Thursday, 23 April 2015

பாத்திமா ! ஒரு புயல் .

ஒரு காலத்தில், ஒரு இடத்தில வாழ நிர்பந்திக்கப்பட்ட வழிப்போக்கன் போன்ற வாழ்க்கை வந்துபோன நேரம் ஏனோ வாசல்கள்  மூடியே கிடந்ததால் தேவை இல்லாமல்த் தட்ட தேவை இருக்கவில்லை. அந்த வயதும் அப்படியே ஒரு வித  மாயவித்தை சுழன்டுகொண்டிருக்க தேடிஅறியும்  உண்மைகள்  தேடாமலே  தெரியவரும்  கொழும்பு நகரத்தின் உண்மை மவுனம் கிழிக்க இதயம் இரந்து இறங்கி எழுத வைத்தது ஒரு கதையின் தொடக்கத்தை. அதன் பின்...

                                                                   பாத்திமா எவளவு அழகா இருந்தாளோ அதே போல கிராண்ட்பாஸ் புற நகரமும் , பாதை ஓரம் குப்பை கொட்டிய தெருக்கள், சனிக்கிழமை அதிஸ்ட லொத்தர் விற்பவனின் லவுட்ஸ் ஸ்பிகர் அலறல் , ஆனந்தபவான் தோசைக்கடையில் பாடம் நடத்தும் பழைய தமிழ்ப் பாடல்கள் , நடை பாதையில் லேகிய வித்தை காட்டுபவர்கள் , வருசமாய் விக்காத அற்ப பொருட்களை தலையில கட்டி விட இழுத்துப் பிடிக்கும் பேமென்ட் வியாபாரிகள், பள்ளிவாசலில் அஞ்சு வேளை பாங் ஓதும் புனிதப் பிராத்தனை, எல்லாத்தையும் தாண்டி களனிகங்கைத் தொடக்கத்தில் ஒருபக்கம் ஆளை ஆள் முட்டிக்கொண்டு இடிச்சுக்கொண்டு இடைவெளி இல்லாமல் பறக்கும் மனிதர்களின் நெரிசலிலும் கிராண்ட்பாஸ் எப்போதும் அழகாதான் இருந்தது,
                                                     
                                                         மறுபடியும் சொல்லுறேன் கிராண்ட்பாஸ் குப்பையில் குண்டுமணி போல அழகா இருந்ததுக்கு முக்கிய காரணம் பாத்திமா என்று சொன்னால் நான் காதல்ப் பித்தம் இரப்பையை விட்டு தலைக்கு ஏறிப் பிசத்துறேன் என்று எடுத்த எடுப்பில சொல்லுவிங்க ஆனால், என்னைப் பொறுத்தவரை, உண்மை அதுதான். ஆனால் பாத்திமா சிம்பிளா இருந்தாள் ,அதுதான் அந்த பேலியகொடை விளிம்பில் இருந்த கஞ்சலான புற நகரத்துக்கு வெசாக் கால மின்மினி விளக்குகள் போல அழகு கொடுத்தது.
                                                       
                                                               கொழும்பு ஒரு அலாதியான நளின நகரம். அந்த நகரத்தின் உயிர் முன்னேற நம்பி வந்த பலரோட விதியை வீதியில் இருந்து மாட மாளிகைக்கு ஏற்றி வைத்தது. எல்லா இன மக்களும் பல்லினக் கலாச்சாரத்தில் வாழும் அந்த அவசர நகரத்தில் நடக்கும் காதல் சந்திப்புக்கள் எப்பவுமே அவசரமா இருக்கும். அப்படி மதம் வேறான இருவர் சந்தித்த, பல காரணங்களால் அந்தக் காதல் ஆரம்பத்திலேயே புரிந்துகொள்ளப்படாமழ்ப் போன ஒரு சம்பவத்தை சிறுகதை போல எழுதுவதற்கு எல்லாராலும் முடியாது .

                                                முக்கியமா என்னால் முடியுமா என்று எப்பவும் நினைப்பது . அதுக்கு முதலில் சொந்தமான ஒரு படைப்பு மொழியில் எழுத்துநடையை உருவாக்க வேண்டும். அந்த உரையாடல் மொழி ஒரு பொது மொழியில் வந்தாலும் மனிதர்களின் குணங்கள் , இயல்புகள் , வருத்தங்கள், எதிர்பார்புகளை , மனோபாவங்களை சுவாரசியம் குன்றாமல் எழுதும் நுட்பமான மொழியில் ஒருவனுடைய அழிந்து போகாத தனிப்பட்ட குரல் போல இதை எழுத வைத்தவள் பாத்திமா. 
       
                                                           கதையை இப்படிதான் தொடக்க வேண்டி இருக்கு. ஆயிரத்து தொளாயிரத்து என்பத்தி ஒன்பதாம் ஆண்டு என்று நினைக்கிறன், யாழ்பாணத்தில் இருந்து யாழ்தேவி ரெயிலில், தலை மறைவாக,தலையைக் குனிந்துகொண்டு வவனியா தாண்டி மதவாச்சி வந்த பின்னர் தலையை நிமிர்த்திப் பார்த்து கொழும்புக்கு வந்து வேறு வழி இல்லாமல் ஒரு தமிழர்களின் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் கணக்கு வழக்கு பதிவு செய்யும் வேலை சில வருடங்களே வேலை செய்தேன். அந்த இடத்தில என்னோட வேலை செய்தரவர்தான் ரியாஸ் முஹம்மத்.

                                                  ரியாசுக்கு என்னோட வயசுபோலதான் இருந்தார், சொந்த இடம் ஓட்டமாவடி என்று ஒரு முறை சொன்னார், வடக்கைப் போலவே கிழக்கிலும் அரசியல் இஸ்திரமின்மை ஆயுதம் கைகளில் வைச்சு இருந்தவர்களின் கைகளில் இருந்ததால் அவர் மட்டுமில்லை அவர் குடும்பமே கொழும்புக்கு வந்து கிராண்ட்பாஸில் இருந்தார்கள். ரியாசுக்கு ஒரே ஒரு தங்கச்சி . அவள் தான் பாத்திமா. இப்ப கதை எங்க இழுத்துக்கொண்டு போகப் போகுது என்று உங்களுக்கு கொஞ்சம் விளங்கி இருக்கும் என்று நினைக்கிறன்.

                                               அவரோட உம்மவோடும் ,பாத்திமா என்ற  தங்கையுடனும்  எகலியகொடை  கிராண்பாஸ் இல ஒரு சின்ன வீடு வாடகைக்கு எடுத்து வசிப்பதாகச் சொன்னார். கொழும்புதானே  வாழ்வுக்கு அண்டிவந்த மக்களை வாரியணைத்து முன்னேற்றும் நகரம். முன்னேறிய ஆகவேண்டும் என்று ஒரு துரும்பு  அளவில் ஒரு நம்பிக்கையை  இறிக்கிப்பிடித்த மனிதர்களையும்  அது ஒருநாளும் கைவிட்டதில்லை 

                                      தன்னுடைய தங்கை   பாத்திமா  கவிதை எழுதுவாள் என்றும், கிழக்குமாகான கவிஞ்சர்களை அதிகம் முன்னிருத்து வந்துகொண்டிருந்த தினகரன்  பத்திரிகையில் அவள் கவிதைகள் பாத்திமா  ரிஸ்வான  என்ற பெயரில் வந்துருப்பதாகச் சொல்லி ஒருநாள் தினகரன் வாரமஞ்சரி பேப்பரில் வந்திருந்த ஒரு கவிதை  காட்டினார் அது  ஒன்றே போதும்போலிருந்தது  பாத்திமாவின் உலகத்தை  அறிய 

                                   அதன் பின் நீ சொல்ல விரும்பியே 
                                   சொன்னதை 
                                    நான் 
                                  கேட்க விரும்பியே
                                  கேட்பது போலக் 
                                  கேட்டேன்.....
                                  எல்லாத் 
                                  தெரிவுகளுக்கும் 
                                  தடை போட்டு  
                                  அலையவைத்த 
                                   நேசிப்பின் 
                                   பெறுமதியை 
                                   மறுபடியும் 
                                   ஜோசிக்க வைக்குது
                                   முடிவில்லாக் கேள்விகளை 
                                   ஒவ்வொன்றாய் 
                                   நீ வைத்துவிட்டுப் போன நாள் 

                            இப்படி  இருந்த அந்தக்  கவிதையின் கீழே  அதை  எழுதியது   பாத்திமா  ரிஸ்வான, ஓட்டமாவடி .  என்று  இருந்தது. நான் என்ன காரணம் என்று சொல்லமுடியாத ஒரு உந்துதலில் அந்தக் கவிதையை அப்படியே பேபரில்  இருந்து கிழித்து எடுத்து வைத்து இருந்தேன். அந்த  வரிகளில் சிலது சில வருடங்களின் பின் எனக்கே எனக்காக எழுதப்பட்டது போன்ற ஒரு சம்பவம் பின்தொடர்ந்தது தான் வாழ்கையின் விசித்திரங்களில் ஒன்று.        

                                          ரியாஸ் அந்த நிறுவனத்தில் அதிகம் ஆர்வம் இல்லாமல் வேலை செய்தார், அவர் சில மாதங்களில் டுபாய்க்கு போகப் போறதா எப்பவும் சொல்லுவார், ஆனால் அவர் வாழ்க்கை பற்றி நிறைய விசியம் எப்பவும் என்னோட கதைப்பார். யாழ்பாணம் பற்றிக் கேட்பார் ,நான் ஒண்டுமே சொல்ல மாட்டேன்,பதிலா அவரிடம் கிழக்குமாகாணம் பற்றிக் கேட்பேன்,எல்லாம் சொல்லுவார்,
                             
                                   ஏறக்குறைய யாழ்ப்பாணம் எவளவு அல்லோல கல்லோலம் பட்டுக்கொண்டு இருந்ததோ அதேபோல தான் அவர் கதைகளும் நடப்பு நிலவரமும் இருந்தது,அதனாலோ தெரியவில்லை அவர் என்னோட மிகவும் நெருக்கமாக எப்பவும் இருப்பார்,கதைப்பார். ஒருநாள் வேலை முடிந்து புறக்கோட்டை பஸ் நிலையம் வரை நடந்து கொண்டே கதைத்துக்கொண்டு போனபோது .

                                      " நாளைக்கு என்கள்ண்ட வூடுக் கடப்புக்கு பணிய உள்ள தர்காவில் அந்திக்குப் போல கந்தூரி சமைச்சு தானம் கொடுக்குறாங்க , நீங்க வாங்களேன், ஏனம் ஒண்டு எடுத்திண்டு போய் ஒள்ளுப்பம் போல கந்திரி வேண்டியாந்து சாப்பிடலாம் , அப்படியே எங்கள்ண்ட வூடுக்கும் வாங்க,உம்மாவும் பாத்திமாவும் இருகுராக, அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன் " என்றார் ரியாஸ்.

                                            நான் " பரவாயில்லை எல்லாரோடும் சேர்ந்து பள்ளிவாசலுக்கு முன்னால் இருந்தே சாபிடுறேன் அது எனக்கு விருப்பபம்,எங்கள் ஊரில வீராளி அம்மன் கோவிலில் சித்திரைக் கஞ்சி ஊத்தும் போது அப்படிதான் அடிபட்டுக் குடிப்போம் " என்றேன்.
    
                                      அதுக்கு ரியாஸ், " அதெல்லாம் ஒண்ணும் வேணாம், வேண்டிய மாதிரி சாப்பாடு இரிக்கி , எங்க பெரிய வாப்பா தான் பள்ளியில வேண்டிய மாதிரி மவுலவி , நாங்க வேண்டிய மாதிரி வூட்டுக்கே எடுத்திண்டுப் போயிட்டு வேண்டிய மாதிரி சாப்பிடலாம். " என்று சொல்லிப்போட்டு,

                                     " பிஸ்மில்லாஹ் , நான் வார மாதமளவில் டுபாய் போயிருவேன். அதுக்கு முதல் இவளவு நாளும் என் ப்ரெண்டா இருந்து இரிக்கிரிங்க, அதனால கட்டாயம் மறுப்பு சொல்லாமல் வாங்க "

                                 என்று சொன்னார்.மொபைல் டெலிபோன் இல்லாத அந்த நாட்களில் மனிதர்களின் வார்த்தைகள் மிகவும் நம்பிக்கை தருவதாக இருந்ததால் அவர் வாயால நேராகச் சொன்னார் அதை  நான் கேட்டேன் என்ற வார்த்தை உத்தரவாதம் போதுமானதாக இருந்தது. வாழ்க்கை அப்பெல்லாம் மிகவும்  நம்பிக்கையாக எளிமையாக  நட்பின் அடையாளங்கள் சிக்கலான  குழப்பத்திலும் சந்தோசமாக இருந்தது 

                                            எனக்கு கந்திரியில் தென்னம் ஓலையில் பிளா போலக் கோதிக் கட்டிக் கொடுக்கும் ரம்பைக் குழை போட்டு தம் பிடிச்சு அவிச்சு வடிச்ச வெள்ளை சோறும், முந்திரி நெய்யில மிதக்கும் ஆட்டுக்கால் பாயா ஆணமும்  தின்ன நல்ல விருப்பம் .அதைவிட ஒரு இஸ்லாமியர்களின் வீடு எப்படி இருக்கும்,அவர்கள் எப்படி வாழுவார்கள் என்று பார்க்க மிகவும் விருப்பமா இருந்ததால் வாறன் என்று சொன்னேன். ஐயர் வீட்டு நாய்க்கு அலியார் வீட்டுச் சோறு என்ற பழமொழி போல சாப்பாட்டுக்கும் சமயத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று என் சிறுகுடல் பெருங்குடல் சாட்சியாக எப்பவுமே நம்புபவன்.

