Tuesday, 11 August 2015

பால் வீதி நட்புக்கள் ...!

இருட்டியும் இருட்டாத இரவில் நட்ச்சத்திரங்களை அண்ணாந்துபார்த்து அதிசயித்த நிகழ்வுகள்தான் இப்பவும் அழகாக நினைவு இருக்கு. அந்தப் பால்வீதியில் பருவ வயது  எல்லாவிதமான கனவுகளையும் சந்தோசங்களையும் இரவிரவாகத் தந்தது. அதிகாலையில் உயிரோடு எழும்புவது ஒரு அதிசயமாக இருக்காத வயதில் நிறைய நினைவுகள் கரை ஒதுங்கவிடமால் காலம் அலைக்கழித்தது இன்னும் அலாதியாகவே இருந்தது.

                               அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் வீடுதான் எங்கள் வீட்டுக்கு அயலில் இருந்த, வீடுக்கு முன்னால சின்ன ஒரு வேளாங்கன்னி மாத சுருவம் சுவரில வைச்சு, அதுக்கு செவ்வாக்கிழமை மெழுகுதிரி கொளுத்தி  ,  " சர்வேசுவர மாதவே,கன்னி மரியாயே, பாவிகளான எங்கள்......"   எண்டு மாஸ்டரின் ஒரே மகன் ஜேசுதாசனும், ஒரே மகள் மேரியும் செபம் சொல்ல , மாஸ்டரின் மனைவி ஜோசப்பின் அக்கா அந்த செப முடிவில்

                     " கர்த்தரின் கிருபை மாம்சத்தின் ஜீவனை ,,,, "   எண்டு  பைபிளின் வாசகம் வாசிக்க, எங்கள் "குளத்தடிக் குழப்படி குருப் " நண்பர்கள், அதை விடுப்புப்  பார்க்கவும், கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மேரியை மெழுகுதிரி வெளிச்சத்தில் சாட்டோட சாட்டா கிட்டத்தில விபரமாகக் கவனிக்கவும் வாய்ப்புக் கிடைத்த ஒரே ஒரு வேதக்கார வீடு.

                              இனி நான் சொல்லப்போற கதை கர்த்தர் மேல் ஆணையாக, ஆங்கில ஆசிரியராக அரசாங்க உத்தியோகம்  பார்த்த அன்டனி மாஸ்டர், பெரியாஸ்பத்திரியில் நேர்ஸ் ஆகவேலை செய்த  ஜோசப்பின் அக்கா, செமினரியில் பாதருக்கு படிக்கப்போறதா சொல்லிக் கொண்டு இருந்த ஜேசுதாசன் பற்றியது அதிகம் இல்லை. பதிலாக " வானம்பாடிக்"  கவிஞ்சர்களின் புதுக்கவிதைகள்  விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்த, மேரி பிலோமினா அமலோற்பவ ரதி என்ற மேரி, வானம் பாடிப் பாதை மாறிப் போன சம்பவம்  நிறையவே உள்ள கதை . 

                                    பைபிள் படி வாழ வேண்டும் எண்டு வாழ்ந்த அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் பற்றி அதிகம் சொல்ல ஒண்டுமில்லை, அவரின் அந்த சமய நம்பிக்கைகளை நடைமுறையில் செய்து காட்டிக்கொண்டு இருந்த  ஜோசப்பின்  அக்கா எங்களைப் பொறுத்தவரை உள்ளூர் மதர் தெரேசா. அவா பற்றி சொல்ல கொஞ்சம் இருக்கு, 

                                ஜோசப்பின் எங்கள் வீட்டுக்கு வருவா,ஆனால் எங்களோடு பைபிள் கதைக்க மாட்டா. சிரிச்சு சிரிச்சு எப்பவும் எல்லாப் பெண்கள் கதைப்பது போல குடும்ப சந்தோஷ,துக்க  விசியங்கள் கதைப்பா, எங்கள் வீட்டில எப்பவும் நாங்கள் கையைக் காலை ஒழுங்கா வைச்சுக்கொண்டு இருக்காமல் விழுந்து,உருண்டு,பிரண்டு உடைப்பதால், நாவல்க் கலர்ல இருக்கும் கொண்டிஸ் என்ற பொட்டாசியம் பெர்மங்கனட் என்ற புண் வந்தா போட்டுக் கழுவுற  மருந்து ,சவரின் பார் சவுக்காரம் போல பூசுற களிம்பு எப்பவும் ஆசுப்பத்திரியில இருந்து எடுத்துக்கொண்டு கொண்டு வந்து தருவா. சில நேரம் அவாவே போட்டு உரஞ்சி கழுவி மருந்து போட்டு விடுவா.

                               அம்மச்சியா குளக் கரையில தனிய இருந்து அலைஞ்ச தாடி பாலாவுக்கே காலில சிரங்கு வந்த நேரம் அவதான் கொண்டிஸ் போட்டு கழுவி விடுவா. தாடிபால அவா உரஞ்சிற உரஞ்சலில்

                            " எண்ட அம்மாளாச்சி என்னைக் காப்பாற்று ,,உயிர் போகுதே  அம்மாளாச்சி " 

                                எண்டு கத்துவார், ஜோசப்பின் அக்கா இப்படி ஒவ்வொருநாளும் அவாவிண்ட வேலையில் பார்க்கிறதால் ஒண்டும் சொல்லாமல்

                                       " நான் தான் அம்மாளாச்சி,உன்னைக் காப்பாற்ற வந்து இருக்கிறேன், உயிர் போற மாதிரி இப்ப என்னத்துக்கு கிடந்தது குளறுறாய்  " 

                                        எண்டு சொல்லி உரஞ்சி உரஞ்சி மருந்து போட்டே தாடி பாலாவைக்  காப்பாற்றினா. 

                                     இந்த சம்பவம்  கேள்விப்பட்ட  அம்மாவே ஒருநாள் ஜோசப்பின் அக்காவை  இழுத்து வைச்சு 

                                 " என்ன ஜோசப்பின்,உனக்கு வேற வேலை இல்லையே, பால பாஸ்கரன் காலில சிரங்குக்கு மருந்து போடிறியாம்.அவன் விசரன் , ஜோசிச்சு ஜோசிச்சு சொறிச்ச சொறிய சிரங்கு வரும்தானே,உனக்கேன் இந்த நாய் வாலை நிமித்துற வேலை " 

                                 எண்டு சொல்ல, அதுக்கு  ஜோசப்பின் அக்கா, 

                                   " அப்படி சொல்லாதயுங்கோ மனோன்மணி அக்கா, எங்கட பைபிளில் ஜேசுநாதர்,குஸ்டரோகி ஒருவரின் காலைக் கழுவி விட்டவர், அவர் தேவ மைந்தன் அவரே செய்து இருக்குறார், இம்மையில் நான் செய்யுறது மறுமையில் எங்களுக்கு கிடைக்கும் அக்கோய், " 

                                  எண்டு சொன்னா. அவா அப்படிதான் தேவை அதிகம் இல்லாத இடத்திலையும் அவாவின்  சேவை அதிகம் இருக்கும்,,,   

                                  செமினரிக்கு போய்ப் பாதருக்குப்  படிக்கப் போறேன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்த ஜேசுதாசன் என்ற ஜேசுதான் எங்கள் குளதடிக் குழப்படிக் குரூப்பில் குழப்படி செய்யாத ஒரே ஒரு மெம்பர். அவளவு உலகம் தெரியாத வெள்ளாந்தியான அப்பாவி.  வெள்ளைச் சொண்டன் வீட்டில் கள்ள மாங்காய் பிடுங்க போகப் பிளான் பண்ணினாலோ,பண்ணை வளவில கள்ள இளனி இறக்க திட்டம் போட்டாலோ ஆரம்பத்திலேயே அதை

                           " சத்துருக்களுடன் ஜீவிதம் செய்வோர் பாவிகள்.... " 

                                        எண்டும் பைபிள்ப் படி இதெல்லாம் பிழை எண்டு சொல்லுவான். புளியமர இருட்டில பித்துக்குளி என்ற எங்கள்  வயசிலேயே வெம்ப்பிப் பழுத்த அறிவுஜீவி தலைமையில் நடக்கும் பெண்களின் அந்தரங்க உறுப்புக்கள் பற்றிய பின் இரவு " மிட்நைட் மசாலா " ஆராய்ச்சி உரையாடல்களில் பங்கு பெறவே மாட்டான்.

                                        குளத்தடிக் குரூப் சட்ட திட்டத்தில் முக்கியமா அதில உள்ள மெம்பர்கள் மற்ற மெம்பர் வீடுகளுக்குள்ள கேட்டுக் கேள்வி இல்லாமல் திறந்த வீட்டுக்குள்ள நாய் போன மாதிரி போகலாம், வரலாம் எண்டுதான் உறுதி மொழி எடுத்து இணைந்து இருந்தோம். ஆனால் ஜேசு மட்டும் எங்களில் என்னைத் தவிர மற்ற ஒருவரையும் , ஒரே ஒரு நாள்த் தவிர அவன் வீட்டுக்கு உள்ள கூப்பிடமாட்டன், வாசலோடு வைச்சுக் கதைச்சு சலாப்பி அனுப்புவான். இவன் எங்க வாழ்கையில் முன்னேறப் போறான் எண்டு நாங்களும் அவனை ஒண்டிலையும் வற்புறுத்தி இழுத்து வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை. 

                                            நான் அடிக்கடி அவன் வீட்டுக்கு ஏதாவது ஒரு சாட்டில எட்டிப் பார்க்கப் போனாலும், ஜேசு டிசம்பர் மாதம் வரும் கிறிஸ்மஸ் கொண்டாட்டதுக்கு மட்டும் எங்கள் குரூப் மெம்பர்கள் எல்லாரையும்  அவன் வீட்டின் ஹோலில ஒரு மூலையில் சவுக்கு மரம் வைச்சு, அதுக்கு கீழ ஜேசுநாதர் மாட்டு தொழுவத்தில் பாலனாகப் பிறந்து உள்ள சம்பவத்தை, சின்ன சின்ன பிளாஸ்டர் பரிஸ் சிலைகளில் அலங்கரித்து, அதுக்கு மின்னி மின்னி மறையும் சின்ன சின்ன பல்ப் போட்டு,

                                 " பைபிளின் பழைய ஏட்பாட்டில் ஜோசுவா தீர்க்கதரிசி சொன்ன மாதிரி கர்த்தர் பாலனாய் ஜெருசலாமில் பிறக்க,வெள்ளிப் போளங்களுடன் பரிசேயர் வர, அந்தக் குழந்தையைக் கொலை செய்ய ரோம வீரர்கள் வீடு வீடாக தேடி வர, ஜோர்டான் ஆற்றம் கரையில் வால் வெள்ளி தோன்றியது...  " 

                                   எண்டு கண்ணை உருட்டி உருட்டி விளக்கம் வேறு சொல்லி எங்களுக்கு அந்த சோடிணையைக் காட்டுவான்.

                                      நாங்கள் அதை ஆர்வமாகப் பார்க்காமல்,கதவில அரைவாசியை மறைஞ்சு அதிகாலை விடி வெள்ளி போல மின்னும் அவனோட தங்கச்சி மேரியைக்  கண்ணை நல்லா விரிச்சு வைச்சு ஆர்வமாகப் பார்ப்போம். அதுதான் நான் முன்னமே சொன்னேனே ஜேசுதாசன் எவளவு வாழ்கையில் முன்னேறத் தெரியாத உலகம் தெரியாத அப்பாவி எண்டு.

                            மேரி எல்லா இளம் பெண்கள் போலதான் அம்சமா அடக்கமா வத்தகப் பழம் போல சிவப்பாக இருப்பாள்., தேவமாத போல நெற்றியில் சுருள் முடி விழ , சுண்டங்காய் போல சின்ன மூக்கு அமுங்கிப்போய் இருக்க வெள்ளரிக் கன்னத்தில் குறும்பு எப்பவும் ஒரு சின்னக் குழி விழித்திக்கொண்டு இருக்க  ,முக்கியமாப் பேசும் போது காற்றுக்கே அதிராமல் மென்மையாகப் பேசுவாள்.கழுத்தில ஒரு மெல்லிய சிங்கப்பூர் செயின் போட்டு அதில ஜேசுநாதரை அறைந்த சிலுவை பென்டன் போட்டு அதோட ஒரு சிகப்பு குண்டுமனியும் சேர்த்தே தொங்கவிட்டு இருப்பாள்.

