர்கிற நாயிட்க்கு உடனேயே அதை போடுவார். வாசம் நல்லா இருந்தா கடுகு தாளிச்சு, வெந்தயம் போட்டு நல்ல எண்ணைக்குளம்பு கருவேப்பிலை எல்லாம் போட்டு அவரே சமைப்பார். அதுக்கு பொன்னாங்காணிக்  கீரை வறை போலச் சுண்டுவார் .

                                 மணியம் ஒழுங்கா , ஸ்டைலா  இல்லாட்டியும் அவர் ஒரு நாய் வளர்த்தார் ,அந்த நாய்க்கு மொடேர்னா  " டிம்பிள் "  எண்டு பெயர் வைச்சு இருந்தார் ,அதுக்கு அவர் கடையில விக்கிற ஆணைக் கோட்டை உதயசூரியன் நல்லெண்ணெய் போட்டு போலிஷ் பண்ணுவார். டிம்பிள் நல்லென்னைப் போத்தல் போல மினுக்குமினுக்கு எண்டு இருக்கும் .ஹிந்தி நடிகை  டிம்பிள் கபாடிய போலதான் அதுவும் பவுசு விட்டுக்கொண்டு அவரோட காலுக்கை முகத்தைத் தேய்த்துக்கொண்டு திரியும்.

                               மணியம் வருசத்தில ஒருநாளும் கடை மூடவே மாட்டார் , இயக்கம்கள் ஹர்த்தால் எண்டு மூடச்  சொன்னால் ,

                      " சுடுறது எண்டா நெத்தியில ,அல்லது காதுக்க சுடுங்கோடா ,கடை மட்டும் மூடமாட்டன்,உந்த வெருட்டுக்கு வேற ஆரையும் தேடிப் பிடிச்சு வெருட்டுங்கோடா,,முதல் ஈழத்தைப் பிடியுங்கோடா பிறகு வந்து எங்களைப் பிடிச்சு  ஆட்டுங்கோடா ,,இப்பவே  இந்த உலுப்பு உலுப்புரின்களே ,,நீங்கள் எங்கயடா உருப்படப் போறிங்கள்     " 

                              எண்டு ஒற்றைக் கதவில திறந்து வைத்துக் கொண்டு இருப்பார் ,கடை யை  மூடுறது அவரைப் பொறுத்தவரை நடக்காத விசியம் 

                                  ஒரே ஒருநாள் அவரின் கடை காலையிலேயே மூடி ,அதுவும் முன்னுக்கு வெள்ளைக்கொடி போட்டிருர்க்க , ஊருக்குள்ள அது நெருப்புப்போல பரவ , என்னோட அம்மா

                                 " என்னடா நடந்தது மணியத்துக்கு , இந்தநேரம் பார்த்து குஞ்சரத்தையும் சிலமன் காணவில்லையே "

                                      எண்டு அங்கலாய்ச்சா  , கீரை விக்குற குஞ்சரம்தான் என்னோட அம்மாவுக்கு வீக்கிலீக்ஸ் போல ப்ரேகிங் நியூஸ் கொண்டு வாற கிழவி  ,மத்தியானம் சொல்லி வைச்ச மாதிரி குஞ்சரம்

                                 " எடி பிள்ளை விசியம் தெரியுமே , பெட்டிசதிண்ட மனுசி எல்லோ மோசம் போயிட்டுதாம் ..இதென்ன படக்கு படக்கு எண்டு நெஞ்சு அடிக்குது,,அம்மாளாச்சி ஆனா ஒரு போக்கும் விளங்குதில்லை,,பெடிச்சி நல்ல உஷாரா நடமாடிக்கொண்டு இருந்தாளே .." 

                                 எண்டு கொண்டு வர. அது உண்மையான செய்தியாய்த் தான் இருந்து 

                                         பெட்டிசம் மனுசி எப்படி செத்தா  எண்டு யாருக்கும் காலையில் தெரியவில்லை ,ஊருக்குள்ள யாரும் முடிஞ்சா காலையில மேற்குப் பக்கம் பறை மேளம் கேட்கும் , இந்த நிகழ்வில் அப்படி ஒண்டுமே கேட்கவில்லை , அதைவிட பெட்டிசம் வீட்டில சாவு விழுந்தா அது கொஞ்சம் அமுன்கிதான் வெளியவரும், பெட்டிசம் எங்களின் ஊரை சேர்ந்தவர் அல்ல  ,அவரின் மனுசிதான் எங்களின் ஊரில பிறந்து வளர்ந்தவா , கொஞ்சநேரத்தில பெட்டிசம் மனுசியின் சொந்தகாரர் எங்களின் வீதி வழியாகப் போறதைப்  பார்த்திட்டு,

                         " நான் போய் என்ன நடக்குது எண்டு பார்க்கவே"

                        எண்டு அம்மவிடம் கேட்டேன் ,அம்மா பொதுவா செத்தவீடுகளுக்கு போகவிடமாட்டா ,ஆனாலும் பெட்டிசம் வீடுக்கு யாரும் போகபோறதில்லை,அதால என்னை அனுப்பி விடுப்பு அறிய விரும்பியதால் போகசொன்னா .