                                           " உங்க வூடு போல நினைச்சே வாங்க. ஒன்னும் அலடிக்கொள்ளாம வாங்க, மார்க்கம் வேறா இருந்தாலும் நாமெல்லாம் ஒண்ணுக்க ஒண்ணு மனுசங்க தானே, நீங்க வேற கொழும்பில தனியா இருகுரிங்க "

                                            " கொஞ்சம்  தயக்கமா  இருக்கு  ரியாஸ்,  நான்  இதுக்குமுன்  இசலாமிய ஆட்கள் வீட்டுக்கு போனதே  இல்லை "

                                             "   அட, விடுங்க , இதென்ன  பெரிய  கதயா,, எங்க  ஊரில  பட்டிகளோ தமிழ் ஆட்களோட  பெருநாளுக்கு  நாங்க  எல்லாம்  போவமே,,விடுங்க "

                                          "  ஹ்ம்ம் "

                                            "   கல்முனையில  ஒரு  அம்மன்  கோவில் இருக்கு  தெரியுமா,,அதில தலைக்கு குடம் வைச்சு தீ மிதிப்பாங்க ,,நாங்க  போவம்  பார்க்க ,,அதென்ன  கத "

                                        "   எனக்கு  பட்டிகளோ  தெரியாது ,ரியாஸ், அங்கெ போனதே இல்லை "

                                          "  சரி வுடுங்க,,அதெல்லாம்  இப்ப முக்கியமொன்னும்  இல்லை ,நீங்க வாருவிங்க தானே,,என்ன  கத  "

                                           "   சரி,,நீங்க  கேட்கிறதால வாறன்  ரியாஸ் "

                                           "  எங்கண்ட  ஆட்கள்  யாழ்பாணத்தில மிச்சம் காலம் இருந்து இருக்காங்க தானே ,,இல்லையா,"

                                               " ஓம்,,பொம்மைவெளி, அஞ்சு சந்தி  போன்ற இடங்களில்  இருந்து இருக்கிறார்கள் "

                                           " அதானே,,நா  கேள்விப்பட்டு இருக்கேன்,எங்க உம்மாவோட  உறவுக்கார  சாச்சா ஒருவர் அங்கினையதான் புடவைக் கட வைச்சு இருந்தார்  "

                                             "  ஓம்,,யாழ்ப்பான டவுனில நிறையக்  கடைகள்  இருந்தது , எனக்கு பள்ளிக்கூ டத்தில  சயன்ஸ்  படிபிச்சவரே ஒரு அன்பான மாஸ்டர்  அவர் பெயர் காதர் மாஸ்டர் "

                                   "   உண்மையாவா,,எங்க  சாச்சாவுக்கும்  அப்துல்காதர் தான் பெயர்,,பாவம் அவங்க  இப்ப  புத்தளத்தில்  அகதி முகாமில இருக்காகா என்று  உம்மா சொல்லுவா "

                                               "  ஓம்,,யாழ்பாணத்தில்  இருந்து  இஸ்லாமிய மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது  நான்  அங்கேதான் இருந்தேன் "

                                             " அப்துல்  சாச்சா ,நல்ல வசதியா  இருந்திருக்கார்,,பெரிய கல் வீடு,,கடை,,எல்லாம் இருந்திசாம்  ஆனால்  வெளிகிடச் சொன்ன போது  ஒரு சொப்பிங் பாக்கோட  போக சொல்லி இருக்காங்க"

                                                  " ஓம்,,அப்படிதான்  நானும்  அறிந்தேன் "

                                          "   சரி வுடுங்க,,நமக்கு  அல்லா இருக்கான்,,அவன் சரிபிழை  பார்த்துக்குவான் , "

                                                  என்று சொன்னார் ரியாஸ்

                                            அதனால் அடுத்தநாள் பின்னேரம் ரியாஸ் சொன்ன அட்ரஸ் இக்குப் மட்டுமில்லை முதல் முதலா கிராண்ட்பாஸ் என்ற இடத்துக்கே இழுபட்டுப் போனேன், அன்று ரியாஸ் வேலைக்கு வரவில்லை,ஆனால் அவர் வீட்டு அட்ரஸ் , எடுக்கவேண்டிய பஸ் நம்பர்,இறங்க வேண்டிய பள்ளிவாசலடி எல்லாம் விபரமா ஒரு சின்னப் பேபரில் முதல் நாளே எழுதித் தந்திருதார்.

                                                      அவர் சொன்ன பள்ளிவாசலடியில் போய் இரைச்சலோடு இறங்கினேன். அவர் தந்த அட்ரஸ் வீரகேசரி பத்திரிகை அடிக்கும் பிரிண்டிங் அச்சகம் இருக்கும் இடத்துக்கு அருகில் ஒரு சின்ன கை ஒழுங்கை போல இருந்த இடத்துக்குள் இறங்க முதலே பின்னுக்கு வந்த மக்கள் என்னை முன்னுக்கு தள்ளிக்கொண்டு போனார்கள். பள்ளிவாசலுக்கு முன்னாள் பெரிய அண்டா வைச்சு அரிசி வடிசுக்கொண்டு இருந்தார்கள், பெரிய பெரிய ரப்பர் மரக் கட்டைகளைப் பிளந்து போட நெருப்பு ஜுவாலை விட்டுக் கிளம்பப், பல வறிய மக்கள் பாதை ஓரமாக வெத்திலை போட்டுக்கொண்டு குந்தி இருந்தார்கள்.

                                                   அந்த இடத்தில ரியாசைத் தேடினேன் அவர் இல்லை. ஒருவேளை கந்திரி கொடுக்கத் தொடங்கத்தான் வருவாரோ அல்லது ஒருவேளை என்னை முதலில் வீட்டில் சந்திக்க விரும்பினாரோ எண்டு ஜோசிதுப்போட்டு. வீதி தொடக்கத்தில் எழுதி இருந்த பெயர்களை வாசிக்க முயற்சிக்க, அந்த முடுக்கில் இருந்த சுவர்களில் ஒட்டி இருந்த சுபிட்சமான எதிர்காலத்துக்கு  வாக்குக் கொடுத்து வாக்கு சேகரிக்கும்  அரசியல் கட்சி ஒன்று தேர்தலில் வாக்குறுதி கொடுக்கும் வின்ஞாபன நோட்டிஸ்களை ஒரு மாடு சுவரில் இருந்து இழுத்து சுவாரசியமா திடுண்டுகொண்டு இருந்தது. முடிவில் ரியாஸ் தந்த அந்த சின்னப் பேபரை எடுத்து அருகில் இருந்த வீதியின் பெயர்களைப் பார்த்து தேடிய வீதியைப் பிடிச்சேன்.

                                                     அந்த சின்னப் பாதையின் ஆரம்பத்தில் சுலைமானியா என்று பெயர் போட்டு ஒரு முஸ்லிம் ஹோட்டல் இருந்தது. அதன் கண்ணாடி சோக்கேசில் வட்டிலப்பம் சின்ன சின்ன கிண்ணத்தில் வைச்சு,கலர் கலரா மஸ்கட் அடுக்கி ,முந்திரிப்பருப்பு போட்ட தொதல் பெரிதாக வைச்சு இருந்தார்கள்,கொஞ்சம் தள்ளிப்போக ஒரு டேயிலரின் கடை வந்தது அதில ரியாஸ் தந்த வீட்டு இலக்கத்தை தமிழில் கேட்டேன்,

                                       " சுருக்கெண்டு கொஞ்சம் பணியப் போங்க, ஒரு சின்ன முடக்கு வரும், வுடாம கொஞ்சம் நடந்து அங்கனய இருந்து வலது கையைப் புடியுங்க , செக்கால அபூபக்கர் பாறை வரும் அதில ரோஸ் கலர் வூட்டுக்கு இங்கிண்டு தண்ணித்தாங்கி கழிய மையத்தில இந்த நம்பர் சேர்ந்த வூடு பசுந்தா வரும் " என்று சொன்னார்கள்,

                                                     அந்த டியிலரிங் கடையில் பூவாளி மார்க் லுங்கிகள் முன்னுக்கு தொங்க விட்டு இருந்தார்கள், ஒரு வயதான நசருதீன் முல்லா போல இருந்த அய்யா ஒரு வயதான சிங்கர் தையல் மிஷினில் நிமிர்ந்து பார்க்காமல் இருந்து காலால் அமதிக்கொண்டு இருக்க ஒரு சின்னப் பையன் சேட்டுப் பொத்தான் தைத்துக்கொண்டு ரோட்டை விடுப்புப் பார்த்துக்கொண்டு இருந்தான், அந்த டேயிலரிங் கடை முதலாளி கழுத்தில அளவு நாடாவைப் போட்டுக்கொண்டு சோக் கட்டியால அங்கேயும் இங்கேயும் துணியில் கோடு இழுத்துக்கொண்டு இருந்தார்.

                                 ரியாசின் வீடுக்கு கிட்டக் கிட்டப் போக சன நடமாட்டம் கொஞ்சம் குறைந்து, ஒரு வயதான தாத்தா தலையில லேஞ்சியைக் கட்டிக்கொண்டு அவர் வைச்சு இருந்த சவ்வரிசிக் கஞ்சி விக்கிற வண்டிலின் அலுமினிய தட்டில் விரல்களால் தட்டிக்கொண்டு இருக்க ஒரு சிரங்கு வந்த நாய் சவ்வரிசி கஞ்சி வண்டிலைப் பார்த்துக்கொண்டு இருந்தது. . வேற மனித நடமாட்டம் அந்த இடத்தில இருக்கவில்லை.

                                       " இந்த நம்பர் சேர்ந்த வூடு பசுந்தா வரும் " என்று டெயிலர் சொன்னாலும் அபூபக்கர் வீதியில் அரை மணித்தியாலம் கிடந்தது அலைஞ்சேன் ..கடைசியில் முன்னுக்கு முற்றம் இறுக்கமான, சுவரோடு சுவர் உரசிக்கொண்டு நெருக்கமா சின்ன சின்ன வீட்டுகள் இருந்த இடத்தில அந்த இலக்கத்தைக் கண்டு பிடிச்சேன் .நல்ல காலம் .ரியாஸ் அவர்கள் வீட்டு வாசலில் நின்றார்.

                                        " வாங்க வாங்க எங்க வூடு பஞ்சிகாவத்தை கொரியா வூடு போல உங்களுக்கு சிலநேரம் இருக்கும், வாப்பா எங்களை வுட்டுப்போட்டு போன பின்னாடி  பெரிய றாசாத் நானா தான் இந்த வூட்டுக்கு எல்லாம் கொடுத்து எடுத்து தந்தார் , றாசாத் நானா இல்லைனா நாங்க இப்ப இதுவும் இல்லாமல் இருந்து இருப்போம்,நானா மவுத் ஆனா நேரம் நாங்க யாருமே அவருக்கு அருகில இருக்கலை " என்றார் ரியாஸ். .
                   
                         நான் ஒண்டும் சொல்லவில்லை ,ரியாஸ் இன் அண்ணா எப்படி  கல்முனையில் வைத்துக் கண்கள் கட்டப்பட்டு கடத்தப்பட்டுக்  கொல்லப்பட்டார் என்று அவர் ஏற்கனவே சொல்லி இருந்தார் 

                                   " இங்கேயே வூட்டில சாப்பிடுவம். உம்மா ஏனத்தில் கந்தூரி எடுத்து வைச்சு இரிக்கா, "

                          எண்டு அவரின் அம்மாவைக் கூப்பிட ஒரு வயதான அம்மா தலையை மூடிக்கொண்டு வந்து

                                " மகன் ,வேண்டிய மாதிரி போட்டு சாப்பிடுங்க ,"

                                "  ஓம் அம்மா ,,எனக்கு கந்திரி  சாப்பாடு நல்ல விருப்பம் அம்மா "

                      "  எங்கட வயலே கல்முனையில் இருந்தது,,இப்ப அங்கே போகமுடியாம அவனுகள் தடை போட்டு வைச்சு இருக்காங்க "

                                      "   ஹ்ம்ம்,அப்படியா ,"

                                     "  இல்லேன்னா நாங்க மூணுவேளை கஞ்சி குடிச்சாவது அங்கேயே இருந்து இருப்போம் "

                                           "   ஹ்ம்,,ஓம் அம்மா  சொந்த இடத்தில இருக்குமாப்போல ஒருநாளும் வராது அம்மா "

                                         "  என்னோட பெரிய மவன் மவுத் ஆனதில இருந்து அந்த ஊர்ல இருக்க பயம்,,அதான் ரியாஸையும் பாத்திமாவையும் கையோட கூட்டிக்கொண்டு இங்கே கொழும்பு வந்தோம் "

                                         " ஓம்,அம்மா  இப்பிடித்தான்  பலரோட நிலைமை இப்ப "

                                         " இப்ப ரியாஸ் சுருக்குப் பண்ணி சுருக்குப் பண்ணி டுபாய் போக நிக்குறான் ,,அவனும் போனா  நம்ம வாழ்க்கை கொஞ்சம் அல்லாடிப் போயிடும் போல இருக்கு,,ஆனாலும்  அல்லா  அவனை அனுப்பி வைக்கணும் என்னு நினைச்சா  நா  என்ன பண்ணமுடியும் ,,இல்லிங்களா மகன் "

                                       "  ஓம் அம்மா,,ஜோசிக்க வேண்டாம்,,அம்மா,,ரியாஸ் போறது  உங்களுக்கு பினான்சியலா சப்போட் ஆக இருக்குமெல்லோ "

                                  "  பாத்திமா வேற கடப்பு வருஷம் மட்டில்  மருதானை ஸாஹிரா கொலீஷில் படிச்சி முடிச்சி வூட்டோடவே இருக்கா ,,,அன்றாடம் காச்சி வடிக்கற செலவு நம்ம தலையை மீறிப் போகுது "

                                                        "      ஹ்ம்ம் "

                                     "   என் மகேன் உங்களை பற்றி சொல்லி இரிக்கான், நாமளும் அல்லல்ப்பாட்டு பாடி முன்னப்பாட்டு திரியாத இடமான இங்கே வந்தும் இன்னிக்குப் பாட்டு வரைக்கும் அந்தரிக்க வுடாம  அல்லா வைச்சிரிக்கான்  அவன் கருணையால் ஏதோ இருக்கோம் "
                                          என்று ஒரு பெரிய பாத்திரத்தில் சோறும்,ஒரு பித்தளைப் பாத்திரத்தில் சொதி போல குழம்ம்பும் கலந்த கறி இருக்க ,அவர்களின் அந்த சின்ன வீட்டில இருந்த சின்னக் குசினி வாசலில் செவ்வரளிப் பூப் போட்ட துணியில் தலையை மூடிக்கொண்டு ஒரு சின்னப்பெண் அவள் முழங் கைகளில் எதுவும் இல்லாமல் காப்புப் போல எதுவோ இருப்பது போல உள்ளங் கைகளை மாறி மாறித்  தடவிக்கொண்டு எழுதத் தொடங்காத ஒரு கவிதையின் கடைசி வரிகள் போல என்னைப் பார்த்தாள். அந்த பாஸ்மாதிப்  பார்வை மிச்சக் கதையை எழுத வைத்தது  .....