                                   அவள் நந்தியா வெட்டைக் கண்கள் அன்புக்கு இலக்கணம் எழுத, நீரோடைப்  பார்வை கருணைக்குப் பாயிரம் எழுத ,மொத்தமாக அவள் முகத்தில் பாசத்துக்கு ஏங்கும் இதயத்தின் வாசம் இருந்தது அந்த சின்ன வயசிலேயே.  டவுனில இருந்த கன்னிகாஸ்திரிகளின் கொன்வென்ட்  பள்ளிக் கூடத்தில படித்த அவள் படிப்பில புலி ,ஆனால் அந்த வீடிலேயே எல்லாருக்கும் ஓடின மாதிரி அதிகம் கிறிஸ்தவ சிந்தனையில் அவள் மனம் ஓடவில்லை. வேற என்னதில ஓடினது எண்டு நீங்க கட்டாயம் கேட்பிங்க, காரணம் இந்தக் கதையே மேரியின் கதை அதால சொல்லுறேன். 

                                          மேரி அந்த சின்ன வயசிலேயே அதிகம் வாசிப்பது கவிதைகள், அது எப்படி  வெளிய தெரியும் என்றால் கவிஞ்சர் கந்தப்பு எங்கள் ஊர் வாசிக்க சாலையில் நடத்திய " கை எழுது " என்ற சின்ன மாட்டுத்தாள் பேப்பர்  கையெழுத்துப்  பத்திரிகையில் அவள் அதிகம் எழுதுவாள். வானம்பாடிக் கவிஞ்சர்களின் காதல் நனைந்த கவிதை போல இல்லாமல், அதிகம் நா. பிச்சமூர்தி,ஆத்மாநாம் போறவர்களின் பாதிப்பில் அவர்கள் போலவே  கொஞ்சம் எளிமையா எழுதுவாள் என்று கவிஞ்சர் கந்தப்புவே ஒரு முறை இலக்கிய சந்திப்பு கூட்டத்தில அவளைப் பற்றி சொன்னார்.

                               உண்மையா எண்டு அதை உறுதிப்படுத்தும் அளவுக்கு எங்களுக்கு அப்ப அறிவு இருந்ததில்லை. ஜேசுதாசன் சில நேரம் அந்தப் பேப்பர் கொண்டு வந்து காட்டுவான். ஜேசு ஒத்துக்கொண்டது போலவே எங்களுக்கும்  அதிகம் அதன் அர்த்தம் விளங்காது.  ஆனாலும் ஜேசு

                       " நான்  பாதருக்கு படிச்சு பங்குத்  தந்தை ஆகினாலும் அவள் கட்டாயம் இலக்கிய உலகத்தில் ஒரு நாள் பிரகாசிப்பாள் "  

                                 எண்டு சொல்லுவான். எங்களுக்கு அந்த நேரம் தெரியாமலே போன ,விதி திரை போட்டு மறைச்சு வைச்ச மிகப்பெரிய சோகம், பல  நிகழ்வுகள்  எதிர்காலத்தில் நடக்காமலே போகப் போறது தெரியாமல் நாங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்தது ... 

                        ஒரு நாள்......வேரோடி விளாத்தி முழைச்சாலும் தாய்வழி தப்பாது யாரோடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பென் என்பது போல

                                        என்னோட அம்மா ,சுப்பிரமணியம் கடையில, ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் போத்தல் வேண்டிக்கொண்டு வந்து ,கொஞ்சம் முட்டைகளையும் ஒரு கடுதாசி பையில போட்டுக்கொண்டு

                                     " ஜோசப்பின் வீட்டை போட்டு வாறன் "

                      எண்டு சொல்லிப்போட்டு போனா. போய் சில மணித்தியாலங்களில் திரும்பி வந்து வீட்டு வெளி வாசலில் நிண்டு கொண்டு,  

                                        "  தீட்டுத் துடக்கு வீட்டுக்குப்  போட்டு வாறன்,பின்னால வா, வந்து கிணத்தில மூன்று வாளித் தண்ணி அள்ளி தலையில ஊத்தடா "  

                                      எண்டு சொன்னா,நான் போய் ஒண்டுமே விடுப்பு கேட்காமல் அள்ளி ஊத்திப் போட்டு வந்து வீட்டுக் ஹோலில இருந்தேன். அம்மா தலையில ஒரு துவாயைச் சுற்றிக்கொண்டு வந்து,முதல் வேலையா என்னட்ட வந்து,

                                     " இனி ஜேசுதாசன் வீட்டுக்கு தேவை இல்லாமல் நத்தார் பாப்பா பார்க்கப் போறேன்,அது இது எண்டு சொல்லிக்கொண்டு போனி எண்டால் முழங்காலை அடிச்சு முறிப்பேன் "

                              என்றா,நான் என்னோட முழங்காலைத் தடவிப் பார்த்தேன்,அது பிற்காலத்தில் எனக்கு எவளவு முக்கியம் எண்டு நினைச்சுப் போட்டு ஒண்டுமே சொல்லாமல் பேசாமல் இருந்தேன். அம்மா  

                                      " ஜோசப்பின் ஆட்கள் வேதக்காரர் அவயல் எங்களைப்போல பால் அறுகு, மஞ்சள் வைச்சு தலைக்கு தண்ணி ஊத்த மாட்டுதுகள், என்றாலும் என்னோட கடமைக்கு நான் வேண்டிக் குடுக்கிறதைக் குடுத்திட்டேன் "

                                    எண்டு எனக்கும் கொஞ்சம் நடக்கிற சம்பவங்களின் விபரம் சொல்ல வேண்டும் போல சொல்லிக்கொண்டு இருந்தா.  

                                     அதுக்கு பிறகு நான் ஜேசுதாசன் வீட்டை போறது இல்லை, மேரியும் அதிகம் வெளிய வாறது இல்லை,பள்ளிக் கூடம் போறது தெரியாமல்ப் போவாள் ,வாறது தெரியாமல் வருவாள்.கவிஞ்சர்  கந்தப்புவின் மாட்டுத்தாள் பேப்பரிலும் அவளின் கவிதைகள் அதன் பின் வரவில்லை. அவள் படிச்சுக்கொண்டு இருந்த பின்னேர  டுயுஷன் இக்கு போறதை நிற்பாட்டிப்  போட்டு அவர்கள் வீட்டுக்கே ஒரு மாஸ்டர் வந்து சொல்லி கொடுத்தார் எண்டு தான் குளத்தடியில் நியூஸ் அடிக்கடி கசிந்து கொண்டு இருந்தது. ஆனால் ஜேசு  எங்கட வீட்டை வந்து

                                       " வீட்டை வாட , அப்பா ஒரு எக்கோடியன் வாங்கி வைச்சு இருக்கிறார்,வா வந்து பார்,மேரியும் கொஞ்சம் கொஞ்சம் அதை இப்ப வாசிக்க பழகிறாள் ,வாட வாட "

                                              எண்டு இழுப்பான், எக்கோடியன் வாத்தியம் எப்படி இருக்கும் எண்டதை விட மேரி இப்ப எப்படி இருப்பாள் எண்டு பார்க்க ஆவலா இருந்தது. ஒரே ஒரு நாள் அவளை வீராளி அம்மன் கோவில் தேர் முட்டியடியில் என்னோட பெரிய மாமாவின் கடைசி மகள் ஜெயந்தியோட சும்மா கதைச்சுக்கொண்டு நிண்ட நேரம்,மேரி சைக்கிளில் ஓடிக்கொண்டு எங்களைத் திரும்பி திரும்பி வடிவாப் பார்த்துக்கொண்டு போனாள்.ஜெயந்தி மேரியோட  டூஷனில் ஒன்றா படித்தவள். நான் அவளைப் பார்க்காத மாதிரி வடிவாக் கவனித்தேன்.....

                                       சொல்லி வைச்ச மாதிரி அந்த வருடமும் டிசெம்பர்  மாதம்  கிறிஸ்மஸ் அமளி துமளியா வந்தது.......

                                                    அம்மாவே வந்து " இந்த முறையும் ஜோசப்பின்  வீட்டை நத்தார் இக்கு போகப்போறியா, போறது எண்டாப் போ,ஒழுங்கா போய்ப் பேசாமல் கேக்கை திண்டு போட்டு ஒழுங்கா திரும்பி வாறது எண்டா போயிட்டு வா " ,

                          எண்டு எனக்கே ஆச்சரியமா சொன்னா,நான் என்னோட முழங்காலைப் பார்த்த்துக் கொண்டு இருந்தேன்.

                     " பரவாயில்லை ஜேசுதாசன் வந்து வரச் சொன்னால் போட்டு வா "

                              எண்டு மறுபடியும் சொன்னா, ஜேசு முதலே எனக்கு மட்டும் சொல்லி இருந்தான் வர சொல்லி அதைப் பயத்தில நான் சொல்லவில்லை. மற்ற குளத்தடி குரூப் மெம்பர்களுக்கு இந்த வருடம் சொல்லவில்லை எண்டும் சொல்லி இருந்தான். ஆனால் நான் மற்ற பிரெண்ட்ஸ் உம் வந்தால் தான் வருவேன் இல்லாட்டி வரமாட்டேன்,என்று ஜனநாயக வழி முறையில் அவனுக்கு சொன்னேன்,அவனும் ஜோசித்துப் போட்டு ஓகே எண்டு சொல்லி இருந்தான்.

                                  கிறிஸ்மஸ் இரவு நாங்கள் ஜேசுதாசன் வீட்டுக்குப் போன நேரம், ஏறக்குறைய ஜேசு பாலன் பிறக்கும் சின்ன சோடினையில் லைட் சுற்றி சுற்றி சோம்பலா ஓடிக்கொண்டு இருக்க, டேப் ரெகொர்டரில் ஜிம் ரிவிஸ் பாடின " ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்... " பாடல் அதிகம் சத்தம் இல்லாமல்ப் பாடிக்கொண்டு இருக்க , மாஸ்டரின்,ஜோசப்பின் அக்காவின் அவர்களின் உறவினர் பலர் வந்து இருந்தார்கள்,ஜோசப்பின் அக்கா ஓடி ஓடி எல்லாருக்கும் கேக் குடுத்துக்கொண்டு இருக்க,ஜேசு நல்ல வடிவா உடித்திக்கொண்டு எப்பவும் போல அவன் சவுக்கு மரத்துக்கு கீழே சோடினை செய்த அலங்காரங்களை  எங்களுக்கு காட்டி எங்களை வியக்க வைத்துக்கொண்டு இருக்க, அன்டனிப் பிள்ளை மாஸ்டர் பைபிளை எடுத்துக்கொண்டு வந்து

                     " இண்டைக்கு பொடியள் உங்களுக்கு ஒரு கதை சொல்லுறேன்... "

                         எண்டு சொல்ல தொடங்க, இதென்ன இம்சை இந்தாள் இந்த நேரம் அறுக்கப் போகுதே எண்டு நாங்க மண்டையச் சொறிய , நெஞ்சில பாலை வார்த்த மாதிரி , பிரில் வைச்ச வெள்ளை நீண்ட கவுன் போட்டுக் கொண்டு  மேரி மெல்ல மெல்ல தேவதை போல மிதந்து வெளிய அவர்களின் ஹோல் இல நாங்க இருந்த இடத்துக்கு வந்தாள், 

                                                   வந்து எங்கள் எல்லாரையும் பார்த்து மின்னல் எறிஞ்சு  பொதுவாக சிரிச்சுப் போட்டு, ஜேசுக்கு பக்கத்தில போய் இருந்தாள். அந்த இருட்டு நிறைந்த இடத்திலையும்  நிறைய வித்தியாசமா இருந்தது அவளின் திடீர் வளர்ச்சி.முகத்தில ஒரு ஜென்மத்துக்குப் போதுமான ஏக்கம் இருந்தது. சரியா சொல்ல முடியவில்லை அது எந்த வகை ஏக்கம் எண்டு.   