                                                         நான் பதுங்கிப் பதுங்கிப் போனேன் ,செத்த வீட்டில தோரணமும் தொங்க இல்லை ,வாசலில் சாம்பல் வாழையும் இல்லை, பெட்டிசம் தலையில துவாயைப் போட்டுக்கொண்டு ஒரு மூலையில் இருக்க, அவரோட மனுசியை ஒரு வாங்கில கிடத்தி , மூக்கில பஞ்சு அடைஞ்சு, தலைமாட்டில ஒரு குத்து விளக்கு கொளுத்தி வைச்சு,யாரோ அவர்களின் உறவினர் முறையான  பெண் ஒரு பனை விசிறியால இலையான்களை விசிறிக்  கலைக்க, வேறு சில வயதான பெண்கள் 

                             "தாமரகம் பொன் உருக்கி , தங்கமென வளர்த்ந்த சீமாட்டிய ,,காலான் தேதி வைச்சு  , ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் மாலும் ஓலமிட்டலறும்...."   

                          எண்டு அறுந்துபோன ஈனக் குரலில் ஒப்பாரி வைக்க, என்னைக் கண்டு போட்டுப்  பெட்டிசம் எழும்பி வந்து, 

                          " உன்ற கொம்மாவுக்கும், ஊரில உள்ள பெண்டுகளுக்கும் என்ன கோதாரியே, நான் தான் எல்லாருக்கும் அள்ளி வைக்கிறன் எண்டு ஒதுக்கினாலும், எண்ட பொஞ்சாதி ஒருத்தருக்கும் ஒரு வஞ்சகமும் செய்யாதா சீவன், அவள் செத்ததுக்கும் வராதா சனங்களும் ஒரு சனம்களே " எண்டு சொன்னார்.

                                     நான் மணியத்தை அதுக்குள்ள தேட , அந்தாள் சிலமனே அதுக்குள்ள இல்லை , புண்ணியக்குஞ்சி சுருட்டைப் பத்திக்கொண்டு யாரோ ரெண்டு பழசுகளை இழுத்து வைச்சுக் கொண்டு அவர்களுக்கு பழைய இத்துப்போன சிறிமா பண்டாரநாயக்கா கதைகளைச் அவரோட பாணியில் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் அதோட வீட்டை வந்து அம்மாவுக்கு பெட்டிசம் சொன்னதை சொல்லவில்லை , அங்கே என்ன நடக்குது எண்டு மட்டும் சொன்னேன், அம்மா

                              " மனியத்திண்ட சிலமன் ஏதும் அறிஞ்சியா "

                                  எண்டு சந்தேகமா கேட்டா , 

                              " மணியம் அங்கேயும் இல்லை,கொஞ்ச சனம் தான் அழுதுகொண்டு  இருக்குதுகள்  " எண்டு சொன்னேன் .

                                       ரெண்டாம் நாள் காலையிலயும் மணியம்கடை மூடி இருக்க ,அதுவும் முன்னுக்கு வெள்ளைக்கொடி போட்டு,ரெண்டு மூன்று தோரணமும் தொங்க விட்டிருக்க, அண்டைக்குப்  பின்னேரம் போல பெட்டிசம் வீட்டில இருந்து பிரேதம் எடுத்தார்கள். ஊர்சனம் வேலிகையும் ,மதிலுக்கயும் பதுங்கி இருந்து பார்க்க ,சவ ஊர்வலத்தில பறை மேளம் , அலங்கார தண்டிகை , பட்டினத்தார் பாட்டுக்காரர் ஒருவரும் இல்லை , சும்மா ஒரு பிரேத ஹேர்ஸ் வண்டிய சுற்றி ,அவர்களின் உறவினர் கொஞ்சப்பேர் வர ,

                                            எல்லாத்துக்கும் முன்னால , வெள்ளை வேட்டி கட்டி , நசினல் சேட்டு போட்டு , உத்தரியம் போல ஒரு சால்வை சுற்றிக்கொண்டு சுப்பிரமணியம் சோழப்பொரி எறிஞ்சு கொண்டு  மாணிக்கவாசகர்   பாடின செத்திலாப் பத்து  என்ற தொகுதியில் உள்ள  ,
                           
                                 "  புகுமலர்க்கழலிணையடி பிரிந்தும் கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ விழித்திருந்துள்ளக் கருத்தினை இழந்தேன் போனார்.....  " 

                                            என்ற பாடலைப் பாடிக்கொண்டு போனார் .... 
.
.