.....தொடரும் .............

.

Monday, 20 April 2015

புதிய சவால்களுக்கு ....

பெரிதாக வளர்த்து
நடக்குமென்று
காத்திருந்து
எல்லாவிதமாயும்
கடந்து போன 
காத்திருப்பு .....
தாங்க முடியாத
வெறுப்பை
முகத்தில்
முறித்துக் கொண்டு
நிலைமையை ஆழமாக்கி
ஆபத்தில் முடிந்த
அவமானம்....
புறக்கணிக்கப்பட்ட
பொழுதுகளில்
சிரித்து சமாளித்து
சுக்கலாக உடைந்து
விரும்பாமலே
மலிவான வழிகளில்
விட்டுக்கொடுத்த
சுய கவுரவம்....
தீவிரமாக
ஈடுபடுத்திக்கொள்ள
நாலு இடம் அலைந்து
நாலு
விதமாக நாரியை
முறித்தவர்களுக்குத் தான்
தெரியும்
அருகில் இருப்பவர்கள்
நெருக்கடிகள்
இல்லாமல்
அன்பாகச் சொல்லும்
வார்த்தை
ஒதுக்கி வைக்கப்பட்ட
எல்லாதையும் மறக்கடித்து
பழைய
இதயத்தை
புதிய சவால்களுக்கு
தயாராக்கிக் கொடுப்பதை.
19.04.15

Sunday, 19 April 2015

நோர்வே சில ஆச்சரியம்....

நோர்வே நாட்டைப்பற்றி நோர்வேயிட்கு வெளியே ஐரோப்பிய நாடுகளிலும் வேறு நாடுகளிலும் வசிக்கும் தமிழ் நண்பர்கள் பலர் பெருமையாக சொல்லுவார்கள். நான் இங்கே வசிப்பதால்தான் அவர்கள் இந்த நாட்டை பெருமையாக நினைத்தார்கள் என்று நினைச்சுக் கொண்டுதான்  இவளவு நாளும் இருந்தேன். அடப் பாவிகளா இப்ப பார்த்தா  என் நினைப்பில மண் அள்ளிப்போடுற மாதிரி இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் பல விசியன்களில் முன்னோடியாக இருந்து உலக அளவில் எனக்கு முதலே அதைப் பிரபலம் ஆக்கி இருக்கிறார்கள்.

                                       வாழ்க்கைச்செலவு அதிகமான அமைதியான  பணக்கார நாடு,  வடக்கு கடல்  கடலடி எரிவாயு இயற்கை வளம் ,  அடக்கமான மலைகளும் , ஏரிகளும் , பிஜோர்ட்  இயற்கைக் காட்சிகள், வடக்கு நோர்வேயின் நடு இரவு சூரியன், வைக்கிங் என்ற கடல்கொள்ளையர் வரலாறு, ஆறுமாதம் காதைக் கடிச்சுத் திண்ணும் உறைபனி , ஒவ்வொரு வருடமும் சமாதானத்துக்கான நோபல்பரிசு கொடுப்பது  போன்ற பாடப்புத்தகங்களில் பிரபலமான தகவல்களை விட நிறைய சுவாரசியமான செய்திகள் நோர்வேயில் இருப்பது ஒரு ஆச்சரியம்,  

                                      ஐரோப்பாக் கண்ட அளவில் பல பிரமிப்புக்களில் நோர்வே சத்தமில்லாமல் இருக்கு.  முதலாவதா 53,199 km நீளமான கடற்கரை உள்ள நாடு , மத்திய நோர்வேயில் Hornindalsvatnet மிக ஆழமான  514 m உள்ள ஆழமான நல்ல தண்ணி ஏரி , மிகவும் உயரமான நீர் வீழ்ச்சி Vinnufossen  860 m வடக்கு ஐரோப்பாவை ஊடறுக்கும் அதிவேக சாலையான  E16 European route இல் உள்ள  Lærdal Tunnel தான் நீளமான சுரங்கப் பாதை  24.5 km .கடலுக்கு கீழே செல்லும் சுரங்கப் பாதையான  Eiksund Tunnel தானாம் undersea tunnel வகையில் உலகத்திலேயே ஆழமான சுரங்கப்பாதையான அதன் பரிமாணம்  7,765 metres நீளமும்  287 metres ஆழமுமாம் .

                                    மத்தியகால ஐரோப்பாவில் lintel technique என்ற ஸ்டைலில் மரத்தால் கட்டப்பட்ட  stave churches என்ற வகைத் தேவாலயம் 30 நோர்வேயில் இருக்காம், ஸ்கண்டிநிவியாவில் அவைகள்  12ஆம் , 13ஆம்  நூற்றாண்டுகளில் கட்டப்பட்டுள்ளன. சுவிடனில்இருக்கும் ஒரே ஒரு தேவாலயம் தவிர உலகத்தில் வேற எங்கேயும் அந்த வகைத் தேவாலயம் இல்லையாம்.

                                        நோர்வேயிலேயே சாகனே தேவாலயம்தான்  கோத்தே ஸ்டைல் அற்கிடேக்சரில் கட்டப்பட்ட தேவாலயக் கோபுரத்தை நியோ கோத்தே ஸ்டைல் என்று சொல்லுறார்கள்,வடக்கு ஐரோப்பாவில் இப்படி கோத்தே ஸ்டைல் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட தேவாலயதில்  உள்ள பைன் மரத்தால் செய்யப்பட்ட எண்கோண வடிவ பலிபீட மேடை போல வேற எங்கேயும் இல்லை . மிக மிக அரிதாக Hollenbach organ என்ற மரத்தால செய்யப்பட்ட ஓர்கன் வாத்தியம் உள்ளது இந்த ஒரே ஒரு தேவலாயதிலையே அது 1891  இல் இருந்து இப்பவும் வாசிக்கப்படுவதுவும்  ஒரு அதிசயம்.

                                             உலகத்திலேயே பெண்களுக்கு முதல் முதல் வோட்டு உரிமைக் கொடுத்த நாடான நோர்வேயில் 37% மான நோர்வே மக்கள் உயர் கல்வி படிப்பு படித்து இருக்கிறார்களாம். அது அவர்களை  the best educated people in Europe. அந்த வீதத்துக்குள் நான் இல்லை. நோர்வேதான் குழந்தை பெற்ற தாய்மாருக்கு விடுமுறை கொடுக்கும்  maternity/paternity leave scheme இல் உலகத்தில் முதலாவது. தாய்க்கு  44 வாரங்கள்   (13 months) வேலை செய்த சம்பளத்தில்  80% கிடைக்கும் விடுமுறையுடன் , அல்லது 34 வாரங்கள்  (10.5 months) வேலை செய்த சம்பளத்தில் 100%. கொடுப்பனவுடன் , அப்பாவுக்கு 12  வாரம் சம்பளத்துடன் விடுமுறையும் கொடுக்கிறார்கள், அதைக் குழந்தைகளின் உரிமை போல செய்கிறார்கள்.

                                 ஆனாலும் நோர்வே வெள்ளை இன மக்கள் இவளவு சலுகை இருந்தும் அடுத்து அடுத்து பகவான் கொடுக்கிறான் என்று பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை. வந்தேறுகுடிகள்தான்  அந்த சலுகைகளை அதிகம் பெற்று மேலும் மேலும்  பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்லுறார்கள்.  நோர்வே உலகத்தில் best country for the State of the World's Mothers என்று பல வருடம் வந்த நாடு. .மனித உரிமைகள் மதிப்பீடு என்றதில்  Human Development Index இல்  11 வருடங்கள்  2001 இல் இருந்து  2011. வரை முதலாவதாக இருந்த நாடு.

                           நாட்டு மொத்த தேசிய வருமானம் , தனிமனிதர்களுக்கு பங்கிடும்  GDP per capita இல் உலகத்தில் பல வருடம் நோர்வேயை அடிக்க வேறு நாடுகள் இல்லாமல் இருந்து அசத்தி இருக்கு.  2012 இல்  உலகம் எங்கும் பத்திரிகையாளர் வேட்டை ஆடப்பட்டுக் கொண்டிருக்க  The World Audit பத்திரிகை சுதந்திரத்துக்கு  Freedom of Press என்பதில் முதலாவதாக  வந்தது. ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட போது முதலாவது Secretary-General செயல் அதிபராக 1946 இலிருந்து  1952 அதில் இருந்தவர் Trygve Lie என்ற நோர்வே நாட்டவர்.

                                        உலகத்திலேயே முதல் முதல் சுற்றுப்புற சுழலுக்கு ஒரு அமைச்சு உருவாக்கிய நாடு நோர்வே. 1972  இல் நோர்வே அதை உருவாக்கியபோது உலகத்தில் வேற எந்த நாட்டிலும் சுற்றுப்புற சுழல் என்றால் என்ன அதன் முக்கியத்தும் என்றால் என்ன என்று அறியாமலே இருந்தார்கள்.  நோர்வே  European Union என்ற ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பில் இல்லை. ஆனால்  European Economic Area (EEA) என்பதில் 1992 இல் இணைந்தது ,  2001 இல்  எல்லைகள் திறந்த ஐரோப்பா என்ற Schengen Area இல் இணைந்து எல்லைகளைத் திறந்து விட்டது.

                              நோர்வே பணக்கார நாடு ஆனால் அதிகம் உலகப்பிரபலமான பணக்காரரை உருவாக்காத நாடு. அதுக்கு காரணம் சீனாவைப்போல , ஐரோப்பாவில் உள்ள ஒரே ஒரு state capitalism என்ற பொருளாதார அரசியல் பின்பற்றும் நாடு என்கிறார்கள். நோர்வே பணக்கார நாடு என்றாலும் அதுக்கு கொடுக்கும் விலை அதிகம், மோசமான காலநிலையை திட்டிக்கொண்டு கடுமையாக உழைக்க வேண்டிய நாடு . இந்த நாட்டின் காசில் இங்கே பணகாரர்போல வாழ முடியாது. காரணம்  உள்ளாடை வரை உருவி எடுக்கும் வாழ்க்கைச் சுட்டெண் அதிகம். இங்கே உழைப்பதைச்  செலவழிக்காமல், மூன்று நேரம்  வெள்ளைப் பாணைப்  பச்சை தண்ணியில் தோச்சுச்  சாப்பிட்டு மிச்சம் பிடித்தால் நோர்வேக் காசு இலங்கை போன்ற வறிய நாடுகளில் பெறுமதியாக இருக்கும்.

                                        பனிச்சறுக்கு விளையாட்டை modern skiing as a sport ஆகக் கண்டு பிடித்த நாடு நோர்வே .இன்றுவரை விண்டர் ஒலிம்பிக்கில் அதிகம் தங்கம்,வெள்ளி. பித்தளை மெடல்கள் வாங்கிக் குவித்த முதலாவது நாடு நோர்வே. உலகத்திலையே மிக அதிகமான உயரத்தில் செயற்கை பனிச்சறுக்கு தடம் கட்டி வைத்துள்ள நாடு நோர்வே.  விண்டர் ஸ்போர்ட்ஸ் பிரபலமாயும் உள்நாட்டில் அதிகம் பிரபலம் இல்லாத செஸ் என்ற சதுரங்கத்தில் சென்ற வருடம் மங்க்னுஸ் கார்ல்சன் என்ற பையன் உலக சம்பியனா வந்து அசத்தினார்.

                                            உலகப்புகழ் பெற்ற அத்திலாந்திக் சல்மான் என்ற உள்ளுரில் லக்ஸ் என்று சொல்லப்படும் மீனை வளர்த்து உற்பத்தி செய்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் முதலாவது நாடு நோர்வே. பிரவுன் கலரில் உலகம் எல்லாம் உலாவும்  brunost என்ற சீஸ் கண்டுபிடிக்கப்பட்ட நோர்வேயில் சந்தோசமான செய்தியாக  உலகத்தில கோப்பி அதிகம் பேர் குடிக்கும் நகரமாக ஒஸ்லோ முதலிடத்தில் இருப்பது போல வாழ்க்கைச்செலவு அதிகமான நகரமாயும் ஒஸ்லோதான் முதலிடத்தில் இருப்பது எல்லோருக்கும் சந்தோஷமான செய்தி போல இல்லை என்பது அந்த நகரத்தில் என்னைப் போல அன்றாடம் காச்சிகளாக வாழும்  பலரோட கருத்து.
.
.

Thursday, 16 April 2015

ஆர்மிக்குப் போனேன் ....

இது  அப்பட்டமான உண்மைக் கதை இல்லை, அதுக்காக முழுவதும் கற்பனையும் இல்லை .விரும்பினால்  முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.  ஆனாலும்  எல்லாக் கதைகளில் அடித்து விரட்ட முடியாத யதார்த்தம் கொண்டு வரும்  உண்மை மனிதர்களின், ஒரு காலகட்டத்தில் நடந்த கற்பனைக் கதை போல...

                              " நுணலும் தன் வாயால்க் கெடும் " எண்டு பழமொழி சின்ன வயசில் படித்து இருந்தாலும்,எல்லாப் பழமொழியையும் போல அதுவும் யாரோ ஒருவருக்கு சொன்னது போல தான் அப்ப இருந்தது. அதுவே என்னோட வாழ்கையின் வாசல்ப் படியைத் தட்டிய போது அதன் வீரியம் வாழ்கையை விட விபரீதம் நிறைந்ததா இருந்த ஒரு எதார்த்த சம்பவத்தில் " பழனிச் சம்பா சோறிருக்க எருமைத்  தயிரிருக்க ஏன்டி வந்தே சீமைக்கு....  " என்ற  கதை போல ஆகினது நான் சொல்லுற மிச்சக் கதை,...