                           மாஸ்டர் ஜோசப் ஒவ்வொரு வருடமும்  போல அந்த வருடமும்  பழைய ஏட்பாட்டு கால பைபிள் கதையான , " ஜோசப்பும்  அவனோட கடவுள் நம்பிக்கையும்   " என்ற  கதையைச்  சொன்னார், 

                                          அதில ஜோசப்பின் உடன் பிறந்த சகோதரர்கள் அவனை எபிரேய வியாபாரிகளுக்கு அற்ப விலைக்கு அடிமையாக விற்க,ஜோசப்பை அந்த வியாபாரிகள்  பண்டி வளர்க்கும் கொட்டகையில் அடைத்து, குதிரைக்கு வைக்கும் கொள்ளைத் தின்னக் கொடுத்து கொடுமை எல்லாம் செய்தும், அரண்மனை எடுபிடி  வேலைக்காரனாகச் சேர்ந்த ஜோசப் கடைசியில் அந்த நாட்டுக்கே அரசன் ஆக,  அவனை விற்ற பின் நாட்களில் குடித்துக் கும்மாளம் போட்டு ஏழைகள் ஆகிப்போன  அவனோட உடன் பிறப்புக்கள் ஜோசப் அரசன் ஆனது கேள்விப்பட்டு வந்து பார்க்க,அவன் அவர்களை மனமுவந்து மன்னித்து, தன்னோட வயதான தகப்பனையும்  அழைத்து சாகும்வரை அவரை அன்பாக வைத்துப் பார்க்க,சாகும் போது அவனோட அப்பா  கடைசி வாக்கு மூலம் போல இறை நம்பிக்கையின் சாட்சியாக,   

               " தேவனோட வாழும் பிள்ளைகள் தேவப் பிள்ளைகள்,அவர்கள் நீர் அண்டையில் நடப்பட்ட மரங்கள்,அவை எப்போதும் செழித்து கிளை பரப்பி வளரும்...."  

                                   எண்டு சொல்லிப்போட்டு செத்துப்போனாராம் எண்டு மாஸ்டர் சொல்லி முடிய, நாங்கள் மவுனமாக இருந்தோம்,ஜேசுதாசன்  தலையை குனிந்து கொண்டு கையை இறுக்கி பிடித்துக்கொண்டு ஜபம் சொல்லிக்கொண்டு இருந்தான்,மேரி " இதெல்லாம் உண்மையா,அல்லது பொய்யா "   எண்டது போல ஒண்டும் அதிகம் உணர்ச்சி காட்டாமல் இருந்தாள்.

                                         கவிஞ்சர் கந்தப்புவின் மாட்டுத்தாள் கையெழுத்து பத்திரிகையில் ஒருமுறை மேரி கிரிஸ்மஸ் கொண்டாத்தைக் விமர்சித்து கவிதை எழுதி இருந்தாள். அந்தக் கவிதையைக் கிழித்து எறிந்து  கண்டபடி திட்டிக்கொண்டு இருந்தார். அந்தோனிப்பிள்ளை மாஸ்ட்டர். மேரிக்கு அது மிகவும் மனச்சோர்வாக இருந்தது என்று சொன்னாள், அந்தக் கவிதை இதுதான் ,

கர்த்தருக்கு 
மகிமையுள்ள ஸ்தோஸ்திரங்கள் ,
இந்த வருடமும் 
வாடிப்போன ஊசியிலை மரம் ,
மின்சார இணைப்பில் 
சுடரும் மெழுகுதிரி ,
பரிசேயர்களின் 
வெள்ளிப்போளங்கள் 
அலுமினியத்தில் ,
திசைத்துருவ நட்ச்சத்திரங்கள் 
ஜிகினாப் பேப்பரில் ,
ஆட்டுத் தொழுவத்தில் 
பிளாஸ்டர்பரிஸ் இடையர்கள், 
மேரியும் ஜோசேப்பும் 
பிளாஸ்டிக்கில் ,
பாலன்பிறகும் இன்றைய இரவில் 
நீர் ஒருவராவது 
இயற்கையாகவிரும் பிதாவே ! 

                                               ஜேசுதாசன் எக்கோடியன் வாத்தியத்தை தூக்க முடியாமல்த் தூக்கிக் கொண்டு வந்து அதை நெஞ்சில கொழுவ வளம் தடுமாறிக்  கொழுவிப்போட்டு, பிங் குரோஸ்பி பாடினா " வட் எ வொண்டர்புல் நைட்.. " பாட்டு வாசிக்கவா எண்டு கேட்டான், மேரி அதைக் கேட்டு சிரிக்க தொடங்கினாள், 

                                                        மற்ற நண்பர்கள் எல்லாரும் கும்பலா அவனோட சேர்ந்து அந்த அக்கொடியனை ஒவ்வொரு பக்கத்தால அதன் கட்டைகளை அமுக்க, ஜேசுதாசன் அவன்கள் எல்லாரையும் இழுத்துக்கொண்டு முன்னுக்கு வெளி விறாந்தைக்கு போக,மேரி மட்டும் எனக்கு முன்னால இருந்தாள், மேசையில் கனக்க புத்தகங்கள் கிடந்தது, ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கிறது போல நடிச்சுக் கொண்டு 

                  " எப்படி சுகம், ஏன் எங்கள் வீட்டுக்கு இப்ப அடிக்கடி வாறதே இல்லையே,என்ன நடந்தது " எண்டு மெதுவா கேட்டாள்,

                   " மேரி  ..நீ  இப்ப  பெரிய  பொண்ணு,,நாங்க  முன்னம் போல எல்லாம் உன்னோட  பேச முடியாது,,பழக முடியாது "

                           "  அப்படி  யார் சொன்னது "

                         "  அம்மா சொன்னா ,,மேரி , நீ ஏன்  உங்க அப்பா சொன்ன பைபிள் கதையை ஆர்வமாக் கேட்கவில்லை "

                           "   உனக்கு எப்படி  தெரியும்  அது "

                       " மேரி,  நான் உன் முகத்தைக் கவனிச்சேன்,,அதில  ஆர்வம்  இருக்கவில்லை "

                        "  ஹ்ம்ம்,,ஏன்  பைபிள் கதையை  நான்  ஆர்வமா கேட்க வேண்டும்,,சொல்லு,,என்ன காரணம் "

                               "அது  எனக்குத்  தெரியாது, மேரி ,,நீங்க  எல்லாம் வேதக்காரர்கள்  உங்களுக்கு  பைபிள் தானே கடவுளே வேத வாக்கியம் "

                              "   பைபிள்  ஒரு  வரலாற்றுக்  கதை , இரண்டாயிரம் வருடம் நடந்த  கதை "

                              " அவளவுதானா ,மேரி ,,என்ன இப்பிடி  சுருக்கமா சொல்லுறாய் "

                               "   எனக்கு அவளவுதான் , போதுமா விளக்கம் "

                             "  ஆனால் உன் அப்பா அதில இருந்து எப்பவுமே அழகான வாழ்க்கைப் படிப்பினை, கடவுளின் நம்பிக்கை பற்றி நல்ல நல்ல கதைகள் சொல்லுறார் "

                           "  அப்பா  ஓரளவு பரவாயில்லை,,அவர்  லொயிக்  ஆக ஜோசிப்பவர்,,அம்மாவுக்கு பைபிள் நம்பிக்கை,,ஒவ்வொரு  வாக்கியமும் கடவுளின் வாயில் இருந்து வந்து விழுந்த மாதிரி நம்பிக்கை "

                           "    அது ,நல்ல விசியம் தானே "

                       "  ஹ்ம்ம்,,இப்ப  என்னத்துக்கு பைபிள் பைபிள் என்று சாகிறாய்,,இப்பிடி  கதைக்க  சந்தர்ப்பம் கிடைப்பதே அருமை  ,,அதில வேற என்னவும் உருப்படியா கதைப்பமா "

                        "    அதென்ன,,நீயே  சொல்லு,,மேரி ,,படிப்பைப் பற்றியா "

                         "    அது  அடுத்த அறுவை,,,"

                         "   அப்ப வேற என்ன, மேரி,,நீயே  சொல்லு "

                          " நான் தான்  எல்லாம் தொடக்கிக் கதைக்க வேணுமா,,ஏன் நீயே ஏதாவது சுவாரசியமா சொல்லன்,,உன்னோட  காதல்  ரொமான்ஸ்  ,,உன்னோட  லைன்கள்  ,,சொல்லு ,,"

                              "ஹஹ  ஹஹ  ஹஹா       " 

                             " இப்ப எதுக்கு அம்மசியா  குளத்தடி  விசரன்  பாலா போல சிரிக்கிறாய்    "

                        " உன் கேள்வியில் சிரிப்பு வந்தது,  ஹ்ம்ம்,,உண்மையில் அப்பிடி  ஒன்றும்  இல்லை..மேரி "                 

                          "  அட அட அட அட அட அட....என்ன ஒரு  வளர்ப்பு "
                    

                          நான் பதில் சொல்லாமல் இருந்தேன், மேரி கையில வைச்சு இருந்த புத்தகத்தை காட்டி "  இது என்ன புத்தகம் தெரியுமா " எண்டு கேட்டாள், 

              " எனக்கு எப்படி தெரியும் ,நீயே சொல்லு " என்றேன், 

               " பால் வீதி,அப்துல் ரகுமான் எழுதியது " எண்டு சொன்னாள் சொல்லிப்போட்டு ,

                  " வேலிக்கு மேலாக வளரும் கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே ,,என் கால்களில் வேலிக்கு  கீழே ஓடும் வேர்களை என்ன செய்வாய் .....என்ற கவிதையை வாசித்தாள்.. வாசிச்சுப் போட்டு அதைப் படார் எண்டு மேசையில் வைச்சுப் போட்டு...

                    " தேர்முட்டியடியில் ஜெயந்தியோட என்ன கதை வசனம் அண்டைக்கு ஓடினது " எண்டு கேட்டாள். 

                      நான் " எண்டைக்கு,....எந்த ஜெயந்தி..... " எண்டு கேட்டேன்,,  

                    " ஹஹஹா , ஹ்ம்ம், அவள் தான்  உங்க மச்சாள், ரெட்டைச் சிலுப்பி,  வெத்திலை போட்ட கிளவியால் போல மஞ்சள் காவி பிடிச்ச பல்லால ஈஈஈஈ எண்டு இழிப்பாலே அவள்தான்..." என்றாள்,

                   " ஜெயந்தி கொமர்ஸ் பாடத்தில ஐந்தொகை பலன்ஸ் செய்யுறது எப்படி எண்டு டவுட் கேட்டாள் சொன்னேன்..." என்றேன், அதுக்கு அவள்.

               " ஹஹஹஹாஹ் ,  அடிடா சக்கை எண்டானாம், டவுட் என்னத்துக்கு தேர்முட்டியில் பதுங்கி நிண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்,  எனக்கும் தான் ஐந்தொகை பலன்ஸ் செய்ய வருதில்லை,,,,சொல்லி தரலாமே, அதென்ன ஜெயந்திக்கு மட்டும் பதுங்கி பதுங்கி ஸ்பெஷல் டவுட் கிளியரன்ஸ் நடக்குதே,,"  என்றாள் 

                 நான்,, " மேரி ,நீ கேட்கவில்லை அதால சொல்லவில்லை, அதைவிட அம்மா உங்க வீட்டுக்கு போக வேண்டாம் எண்டு சொல்லி இருக்கிறா அதால இங்கே வாரதில்லை,சரி அதை விடு நீ ஏன் இப்ப கவிதை எழுதுறது இல்லை  " 

                             " ஹ்ம்ம்,, இப்ப அதுவா முக்கியம், அப்பாவுக்கு படிப்பு முக்கியம் அவருக்கு ரிப்போர்ட் இல் எப்பவும் முதல் மூன்று இடதுக்க வரவேண்டும் ,அம்மாவுக்கு பைபிளும்,செபமும் முக்கியம் ,,ஹ்ம்ம் இதுக்குள்ள கவிதை எழுத எந்த உற்சாகமும் கிடைக்குதில்லை, "

                    "  உனக்கு என்ன என்ன தோன்றுதோ அதை அதை அப்பப்ப எழுது "

                      " கிழிஞ்சுது  என்னக்கு என்ன தோன்றுது என்று சொல்லவா,,,,ஹ்ம்ம்,,,சொன்னா  மட்டும் எல்லாரும் என்ன கேட்டா கிழிக்கப் போகினம் "

                    "  இல்லை, மற்றவர்களின் வாழ்கையை நீ ஒருநாளும் வாழாதே,,உனக்காக வாழு "

                     "   அட அட அட  ,,தத்துவத்துக்கு ஒரு குறைச்சலும் இல்லை,,,சரி,,ஜெயந்தி இப்ப என்ன செய்யுறாள் ,,உன்னோட கதைப்பாளா இப்பவும்,,,இன்னும் அவளுக்கு டவுட் கிளியர் செய்யுறியா, "

                  " இல்லை,,அவளைக்  கண்டே ஒரு வருசத்துக்கு மேலே,,கடைசியா வீராளி அம்மன் துர்க்கையம்மன் திருவிழாவில பார்த்தேன்,,,வெளிவீதி உலாவில் பயனைக் கோஸ்டியோடு பக்திப் பரவசமா பாடிக்கொண்டு போனாள்.."