                             நான் வேலை செய்துகொண்டு இருந்த ரெஸ்டாரென்ட் முதலாளி நல்லவன், அந்த  ரெஸ்டாரென்டும்  அறைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி, ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்குகிறவளும் பெண்சாதி போல என்னோட  அன்றாட வரும்படிக்குக்  கஞ்சி  ஊத்திக்கொண்டிருந்தது ,  எனக்கு  அது  பிரச்சினை ஆகா  இருக்கவில்லை , ஆனால் அவனுக்கு   இதுக்கு மேலயும் என்னை வேலைக்கு வைச்சு இருந்தா  விரைவில் ரேச்ற்றோறேண்டுக்கு மூடு விழா நடக்கும் என்ற பயத்தை வெளிய சொல்லாமல், எப்பவும்

                        " ஏன்பா உன் திறமைக்கு இந்த இடம் எல்லாம் நல்லதில்லை, இதைவிட பெரிய இடங்களில் நீ வேலைக்கு முயற்சிக்கலாமேபா ..  எங்களுக்கும் பெருமையா இருக்கும் , உனக்கும் மாஸ்டர் செப் என்று பெயர் கிடைக்கும் ..ஏன்பா நான் உன் நன்மைக்குதானே  இதெல்லாம் சொல்லுறேன்,.."  

                      எண்டு என் மீது அக்கறையா சொல்லிக்கொண்டு இருந்தான் . அவனை இதுக்கு மேல வதைக்க எனக்கும் விருப்பம் இருக்கவில்லை ,,ஆனாலும் கிழவி இருந்த வீடும் கிளி இருந்த காடும் ஈடேறமாட்டாது போல நிலைமை இருந்தாலும்  எல்லாத்துக்கும்  நேரமும் எல்லா வர வேண்டும் சொல்லுங்க பார்ப்பம்..

                                   ஒஸ்லோவில் கோடை காலத்தில் நோர்வே ராணுவம்  கண்காட்சியும் விற்பனையும் என்று ஒரு  சந்தை நடத்துவார்கள் .அதில் அவர்களின் பாவனையில் உள்ள  பல பொருட்களை விற்பார்கள், அதில என் எதிரிகளைப் போட்டுத்தள்ள துவக்கு ஏதும் விற்பார்களா என்று பார்க்க போனேன். நல்ல காலம் அவர்கள் அது விற்கவில்லை ,ஆனால் நோர்வே நாட்டு ராணுவம் பாவிக்கும் உடுப்புகள் வித்தார்கள். 

                                      ஒரு ஆமிக்காரன் உடுப்பில் இருந்தால் நல்ல எடுப்பா இருக்கும் என்று சில உருமறைப்பு ஆடைகள் அதில வேண்டினேன். அதைப்போட்டால் ஆண்மை உள்ள ஆண்மகன் போல இருக்கும் என்று  அப்ப நினைத்தேன். நீங்களே சொல்லுங்க பார்ப்பம்  உண்மையும் தானே வெளியால நல்ல உடுப்பு போட்டு வீரன் போல இருக்கும் ஆண்களில் தானே பெண்கள் மயங்குறார்கள் என்று சொல்லுறார்கள்.  

                                       சில மாதங்களின் முன் நோர்வே ராணுவத்துக்கு இளையவர்களை சேர்த்து பயிற்சிவிக்கும் " ஹார் ப்ரிவில்லிக் உப்புலாரிங் செண்டர் " என்ற இடத்தில சமைக்கும் வேலை வெற்றிடம் இருப்தாக ஒரு வேலை வெற்றிடம் தகவல் மையத்தின் வெப் தளத்தில் போட்டு இருந்தார்கள். ஆமிக்காரங்களுடன் வேலை செய்தால் சில நேரம் வீரம் வரும் எண்டு நினைச்சு அதுக்கு  " இருப்பது  பொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே.... " என்ற  பட்டினத்தார் பாடலைப்  பாடிக்கொண்டு விண்ணப்பம் போட்டேன்.

                                        ஒரு திங்கக்கிழமை

                            " உன் சமையல் அனுபவத்தை நேரடியா பரிசோதிக்க வேண்டும், எல்லா தகுதி தகவுடமை பத்திரங்களுடன் வா "

                                             எண்டு வரச்சொல்லி தகவல் தந்து இருந்தார்கள். அதால ஏழு மணிக்கே அலாரம் வைச்சு எழும்பிக் , குளிச்சு , செய்யும் தொழிலே தெய்வம் என்று அண்டா குண்டா சட்டி பானை அகப்பை கரண்டியைத் தொட்டுக் கும்பிட்டுப் போட்டு ,  வரப்போற  ஏழரை பக்க விளைவுகளை ஜோசிக்காமல் ஒரு ஆர்வக்கோளாரில் என்னிடம் இருக்கும் உருமறைப்பு ஆமி காட்சட்டையைப் போட்டுகொண்டு போனேன்.

                                  அதிலதான் நானே எனக்கு  ஆப்பு பிளந்து அதுக்குள்ள வாலை விட்ட மாதிரி பெரிய ஆப்பு விழப்போகுது எண்டு என் அப்பன் பழனியாண்டவன் எனக்கு அதை முன்னமே சொல்லாமல் போனதுதான் சோகம்.

                                        நகரத்தில் இருந்து ஒதுக்குபுறமான ஒரு காட்டுக்கு நடுவில அந்த இடம் இருந்தது. உள்ளுக்கு போக முதல் உள்ள வெளி செண்டி போயின்டில இருந்த ஆமிக்காரங்கள் என்னோட உடுப்பைப் பார்த்து நான் துணிந்து ஆமியில சேர்ந்து நாட்டுக்காகப் போராட வாறன் எண்டு நினைச்சு மிகவும் மரியாதையாக ஒரு கேள்வியும் கேட்காமல் உள்ளுக்க விட்டாங்கள்.  

                                அந்த  இடம்  எனக்கு  மிகவும் பிடித்த  விஸ்லாவா ஸிம்போர்ஸ்க்கா என்ற  நோபல் பரிசு பெற்ற போலந்து நாட்டு பெண் கவிதாயினி  அம்மையார்  எழுதிய  " இராணுவத்தில் சேர்வது  போல ஒழுக்கங்கெட்ட காரியம் வேறெதுவுமில்லை  " என்ற நீண்ட  கவிதையில்  வரும்  ரெண்டாம் உலகயுத்த ராணுவ ஆட்சேர்ப்பு மையம் போல இருந்தது , பெண்களின் வாசனையே  இருக்கவில்லை,  இந்த இடத்தில வேலை செய்தால் வாழ்கையில் முன்னேறலாமா எண்டு ஆரம்பமே குழப்பமா இருந்தது ...

                                       இண்டர்வியு மேசையில் மூன்று பெரிய அதிகாரிகள் எல்லா சண்டையில் வென்ற கர்னல் மாதிரி,கடுவன் பூனை போல   முகத்தை பெருமிதத்தில் மிதக்க விட்டுக்கொண்டு இருப்பது போல அலட்சியமா என்னை கீழ இருந்து மேல வரை பார்த்தாங்கள். அவங்களும் என்னோட உடுப்பைப் பார்த்து நான் துணிந்து ஆமியில சேர்ந்து நாட்டுக்காகப் போராட வாறன் எண்டு நினைச்சு மரியாதையா " கலியாண சந்தடியில் தாலி கட்ட மறாந்தவன்  கதை  " போல என்னவும்  நடத்துவாங்க எண்டு தான் நினைச்சேன் ,அதால அவங்களின் மேசைக்கு முன்னால போய் சலுட் அடிச்சேன்.

                                        அவங்கள் குழப்பமா பார்த்தாங்கள்,ஒரு அதிகாரி கோபமா

                          " என்ன கிண்டல் செய்யுறியா, உனக்கு ஒழுங்கா எகப்பை கரண்டியை கையில பிடிக்க தெரியுமா எண்டு செக் பண்ணத்தான் வரச்  சொன்னோம், "

                                    "     சரி  அய்யா "

                                   "உன்னை இப்ப சலுட் அடிக்க சொல்லிக் கேட்டமா, முதல் இந்த சலுட்க்கு என்ன அர்த்தம் தெரியுமா, "

                                    "   சரி  அய்யா "

                                 " நீ முன்னமே ஆமியில் இருந்த மாதிரி தெரியவில்லையே "

                                " சரி  அய்யா "

                                   " இந்த  பள்ளிக் கூடப் பிள்ளைகள் அடிக்கும் சாரணர் சலுட் அடிக்கிறதை பார்த்தால் "

                                       "   சரி அய்யா "

                         எண்டு கோபமாக் கேட்டார், நான் ஆர்மியில்  சேர முதலே " சரி அய்யா  சரி  அய்யா  சரி  அய்யா " என்று  ஒழுங்கு மரியாதையில்  சொல்லிக் கொண்டு இருந்தேன் . அவர்கள் துவக்கை எடுத்து நடு மண்டையில் சுட்டு இருந்தாலும் "சரி  அய்யா " என்று சொல்லியே செத்துப்போய் இருப்பேன் போல இருந்தது 

                           " ஆமாம் ஐயா படிக்கிற நேரம் ஸ்கவுட் இல் இந்த சலுட் சொல்லி தந்தாங்கள், உங்களை பார்க்க உணர்ச்சி வசப்பட்டு கை தானாவே எழும்பி சலுட் அடிக்க வைச்சிட்டுது அய்யா " 

                                        என்று சொன்னேன். ஆனாலும் அந்த அதிகாரிகள் நான் அவங்களுக்கு சமைக்கிறதை விட ஆர்மியில் சேர்ந்தால் என்னோட உடம்பு வாகுக்கு நல்லது என்பது போலதான் பார்த்தாங்கள்.


                                   அந்த இன்டர்வியுவில நான் என்ன என்ன எல்லாம் சுடுவன் எண்டு கேட்டாங்கள், மேட்டில் ஏறினால் முத்தாச்சி, பள்ளத்தில் இறங்கினால் அத்தாச்சி கதை போல அலட்டிக்கொள்ளாமல் 

                                  " பரோட்டா,றொட்டி ,தோசை ,மசால் தோசை , துருக்கி நாட்டு பித்தா ப்ரோ. பிஸ்சா ,தந்துரி சிக்கின் எல்லாம் குறி தவறாமல் பிரட்டி பிரட்டிப் போட்டு சுடுவேன் " 

                                  எண்டு விறுக்கு விறுக்கு என்று ஆமிக்காரங்கள் மாச் பாஸ்ட் செய்யிற மாதிரி சொன்னேன். ஆச்சரியாம கேட்டுக்கொண்டு என்னோட வேலை அனுபவ,சமையல் கலை படிப்பு பத்திரங்களை செக் பண்ணிக்கொண்டே ஒரு அதிகாரி

                                        "  நீ எங்கள் நாட்டு ராணுவம் சில நாடுகளுக்கு போய் தீவிர பயங்கர வாதிகளை அடக்கும் நாடுகளில் உள்ளனர், நீ அங்கே போய் முண்ணனியில் நிக்கும் அவர்களுக்கு சமைக்கும் வேலைக்கு அனுப்பலாம் போல இருக்கு,நீ போட்டிருக்கிற ஆர்மி உடை உனக்கு நல்லாவே பொருந்து " எண்டு சொன்னார்.

                               தோசிப் பெண்ணுக்கேற்ற சொறியாங்கொள்ளி மாப்பிள்ளை போல  ஆர்மி உடை எனக்கு நல்லாவே பொருந்து எண்டு  சொன்னதைக் கேட்டு நான் திடுகிட்டு  

                                          " அய்யா, நான் இங்கே நோர்வேயில் சமையல் வேலைக்குதான் விண்ணப்பம் போட்டேன் அய்யா , தீவிர பயங்கர வாதிகளை அடக்கும் நாடுகளில் போய் முண்ணனியில் சமைக்க என்னை விட நல்ல சமையல் செய்யும் குக் இருக்குறாங்க அய்யா,,"

                                       "  என்னது ,,ஒழுங்கா  வீரமா கதை  முதலில் "

                                     "அய்யா    எனக்கு    தீவிர பயங்கர வாதிகளை அடக்கும் ராணுவத்துக்கு சமைக்கும் வித்தை எல்லாம்  தெரியாது அய்யா , "

                                           " பிறகு  என்ன  மண்ணாங்கட்டி  இங்கே  வேலை தேடி வந்தாய் "

                                                    "  அய்யா ,   நோர்வேயில் சமையல் வேலைக்கு தான் விண்ணப்பித்தேன்,,அய்யா "

                                "  முதல் பெண்டுகளின் சேலைக்குள்  ஒளிஞ்சு கொண்டு நிண்டு  குசு  விடுற   இந்த நடிப்பை  விடு "

                                              "   தெரியாத்தனமா ஆர்வகோளாரில் இந்த ஆர்மி காட்சடையை போட்டுகொண்டு வந்திட்டேன் , அதைப் பிடிச்சு  புளியமரம்  போல இந்த உலுப்பு உலுக்குரின்களே அய்யா,,,"  

                               "  சண்டை  என்றால் சாவு  வரும், சண்டை  என்றால்  என்ன  ஆளை  ஆள் மாறி  மாறி  மசாச்  செய்து  தடவுறது என்று  நினைச்சியா "


                                     "    இல்லை  அய்யா,, சண்டை  தெரியும்,  எங்கள்  நாட்டில்  சண்டை  பார்த்து இருக்கிறேன், ஆனால்  நான் கொஞ்சம் வாழவேண்டும் எண்டு  நினைக்குறேன்  அய்யா "

                                                      என்றேன், அந்த அதிகாரி ,

                       " அதெல்லாம் எங்களுக்கு தெரியாது,,நீ பார்க்கவே  அதி  தீவிர பயங்கர வாதிகளை விடப் பயங்கரமாய் இருக்குறாய்,,ஏன் சண்டை நடக்கும் இடத்துக்கு போகப் பயபிடுறாய் " 

                                                     என்று வருகிற வரும்படி எல்லாம் பூசாரிக்கு, சந்தடியெல்லாம் கங்காளம்மைக்கு பழமொழி போலக் கேட்டார்

                    நான்,மறுபடியும் ,

                    " அய்யா, நான் இங்கே நோர்வேயில் சமையல் வேலைக்குதான் விண்ணப்பம் போட்டேன் அய்யா,நான் இந்து சமயத்தை தீவிரமா பின்பற்றுபவன்,,அதில உயிர்களைக் கொல்வது பாவம் ,என்னோட பாட்டி தீவிர கிருஷ்ணா பக்தை, அகிம்சை விரும்பி " தீதும் நன்றும் பிறர்தர வாராநோதலும் தணிதலும் அவற்றோ ரன்னசாதலும் புதுவது அன்றே, வாழ்தல்...."   என்று  எனக்கு சொல்லி சொல்லி வளர்த்தா , அவா ஆத்மா சாந்தியடையாது அய்யா, ,நான் ஆர்மியில் சேர்ந்தால் " என்று கெஞ்சிக் கேட்டேன்,,

                     அந்த அதிகாரி கோபமாகி,,

                                " என்னப்பா புரியாத எதோ மொழியில் பிசத்துறாய் , எங்களுக்கு அந்த இந்தக் கதை தேவை இல்லை ,,

                                "அய்யா  என்  பாட்டி  மகாத்மா காந்தியின்  அகிம்சை  எவளவு  பலம்  என்று  சொல்லி  வளர்த்தா   " 

                                        "   இந்துசமய ராமாயணம்,மகாபாரதம் இல தானே அண்ணன் தம்பி,சித்தப்பன் பெரியப்பன்,மாமன் மச்சான் எல்லாரும் ஆளை ஆளை மாறி மாறி லட்சம் பேரைக் கொன்று குவித்த யுத்தமே நடந்ததே,,

                                "அய்யா  அது  இதிகாச புராணம்,  இது  என்னோட  வாழ்க்கை  அய்யா   " 

                                " அந்த வரலாறு எங்களுக்கும் தெரியும் , உன்னை அடிப்படை ட்ரைனிங் எடுக்க முதல் அனுப்புவோம் "  என்று சொன்னார் ..

                      நான்,மறுபடியும் ,

                                        " அய்யா, நான் இங்கே நோர்வேயில் சமையல் வேலைக்குதான் விண்ணப்பம் போட்டேன் அய்யா,,அடிப்படை ட்ரைனிங் எடுக்க என்னோடு இடுப்பு நல்லது இல்லை அய்யா , பலமுறை ஸ்நோவில் வழுக்கி விழுந்து  இப்ப இடுப்பு தனியா கிடந்தது சுழருது அய்யா, பெண்டுகளோடு பப்பில் லத்தின் அமரிகன் நடனம் ஆடவே  இப்பெல்லாம் என்னால முடியுதில்லை ,  என்னை விடுங்க அய்யா " என்று கெஞ்சிக் கேட்டேன் , 

                    அவர் அதுக்கு , 

                                        ," எங்களுக்கு அந்த இந்தக் கதை இப்ப தேவை இல்லை,,உனக்கு நம்பர் தகடு அடிக்கவும் ஏற்பாட்டு செய்ய இப்பவே ஓடர் எழுதியுள்ளேன் " என்று சொன்னார்,

                                                                        அடப்பாவிகளா "அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டவள் அரச மரத்தைச்சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்  போல  நான் இன்னும் ஒரு கோவிலுக்குமே நேர்த்திக்கடன் வைக்கவில்லை,அதுக்குள்ளே நம்பர் தகடு அடிக்கவும் ஏற்பாட்டு செய்ய இப்பவே ஓடர் கொடுகுரின்களே,,இது கடவுளுக்கே பொறுக்காது "  என்று சொன்னேன்,,

                                                   அந்த மூன்று  அதிகாரிகளில் , இதுவரைக்கும் எதுவுமே பேசாமல் , மிகவும்  பெரிய உருவத்தில் ,எல்லா சண்டையிலும் வென்ற ஜெனரல் போல  போல முகத்தை வைச்சுக்கொண்டு இருந்த  அதிகாரி

                                          " நீ ஏன்பா, இப்படிப் பயந்து சாகிறாய், வீட்டில பொஞ்சாதியை சமாளிப்பதை விட ஆர்மியில் வேலை இலகுவானதுப்பா, "

                                 "அய்யா  உங்க  ஆதங்கம்  எனக்கு  நல்லாவே  புரியுது  " 

                                       " சுண்ணாம்பு தேடிப்போன சுண்டெலியின்  உள்க்  காட்சட்டை காணாமல் போக அது அலியன் யானையிடம் போய் என்ன கேட்டது தெரியுமா,,,,,அது போல  வீரமா இரு ,,பயந்து  சாகாதை .."  

                                               என்று  அவர் வீட்டில இருப்பதை விட    ஆர்மியில் நின்மதியா இருப்பது போல சொன்னார். நான் கடைசியா பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவியது போல

                                " அய்யா, நான் இங்கே நோர்வேயில் சமையல் வேலைக்குதான் விண்ணப்பம் போட்டேன் அய்யா,,இப்ப எனக்கு இங்கே நோர்வேயில் சமையல் வேலையே வேண்டாம் அய்யா,,ஆளைவிடுங்க அய்யா " என்று காலில விழாத குறையாக கெஞ்சிக் கேட்டேன் 

                அதுக்கு அவர் ,

                               ," இனிக் கதைச்சு ஒன்றையும் மாற்ற முடியாது,,நேரம் வரும் போது உனக்கு அறிவிப்போம் , ஒழுங்கா வந்து சேரு ,  எங்களின் வெளிநாட்டு சேவையில் நீ இறந்தால் ,உனக்கு தாய் நாட்டு அதியுயர் சேவைப்  பதக்கம் கிடைக்கும்,,உன் மனைவி பிள்ளைகளுக்கு வாழ்நாள் உதவித்தொகை கிடைக்கும் ,ஏன் பா சும்மா கிடந்தது பயந்து சாகிறாய் "

                          என்று சொல்லி என்னோட பைலை அடுத்த மேசைக்கு எறிஞ்சு போட்டு 

                             " உனக்கு பதட்டமா இருந்தால், இந்த அறையின் தொங்கலில் வெளியே கண்டின் இருக்கு அதில ஒரு கோப்பி குடிச்சுப்போட்டு ,போய்ச் சேரு. " 

                                      என்று போட்டு ,

                                            " நல்லநேரம் வரும் போது எல்லாம் நல்லபடியே நடக்கும் "

                              என்று சொல்லிப்போட்டுப் போயிட்டார். இதுக்கு மேல இனி எனக்கு எங்க நல்ல நேரம் வரப்போகுது எண்டு ஜோசிதுத்கொண்டு பேசாமல் , அந்தாள் சொன்ன மாதிரி ஒரு கோப்பியையாவது  கடைசியாக் குடிச்சிட்டு போவம் எண்டு வெளிய வந்தேன் . 

                   நான் எனக்கு மனைவி பிள்ளைகள் இப்ப இல்லை, தனியாதான் வாழுறேன் என்று   சொல்ல நினைச்சேன்,,ஆனால் அது இன்னும் இவங்களுக்கு பிடி கொடுக்கும், அதோட என்னைக் ஈரச் சாக்குப் போட்டு கோழியை அமுக்கின மாதிரி அமுக்குவான்கள்  போல இருந்ததால் சொல்லவில்லை ,பேசாமல் நல்லநேரம் வரும் போது எல்லாம் நல்லபடியே நடக்கும் என்று நினைச்சுக்கொண்டு " நல்லகுருநாதன் நம்மை வருத்துவது, கொல்லவல்ல கொல்லவல்லப்  பொல்லா  வினை அறுக்க "  என்று என் பாட்டி எப்பவும் சொல்வதை நம்பிக்கொண்டு கோப்பி குடிக்க கண்டினுக்குப் போனேன் ,

                                கண்டினில் நிறைய நோர்வே ஆர்மியில் இணைத்து இருந்த இளம் நோர்வே பெண்கள் நோர்வே ஆர்மி மிடுக்குடன் இருந்தார்கள், நான் போய் ஓரமா இருக்க இடம் தேடினேன், நாலுபேர் இருக்கும் மேசையில் மூன்று இளம் நோர்வே ராணுவப் பெண்கள் நாலுக்கு நாலு  தீராந்தி அறுக்கக் கூடிய தென்னம் குத்திபோல  குந்திக்கொண்டு இருக்க, நாலாவது கதிரை காலியாக இருக்க, நான் நாலாவது கதிரையை  கூலிக்குக் குந்துவாள் பிள்ளைக்குத் தவிடு பஞ்சமா?போலப் பார்த்தேன். அவர்கள் என்னை மேலயும் கீழையும்  பார்த்திட்டு  அந்தக் காலியான கதிரைக்கு  வந்து குந்து என்று நோர்கிஸ் சொல்லும் " வார்சி குட் ..." என்று அழைத்தார்கள்  ..

                                 அந்த அழகான இளம் பெண்கள் அளவுக்கு அதிகமா " அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் மரம்செல மிதித்த மாஅல் போல ..." அழகா ஆர்மிக்கு சம்பந்தம் கொஞ்சமும் இல்லாமல் இருந்தார்கள், அவர்களின் முக அழகுக்கு  அவர்கள் போட்டு இருந்த காக்கி இராணுவஉடை தக்காளிக்கு தார் பூசின மாதிரி இருந்தது . என்னைப் பற்றிக் கேடார்கள் ,

                             " நீ எந்த ரெயிமெண்டில் இருக்குறாய்,உன்னை நாங்கள் இங்கே கண்டதே இல்லையே ,"

                                       என்று ஆர்வமாகக் கேட்டார்கள், நான் ஆர்மிக்கு சமையல் வேலைக்கு இண்டர்வியூவுக்கு வந்தேன் எண்டு சொல்ல நினைச்சேன் ,ஆனால் பெண்டுகளுக்கு உண்மையச்  சொல்லிக் கவுலுறதைப் போல கேவலம் இல்லை , அது மரியாதையாக இருக்காது , வீரம்  இருக்கோ , ஆண்மை  இருக்கோ , உணர்ச்சி இருக்கோ என்பது முக்கியமில்லை. ஆனால்  இதெல்லாம்  இருக்கு எண்டு கடுவன் பூனை போலப் பெண்களுக்கு முன்னால் காட்ட வேணும். இல்லாட்டி இந்தத் தோல்வி எப்பவுமே நிரந்தரமான தோல்வி   என்று  நினைச்சு 

                             " ஆட்டிலறி ரெயிமெண்டில் இருக்குறேன், பல்குழல் பீரங்கிகள் இயக்கம் பிரிவில் இருக்குறேன், ஒரே நேரத்தில் ரெண்டு கையாலும் புட்டுக் குழல் போல இருக்கும் பீரங்கிகளை இயக்குவேன்  "

                      என்று சொன்னேன் ,அவர்கள் ஆச்சரியமாகி,  

                                   " அப்படியா அதென்ன புட்டுக் குழல் ,  நாங்க கேள்விப்பட்டதே இல்லையே , 

                                   "  அது  பயங்கர ஆயுதம், ராணுவ  ரகசியங்களை  சொல்ல  எனக்கு  உரிமை  இல்லை  "

                               "   நீ பெரிய ஆள்தான் போல, நாங்களும் தான் அப்படி அட்வென்ச்சர் போல ஆர்மியில் ஏதாவது செய்யத்தான் விருப்பம்,எங்களை விடுறாங்கள் இல்லையே "

                                   "  அதெல்லாம்  என்னைப்போல  வந்தா  மெடல்  போனா  உயிர்  என்று  நினைக்கும்  வீரமான  ஆட்கள்தான்  இயக்க முடியும் "

                                        "    நீ உண்மையில் ஒரு வீரன்தான், அதுவும் நீ ஒரு வெளிநாட்டுக்காரன்,நோர்வே ஆர்மியில் உன் பீரங்கி திறமையையும்  உன்னையும்  நினைக்கவே பெருமையா இருக்கு "

                                        "   இதெல்லாம்  சிம்பிள்  எனக்கு,,எத்தினை சண்டையில்  மல்டி பரல் பீரங்கியை  சும்மா  குருவி சுடுற மாதிரி அடிச்சு  இருப்பன்  தெரியுமா "

                                         " அட,  எங்களுக்கு  இப்படி  சான்ஸ்  கிடைக்குது  இல்லையே,  சும்மா மெடிக்கல் யூனிட் அது இது  எண்டு சொல்லி எங்களையே  கேவலப்படுதுறாங்க  இந்த  ஆர்மியில் "

                                   "  அதெல்லாம்  என்னைப்போல உசிர் ஒரு மசிர்  என்று  நினைக்கும்  ஆட்களுக்குத்தான்  கிடைக்கும் "

                                              "    அப்படியா அதென்ன புட்டுக் குழல்,அப்படியா அதென்ன புட்டுக் குழல்,"

                              என்று  " பொட்டு வச்சுக்கோ மாமியாரே பூ வச்சுக்கோ மாமியாரே என்றாளாம் கொண்டு வந்த மகராசி "  பழமொழி போலப் பிசதிக் கொண்டு இருந்தார்கள்,

                            நான் கோப்பியைக்  குடிச்சிட்டு , போக வெளிகிட்டு அவளுகளுக்கு சலுட் அடிப்பமா எண்டு ஜோசித்தேன் ,பிறகு அவளுகளும் நான் அடிப்பது சாரணர் சலுட் எண்டு கண்டு பிடிச்சா இவளவு நேரமும் சொன்ன உண்மைகள் பொய் ஆகிவிடும் எண்டு பயந்து பேசாமல் எழும்பி ,,

                          " சில நேரம் அடுத்த கிழமை ஆப்கானிஸ்தான் போக வேண்டி வரும்,  இப்ப போய் பீரங்கிகளுக்கு ஒயில் விட்டு தயார் செய்யப்போறேன் " 

                                                 என்று சொன்னேன், அவர்கள் மறுபடியும்  வாயைப்பிளக்க நைசா எழும்பி  ஜுலிய சீசர் சொன்ன " அஞ்சியவர்க்கு சதா மரணம் அஞ்சா நெஞ்சத்து ஆடவர்க்கு ஒரு மரணம்  " என்று சொல்ல ,அவர்கள் மறுபடியும்  வாயைப்பிளக்க அந்த இடை வெளியில் நழுவி வெளியே வந்திட்டேன் .