                   " பொய் சொல்லாதே,,,ஹ்ம்ம்,,அவள்  பக்திப் பரவசமா பாடிக்கொண்டு போனாள்..,,ஹ்ம்ம்,,நல்ல விபரமாதான் விடுப்புப் பார்த்த மாதிரித் தெரியுதே...ஹ்ம்ம் ,,"

                          " இல்லை, உண்மையதான்  சொல்லுறேன்,,அவளவுதான் தெரியும்,,பெரியமாமா அவளை அவுஸ்த்ரேலியாவுக்கு படிக்க அனுப்ப போறதா அம்மா வீட்டில சொன்னா.."

                        " ஒ,,,அது  வேறையா,,அவள் எண்ணத்தைப் படிசுக் கிழிப்பாள்...உன்னையும் வரச்சொல்லி இருப்பாளே ..அவள்தான் உன் மச்சாளே,,பிறகென்ன மற்றாக்கள் என்ன சொல்லி என்ன வரப்போகுது "

                         " மேரி,,என்னோட  என்னைப்பற்றி மட்டும் கதை,,சும்மா கிடந்தது அலட்டாதே   " எண்டு கொஞ்சம் கோபமாச் சொன்னேன்.

                                                   ஜோசித்துப் பார்த்தா எல்லா இளம் பிள்ளைகளின் இளம் வாழ்கையில் உள்ளது போல  இதில தெளிவான காதல் இல்லை, கவர்ச்சியான கனவுகள் ஹோர்மோன் குளறுபடியால எகிறினாலும் வெறும் பரஸ்பர நட்புதான் அடித்தளமா இயங்க வைக்குது போல இருந்தது  , அதிலும் வயசுக் கோளாறு கொஞ்சம் அதிகமா இருக்கு போல தான் உணர்ச்சி வசப்படாமல் ஜோசிக்கும் போது இருந்தது.. ...

                      ஜேசுதாசன்  "  வட் எ வொண்டர்புல் நைட்..வட் எ வொண்டர்புல் நைட்.. " எண்டு பாடிக்கொண்டு உள்ளுக்க வந்தான்,மேரி நெற்றியில் கையை வைச்சு தேச்சுப் போட்டு, " தலை இடிக்குது...."  எண்டு சொல்லிக்கொண்டு எழும்பிப் போயிடாள்,ஜேசு கிட்ட வந்து ,

                               " என்னடா ஒரு மாதிரி இருகிறாய்,மேரி ஏதும் சொன்னவளா ,  அவள் அப்படிதான் எப்பவும் குழம்பிக்கொண்டு இருக்கிறாள், வா வெளிய வா நொள்ளைக்கண்ணன் குரலை மாற்றி கண்டசாலா போல காவியமா ஓவியமா ...பாட்டுப்  பாடுராண்டா, ஒரே கலாட்டாவா இருக்கு வெளிய,  நீ இங்க தனிய மேரியோட அறுவையைக் கேட்டுக்கொண்டு இருகிறாயே.,,,"

                                      எண்டு சொல்லி வெளிய இழுத்துக்கொண்டு போனான்...அதுதான் அன்டனிப் பிள்ளை மாஸ்டர் வீட்டுக்கு நான் போன கடைசி கிறிஸ்மஸ் நாள் எண்டு நினைக்கிறன். 

                               அதுக்குப் பிறகு சில வருடங்களில் நிறைய விசியங்கள் வீட்டிலையும், நாட்டிலையும் நடக்க,குளத்தடிக் குரூப் மெம்பர்களே ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கமா பிரிந்து போய்விட்டோம்.  அதில முக்கியமா நடந்த சம்பவம் ஜேசுதாசன் வீட்டில தான் நடந்தது எண்டு பின் நாட்களில்த் தெரிய வந்தது,  பாதருக்கு படிக்கப் போறேன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்த ஜேசுதாசன் அது படிக்கப் போகவில்லை,  பதிலாக " அங்கொடை " எண்டு நாங்க சொல்லும் புவனேஸ்வரியை ஒரு நாள் மாஸ்டருக்கும் ,ஜோசப்பின் அக்காவுக்கும் கொண்டு வந்து தன் காதலி அவளைத் தான் கலியாணம் கட்டப்போறேன் எண்டு சொல்ல,மாஸ்டர்

                          " ....இனி உனக்கும் எங்களுக்கும் ஒரு உறவும் இல்லை, ....சேர்ச் பக்கமே இனிப் போக முடியாதே , ....இப்பிடி சொந்தம், உறவுகள் முகத்தில முழிக்க முடியாமல் செய்து போட்டியே, ...வீட்டு வாசல்ப் படி இனி மிதிக்காத வெளிய போடா,....உன்னை வளர்ததுக்கு ரெண்டு தென்னம் பிள்ளையை தண்ணி ஊற்றி வளர்த்து இருக்கலாம்,கடைசிக் காலத்தில தேங்காயாவது பிடுங்கி இருக்கலாம், ....உன்னோட கூ ட்டாளிமாரோட குளத்தடியில் இழுபடும் போதே தெரியும்,  நீ இப்படி என்னவும் ஒரு நாள் செயப்போறாய் எண்டு....,    "

                                   எண்டு சொல்லி அவனை அடிக்கப் போக,ஜேசுதாசன் அவளைக் அன்றே கூட்டிக்கொண்டு மன்னார் மடு மாதா கோவிலுக்கு கிட்டத்தில இருந்த ஒரு இடத்துக்கு கூ ட்டிக்கொண்டு போனானாம்...ஜோசப்பின் அக்கா மாஸ்டருக்கு தெரியாமல் மன்னார் போய்த் தேடிய போதும் அவனைக் காண முடியவில்லை எண்டும் சொன்னார்கள்.....அவளவுதான் அதுக்கு பிறகு ஒரு தகவலும் இல்லை..

                              வீட்டில இந்த அவலம் நடந்த கொஞ்ச நாளில் ,மேரி படிக்கிறதை நிட்பாட்டிப்போட்டு ,கண்டியில் உள்ள சிஸ்டர்மாரின் செமினரிக்கு கன்னிகாஸ்திரியாகப்  போயிட்டாளாம்........... 

.

Sunday, 9 August 2015

இன்னுமொரு கதை பிறந்தது...!

மனிதர்களின்  அன்றாட  வாழ்கை  இயல்பாகவே  இருக்கும். ஆனால்  கொஞ்சம்  கவனித்துப்  பார்த்தால்  அதுக்குள்ளே  ஒரு  அலாதியான  கதை  இருக்கும்.  அதை  அமர்களமாக  எழுதுவதே  ஒரு  அனுபவம்தான் . மற்றப்படி    இது உண்மைக் கதை இல்லை  என்று சொல்லவும்  முடியவில்லை , முழுவதும் கற்பனை  என்று சொன்னாலும்  சொதப்பும் . முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.  ஆனாலும்  எல்லாக் கதைகளில் வரும்  உண்மை மனிதர்களின் கற்பனைக் கதை போல...

                                                  சின்ன வயசில எங்கட வீடுக்கு கிட்ட கவிஞ்சர் கந்தப்பு எண்டு ஒரு கவிஞ்சர் இருந்தார், அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர், எப்பவும் எட்டு முழ வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு, மேல ஒரு பவுன் பொத்தான் வைத்து தைச்ச நசினல் போட்டுக்கொண்டு,கழுத்தைச் சுற்றி உத்தரியம் போல ஒரு பச்சைச் நிற குஞ்சரம் தொங்கும் சால்வை போட்டுக்கொண்டு,நெற்றியில் சடையப்ப வள்ளல் போல சந்தனப் பொட்டு, அதன் நடுவில் சின்ன குங்குமப் பொட்டு வைச்சுக்கொண்டு அவர் பார்க்கிறதுக்கு காளமேகப்புலவர் போல தான் இருப்பார். அவரை யாரவது கவிஞ்சர் எண்டு சொன்னால்க் கடுப்பாகி

                               " நீவீர் அறியீர் என் புலமை,யான் ஒரு தமிழ்ப் பண்டிதர், பண்டிதர் பரீட்சை ஒரே தரத்தில்ச் சித்தி எய்தியவன்,அய்யன் பண்டிதமணி சி .கணபதிப்பிள்ளையின் மதிப்புக்கு உரிய முதன்   மாணாக்கன்  "  
                                       
                                          எண்டு சொல்லுவார்.  கழுதைக்கும்  கோவேறு கழுதைக்கும்   சொல்லும்படியாக  வித்தியாசங்கள்   கண்டுபிடிக்க  முடியாத   மனிதர்கள்  வாழ்ந்த  எங்கள்  ஊரில்  கவிஞ்சருக்கும் பண்டிதருக்கும் வித்தியாசம் தெரியாமல் தான் ஊருக்குள்ள அதிகம் பேர் இருந்ததால், அவர் ஒரு தமிழ் அறிஞ்சர் எண்டு மட்டும் எல்லாருக்கும் தெரியும். 

                                   நான் இனி சொல்லப் போறது அவர் எழுதிய " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்ற கொஞ்சம், அவர் " கேட்போர்க்கு இன்னாயாப்பிற்று ஆதல் பழித்த மொழியான் இழுக்கம் கூற ,தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் "  என்ற தொல்காப்பிய இலக்கணப் புலமை சார்ந்த துறையில் இருந்து இறங்கி வந்து எழுதிய வில்லங்கமான புத்தகம் பற்றியும், கடைசீல அந்தப் புத்தகம் அவர் சொந்த இல்லற வாழ்க்கைக்கு ஆப்பு வைத்த சம்பவங்கள் உள்ள கதை.

                                            அவர் எழுதிய அந்த புத்தகம்,காம சூத்திரா, கொக்கேகம், திருக்குறளின் காமத்துப்பாலின் அடிபடையில்,கஜுரோகோ கருங்கல் சிற்பங்களின் துணையுடன் செய்யுள்களுக்கு விளக்கமும்,கொஞ்சம் செயல் விளக்கமும் ,அதிகமா இல்லற வாழ்க்கைத்துணையின் சிறப்பும்,பெண்ணின் பெருமையும் " பெண்கள் நிமிர்ந்து நடந்தால் யாரையோ பார்க்கிறாள்! குனிந்து நடந்தால் எதையோ நினைக்கிறாள்! சிரித்து பேசினால் அவனோடு "எதோ" அவளுக்கு! சிரிக்காமல் பேசினால் துக்கை " என்று பெண்களின் அங்க இலட்சணம்கள் அதில இருந்தாலும்,அந்த புத்தகத்தைக் கவிஞ்சர் கந்தப்பு தானா எழுத வேண்டும் என்றுதான் அது வெளிவந்த நேரம் எல்லாரும் கதைத்தார்கள்,

                                            குறிப்பாகப் பெண்கள் கதைத்தார்கள்,ஆனாலும் அதை ஒரு தமிழ் அறிஞ்சர் எழுதியதால் கட்டாயம் அதில விசயம் இருக்கும் எண்டு தான் சொன்னார்கள்,அதையே நான் எழுதி இருந்தால்,கட்டாயம் " இந்த விடுகாலி எழுதியதால்  அதில விஷம் தான் இருக்கு " எண்டு சொல்லியிருப்பார்கள்.எப்படியோ அந்த புத்தகத்துக்கு இருட்டினாப் பிறகு பல வீடுகளில் வெளிச்சம் கிடைத்தது என்பது உண்மை. 