                                  கன்டின் வாசலுக்கால வெளிய வர ,என்னை இண்டர்வியு செய்த மூன்று அதிகாரிகளில்,என்னிடம் எந்தக் கேள்வியுமே கேட்காமல் இருந்த ஒரு அதிகாரி அந்தக் கட்டிடத்தின் ஒரு மூலையில் நின்று கொண்டு இருந்தார், அந்தாள் ஒருவேளை இரக்கம் உள்ள மனிதரா இருக்காலம் கடைசியா ஒரு முறை அந்த ஆளிடமாவது கெஞ்சிக்கூத்தாடி கேட்டுப் பார்ப்பம் என்று போய் .

                          " அய்யா,உங்களைப் பார்க்க இரக்கம் உள்ளவர் போல இருகுரிங்க,அய்யா எனக்கு இங்கேயே இந்தக் காம்பில் ஒரு வேலை போட்டுத்தாங்க அய்யா,என்னை சண்டை நடக்கும் நாட்டுக்கு உங்க ஆர்மிக்கு சமைக்க அனுப்ப வேண்டாம் அய்யா,அய்யா என்னோட வாழ்கையில் இதுவரை ஒழுங்கான கலியானம்  காட்சி என்று ஒன்றையும் இன்னும் நான் பார்கவில்லை, இனிதான் அதை உருப்படியா செய்ய போறேன் அய்யா,அதுக்கும் வேட்டு வைசிடாதிங்க அய்யா , உங்களைப்பார்கவே கவுதம புத்த பெருமான் போல இருகுரிங்க,,கருணை காட்டுங்க அய்யா " 

                           என்று கேட்டேன் .அவர் , கொஞ்சம்  ஜோசித்தார்,  

                          " சரி ,ஆனாலும் நீ இன்டர்வியுவில் சமைக்க தெரியும் என்று சொன்ன உணவுவகைகள் இங்கே நாங்கள் எங்கள் ராணுவத்துக்கு சமைச்சுக் கொடுபதில்லையே, அதுவே ஒரு பிரசினையே, மேஜர் ஆர்னேயும்., கர்னல் கார்ல்சனும் அதைதான் நீ இண்டர்வியு முடிச்சுப்போட்டு போக கதைத்தார்கள், நீ ஏன்பா இந்த ஆர்மி உடுப்பைப் போட்டுக்கொண்டு வந்தனி, முன்னுக்குப் பின் ஜோசிக்கமாட்டியா , இப்ப வேற  என்ன வேலைதான் இங்கே கொடுகிறது, நீயே சொல்லு பார்ப்பம் , நீ பேசாமல் ட்ரைனிங் எடுத்துக்கொண்டு ராணுவத்தில் அடிப்படையில் சேர்,,பயப்பிடாதை,"  

                               என்று சொன்னார். நான் அவரிடம்

                              " அய்யா இங்கே நிறையப் பெண்கள் ஆர்மியில் வேலை செய்கிறார்களே,நான் அந்தப் பெண்டுகளின்  பாவாடையை ஆவது தோய்சுக் கொடுத்துக் கொண்டு இங்கேயே இருக்கிறேன் அய்யா , என்னை சண்டை நடக்கும் நாட்டுக்கு உங்க ஆர்மிக்கு சமைக்கிற கேவலம் கெட்ட வேலைக்கு மட்டும் என்னை  அனுப்ப  வேண்டாம் அய்யா, அய்யா நான் இன்னும் சாவதுக்கு என்னைத் தயார் செய்யவே இல்லை ஐயா " என்றேன்.  

                                அந்தாளுக்குக் கோவம் பொத்திக்கொண்டு வந்திட்டுது,நோர்வே மொழியில் உள்ள கெட்ட வார்த்தை எல்லாத்தையும் வடிகட்டாமல் பச்சையாகவே வெளிய எடுத்து ஒவொன்றா ஒவ்வொரு வசனத்தில் வைச்சு திட்டிக்கொண்டு ,

                             "  இப்ப இந்த இடத்தை விட்டே ஓடிப் போ ,இல்லாட்டி இப்ப என்னக்கே நான் என்ன செய்யப்போறேன் என்று தெரியாமல் வருகுது "

                                  என்று பல்லை நரி போல நெரிக்க தொடங்க,,நான் சடார் என்று எஸ்கேப் ஆகி வெளிய பாஞ்சு வந்திட்டேன் 

                                  வெளியே சென்றிப் பொயிண்டில் நின்ற ஆமிக்காரங்கள் எனக்கு சலுட் வேற அடிச்சாங்கள், அதைப் பார்க்க வயித்த கலக்கும் போல இருந்தது ,சும்மா வீரமா இதெல்லாம் ஜூசுசுபி என்பது போல சிரிச்சுப் போட்டு திரும்பிப் பார்க்காமல் வந்திட்டேன் . 

                    இந்தக் குளறுபடியை ,நான் வீட்டை வந்து நிம்மி, அவளிண்ட மம்மி, இங்கிலீசில் கதைக்கும் என் மூத்த அண்ணர் ,இலங்கையில் இருக்கும் பிசினஸ் மக்நெட் தம்பி ,உலகம் தெரியாத என்   அம்மா, அமரிக்காவில் ஆடு வளர்க்கும் சாட்டத் அக்கவுன்டன் படிச்ச தம்பி , எதுக்குமே  வாயே  திறக்காத  என்னை எப்பவும்  நேசிக்கும்  காவேரி  அக்கா,    ஏன் ஆக்கமாட்டாத அழுகல் நாரிக்குத் தேடமாட்டாத திருட்டுக் கணவன் வாய்த்தானாம் என்று என்னைத்  அடிச்சுக் கலைச்ச என் முன்னாள் மனைவிக்கும் சொன்னேன் . ஒருவரைத் தவிர யாருமே உருப்படியா ஒண்டுமே சொல்லவில்லை...

                               எங்கள் வீட்டிலேயே மிகவும் அமைதியான,அறிவான,அடக்கமான ,சரஸ்வதி போல இருக்கும் என்னோட காவேரி அக்கா மட்டும் தான் இதில இருந்து எப்படி தப்புவது என்று ஐடியா தந்தா,இந்த உலகத்தில் பெண்கள் அறிவாளிகள் என்று சொன்னா யாரும் நம்பமாடார்கள். சொல்லுங்க பார்ப்பம் காவேரி அக்கா மட்டும் இல்லை என்றாள் என் கழுத்துக்கு கயிறு விழுந்து இப்ப இறுக்கி இருக்கும்.

                                இந்தக் கதையில்  இதுக்கு மேல புண்ணியக்குஞ்சி  மயில் எண்ணை போட்டு  உருவி உருவி  இழுத்த கதை போல முக்கியமான சம்பவங்கள் வந்தாலும் , டெலிவிசன் சீரியல் போல நீட்ட விரும்பாததால்,காவேரி அக்கா எப்படி என்னை  தப்ப வைச்சா என்று மிச்சம்  பிறகு  எழுதுறேன்...
.
.
.


நாவுக் அரசன் 
ஒஸ்லோ .

Sunday, 12 April 2015

நகரசபையும் அதன் நகரபிதாவும்...

ஏழைகளின் நாட்டிலோ குப்பை லொறி ஓடி நகரை சுத்தமாக்கும் முனுசிப்பாலிட்டி போலவும் , பணக்கார நாட்டிலோ நகரத்தை நளினமாக அலங்கரிக்கும் சிட்டி ஹோல் போலவும்  , வளரும் மூ ன்றாம் உலக நாடுகளில் ஊழல் செய்து கொள்ளை அடிக்க திட்டம் போடும்  அரசியல் வாதிககள்  பந்தா போட்டு பணத்தை சுருட்ட, என்று பிரிவினை இல்லாமல் உலகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலும் அந்த நகரத்தை சட்டப்படி உள்ள உரிமைகளில் ஆட்சி செய்து, பல வழிகளிலும் அந்த நகரத்தை வாழக்கூடிய ஒரு இடமாக இயங்க வைக்க, அந்த நகரத்தில் இருந்து கிடைக்கும் வருமான வரிகளில் அந்த நகரத்தின் தேவைகளை நிறைவு செய்ய   நகரசபைகள் இருக்கு. அப்படி ஒஸ்லோ பெரு நகரத்தை இயக்கும்  நகரபிதாவின் உத்தியோகபூர்வ அலுவலகம்  தான் இந்த றோடஹுவுசெட் Rådhuset என்ற கட்டிடம்.

                                                          கிட்டத்தட்ட 20 வருடங்கள் எடுத்த இந்தக் செங்கற்கள்  அடி மேலே அடி வைச்சு பிரமாண்டமாக எழும்பிய  இந்தக் கட்டிடம் பார்க்க சவுதியில் உள்ள மக்கா மதீனா போல இருந்தாலும் ,இந்த கட்டிடக்கலை வடிவத்தை ஆங்கிலத்தில் Functionalism என்ற ஸ்டைலில் கட்டியதாக சொல்லுறார்கள்.அந்த ஆங்கில சொல்லுக்கு நேரடி தமிழ் சொல் எனக்குத்  தெரியாது,ஒரு கட்டிடம் அது கட்டப்படும்  நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் கட்டப்படுவது அந்த ஸ்டைல் என்று சொல்லலாம். இந்த றோட ஹுவுசெட் கட்டத்தில் வேலை செய்யும் ஆண்களும் பெண்களும் வயதை மறந்து கிடைக்கும் இடைவெளிகளில் ஆளை ஆள் உரசிக்கொண்டு ரொமண்டிக்  ரம்மியமான சுழலில் வேலை செய்வார்கள் போல இருந்தது. ஒரே ஒரு முறை உள்ளே போய்ப் பார்த்த போது.

                                    இந்தக் கட்டிடத்துக்கு உள்ளே ஒரு ஆர்ட் கலரி இருக்கு ,அதில நோர்வேயின் பிரபலமான மொடேர்ன் ஆர்ட் கலைஞ்சர் ஹென்றிக் சொரென்சன்  என்பவரின் ஒயில் பெயிண்டிங்   ஓவியங்கள் காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். ஹென்றிக் சொரென்சன் என்ற அந்த ஓவியரின் படங்கள் சுவர் முழுவதும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு பல இடங்களில்  தொங்கும். குறிப்பிட்ட சில நாட்களில் அதை எல்லாருமே போய்ப் பார்க்கலாம், ரசிக்கலாம் , ஒரு அரசியல் அதிகாரம் உள்ள நிர்வாகக் கட்டிடத்தில் ஓவியங்களை வைத்து அதைக் கலாச்சரா அடையாளமாக்கி  கலையை ரசிக்கும்  நோக்கத்தில் நோர்வே நாட்டவர் வைத்து இருப்பது இந்தநாடு எவளவு இன்டலக்சுவல் விடயங்களில் முன்னோடியாக இருக்கு என்பதுக்கு ஒரு சான்று.

                                       ஒஸ்லோவிற்கு வெளிநாட்டு பிரமுகர்கள் முக்கியமான நகரசபை விருந்துகள்,கொண்டாடங்கள், அரசாங்க நிகழ்வுகள் இங்கேதான் நடக்கும்,நோர்வே ஒவ்வொருவருடமும் கொடுக்கும் சமாதான  நோபெல் பரிசு பெற்றவர்கள் உரையாற்றும் ஒரு நிகழ்வு, பரிசு பெற்றவர்களின் நாட்டு முக்கிய இசைக்கலைஞர்களை வரவழைத்து இசை நிகழ்சியும்  ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் நடக்கும்,சென்ற வருடம் பாக்கிஸ்தான் நாட்டு மலாலா யுசெப்.இந்தியாவின்  கைலாஸ்  பெற்றபோது புகழ் பெற்ற இந்தியாவின் சாரோத் என்ற இசைக்கருவி வாசிக்கும் உஸ்தாத் பண்டிட்களின் இசைக்குளுவோடு அந்த நிகழ்வு நடந்தது .

                                          முக்கியமான நிர்வாக ஹோல் உள்ள  இந்த கட்டிடத்துக்கு உள்ளே எல்லாரும் எல்லா இடமும்  போக முடியாது, போய்ச் சுற்றிப்  பார்க்கவும் முடியாது, அரசாங்க உயுர்மட்ட,அல்லது அழைப்பிதல் கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமே அதில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம், ஆனால் வருடத்தில் ஒரு முறை வரும் கிறிஸ்மஸ் நிகழ்வை நகரசபை, பல இடைஞ்சல்களுக்கு முகம் கொடுத்து  வீட்டில்லாததால், தெருவோரம் குளிரில் திருவோடு வைத்துக்கொண்டு வசிக்கும் விளிம்பு நிலை மனிதர்களுக்காக திறந்து விட்டு " ஜேசுநாதரின் கடைசி இராப்போசனம் "  போல விருந்து வைப்பார்கள்,கொஞ்சம் கிறிஸ்தவ நம்பிக்கையில் நடக்கும் அந்த நிகழ்வில் நகரபிதாவும் ஒன்றாக ஏதிலிகள் எல்லாரோடும் இருந்து சாப்பிடும் நல்ல நிகழ்வும் நடக்கும்.

                                                 இந்தக் கட்டிடத்தில் ஒரு மணி இருக்கு, அது ஒவ்வொரு மணித்தியாலத்துக்கு ஒரு முறை  அடிக்கும், ஆனால்  ஒரே மாதிரி அடிக்காது,வேற வேற டியூன் இல் அந்த மணி அடிக்கும், அது Carillon என்ற 49 வெவேறு மணிகள் வெவ்வேறு நாதம் எழுப்பும் இசைக்கருவி. அந்த மணியின் டியூன் பியானோவில் நோட்ஸ் எழுதி வாசிப்பது போல வேண்டிய மாதிரி மாற்றலாம்,அண்மையில் ஒரு இசைப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி தான் இசை அமைத்த ஒரு மெட்டை உலக சமாதானத்துக்காக இந்த மணியில் ஒரு நாள் ஒலிக்க விட்டு அசத்தினாள் என்று டெலிவிசன் செய்தியில் காட்டினார்கள். நல்ல நோர்வே கலாச்சாரப் பின்னணியில் மெட்டு யாரும் இசை அமைத்தால், பல பரிசீலனைகளின் பின்னர் நகரசபை அனுமதியுடன் இந்த மணியில் இசைக்க அனுமதிப்பார்கள்.