                                           அதுக்கு முதல், காமசூத்திராவின் எளிமையான விளக்கம் போல,அதுக்கு வாத்தியாயனரின் சித்தப்பு  போல இருந்த பண்டிதர் கந்தப்பு  " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்று  எழுதிய புத்தகம் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இங்கே இல்லாததால், முதலில் கவிஞ்சர் கந்தப்புவின் பெர்சனாலிட்டி ,அவரின் " காதலர்ப் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்துன் கூதிர் நின்றன்றால் " என்ற நெடுநல்வாடைத் தமிழ் அறிவின் வீச்சு, அவர் கழுத்துக்கு ,தனிப் பாடல்த் திரட்டாகி " கரையோட்ட மாக மரக்கலம் போட்டுனைக் காணவந்தாற் திரை போட்டிருந்தனை யேலேல சிங்க சிகாமணியே.." என்று அந்த சிங்கத்தின் பொஞ்சாதிக்கு, எங்கள் ஊரில இருந்த ஒரே ஒரு " பிரஸ் " என்ற அச்சுக்கூடம் வைத்து இருந்த பரமானந்தம் வலை வீசியது  பற்றி கொஞ்சம் சொன்னால்தான் உங்களுக்கு கதை விளங்கும்.

                                        கவிஞ்சர் கந்தப்பு மரபுக் கவிதை தான் எழுதுவார்,அடி ,தளை,சீர் தட்டாமல்,வெண்பா எல்லாம் " வா வே தே கு ஆயிடைத் தமிழில் " அட்டகாசமாக எழுதுவார், யாரவது செத்துப்போனால் அவர்களின் முப்பத்தி ஓராம் நாள் திதிக்கு வெளியிடும் கல்வெட்டை அறுசீர் நெடிலடி வெண்பாவில் ,இறந்து போன அந்தக் குடும்ப தலைவன்,அல்லது குடும்பத் தலைவி பற்றி, அந்த குடும்பம், அதன் நல்விழுமியங்கள் எல்லாம் வைச்சு வாட்டு வாட்டு என்று புகழ்ந்து எழுதுவார்.

                                   இறந்து போன மனிதர்கள் பற்றியதால் யாரும் அதன் உண்மைத்தன்மை பற்றி அலட்டிக்கொள்ளமாட்டார்கள். சிறாப்பர் குமாரசாமி ஐயா செத்து அவரின் கல்வெட்டில் அவரின் நாலு பெண் பிள்ளைகளைக் கட்டிய, ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல எண்டு குடியும் குடித்தனமுமா இருந்த நாலு நிறை  தண்ணிச்சாமி மருமகன்களையும் ,ஏதோ தாயுமான சுவாமி ரேஞ்சுக்கு புகழ்ந்து எழுதி இருந்தார்,எப்பவும் போல யாரும் அலட்டிக்கொள்ளவில்லை..

                                     மலையகத்தைப் பற்றி கவிஞ்சர் கந்தப்பு ஒரு மரபுக் கவிதைத் தொகுப்பே எழுதி இருந்தார்,அதுக்கு காரணம் அவர் அங்கே தான் தமிழ் ஆசிரியரா கனகாலம் படிப்பித்து இருக்கிறார், " குறிஞ்சி முகடுகள் " என்ற அந்த தொக்குப்பில் நிறய ,

                                       " மலை மகளின் எண்ணம்,எழிலாக அலை பாயும் வண்ணம், நதியோடு நாணல்கள் இசை பாடும்  வடிவம் நிழல் தந்த மலையகம் "  

                                           எண்டு விரிவாக மத்திய மலை நாடு,அதன் கம்பளம் விரித்த தேயிலைத் தோட்டங்கள், வழிந்தோடும்  ஆறுகள், ஹட்டன் சமவெளி, போகம்பறைக் குன்றுகள், நானு ஓயா விளிம்பில் நுவரெலியாவின் குளிர், டயகம,  திஸ்பன இல் தேயிலை பிடுங்கும் மக்களின் அவலம், ,மொனறாகலையின் மயில்கள் என்று நிறைய எழுதி இருந்தார்,மத்திய மலை நாடு பற்றி யாழ்பான மக்களுக்கு விளங்காததால் அதிகம் அதையும் கவனிக்கவில்லை.

                                           இலங்கையில்  மயில்கள்  அதிகம்  வசிக்கும்  இடம் மொனராகலை . சிங்களத்தில்  மொனறா  என்றால்  மயில். எனக்குத் தெரிய  மயில்களை  அழகா  உள்ளே  இறங்கி  உள்வாங்கி  மரபுக் கவிதையில்  எழுதியவர்  கவிஞ்சர் கந்தப்பு  என்று  நினைக்கிறன். ஆனாலும்  அவர்  வீட்டில் அவரோடு  வாழ்ந்த  ஒரு தோகை இளமையிலை அவர்  ஒரு கட்டத்தில்  இழந்தது  சோகம்  தான்.

                               " கந்தப்பு அங்கேயும் யாரும் ஒரு தோட்டக் காட்டுப் பொம்பிளையை வைச்சு இருந்து இருப்பார்,அதால உருகி உருகி எழுதுறார் போல "

                                        எண்டு நினைத்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை..

                                          கந்தப்பு நிறைய தமிழ் மொழி தழைக்க வேண்டும் என்ற சமூக அக்கறை உள்ளவர்.தமிழ் நாட்டு முதல் அமைச்சர் எம்,யி ஆர் இறந்தபோது ,அவர் ஈழ விடுதலைக்கு ஆதரவா இருந்ததால்,யாழ்பாணத்தில அனுதாப அலை கொஞ்சம் "ஓவராக" அடித்தது !  இயக்க ஆதரவு மக்கள்  வாழை ,தோரணம் கட்ட,எங்கள் ஊர் மக்கள் திலகத்தின் அதிதீவிர ரசிகர்கள் , பெரிய தென்னை மரத்தையே புடுங்கிக்கொண்டு வந்து சந்தியில் நட்டுப்போட்டு,சந்தியில் இருந்த பாரதியார் சிலையை தூக்கிப் போட்டு அதில அவர்களின் "இதயக் கனி " சிலையை வைக்கப் போவதாகப் பயமுறுத்த நிலைமை கொஞ்சம் பொன்மனச் செம்மல்  படங்களில் வரும்  வாள்ச்  சண்டை, குஸ்தி , கைகலப்பு , சீலடி சிலம்படி  போல நடக்கப் போகுதுபோல இருந்தது. சவுகார் ஜானகி  வந்து காலில் விழுந்து,  கிளிசரின் வழிய அழுது ,குளறிக்  சண்டையை நிப்பாட்டுற மாதிரி  இல்லாமல் , அந்த நேரம் கவிஞ்சர் கந்தப்பு வெகுண்டு எழும்பி

                            "சினிமா நடிகனுக்கு சிலை வைக்கும் ,சிற்றுனர்வுள்ள சிற் எறும்புகளை......" எண்டு கவிதை எழுதி,"மகா கவி பாரதி சிலையில் கை வைத்தால் ,சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தடுப்பேன் "

                                 எண்டு பீதியக்கிளப்ப ,அந்தக் களேபரம் அதோட அமுங்கிவிட்டது!.

                               கவிஞ்சர் கந்தப்புவின் முக்கியமான இன்னுமொரு ஆளுமை மேடை நாடகம், சங்கர சாஸ்திரிகளின் தமிழ் நாடகங்கள்,ரகுவம்ச காவியம்,  தமிழில் மொழி பெயர்த்த சில ஆங்கில நாடகம் எல்லாம் பழக்கிப் போடுவார். " ஏழு பிள்ளளை நல்லதங்காள் " நாடகம் அடிக்கடி எங்கள் ஊர் வாசிக்க சாலையில் போடுவார், அம்மா அந்த நாடகம் தொடக்கம் மட்டும் விரும்பி பார்பா, நல்லதங்காளின் அண்ணிக்காரி நல்ல தங்காளைக் கொடுமைப் படுத்த தொடங்க, அவா

                        " இனிக் கந்தப்பு பழையபடி அவளைப் போட்டுப் படுத்தாத பாடு எல்லாம் படுத்தப் போறான் "

                                          எண்டு வாயில முனு முணுக்கத்  தொடங்குவா . அப்படி அந்த நாடகத்தின் உண்மைக் கதையைக் கொஞ்சம் உணர்ச்சி ஆக்கி போடுவார். ஒவ்வொரு பிள்ளையா நல்லதங்காள் கிணற்றுக்க எறிய தொடங்க அம்மா அந்த நாடகம் அதுக்கு மேல பார்க்க மாட்டா,எழும்பி வந்து வீடில ஹோல் மூலையில் இருந்து அழுவா,

                          " கந்தப்பு நெஞ்சில இரக்கம் இல்லாமல் அந்த சின்ன பால் குடிப் பாலகங்களை ஒவ்வொன்றா கிணத்துக்கு எறியுறானே "

                            "  அது  நாடகம்  அம்மா "

                             "   என்னடா  நாடகம்,,,பால்குடிப்  பிள்ளைகளை  கிணத்துக்க  தள்ளி  விழுத்துறது  என்ன  நாடகம் "

                                    "  அதுதான்  நாடகம்,,நீங்க  மிச்சம்  பாக்காமல்  வந்து  போட்டு  கந்தப்புவை  ஏன்  திட்டுறிங்க "

                                    "   பெத்த  வயிறுக்கு  தான்  தெரியும்..அதன்  வேதனை  நீ  இளந்தாரி  உனக்கு  எங்க  இதெல்லாம்  விளங்கப் போகுது "

                                    எண்டு என்னவோ ஏழு பிள்ளளை நல்லதங்காள் நாடகம் கந்தப்பு எழுதின சொந்த கதை போலவும் ,கந்தப்பு அந்த பிள்ளைகளைக் கிணத்துக்க தள்ளி விழுத்துற மாதிரியும் அவரைப் பேசுவா. உங்களுக்கே தெரியும் நல்லதங்காள் ஒவ்வொரு சின்ன பால்குடிப் பாலகங்களை ஒவ்வொன்றா கிணத்துக்கு எறியிறதுக்கு அந்த நாடகத்தின் கதையில் ஒரு லொஜிக் இருக்கு எண்டு .அதை என்னோட  அம்மாவுக்கு சொன்னா அவாவுக்கு விளங்காது.

                                 வாசிகசாலையில், கந்தப்பு இயக்கி,அவரே அதில மார்க் அந்தோனி வேஷம் போட்டு நடித்த ஜுலிய சீசர் நாடகத்தில் ஒரே ஒரே முறை அம்மாவுக்கு தெரியாமல்,கிளியோபற்றா  என்ற சீசரின் மனைவியா நானும் நடித்து இருக்றேன், நான் பொம்பிளை வேஷம் போட வேண்டி வந்த இடக்கு முடக்கான சம்பவம், நாடகத்தில் சீசர் கொல்லப்பட நெஞ்சில அடிச்சு பதறி ஒப்பாரி வைக்க, மார்பு பெண்கள் போல இருக்க எண்டு கந்தப்பு கொண்டுவந்து தந்த பிறசியருக்க வைச்சு இருந்த சிரட்டை கழண்டு விழுந்தது,

                           அந்த நாடகத்தின் இடையில் பொம்புளை வேஷத்துடன மேடையை விட்டு இறங்கி மூத்திரம் பெய்ய அம்மசியா குளக்கரைக்கு இருட்டில பதுங்கி பதுங்கிப் போக, என்னைப் பதுங்கி பதுங்கி பின் தொடர்ந்து வந்த ஒரு உள்ளூர் ரோமியோ என்னை இருட்டில கற்பழிக்க முயட்சிதது,அதில நான் கொஞ்சம் புத்திசாலிதனமாக தப்பியது,பொம்பிளை வேஷம் போட்டு அதில உணர்ச்சிப் பிளம்ப்பா நடித்தது அம்மாவுக்கு தெரியவர வீடில சண்டை தொடங்கியது,,,,அதை ஒரு தனிக் கதையா எழுதுறேன்,,

                       இப்ப கந்தபுவின்  " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி புத்தகம் எப்படி குழப்பம் அவர் குடும்பத்தில் ஏட்படுத்தியது எண்டு சொல்லுறேன்....

                                             வாக்குக் கண்ணால அங்க பார்த்துக்கொண்டு இங்க கதைக்கும் பரமானந்தம் வைத்து நடத்திய சில்லறைக்கடை  சைஸ் உள்ள ஒரு அறையில் இருந்த பிரசுக்கு அவரோட மனைவி பெயரில் " தனலக்ஸ்மி " பதிப்பகம் எண்டுதான் பெயர் இருந்தது. ஆனால் பரமானந்தம் தீவிர கொமின்ஸ்ட் கொள்கையில் இருப்பவர், எளிமையான, மெலிந்த மனிதர் வியட்நாமின் தந்தை ஹோசி மின் போல தாடி வைச்சுக்கொண்டு எப்பவும் பிரஸ் வாசலில் ஒரு கதிரையில் இருப்பார், சில நேரம் பிரிண்டிங் மிசினில காலால கோபமா அடிச்சு அமதிக்கொண்டு

                           ”நான் அடிக்கும் ஒவ்வொரு அடியும் லத்தீன் அமெரிக்காவையும் மூன்றாம் உலக நாடுகளையும் சுரண்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அடி.”

                            எண்டு சொல்லுவார்.

                                          அவரின் வளர்ந்த மகள்கள் இருவர் தான் உள்ளுக்க புரூப் பார்ப்பது, அவரின் மூத்த மகள் அகிலாண்டேஸ்வரி " பிரமிளா " என்ற பெயரில் புதுக் கவிதை எழுதி இருக்கிறா. மகள்கள்தான் அச்சுக் கூடத்தை இயங்க வைப்பதே ,எழுத்துகளைத் தேடி எடுத்து அச்சுக் கோர்த்த புரூப் பக்கங்களை ஒரு தட்டில இடை வெளிகளில் சின்ன சின்ன இரும்பு துண்டு வைச்சு சுத்தியலால் அடிச்சு,நிமித்தி ,சரியாக்கி , லிண்டன்பேர்க் காலால அமத்துற ஜெர்மன் பிரிண்டிங் மிசினில பிளேட் ஏத்தி கறுப்பு மை தடவி தடவி முக்கித் தக்கி பிரிண்டிங் பண்ணுவார்கள், முதல் பிரின்டைக் பரமானந்தம் கையில கொடுக்க அவர் அதை வடிவா அவரோட வாக்குக் கண்ணால பல கோணங்களில் பார்த்து திருத்தும் சொல்லுவார்.

                                               கவிஞ்சர் கந்தப்பு அவர் வெண்பா எழுதித்  திதிக்கு வெளியிடும் கல்வெட்டுக்கள் பலது  தனலக்ஸ்மி  பதிப்பகதில் அச்சு ஆக்கி வெளியிட்ட பழக்கத்தில் ஒரு முறை  " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்ற புத்தகம் எழுதிக்கொண்டு இருப்பதா சொல்ல,   பரமானந்தம்

                                " அப்படியே சங்கதி,அட்ரா சக்கை எண்டானாம் , எண்டு சொல்லி " அது என்ன புத்தகம் " எண்டு கொஞ்சம் சந்தேகமாக் கேட்க,  

                                        " வள்ளுவர் திருக்குறள் அதிகாரங்களையும், அதிகாரத்தினுள் குறட்பாக்களையும் அமைத்துள்ளதற்கு உரையாசிரியர் பரிமேலழகர் மிக அழகாய்த்  தருகின்ற குறளைப் பொறுத்தவரை அதன் அதிகாரங்களை’ , அதன் இயல்களையும்  இருமடி  அமைப்பு என்று கொண்டு, இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி  என்ற என்னுடைய புத்தகத்தை ஆராயலாம், அவ் வகையே அதை யாக்கின்றேன் " !

                                                   எண்டு கந்தப்பு சொல்ல,

                               " அதெல்லாம், எனக்கு விளங்காது பண்டிதரே ,  புலவர் எழுதும் புத்தகம் பொருள் பதிந்தது, அது என்ன விடயம் உள்ள புத்தகம் எண்டு ஆழம் பார்த்து அறிய வேண்டிய அவசியம் இல்லை ,

                                     " இல்வாழ்வான்  என்பான்  இயல்புடைய  மூவர்க்கும்  நல்லாற்றின்  நல்ல  துணை  அது  தெரியுமோ  உனக்கு    "

                                      "  இது  தெரியாது  இதென்ன  புலவரே  "

                                   "  இது  தெய்வப்  புலவனின்   திருக்குறள்  "

                                "  அதார்  அந்தப்  பிறவி  தெய்வமகன்  நடிச்ச  எம் யி  ஆர்  அவரோ  "

                                        "  அடி செவிட்டில ,,இதுதான்  உன்னோட  அறிவுலகம்  "

                                     "  நான்  சும்மா  முசுப்பாத்திக்கு  சொன்னேன்,,நானும் திருக்குறள்  படித்து  இருக்கிறேன்  புலவர் "

                                     "    அதில  என்ன  படிசுக்  கிழிசாய்  அதை  சொல்லு  பார்ப்பம் "

                                      "     திருக்குறளில்  பல  முரண்பாடு  இருக்கு "

                                      "அதென்ன  சொல்ல  பார்ப்பம்  உன்னோட வண்டவாளம்  எள்வளவு  தூரம்  தண்டவாளம்  ஏறிப்  போகுது  எண்டு  பார்ப்பம் "

                                        "   தோன்றித் புகழோடு  தோன்றுக  அகுதிலார்  தோன்றலின்  தோன்றாமை  நன்று  என்ற  குறளின்  விளக்கம்  என்ன  புலவரே "

                                     "  உனக்கு  எப்ப  தகுதி  திறமை  இருக்கோ  அப்ப  நீயாய  உன்னை  வெளிப்படுத்து  ,,அதுக்கு  முதல்  சத்தமில்லாமல்  இரு,,அதுதான்  அர்த்தம்,,உனக்கு  எழுதினது  போல  இருக்கு  இல்லையா "

                                     "  இல்லை,,அதுக்கு  அர்த்தம்  வர்கமுரண்பாடு  ,,பிறந்தால்  நல்ல  உயர்வான  வசதியான  குடும்பத்தில்  பிறந்தவர்கள்  தான் வசதிகளை  அனுபவிப்பார்கள்  ,,என்றும்  பொருள்  கொள்ள  முடியும் "

                                    "    உதென்ன கண்  தெரியாதவன்  யானைத்  தடவிப்பார்த்து  உலக்கையும்  உரலும்  போல  இருக்கு  என்ற  கதை போல  கிரந்தம்    கதைக்கிறாய் ,,வர்க்க முரண்பாடு  அதென்ன  அது  யார்  சொன்னது "

                                     "   கார்லஸ்  மார்க்ஸ்  அவரோட  மூலதனம்  புத்தகத்தில்  இதை  எல்லாம்  விரிவா  எழுதி இருக்கிறார் "

                                    "   அது  யார்  கோரால் மார்குஸ் "

                               " அவரும்  ஒரு  தெய்வப்புலவர்  தான்..ஜெர்மனியில்  பிறந்தவர் "

                                    "  உந்த  விழல்  கதையை  விடு  பரமானந்தம் ,,இப்ப  நான்  எழுதிய  புத்தகத்தை  கதை "

                                  "  அது  உண்மைதான்  புலவர், உந்தப்  புத்தகதிண்ட  பெயரைக்  கேட்க நல்லா  இருக்கே  "

                                       " ஹ்ம்ம்,,,ஆழமா  அலசி  எழுதி  இருக்கிறேன்   "

                                    "  அப்படியா ,,அது  நல்லா தான்  இருக்கும்  "

                                "ஹ்ம்ம்,,,புத்தகம்  வந்த  கையோடு  ஒரு  உதறு  உதறும்  இருந்து பார்    "

                                "   அப்பிடியே,,அப்ப  கட்டாயம்  நான்  தான்  அதையும்  பதிப்பிக்க  வேணும் "

                                      "  அதுக்குதான்  நானும்  ஜோசிகிறேன்.. "

                                  "    என்ன  ஜோசிக்க  இருக்கு  இதில  அதை நான் தான் வெளியிடுவேன் "

                              எண்டு ஒற்றைக்காலில் நிக்க,கடைசியில் அவர்தான் வெளியிட்டார், அந்தத்  தொடக்கம் தான் கவிஞ்சர் கந்தப்புவின்  இல்லற வாழ்க்கைக்கு அலுப்புக் கொடுக்கத்  தொடங்கியது.....

                                         எப்படி எண்டு சொல்லுறேன், தமிழ் ஆசிரியரா வேலை செய்து, வயதாக முன்னரே நடு வகிட்டில் நரை தட்ட முதலே ஓய்வு பெற்ற கந்தப்பு அதிகம் அவரின் இலக்கிய நண்பர்களின் இலக்கிய விவாதம், கோவிலில் கந்தபுராண படனம் சொல்லுறது,நாடகம் போட ஒத்திகை பார்க்கிறது, திருத்தொண்டர் திருச்சபை எண்டு ஒன்று உருவாக்கி அதில வளரும் பிள்ளைகளுக்கு சைவ சமயத்தின் அறம் சார் உண்மைகளை வகுப்பு வைச்சு சொல்லிக்கொடுப்பது ,வீராளி அம்மன் கோவிலில் இருவத்தி அஞ்சுநாள் திருவிழா தலைமை தாங்கி நடத்துவது, எண்டு எப்பவும் நேரத்தைக் காலில கட்டிக்கொண்டு கலாச்சார சூழலையே சுவாசித்து ஓடித் திரிவார்.

                                        அதனால புத்தகம் அடிச்சுக்கொண்டு இருந்த நேரம், வீட்டில பொம்பிளைகளின் பிளவுஸ் தைச்சுக் கொடுக்கும்  தையல் வேலை செய்துகொண்டு  இல்லத்தை இனிமை ஆக்கிக்கொண்டு இருந்த அவரின் மனைவியைத் தான் அந்த புத்தகம் எப்படி வருகுது எண்டு பார்க்க பரமானந்தத்தின் " தனலக்ஸ்மி " பதிப்பகதுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தார்,அந்த மனுசியும் அடிக்கடி போய் புத்தகம் எப்படி வருகுது எண்டதை ஆர்வம் இல்லாமலும், அங்கே வேலை செய்த பரமானந்தத்தின் பிள்ளைகளுடன் அதிகம் ஆர்வமாயும் எப்பவும் பழகிக்கொண்டு இருந்து இருக்கிறா.,

                                     ,எப்படியோ அந்தப் புத்தகம் வெளிவந்து சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமா, பரமானந்தம் அந்த தையல் டிச்சருக்கு என்ன பரம ஆனந்தத்தைக் காட்டினாரோ தெரியாது ,அல்லது " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்ற புத்தகம் எழுதிய கந்தப்புக்கு தன் இல்லறத்தை இனிமை ஆக்க தெரியாமல் இருந்ததோ எண்டு எனக்கு தெரியாது.  
                           
                            ஒரு நாள்... 

                                            வீராளி அம்மன் கோவிலில் வேட்டைத் திருவிழா நடந்து கொண்டு இருந்த அன்று பின்னேரம், அம்மன் ஆவேசமாக வேட்டை ஆடி முடிய, கோவிலில் நைவேத்தியம் வேண்டிக் கொண்டு வெளிய வந்த கவிஞ்சர் கந்தப்புக்கு, புண்ணியக் குஞ்சி கூப்பிட்டு வைச்சு சில விஷயம் சொல்ல..      இன்னுமொரு கதை பிறந்தது !

........தொடரும் ...........

.

Saturday, 8 August 2015

மழை!

                                                

                                                ஜன்னலுக்கு 
                                                வெளியேயும் 
                                                இழுபட்டு 
                                                நனையும் திரைச்சீலை 
                                                மழை!

.

Wednesday, 5 August 2015

ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா !

வாழ்க்கை ஒரு  நீண்ட  முடிவில்லாப் பயணம்  என்கிறார்கள் , அதில  ஏகப்பட்ட விசியங்கள்  குழப்பமாக இருக்கும் . முக்கியமாக  என்னைப்போல குழப்பமான ஆட்களுக்கு  நிட்சயமாகவே  குழப்பமாக  இருக்கும், அதில  என்னவெல்லாம்  பெற்றுக்கொண்டேன் என்பதில்  சொல்லும்படியான சாதனைகள்  இல்லவே  இல்லை. அனுபவங்கள் நிறையவே இருக்கு. ஒரு கற்பனைப் புனைகதை போலவே அதன்  ஒரு  பக்கம்  ஜதார்தமாய் இருக்கலாம். மற்றப் பக்கம் முசுப்பாத்தியாக இருக்கலாம் , இல்லையா,

                                        பல வருடங்களின் முன்  ஸ்வீடனில்  வசித்த போது சில வருடங்கள் , வாழ்கை வெறுத்து தனிமையில் இருந்த காலத்தில் , சந்தோசத்தை வெளியே அன்றாட உலகத்தின் இயல்பில்த்  தேடிப்பிடித்துப் போகாமல், குறுக்கு வழியில்த் தேட முயற்சித்து,  மூடிகளைத் திறந்த மதுப்போத்தல்கள்  முடியும் வரை இருந்த சின்ன சந்தோசம் அவ்வப்போது இருந்தது உண்மை , மிகப்பெரிய  உண்மையாக  என் தோல்வி முகத்துக்கு  முன்னுக்கு நின்றது . 