                                     இந்தக் கட்டிடத்தில் ஒரு குறிப்பிட்ட கோபுரம் ஒன்றில், ,என்னைப்போன்ற விண்வெளி விண்ணியல் ஆர்வம் உள்ளவர்கள் பிரமிக்கும்  Astronomical clock என்ற பூமியை மையமாக வைத்து சூரியன், சந்திரன் ,சில கோள்கள் ராசிகள் , அவைகளின் அசைவுகளை குறிக்கும் பஞ்சாங்கம் போன்ற ஒரு வானியல் சாத்திர  மணிக்கூடு இருக்கு,  கிட்டதட்ட நூறு ஆண்டுகளுக்கு அது பிசகாமல் ஓடிக்கொண்டு இருப்பது இன்னுமொரு ஆச்சரியம். அந்த வானியல் சாத்திர  மணிக்கூட்டில் நேரம்தான் என்னால் பார்க்க முடிந்தது, மற்ற சூரியன், சந்திரன் ,கோள்களின் ,பன்னிரண்டு ராசிகளின் இயக்கத்தைக் கணிப்பிட கொஞ்சம் திருக்கணித வாக்கிய பஞ்சாங்க கணித அறிவு வேண்டும் . என்னோட நேரம் அந்த அறிவு என்னிடம் இல்லை, அதால் அதில எமகண்டம், ராகுகாலம்  எல்லாம் காட்டுமா என்று  ஆராய்ச்சி செய்யவில்லை.

                                     முக்கியமான இந்தக் கட்டிட முகப்புக்கு மேலே ஒஸ்லோவின் காவல் தெய்வம் என்ற பெண்ணின் சிலை இருக்கு,அதுதான் ஒஸ்லோ நகரசபையின் சின்னதிலும் இருக்கு, சென்ற நூற்றாண்டில் ஒஸ்லோ ஒரு துறைமுக நகரமா இருந்த போது , கடலுக்கு காற்றோடு பாய் மரக் கலங்களில்  பயணப்பட்டு  தொழிலுக்குப் போனவர்கள் திரும்பி வரும் வரை காதலோடு வீரமாகக் காத்திருக்கும் வீரப் பெண்ணின் சிலை அது. இன்னுமொரு சிலை காதலை வீட்டில் வைத்து விட்டு  துண்டு போட்டு சண்டைபோடும்  வாளோடு  புழுதியைக் கிளப்பியபடி யுத்தத்துக்கு போகும் குதிரை வீரனின் சிலை.  வீரமும் காதலும் ஒரு காலத்தில் ஒஸ்லோவின் கதையை எழுதியத்துக்கு சாட்சியாக அது இருக்கலாம் போல இருக்கு.

                                      ஒஸ்லோ நகரசபை, அரசாங்கம் நகர அபிவிருத்திக்கு கொடுக்கும் மானியன்களுடன், நகரத்தின் வர்த்தக,வாணிப வருமான வரியில் இயங்கினாலும், நகரத்தில் வாகனங்கள் தரிப்பிடத்தில் இருந்து நிறைய வருமானம் கிடைப்பாதாக சொல்லுறார்கள். சில இடங்களில் வீதிகளில் ஒரு சில மணித்தியாலம் மட்டுமே இலவசமாக வாகனம் நிறுத்த முடியும்,அதுக்கு மேலே நிறுத்தி பிடிபட்டால், பெரிய தொகை தடையாக அறவிடுவார்கள். இது கொஞ்சம் குழப்பமான விவாதமாக நீயா நானா என்று இழுபறியில் பல வருடம் எந்த சாதகமான முடிவும் இல்லாமல் நடந்துகொண்டே இருக்கு.

                                        மற்றப்படி ஒஸ்லோ நகரசபையும் ,அதன் நகரபிதாவும்  இந்த நீலமான பியோட் கடல் அலைகள் குடாப்போல வளைத்து வைத்து தாலாட்டி , மூன்று பக்க பள்ளத்தாக்குகளில் ருதுவாகி  சுழண்டு வரும் குளிர்காற்று மலைக் குன்றுகளில் மோதி நளினமாக வளைந்து போகும்    அலங்கார, அமைதி நகரத்தைக்  கோடையிலும்,உறைபனிக் காலத்திலையும்  ஒவ்வொரு நாளும் இதயத்துடிப்பு போல இரவு பகலாக  இயங்க வைத்து இருப்பதுக்காக எல்லாருமே பெருமைப்பட்டுக் கொள்ள நிறையவே நல்ல விசியங்கள் இருக்கு.
.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 12.04.15

Sunday, 5 April 2015

மூன்று கணவன்மார்கள்..



" குட் ஆப்டர்நூன் , என்ன செய்யுரிங்க ,எப்படி சுகம், இன்றைக்கு யாரைக் கவுக்கிற பிளான்   "
     
" முன்மாலை வணக்கமுங்கோ, ஏதோ உங்க புண்ணியத்தில்  இருக்கேன்பா, கழுவிக் கவுக்க இங்க குசினியில அண்டா குண்டா சட்டி பானைதான் இருக்கு    "

" நீங்க ஏன்  ஒஸ்லோவில் தமிழ் பெண் இல்லாமல் தவித்துக் கொண்டு  இருக்குறிங்க போல இருக்கே , பார்க்கப் பாவமா இருக்கு உங்களை "

" அதெல்லாம் லண்டனில இருக்கிற உங்களுக்கு எப்படி தெரியும், வெத்திலையில் மை போட்டுப் பார்த்திங்களா அல்லது சொந்தமா உளவுத்துறை ஏதும் வைச்சு இருக்குரின்களா "

" ஹஹஹா இல்லை ,,நீங்க எழுதுற கவிதைகளில் பெண் துணை தேடும்  அந்தத் தனிமை எப்பவும் ஒரு ஓரமாக ஒட்டிக்கொண்டு இருக்குமே "

" ஏன்பா நான் தலையிடி இல்லாமல் நின்மதியா இருக்கிறது பிடிக்கவில்லையா உங்களுக்கு, 

" பிறகேன் கவிதை எழுதுறிங்க ,அதுவும் பதடிக் லோன்லினஷ் ஆக "

" கவிதைதான் இப்ப யாருமே எழுதலாமே அதால நானும்  சும்மா பொழுதுபோக எழுதுவேன்  "

"வேற உள் நோக்கம் ஒன்றும் அதில இல்லையா  "

"அதில வெளிப்படையாகவே ஒரு மண்ணும் இல்லை  "

" இல்லை, ஏன் அப்படி நினைக்குரிங்க, "

"வேற  எப்படி நினைக்கச் சொல்லுரிங்க  "

" என்னைப்போல நல்ல குடும்பப்பாங்கான லட்சணமான  தமிழ் பெண்களும் இருக்கிறார்கள் தானே "

" நல்ல பெண்கள் இருப்பார்கள் ,ஆனால் அவர்கள் எல்லாரும் அடக்க ஒடுக்கமா  இப்ப கலியாணம் கட்டி குடும்பமா எல்லா இருப்பார்கள் "

" ஏன் நானும்தான் இப்ப என்னோட மூன்றாவது புருசனையும் டைவேர்ஸ் செய்து போட்டு தனியாத் தானே இருக்கிறேன். ஏன் என்னக்கும் இன்னுமொரு  ஒரு சான்ஸ் வரலாம்  தானே "

" எங்களுக்கு பொருத்தம் இல்லைப்பா, கெருட புராணத்தில் மாங்கல்யம் பொருந்த ராசி,நட்சத்திரம் மட்டுமில்லை அங்கலட்சணமும் பொருந்த வேண்டும் என்று சொல்லுறார்கள் "

" அதென்ன பொருத்தம், கெமிஸ்ட்ரி வேர்க் அவுட் ஆக வேண்டும் என்டுவார்களே அதுவா.

ஓம்  ஓம்  அதுதான்

அதுக்குதான் என்னவாவது ஒரு அசிட் எடுத்து உடம்பில பூசினா கெமிஸ்ட்ரி ஓட்டோமாட்டிக்கா வேலை செய்யுமே "

" உண்மைதான்  எங்களுக்குள்ள ஜோடிப்  பொருத்தம் இல்லைப்பா சாத்திரத்தில் அது முக்கியம் பா "

" இதுக்கு என்ன அர்த்தம் ஓஓஓஓ  என்ன சொல்றிங்க Clear ஆகக் கதைங்க pls,, ஏன் நான் வடிவில்லையா "

" அதுவும் ஒரு முக்கிய பொருத்தம் , அப்படிதான் சொல்லுறார்கள் "

" Ok,   நீங்க நரிக்குறவர் போல கையைப்பிடிச்சு ரேகை பார்த்து அறுவத்தெட்டு  பொருத்த சாத்திரம் எல்லாம் பார்ப்பின்களா "

" இல்லை,அதெல்லாம் தெரியாது ,ஆனால் இராசிப் பொருத்தம், ரச்சுப் பொருத்தம் ,,நவாம்ச நிலைப் பொருத்தம் எல்லாம் கலியாணத்துக்கு முக்கியம் என்று சொல்லுவாங்க "

" என்ன இப்ப சொல்ல  வாரிங்க, டச்சுப் பொருத்தத்துக்கு ஹொலண்டுக்கு போகவேண்டுமா  "

" இல்லைப்பா, அந்த  டச்சு இல்லை , இது  ரச்சுப் பொருத்தம் ,உங்களுக்கு நான் சரி வரமாட்டேன் பா, நான் ஏற்கனவே ஒரு அரைப் பயித்தியம் பா  "

" உன்னால எனக்குதான்  முழுப் பைத்தியம் பிடிக்கப்போகுது "

" ஹஹஹா,,அப்ப இன்னும்  பிடிக்கவே தொடங்கவில்லையா "

" இப்ப அதுக்கு என்ன செய்வம், நல்ல  அல்டநேடிவ்  ஐடியா சொல்லன்   "

" நீங்களே சொல்லுங்க பார்ப்பம் பேசாம  சோமாலியாவுக்கு ஓடிப் போவமா "

" No problem உங்கள கட்டாயம் நான் சந்திக்கவேண்டும் எங்களுக்குள்ள உறவை ஏற்படுத்த விரும்புறிங்களா? Yes or no ரெண்டில் ஒரு முடிவு சொல்லுங்க "

" எனக்கு இப்ப எதுவுமே சொல்ல முடியவில்லை  , சரி ஒரு கேள்விக்கு கேட்கிறேன் என்னை சந்திச்சா என்ன செய்விங்க "

 " முதல்ல  ஓரு அறை தருவேன்  மடையா "

" என்னது  தங்க ஹோட்டலில் அறை எடுத்து தருவிங்களா ,,,சூப்பர் ஐடியா பா "

" முகத்தில் அறை தருவேன் என்று சொன்னேன் மோட்டுக் கழுதை , இதுக்குள்ள ஆசையைப் பார்,  pls விளையாடாதிங்க Serious கதைங்கபா "

" நீங்க வடிவா இருந்த நேரம்  ஏன்பா என்னை காணலை,,இப்ப எனக்கு நாய் குணம் வாற நாற்பத்தி அஞ்சு வயசு ஆகிவிட்டதே "

" அதுதான் வள் வள் என்று  என்னில பாயுரின்களா அதெல்லாம் ஆம்பிளைகளுகுதான், ஏன்  இப்ப நான் வடிவில்லையா என்னை பிடிக்கலயா "

" இல்லை நீங்க நல்லா வடிவாத்தான் இருகுரிங்க காஞ்சிபுரம் சீலையில சிறீதேவி  போலவும், பஞ்சாவி சுடிதாரில் நயன்தாரா போலவும், டைட் டெனிம் ஜீன்ஸில் அமலா போலவும் இருகுரின்களே "

" ஹஹஹஹஹா,, மவனே ஒழுங்கா உண்மையதான் சொல்லுறியா இல்லை,,ஐஸ் கட்டிய தலையில வைக்குரியா, "

" இல்லை,,உண்மையாதான் சொல்லுறேன் "

" இந்த உடுப்பு போட்டு ஒருபடமும் நான் உனக்கு அனுப்பவில்லையே, வெறும் ப்ரோபில் படத்தில உள்ள முகத்தை வைச்சு எப்படி சொல்லுறாய். "

" ஆமா,,அந்த முகத்தைத்தான் லோங் சொட்டில  இந்த உடுப்பு எல்லாம் போட்டு நினைச்சு பார்த்தேன் "

" அப்படியா, ஒரு காலத்தில் , யூனிவெர்சிட்டி காலத்தில் நண்பர்கள், நண்பிகள் , கேள்வி கேட்க யாருமில்லை, பதில் சொல்லவேண்டிய தேவை யாருக்குமில்லை   "

" அட அட அள்ளிக்கொட்டி இருகிறிங்க போல  இருக்கே "

"ஹ்ம்ம்,, இங்கிலாந்தின்  வசந்தகால வாழ்கைபோல இனி எங்க வரப்போகுது " "

"அப்படியா , போன பஸ்ஸில ஏற நினைப்பதில்தான் திறில்  இருக்குது "

" And both that morning equally lays ,In leaves no step had trodden black.Oh, I kept the first for another day! Yet knowing how way leads on to way,I doubted if I should ever come back....."