                                         அந்த மதுப்  போத்தல்களைத் தூர வீசி எறிந்த போது அவைகளுடன்  காற்றில்  மிதந்த இன்பங்கள்  போன அவலத்தில் , மாதன முத்தாவின் மண் பானை ஆட்டிண்ட தலைக்க போன மாதிரி மது  கடைசியில் கழுத்தில கயிறு போட்டு அலங்கோலப்படுத்த , இன்பத்தின் முடிவில்  துன்பமாக , ஒரு வருடம் ," அல்ஹோலிக்ஸ் " என்ற திருந்த முடியாத மடாக்குடியரை திருத்தும் "புனர்வாழ்வு சமூக" அமைப்பில் கவுரவ நோயாளியா /உறுபினரா ,அவர்களுக்கும்   , முடிந்தவரை அவர்கள் தந்த புணர்வாழ்வுகும்  சவாலாக இருந்தேன்!  

                                 அந்த  கவுன்சிலிங்/ குரூப் திரபி என்ற சிக்கிசை கொடுக்க எனக்கு நியமிக்கப்பட்டவள் கத்தரீனா  என்ற ஸ்வீடிஷ் 40 கிலோ தாஜ்மகால் ! அவளை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாலே ஜீவாத்மாவும் பரமாத்மாவும் தாறு மாறா எகிறும் . அவள் அசையாமல் நிண்டாலே அபிராமிப் பட்டர் " இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்துவடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு..    " என்ற அந்தாதியை அவளை நினைச்சு எழுதின மாதிரி இருப்பாள்.  

                                     அவள் நடந்து திரிந்தால் அதே அபிராமிப்பட்டர் அவளுக்கு பின்னுக்கும் முன்னுக்கும் திரிந்து  "  நடங்கொண்ட கொள்கை நலங் கொண்ட நாயகி , நல் அரவின் வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே......."  எண்டு எழுதி முடிச்ச மாதிரி அம்சமா இருப்பாள் . கவனக்குறைவாக எதையும்  சொல்லவில்லை , கவனச் சிதறிடிப்புகள்  நிறைய இருந்த  அந்த  இடத்தில  குவிமையம் போல  இருந்தாள் கத்தரீனா .

                           அதை விட அவளே எங்களைப் போல திருந்த முடியாத மடாக்குடிய நிலையில் இருந்து மீண்டு வந்து "புனர்வாழ்வு சைகொலோயி " மாஸ்டர் டிகிரி படித்தவள் ! அதலா அந்த சமூக நிறுவனத்தில் வேலை செய்தாள்.அவளை முதல் முதல் சந்தித்தபோது, நான் இந்திய, இலங்கை  ரெண்டும் கெட்டான் உருளைக்கிளங்கு  நிறத்தில் இருந்ததால் அவள் கொஞ்சம் அதிர்ந்து

                  " ஓ , இண்டேறேச்டிங் , உன்னை சந்திப்பது, நீ இந்தியாவைச்  சேர்ந்தவனா , 

                       "    இல்லைப்பா,,,நான்  இந்தியன் இல்லை "

                         "    என்னோட வாழ்கையை மாற்றிய குருநாதர் சுவாமி பிரபுபாதாவும் இந்தியர் ,"

                            "   அய்யோ  ராமா,,நான்  இந்தியன்  இல்லை  கத்தரீனா "

                            "     அவர் தொடக்கிய ....ஹரே ராமா ஹரே கிருஷ்ணா.... அமைப்புதான் என்னை வழி நடத்தி இப்ப இப்படி இருக்கிறேன் "

                         என்றாள்  ,அப்படி அவள் அதிர்ந்து சொன்னதுக்குக் காரணம்  , அவள் "ஹரே ராம, ஹரே கிருஷ்ணா " அமைப்பில் இருந்து, அந்த அமைப்பின் இணைப்புதான் அவளை "மடாக்குடிய நிலையில்"  இருந்து மீண்டவர உதவியதக சொன்னாள்!
                                         
                            " நான் இலங்கையைச் சேர்தவன்,  சுவிடனில் அரசியல் அகதியா  வாழுறேன்,குடியுரிமை கிடைத்த நாளில் இருந்து ,அறம்புறமா குடிக்க உரிமை கிடைத்தால் குடிக்க ஆரம்பித்தேன் ,"

                                "   அப்படியா,,நீங்க  இலங்கை  இந்தியர்  எல்லாரும்  ஒரே  கலரில்  இருப்பதால்  குழப்பமாக  இருக்கே "

                                   "   அய்யோ  ராமா,,நான்  இந்தியன்  இல்லை  கத்தரீனா "

                               "  சரி,,உன்  கதையை  சொல்லு,,என்ன  நடந்தது "

                                    "   சுவுடிஷ்  குடி உரிமையை கொஞ்சம் அதிகமா பாவித்து இப்ப அல்ககோல் மிஸ்யூஸ் டிஸ்ஓடர் என்ற மெடிக்கல் கொண்டிசன் நிலையில் இருக்கிறேன் ,"

                                   "  அது  உன் முகத்திலையே  நல்லா  தெரியுதே, கண்  ரெண்டும்  உள்ளுக்க  இழுத்து ,கையும்  நடுங்குதே , பை போலர்  சின்றோம் போல தலையை வேற தவரவிடுகிறாய் "

                                         "  சில நேரம் உனக்கு குழப்பமாக இருக்கும் இலங்கையை  ஸ்ரீலங்கா என்றுதான் ஆங்கிலத்தில் சொல்லுறார்கள்  " 

                                   "    சரி  வேற  என்ன  பிரசினை  உனக்கு "

                                 " கிளினிக்கல் டிபிரசன் "

                          "  ஒ  அது வேறையா..கொஞ்சம்  தண்ணி தெளிச்ச கேஸ் போல இருக்கே  நிலைமை ,,கிளினிகல் டிபிரசன்  எதுக்கு  வந்தது "

                                  "  செரோடொனின்,,டோப்பமின்  என்  சிஸ்டத்தில்  குறைவு  என்று  சைக்கற்றிஸ்  டாக்கடர்  சொன்னார் "

                                    "  ஹஹஹா,,அஹஹஹா  ,,பார்த்தியா  உன்னோட தோல்விக்கு  நீயே  ஒரு  நல்ல  மெடிக்கல் விளக்கம் கைவசம்  வைச்சு  எடுத்து விடுறாய்,,நீ  சொன்னது  எல்லாம் கிளினிக்கல்  டிபிரசனுக்கு முழுவதும்  காரணம்  இல்லை "

                                  " வேற  என்னதான்  காரணம்  சொல்லுப்பா "

                               "    குடி,,,குடியை  விட  முடியவில்லை,,அதுதான்  காரணம்,,அதை  முதலில்  ஒத்துக்கொள்ளு  அப்பத்தான்  நான்  உதவி  செய்ய  முடியும் "

                              "  ஓம்,,உண்மைதான்  கத்தரீனா ,,அதுதான்  உண்மை "

                                            என்று விருப்பம் இல்லாமல் விழுங்கி விழுங்கிச் சொன்னேன் . அதுக்கு அவள்

                               " ஸ்ரீலங்கா,,,இலங்கை ,,,என்கிறாய் அந்த நாடு  எங்க இருக்கு என்று கேள்வியேபட்டதிலேயே " என்றாள்,

                                அதுக்கு நான்  

                 " இலங்கை தான் ஸ்ரீலங்கா, இந்தியாவின் தென் கோடியில் மாம்பழம் போலத் தொங்கிக்கொண்டு இருக்கும்,நாலு பக்கம் கடலால் சூழப்பட்ட  , தமிழர் என்ற ஒரு  சிறுபான்மை இனத்துக்கு நிம்மதி இல்லாத குட்டி தீவு தான் என் தாய்த்திருநாடு " எண்டு சொன்னேன் .

                                    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா  அமைப்பு பற்றி படித்து முன்னமே இருக்கிறேன். உங்களுக்கு உண்மையைச் சொன்னாலென்ன சின்னவயசில்,   சைவசமய முறைப்படி மூன்று தீட்சை சைவாசாரிய  குருவிடம் பெற்றேன்,  ஆனால்  வளர்ந்தபின் ஒரு நாளும் அதுகள் செய்ததில்லை, ஆனாலும் ஆன்மிக விசியங்கள் கொஞ்சம் தெரியும்.  என்னிடம் ஆரம்ப விசாரணை முடித்தபின் ,

               "  உனக்கு PTSD , கிளினிகல் டிபிரசன்  இருக்கே,  அதை விட சொல்லபட்ட  அன்டபுஸ் , மருந்தே உதவி செய்யவில்லை போல இருக்கே ! கொஞ்சம் முத்தின கேஸ் போல இருக்குறியே " எண்டு ஜோசிதுப்போட்டு, அமைதியாக 

                               " எங்கள் ஆசிரமத்தில ,போய் சில வாரம் தங்கி இருந்து ...தியம்பகம் ஜெயாமகே சுகந்திம் புஸ்திவச்தனம் உருவாகுக விசி அமுதாத் தயே..... என்ற மந்திரம் சொல்லி மனதை கட்டுப்படுத்த பல  வழிகள் இருக்கு "

                               " யப்பா  சாமி  இந்த  நாசமாப்போன மந்திரம்  எல்லாம்  எங்கே  நீ  படிச்சாய்,,இதெல்லாம்  எங்க  நாட்டில்  பூசை  செய்யும் பிராமண  ஐயர்மார்தான்  சொல்லுவார்கள்   " 

                                          " தியானம்,சத்சங்கம்,பஜன் ,இவைகளை கற்றுக்கொள்,உனக்கு மனதளவில், பொசிடிவ்வாக எண்ணங்கள் உருவாகும்,நான் இப்படி இப்ப இருப்பதுக்கு அதுதான் உதவி செய்தது"

                       என்று ,அவளோட நண்பிகள் ஆசிரமத்தில் ,பருத்தி சேலை கட்டி, நெற்றியில் நாமம் போட்டு, கோகுலத்து கோபியர் போல ஆடிப்பாடும் குரூப் போட்டோ காடினாள் ! அவர்களுக்கு நடுவில சில வெள்ளை ஆண்களும் மேளம் போல ஒன்றைத் தோளில கொழுவிக்கொண்டு,குடுமி வைச்சு,பஞ்சகச்சம் போல வேட்டியை ஐயங்கார் ஸ்டைலில் கட்டிக்கொண்டு ஆனந்தத்தில்  கோபியரே கோபியரே கோவிந்தன் பெயரைச்சொல்லி ,,,எண்டு ஆடிக் கொண்டு இருந்தார்கள் .

                           வெள்ளைக்கார  ஸ்வீடிஷ்  பெண்களுக்கு சேலை கட்டினால்  முன்பக்கம் ஸ்பானிஷ் கிட்டார் போலவும், பின் பக்கம் ஹவாயன் கிட்றார் போலவும் இருக்கும் , அவர்கள் எப்பவுமே ஒல்லியா வெள்ளையும் சொள்ளையுமா இருப்பது சேலைக்கு நல்லா எடுபடும் , அங்கங்கே பார்காட்டியும்  பார்க்காமலே பத்த வைக்கும் அவர்களின் வசீகரம் ஒரு வித ஆன்மிகதை அறிய ஆரம்பிக்கிறவனுக்கு  வைக்கும் முதல் சோதனை போல இருந்தது .அது பார்க்க அழகா மட்டுமில்லை,  நிறய  ஆர்வ கோளாறையும்  கற்பனைகளையும்  கிளப்பிவிடும் ! அதால

                  " இதில உள்ள மாதிரியா,உங்கள் ஆசிரமதிள்ள உள்ள பெண்கள் எல்லாரும் இருப்பார்கள் எண்டு ?"

              கேட்க ,அவள்             

                             "இதில உள்ள மாதிரியா, எண்டு எண்ணத்தைப் பார்த்து சொல்லுறாய்?"

                   எண்டு ,சந்தேகமா என்னோட கண்னுக்குள்ள நேராப் பார்த்துக் கேட்டாள், நான் , சாமாளித்து 

                "படத்தில அவர்கள் முகத்தில ,தெரியுற மாதிரி ,ஆன்மீக  களையுடனையா ,இருப்பார்கள் ?"

                           ,எண்டு கேட்க, சைகொலோயி " மாஸ்டர் டிகிரி" படித்த அவள் சிரிச்சுப்போட்டு,

                          " முதலில்,ஆசிரமம் போ, முதலில் கெட்ட சிந்தனைகள் அறவே வராது !"

                           எண்டு அழுத்தம் கொடுத்து என்னோட மனசாட்சிக்கு சொன்னதுபோல சொன்னாள் !

                                     நான் அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் நான் என்னமோ ஆன்மிகம் பற்றி தீவிரமா ஜோசிகுரன் எண்டு நினைச்சு

                                  " நீ எப்பவாது தியானம் செய்ய முயற்சி செய்து இருக்கிறாயா, தியானம் எவளவு முக்கியமான விடயம் எண்டு இந்தியர்கள் தான் ஆயிரம் வருடம் முன்னமே கண்டு பிடித்துள்ளார்கள்,..." 

                                     என்று சொன்னாள், நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு  , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு, 

                         " முழுமையான நிறைவான த்யானம்தான் வாழ்வின் உயரிய இன்பங்களை வழங்கும் என இந்திய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி த்யானத்தின் பொருளை ஆராய்ந்தால் ஆச்சர்யகரமாய்  த்யான நிர்விஷ்யம் மனஹ  என்கிறார்கள், 

                                "கிழிஞ்சுது  ரம்பாவின்  லுங்கி, ,,நீ சொல்லுறதைக்  கேட்க  மண்டை  விறைக்குது  இதுக்கு  என்ன  அர்த்தம்  தாயே   " 

                                         " அதாவது எதுவுமற்ற வெறுமையான மனநிலையும் அதையொட்டிய எண்ணங்களும். என்று எங்கள் குரு நாதர் பிரபுபாதா சுவாமிகள் மெடிடேசன் வேய் ஒப் லைப் புத்தகத்தில் எழுதியுள்ளார் " என்றாள்  
                                                  
                                                        நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு அவளைப்  பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன்.  அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு, 

                             " சரி...தியானத்தை அறியாதவர்கள் Material world எனப்படும் வாழ்வியல் இன்பங்களை எப்படி அடைவதாம்? சாமானியர்களும் தங்கள் ஆசைகளையும், இலக்குகளையும் அடைவதற்காகவே பண்டைய மகரிஷிகள் வழங்கிய சாதனா எனப்படும் யந்திர,தந்திர,மந்திர சாஸ்த்திரங்களில் சொல்லி  இருக்கிறார்கள்  "  

                                 "   இவளவு தானா  இல்லை  இன்னும்  இருக்கா "

                                "   ஏன்  உனக்கு  இப்ப  என்ன  "

                                 "இல்லை,,இப்பவே  எனக்கு அரைவாசி உயிர் போயிடும் போல இருக்கு  கத்தரீனா "

                             "   கொஞ்சம்  பொறுமையாகக் கேள்,,நான்  சொல்லவேண்டியதை  சொல்லிமுடிக்க விடு "

                                   "  சரி  சொல்லிமுடி ..எல்லாம்  என்னோட  காலக்கொடுமை,,நீ ஒரு முடிவோடுதான்  நிக்குறாய்   "

                                    "  இவை பற்றிய குறிப்புகள் இந்து சாஸ்திரங்களில் மட்டுமல்லாது பௌத்த, சமண, இஸ்லாமிய, கிருத்துவ மத நூல்களிலும் காணக்கிடைப்பது நான் சைகொலோயி மாஸ்டர் டிகிரி படிக்க ஒரு புத்தகம் ரிசர்ச்  பண்ணிப் படித்த போது அதில இருந்தது ஒரு ஆச்சரியமான விசியம், இதுக்கு மேல சொன்னால் உனக்கு அறுவையா இருக்கும் என்றால் சொல்லவில்லை " என்றாள் 

                            நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு  , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு  இன்னும் கொஞ்சம் சொல்லுவாள் எண்டு நினைக்க அவள்,  

                " கொஞ்சம் பொறு,சில பேப்பர் வேலை இருக்கு,அதெல்லாம் முடிக்க வேண்டும்,நீ கையெழுத்து போட வேண்டும் " 

                           எண்டு சொலிப்போட்டு கொஞ்சம் பேப்பர்களில் குனிந்து எழுத , நான் கோபியப் பெண்கள் போல இருந்த அந்த சேலை கட்டிய ஸ்வீடிஷ் பெண்களின் " குருப் " படத்தை ஆன்மீகம் பித்தம்  தலைக்கு ஏற்றப் பார்த்துக்கொண்டு இருந்தேன் .சொன்ன மாதிரியே ரெண்டு கிழமை என்னை அங்கே  அவளோட காரிலேயே கொண்டுபோய் விட்டாள் கத்தரீனா, நான்    

                           " அந்தப் பெண்கள் எங்கே ஒருவரையும் காணவில்லையே " 

                                           எண்டு கேள்வி கேட்க தொடங்க முதலே அவள் ,

                          " இதுதான் உனக்கு கடைசி சான்ஸ் ,இதையும் குழப்பினாய் எண்டால் அந்த கிருஷ்ண பரமாத்மாவே  நேர்ல வந்தாலும் உனக்கு விடிவு இல்லை"  

                      எண்டு போட்டுப்போயிட்டாள் !

                             அந்த ஆசிரமம் கொஞ்சம் இந்திய முறைப்படி கட்டியது போல இருக்க ,வெளியே ஒரு கிருஷ்ணர் சிலை கோபியப் பெண்களுக்கு நடுவே ஆடுவதுபோல இருக்க , கோகுலத்து மாடுகள் கிருஷ்ணர் வாசிக்கும் புல்லான் குழகுக்கு மயங்க்கி பார்த்துக்கொண்டு இருக்க ,,ஆரம்பமே கொஞ்சம் அடகாசமா இருக்கும் போல இருந்திச்சு .ஆனால் நான் நினைத்த மணிரத்தினம் படத்தில வாற மங்கலான கனவு ஸீனில கதாநாயகி மிதந்து  நடந்து வருவது போல போல அங்க ஒண்டுமே உற்சாகம் தருவதுபோல இருக்கவில்லை.   

                                             அந்தக்  ஆசிரமத்தில " கோகுலம்" என்ற பெயர் உடைய மாடுப்பப்பன்னையில் நிறைய கறவை மாடுகள் ,கன்றுக்குட்டிகளுடன் நிண்டது, அதுக்கு பொறுப்பான ஸ்வீடிஷ்காரர்  நான் மாடுப்பப்பன்னையில் ஒவ்வுருநாளும்  என்னவெல்லாம் செய்யவேண்டும் எண்டு பொறுப்பாக சொன்னார், நான் பொறுப்பில்லாமல் கேட்டுக்கொண்டு இருந்தேன்!

                                          உங்களுக்கு  உண்மையை சொன்னா  என்ன,  " அல்ஹோலிக்ஸ் "வியாதியால் அவஸ்தைப் பட்டதால் நான் ஒண்டுமே அங்கே திட்டமிட்டபடி செய்யவில்லை , 24 மணித்தியாலமும் ஓடி ,ஆடி வேலை செய்யும் அதுக்கு பொறுப்பான  சாமியார் போல இருந்த  ஸ்வீடிஷ்காரர்  என்னிடம்  வந்து

                         " மன்னித்துக்கொள்,ஆரம்பமே  என்னோட பிழை ,"

                           "  ம் "

                           "     நீ வந்தவுடனே இதைக் கேட்டிருக்க வேண்டும் , "

                             "   ம் "
                                                  
                               "  பார்க்கும் போது நீ  நல்ல திடகாத்திரமாய்  இருந்ததால் நானும் உன்னை எல்லார் போலவும் நினைத்து பல வேலைகள் செய்யச் சொல்லி உன்னைக் கேட்டேன், "

                            "   ம் "

                                " உண்மையில்  உனக்கு ஏதாவது உருப்படியான வேலை செய்யத் தெரியுமா அதைச் சொல்லுப்பா ? "

                            "  ம் "

                                " குறை நினைக்காமல் அதை மட்டும் எனக்கு சொல்லுவியா "

                             எண்டு ஒரு நோயாளியை டாக்டர் கேட்பதுபோல் அன்பாகக் கேட்டார்,நான் 

                                "சமையல்காரனாகதான் வேலை செய்தேன்  , நான் அதுக்காக தான்  பயிறுவிக்கப்பட்டு, அதில் தான் பலவருடம் அண்டா,குண்டா சட்டி பானைகளுடன் மல்லுக்கட்டி வேலை செய்தேன் !"

              என்றேன்,அவர் ,நாடிய தடவிக்கொண்டு

                       "அப்ப நீ ,ஸ்டோக்கொலமில் உள்ள எங்களின்  கோவிந்தா ரேச்டோறேண்டில் போய் மிகுதி நாட்களைஅவர்களின் சமையல் வேலையிலும். அங்கே உள்ள கோவிலில் பயனை பாடி அவர்களுக்கு உன்னால் முடிந்தளவு உதவி செய்வியா  ,

                              "  ஓம்..மரக்கறி  சமையலும்  நல்லா  தெரியும் "

                             "   சரி    அங்கே  எங்கள்  பிருந்தாவனம்  கோயிலும் அதோடு உள்ளது,,உனக்கு  நிறைய மன அமைதி கிடைக்கும் பயனை பாடும்போது "

                                 என்றார் " நான் அது எப்படி இருக்கும் " என்டுகேட்டேன், இப்படி இருக்கும் எண்டு ஒரு DVD செருகி படம் போட்டுக் காட்டினார்!

                                          சும்மா சொல்லவிலை, மாடுப்பன்னையை விட நிறைய இண்டேறேச்டிங் விசியன்கள் கலர் கலரா தெரிந்ததால், " ஆதிசங்கரர் போல  " கோவிந்தா கோ "  எண்டு அந்த இடைத்தை முதலில் விழுந்து கும்பிடுடு , வலது காலை எடுத்து வைத்து உள்ளுக்குப் போய் " ஆன்மிகம் பாடல்கள் கிடாரில் நல்லா வாசிப்பேன் " எண்டு பொய் சொல்லி அங்கே  ஒரு கிழமை இருந்தேன், அங்கேதான் M .S .V யின் "கிருஷ்ணா காஹனம்  "LP ஐ முழுமையாகக் கேட்க சந்தர்பம் கிடைத்தது !  

                                                அதோட  முன்பக்கம் ஸ்பானிஷ் கிட்டார் போலவும், பின் பக்கம் ஹவாயன் கிட்றார் போலவும்  இருந்த ஸ்வீடிஷ் பெண்களிடம் இருந்து எப்படி " கோவேறு வளஞ்சேர் கோவிந்தா " எண்டு வாற  ஆழ்வார் பாடலுக்கு என்ன உண்மையான அர்த்தம் என்பதையும் கண்டு பிடித்தேன் .  அந்த அழகான  இளம் சுவிடிஷ் பெண்கள் காலையில் சேலை  கட்டிக்கொண்டு  ஹரே  கிரிசுனா  ஹரே கிருசுனா  ஹரே  ராமோ  ஹரே  ராமோ  என்று  பஜன் பாடுவார்கள் ,நான் அவர்களுக்கு நெருக்கமாக  இருந்து  ஜால்ரா  போடுவேன். 

                                                அழகான பெண்களுக்கு  ஜால்ரா போடுறது  இந்த உலகத்தின் அலாதியான இன்பம், அந்த அனுபவம் எனக்கு நிறைய இருந்ததால் நல்லா  ஜால்ரா போட்டேன். ஆனால் அந்தப் பெண்கள் படு பனங்காட்டு நரிப்  புத்திசாலிகள்  .நான் ஒரு உதவாக்காரை என்று ரெண்டாவது நாளே கண்டுபிடித்துவிட்டார்கள். நானும்தான் முன்னம் பின்னம் ஜோசிக்காம ஒரு குளறுபடியை செய்துபோட்டேன். 

                                 நீட்டி முழக்கி கதை எழுதிப்  போட்டு உங்களை அறுக்க விருப்பமில்லாததால் ,மிகுதிக் கதையை  இரண்டாம் பகுதியாக எழுதுறன், சரிங்களா?.
 .
.