" இதென்ன புரியாத மொழியில என்னவோ சொல்லுரிங்க "


" டேய்,,மடையா,,இது இங்கிலிஸ் டா ,,நான் எப்பவும் நினைக்கும் கவிதை ,,யார் எழுதினது தெரியுமா "


" நீங்களா "


" அய்யோ,கடவுளே உன்னோட மண்டைக்குள்ள என்னடா அரைச்ச மிளகாய்த்தூளா அடைஞ்சு வைச்சு இருகிறாய் "

" அட,,எனக்கு தமிழே ஒழுங்கா தெரியாது "


" இது ராபர்ட்ஸ் பிரெட்ஸ் எழுதின கவிதை டா "

" அப்ப நல்லா வேண்டிய மாதிரிக் கூத்து அடிச்சுப் போட்டு இப்ப வந்து, அழுகுரின்களே ,கோவம் கோவமா வருகுது ,

" எதுக்கு  உனக்குக் கோபம் வருகுது ,சொல்லு "

" உங்க இளமைக் கொண்டாடத்தை  நினைச்சால் பொறாமையா இருக்கு  "

" ஓம் நல்ல fun life pa நிறைய boy friends எல்லோரும் சுத்தி சுத்தி வந்தாங்க ஓரே attention மகாராணி போல Free coffee ,free lunch ,

" ஒ ,,ஓசியில வாழ்கையை  வைச்சு  உல்லாசமா ஒட்டி இருகிறிங்க போல இருக்கே "

" ஹ்ம்ம்,  இரவுகளில் பார்ட்டி,,பிறகு ஒக்ஸ்போர்ட் சிட்டி முழுவதும் ஓசிக் காரில் சுற்றுவது "

" யப்பா சாமி என்ன கொடுமைடா இது,  ஒ வேற என்ன பிறியா கிடைச்சுது,  ,,,,,,,,,,,  அதுவுமா "

" அடி செருப்பால,  நான் நெருப்பு போல யாரும் தொட முடியாது என்னை , தொட்டவன் எரிவான்,

" தண்ணிய அள்ளி ஊத்திப் போட்டு   தொட்டு இருப்பாங்களே நம்ம ஆட்கள் "

" ஆனாலும்  நான் college க்கு வருவதப் பார்க்கவே ஓரு கூட்டம் wait பண்ணிக்கொண்டு வாசலில நிற்கும்,ஹ்ம்ம் முதுக்குக்கு பின்னால  Attention யாருக்குதான் பிடிக்காது "

" மகாராணி போல, என்டுரிங்க ,,,ஹஹஹஹ்ஹா,ஒரு வயசில பன்டிக் குட்டியும் அழகா இருக்கும்,  ஏன்பா உங்களைச் சுற்றின அவங்களுக்கு ஒழுங்கா கண்பார்வை இல்லையா "

" ஆமாட மடையா,,என்னோட ஸ்டைல் உனக்கு எங்க தெரியப் போகுது , ஹை ஹில்ஸ் போட்டு கொண்டு போற ஒரே பெண் நான் தான் அந்த பொலிடிகல் சயன்ஸ்  மாஸ்டர் டிகிரி பட்சில் "

" ஒ ஏன் நீங்க அவளவு கட்டையா "

 " அடப் பரதேசி.எது சொன்னாலும் எனக்கு எதிராகவே அதைத் திருப்பி கவுக்குறியே ,நானே அஞ்சடி ஒம்பது அங்குலம் உயரம் "

" அட ,,ஹேமா மாலினி போல  இருந்து இருப்பிங்க போல இருக்கே "

" ஹ்ம்ம், ஸ்கூல் நெட் போல் டீமில் ஸ்ட்ரைக் பண்ணுற லீடரா  இருந்து இருக்கிறேன், அதுவும் செட் அப் ரவுண்ட்ஸ் கேமில தெரியுமா ,சும்மா நெட்டுக்கு மேலால தலை நிக்கும்   "

" இல்லைப்பா,,உங்க உயரம் எனக்கு தெரியாது அதனால கேட்டேன், "

" கொண்டையை வகிடு பிரிச்சு உர்சுலா அண்ட்ரிஸ் போல உயர்த்திப் போடடுக் கொண்டு போனால் என்னோட கதைக்க அடிப்படுவான்க என் கண் பார்வைக்கு ஏங்கி இருப்பாங்க "

" உங்களோட கதைச்சா அவங்களுக்கு விசர் எல்லோ வரும், என்னப்பா சொல்லுரிங்க, சரி அது யார்  உர்சுலா அண்ட்ரிஸ் உங்க சொந்தக்கார அன்ரியா  "

" ஆனா நான் அவங்கள் ஓருவரையும் திரும்பி பார்க்க மாட்டேன், அடே லூசூ மடையா உர்சுலா அண்ட்ரிஸ் ஜேம்ஸ் பொன்ட் படதில  வாற கனவுக் கன்னியடா  "

" ஏன் ஓருவரையும் திரும்பி பார்க்க மாட்டிங்க ,உங்களுக்கு கழுத்து சுளுக்கா "

" போடா மடையா , Onky 5 11 inch hright இருந்தாதான் , அவங்களத் தான் பார்ப்பேன் , Very choose நான் .அது ஓரு வயசில அப்படி எடுப்பா இருந்தேன்  "

" ஒ நானும் அந்தக் காலத்தில் விக்ரமாதித்தன் போல அழகா இருந்தேன் பா "

" அது யார் விக்ரமாதித்தன் , நான் கேள்விப்பட்டதே இல்லையே, இப்ப படம் நடிக்குரானே விக்ரம் அவனை போலவா  "

" இல்லைப்பா , அந்த மன்னன் தான் முருங்கை மரத்தில ஏறி வேதாளத்தை இழுத்து தோளில போட்டு கொண்டு போக,வேதாளம் ஒரு கதை சொல்லி அந்தக் கதை முடிவில் ஒரு குழப்பக் கேள்வி கேட்கும் "

" அப்படியா,, நீயும் ஒரு வேதாளம் , எங்க சொல்லு பிறகு என்ன நடக்கும் "

" மன்னன் பதிலில் குழம்ப அந்த இடைவெளியில் வேதாளம் மறுபடியும் தப்பிப் போய் முருங்கை மரம் ஏறும், "

" அட, நல்லா  இருக்கே , பிறகு "

" முருங்கை மரத்தோடும் வேதாளத்தோடும் தான் விக்கிரமாதித்தன்  வாழ்க்கை சீரழியும் பா "

" ஒ இதுவா சங்க இலக்கியம் எண்டுறது , சங்க இலக்கியக் கதைலயா இது வருகுது  "

" கிழிஞ்சுது.... இது அம்புலிமாமா கதை, அதுதான் எனக்கு விளங்கும் ,விரும்பி படிப்பேன் "

" ஒ ,,அப்படியா,உன் அறிவுக்கு ஏற்றது தானே உன் மண்டைக்கு விளங்கும், சரி என்னோட மிச்சக் கதையைக் கேளேன் "

" சரி சொல்லுங்கோ, கதை  முடிவில வேதாளம் போலக் கேள்வி ஒண்டும் கேட்க மாட்டிங்க தானே  "

" ஹஹஹா , அந்த நேரம்  லெக்சர் ஹோலுக்கு  நடந்து போக்கேயே என்னை பார்த்து ஜொள்ளு விட்டு லைட்  post ல் அடிபாடுவாங்கள் போய்ஸ் எல்லாம் தெரியுமா  "

" ஏன்பா அவளவு வெறியா அவங்களுக்கு "

" இல்ல என் கண் பார்த்து மயங்கி எங்க நடக்கிறது என்று தெரியாம லைட் போஸ்ட்டில மோதுவாங்க ,ஆனால்  இப்பவும்  நீங்க பார்க்க ராஐகுமாரன் போலதான் இருகுரிங்க, ஆனால் ஒரு லூசூ போல கதைகுரின்களே,அதுதான் பயமா இருக்கு "

" ஏன்பா கண் பார்த்து மயங்கி எங்க நடக்கிறது என்று தெரியாம லைட் போஸ்ட்டில மோத அவங்கள் இதுக்கு முதல் பொம்பிளையையே பார்க்கலையா "

" ஹ ஹ ஹ அதுதான் எனக்கும் புரியலைப்பா, நீயும் தான் அந்த வயசில் நல்லா  லுக்கு விட்டு இருப்பாய் ஆம்பிளைகளுக்கு புத்தி அப்படிதான் குறுக்க போகும்  "

" என்ன புரியலை,, நீங்க  மேக்கப் போடாமல் போயிருந்தா இவளவு அவலம் அவங்களுக்கு நடந்து இருக்குமா,"

" டேய் வாயை மூடடா , வந்து நேர்ல என்னட்டை மாட்டினால் வாயில போடுவேன் , இப்ப என்ன செய்துகொண்டு இருக்குறாய், ஏன் ரிப்ளே லேட் ஆக வருகுது வேற பெண்டுகளோட குஜாலா போடுறியா  எருமை மாடு ."

" ஹ்ம்ம்,,சும்மா  கொட்டாவி விட்டுக்கொண்டு  இருக்கிறேன் "

" அட,,அட  இதை நான்  நம்பவா,,சரி  நீ  ஏன் இப்ப  கதை எழுதுறதில்லை "

" எழுதுவேனே "

" இப்ப என்ன எழுதிக்கொண்டு இருகிறாய் "

" மூன்று  கணவன்மார்கள்.."

" என்னது ,,"

" ஆமாப்பா,,மூன்று  கணவன்மார்கள்..என்று ஒரு கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன் "

" ஒ,,ஆனால் இந்த தலைப்பே தண்ணி தெளிக்குதே,,தமிழ் கலாசாரத்தில் இப்படி  இல்லையே " 

" யார் சொன்னது ,கதை தானே "

" கதைதான்,,எனக்கு விளங்குது ஆனால் ,,எதிர்ப்பு கிளம்புமே ,,இப்படி  எழுதினால்,,அதென்ன சொல்லுவாங்க தமிழ் கலாச்சாரதில் , இப்படி இல்லையே பா , அதென்ன  குடும்ப விளக்குமாறுகள்   ,,அதுதானே,,அவங்கதானே   பொது அடையாளம் "

" அது  குடும்பக் குத்துவிளக்குகள்  பா "

" ஒ,,அப்படியா,,என்னவோ  எழுது,,ஆனால்  கற்பனை என்று போடாதை "

" இல்லைப்பா இப்படி  எல்லாம் எழுதினால் கட்டாயம் யாவும் கற்பனை என்று போடவேண்டும் ,,இல்லாட்டி பிரசினை வரும் "

" ஹஹஹஹா ,,அய்யோ,,அய்யோ,,கோதண்ட ராமா "

" எதுக்கு இப்ப சிரிச்சிங்க "

" டேய், ஏமாந்த சோணகிரி ,,உனக்கு ஒன்று தெரியுமா,,,கற்பனைக் கதைகளில் வாற கற்பனையை விட  நிஜ வாழ்கையில் கேவலம்கெட்ட அசிங்கமான ஆண்கள் நிறையப்பேர் வெள்ளையும் சொள்ளையுமா உலாவுறாங்க "

" ஹ்ம்ம்  அது  உண்மைதான் "

" ஒரு கதையில ஒரு பெண் ஐந்து சகோதர்களை கலியாணம் கட்டி வாழுவாவே ,,அதென்ன கதை ,,சின்ன வயசில படிச்ச கதை "

" அது கதை அல்ல,,காப்பியம் ,,மஹாபாரதம் ,,திரவ்பதி பஞ்ச பாண்டவ சகோதர்களைக் கலியாணம் கட்டுறா "

" ஓம்.ஓம் அதுதான் அதுவும் கதை தானே ,,பிறகென்னத்துக்கு சும்மா நடிக்கினம் "

" ஹ்ம்ம்,,,அதை வேதவியாசர் என்ற முனிவர் எழுதினார்,,,இதை நான் எழுதுறேன் ,,அதுதான்  பயமா இருக்கு "

" பயப்பிடாதை,,நீ எழுதடா,,நான் சப்போட் தாரேன், சரி இப்ப என்ன செய்யுறாய்  "

" ஒரு கையால எழுதிக் கொழுவிக் கொண்டு , மற்றக் கையால சைனிஸ் டிராகன் நூடில்ஸ் முள்ளுக் கரண்டியில் கொழுவி  சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்  "

" அடப்பாவி, அதெப்படி சாப்பிடுக்கொண்டு என்னோட சட் பன்னுறாய் , மவனே நீ கட்டாயம் வேற பெண்டுகளோடு சொட்டு நீலம் போடுறாய் போல இருக்கு , எனக்கு பதில் போடடா , டேய் ஒரு நேரத்தில் ஒன்றையாவது ஒழுங்கா செய்யடா "

" ஹஹஹஹா , ஓகே ,,எனக்கு இப்ப சாப்பாடுதான் முக்கியமா இருக்கு,,இன்னொருநாள் கதைகுறேன்,

" சரி கதை "

" நீங்க ஏன் உங்க மூன்று முன்னாள் கணவன்மார்களையும் டைவேர்ஸ் செய்திங்க என்று, சொல்ல விரும்பினால்  சொல்ல முடியுமா  "

" ஹஹஹஹஹா,,"

" இதுக்கும் சிரிப்பா "

" ஒரு பெண்ணை  பெண்ணாக நடத்தத் தெரியாத , அந்த  ஒண்டுக்கும் உதவாத படிச்சுக் கிழிச்ச கனவன்களைப்  பற்றிக் கதைப்பதே டைம் வேஸ்ட், "

 " அப்படியா, மூன்றுபேரும் நல்லாப் படித்தவர்களா  "

"ஹ்ம்ம்,மூன்று பேரும் அக்கடமிக் லெவலில் படிச்ச ஆட்கள், அதோட  நல்ல ஹான்ட்சம் , அதிலயும்  முதல் ஹஸ்பன்ட்  ஜாக்கி ஷரிப் போல  "

"அது யாரு ,,ஜக்கி வாசுதேவ் என்கிறாங்க  அந்த சாமியார் போலவா  " 

"அறைஞ்சன் எண்டா காதில, ஜாக்கி ஷரிப் ஹிந்தி நடிகர் டா ,, " 

" ஓ,,,அப்ப கட்டாயம்  ,,பெண்கள் பின்னால சுத்தி இருப்பார்களே " 

" ஹ்ம்ம்,,,அதுதான் நடந்தது , நான் அதில  இருந்து உஷார்  ஆகி இருக்க வேணும் ,,,சரி விடு  ,,வேற  கதை  சொல்லு "

" உங்க அளவுக்கு என்னிடம் சுவாரசியமா ஒன்றும்  இல்லையே  "

" சரி ,,வேற ஏதும் சுவாரசியமா பிறகு இன்னொருநாள் கதைப்பம் ஓகேயா வாலில்லாத குரங்கு "

" ஓகே Bye,ஆனால்  உங்க  கணவர்மார்  கதை  சொல்லுவிங்கதானே  "

" ஓகே,சொல்லுறேன் , கழுதைப் பிடிச்சு நெரிகாதை. ஓகே தானே , Bye Bye "

.....தொடரும் ....
.    


.